Saturday, 30 June 2018

உனது பயணம் எத்திசையை நோக்கியது?????

இன்றைய நமது வாழ்க்கைச்சூழலில் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அனைவரும் பயன்படுத்துவது ஊடுறுவல் வரைபடம் என்னும் NAVIGATION MAP . அலைபேசி நமது வாழ்வை மிகச்சுருக்கி நமது உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்துவிட்டது. இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதைதான் பயன்படுத்துகின்றனர். பக்கத்து தெருவிற்கு செல்ல வேண்டுமென்றாலும் பாதையை தொடுதிரையில் பார்த்து மகிழ்கின்ற காலமாகமாறிவிட்டது. அதில் நாம் சென்று சேர வேண்டிய இடத்தை குறித்து வைத்தால் அது நமக்கான எளிதான பாதையை காட்டும். இதன் மூலம் நமது பயணம் சுலபமானதாக மகிழ்வானதாக அமையும். நமது வாழ்வும் அப்படி தான் ஆனால் அதற்கான பாதை இயேசு என்னும் அலைபேசியில் அடங்கி இருக்கிறது. முதலி நாம் இயேசுவை அறிய வேண்டும் அதன் பின் நமது வாழ்வுக்கான பாதையை அறியலாம். 
வாழ்க்கையில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை விட எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே மிக முக்கியம். நமது வாழ்வு ஒரு பயணமாக பயணித்துக் கொண்டே இருக்கின்ற ஒரு நதியாக ஆறாக இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கும் நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு செழிப்பையும் பசுமையையும் தர முடியும். இல்லையெனில் தேங்குகின்ற கழிவு நீர் போல நமது வாழ்வு மாறிவிடும். அது பசுமையையும் செழிப்பையும் ஒரு போதும் தர முடியாது. இன்றைய நற்செய்தியின் மூலம் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பும் இதுதான். யாயீர் என்னும் தொழுகைக் கூடத் தலைவரின் மகள் குணமடைதலும் , பெரும்பாடுள்ள பெண் குணமடைதலும் பகுதியை வாசிக்கக் கேட்டோம் . இன்றைய நற்செய்தியில் பல நபர்கள் இடம் பெறுகின்றனர். இயேசு, அவர் தம் சீடர்கள், யாயீர் அவருடைய மகள், இரத்தப்போக்குள்ள பெண், மக்கள் கூட்டம் என பலர் இருப்பினும் நம்பிக்கையோடு பயணித்தவர்கள் சிலர் மட்டுமே. அவர்கள் யாயீர், யாயீர் மகள்,பெரும்பாடுள்ள பெண். இவர்களின் இன்றைய செயல்பாடுகள் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன என்பதை அறிய முயல்வோம். 
யாயீர்; 
தொழுகைக் கூடத் தலைவர். அவர் நினைத்திருந்தால் பணியாளரையோ அல்லது தொழுகைக்கூடத்து முக்கியமான நபர்களையோ இயேசுவிடம் அனுப்பி தன் மகளுக்கு உடல் நலம் வேண்டி இருந்திருக்கலாம். ஆனால் தன் மகள் மேல் கொண்ட அன்பின் நிமித்தம் தன் வீட்டிலிருந்து தானே வெளியேறி இயேசுவைத் தேடி செல்கிறார். தன் மகள் குணமாக வேண்டும் என்ற ஆவல் , ஏக்கம் அவரை வெளியே இயேசுவை நோக்கி அவர் இருந்த திசையை நோக்கி அழைத்து செல்கிறது. தன் வீட்டிலேயே இருந்து தன் மகளுக்காக அழுது கொண்டிருக்காமல் வெளியே பயணிக்கிறார். அந்த நம்பிக்கை பயணம் அவருக்கு நலம் பயக்கிறது. அவரது மகள் குணமடைகிறாள். அவரது நம்பிக்கை செயல்பாடுள்ள நம்பிக்கையாக இருக்கிறது. 

