Friday, 19 February 2021

வானவில் மாற்றம்🌈🌈🌈


ஒரு நாள் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு அறிவிப்பானது பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அனைவரும் மிக ஆவலாக என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்க சென்றனர். அதில் " உங்களின் வளர்ச்சிக்கு இதுவரை தடையாக இருந்தவர் நேற்று காலமானார். அவரின் உடல் அடுத்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. தவறாமல் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்கவும்" என்று எழுதப்பட்டு இருந்தது. வாசித்த அத்தனை பேரும் தங்களுடைய வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்திருப்பார்கள் என்று காண மிக ஆவலாய் அடுத்த அறைக்கு சென்றனர். அங்கு ஒரு சவப்பெட்டி இருந்தது. அதன் அருகில் சென்று உற்று பார்த்தவர்கள் அனைவரும் மிக வருத்தத்துடன் திரும்பி வந்தனர்.


சவப்பெட்டியினுள் ஒரு கண்ணாடியும் அதன் அருகில் "உங்களின் வளர்ச்சிக்கு காரணரும் நீங்களே, தடையும் நீங்களே!" நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும். தடையை மாற்றி வளர்ச்சியடையுங்கள் என்று எழுதப்பட்ட வாசக அட்டையும் வைக்கப்பட்டு இருந்தன. கண்ணாடியில் தங்களது முகத்தையும் வாசகத்தையும் கண்ட அவர்கள் அன்று முதல் அனைவரும் தங்கள் பணிக்கு தடை தரும் செயல்களை விட்டு விட்டு, வளர்ச்சி தரும் மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.


நாமும் மாற்றத்தின் காலமாம் தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். தடைகள் பலவற்றை தகர்த்து வளர்ச்சி மாற்றத்தை, மனமாற்றத்தை நோக்கி பயணிக்க இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்புவிடுக்கின்றார். காலம் நிறைவேறிவிட்டது இறையரசு நெருங்கி வந்து விட்டது, மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் இன்று நமக்கு அறிவுறுத்துகிறார். காலையில் பள்ளி பேருந்து வந்துவிட்டது என்றால் நம்முடைய வழக்கமான செயல்பாடு எவ்வாறு மிக துரிதமாக இருக்குமோ அதுபோல் இருக்க வேண்டும் இனி நம்முடைய வாழ்வு. அதற்கான ஒரு அறிவிப்பு தான் இந்த தவக்காலம். பிற நாட்களைப் போல் இருக்கக்கூடாது. வழக்கமான செயல்களை விட மிக சிறப்பான செயல்களை நாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதுவரை நாம் எப்படி இருந்தோமோ அதுவும் நம்மால் தான் . இனிமேல் எப்படி இருக்க போகிறோமோ அதற்கும் நாம் தாம் முழு பொறுப்பு அதை நல்ல விதத்தில் மாற்றி அமைத்து கொள்ள நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது.


இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நோவா காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பின் மண்ணுலக மக்களுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கை பற்றி கூறுகின்றார். அது உடன்படிக்கையின் வில். எவ்வாறு வானவில் நம் கண்களுக்கு அரைவட்ட வடிவில் இரு துருவங்களை இணைப்பது போல் தென்படுகிறதோ அது போல இறைவனை நம்மோடு இணைக்கிறது இந்த உடன்படிக்கையின் வில்.

சூரியனின் ஒளியால் மழைத்துளி பெறும் மாற்றம் ஒளிப்பிழம்பாக வானவில்.

இறைவனின் அருள் ஒளியால் நாம் பெரும் மாற்றம் செயல் வடிவமாக நம் வாழ்வில்.

வானவில் மழை வந்து சென்ற பிறகே வரும். பார்க்கும் நமக்கு மகிழ்வைத் தரும். பல்வேறு வண்ணங்களால் நம் மனதை கொள்ளை கொள்ளும். சிறிது நேரமே என்றாலும் நம் உள்ளங்களை அள்ளி சென்று விடும். நமது வாழ்வும் வானவில் போன்று மாற்றம் பெற்று நம்மோடு உடன் பயணிப்பவர்களுக்கும், வாழ்பவர்களுக்கும் மகிழ்வை தரக் கூடியதாக அமைய வேண்டும்.


