Friday, 26 October 2018

விழி திரை விலக்கு.....

கண்ணுடையோர் என்பவர் கற்றோர் என்று திருவள்ளுவரும் , உள்ளத்து ஊனமே உண்மையான ஊனம் ; உடல் உறுப்பின் ஊனம் ஊனமே அல்ல என்று உலகில் வாழ்ந்த பெரியவர்கள் பலரும் கூறியிருப்பதை நாம் நன்கறிவோம் . இன்றைய நற்செய்தியில் இயேசுவும் கண் பார்வையற்ற பர்த்திமேயுவின் நிலையை, நிகழ்வை நமக்கு எடுத்துக் கூறி நாமும் அவர் போல பார்வை பெற்று மகிழ அழைப்புவிடுக்கின்றார். உடல் உறுப்புக்களில் கண் மிகவும் முக்கியமானது. ஐம்புலன்களில் கண்ணையே நாம் அதிகமாக பயன் படுத்துகிறோம். கண்ணைக் கவரும் பொருட்களே  நாக்கிற்கும் நலத்திற்கும் சுவை தரக் கூடியது என எண்ணுகிறோம். உண்ணும் பொருளாக இருந்தாலும், உடுக்கும் உடையாக இருந்தாலும், உறைவிடத்திற்கான உபயோகப்பொருளாக இருந்தாலும், கண்ணின் சுவைக்கே நாம் முதலில் இடம் கொடுக்கின்றோம். இப்படியிருக்க இந்த விழி இல்லாத மக்களின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. ஆனால் இவர்கள் விழிகளின் குறைபாட்டை பிற புலங்களின் வழி நிறைவு செய்து கொள்வர். உதாரணத்திற்கு இவர்களின் செவித்திறன், தொடு உணர்வு, நுகரும் திறன், இனிமையான குரல், பேச்சுத் திறன் என மற்ற அனைத்து புலன் உறுப்புக்களின் நுண்ணறிவும் மிகக் கூர்மையானது. ஆனால் கண் பார்வை உடைய நமது பிற புலன் உறுப்புக்களின் நுண்ணுணர்வு இவர்களை விட  மிக மிகக்குறைவே... நிற்க....
இன்றைய நற்செய்தியில் பார்வை இழந்த பர்த்திமேயுவிற்கு இயேசு பார்வை வழங்கிய நிகழ்வினை நாம் வாசிக்கக் கேட்டோம். இந்நிகழ்வில் இடம்பெறும் கதைமாந்தர்களான பர்த்திமேயு, இயேசு, மக்கள் கூட்டம் இவர்களின் செயல்பாடுகள் வழி இறைவன் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன என்பதை உணர முற்படுவோம். மனத்திரை அகற்றிய பர்த்திமேயு, விழித்திரை நீக்கிய இயேசு , முகத்திரை களைந்த மக்கள் கூட்டம்.
மனத்திரை அகற்றிய பர்த்திமேயு;
 பர்த்திமேயு பார்வையற்றவர் தனது இயலாமையினால் ஊரின் வெளியே அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார். விழிகளில் திரை விழுந்தாலும் மனதினை விசாலமாக்கி மனத்திரை அகற்றி காத்திருக்கின்றார். தாவீதின் மகனே என்மேல் இரங்கும் என்ற வரிகளை செபமாக மாற்றி, தனது இயலாமையிலும் இறைப்புகழ் பாடும் மனவலிமை பெற்றவராயிருக்கிறார். கண் பார்வை இல்லாவிட்டாலும் கேட்கும் திறன் வைத்து தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியும் வல்லமை பெற்றவராயிருக்கிறார். தனது தேவை என்ன என்பதை நன்கறிந்தவராயிருக்கிறார். புதிய வாழ்வு கிடைத்தவுடன் பழையனவற்றை தூக்கி எறியும் மனப்பாங்கு உடையவராயிருக்கின்றார். நாமும் பல நேரங்களில் பர்த்திமேயுவின் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். துன்பத்திலும் இறைப்புகழ் பாடும் மனவலிமை நம்மிடம் இருக்கிறதா? நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியக் கூடியவர்களாக நாம் இருக்கின்றோமா? நமது தேவை என்னவென்றும் , பழையனவற்றை தூக்கி எறியும் மனப்பாங்கும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்திப்போம்..... பர்த்திமேயு போல மனத்திரையை அகற்றி அதை விசாலமாக்கி அதில் இறைவனின் பிரசன்னம் நிலைத்திருக்க அருள் வேண்டுவோம்.
