Monday, 30 July 2018

திருமணத் திருப்பலி

 முன்னுரை
அதிகாலை பனி போல , அழகான வாழ்க்கையின் அருமையான தருணம் இது. ஆயிரம் உறவுகள் அன்பாய் கூடிட, கோர்த்த மாலைகள் கழுத்தினில் மகிழ்ந்திட, ஆண்டவரின் அருள் பொங்கி வழிந்திடும் ஆனந்த கானம் இது. இந்த மகிழ்வென்னும் பொன்னாளிற்கு புதுப்பொலிவேற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
   திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என பல கருத்துக்கள் திருமணத்தைப் பற்றி நம்மிடையே பேசப்படுவதுண்டு. புனிதரும் வானதூதரும் இறையடியார்களும் இடைவிடாத இறை புகழ் பாடும் சொர்க்கத்தில் இரு உள்ளங்கள் இணையும் நாள் நிச்சயிக்கப்படுகின்றது. நல்லதை நினைத்து, நன்மை செய்து, நலன்களை மட்டும் விரும்பும் மனிதர்கள் வாழும் இந்நில உலக சொர்க்கத்தில் தங்களையும் இணைத்து, இறையருள் நாடும்   மணமக்கள் ................... இருவருக்காக வேண்டுவோம். திருமணம் என்னும் அருட்சாதனத்தை மகிழ்வோடு பெற்று, அதன் பலனை தங்களின் வாழ்நாளில் வெளிப்படுத்த அருள் வேண்டும் இவர்களோடு இணைந்து செபிப்போம். ஆயிரங்காலத்துப் பயிரை அறுவடை செய்ய வேண்டும் என்ற இலக்கோடு தங்களது பயணத்தை தொடங்க இருக்கும் இவர்களுக்காக சிறப்பாக செபிப்போம். விவேகமுள்ள கணவன் மனைவி கடவுள் அளிக்கும் கொடை என்பதை உணர்ந்து இவர்கள் வாழ அருள் வேண்டுவோம். அன்பும் அறனும் கொண்ட இல்லற வாழ்க்கையை வாழ்ந்து பண்பையும் பயனையும் பல நூறு பெற்றிட இறையருள் இவர்கள் மீது சிறப்பாக பொழியப்பட ஆண்டவரின் ஆசீர் வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

 வரவேற்பு நடனம்+ கும்ப ஆரத்தி

ம‌ன‌ங்க‌ளில் ம‌கிழ்வும், முக‌ந்த‌னில் செழிப்பும் கொண்டு அன்ற‌ல‌ர்ந்த‌ ம‌ல‌ர் போல் அன்பு ம‌ண‌ம் வீசும் உங்கள் அனைவ‌ரையும்  ஆண்ட‌வ‌னின் அருள் இல்ல‌த்திற்கு அன்புட‌ன் வ‌ர‌வேற்கிறேன். செல்வ‌ங்க‌ள் கோடி சேர்த்து , இல‌க்குக‌ளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆன‌ந்த‌ வெளிச்ச‌ம் த‌டையின்றி மின்னிட‌, த‌ங்க‌ள் வாழ்வை இறைவ‌ன் முன்னிலையில் இணைக்க‌ விரும்பும் இரு உள்ள‌ங்க‌ள். இவ்விரு உள்ள‌ங்க‌ளையும் அன்பால் இணைத்து ஆசீரால் நிர‌ப்ப‌க் காத்திருக்கும் இரு உற‌வு சொந்த‌ங்க‌ள். மணமக்களை வாழ்த்தி மகிழ வந்திருக்கும் உற்றம் சுற்றம். ஆயன் தம் மந்தையின் குரலை கேட்டு அதனை தேடி சென்று கண்டடைந்து மகிழ்வது போல, மந்தையாம் நமது மகிழ்வினில் பங்கேற்க அன்போடு வந்திருக்கும் பேரருட் பெருந்தகை ஆயர் ---------- அவர்கள், ஆக்கமுள்ள பணிகள் பல பங்கினில் மேற்கொண்டு ஆர்வமுடன் பணி செய்யும் பங்கின் பங்குத் தந்தை -------- அவர்கள். மற்றும் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க வந்திருக்கும் ஏனைய குருக்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் அனைவரையும் தமிழர் பண்பாட்டு வரவேற்பு முறையோடு வரவேற்க விரும்புகிறோம்.       
ம‌ண‌த்தோடு ம‌கிழ்வையும்  த‌ருவ‌து ச‌ந்த‌ன‌ம்.
வீர‌த்திற்கும் வித்தியாச‌மான‌ சிந்த‌னைக்கும் கார‌ண‌மாய் இருப்ப‌து குங்கும‌ம். இத்த‌கைய‌ இரு பெரும் ந‌ற்குண‌ங்க‌ளைத் த‌ன்ன‌க‌த்தேக் கொண்ட‌ ச‌ந்த‌னம்‌ குங்கும‌ம் கொண்டு திருப்ப‌லி சிற‌ப்புச் செய்ய‌ வந்‌திருக்கும் ஆய‌ர் அவ‌ர்க‌ளையும், ஏனைய‌ குருக்க‌ளையும் ம‌ற்றும் இத்திருப்ப‌லியில் ப‌ங்கேற்று ம‌ண‌ம‌க்க‌ளுக்கு ஆண்ட‌வ‌ரின் ஆசீரை அள்ளிப் பெற்றுத் த‌ர‌ ஆவ‌லாய் காத்திருக்கும் உங்க‌ளையும் வர‌வேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
செழிப்பைத் த‌ரும் ம‌ஞ்ச‌ள் நிற‌ நூல் கொண்டு சுற்றிய‌ நிறை குட‌ம், அதில் தீமையை விர‌ட்டும் மாவிலை, க‌ர‌டும் முர‌டும், இனிமையும் சுவையும் சேர்ந்த‌து தான் வாழ்க்கை என்று அடையாள‌ப்ப‌டுத்தும் முழுத் தேங்காய், இவை அனைத்த‌யும் உள்ள‌ட‌க்கிய‌து தான் கும்ப‌ ஆர‌த்தி. இத்தகைய கும்ப‌ ஆர‌த்தி எடுப்ப‌து நிறைவையும் மகிழ்வையும் முழுமையாக‌ ஒருவ‌ர் பெற‌ வேண்டும் என்னும் ந‌ல்லெண்ண‌ அடிப்ப‌டையில் தான். என‌வே இன்று ம‌ண‌நாள் காண‌ காத்திருக்கும் ம‌ணம‌க்க‌ளை வாழ்த்தி அவ‌ர்க‌ளுக்காக‌ செபிக்க‌ திருப்ப‌லி நிற‌வேற்ற‌ வ‌ந்திருக்கும் ஆய‌ர் ....... அவ‌ர்க‌ளையும் குருக்க‌ள் இறைமக்களாகிய உங்கள் அனைவ‌ரையும் ம‌ங்க‌ள‌க‌ர‌மான‌ கும்ப‌ ஆர‌த்தி எடுத்து வ‌ர‌வேற்கிறோம்.

