Friday, 18 May 2018

துணையாளரே துணையாய் வாருமே

தூய ஆவியின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம். தூய ஆவி யார்? தந்தையிடமிருந்து மகன் இயேசு மூலம் நமக்கு அனுப்பப்பட்டவர். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாள் தூய ஆவியின் வல்லமையை சீடர்களுக்கு அளிக்கிறார். தூய ஆவியைப் பெற்ற சீடர்களும் துணிச்சலுடன் நற்செய்தியை அறிவிக்கின்றனர். ஆவியின் வல்லமையை, ஆற்றலை,உணர்ந்ததால் அவர்கள் புதுத்துடிப்புடன் செயல்படுகின்றனர். நாமும் தூய ஆவியைப் பெற்றிருக்கின்றோம் உறுதிப் பூசுதலின் போது. ஆனால் அவர் வழி செயல்படுகிறோமா? என்று சிந்திக்க இன்றைய பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 
எங்கள் பள்ளியில் நான்கு வயதே உடைய சிறுமி ஒருத்தி  ஒருநாள் கழண்டு விழுந்த தன் காலணிகளை தானாக மாட்டிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று நான் உதவட்டுமா? என்றேன். உடனே அவள், வேண்டாம். எனக்கு நான்கு வயது என்னுடைய காலணிகளை நானே சரி செய்து கொள்ளும் வயது இது. நானே செய்து கொள்கிறேன் என்றாள். எனக்கு ஒரே ஆச்சரியம் . நீ வளர்ந்து விட்டாய் என்று உனக்கு சொன்னது யார் என்றேன். அவளோ, என் அம்மா என்றாள் சற்றும் யோசிக்காமல். மேலும்  தொடர்ந்து கூறினாள், சென்ற வாரம் தான் நான் நான்காவது ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடினேன். அப்போது என் அம்மாவும் அப்பாவும் நான் வேகமாக வளர்கிறேன் எனவே என்னுடைய உடைகள் காலணிகள் படுக்கைகள் முதலியவற்றை சரி செய்தல் போன்ற சிறு சிறு வேலைகளை நானாக செய்து கொள்ள வேண்டும், தானாக சாப்பிட வேண்டும் என்று  கூறினார்கள் என்று தன்னுடைய மழலை மொழியில் அடுக்கிக் கொண்டே போனாள். நான் அவள் பேச்சைக் கேட்டு திகைத்ததை விட, தன்னுடைய வளர்ச்சியின் மேல் நம்பிக்கை கொண்டு அவள் நடந்த விதம் தான் என்னை மலைக்கச்செய்தது. 
மேலை நாட்டு கலாச்சாரம், தாய் தந்தையர் இருவரும் வேலைக்கு செல்லும் நிலை, குழந்தைகளுக்கு தனி அறை, என்ற தங்களது சூழலை எளிமையாக தங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்து வருகின்றனர். எங்களால் உனக்கு உண்டான வேலைகளை செய்ய இயலாது என்று கூறாமல், நீ வளர்ந்து விட்டாய், உனக்கான வேலைகளை நீயே  செய்யத் துவங்கு என்று கூறுகின்றனர். வளர்ச்சி என்னும் ஆற்றல் உன்னிடத்தில் இருக்கிறது. உன்னால் முடியும் என்று அடிக்கடி சொல்லும் போது குழந்தைகளும் அதன்படியே மாறுகின்றன. 
இயேசுவும் சீடர்களை அப்படியேக் கூறி வளர்க்கிறார். தூய ஆவியை உங்களிடம் அனுப்புவேன். உண்மைக்கு சாட்சியம் பகர்வீர்கள், நற்செய்தியை அறிவிப்பீர்கள், திருமுழுக்கு கொடுப்பீர்கள் என்று சொல்ல சொல்ல சீடர்களும் அதனை உணர்கிறார்கள். அதன்படி மாறுகின்றார்கள். இனிமேலும் உங்களுடன் என்னால் இருக்க இயலாது, என் தந்தையிடம் நான் திரும்பிச்செல்ல வேண்டும் என்று கூறியவர், என்னைப் போல் வாழுங்கள், நான் கற்பித்ததை செயல்படுத்துங்கள் என்கிறார். சீடர்களும் தங்களால் முடியும் என்பதை உணர்கிறார்கள். அனைத்து மக்கள் முன்பும் அதை செயல்படுத்திக் காண்பிக்கிறார்கள். பரவசப் பேச்சு பேசுதல், அற்புதங்கள் நிகழ்த்துதல், அதிகாரத்தோடு போதித்தல் போன்றவற்றை திறம்படச்செய்கிறார்கள். 