விழித்திரை நீக்கிய இயேசு:
     கண் தான் உடலுக்கு விளக்கு என்பதை நன்கறிந்த இயேசு, விழி திறன் இழந்த அவருக்கு திறன் தருகின்றார். தன்னைச்சுற்றி கூச்சல் போட்டுக் கொண்டு வரும் மக்களின் மத்தியில் பர்த்திமேயுவின் குரலினை கண்டு கொள்கின்றார். நின்று, அவரை தன்னிடம் அழைத்து வரச்சொல்லுகின்றார். அவரின் மன்றாட்டுக்களுக்கு மதிப்பளிக்கின்றார். உனது தேவை என்ன என்று கேட்டு அதனை நிறைவு செய்கின்றார். அவரது விழியினை மூடியிருந்த திரையினை அகற்றி அவருக்கு புது வாழ்வு கொடுக்கின்றார். பல நேரங்களில் நாம் புலம்புவது உண்டு .. என்ன வேண்டுதல் செய்து என்ன புண்ணியம் கடவுள் என் குரலுக்கு செவிமடுப்பதே இல்லை என்று. பார்வையற்ற பர்த்திமேயுவை மக்கள் கூட்டம் அமைதியாயிருக்குமாறு சொன்ன பிறகு தான் அவர் இன்னும் வேகமாக கத்த தொடங்குகின்றார். அந்த அவரின் விடாமுயற்சி நம்பிக்கையைப் பார்த்து தான் இயேசு சொல்கின்றார். உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று என்று. இயேசு பல நேரங்களில் நாம் வேண்டுபவற்றை உடனே தருவதில்லை. பல இடையுறுகளை நாம் மன்றாடும் போதே கொடுப்பார். சிலர் தொடர்ந்து உரக்கக் கத்தி, தொடர்ந்து செபித்து வேண்டியதை பெற்றுக்கொள்வர். சிலர் தொய்வடைந்து அப்படியே உட்கார்ந்து விடுவர். நாம் எப்படி என்று சிந்திப்போம். இயேசு நமது குரலை நன்கு கேட்குமளவுக்கு நமது வேண்டுதல்களையும் செபங்களையும் தொடர்ந்து செய்வோம்.
முகத்திரை களைந்த மக்கள் கூட்டம்;
        ஏராளமான மக்கள் இயேசுவைப்பின் தொடர்கின்றனர். பலர் அவரவர்களது தனிப்பட்ட நலனுக்காக அவரைப் பின்பற்றி இருப்பர். சிலர் ஊரே செல்கிறது நாமும் உடன் செல்வோம் என்ற எண்ணத்தில் சென்றிருப்பர். பர்த்திமேயுவை அதட்டி அமைதியாக்க முயன்றிருப்பர். சிலர் அவருக்காக இயேசுவிடம் பரிந்து பேசி நலம் பெற உதவி இருப்பர். இப்படி பலர் இருக்க இதில் பர்த்திமேயுவிற்கு ஆறுதலும் நம்பிக்கையும் கூறிய மக்கள் கூட்டத்தார் போல நாம் இருக்க அருள் வேண்டுவோம். தன்னுடைய தேவைகள் பல இருக்க தன்னுடன் வாழ்பவர்களின் நலனுக்காக பாடுபடும் மக்கள் போல நாமும் மாற முற்படுவோம். தங்களது தேவைகள் என்னும் முகத்திரை களைந்து பிறரின் நலன் நாடும் அவர்கள் போல நாம் வாழ இறைத்துணை நாடுவோம். நம்முடன் வாழும்  துன்புறும் மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை இயேசுவிடம் அழைத்து வருபவர்களாக மாறுவோம். பத்தோடு ஒன்று பதினொன்று அத்தோடு ஒன்று நானொன்று என்று வாழாமல், தனித்தன்மையோடு வாழ முற்படுவோம். நமக்காக வாழ்வதோடு மட்டுமல்லாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ்பவர்களாவோம்.