காணிக்கை மன்றாட்டு:
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று கூறி மணமக்களை வாழ்த்துவது நம்மரபு. பதினாறு என்பது பிள்ளைகள் அல்ல. பதினாறு வகை செல்வங்களையும் மணமக்கள் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்பதே அதன் நோக்கம். எனவே இந்நேரத்தில் அந்த பதினாறு செல்வங்களையும் இவர்கள் பெற்றிட காணிக்கை மன்றாட்டின் வழி செபிப்போம்.
1; புகழ்; ( மஞ்சள் )
    தோன்றின் புகழோடு தோன்றி, தன் குடும்ப வாழ்வால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இவர்கள் புகழைச் சேர்க்க வேண்டுகிறோம். எனவே அதன் அடையாளமாய் மங்கள நாட்களில் மகிழ்வினை சேர்க்கும் மஞ்சளினை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
2. கல்வி: ( புத்தகம் )
   கற்றனைத்தூறும் மணற்கேணியாய் இவர்களும் இவர் தம் வழிமரபினரும் கல்வியில் சிறந்து விளங்க அருள் வேண்டுகிறோம். எனவே கல்வியினை போதிக்கும் புத்தகத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
3. ஆற்றல்; ( பலூன் )
   என் அருள் உனக்குப் போதும் என்ற ஆண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று இவர்கள் வாழ்நாளில் சாதனைகள் பல புரிய அருள் வேண்டுகிறோம். காற்றின் ஆற்றலால் உயர பறக்கும் பலூன் போல இவர்கள் வாழ்வு உயர்ந்திட அருள் வேண்டி இந்த பலூனை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
4. வெற்றி : ( குங்குமம் )
    எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற, வாகையினை சூடி இவர்கள்ம்வாழ்வைத் தொடர அருள் வேண்டுகிறோம். வெற்றியின் சின்னமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் இருக்கும் குங்குமத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
5 . நல் அறிவு: ( ஒளி )
    சிந்தித்து செயல்பட்டு சீரான முடிவுகளை எடுத்து பார் போற்ற இவர்கள் வாழ நல்ல அறிவுடன் செயல்பட அருள் வேண்டுகிறோம். இருளை அகற்றி ஒளி தரும் சுடர் போல இவர்கள் வாழ்வு மின்னிட ஒளியினை உம் பாதத்தில்  உம் அர்ப்பணிக்கின்றோம்.
6 . நல் விதி: ( விவிலியம் )
    விதியை மதியால் வெல்லலாம் என்பதை உணர்ந்து இவர்கள் செயல்பட அருள் வேண்டுகிறோம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவிலியம் என்பதை உணர்ந்து வாழ விவிலியத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
7 . நன்மக்கள் : ( மலர் )
      அன்பும் பண்பும் கொண்ட செல்வங்களை பிள்ளைகளாக பெற்று, சுற்றமும் நட்பும் சூழ எப்போதும் இணைந்து இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். மலர்ந்து மணம் பரப்பி பார்ப்போருக்கு மகிழ்வைத் தரும் மலர் போல இவர்கள் வாழ்வு மாற அருள் வேண்டி இம்மலரை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
8 . பொன் : ( முத்துக்கள் ) 
      செல்வ வளமும்  நலமும் வாழ்வினில் நிறையப் பெற்று இவர்கள் செழிப்புடன் வாழ அருள் வேண்டுகிறோம். தோற்றத்தில் எளிமையாகவும், மதிப்பில் உயர்வாகவும்  கிடைப்பதற்கு அரியதாகவும் இருக்கும் முத்துக்கள் போல இவர்கள் வாழ, அருள் வேண்டி இந்த முத்துக்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
9 . நெல் : ( அரிசி காய் கறிகள் )
      நிலத்தில்  நல்ல விளைச்சலையும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் இவர்கள் காண அருள் வேண்டுகிறோம். உழுது பயிரிட்டு பசிக்கு உணவாகும் தானியங்கள் போல இவர்கள் வாழ்வு பிறருக்கும் பயன்பட அருள் வேண்டி இவ்வுணவுப் பொருட்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
10 . நுகர்ச்சி : ( நறுமணப்பொருள் )
      வாழ்க்கையில் வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் நுகர்ந்து அனுபவித்து மகிழ்வுடன் இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். நுகர்ந்ததும் மணம் தந்து மகிழ்வு தரும் நறுமணப்பொருள் போல இவர்கள் வாழ்வு அமைய நறுமணப் பொருள்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
11 . அழகு :(  புன்னகை )
 அகத்தின் அழகினை முகத்தில் பிரதிபலிக்கும் நல்ல உள்ளங்களாக இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். புன்னகை ஒன்றே உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்தும் என்பதை உணர்ந்து எப்போதும் புன்னகையுடன் இவர்கள் வாழ அருள் வேண்டி இந்த புன்னகை முகத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
12 . பெருமை : ( நீர் )
   பெருமை கொண்டு வீழ்ந்து மடிவதை விட பொறுமை கொண்டு வாழ்ந்து காட்டலாம் என்று எண்ணி இவர்கள் சிறப்படைய அருள் வேண்டுகிறோம். தன்னால் தான் அனைவரும் செழிப்படைகின்றனர் என்ற பெருமை சிறிதும் இல்லாது பொறுமை கொண்டு, போகும் இடமெல்லாம் வளர்ச்சி அடையச்செய்யும் நீர் போல இவர்கள் வாழ்வு அமைய அருள் வேண்டி இந்நீரை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
13. 14 . இளமை, துணிவு : ( வாழை )
       என்றும் இளமை எதிலும் புதுமை என்பதை  உடலளவில் மட்டுமல்லாது உள்ளத்தளவிலும் இவர்கள் பெற்றிட அருள் வேண்டுகிறோம். கணு முதல் காய் பழம் என அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்கு தரும் வாழையைப் போல இவர்கள் வாழ்வு மாற துணிவுடன் இவர்கள் செயல்பட அருள் வேண்டி இவ்வாழையை உம் பாதம் ......
15. 16. நோயின்மை வாழ்நாள்: ( அப்பம் இரசம் )
    நோய் நொடி இன்றி இன்பமாக நீடீய ஆயுளுடன் இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். அப்பத்தையும் இரசத்தையும் தனது உடலாகவும் இரத்தமாகவும் மாற்றிய இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றி இவர்களும் உடல் உள்ள ஆன்மீக நலம் பெற அருள் வேண்டி இந்த அப்ப இரசத்தைஉம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

 நன்றி மன்றாட்டு.
     விண்ணும் மண்ணும் மகிழ்ந்திருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்து தனது திரு உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும் கொடுத்து நம்மை திடப்படுத்தி ஆசீரால் நிரப்பி இருப்பதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்ற இயேசுவின் கட்டளையை சிரமேற்கொண்டு அர்ப்பண உணர்வோடு செயல்படும்  ஆயர்.... இறைப்பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இச்சிறப்பு மிக்க நாளில் மணமக்களை வாழ்த்தி ஆசி கூறி தங்களின் மறையுரையால் நற்கருத்துக்களை போதித்து அவர்களுக்காக செபித்த அனைத்து அருட்பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நனறிகள்.
அன்பாலும் பண்பாலும் இவர்களின் இல்லற வாழ்க்கையை நிறைத்து இவர்கள் இணைந்து வாழ இறைவனின் கருவிகளாக செயல்பட்ட இரு வீட்டாருக்கும் இறை முன்னிலையில் நன்றி கூறுகின்றோம்.
புதுமணத்தம்பதியரை வாழ்த்தி ஆசி கூறி, சுற்றம் சூழ வருகை தந்து, நலம் நாடும் அனைத்து உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
இத்திருப்பலிக்கு மெருகேற்றி சிறப்பு செய்த பாடகற் குழுவினருக்கு எம் மனமார்ந்த நனறிகள். இல்லறா வாழ்க்கையை இனிதே தொடங்கியிருக்கும் இப்புதுமணத் தம்பதியினரை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து உடனிருந்து ஊக்கம் தந்து நற்குணங்கள் பெற்று நலமுடன் வாழ தொடர்ந்து இவர்களுக்காக செபிப்போம்.

