ஈசாய் மரத்தளிர்த் தண்டே ! நீர் வருவது எப்போது ?
எங்களை மீட்க நீர் எடுத்திருக்கும் உருவம் என்ன இப்போது?
மூவரில் உமக்கு கிடைத்தது முறை அப்போது.
வேண்டும் உனது உரு எங்கள் மத்தியில் முப்பொழுது.!!!!!!!!
எப்படி வருவாய்? எப்போது வருவாய்?
கன்னியின் கருவில் உதிக்காதே
காலம் உன் கருவைக் கலைத்துவிடும்.
மலடியின் மடியில் தவழ நினைக்காதே
உலகம் அவளது நடத்தையை சந்தேகிக்கும்.
கணக்கெடுப்பு நேரத்தில் கழுதை மேல் செல்ல எண்ணாதே.
எல்லாம் கணினி மயமாய் கண நேரத்தில் முடிந்துவிடும்.
மாட்டுத்தொழுவத்தில் பிறக்க முயலாதே
இங்கு மாடுகளே இல்லை தொழுவங்கள் எங்கு இருக்கும்
விண்மீன் மூலம் செய்தி சொல்ல பார்க்காதே
புதுக்கோள் என்றெண்ணி விண்கலத்தை அங்கும் அனுப்பக்கூடும்.
இடையர்களுக்கு செய்தி சொல்ல விழையாதே
கிடையற்ற அவர்கள் இரவு நேரக்காவலர்களாய் இருக்கக் கூடும்
எப்படித்தான் வருவது என்றுக் கேட்கிறாயா?
சொல்கிறேன் கேள்.!!!
கணினி மூலம் கருத்தரித்து வா
சோதனைக் குழாய்க் குழந்தையென சொந்தம் கொண்டாடுவோம்
மின்னஞ்சல் மூலம் உன் வரவுச் செய்தியை அனுப்பு
அணுத்துகளாய் அகிலம் முழுதும் அதனைப் பரப்புவோம்.
குழந்தை நட்சத்திரமாய் குறும்புத்தனமாய் விளம்பரங்களில் வா
வெட்கமே இல்லாமல் விளம்பரமோகத்துடன் உன்னை விரும்பிப் பார்ப்போம்
அரை குறை ஆடை, ஆங்கிலத்துடன் திரையில் வா
உன்னைத் திணறடிக்கும் விசிறிகளாய் திரண்டு வருவோம்
செயல் வீரனாய் தலைவனாய் திரைப்படத்தில் வா
தினமும் தொழுது வணங்கும் ரசிகனாய் கோயில் கட்டுவோம்
இலவசங்களை ஏராளமாய் வழங்கும் அரசியல் வாதியாய் வா
இல்லம் தவிர்த்து இன்ன பிற உறவுகள் தவிர்த்து,உனக்காய் உயிர் விடுவோம்
இலஞ்சங்கள் பல தரும் புள்ளிகளாய் வா
கடமைதனை கால் செருப்பாய் கழற்றி வாழ்வோம்
இம்மானுவேலே தாவீதின் திறவுகோலே
இப்படி வந்தால் உன்னை வரவேற்போம் வருவாயா?
குழந்தையாய் வராதே !!! குணமெனும் சான்றோராய் வராதே
எங்கள் சாதி மத பேதம் விரட்ட சாட்டையுடன் வா
கடமைதனை மறக்கும் கயமையை விரட்ட தடியுடன் வா
அட்டுழிய அரசியல் பண்ணும் எங்களின்
அராஜகம் அழிக்க அரிவாள் கொண்டு வா மொத்தத்தில்
குழந்தையாய் வராதே எங்கள்
நற்குணமாய் வா
தனியனாய் வராதே எங்கள்
தன்னம்பிக்கையாய் வா
அன்னியனாய் வராதே எங்கள்
அன்புறவாய் வா
ஏனெனில் நீ பிறக்க வேண்டியது இவ்வுலகில் அல்ல எங்கள் உள்ளத்தில்........
Monday, 17 November 2014
எப்போது வருவாய்
Subscribe to:
Posts (Atom)
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...