இவ்வாறாக மனத்திரை அகற்றி, விழித்திரை நீக்கி, முகத்திரை களைந்து தூய மக்களாக வாழ இறைவன் அழைப்புவிடுக்கின்றார். நன்மைகளைக் காணாதவாறு  நமது பார்வையை மறைத்திருக்கக் கூடிய கோபம், வன்மம், பொறாமை, தீய எண்ணம் என்னும் திரைகளை இறை முன்னிலையில் சுட்டெரிப்போம். இயேசுவை இறைவனை நோக்கி நமது மன்றாட்டுக்களை எழுப்பிக் கொண்டே இருப்போம். இதைதான் பவுலடியார் தனது திருமுகங்களிலே இடைவிடாது செபியுங்கள் என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் என்கிறார். நாமும் தொடர்ந்து செபிப்போம். நம் குரல் இறைவனின் காதுகளை எட்ட இடையூறாக இருக்கக் கூடிய அனைத்து சூழ்நிலைகளையும் தகர்த்தெறிவோம். பிறரின் வேண்டுதல்களுக்கும் மதிப்பளிப்போம். நமக்காக நம்முடைய தேவைகளுக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் பிறரின் தேவைகளுக்காகவும் செபிப்போம் . எல்லாவற்றிற்கும் மேலாக பிறரை இயேசுவிடம் கொண்டு சேர்க்கும் ஒரு காரணியாக மாறுவோம். நமது விழித்திரை அகற்றி புதியதோர் உலகம் காண முயல்வோம் . இறைவனின் அருள் என்றும் நம்மீதும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென். 

Friday, 12 October 2018

அருளா? பொருளா?

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இருந்தும் இல்லாதது போலவே என்பார் திருவள்ளுவர். கடவுளின் அருள் நம்மிடம் இல்லை என்றால் அவ்வுலகமாகிய நிலைவாழ்வு நமக்கு இல்லை. பொருள் இல்லையென்றால் நாம் வாழும் இவ்வுலகத்தில் எதுவும் நமக்கு இல்லை. நம்மிடம் இருப்பது அருளா பொருளா ? அதைக் கொண்டு நாம் பெற விரும்புவது அவ்வுலகத்தையா இவ்வுலகத்தையா என்பதை சிந்தித்தறிய இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர், பொன், வெள்ளி, மாணிக்கம், உடல் நலம், அழகு, ஒளி ஆகிய எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக ஞானத்தைக் கருதுகின்றார். அதன் முலம் மேற்கூறிய அனைத்து செல்வங்களையும் நான் பெற்றுக் கொள்வேன் என உறுதிகூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் கடவுளின் வார்த்தையே செல்வங்களுக்கெல்லாம் சிறந்த செல்வம் என்று நம்பிக்கை ஊட்டுகிறார். நற்செய்தியிலோ இயேசு, நாம் பெற்ற செல்வங்களை செயல்களின் மூலம் பிறருக்கு பகிர்ந்தளிக்கச்சொல்கின்றார். ஞானம்,வார்த்தை செயல் என மூன்று வாசகங்களும் ஒவ்வொன்றை செல்வமாகக் கருதுகின்றன. நாம் நமது செல்வமாக கருதுவது எதை என்பதை கண்டறிய இறைவன் நம்மை அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செல்வந்தர் போலவே நாமும் பல நேரங்களில் நமது வாழ்வில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தனது உண்மையான மகிழ்வைத் தேடுபவர்.