Friday, 27 July 2018

ஒன்றும் வீணாகாதபடி.....

" மிகினும் குறையினும் நோய் செய்யும்..." என்பது வள்ளுவரின் வரிகள். மனிதனின் பயன்பாட்டுக்கு உரிய பொருள் எதுவாயினும் அது மிதமான நிலையில் இருக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமானாலும் குறைவானாலும் நோயை உண்டாக்கும். பொருளாக இருந்தால் மன நோய். உணவாக இருந்தால் உடல் நோய். இதை இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயேசு தனது நற்செய்தியில் தனது அப்பம் பலுகுதல் நிகழ்வின் மூலம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டார்.  
 இயேசு செய்த புதுமைகளும் அரும் அடையாளங்களும் ஏராளம். இருப்பினும் அப்பம் பலுகுதல் புதுமை சிறப்பான ஒன்று . ஏனெனில் மற்ற புதுமைகள், அரும் அடையாளங்களின் போது ஒரு சில மக்களே அவருடன் அருகில் இருந்திருப்பர், அவர் செய்த புதுமைகளைக் கண்டிருப்பர். ஆனால் இங்கு ஏறக்குறைய சுற்றிலுமுள்ள ஊர் மக்கள் அனைவருமே ஒன்றாகக் கூடி இருக்கின்றனர். ஆண்களின் எண்ணிக்கையே 5000 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் கண்டிப்பாக பெண்களின் எண்ணிக்கையும் சிறுவர்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் வீடுகளில்  இருக்கும் பெண்களே, குடும்பத்திலுள்ள அனைவரின் நலனுக்காகவும் குடும்பத்திற்காகவும்  சிறப்பாக செபிப்பர். படிப்பு, வேலை, திருமணம், உடல் நலன் என அனைத்திற்காகவும் பல கோயில்கள் ஏறி வேண்டுதல் செய்வது பெண்களே. (அதற்கு சான்று நமது கோவில்களில் திருப்பலி செப வழிபாடுகளுக்கு இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஆண்களை விட பெண்களே அதிகம்)  பெண்கள் சென்றால் உடன் தன் பிள்ளைகளையும் கண்டிப்பாக அழைத்துச் சென்றிருப்பர். இதற்கு உதாரணம் நமது இன்றைய நற்செய்தியின் முக்கிய கதை மாந்தரான சிறுவன். சிறுவன் தாயோடு வந்தானோ, இல்லை தானாகவே வந்தானோ தெரியவில்லை . ஆனால் அவன் கையில் பசிக்கு உணவு வைத்திருந்தான் என்பதிலிருந்து தாயின் அனுமதியோடோ அல்லது அருகாமையோடோ தான் வந்திருப்பான் என்பது புலனாகிறது. இப்படி ஒட்டு மொத்த ஊர் மக்களையும் ஒன்றாகக் கூட்டி இயேசு அவர்கள் முன் இத்தகைய புதுமையைச்செய்கிறார். இதனால் அவரது புகழும் பெயரும் பட்டி தொட்டி எங்கும் வேகமாகப் பரவுகிறது. 
இன்றைய முதல் வாசகமும் எலியா இறைவாக்கினரால் இறைவன் நூறு பேருக்கு உணவு பரிமாறிய நிகழ்வினை எடுத்துரைக்கிறது. இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் பல ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன. 
* ஊர் ,பெயர் கொண்ட ஒரு மனிதர் உதவுகிறார். / ஊர், பெயர் இல்லாத ஒரு சிறுவன்  உதவுகிறான்.
* எலியாவிற்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட உணவு. / சிறுவன் தனது பசிக்காக வைத்திருந்த உணவு. 
* எலியாவின் ஒரு மாத உணவு. 20 வாற்கோதுமை அப்பம் / சிறுவனின் ஒரு நேரத்து உணவு 5 அப்பம் 2 மீன்.     
* 20 அப்பம் 100 பேருக்கு பகிரப்படுகிறது. / 5 அப்பம் 5000 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
* எப்படி பரிமறுவேன் என பணியாளர் கேட்கிறார். / இது எப்படி போதும் என அந்திரேயா கேட்கிறார்.  
இப்படி இரண்டு நிகழ்வுகளிலுமே இறைவனின் திருவுளம்  வெவ்வேறு நபர்கள் வழியாக வெவ்வேறு உணர்வுகள் வழியாக நிறைவாக செயல்பட்டு அவரை நாடி வந்தவர்களின் பசி தீர்க்கப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல கதை மாந்தர்கள் இடம்பெறுகின்றனர்.  அவர்களில் ஒரு சிலரின் செயல்களையும் வார்த்தைகளையும் நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.   
1 . இயேசு மலை மேல் ஏறி தம் சீடர்களோடு அமர்கிறார்.
2 . மக்கள் கூட்டத்தை நிமிர்ந்து பார்த்தார்.
3 . பிலிப்பு - ஒரு துண்டு கூட கிடைக்காதே 
4 . அந்திரேயா - இது எப்படி போதும் 

இயேசு தான் மட்டும் மலை மேல் ஏறவில்லை தனது சீடர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். தான் மட்டும் தான் தலைவர் . தனக்கு கீழ் தான் பிறர் அனைவரும் என்று எண்ணாமல் தனது நிலையை அவர்களும் அடையச்செய்கிறார். தனது பார்வை எப்படி பட்டது, எந்நிலையில் இருந்து அவர் மக்களைப் பார்க்கிறார் என்று சீடர்களையும் உடன் அழைத்துச்சென்று காட்டுகிறார்.  இதனால் சீடர்களுடனான சமத்துவமும் சீடத்துவமும் வீணாகாதபடிக்கு இந்த நிலையினை மனதினில் சேமித்து வைக்கச் சொல்கிறார். நமது குருவைப்போல வாழ வேண்டும் என்று எண்ணும் சீடர்களாகிய நாம், முதலில் குருவைப் போல சூழ்நிலைகளைக் காண முற்பட வேண்டும். 

மக்கள் கூட்டத்தை நிமிர்ந்து பார்க்கிறார் இயேசு. தன்னைச்சுற்றி இருப்பவர்கள் தன்னை புகழ்ந்து பேசுபவர்கள் என தன் கண்ணின்  பார்வைக்கு எட்டியவர்களை மட்டும் பார்க்கவில்லை இயேசு . மாறாக தன் பார்வையை உயர்த்தி தூரத்தில் இருப்பவர்களையும் பார்க்கிறார். ஏற்கனவே ஒரு மலைமேல் தான் இருக்கிறார். அவரை அனைவரும் பார்க்க முடியும். இருப்பினும் தனது பார்வையை உயர்த்துகிறார். இதன் மூலம் தொலைவிலுள்ள மக்களையும் கண்ணோக்குகிறார். இயேசு தன்னைப் பார்க்கவில்லையோ என்று மக்கள்  எண்ணி வருந்தாத அளவுக்கு செயல்படுகிறார். இதனால் அவர்களது நம்பிக்கை வீணாகாதவாறு பார்த்துக் கொள்கிறார். நாமும் பலநேரங்களில் நம்மைச்சுற்றி, நமக்கு புகழ் பாடும் கூட்டங்களையே பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். தொலைதூரத்தில் இருக்கும் நமது உறவுகளையும் நட்புகளையும் நாம் பார்ப்பதே இல்லை. நமது  பார்வையை விசாலமாக்குவோம் நம் அன்பர் இயேசு போல. 