புற வளர்ச்சி என்பது கண்களுக்கு புலனாகும். அக வளர்ச்சியைப் புரிந்து உணர்ந்து கொண்டால் மட்டுமே புலனாகும். தூய ஆவி அன்று சீடர்கள் மேல் பொழியப்பட்டது. அகவளர்ச்சியில் மாற்றம் கண்டனர். அந்த மாற்றத்தை பிறரும் அறியும்படி வாழ்ந்தனர். நாமும் உறுதிப்பூசுதலின் போது தூய ஆவியைப் பெற்றிருக்கிறோம். ஆனால் என்ன? நம் புற வளர்ச்சி தான் பல மாற்றங்களை அடைந்திருக்கிறது. ஆவியின் துணையால் வளர்ச்சி அடைந்திருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறியே. 
தூய ஆவியை துணையாளர் என்கிறோம் யார் துணையாளர்? நமதுஇன்பம், துன்பம், வறுமை செழிப்பு, ஏற்றம் , இறக்கம் அனைத்திலும் நம்மோடு உடன் நடந்து நமக்கு உதவிகளை செய்பவர். நமக்கு துணையாய் இருந்து நம்மை ஆள்பவர். தூய ஆவியார், திடப்படுத்துபவராக, வழிநடத்துபவராக, தெளிவு படுத்துபவராக நமக்கு விவிலியத்தில் காட்டப்படுகிறார். உதாரணத்திற்கு அன்னை மரியாளை திடப்படுத்தினார், இயேசுவை சீடர்களை வழிநடத்தினார், சூசையப்பருக்கு தெளிவை ஏற்படுத்தினார். இது போன்ற ஆவியின் செயல்பாடுகள் விவிலியத்தில் ஏராளமாய் இருக்கின்றன. இதே தூய ஆவியானவர் நமது துன்பத்தில் நம்மை திடப்படுத்தி, வாழ்வில் வழிநடத்தி, குழப்பத்தில் தெளிவு படுத்துபவராக இருக்கின்றார். நாம் தான் இந்த ஆவியின் அருளை உணராது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், 
எங்கு சென்றாலும் எதை செய்ய நினைத்தாலும், செய்யத் தொடங்குவதற்கு முன்பு, தூய ஆவியின் துணை நாடி செபிக்கச்சொல்வது  நவதுறவு பயிற்சி  வாழ்வில் வழக்கம். அப்படி செய்தால் நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும் என்பர். அது உண்மையும் கூட. நம்மிடம் ஏராளமான ஆற்றல்கள் மறைந்து கிடக்கின்றன. நாம் தான் அதை வெளிக்கொணர மறுத்து மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். துணையாளர், நம் உடன் நடப்பவர், வழிகாட்டுபவர், தெளிவுபடுத்துபவர். அவரைஅடையாளம் கண்டு கொள்வோம். மறைந்து கிடக்கும் அவரை வெளியேக் கொண்டு வர முயல்வோம். புதையல் தனக்கு  அடியில் தான் உள்ளது என்று அறியாமல் அதன் அடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மனிதன் போல் இல்லாமல் நமக்குள் புதைந்திருக்கும் புதையலாம் துணையாளரை இனம் கண்டு கொள்வோம். நாம் தூய ஆவியின் ஆற்றலினால் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்புவோம். அப்போது தான் வளர்வோம். துணையாளராம் தூய ஆவியை துணையாகக் கொண்டு வாழ முற்படுவோம் . இறைவனின் அருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.      