யாயீரின் மகள்:
பன்னிரண்டு வயதுள்ள சிறுமி. உடல் துன்பத்தோடு உள்ள துன்பமும் வருத்த நோய்வாய்ப்பட்டு இறக்கின்றாள். தன் வயது சிறுமிகள் எல்லாம் ஓடியாடி விளையாட இவள் மட்டும் படுக்கையில் கிடக்கிறாள். இயேசு வந்து தன் கரங்களை தொட்டு எழுந்திரு என்று சொன்னதும் உடனே எழுந்ததோடு மட்டுமல்லாமல் நடக்கவும் ஆரம்பிக்கிறாள் . இயேசுவின் வல்லமை தன்னை குணப்படுத்தும் என்று நம்பிய சிறுமி , தனது நம்பிக்கை தன்னை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரும் என்று எண்ணி அதை செயல்படுத்துகிறாள். குணமும் பெறுகிறாள். 
பெரும்பாடுள்ள பெண்;
பன்னிரண்டு ஆண்டுகள் இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட பெண் . தனது ஊர் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இயேசுவைக் காண வருகிறாள். தான் நலம்பெற வேண்டும். வீட்டிற்குள் அடைந்து கிடப்பதாலோ அல்லது மனித மருத்துவம் கை விட்டு விட்டதே என்று எண்ணி வருந்தி அழுவதாலோ நலம் கிடைத்து விடாது. மாறாக, நலம் அருள்பவரை நாடி செல்ல வேண்டும் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் வருகிறாள். நம்புகிறாள் நலம் பெறுகிறாள். 
இயேசு ;
தனது ஆற்றல் இறை வல்லமை தன்னைப் பின் தொடரும் மக்களோடு மட்டும் இருந்து விடாமல் தனது இருப்பினை நாடுபவர்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என எண்ணுகிறார். அதனால் தான் மக்களை நாடி செல்கிறார். நம்பிக்கையோடு தொடுபவர்கள் நலம் பெற்றுக்கொள்கின்றனர். சிலரை இயேசு தொட்டு குணப்படுத்துகிறார். சிலர் இயேசுவைத் தொட்டுக் குணம் பெறுகின்றனர். இயேசுவும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு போதனைகளையும் புதுமைகளையும் செய்யவில்லை . இயக்கம் ஒன்றே இயல்பான இன்பமான வாழ்வு தரும் என்பதை அறிந்தவர் அவர். எனவே அவர் உதவியை நாடிய மக்களை தேடி செல்கிறார். 
மக்கள் கூட்டம் : 
இயேசுவோடு மறுகரையிலிருந்து இக்கரைவரை அவரைப் பின் தொடர்ந்தவர்கள், இக்கரை மக்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள், என பலவிதமான மக்கள் அவரைப் பின் தொடர்கின்றனர். இவர்களும் பயணம் செய்தவர்களே ஆனால் இவர்கள் பயணமும் இயக்கமும் தெளிவில்லாத பயணமாக இயக்கமாக இருக்கிறது. இவர் என்ன தான் செய்கிறார் பார்ப்போமே என்ற வேடிக்கை பார்க்கும் மனப்பான்மையே இவர்களிடம் அதிகமாக இருக்கிறது. சிலர், இரத்தப்போக்குடைய பெண்ணை விமர்சனம் செய்பவர்களாக, சிலர் யாயீரிடம் இயேசுவை ஏன் தொந்தரவு செய்கின்றீர் என்று அவருக்கு சாதகமாக பேசுபவர்களாக, சிலர் நடப்பது அனைத்தையும் பார்த்து மலைத்து போனவர்களாக, சிலர் இதைக் காணாத மக்களுக்கு நடந்ததை விளக்கிச்சொல்ல முயல்பவர்களாக இருக்கின்றனர். 
இயக்கமோ பயணமோ ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வது மட்டுமல்ல. ஒரு குறிக்கோளோடும் தெளிவான முடிவோடும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளையும் நம்பிக்கையோடு எடுத்து வைப்பதே முழுமையான பயணம் அல்லது இயக்கமாகும்.
யாயீரின் பயணத்தில் தன் மகள் நலம் பெற வேண்டும் இயேசுவை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து தன் மகளை தொட வைத்து நலம் பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளும் ஆசையும் இருந்தது. நம்பிக்கையோடு தன் அடியை எடுத்து வைத்தார் வெற்றி பெற்றார். 
யாயீரின் மகள் இயேசு தன்னை தொட்டு விட்டார் தன் உடல் பலவீனத்தை மாற்றி விட்டார் என்று அறிந்ததும் எழ முயற்சித்தவள் நடக்க ஆரம்பிக்கிறாள். தனது பயணத்தை அப்பொழுதே தொடங்கிவிடுகிறாள். முயற்சிக்கிறாள் வெற்றி பெறுகிறாள்.
இரத்தப் போக்குடைய பெண் தன் வீட்டை விட்டு , தனது மருத்துவ சூழல்களை விட்டு வெளியே வருகிறாள். இயேசு இருக்கும் திசையை நோக்கி பயணிக்கிறாள் நலம் பெற்று மகிழ்வுடன் திரும்புகிறாள். 
மக்கள் கூட்டம் இலக்கற்ற பயணம் மேற்கொண்டவர்கள் எனவே வியப்பையும் ஆதங்கத்தையும் மட்டுமே பெற்றவர்களாக இல்லம் திரும்புகின்றனர். 
நமது பயணம் யாருடைய பயணத்தைப் போல இருக்கிறது எந்த திசையை நோக்கியதாக இருக்கிறது என்று சிந்திப்போம். வில்லிலிருந்து பாயும் அம்பு இலக்கின்றி பயணித்தால் திசை மாறி காணாமலேயே போய்விடும். நமது அன்றாட வாழ்வும் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஒரு பயணம் இலக்கு தெளிவாக இருந்தால் பாதை தெளிவானதாக அமையும் பயணமும் இனிதாக அமையும். எனவே தெளிவான இலக்கோடும் பயணத்தை தொடர இறைவனின் ஆசீர் வேண்டுவோம் இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.


Saturday, 23 June 2018

மீண்டும் பிறப்போம் வா!!!


மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு படுத்தவே இன்றைய வாசகங்களும் இன்றைய பெருவிழாவும். நமது தாய் திருச்சபை மூவரின் பிறப்பு விழாவை பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றது. 
1. அன்னை மரியின் பிறப்பு ( செப்டம்பர் 8 ) 
1. இயேசுவின் பிறப்பு ( டிசம்பர் 25 )
3. யோவானின் பிறப்பு ( ஜூன் 24 )
திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடி, புதியஏற்பாட்டின் முதல் இறைவாக்கினர். இவரது வாழ்நாளில் இவர், இவரைச் சார்ந்தவர்களுக்கும் இவரைப் பின்பற்றியவர்களுக்கும் ஏராளமான அறிவுரைகளையும் போதனைகளையும் செய்தவர். ஆனால் இவர் பிறந்த எட்டு நாளிலேயே தன்னை காண வந்த தன் உறவின் முறையாளர்களுக்கு நான்கு விதமான செய்திகளை எடுத்துரைக்கிறார். அவரது பிறப்பு விழாவைக் கொண்டாடி மகிழும் நமக்கும் இந்த செய்தி பொருந்தும். 
1. கடவுள் நம்பிக்கை.
2. உறவுகளின் சங்கமம்.
3. ஒத்த மனம். 
4. கடவுளின் அருஞ்செயல்.