பிலிப்பு கணக்கு பார்த்து வாழ்பவர் போல செயல்படுகிறார். 200 தெனாரியத்துக்கு அப்பங்கள் வாங்கினால் கூட ஆளுக்கு ஒரு சிறு துண்டு கூட கிடைக்காதே என்று கூறுகிறார். இதில் அவரின் வருத்தத்தை விட இவ்வளவு பணம் செலவழித்தாலும் யாரையும் நிறைவுபடுத்த முடியாதே என்பது தான் அவரது கவலையாக இருந்திருக்கும். இயேசு உடன் இருக்கிறார். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையில் குறைபாடுள்ளவராக இருக்கிறார். ஆளுக்கு ஒரு துண்டாவது கிடைக்க வேண்டுமே என்ற நல்ல எண்ணம் உடையவராய் இருந்தாலும், தயக்கம் காட்டுகிறார். இயேசு அவரின் நல்ல எண்ணம் வீணாகாதபடிக்கு செயல்படுகிறார். அனைவரும் வயிறார உண்ட பின்பு மிஞ்சிய துண்டுகளை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பச்சொல்கிறார். எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் நம்மிடத்தில் இருந்தாலும் இது எப்படி முடியும்? நல்லவர்கள் சோதனைகளை அனுபவித்துத்  தானே ஆக வேண்டும் என்றெல்லாம் கூறி நமது நல்லெண்ண அலைகளை நாமே வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். ஆண்டவர் இயேசு அருகிலிருக்க அனைத்தும் நலமாய் நடக்கும் என்று எண்ணி வாழ முயல்வோம். 

அந்திரேயா உணவு வைத்திருப்பவர் யார் , எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக பார்க்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப  தெளிவாக செயல்படுகிறார். இருப்பினும் இது எப்படி போதும் என்றெண்ணி பின்வாங்குகிறார். பிரச்சனைக்கான தீர்வைக் காண முயன்றவர். இடையிலேயே மலைத்துப் போய் நிற்கிறார். எந்த நோக்கத்திற்காக அவர் அனைவரிடமும் உணவு இருக்கிறதா என்று சோதித்தாரோ அந்த வேலையை பாதியிலேயே விட்டு விடுகிறார். காரணம் இலக்கில் தெளிவில்லாததால் தான். பிரச்சனையைப் பெரிதாகவும் அதற்கான தீர்வை சிறு துளியாகவும் எண்ணியதால் வந்த விளைவு, தயக்கம் தடுமாற்றம். இயேசு, அந்திரேயா கண்டறிந்த அந்த சிறு துளியை வெள்ளமாக மாற்றுகிறார். அவர் கண்டறிந்த தீர்வு வீணாகாதபடிக்கு பார்த்துக் கொள்கிறார். நாமும் பல நேரங்களில் பிரச்சனைக்கு தீர்வினை சுலபமாகக் கண்டறிந்தும் அதை தீர்க்க முயலாமல் தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் அப்படியே விட்டு விடுகிறோம். நாம் எடுக்கும் சிறு முயற்சியில் இயேசு முழு ஈடுபாட்டையும் நமக்கு தருவார் என்று நம்புவோம். 

5000 பேருக்கு உணவளித்த இயேசு ஒன்றும் வீணாகாதபடிக்கு அதை சேர்த்து வைக்கச் சொன்னார். நமது வாழ்விலும் அன்றாடம் நமக்கு உணவளிக்கிறார். வெறும் உடல் உணவு மட்டுமல்ல உள்ள உணவு . அன்றாட நிகழ்வுகளில் நமக்கு மிச்சமாகும் உணர்வுகளை அனுபவங்களை வீணாகாதபடிக்கு  நமது மனங்களில் எதிர்காலத்துக்கு சேமித்து வைக்கச் சொல்கிறார். நமது நம்பிக்கை, அன்பு, எதிர்பார்ப்பு, தீர்வு இவை அனைத்தும் வீணாகாதபடிக்கு அதை சேமித்து வைத்து வாழச்சொல்கிறார். உணவு மட்டுமல்ல நமது உணர்வுகளும் உன்னத அனுபவங்களும் சேமித்து வைக்கப்பட வேண்டியவையே. இதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கை சுகமே. இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் நிறைவாக இருப்பதாக ஆமென்.    

Saturday, 21 July 2018

பாலைவன ஓய்வு எடுக்க தயாரா?


தேவையான அளவிற்கு பணம் சம்பாதித்து விட்டு, அதன் பிறகு நல்ல நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்து பணம் சம்பாதிக்கும் பலர், அந்த எல்லைக் கோடு எங்கு இருக்கிறது என்று தெரியாமலே, கடைசி வரை சம்பாதித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் வாழாமலே..... 
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கொடுக்கும் செய்தி இதுதான் . ஓய்வு மனித நலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு தனது சீடர்களிடம் காண்பிக்கும் அன்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நமது வீடுகளில் சிறு குழந்தைகள் பள்ளியில் இருந்து சுற்றுலா சென்று வீடு திரும்பினால் அன்றிலிருந்து குறைந்தது ஒரு வாரமாவது அந்த சுற்றுலா பற்றிய பேச்சைத் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதே போல் தான் இயேசுவின் சீடர்களும் திரும்பி ஒன்றாகக கூடி வந்து தங்களது அனுபவங்களை அவருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இயேசுவும் பிள்ளைகளின் குரலுக்கு செவிமடுக்கும் பெற்றோர்களைப் போல ஆர்வமுடன் அவர்கள் கூறுவதைக் கேட்கிறார். தன் பிள்ளைகள் சோர்வடைந்திருக்கிறார்கள் என்பதை தாய் நன்கு அறிவாள். இயேசுவும் தாயாக தன் பிள்ளைகளை ஓய்வெடுக்க சொல்கிறார். சீடர்களும் படகேறி ஓய்வெடுக்க செல்கின்றார்கள். இந்த நற்செய்தி வாசகத்தின் மூலம் இயேசு நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

* உழைத்துக் கொண்டே இருக்காதே சற்று ஓய்வெடு.
* உன்னை தனிமையில் கண்டறி. 
* உன் செயல் மூலம் உன்னை அடையாளப்படுத்து.
* உற்சாகத்துடன் முன்னேறு.
* உனக்குரிய ஆயனை தேடிக்கண்டு பிடி.