Monday, 14 May 2018

பறைசாற்றுங்கள்... பணியாற்றுங்கள்....




"உலகைப் பார்த்து வாழ்பவன் சாதாரண மனிதன். உலகமே பேசுமளவிற்கு வாழ்பவன் சாதனை மனிதன்" அவ்வகையில் இயேசு சாதனை மனிதராக இன்றைய நற்செய்தியின் மூலம் நமக்கு காட்சி தருகின்றார். தந்தைக் கடவுள் கொடுத்த பணியைச் செவ்வனே செய்து முடித்து மகிழ்வுடன் அவரிடமே திரும்பும் தருணம் இது. விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு மனிதனாய் பிறப்பெடுத்து வந்தவர், மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு விண்ணுலகிற்கே மீண்டும் திரும்புகிறார். உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்றம் அடைந்த இயேசு, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள், பணியாற்றுங்கள் எனும் அன்பு வேண்டுகோளினை நமக்கு விடுக்கிறார். 
பறைசாற்றுங்கள் பணியாற்றுங்கள். 
இயேசு பாடுபட்டு இறந்து, உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைகிறார். இந்த நாற்பது நாட்களும் சீடர்களோடு உடனிருந்து அவர்களைத் திடப்படுத்துகிறார். நாற்பது நாட்கள் என்பது விவிலியத்தில் ஒரு முழுமையின் அடையாளத்தைக் குறிக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இஸ்ரயேல் மக்களின் பாலைவனப் பயணம், தாவீது மன்னரின் ஆட்சி, என நாற்பது ஆண்டுகளுக்கான சான்றுகள் விவிலியத்தில் பல உள்ளன. அதன்படி நமது திருச்சபையின் ஆண்டு சுழற்சியிலும் காலங்களை, திருவருகைக்காலம், தவக்காலம், உயிர்ப்புக்காலம் என நாற்பது நாற்பது  நாட்களாக பிரித்துவைத்திருக்கின்றது. இதன் மூலமாக  கிறிஸ்துவின் வாழ்வோடு இன்னும் அதிகமாக ஒன்றிக்க நமக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
இயேசு உயிர்த்த பின் நாற்பது நாட்களும் தன் அன்புச்சீடர்களுடன் பயணிக்கிறார். சீடர்களும் அவர் சொல்லையும் செயலையும் கூர்ந்து கவனிக்கின்றனர். அவரோடு மூன்றாண்டுகள் உடன் பயணித்த போது இல்லாத விழிப்புணர்வு, இந்த நாற்பது நாட்களில் அவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. எப்படியெனில் இயேசு உயிர்த்த போது அனைவரும் ஒரே இடத்தில் இல்லை. வெவ்வேறு இடங்களில் இருந்து, செய்தி கேட்ட பின் ஒன்றாகக் கூடினர். ஆனால் விண்ணேற்றத்தின் போது இயேசுவின் முன் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருக்கின்றனர். இயேசுவே அவர்களை அவ்விடத்திற்கு அழைத்திருந்தாலும் கூட, எளிதில் தொடர்பு கொள்ளுமளவிற்கு அவர்கள் ஒற்றுமையாக உறவோடு இருந்திருக்கின்றனர். முன்னர் இருந்ததை விட அதிக மாற்றத்தை அவர்கள் தங்களுக்குள் காண்கின்றனர். 
இயேசு இன்னும் சிறிது காலமே தங்களுடன் இருப்பார் என்பதை நன்கு உணர்ந்த அவர்கள் மிகவும் கவனத்துடன் அவர் குரலுக்கு செவிமடுக்கின்றனர். (ஆண்டு முழுவதும் படிக்காமல், இறுதித்தேர்வுக்கு முன் அரை நிமிடத்தைக் கூட வீணாக்காமல் முட்டி மோதி படிக்கும் மாண்வர்கள் போல). பள்ளி நிறைவு நாளில் பணி மாற்றமாகிச் செல்லும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரைக் கூறிச்செல்வது போல இயேசு சீடர்களுக்கு ஆசீர் அளிக்கிறார். சீடர்களும், இது தான் இவர் நமக்கு தரும் கடைசி செய்தி, கட்டளை என்பது போல மிக கவனமுடன் செவிமடுக்கின்றனர். அதன்படியே தங்கள் வாழ்வை மாற்றி அமைக்கின்றனர். தூய வாழ்வு வாழ்ந்து தூய்மையில் மிளிர்கின்றனர். நாம் இயேசுவின் குரலுக்கு செவிமடுக்கிறோமா? எப்போது?  