தன்னை நல்லவராக காட்டிக்கொள்பவர்.
இழக்க மனமில்லாதவர்.
உண்மையான மகிழ்வைத் தேடுபவர்:
     தான் மிகப்பேரிய செல்வந்தனாக இருந்த போதிலும் தனக்கு ஏதோ ஒன்று குறைவுபடுகின்றது , அது என்ன என்று தேடும் எண்ணம் உடையவராக இருக்கின்றார். நிலைவாழ்வு ஒன்றே தனக்கு மனநிம்மதி மகிழ்வு தரக்கூடியது அதை அடையும் வழி இயேசுவிடம் இருக்கின்றது என்று நன்கு அறிந்து  அவரை எதிர்கொண்டு வருகின்றார். நாமும் இந்த செல்வந்தர் போல செயல்பட்ட தருணங்கள் பல இருக்கலாம். எல்லாம் இருந்தும் வெறுமையாகவும், எதுவும் இல்லாமல் மன நிம்மதியுடனும் இருந்த நாட்கள் ஏராளம். நம்முடைய உண்மையான மகிழ்வை மனநிம்மதியை நாம் எங்கு தேடிக்கொண்டிருக்கின்றோம் என்று சிந்திப்போம். செல்வந்தர் நிலை வாழ்விற்கான வழி ஒன்றே தனது மகிழ்விற்கான காராணம் என்பதை கண்டறிந்தார். அதைக் கண்டடைய விரும்பி இயேசுவை எதிர் கொண்டார். நாம் நமது பயணத்திற்கான பாதையை கண்டறிந்துவிட்டோமா? சிந்திப்போம்.
தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்பவர்:
       நல்ல போதகரே என்று கூறி இயேசுவின் அன்பைப் பெற எண்ணுகின்றார். முழந்தாள்படியிட்டு அனைவரும் தன்னை பார்க்கும் நிலைக்கு ஆளாக்குகின்றார். உணவிற்காகவும் உடல்நலத்திற்காகவும் அவரைப் பின் தொடரும் மக்கள் மத்தியில் நிலைவாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டு அனைவரையும் வியக்க வைக்கின்றார். சிறுவயது முதலே தான் அனைத்து கட்டளைகளையும் கடைபிடிப்பதாக அனைவர் முன்னிலையிலும் எடுத்துரைக்கின்றார். நாமும் இப்படித்தான் இந்த செல்வந்தர் போல செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். நம்மை அடுத்தவர் முன்னிலையில் பெரியவர்களாக  காட்டிக்கொள்ள என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றோம். வீண் பகட்டும் ஆடம்பரமும் நம்மை நம்முடைய இயல்பு வாழ்க்கையிலிருந்து  வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது. அதை உணராது நாம் பிறர் முன் நம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயன்று கொண்டிருக்கின்றோம். மனிதர் முன் தன்னை பெரியவனாக காட்டிக் கொள்ள முற்படுபவன், கடவுள் முன் சிறியவனாகக் கருதப்படுவான். மனிதர் முன் சிறியவனாக தன்னை தாழ்த்துபவன் கடவுள் முன் பெரியவனாக உயர்த்தப்படுவான். நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் சிந்திப்போம்.
இழக்க மனமில்லாதவர்:
      நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பர். செல்வந்தரின் விசயத்தில் அது பொய்யாகிப் போனது. நிலைவாழ்வைப் பெற வேண்டும் அதற்கான வழி இயேசுவிடம் உள்ளது என்று கண்டறிந்து அவரை எதிர்கொண்டு வந்தார். ஆனால் முடிவு நினைத்தது போல் இல்லை. இயேசு சொன்ன வார்த்தைகளை அவரால் வாழ்வாக்க முடியவில்லை. அதனால் பயணத்தில் வெற்றியும் பெற முடியவில்லை. உண்மையான நிலைவாழ்வு பெற உனக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடு என்று சொன்னதை அவரால் செயல்படுத்த முடியவில்லை.விளைவு பயணத்தில் திருப்பம். எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதை உணராமல் வாழ்வதினால் தான் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் பெறாமல் இருக்கின்றோம். இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கும்,  நாம் அவருக்காக இழக்க நினைக்கும் ஒன்றை இழக்க துணிவோம்,முயல்வோம். இழப்போம் மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கையில். 
இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் போல எல்லாவற்றையும் இழப்போம் நம்மிடம் சேரும் செல்வம் பொருள் , பெயர் பதவி என் அனைத்தையும் இறைவனுக்காக இழப்போம். நூறு மடங்காக திரும்ப பெற்றுக் கொள்வோம் என்னும் நம்பிக்கையில்.  அருளா? பொருளா ? என்றால் பொருளை பகிர்ந்து அருளை பெற்றுக்கொள்வோம். இவ்வுலகில் வாழும் மனிதர்களோடு நம்முடைய அனைத்தையும் பகிர்ந்து அவ்வுலகத்திற்கு செல்ல அடிக்கல் நாட்டுவோம். நிலைவாழ்வை நோக்கிச்செல்லும் நமது பயணத்தில் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் நேரடியாக பயணிக்க அருள் வேண்டுவோம்.இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து பகிர்வு என்னும் செல்வத்தை நம்முடையதாக்குவோம் .  இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.  

Saturday, 6 October 2018

இருவர் அல்ல ஒருவராக ஒன்றிணைக்கப்பட.....


 இன்றைய இறைவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நம்மை இறை குடும்ப உறவோடு ஒன்றித்து  வாழ அழைக்கின்றன. முதல் வாசகம், படைப்பின் தொடக்கத்தில் இருவர் ஒருவராக இணைந்து ஒன்றித்தது பற்றியும் , இரண்டாம் வாசகம் இயேசுவோடு நாம் மாட்சியில் பங்குகொள்ள ஒன்றிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும், நற்செய்திவாசகமோ கணவன் மனைவி திருமண உறவில் ஒன்றித்து வாழ்வது பற்றியும் எடுத்துரைக்கின்றன. தமிழ் சங்க இலக்கியங்களில் கணவன் மனைவி உறவு, ஆண் பெண் திருமண உறவு எப்படி இருந்ததை பாடல்கள் மூலம் அழகாக சொல்லி இருப்பர். 
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே". என்பது பாடல் வரிகள் நீ யார் ,நான் யார் என்று தெரியாது . உனது தாய் தந்தையர்கள், எனது தாய் தந்தையர்கள் யார் என்று அறீயோம். ஆயினும் நமது நெஞ்சம் செம்மண்ணில் கலந்த நீர் போல  இரண்டறக் கலந்து விட்டது என்று தலைவன் தலைவியை நோக்கி பாடுவதாக பாடலின் பொருள். திருமணத்தன்றும் அதன்பின் சிலகாலமும் இப்படி தான் நமது திருமணத் தம்பதியர்கள் இருக்கின்றனர். ஆனால் அதன் பின் செம்மண், நீர் கலக்க முடியாத படி இறுகியும் , நீரானது திரவ நிலை மாறி திட நிலைக்கு தன்னை மாற்றியும் காட்சியளிக்கின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உன்னோடு இருப்பேன் என்று அனைவர் முன்னிலையிலும் அறிக்கையிட்ட மனிதர்கள் தான் , தங்களது துணைவன் துணைவியை தமது சுயநலத்திற்காக விட்டுச்செல்கின்றார்கள். இப்போதெல்லாம் விவாகரத்து ஒரு நிமிடத்திற்கு பத்து உலகளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பிரச்சனை இன்று நேற்று மட்டுமல்ல . இயேசுவின் காலத்திலும் ஏன் மோசே காலத்திலும் இருந்தது என்பதற்கு நம்முடைய இன்றைய வாசகங்கள் சான்று. ஏன் ? எதனால்? இந்நிலையில் எவ்வாறு ஒன்றித்து வாழமுடியும் ?