1. உழைத்துக் கொண்டே இருக்காதே சற்று ஓய்வெடு. 
இன்று பெரும்பாலான மனிதர்கள் எதற்காக உழைக்கிறோம் என்று தெரியாமலே வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்கள். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று எண்ணுபவர்கள் கடைசிவரை அவர்களுக்காகவே வாழ்ந்து தாங்கள் வாழாமலே போய்விடுகிறார்கள். வெளிநாட்டவர்கள் இதற்கு நேர்மாறாக, அந்த வருடத்தில் சம்பாதித்ததில் ஒரு பகுதியை அந்த வருடத்திலேயே ஓய்விற்காக செலவழித்து தங்களை புதுப்பித்து கொண்டு புதுவருடத்திற்கு உழைக்கத் தயாராகின்றனர். ஓய்வு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கடவுளே படைப்பின் போது ஏழாம் நாள் ஓய்வெடுத்ததாக விவிலியம் கூறுகிறது. நம்மில் சிலர் ஓய்வே எடுப்பதில்லை . சிலர் ஓய்வெடுக்காமல் இருப்பதே இல்லை. இரண்டிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நாமும் சில நேர்ங்களில் ஓய்வு எடுக்கிறோம் ஆனால் தொலை தொடர்பு சாதனங்களோடு. அது உண்மையான முழுமையான ஓய்வாகாது. இயேசு, நமது புறச்சூழலிலிருந்து, தொலை தொடர்பு சாதனங்களில் இருந்து, நமது சிந்தனை ஓட்டங்களிலிருந்து நம்மை சற்று ஓய்வெடுக்க சொல்கிறார். நாமோ நமது உடழுழைப்பால் செய்யும் வேலைகளிலிருந்து நமக்கு ஓய்வு கொடுப்பதாய் நினைத்து இவை அனைத்திற்கும் முதலிடம் கொடுக்கிறோம். உனது நினைவுகளிலிருந்து உன்னை பிரித்தெடுத்து ஓய்வு கொள் இதுவே உண்மையான ஓய்வு. இத்தகைய ஒய்வைத் தான் இயேசு நம்மை எடுக்கச்சொல்கிறார். எதற்காக? இதன் மூலம் நம்மை புதுப்பித்து மீண்டும் நமது அன்றாட செயலை நல்ல முறையில் தொடங்குவதற்காக.

2. உன்னை தனிமையில் கண்டறி:
ஏராளமான அருள் அடையாளங்களையும் புதுமைகளையும் செய்து விட்டு திரும்பி வந்த சீடர்களுக்கு இயேசு பரிசுப் பொருள் எதுவும் தரவில்லை. இன்று நமது குழந்தைகள் ஏதாவது சாதனை புரிந்தால் பெற்றோர்கள் முதலில் பரிசுப்பொருட்கள் மூலம் அவர்கள் மனதை மகிழ்விக்கிறார்கள். ஏதாவது மின்னனு தொழில்நுட்ப பொருட்கள் தான் பெரும்பாலும் அவர்களது விருப்பமாகவும், தெரிவாகவும் இருக்கிறது. இத்தகைய பெற்றோர்கள் மத்தியில் இயேசு மிகச்சிறப்பான பெற்றோராக செயல்படுகிறார். சீடர்கள் செய்த அருஞ்செயல்களால் அவர்களது எண்ணம் பெருமையினாலும் செருக்கினாலும் நிறைந்து விடாது இருக்க முயல்கிறார். சின்ன செயல் செய்து சிலரிடம் பாராட்டு வாங்கினாலே அதை மிகப்பெரிய செயல் தாங்கள் செய்து விட்டதாய் எண்ணி பெருமையடைவர் பலர். அத்தகைய நிலை தனது சீடர்களுக்கு வராத வண்ணம் இயேசு செயல்படுகிறார். நீங்களாக இத்தகைய செயலைச் செய்ய வில்லை மாறாக கடவுளின் அருள் உங்களில் நிறைந்து உங்களை இவ்வாறு செய்யத் தூண்டி இருக்கிறது என்று அவர்கள் உணர செய்கிறார். அதற்காக தான் பாலைவனத்திற்கு அனுப்புகிறார். கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இருக்கும் போது மேலும் மேலும் அவர்களது அருஞ்செயல்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க தோன்றும். இதனால் அவர்கள் கடவுளின் அருள் தங்கள் மீது செயலாற்றியதை விடுத்து தற்புகழ் பாட தோன்றிவிடும் என்று எண்ணியே இயேசு அவர்களை தனிமையான ஒரு இடத்திற்கு அனுப்புகிறார். தனிமையில் நாமும் நமது செயல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இன்று நாம் தனிமையில் இருப்பது மிக அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது. எல்லா நேரமும் அலைபேசி, எல்லா இடத்திலும் மின்னனு கருவிகள், என்று நமது வாழ்க்கையை நாம் குறுக்கிக்கொண்டோம். நாகரீக மாற்றத்தின் காரணமாக குரங்கிலிருந்து மனிதனாக மாறி நிமிர்ந்து நடந்த நாம் அதீத நாகரீக மாற்றத்தின் காரணமாக இப்போது மீண்டும் குனிந்து நடக்க ஆரம்பித்து இருக்கிறோம் . இது மீண்டும் நம்மை விலங்கின நிலைமைக்கு மாற்றாமல் இருந்தால் சரி. தனிமையே நாம் நம்மை யார் என்று கண்டு பிடிக்க சரியான இடம். தனிமையில் நீ எப்படி இருக்கிறாயோ அது தான் உண்மையான நீ ... நாம் செய்யும் பல நல்ல செயல்கள் அனைத்தும் நாமாக செய்ய வில்லை கடவுளின் அருளாலேயே செய்கிறோம் என்பதை தனிமையில் உணர்வோம்.

3. உன் செயல் மூலம் உன்னை யார் என்று அடையாளப்படுத்து:
சீடர்கள் செய்த அருள் அடையாளங்களை வைத்து மக்கள் அவர்கள் இன்னாரென்று அடையாளம் கண்டு கொள்கின்றனர். நாம் செய்யும் பல செயல்களும் நாம் யார் என்று பிறருக்கு நம்மை அடையாளப்படுத்தும். எனவே செய்யும் செயல்களை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். நமது ஒரு சில செய்கைகளும் கூட பலருக்கு பல கருத்துக்களை தெரிவிக்கும் . எனவே எல்லா நேரத்திலும் பிறருக்கு நல்ல முன் மாதிரிகையாக திகழும் மனிதர்களாக வாழ முற்படுவோம். நமது நல்ல அடையாளத்தை பிறருக்கு விட்டுச்செல்வோம்.

4. உற்சாகத்துடன் முன்னேறு: 
சீடர்களோடு இயேசு படகேறி மறுகரைக்கு செல்லும் முன் மக்கள் கால்நடையாக சென்று அவர்களுக்கு முன் நிற்கின்றார்கள் . இது அவர்களது ஆர்வத்தையும் நம்பிக்கையையும் காட்டுகிறது . அவர்களது இத்தகைய செயலைக் கண்ட இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு பலவற்றை கற்பிக்கின்றார். பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிக்கும் திறம் அறிந்து அவர்களுக்கு தெரிந்த அனைத்தையும் கற்பிப்பது போல இயேசு அவர்களுக்கு கற்பிக்கின்றார். எந்த அளவிற்கு நாம் நமது தேவையையும் நம்பிக்கையையும் கடவுள் முன் வெளிப்படுத்துகிறோமோ அதை விட அதிகமான அளவு திரும்ப பெற்றுக் கொள்வோம் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று . எனவே எப்போதும் உற்சாகத்துடன் முன்னேறுவோம். தாகம் எடுக்கும் போது தான் அதிகமாக தண்ணீர் குடிக்க முடியும். ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ள எப்போதும் தாகமாய் இருப்போம்.