ஐம்புலனும் ஐந்து குணமும்:
இயேசுவின் விண்ணேற்றம் அவர் தம் இக்கால சீடர்களாகிய நமக்கு விடுக்கும் செய்தி என்ன? 
நம்பிக்கையோடு திருமுழுக்கு பெற்றவர், மீட்படைவர். நம்பிக்கையற்றோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் என்கிறார். நாம் அனைவரும் திருமுழுக்கு பெற்றவர்கள். ஆனால் நம்பிக்கையோடு திருமுழுக்கு பெற்றோமா? மீட்படைவோமா? என்பது நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி. நாம் நம்பிக்கையோடு திருமுழுக்கு பெற்றவர்கள் எனில், பேயோட்டும் வல்லமை, புதிய மொழிகள் பேசும் திறமை, கொடிய விலங்குகளோடு உறவாடும் யுக்தி, நஞ்சுள்ள உணவை உண்ணும் சக்தி, நோயாளிகளைக் குணப்படுத்தும் குணம் ஆகிய ஐந்தும் நம்மிடம் இருக்கும் என்கிறார். இவைகள் ஐந்தும் நம்மிடம் உள்ளதா? 
பிரபஞ்சத்திற்கு எப்படி நிலம் நீர் காற்று ஆகாயம் வானம் எனும் ஐந்தோ அது போல மனிதனுக்கும் மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்களும் மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதன் ஐம்புலன்களின் இன்பத்திற்காக ஐம்பூதங்களையும் மாசுபடுத்துகிறான். விளைவு ஐம்பூதங்களோடு ஐம்புலன்களும் பாதிப்படைகின்றன.
இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றி மக்களை மனம் திருப்ப தயாரான சீடர்கள் முதலில் தங்களுக்குள் மாற்றம் பெற்றனர். ஐம்புலன்களிலும் வல்லமை பெற்று பிறரையும் வல்லமை பெற தயார்படுத்தினர். அன்று கலிலேயாவில் அவரால் அழைக்கப்பட்ட சீடர்கள் முழுமாற்றம் அடைய வேண்டுமென  அவர் விரும்பினார். அது போல சீடர்களும் மாற்றம் அடைந்தார்கள். நாமும் மாற்றம் அடைய வேண்டும் என்பது அவரது விருப்பம். சாதாரண மாற்றமல்ல. முழுமனதோடு, நம்பிக்கையோடு, ஐம்புலன் ஒடுக்கத்தோடு கூடிய மாற்றம். 
பேய்களை ஓட்டுவர்: (கண்)
 கண் தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் எல்லாம் நலமாயிருக்கும். நாம் வாழுகின்ற சமுதாயத்தைப் பார்க்கும் பார்வையிலே குறைபாடுடையவர்களாக இருக்கிறோம். இனம், சாதி, ஏற்றாத்தாழ்வு, பாகுபாடு என ஏராளமான பிரிவினைகள் பேய்களாக மாறி நம் பார்வையைக் குறைபாடுடையதாகச் செய்கிறது. இவற்றை எல்லாம் கண்ணாலேயே விரட்டி விட வேண்டும் . எதை ஒன்றை ஆர்வமுடன் நாம் பார்க்கிறோமோ , அது ஒரு நாள் நமக்குள் புகுந்து நம்மையும் அது போல் செய்யத் தூண்டிவிடும் . எனவே இது போன்ற தீமையான பேய் குணங்களை பார்க்காது கண்ணாலே விரட்டி ஓட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும். 