1. கடவுள் நம்பிக்கை;
   யோவானின் பெற்றோர்களான செக்கரியா, எலிசபெத் இருவரும் முதிர் வயதினர். பிள்ளைப் பேறு பெற இயலாத நிலையிலும், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையில் இடைவிடாது வேண்டுகின்றனர். செக்கரியா கடவுளின் திருமுன் தூபம் காட்டும் வேளையிலும் இதே மன்றாட்டுடன் தான் நின்றிருப்பார். இடைவிடாத நம்பிக்கை செயலாக மிளிர்கிறது. மன்றாட்டு கடவுளின் திருமுன் செவிமடுக்கப்படுகிறது. எலிசபெத் தனது முதிர் வயதில் குழந்தையை பெற்றெடுக்கிறார். நாமும் பல வேளைகளில் பல மன்றாட்டுக்களுடன் கடவுளின் திருமுன் செபிக்கிறோம். நமது செபங்களும் விண்ணப்பங்களும் பெரும்பாலும்  கால வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இந்த மாதத்திற்குள் எனக்கு இது நடந்தேற வேண்டும். இதற்குள் என் செபம் கேட்கப்பட வேண்டும் என்று கடவுளிடமே நாம் டெட் லைன் வைக்கிறோம். சந்தர்ப்பவசமாக அது நடந்தேறினால் மகிழ்ச்சி . இல்லையென்றால் கடவுளே இல்லை அவருக்கு கண் இல்லை காது இல்லை என்று புகழ் பாடல் பாட ஆரம்பித்துவிடுவோம் . 
இந்நிலையில் தூய யோவானின் பிறப்பு, நம்பிக்கையோடு செபி உன் விண்ணப்பம் ஒரு நாள் கேட்கப்படும். தாமதமாக வந்தாலும்  அது தரமானதாக உன்னை வந்தடையும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. 
2. உறவுகளின் சங்கமம்;
 இது வரை பிள்ளைப் பேறு அற்றவர்கள் என்று யோவானின் பெற்றோர்களை இகழ்ந்த அவரின் உறவினர்கள் இன்று மகிழ்வைக் கொண்டாடக் கூடி வருகின்றனர். முதிர்ந்த வயதில் தனிமையில் தவித்த யோவானின் பெற்றோர்கள் அவர் பிறப்பு மூலமாக இழந்த உறவுகளை மீண்டும் பெறுகின்றனர். புது குடும்பமாக மாறுகின்றனர். உறவுகள் நம் வாழ்வு என்னும் உடம்பின் நரம்புகள். நம் உடம்பின் அனைத்து பாகங்களும் நலமுடன் இருக்க இரத்தத்தை எடுத்துச்செல்லும் பணியாளர்கள். அவ்வாறே நமது உறவினர்களும் நமது வாழ்க்கை நலமாக அமைய நமக்கு நன்மைகள் பலவற்றைக் கற்றுத்தரும்  செயல் ஊக்கிகள். இன்று நம்மிடையே பெரும்பாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை மறைந்து போன ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணம் அனைவரும் சொல்வது மனைவிக்கு கணவனின் வீட்டாரைப் பிடிப்பதில்லை. எனவே அவர்களோடு சேர்ந்து வாழ விருப்பமில்லை . எனவே தனிக்குடித்தனம். உங்களுக்கு நான் முக்கியமா இல்லை உங்கள் குடும்பம் முக்கியமா என்று கேட்டு பிரிந்து போகும் மனைவிகளை நான் குற்றம் சொல்ல மாட்டேன். அவர்களும் அந்த குடும்பத்தில் ஒருவர் தான் என்பதை மனைவிகளுக்கு புரிய வைக்காத கணவன்களின் தவறு  தான் இது என்று கூறுவேன். இப்படிப்பட்ட நிலையில் யோவானின்  பிறப்பு, பெயர் சூட்டு நிகழ்வு உறவுகள் அனைவரையும் கூடி வரச்செய்கின்றது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு, என்று தோள் கொடுக்கும் உறவுகளும் நமக்கு தேவை என்பதை இவர் பிறப்பு நமக்கு எடுத்துரைக்கிறது. 
3. ஒத்த மனம்; 