5. உனக்குரிய ஆயனைத் தேடிக் கண்டு பிடி:
மக்கள், இயேசு தான் தங்களது ஆயன் என்று கண்டு கொண்டனர். அவரைத் தேடிக் கண்டடைந்தனர். நாம் நமது ஆயன்களைக் கண்டடைந்து விட்டோமா? இப்போதுள்ள நமது சூழலில் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒவ்வொரு ஆயன்களை நாம் பின்தொடர்கின்றோம். எதற்கு போராட்டம்? யாருக்கு எதிராக போராட்டம் என்று உணராது யார் போராடினாலும் பின்னால் சென்றுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். நமது உண்மையான ஆயன் யார்? நாம் யாருடைய மந்தையைச் சேர்ந்த ஆடுகள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதனால் இது ஆயனின் தவறா? ஆடுகளின் தவறா? என்று விவாதம் செய்தே காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறோம். மந்தையை விட்டு ஆயன் ஒரு போது மறைவதில்லை . ஆடுகளாகிய நாம் தாம் நமது தொழில்நுட்ப சாதனங்களின் சத்தத்தினால் காதுகளையும், அவை உமிழும் ஒளி வெள்ளத்தில் கண்களையும் மறைத்துக் கொண்டு இருக்கிறோம். இதனால் ஆயனின் குரலையும் கேட்காது அவர் உருவத்தையும் காணாது சிதறடிக்கப்பட்ட மந்தைகளாக இருக்கிறோம். நமக்குரிய ஆயனைத் தேடிக் கண்டடைந்து வாழ முற்படுவோம்.
நல்ல ஆயனாக இயேசு நம்மோடு இருக்கிறார். நாம் அவரைக் கண்டறிவோம். அவரைப் பின் தொடர்வோம். வாழ்க்கை ஒரு முறை தான், வாழும் போதே அதை ரசித்து வாழ்ந்து விட வேண்டும் . இல்லையெனில் அது திரும்ப கிடைக்காது. உழைப்போம் அதற்கேற்ற ஓய்வினையும் எடுப்போம். பாலைவனம் வெறுமையின் அடையாளம் . அந்த வெறுமையின் தனிமையில் நாம் யார் என்று கண்டறிவோம். உற்சாகத்துடன் முன்னேறுவோம். நமக்குரிய ஆயன் நம்மைப் பின் தொடர்கிறார் என்ற நம்பிக்கை கொள்வோம். அவரைக் கண்டறிந்து அவர் பின் செல்லும் ஆடுகளாய் மாறுவோம். இயேசுவின் பாலைவன அனுபவம் அவரது பணிவாழ்விற்கு மிக அதிக பலனைத் தந்தது. இயேசு மட்டுமல்லாது பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் முதல் திருத்தூதர்கள் வரை அனைவரும் தங்கள் நிலையையும் இறையாசீரால் தங்களுக்கு கிடைத்த பலத்தையும் பாலைவன அனுபவம் மூலமாகவே கண்டு கொண்டனர். நாமும் நமது நிலையையும் பலத்தையும் உணரும் தருணம் நமது பாலைவனத் தனிமை அனுபவமே என்பதை உணர்வோம். பாலைவன ஓய்வில் பரமனையும் அவரது அருளையும் கண்டடைய முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் மீதும் இருப்பதாக ஆமென்.

Friday, 13 July 2018

அழைக்கப்பட்டோம் அனுப்பப்பட ….


  இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்றைய நற்செய்தியில் இயேசு பன்னிரு சீடர்களை இருவர் இருவராக பணிக்கு அனுப்பும் பகுதியை வாசிக்கக் கேட்டோம். பயணத்திற்கு  எது தேவை எது தேவையில்லை என சீடர்களுக்கு அறிவுரை கூறுகிறார் இயேசு. இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட அறிவுரை இது . இந்த இருபதாம் நூற்றாண்டில் இறைமகன் இயேசு வாழ்ந்திருந்தால் தமது சீடர்களை பணிக்கு அனுப்பும் முன் என்ன சொல்லி இருப்பார். தொடுதிரை அலைபேசியை கொண்டு செல்லாதே. விரைவுச்சிற்றுண்டிகளை வாங்கி உண்ணாதே, பொருட்களை வாங்கி சேர்க்காதே என்று தான் கூறியிருப்பார். ஏனெனில் நமது நிலைமை அப்படி தான் இருக்கிறது. நமது தேவைக்கு பொருட்கள் என்பது மறைந்து பொருட்களின் பயன்பாட்டுக்கு நாம் என்ற நிலைமை மாறிவிட்டது.

இயேசு தமது சீடர்களை பணிக்கு அனுப்புகிறார். தன்னை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட இறையரசுப்பணி எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அதிகம் . அதனால் தான் தனது சீடர்களை மக்களை நோக்கி அனுப்புகிறார். இருவர் இருவராக அனுப்புகிறார். ஒருவருக்கு ஒருவர் துணையாக , பக்க பலமாக இருக்க அனுப்புகிறார். அவர்கள் தனது போதனைகளுக்கு செவிமடுத்தால் மட்டும் போதாது அவர்களும் போதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அனுப்புகிறார்.   புதுமை அற்புதம்  போன்றவற்றை நிகழ்த்தும் போது கூட்டத்தோடு கூட்டமாய் வியப்படைந்து நின்றால் மட்டும் போதாது. அவர்களும் அப்புதுமைகளை செய்து மக்களை வியப்படையச் செய்ய வேண்டும் என்ற ஆசையில் அனுப்புகிறார்.

ஒரு சிறந்த ஆசானுக்கு உரிய அழகு இதுதான். தன்னைப் போல , தன்னை விடவும் அதிகமாய் தனது மாணவன் வளர வேண்டும் அவன் ஊரார் போற்ற வாழ வேண்டும் அதனைக் கேட்டு அந்த  ஆசானின் மனம் மகிழ வேண்டும் . இயேசுவும் ஒரு தலை சிறந்த ஆசிரியராக தன் மாணவர்களை வழிநடத்துகிறார். அவர்களுக்கு தன்னுடைய அத்தனை செயல்பாடுகளையும் வாய்மொழியாகவும்  வாழ்க்கை மொழியாகவும் வெளிப்படுத்துகிறார். பயிற்சியை முடித்த மாணவர்கள் போல சீடர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஊர்ப்புறத்தில் உள்ள மக்களை நாடிச்செல்கின்றனர். தங்களைத் தேடி மக்கள் வருவார்கள் என்று எண்ணி அவர்கள் இருக்கவில்லை மாறாக மக்களை நாடிச் செல்கின்றனர். பல நேரங்களில்  நாம், நான் நிறைய படித்திருக்கிறேன், எல்லா வேலைகளும் எனக்கு தெரியும், என்னை விட அறிவாளி இங்கு யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் எண்ணி பிறரை நம்மை நோக்கி இழுக்க பார்க்கிறோம். நாம் பிறரை நோக்கிச் செல்வதில்லை . புதிய பாதைகளைத் தேடிச் செல்லும் நீரோட்டம் செழிப்பாக மாறுகிறது. தன்னை நோக்கி அனைத்து நீரோட்டங்களையும் இழுத்துக் கொள்ளும் பள்ளம், கழிவுநீர்த் தேக்கமாகவும் பாதாளக் கிணறாகவும் மாறுகிறது.