புதியமொழி பேசுவர்: (வாய்)
 அன்பு மொழிக்கு ஈடாக எந்த மொழியும் கிடையாது. பகைவனை நண்பனாக்கும் வல்லமையும், கோழையை வீரனாக்கும் வல்லமையும் அன்பு மொழிக்கு உண்டு. இத்தகைய அன்பு மொழி பேசி மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும் .
கொடிய விலங்கினைக் கையால் பிடிப்பர்: (வாசனை)
எறும்புகள் வரிசையாக செல்லும் போது ஒரு விதமான திரவத்தை சுரந்து தனது பாதச்சுவடுகளில் விட்டுச்செல்லுமாம். அது அதன்பின் வரும் மற்ற எறும்புகளுக்கு பாதை காட்டும் வழித்தடமாக மாறும் என்பது செய்தி. விலங்குகள் பூச்சிகள் இப்படியாக வாசனை மூலம் தங்களை பிறருக்கு அடையாளப்படுத்துகின்றன. மனிதர்களையும் அவரவர் உபயோகப்படுத்தும் வாசனை திரவியம் மூலமாக நாம் கண்டு கொள்கிறோம். வெளிப்புறத் தோற்றத்தை, அடையாளத்தை திரவியம் மூலம் அறியலாம். ஆனால் எண்ணங்களின் வாசனையை எப்படி அறிய முடியும்? 
நாம் வாழுகின்ற சமூகத்திலே எண்ணங்களினால் செயல்பாடுகளினால் கொடியவர்களாக, விலங்கை விட தரம் தாழ்ந்தவர்களாக பலர் இருக்கின்றனர். அவர்களோடு கை குலுக்கி உடன் பணி செய்யும் நிலை நமக்கு ஏற்படலாம். அப்படி ஒரு நிலை வந்தாலும் அவர்களது கொடிய எண்ணம் நமது நல்லெண்ணத்தை பாதிக்காதவாறு நாம் இருக்க வேண்டும். 
நஞ்சுள்ள உணவை உண்டாலும் தீங்கிழைக்காது: (செவி)
செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் உணவு கொடுக்கப்படும் என்று திருவள்ளுவர் தனது குறளில் இரண்டு வகை பசியைப் பற்றிக் கூறி இருப்பார். எவ்வளவு தான் நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து செய்தாலும் சிலரது அவதூறான , எதிர்மறையான, தீய வார்த்தைகள் நம் காதுகளை எட்டாதவாறு நாம் பணியாற்ற வேண்டும். நல்லவற்றை மட்டும் கேட்க பழக வேண்டும்.
உடல் நலமற்றவர் சுகம் பெறுவர்: (மெய்)
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உடல் அனைத்து உறுப்புகளின் வாசஸ்தலம். உறுப்புகளில் ஏதாவது குறை அல்லது காயம் ஏற்பட்டால் மொத்த உடலும் சோர்வடையும். அது போல நமது எண்ணம் சொல் செயல் செவிமடுத்தல், போன்றவற்றில் குறைவோ பாதிப்போ ஏற்படும் போது நமது மனம் என்னும் உடல் பாதிப்படைகிறது. தீமையை கண்ணால் அகற்றி, வாயால் அன்பு மொழி பேசி, தீயவர்களின் சிந்தனையை நுகர்ந்து, எதிர்மறையான வார்த்தைகளுக்கு செவி கொடுக்காது வாழ்ந்து உடல் உள்ள பூரண நலம் பெற்று வாழ வேண்டும் 
இவ்வாறாக ஐந்து  பண்புகளையும் பெற்று நாம் வாழ வேண்டும் என விண்ணேற்றமடைந்த இறைவன் விரும்புகிறார். இப்பண்புகளை ஆசீராகப் பெற்று உலகெங்கும் பறை சாற்ற நம்மை அழைக்கிறார். பறைசாற்றுங்கள் பணியாற்றுங்கள் என்கிறார். 