  ஒருவரது வம்ச வளர்ச்சி அல்லது பரம்பரை பெயர் நிலைக்க குழந்தைக்கு அவர் தந்தையின் பெயரையோ அல்லது மூதாதையர்களின் பெயரையோ வைப்பது வழக்கம். அப்படியே கூடி இருந்த உறவினர்களும் எண்ணி இருக்கின்றனர். ஆனால் தாயாம் எலிசபெத் அக்குழந்தைக்கு யோவான் என பெயரிடச்சொல்கிறார். பெண்களை மதிக்காத சமூகம், அவரை விடுத்து தந்தையாம் செக்கரியாவிடம் தங்கள் விருப்பத்தை எடுத்துரைக்கின்றனர். அவரும் அக்குழந்தைக்கு யோவான் என்று பெயரிட வேண்டும் என்று கூறுகின்றார். வயது முதிர்ந்த நிலையிலும் கணவன் மனைவி இருவரும் ஒத்த மனது உடையவர்களாக இருப்பதைக் கண்டு வியக்கின்றனர் உறவினர்கள். இது யாருடைய பெயர் என்ற வியப்பு இரண்டாம் பட்சமாக மாறுகிறது.  திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் நிம்மதியாக வாழ இரண்டு வழிகள். விட்டுக் கொடு இல்லையென்றால் விட்டு விடு . இதை செய்ய மறப்பதாலேயே ஏராளமான குடும்பங்கள் பிரிகின்றன. யோவானின் பிறப்பு இதன் மூலம் நமக்கு விடுக்கும் செய்தி இது தான். துறவறமானாலும்  இல்லறமானாலும் உடன் வாழ்பவர்களுடன் மனமொத்து வாழ வேண்டும் . விட்டுக் கொடுங்கள் இல்லையென்றால் விட்டு விடுங்கள். 
4. கடவுளின் அருஞ்செயல்: 
  வாய் பேச முடியாத செக்கரியா, யோவான் எனும் பெயர் சூட்டப்பட்டவுடன் நா கட்டவிழ்ந்து பேச ஆரம்பிக்கிறார். கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என்பதை எடுத்துரைக்கிறது இந்த செயல். சிலர் மகிழ்வில்  எனக்கு வாயடைத்து போனது என்பர், சிலர் துக்கம் தொண்டையை அடைக்கிறது என்னால் பேச முடியவில்லை என்பர். ஆக அதிக இன்பமோ துன்பமோ முதலில் தடைபடுவது வார்த்தைதான். ஆனால் இங்கு எதிர்மாறாக அதிக மகிழ்வில் கடவுள், செக்கரியாவிற்கு கட்டப்பட்ட நாவினை அவிழ்க்கிறார். கடவுளின் அருஞ்செயலை பிற மக்களுக்கும் எடுத்துரைக்க அறிவுறுத்துகிறார். கடவுளின் வல்லமை யாருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும்  எந்த வயதிலும் நிறைவேற்றப்படலாம் என்பதை யோவானின் பிறப்பு நமக்கு உணர்த்துகிறது.   .   
நாமும் பிறந்தோம். வளர்ந்தோம். வாழ்கிறோம். யோவானின் பிறப்பு அவரது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் நல்ல செய்தியைக்கொண்டு வந்தது. யோவானின் பிறப்பு இயேசுவுக்கு முன்னோடி என்ற ஒரு இலக்கை உடையதாயிருந்தது. நமது பிறப்பின் நோக்கம் என்ன? நமது இலக்கு என்ன? என்று சிந்திப்போம். உடலளவில் பிறப்பது ஒரு முறை என்றாலும் மனதளவிலும் நல்லெண்ணத்தளவிலும் நாம் தினந்தோறும் பிறந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அப்போதும் நோக்கமும் இலக்குமின்றி அந்நாளையும் வீணாய் கழிக்கிறோம். மீண்டும் பிறப்போம் தினமும் நல்லெண்ணத்தோடு. நல் இலக்கோடு , நல் நோக்கத்தோடு . நாமும் நமக்கு பின் வரும் இயேசுக்களுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் யோவான்களாய் திகழ்வோம். யோவான் இஸ்ரயேல் மக்களுக்கு தன்னை வெளிப்படுத்தும் நாள் வரை பாலைவனத்தில் தன்னை மறைத்துக் கொண்டார். நாமும் நம்மை நமக்குள் மறைப்போம். புதிய யோவான்களாய் அனுதினமும் பிறக்க, நம்மை சார்ந்தவர்களுக்கு கடவுள் நம்பிக்கையையும், உறவுகளின் சங்கமத்தையும், கடவுளின் அருஞ்செயல்களையும் ஒத்த மனமுடையவர்களின் வாழ்க்கை நலத்தையும் எடுத்துரைக்கக் கூடியவர்களாய் வாழ்வோம் . இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.      