கணவன் மனைவி உறவு மேம்பட  நம் ஒவ்வொருவரின் குடும்பமும் திருக்குடும்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி சிந்தித்து தியானிக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.  நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர், ஏனெனில் பல்கலைக்கழகத்தில் தான் சிறப்பாக கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடியும் . நமது குடும்பங்களில் நாம் ஒருவர் மற்றவரிடம்(கணவன்,மனைவி) இருந்து நல்லவற்றை, சிறப்பானவற்றைக் கற்றுக்கொள்ளவும், (பிள்ளைகளுக்கு) கற்றுக்கொடுக்கவும் முடியும். அதனால் தான் குடும்பத்தைப் பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடுகின்றார்கள். நமது குடும்ப உறவு மேம்பட, நாம் ஒன்றிப்புடன் வாழ நம்மில் தளிர்க்க வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும் இரண்டு.
தளிர்க்க வேண்டியவை அன்பும் அளவளாவுதலும். தவிர்க்க வேண்டியவை அகங்காரமும் அலட்சியமும். நம்மில் தவிர்க்க வேண்டியவற்றை நாம் தவிர்த்தால் தளிர்க்க வேண்டியவை தானாய்த் தளிர்க்கும்.
அகங்காரம்: அகந்தை, தான் என்னும் முனைப்பு, ஈகோ என்று இதனை எத்தனை பெயர்களில் வேண்டுமானாலும் சொல்லலாம். அகம் தன்னை கொல்லும் அந்த 'ஐ' யை அடியோடு விட்டொழிக்க முயல்வோம். குடும்பத்தில் நான் தான் பெரியவன், அறிவாளி, புத்திசாலி என்று ஒரு கணவனோ மனைவியோ எண்ண ஆரம்பித்தால் குடும்பம் சிதைந்து சின்னா பின்னமாகி விடும். அங்கு வளர்ச்சி இருக்காது தளர்ச்சி தான் இருக்கும். "நான் தான் எல்லாம் " என்னும் அகந்தையை சுமந்து கொண்டு வாழ்ந்தால் , வாழ்வில் காணக்கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களை நாம் காண முடியாது போய் விடும். காகம் ஒன்று தனக்கு கிடைத்த ஒரு மாமிசத்துண்டை வாயில் கவ்வியபடி வானில் பறக்கத் தொடங்கியது. இதனைக் கண்ட பிற காகங்கள் அதனிடம் இருந்து அதை பறிக்க எண்ணி அதைப் பின்தொடர்ந்தன. கூடவே கழுகுகள் இரண்டும் அதை துரத்தின. வாயில் வைத்திருக்கும் உணவா? வாழ்வா என்று எண்ணி காகம் வேகமாக பறக்க ஆரம்பித்தது. உயரத்தில் பறந்த காக்கையை பிற காக்கைகளும் கழுகுகளும் துரத்திய படியே சென்றன. ஒரு நிலையில் காகம் தன் வாயில் வைத்திருந்த மாமிசத்துண்டை கீழே போட்டது. பிற காகங்களும் கழுகுகளும் மாமிசத்தைப் பிடிக்க தொடர்ந்து சென்றன. இப்போது தான் காக்கைக்கு மூச்சு வந்தது. மாமிசம் தான் நிம்மதி என்று எண்ணி அதை பிடித்துக் கொண்டிருந்த போது இல்லாத மகிழ்வு, காக்கைக்கு இப்போது வந்தது. தன் கண்முன் இருந்த அழகான வானத்தை அப்போது தான் ரசிக்க தொடங்கியது. நாமும் நமது குடும்பங்களில் பல நேரங்களில் இப்படி தான், தேவை இல்லாத ஏதாவது ஒன்றை பிடித்துக் கொண்டு நமக்கு எதிரே உள்ள மகிழ்வான தருணங்களை மறந்து விடுகிறோம். எப்போது நமது தான் என்னும் அகந்தையை கீழே வீச ஆரம்பிக்கின்றோமோ அப்போது நம் கண்முன் இருக்கும் அழகிய வாழ்வினை நாம் அணுஅணுவாக ரசித்து வாழ்வோம்.