உணவு பை செப்புக்காசு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என கட்டளையிடுகிறார். உணவு, உடல் நலனுக்கானது.   உடலை சோர்வு அசதி மற்றும் பலவீனம் போன்றவற்றிலிருந்து காக்கும் வலிமையுடையது. அத்தகைய உணவை இயேசு எடுத்துச் செல்ல வேண்டாம் என்கிறார். அன்று பாலை வனத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு  மன்னா அருளிய போது அன்றன்றைக்குரிய உணவை எடுத்து உண்டவர்கள் நிறைவாகவும் மகிழ்வாகவும் உணர்ந்தனர். அடுத்த நாளுக்கும் சேர்த்து எடுத்து வைத்தவர்கள் புழு பூச்சி அரித்து உணவு பாழானது குறித்து வருத்தமடைந்து சோர்ந்திருப்பார்கள். அத்தகைய வீண் கவலை  இறையரசுப் பணியாற்ற செல்லும் தனது சீடர்களுக்கு ஒருபோதும் வந்து விடக் கூடாது என்பதற்காக அப்படி சொல்கிறார்.  மேலும் அவர்களை நிறைவாகவும் மகிழ்வாகவும் வழிநடத்தும் இறையாற்றல் அவர்களோடு உடனிருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றார்.

பை – பெரும்பாலும் எதிர்காலத்தேவைக்கான பொருளினை சேர்க்கும் தளமாகவே செயல்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒரு சிறு கைப்பையை கையோடு எடுத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது. அதில் என்ன இருக்கும் தண்ணீர், அலைபேசி. பணம், நம்மை அடையாளப்படுத்தும் சில பல அட்டைகள் . இவை அனைத்துமே எதிர்காலத்தேவைக்கு தான். தாகம் எடுத்தால் தண்ணீர், யாருடனாவது பேச நினைத்தால் அல்லது யாராவது என்னுடன் பேச நினைத்தால் அலைபேசி, ஏதாவது செலவு ஏற்பட்டால் பணம்,  நாமே தொலைந்து விட்டால் நம்மை நமது உடமைகளை அடையாளப்படுத்த அட்டைகள். இப்படி எல்லாமே எதிர் வரும் நிகழ்வுகளை முன்னிருத்தியே இருக்கின்றன. இவை அனைத்தும் நமக்கு சொல்வது,  நாம் கடவுளின் உடனிருப்பை வழிகாட்டுதலை பாதுகாப்பை  நம்ப மறுக்கிறோம் என்றே. தனது சீடர்கள் கடவுளின் பாதுகாப்பில் முழு நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் என்ற தெளிவுடன் அவர்களை பை எடுத்துக் கொண்டு போக வேண்டாம் என்கிறார்.

பணம் செப்புக்காசு – அழிவின் முதல் படி பண ஆசை . மனிதனை மிருகமாக மாற்றுவது இந்த பணம். இன்னும் வேண்டும் , இன்னமும் வேண்டும் என்று அளவுக்கதிகமான ஆசையைத் தூண்டுவது பணம். பணம் குணமுள்ள மனிதனையும் குப்பையான மனிதனாக்கும் ஆற்றல் கொண்டது. பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் அந்த எண்ணத்தினாலேயே விரைவில் அழிவான். ஆதி மனிதன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தான். அவனே பயிரிட்டான் உண்டான் மகிழ்வாக இருந்தான். பண்டமாற்று முறையைக்  கண்டறிந்தான் பொருளுக்கு பொருள் என்ற நிலை மாறி பொருளுக்கு பணம் என்று வந்ததும் அழியாத அந்த பணத்தை சேர்க்க நினைத்தான் மகிழ்வை தொலைத்தான். இப்படி தனது சீடர்கள் பணத்தை சேமித்து மகிழ்வை தொலைத்து விடக் கூடாது என்று எண்ணி பணப்பை எடுத்துக் கொண்டு போக வேண்டாம் என்கிறார்.

இவ்வாறாக பார்த்து பார்த்து தன் சீடர்களை பணிக்கு அனுப்புகிறார் இயேசு . சீடர்களும் தாங்கள் அழைக்கப்பட்டது அனுப்பப்பட என்பதை  நன்கு அறிந்து அதற்கேற்ப பணி புரிய தொடங்குகின்றனர்.  எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டார்களோ அந்த நோக்கத்தை நிறை வேற்றி இயேசுவிடம் திரும்புகின்றனர்.

நாமும் அழைக்கப்பட்டவர்களே, நாமும் தினமும் அனுப்பப்படுகிறோம் நமது அன்றாட வாழ்வில் இறையரசுப் பணியாற்ற. நாம் அதை உணர்வதில்லை . நமது அனுதின வாழ்வு ஒரு இறையரசுப்பணி . அந்நாளில் நாம் கடவுளின் பராமரிப்பின் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்பட்டால் நம்மாலும் நமது அன்றாட வாழ்வின் துன்பங்கள் என்னும் பேயை ஓட்ட முடியும். நமது அவநம்பிக்கை என்னும்  உள்ள நலத்தை குணப்படுத்த முடியும் . நாமும் இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்களே அவரால் அனுதினமும் அனுப்பப்படும் சீடர்களே என்பதை உணர்வோம் இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.






Saturday, 7 July 2018

இறைவாக்கினர்களா??? இறைவாக்கிற்கு செவிமடுப்பவர்களா???