Saturday, 16 June 2018

விதைகளா? விழுதுகளா?

பொதுக்காலம் 11ம் ஞாயிறு மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா
 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது இந்த பழமொழியை நாம் பலமுறை உபயோகப்படுத்தியிருப்போம். பலர் சொல்லவும் கேட்டிருப்போம். கடுகில் அவ்வளவு மருத்துவ குண நலன்கள் இருப்பதாலேயே இவ்வாறு சொல்கிறோம். விதைகளிலேயே மிகவும் சிறிய விதை கடுகாகத்தான் இருக்கும். பயன் தருவதிலேயும் அதிக பயன் தருவதும் இதுவாகத்தான் இருக்கும். நாம் பொதுவாக வீடுகளில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று கடுகு. கடுகு, எண்ணெயோடு சேர்ந்து தரும் மணமும் சுவையுமே நமது சமையலை நிறைவான ஒன்றாக மாற்றுகிறது. சிலருக்கு கடுகு தாளிக்கும் வாசனையே பசியை தூண்டிவிடும் .  சிறுவயதில் எங்கள் வீட்டில் பெரும்பாலும் காலை உணவு பழைய சோறாகத் தான் இருக்கும். எண்ணெய் கடுகு கருவேப்பிலை மிளகாயோடு சேர்த்து தாளிக்கப்படும் பழைய சோறுக்கு இணை எந்த இட்லி பொங்கலுக்கும் வராது. கடுகின் மகத்துவம் அவ்வளவு மகத்துவமிக்கது. உடலின் உள்ளுறுப்புக்களின் நலனான வாதம் பித்தம் ஜீரணம் போன்றவற்றிற்கும் வெளிப்புற உறுப்புக்களின் நலனான மூட்டு வலி கை கால் இடுப்பு வலி போன்றவற்றிற்கும் மிகவும் பயன்படுகிறது. கடுகு எண்ணெய், கடுகுத் தூள், கடுகு கீரை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை. தெரிந்தோ தெரியாமலோ நாம்  சமையலுக்கு பயன்படுத்தும் கடுகு சார்ந்த பொருட்களில் அத்தனை நன்மைகள் இருக்கின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடுகின் பயன் தெரியுமோ இல்லையோ கடுகைப் பற்றி நன்கு தெரியும்.
இயேசு தனது போதனைகளில் பெரும்பாலும் உவமைகளையும் கதைகளையும் பயன்படுத்துவது அதிகம். அவை அதிகமாக அந்த பகுதி மக்களுக்கு பழக்கமான, பயன்பாட்டோடு தொடர்புடைய ஒரு பொருளாகவோ கதையாகவோ தான் இருக்கும். வலை, முத்து, விதைப்பவர், காணாமல் போன ஆடு, விளக்கு, தாலந்து, ஊதாரி மைந்தன், என அனைத்து உவமைகளுமே மக்களோடு தொடர்புடைய பொருட்கள் ஆட்கள் சம்பந்தப்பட்டவை. அவ்வகையில் கடுகும் மக்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு பொருளாகத் தான் இருந்திருக்கும். இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியை  கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். சிறிய கடுகு விதை மண்ணில் விதைக்கப்பட்டு, பின்னர் பெரிய மரமாக வளர்வது போல் இறையாட்சி என்னும் நம்பிக்கை நம்முள் கடுகு விதை போல விதைக்கப்பட்டு கடுகு மரமாக வளர வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
இறையாட்சி நமக்குள் இருக்கிறது. நம் உள்ளத்தில் இருக்கிறது. அது விதையாக இருக்கிறதா? இல்லை விழுது தரும் மரமாக இருக்கிறதா என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. கடுகு விதை மிகவும் சிறியது. மரமோ மிகப் பெரியது.
விதை சிறிய உருண்டை வடிவம். மரமோ சொல் வடிவத்தால் விவரிக்க முடியாத அளவு பெரியது.
விதை பறவைகளுக்கு உணவாக அமைகிறது. மரம் பறவைகள் வந்து உணவு உண்ணும் இடமாக (உண்ணும் விடுதி) மாறுகிறது.
விதை பறவையின் நிழலுக்கு அடியில் இளைப்பாறுகிறது. மரம் பல பறவைகள் வந்து தங்கி இளைப்பாறும் இடமாக மாறுகிறது.
விதை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு உணவாகிறது. மரம் பல பறவைகளை தன்னிடம் வரவழைக்கும் இடமாக மாறுகிறது.
இறையாட்சி என்னும் கடவுளின் அரசு நம்பிக்கை, நம்முள்ளும் துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் விதையை வளர வைத்து , மரமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். பலர் விதையாகவே வாழ்ந்து, பறவைகளுக்கு அந்த நேரத்துக்கு மட்டும் உணவாகின்றோம். சிலர் நம்முடைய சொல் செயல் வாழ்வு முறை மூலமாக பலர் வாழ்க்கைக்கு மருந்தாகிறோம். சிலர் நம்முடைய பண்பு நலன் உறவு முறை மூலமாக பலருடைய வாழ்வுக்கு மணமும் சுவையும் சேர்க்கிறோம் . விதையாக இருந்தால் சிலருக்கு மட்டுமே பயன் தர முடியும். மரமாக மாறினால் தான் பலருக்கும் பயன் தருவதோடு பல பயன் தரும் மரங்களையும் உருவாக்க முடியும். விதைகளா? மரங்களா? நாம் எதுவாக இருக்கிறோம். எதுவாக