2. அலட்சியம்: குடும்பங்களில் கணவன் மனைவியையோ இல்லை மனைவி கணவனையோ அலட்சியம் செய்வது மிக சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. என்னை விட நீ உயர்ந்தவர்/ள் அல்ல . உனக்கு ஒன்றும் தெரியாது. என்று சொல்லிலும் செயலிலும் பலமுறை நாம் அதை செயல்பாட்டில் காட்டுகின்றோம். ஆணோ பெண்ணோ அவரவர் செயலில் அவரவ்ர் சிறப்பு. ஒருவர் மற்றவரை செய்யும் அலட்சியம், இறுதியில் மோசமான விளைவுகளுக்கு காரணமாகின்றது. ஒருவர் மற்றவரிடம் இருக்கும் நன்மைகளை பாராட்டி மகிழ்வோம். சிறு பாராட்டு தான் என்றாலும் அதன் நல்ல பலனை உடனடியாக காண முடியும். அலட்சியத்தின் மிக முக்கியமான செயல் ஒருவர் பேசும் போது அவர் சொல்லுக்கு செவிமடுக்காதது. எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே வைத்து விட்டு அவர்களது சொல்லுக்கு மதிப்பளியுங்கள். நாம் சொல்வதை இவர் கேட்கிறார் என்னும் போதே உங்கள் மீதான அன்பும் மதிப்பும் உயர ஆரம்பிக்கும். நாம் இப்போதெல்லாம் இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் பெற்றவர்களாகிக் கொண்டிருக்கிறோம். விளைவு இரண்டு வேலைகளையும் ஒழுங்காக முடிக்க முடியாது அல்லாடுகிறோம். அலட்சியத்தை அகற்றி அன்பை நம் குடும்பங்களில் புகுத்துவோம். குடும்ப செபம் இதற்கு மிக முக்கிய பங்காற்றும். கூடி செபிக்கும் குடும்ப நிலை மாறி இப்போது கணினியில் குழு உரையாடல்களில் நேரம் செலவழிக்கும் குடும்பங்களாக மாறி இருக்கின்றோம். அந்நிலையை மாற்றி குடும்ப செபம் செபித்து பழகுவோம்.ஒருவரோடு ஒருவர் அன்போடு (உரையாடுவோம்) அளவளாவுவோம்
இறுதியாக, தவிர்க்க வேண்டியவைகளான அகங்காரத்தையும் அலட்சியத்தையும் தவிர்த்து அன்பையும் அளவளாவுதல் என்னும் உரையாடல் (பேசிப் பழகுதல்) பண்பையும் நம்மில் தளிர்க்க வைக்க இறையருள் நாடுவோம். இருவராக இணைந்த தம்பதியினரை ஒருவராக ஒன்றிணைப்பது/மாற்றுவது அன்பின் வலிமை என்றால், பல நபர்களால் ஆன குடும்பத்தை ஒரு அன்பின் கூடாக ஒன்றிணைப்பது/மாற்றுவது குடும்ப செபத்தின் வலிமை. நாம் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே, உருவாக்கப்பட்டவர்கள். இருவர் ஒன்றிணைந்தால் அது திருமணம், பலர் ஒன்றிணைந்தால் அது குடும்பம் எனவே ஒன்றிணைக்கப்பட அருள் வேண்டுவோம். குடும்பமாக குழுமமாக, ஒன்றிணைக்கப்பட அருள் வேண்டுவோம். செம்புலப்பெயல் நீர் போல இறைவனின் அன்பில் இரண்டறக் கலந்து இறையருள் பெறுவோம். இறைவனின் ஆசீரும் அருளும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருந்து நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பதாக ஆமென்.                 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...