பொதுக்காலம் பதினான்காம் வாரம்

இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசித்ததும் அருட்தந்தை நண்பர் ஒருவரிடம் கேட்டேன், இறைவாக்கினர்களாகிய உங்களுக்கு எந்த ஊரில் மதிப்பு என்று. அதற்கு அவர், கடவுளின் அருள் உனக்கு இல்லை என்றால் சொந்த ஊரில் மட்டுமல்ல எந்த ஊரிலும் மதிப்பில்லை என்றார். ஆம் கடவுளின் அருள் இல்லையென்றால் எந்த ஊரிலும் மதிப்பில்லை .
இன்றைய நிலைமை இப்படி தான் இருக்கிறது மறைப்பணியாற்றும் அனைவரும் சந்திக்கும் இன்னல்களை இன்றைய மூன்று வாசகங்களூம் எடுத்துரைக்கின்றன. எசேக்கியல் இறைவாக்கினர் பவுலடியார் இயேசு என அனைவருமே இறைவனின் வாக்கை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க வந்தவர்கள். பணியினால் ஏற்பட்ட இடையூறுகளை இன்று நமக்கு பாடமாக வாசகங்கள் முலமாக எடுத்துரைக்கின்றனர்.
முதல் வாசகத்தில் இறைவன் பணித்தளத்து மக்களின் இயல்பு பற்றி இறைவாக்கினருக்கு கூறுகின்றார். அவர்கள் வன்கண்ணும், கடின இதயமும், செவிசாய்க்காத இயல்பும் கொண்டவர்கள் என்கிறார். கண் நமது உணர்வை குணத்தை பிறருக்கு முதலில் தெரிவிக்கும் ஒரு உறுப்பு. நமக்கு  பிடித்த அல்லது பிடிக்காத ஒரு உணவையோ அல்லது செயலையோ ஒருவர் செய்யும் போது முதலில் நம் கண் தான் அதை வெளிப்படுத்தும். கண் புருவங்கள், விழிகள் ஆர்வத்தால்  விரியவோ, வெறுப்பால் சுருங்கவோ செய்யும். அதேப்போல நமக்கு மிகவும் விருப்பமான ஒரு நபரின் வருகையும் பேச்சும் நமது உணர்வு எப்படிப்பட்டது என்பதை அவர்களுக்கு நமது கண்கள் மூலமாக காட்டிக்கொடுத்துவிடும். சிலரது பார்வையே நமக்கு அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று வெளிப்படுத்திவிடும். அப்படியிருக்க இறைவன் இஸ்ரயேல் மக்கள் வன் கண்ணுடையவர்கள் என்று சொல்லியே அனுப்புகிறார். மறைப்பணி செய்யும் அனைவரும்( அன்பியம் செப வழிபாடு நடத்தும் அனைவரும் மறைப்பணியாளர்களே)  இப்படி வன் கண்ணுடைய மக்களை ஒரு முறையாவது சந்திக்க நேரிடும். .
கடின இதயம் உடைவர்களின் செயல்பாடும் பேச்சும் மிகவும் கடினமானதாகவே இருக்கும். வார்த்தைகளில் வன்மமும் செயல்பாடுகளில் சூழ்ச்சியும் இருக்கும். 
செவிசாய்க்காத காதுகள், இத்தகைய குணமுடையோர் எந்த விதமான நல்லவற்றையும் தங்கள் காதுகளில் வாங்க மாட்டார்கள். நாம் சொல்லும் நல்லது அனைத்தும் அவர்களுக்கு கெட்டதாகத் தான் கேட்கும்.  இப்படிப்பட்ட இஸ்ரயேல் மக்களின் குண நலன்களுக்கு மாற்றாக இறைவன் இறைவாக்கினர்களிடம் கேட்பது, வன்கண்ணுக்கு பதிலாக கனிவான பார்வையோ, கடின இதயத்துக்கு மாற்றாக அன்புச்செயலோ, செவிசாய்க்காத காதுகளுக்கு இனிமையான சொல்லோ அல்ல . இவைகளும் மிகவும் முக்கியம் தான் அதை விட முக்கியம் நமது இருப்பு ,  உண்மையான இறைவாக்கினர் போல நமது இருப்பு மிகவும் முக்கியம் என சொல்கின்றார்.
இன்று கால மாற்றத்தின் காரணமாக இறைவாக்கினர்கள் அனைவரும் புதிய நூற்றாண்டின் இறைவாக்கினர்களாக தங்களை தாங்களே மாற்றிக் கொண்டுவிட்டனர். மக்களும் தங்கள் இதயங்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டனர். விளைவு இவர்கள் சொல்வதை அவர்கள் கேட்பதில்லை அவர்கள் கேட்குமாறு இவர்கள் சொல்வதில்லை. இதில் மாறாதது இறைவனும் அவரது இறைவார்த்தைகளும் தான். நாமும் இறைவனின் வார்த்தையை இவ்வுலகிற்கு நமது வார்த்தைகள் மூலமாகவும் வாழ்க்கை மூலமாகவும் பல வேளைகளில் பல இடங்களில் எடுத்துரைக்கின்றோம்.  பங்கில் அருட்பணியாளராக, அன்பியத்தில் பொருப்பாளராக, பள்ளியில் ஆசிரியராக, பிள்ளைகளுக்கு பெற்றோராக, வழிகாட்டும் நண்பர்களாக, அப்பாவாக அம்மாவாக என ஏதோ ஒரு நிலையில் நாம் அனைவரும் இறைவாக்கினர்களே. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் நம்மிடையே ஒரு இறைவாக்கினர் ஒருவர் வந்துவிட்டார் என்று அவர்கள் எண்ணுமளவுக்கு நமது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றி அமைக்க வேண்டும்.
இயேசு தனது சொந்த ஊருக்கு செல்லும் பகுதி இன்றைய நற்செய்தியில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது சீடர்களும் செல்கின்றார்கள். இருவர் இருவராக பணித்தளத்திற்கு அனுப்பப்படுமுன் அவர்கள் இயேசுவிடம் பாடம் கற்கின்றனர். அவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கிறார் இயேசு. மூன்று விதமான இயல்புடைய மக்கள் அங்கும் இருக்கின்றனர்.
முதல் வகையினர்;  அறிவுத்திறன்)
       இவர்கள் இயேசுவின் ஞானத்தைப் பற்றியும் அவரது வல்லசெயல்கள் பற்றியும் பேசுபவர்கள். பெரும்பாலும் இவர்கள் அவரைப் பின்பற்றி வந்தவர்களாகத்தான் இருக்கும். அவர் ஏற்கனவே செய்த புதுமைகளையும் அருள் அடையாளங்களையும் கண்டவர்கள் அல்லது கேட்டவர்கள். நம்மிலும் இப்படி ஒரு சிலர் இருப்பர். சிலர் உண்மையைச் சொல்வர் . சிலர் புகழ்துதி பாடுவர். பெரும்பாலும் நமது வியப்பு, அவர்களது அறிவுத்திறன் கைவேலைப்பாடுகள் இதிலேயே முடிந்துவிடும் . இதனை தாண்டி நமது எண்ணம் செல்லாது அங்கேயே நின்று விடும்.
இரண்டாம் வகையினர்.( பிறப்பு பணி பின்னனி)
           இவர்கள் இயேசுவினது வேலை மற்றும் பிறப்பு உறவு முறைகுறித்து பேசுன்றனர்.  ஏற்றுக்கொள்ள இயலாமை இவர்களின்  முக்கிய பிரச்சனை. நம்மைப் போல உள்ள  ஒருவன் எப்படி இப்படி ஒரு உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஒருக்காலும் முடியாது. இயேசு சாதாரண மனிதன் தான் இறைவாக்கினரும் அல்ல இறைமகனும் அல்ல என்று எதிர்க்கின்றனர். நமக்கு ஒருவர் நல்லது சொல்கின்றார் அல்லது செய்கின்றார் என்றால் அவரது செயலைப் பாராமல் அவரது குலம் தொழில் ஊர் பார்த்து செயல்படும் மன நிலை இன்று  நம்மிலும் அதிகரித்து வருகின்றது .
மூன்றாம் வகையினர்; ( நம்பிக்கையின்மை )
           இவர்கள் இயேசுவின் செயல் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை அவரது வார்த்தை மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. இதனால் இறைமகனான இயேசுவுக்கே அரும்செயல்கள் செய்ய முடியாமல் போகின்றது. நமது நலமான எண்ணத்தினாலும் நம்பிக்கையினாலும் நல்ல செயல்களை செய்ய வைக்க முடியும் என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது.
நாம் இறைவாக்கினர்களா இறைவாக்கிற்கு செவிமடுப்பவர்களாக என்று சிந்திக்க இன்றைய நாளில் இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இறைவாக்கினர்கள் என்றால் வன் கண்ணும் கடின இதயமும், செவி சாய்க்காத காதுகளும் கொண்ட மக்களுக்கு மத்தியில் ஒரு இறைவாக்கினர் போல நமது வாழ்வு அமைய வேண்டும். அது அம்மக்களுக்கு நம்மிடையே ஒரு இறைவாக்கினர் வந்துவிட்டார் என்று எண்ணுமளவுக்கு இருக்க வேண்டும்.
இறைவாக்கிற்கு செவிசாய்ப்பவர்கள் என்றால், அறிவுத்திறன் கொண்டோ குலம் படிப்பு ஊர் சார்ந்தோ மறைப்பணியாளர்களை எடை போடாது நம்பிக்கையோடு அவர்களின் வார்த்தைக்கு செவிமடுப்பவர்களாக வாழ வேண்டும்.
நாம் அனைவரும் வலுவற்றவர்களே , நமது வலுவின்மை என்னும் குறைவில் இறைவனின் வல்லமை வெளிப்படும் அவரது அருளால் நாம் அனைவரும் வல்லமை மிக்கவர்களாக மாறுவோம். இறைவனின் அருள் என்றும் நம்மோடு. 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...