மாறப்போகிறோம் என்பதை சிந்தித்து வாழ்வோம். வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் நமக்கு சாதகமாக நடப்பதில்லை. நாம் தாம் அதை தீர்மானித்து நமக்கு ஏற்றவையாக மாற்றிக் கொள்ள வேண்டும். விதையோ மரமோ வீரியமிக்க ஒன்றாக இருக்கின்றோமா என நம்மை நாமே சுய ஆய்வு செய்து கொள்வோம். இது தான் வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணிவிடாது இதைவிட மேலான ஒன்று உண்டு என்று முன்னோக்கி செல்வோம். இதுவல்ல வாழ்க்கை, இதற்கு மேலான ஒரு வாழ்வு உண்டு என்று எண்ணி தன் வாழ்வை மாற்றிய ஒரு மனிதனின் கதையைக் காண்போம்
  ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!
 ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. (இப்படி ஒரு சட்டம் நம்மூரில் இருந்திருக்க வேண்டும்). இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
 ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம்  கிடைத்தது. நன்கு பணி செய்தான் . மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான். அவன் ஐந்தாண்டு பணி முடிந்தது. அவன் செயலைப் பார்த்த மக்களுக்கு மன்னனை அனுப்ப மனம் வரவில்லை இருப்பினும் சட்டத்தை மாற்ற முடியாதல்லவா?  அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். முகத்தில் எந்த் கவலையும் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருந்தான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறார்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.
அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவரோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறார். படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
 ''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
 ''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன். காட்டை அழித்து நாட்டாக்கியது ஒரு தவறு. ஆட்சியில் கொள்ளை அடித்து புது நாட்டை உருவாக்கியது ஒருதவறு என்றாலும் அந்த மன்னன் இன்னும் வாழ வழி இருக்கிறது என்று எண்ணியது ஒரு புதுமை. இதற்கு முன் இருந்த அனைவரும் இறந்து மடிய இவன் வேறு மாதிரியாக சிந்தித்திருக்கிறான்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை? பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
 இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!
சிந்தனைத் திறனும் திட்டமிட்டு செயல் புரிதலும் ஒருவரிடம் அமைந்தால் அவரால் எதையும்
 சாதிக்கமுடியும்  நமது இயல்க்கு எது என தீர்மானிப்போம் விதையாக வாழ்ந்து மடிவதா? இல்லை விழுது தரும் மரமாக வாழ்ந்து பயன் தருவதா?
 !விவசாயமும் விவசாயிகளும் அழிந்து மாண்டு கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்த இறையாட்சி பற்றிய கடுகு உவமை நம்மை அவர்களுக்காக செபிக்க அழைக்கிறது. விழுதாக மாறி நம்மை பாதுகாக்க வேண்டிய விவசாயம் இன்று நம் கண்களுக்கு களைச்செடி போல் காட்சியளித்து நம் கண் முன்னே இருந்து அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற செபிப்போம். இயற்கை முறையில் உண்டு உடல் நலத்தோடும் மகிழ்வோடும் வாழ்ந்து வந்த நாம் செயற்கை உணவுகள் நல்லது என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டதனால் வந்த விளைவு இயற்கையை தீமை என கருதியது. இன்று ஏராளமான பாதிப்புக்கு உள்ளான பின்பு இயற்கையை நாடுகிறோம் . அது நம்மை விட்டு வெகு தொலைவில் போய் கொண்டிருக்கிறது. இயற்கையையுமது சார்ந்த பொருட்களையும் இயேசு உவமையாக பயன்படுத்தியது அதன் மேன்மையை நாம் நன்கு உணர்ந்தவர்கள் என்பதனாலும், இன்னும் அதிகம் உணர வேண்டும் என்பதனாலும் தான். கடுகு உவமையை இறையாட்சிக்கு பயன்படுத்திய இயேசு நாம் அது போல் பயன் தரக்கூடிய வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே. 
 கதையில் பார்த்த மன்னன் போல நமது இலக்கு எதுவென நிர்ணயிப்போம் . விதையாக வடிவம் பெற்ற நாம் மரமாக மாற முயற்சிப்போம். பல பறவைகள் இளைப்பாறும், நிழல் பெறும் மரமாக நமது வாழ்வு மாற இறையருள் வேண்டுவோம் . இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஆமென்.       