பறப்பது பறவையின் இலக்கு என்றால் சிறகுகள் பிரிவது தோல்வி அல்ல, தொடக்கம்.  உயிர்த்த இயேசு சீடர்களை விட்டுப் பிரிந்தார், விண்ணுலகம் சென்றார். பறவைகள் போல நாம் உயரப் பறக்க அவர்  நமக்கு சிறகுகளாய் இருந்தார். அவர் நம்மை விட்டுப் பிரியவில்லை என்றும் நம் உடனிருக்கிறார். நம்பிக்கை வாழ்வு என்னும் வானில் பறக்க சிறகுகளாய்ப் பிரிவோம். விண்ணேற்றமடைந்த விமலனாம் இயேசுவின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென் அனைவருக்கும் விண்ணேற்றப் பெருவிழா நல்வாழ்த்துக்கள் ...         

Saturday, 5 May 2018

அன்பெனும் நட்பில் மகிழ்வோம்.



அன்பெனும் நட்பில் மகிழ்வோம். 

பாஸ்கா காலம் ஆறாம் வாரம் மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா. 
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை அன்பெனும் நட்பில் மகிழ  இன்றைய வாசகங்கள் மூலம் அழைக்கிறார் இறைவன். அன்பு,நட்பு,மகிழ்ச்சி இவை மூன்றும் மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை. 
தந்தை இறைவனின் பண்பு இஸ்ரயேல் மக்கள் மீது இரக்கமாக/அன்பாக வெளிப்பட்டது. 
இயேசுவின் குணம் தம் சீடர்கள் மேல் நட்பாக வெளிப்பட்டது. 
தொடக்ககால கிறிஸ்தவர்கள், மற்றும் புனிதர்களின் குணம் அவர்கள் வாழ்வில் மகிழ்வாக வெளிப்பட்டது. ஆக அன்பு, நட்பு, மகிழ்ச்சி எனும் பண்புகளில் குணங்களில் நாம் வளர்வது நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, என் அன்பில் நிலைத்திருங்கள், என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் என்கிறார். கட்டளை என்றால் என்ன? ஒரு தலைவன் அல்லது ஒரு அரசன் தனக்கு நன்மை விளையும் ஒன்றை தான் பெற, தனக்கு கீழே இருப்பவர்களிடம் செய்யச்சொல்லும் ஒரு வேலை. இதில் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இதனால் தலைவனுக்கு/அரசனுக்கு நன்மை உண்டாகும். பணியாளர்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. ஆனால் இயேசு நம்மை பணியாளர்களாக அல்ல நண்பர்களாக அழைக்கிறார். ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் என்பதே அவர் நமக்கு விடுக்கும் கட்டளை. அவரது கட்டளைகளை நிறைவேற்றினால் அதன் பயன் அவர் தம் நண்பர்களாகிய நமக்கும் உண்டு. மற்றவர்களை அன்பு செய்வதன் மூலம் இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பவர்கள் எனும் நல்ல தகுதியைப் பெறுபவர்களாகிறோம். பிற மனிதர்களை அன்பு செய்வதால் அவர்களிடம் இறைவனைக் காணும் பேறுபெற்றவர்களாகிறோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 
பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் தான் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்த, அவர்களோடு எந்நாளும் உறவோடிருக்க, பத்துக் கட்டளைகளை மோயீசன் மூலமாக கொடுத்தார். பத்துக்கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளில் சுருக்கி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசி, தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசி என்று கூறி, அன்பில் அதனை நிலைநிறுத்துகிறார். புதிய ஏற்பாட்டு இயேசுவோ அதனை தனது வாழ்வால் எண்பித்துக் காட்டுகிறார். ஆக அனைத்திற்கும் மூல காரணம் அன்பே என்று ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடு வரை உள்ள அனைத்து இறை நூல்களும் கூறுகின்றன. நாம் அன்பு செய்கிறோமா? எப்படி செய்கிறோம் ?