Saturday, 2 June 2018

உயிருள்ள உணவாய் உடன் வருவாயே!!!!

                           ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா.
                               மறையுரைச் சிந்தனை  சகோதரி மெரினா.

நாம் உண்ணுகின்ற உணவுகள் அனைத்துமே உயிரற்ற உணவுகள். உயிரோடு இருப்பதைக் கொன்று உண்கிறோம். அது செடி கொடியானாலும் சரி, விலங்கினமாக இருந்தாலும் சரி. அதை நாம் உண்ணும் போது அதிலுள்ள சத்துக்கள் நம் உடலினுள் சென்று உடலுக்கு பலத்தையும் நலத்தையும் தருகின்றன. உயிருள்ள ஒன்று உயிரற்றதாக மாறி, உடலுக்கு உயிர் தருகிறது. ஆனால் இயேசு தரும் உணவு உயிருள்ள உணவு. உண்பதற்கு முன், உண்ணும்போது, உண்ட பின் என எல்லா நேரமும் உயிருள்ள உணவாக மாறி நமக்கு ஊட்டம் தருகிறது. நாம் தான் அதை உணர்வதில்லை. ஆண்டவரின் திருஉடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த உயிருள்ள உணவின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள இன்றைய நாளின் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய  நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சீடர்களுடன் பாஸ்கா விருந்து உண்ணும் பகுதி இடம் பெற்றிருக்கிறது. அவரது பணிவாழ்வுக்குப் பின் சீடர்களோடு அவர் கொண்டாடிய இந்த விருந்தே, நமது கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைந்துள்ளது. பல இடங்களில் அப்பமும் மீனும் கொண்டு புதுமைகள் பல நிகழ்த்தி இருந்தாலும், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி இருந்தாலும் அந்த இடங்களில் எல்லாம் சொல்லாததை இந்த பாஸ்கா விருந்தின் போது சொல்கிறார். இது என் உடல் என் இரத்தம் என்று அப்புதுமைகளின் போது சொல்லி இருந்தால் இன்று நமது நற்கருணை வழிபாட்டு முறையே மாறி (கானாவூர்த் திருமணம், மீன்பிடித்திருவிழா, திபேரியக் கடல் மீன்பாடு, புல்வெளியில் பந்தி) இருந்திருக்கும். ஆனால் இயேசு நம்பிக்கை கொண்ட சீடர்கள் மத்தியில் மட்டுமே அப்பம் பிட்டு, இது என் உடல், இது என் இரத்தம் என்று சொல்கிறார். ஏனெனில் ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த போதோ, கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் புதுமை செய்த போதோ, அங்கிருந்த அனைவரும் நம்பிக்கை உடையவர்களாய் இல்லை. கூடியிருந்த அனைவரும் பல்வேறு நோக்கங்களுக்காய் கூடி இருந்தனர்.  உணவிற்காக, உறவிற்காக, உறவினர்க்காக, உடல் நலத்திற்காக, என்று பல நோக்கங்கள் இருந்திருக்கலாம். ஒரு சிலருக்கே இயேசுவைப் பற்றிய ஒரு புரிதல், நம்பிக்கை இருந்திருக்கும். எனவே தான் இயேசு தான் விரும்பி அழைத்துக் கொண்ட பன்னிரு சீடர்கள் மத்தியில் தன்னை பலியாக அளிக்கின்றார். ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இயேசுவின் செயலுக்கான காரணத்தையும் அவர் சொன்ன வார்த்தையின் ஆழத்தையும் புரிந்து கொள்கின்றனர். அவரது உடலை உண்டு இரத்தத்தை குடித்து நிலை வாழ்வு பெறுகின்றனர்.
இந்த பாஸ்கா உணவு உண்ண இயேசு சீடர்களை தயாரிக்கும் முறை மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. ஆர்வத்தைத் தூண்டுதல், பின்செல்லல்,கேட்டறிதல்,கண்டறிதல்,தொடுதல், உள்வாங்குதல் என பல நிலைகளில் தம் சீடர்களைத் தயார் படுத்துகிறார். இதனை புற தயாரிப்பு அகத் தயாரிப்பு என்று இரு நிலைகளில் வகைப்படுத்தலாம்.
(அ) வருடா வருடம் கொண்டாடும் விழா தானே எப்படி எங்கு கொண்டாடினால் என்ன என்று இருந்து விட அவர்களை விடவில்லை. மாறாக அவர்களுக்குள்ளே அந்த ஆர்வத்தைத் தூண்டுகிறார். சீடர்களே வந்து இயேசுவிடம் கேட்கிறார்கள், எங்கு இடம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று. விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கும் காலம். புதிய பள்ளி கல்லூரி, பணி மாற்றம் இடமாற்றம் என்று இருந்தால் நினைவு முழுவதும் அதுவாகவே இருக்கும். பலரின் பேச்சுக்களும் கருத்துக்களும் கதைகளும் கண்முன்னே படமாக ஓடி அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச்சென்று விடும். பலரிடமும் அதைப் பற்றிக் கேட்டு குறிப்புகளை சேகரிக்கும் மனநிலை அதிகரிக்கும் . இத்தகையதொரு ஆவலை சீடர்கள் மனதில் ஏற்படுத்துகிறார் இயேசு.
பணி மேலும் இடத்தின் மேலும் பதவி மேலும் இருக்கும் நமது ஆர்வம், ஈடுபாடு நற்கருணை ஆண்டவர் மேல் உள்ளதா என்று சிந்தித்து பார்ப்போம்.
(ஆ) யார் எவர் என்று தெரியாத ஒரு மண்குடம் சுமந்த பணியாளரைப் பின் தொடரச் சொல்கின்றார். சீடர்கள் நகருக்குள் வந்து இயேசு சொன்ன அந்த மனிதரை சரியாக அடையாளம் காண்கின்றனர். தாங்கள் வந்த வழியை விட்டு எதிர்த்திசையில் தங்கள் பயணத்தை மாற்றி அமைக்கின்றனர். யார் என்று தெரியாது, எங்கிருந்து வருகின்றார், எங்கு செல்வார் என்று எதுவும் தெரியாது இருப்பினும் பின் தொடர்கின்றனர்.