நான் அனைவரையும் அன்பு செய்கிறேனா?  என்று சிந்திப்பவர்களை விட என்னை யாராவது அன்பு செய்கிறார்களா? என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை தான் இப்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. விளைவு அலைபேசியில் குறுஞ்செய்திகளையும் அழைப்புகளையும் எதிர்பார்ப்பவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்டவர்களை அன்புக்காக ஏங்குபவர்கள் என்கிறோம். ஆனால் உண்மையில் இவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள் அல்ல. பிறரின் கவனத்தை ஈர்க்க விரும்புபவர்கள். என்னைப் பார்க்க மாட்டார்களா? என்னிடம் பேச மாட்டார்களா? என்று, அவர்கள் கவனம் என்னை நோக்கி திரும்பாதா? என்றே ஏங்குகிறார்கள். உண்மையான அன்பை மற்றவரிடத்தில் காட்டுபவர்கள் ஒரு நாளும் இவ்வாறு எண்ண மாட்டார்கள், ஏங்க மாட்டார்கள். அன்பு கொடுக்க கொடுக்க சுரக்கும் நீர் கேணி போன்றது என்று நன்கு அறிந்து அவர்கள் செயல்படுவார்கள். 
சிறு குழந்தை முதலே நம்மையும் அறியாமல் இந்த கவன ஈர்ப்பு விளையாட்டை நாம் விளையாட ஆரம்பிக்கிறோம். குழந்தைப் பருவத்தில், நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து தாய் தந்தையரின் கவனத்தை தன்பக்கம் திருப்புவது. பள்ளிப்பருவத்தில், மாணவர்கள் ஏதாவது சேட்டைகள் செய்து, ஆசிரியர் மற்றும் அனைத்து மாணவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பது. இளம் பருவத்தில், சிகை அலங்காரம் உடை அலங்காரம் முக அலங்காரம் செய்து எதிர் பாலாரின் கவனத்தை கவர்வது. முதிர் வயதில், தங்களது புலம்பல்கள் மற்றும் பழைய கதைகள் மூலமாக மற்றவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் தக்கவைத்துக் கொள்வது. இப்படியாக நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் எப்போதோ சில தருணங்களில் அன்புக்காக ஏங்குபவர்களாக இருந்திருக்கிறோம். சிலர் அன்பைப் பெறும் நிலையில் இருந்து முன்னேறி, அன்பைக் கொடுப்பவர்களாக மாறி இருக்கிறோம் . சிலர் இன்னும் அன்பைப் பெறும் நிலையிலேயே நின்று கொண்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் சிலருடைய  அளவுக்கதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு, ரசிக்கப்பட்டு,பின்பு தொல்லையாகி சலிக்கப்பட்டு, இறுதியில் உதாசீனப்படுத்தப்பட்டு பின் உதறித்தள்ளப்படுகிறது. நம்முடைய அன்பு அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இயேசு தன்னை உதாரணமாகக் காட்டுகிறார். தனக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே உள்ள அன்பு உறவைப் போல நமது அன்பு உறவுகள் இருக்க வேண்டும் என்று முன்மாதிரி காட்டுகிறார். அன்பைக் கொடுப்போம் அன்பைப் பெறுவோம்.கொடுப்பது சிறிது என்று எண்ணித்தயங்க வேண்டாம் பெறுபவருக்கு அது பெரியதாகக் கூட இருக்கலாம்.
நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்து, நண்பர்களான நமக்காய் தன் உயிரையே தந்தவர் இயேசு. நம் அனைவருக்கும் நண்பர்கள் உண்டு. ஆனால் நல்ல நண்பர்கள் ஒரு சிலருக்கே உண்டு. நண்பர்கள் நம் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல நிகழ்வுகளையும் நன்கு அறிவார்கள். ஆனால் நல்ல நண்பர்கள் சிறந்த நண்பர்கள் மட்டுமே அந்த நல்ல நிகழ்வுகளுக்கு காரணமானவர்களாகவும், அந்த நிகழ்வில் வாழ்ந்தவர்களாகவும் இருப்பர். பல நேரங்களில் நாம் நல்ல நண்பர்களை தேடி அலைகிறோம். அவர்கள் எங்கு இருப்பார்கள் எப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதை விட்டு விட்டு நாம் நல்ல நண்பர்களாக மாறுவோம். பின்னர் சிறந்த நண்பர்கள் நமக்கு தானாக கிடைப்பார்கள். நண்பர்கள் நிலைக்கண்ணாடி போன்றவர்கள். 
நமது முக அழகை, உடையை சரி செய்ய உதவுவது கண்ணாடி.
நமது நிறை குறைகளை சரி செய்வது நண்பர்கள்.
இரும்பு மரச்சட்டம் கொண்டு விளிம்புகள் காக்கப்படுவது கண்ணாடி.
நம்பிக்கை என்னும் பண்பு கொண்டு காக்கப்படுவது நட்பு.
ஒருபுறம் பாதரசம் பூசப்பட்டு மறுபுறம் பிம்பம் பிரதிபலிப்பது கண்ணாடி.
தன்னை மறைத்து நம்மை பிரதிபலிக்கச் செய்வது நண்பர்கள். 
எனவே நல்ல நண்பர்களை நாடி தேடுவதில் நேரத்தை செலவழிக்காது நாமே நல்ல நண்பர்களாக மாற அழைக்கிறார் இயேசு. 
இறுதியாக, மகிழ்ச்சி எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று. யாரும் மகிழ்ச்சி எனக்கு தேவையில்லை என்று கூறுவதில்லை. மனிதர்களாகிய நாம் அனைவரும் கஷ்டப்பட்டு, படித்து, வேலை தேடி சம்பாதிப்பது எதற்காக என்று கேட்டால்,கடைசி காலத்தில் மகிழ்ச்சியாக வாழ என்று சொல்வோம். ஆனால் பல நேரங்களில் பணத்தை சேமிப்பதற்காக வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை மகிழ்ச்சியை இழக்கிறோம். பணம் சேர்த்த பின்பு அந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்காக  சேமித்த பணத்தை இழக்கிறோம். கடைசியில் இரண்டில் ஒன்று கூட எஞ்சி நிற்பதில்லை. வாழுகின்ற வாழ்க்கை ஒரு முறை தான். போகின்ற போக்கில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை  மகிழ்ந்து விடவேண்டும். மகிழ்வைக்கொடுப்பவர்களாக நாம் மாற வேண்டும். எல்லா இடங்களிலும் மகிழ்வாய் இருக்க முடியவில்லையா? நாம் இருக்கும் இடத்தையாவது மகிழ்வால் நிரப்ப முற்படுவோம். 
நாம் வாழ்கின்ற வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் போல. முதல் பக்கம் கருவறையில் தொடங்கி கடைசி பக்கம் கல்லறையில் முடிவடைகிறது. இடையில் இருக்கும் பக்கங்களை அன்பாலும், நட்பாலும், மகிழ்வாலும் நாம் தான் நிரப்ப வேண்டும்.  ஏனெனில் நாம் கனி தர, கனி தந்து நிலைத்து நிற்க இயேசு விரும்புகிறார். ஆம் மகிழ்வெனும் கனி தர, அதில் நிலைத்து நிற்க அவர் நம்மை அழைக்கிறார். உயிர்த்து விண்ணேற்றம் அடையும் நாள் வரை தனது சீடர்களுக்கு காட்சி தந்து அவர்களை அன்பினால் திடப்படுத்தி, நட்பினால் நலப்படுத்தி, மகிழ்வாய் மனதார வாழ்த்தியவர் நம் அன்பர் இயேசு. அவரது விண்ணேற்பு பெருவிழாவிற்காகவும், தூய ஆவியின் வருகைக்காகவும் உள்ளங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் நம்மை அவரது அளவில்லாத அன்பினாலும் நிலைத்த நட்பினாலும் மறையாத மகிழ்வினாலும் நிரப்பி காப்பாராக.அன்பை நட்பை மகிழ்வைப் பெறுபவர்களாக அல்ல அதைக் கொடுப்பவர்களாக மாறுவோம். அன்பெனும் நட்பில் மகிழ்வோம். உயிர்த்த இறைவனின் அருளும் ஆசீரும் நம்மீதும்  நம் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவர் மீதும் நிலைத்து இருப்பதாக ஆமென். 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...