கிறிஸ்தவ வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் அருட்பணியாளர்களும் ஒரு விதத்தில் இந்த மண் குடம் சுமந்த பணியாளர்கள் போலவே. அவர்கள் பணியை அவர்கள் செய்கின்றார்கள். நாம் தான் அவர் யார் எப்படி பட்டவர், என்ன பணிசெய்கிறார் எங்கிருந்து வருகின்றார், எங்கு செல்கின்றார் என்று விசாரிப்பதிலேயே நம் கவனத்தையும் ஆற்றலையும் செலவிடுகின்றோம். விளைவு எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்ல வழி தெரியாது, யாரைப் பின்பற்ற வேண்டும் என்று விடை தெரியாது தவிக்கிறோம்.
(இ) சீடர்கள் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நகர்ப்பகுதிக்குள் வருகின்றனர். வெளிப்புறத்தில் இருந்து உட்புறத்திற்கு வருகின்றனர்.
நாம் நமது வெளியுலக வாழ்வை விட்டு நம் உள் மனம் என்னும் நகருக்குள் செல்ல அழைப்புவிடுக்கின்றார்.
(ஈ) பணியாளரின் உரிமையாளரைச் சந்திக்கின்றனர். அவரின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கின்றனர். இதனால் இடத்தைக் கண்டறிகின்றனர். திடிரென்று இருவர் வந்து விழா கொண்டாட இடம் கேட்கின்றனர். உரிமையாளரும் இடத்தைக் காட்டுகின்றார். ஏற்கனவே இயேசுவால் முன்னேற்பாடு செய்யப் பட்ட அறையாக இருந்தால் அவர் முகவரி அல்லவா சொல்லி இருந்திருப்பார் சீடர்களுக்கு. இப்படி பணியாளரை பின் தொடர்ந்து செல்லுங்கள் என்று சொல்லி இருந்திருக்க மாட்டார் அல்லவா? ஆக முன்னேற்பாடு செய்யப்பட்டது அறை அல்ல மனித மனங்கள். விட்டின் உரிமையாளர் அவர் வீட்டை ஆண்டவர் இயேசுவிற்கு கொடுக்க எந்த நேரமும் தயாராக இருக்கிறார். 
நாம் எல்லோரும் எல்லோரையும் நம் வீடுகளில் தங்க அனுமதிப்பது இல்லை. சிலர் முன்னமே அனுமதி கேட்டாலும் மறுக்கப்படுகிறது. சிலர் திடிரென்று வந்து கேட்டாலும் சகல வசதிகளுடன் இடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு பேர் பாரபட்சம் அல்ல ஒருவர் மற்றவரின் குண நலன் நம்மில் ஏற்படுத்தும் தாக்கம். விருந்தினர்களே ஆனாலும் இவர்கள் வந்தால் சந்தோஷம், இவர்கள் வந்தால் தோஷம் என்று நினைக்கிறோம். நமக்கு  மிகவும் பிடித்தவர்கள் நமது வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் நமது செயல்களிலே ஒரு புத்துணர்ச்சி மாற்றம் இருக்கும். வீடே புதுப் பொலிவுடன் இருக்கும். அதுவே விருப்பமில்லாதவர்கள் வந்தால் வராத நோய் கூட வந்து ஒட்டிக் கொண்டது போல் நமது செயல் பாடுகள் இருக்கும்.
நற்கருணை ஆண்டவரை அனுதினமும் உட்கொள்ளும் நாம் நமது உள்ளம் எனும் வீட்டை தயார் நிலையில் வைத்திருக்கிறோமா என்று சிந்திப்போம்.
(உ) புற தயாரிப்பு இந்நிலையில் இருக்க அகத் தயாரிப்பு நிலை அப்பம் உண்ணும் முன் தொடங்குகிறது. சீடர்கள் இயேசுவோடு பந்தியில் அமர்கிறார்கள் அவரது உடனிருப்பை உணர்கிறார்கள். அவரது செயல்பாடுகளைக் கண்களால் கண்டும் அவரது வார்த்தைகளைக் காதுகளால் கேட்டும், தெளிவு பெறுகின்றனர். அவர் ஆசீர்வதித்து கொடுத்த அப்பத்தையும் இரசத்தையும் கைகளால் தொட்டு உண்கின்றனர். அவரது உடலை உள்வாங்குகின்றனர். உள்ள நலன் பெறுகின்றனர். பரவசம் அடைகின்றனர். மறு இயேசுவாக மாறி ஆனந்தத்தில் பாடல் பாடி மகிழ்கின்றனர். உயிருள்ள உணவாக அவர்கள் உடலில் இயேசு வாழ்ந்ததினால் அவர்களது வாழ்வு புது வாழ்வாக மாறியது. நாம் அனுதினமும் நற்கருணையை உண்கிறோம் ஆனால் அதை இயேசுவின் உடலாக உயிருள்ள உடலாக எண்ணுவதில்லை. சாதாரண ஒரு அப்பமாக எண்ணுவதினால் நமது வாழ்வில் மாற்றம் ஏற்படுவதில்லை. என்று ? நாம் அவரை உயிருள்ள உணவாக உட்கொள்கிறோமோ அன்று தான் நமது வாழ்விலும்  எண்ணற்ற மாற்றங்கள் நிகழும்.
பழைய ஏற்பாட்டில் தந்தை இறைவனோடு இஸ்ரயேல் மக்கள் கொண்ட உடன்படிக்கையை மோசே ஆடு மாடுகளின் இரத்தம் கொண்டு கடவுளுக்கு பலி செலுத்தினார்.
புதிய ஏற்பாட்டில் இயேசு மக்களின் மீட்பிற்காக தன் இரத்தத்தை சிந்தி பலியினை நிறைவேற்றினார்.
நிகழ் ஏற்பாட்டில் மண்ணின் நலனுக்காக, எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக எம் தலைமுறையினர் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றனர்.
மோசே இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை பலி செலுத்த அனுப்பி வைத்தார். இங்கோ எம் இளைஞர்கள் பலிப் பொருளாகவே மாறி விட்டனர். அன்று மோசே ஆட்டின் இரத்தத்தை பலி பீடத்தின் மீது தெளித்து உடன்படிக்கையை நிருவினார். இன்றோ இளைஞர்களின் இரத்தத்தின் மேலே இந்த மண்ணின் மீட்பிற்கான சட்டம் இயற்றப்பட இருக்கிறது. இயேசுவின் உயிருள்ள உடலை உண்டு அவர் போல மக்களுக்காக இரத்தம் சிந்திய இவர்கள் வாழ்வு சொல்லும் நாம் அனைவரும் உயிருள்ள இறைவனின் உயிர்த் தசைகள் என்று. திரு உடல்திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாள் நாம் அனைவரும் அந்த உடலின் சிறு தசைகள் என்பதை இந்த உலகுக்கு சொல்லவே. இன்று நம் உள்ளங்களில் நாம் ஏந்தும் கிறிஸ்துவின் திரு உடல் நம்மிலும் நம்மை சுற்றிலும் ஒரு சில மாற்றத்தையாவது கொண்டு வரட்டும் . அவரது உடல் நம் உடலோடு கலந்து நம்மையும் அவரைப் போல் மாற்றுகிறது என்று நம்புவோம். உயிருள்ள உணவாய் உடன் வரும் இயேசுவை கண்டு கொள்வோம். இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம் ஓவ்வொருவர் மேலும் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.     
     

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...