நற்செய்தி வாசகத்தில் இயேசு பாலைநிலத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்ட நிகழ்வை வாசிக்கக் கேட்டோம். இயேசு சோதிக்கப்பட்ட நிலையிலும் வானதூதர்களால் பணிவிடை பெறப்பட்டார். சோதனை காலத்திலும் துன்புற்ற நேரத்திலும் இறைப்பராமரிப்பை உணர்கிறார். நமது வாழ்விலும் இத்தகைய இறைப்பராமரிப்பை நாம் உணர வேண்டும். நாம் வாழுகின்ற உலகம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டதாக இருக்கின்றது. அரசியல் மாற்றம், பொருளாதார மாற்றம், வரி மாற்றம் வட்டி மாற்றம் என்று எல்லாமே மாறிக் கொண்டே இருக்கின்றது. எத்தனை மாற்றங்கள் வந்து சென்றாலும் நாம் மாறாவிட்டால் எதையும் மாற்றவும் முடியாது, ஏற்கவும் முடியாது. நம்மைச்சுற்றி இருக்கும் மாற்றங்கள் சில நம்மை வருத்தப்பட வைக்கலாம் ஆனால் அது நாம் அனுமதித்தால் மட்டுமே நடக்கும். வெளிப்புறத்தில் நடக்கும் வித்தியாசமான மாற்றங்களை விட நமக்குள் நாமே செய்யும் மனமாற்றங்கள் தான் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. இயேசுவின் துன்பத்திலும் வானதூதர்களின் பணிவிடை ஆறுதல் தருகின்றது. நமது துன்பத்திலும் இறைவனின் உடனிருப்பு நமக்கு ஆற்றலை தரும்.


நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது மாற்றத்திலும் துன்பத்திலும் இறைவனின் உடனிருப்பை ஆழமாக உணர்வது தான். மாற்றத்தின் காலமாம் இந்த தவக்காலம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நல்லதொரு வளர்ச்சி மாற்றத்தை தர இறைவனின் ஆசீர் வண்டுவோம். சாதாரண மழைத்துளி சூரியனின் ஒளியால் வானவில்லாக மாறி காட்சி அளிப்பது போன்று, நமது வாழ்வும் இறைவனின் அருள் ஒளியால் மாற்றம் பெற அருள் வேண்டுவோம். மாற்றம் நல்லதொரு வளர்ச்சி மாற்றமாக இத்தவக்காலத்தில் மலரட்டும் இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்


Friday, 5 February 2021

எல்லோருக்கும் எல்லாமாய்

 எல்லோருக்கும் எல்லாமாய் இருப்பது எல்லாராலும் முடியாது. ஆனால் இறைமகன் இயேசுவால் முடியும். அவர் வழி வாழ்ந்த பவுலடியாராலும் அவ்வாறு வாழ முடிந்திருக்கின்றது. பொதுக்காலத்தின் 5ம் ஞாயிற்றில் இருக்கக் கூடிய நம்மை இன்று எல்லோருக்கும் எல்லாமாய் வாழ இறைவன் அழைக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் யோபு இறைவாக்கினர் துன்பத்தின் உச்சகட்டத்தில் தன் வாழ்வை எண்ணி வருந்திக் கூறுவதாக வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம்.

நிழலுக்கு ஏங்கும் அடிமை போல, கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போல இருக்கின்றேன் என்று தனது நிலைமையை தன் நண்பர்களுக்கு எடுத்துரைப்பது போல அமைந்துள்ளது இன்றைய முதல் வாசகம். தன் வாழ்வு இப்படியே முடிந்து விடுமோ ? தனது வாழ்வில் இனி நல்லவை எதுவும் திரும்ப வராதோ? என்று எண்ணி வருந்துகின்றார். நாமும் பல நேரங்களில் துன்பம் வந்து விடுமோ என்று அஞ்சுகின்றோம். நன்மை வராமல் போய்விடுமோ என்று வருந்துகிறோம். எல்லோருக்கும் எல்லாமாய் இருக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏனோ தவற விட்டு விடுகின்றோம்.

இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் நற்செய்தியை பிற மக்களுக்கு அறிவிப்பதற்காக தான் எல்லோருக்கும் எல்லாமாய் மாறினதாக எடுத்துரைக்கின்றார். நற்செய்தியை அறிவிக்காவிடில் தனக்கு கேடு என்று எண்ணி அதன்படி செயல்படுகின்றார். தனது வாழ்வில் எவ்வளவு துன்புற்றாலும் அதை அனைத்தையும் கிறிஸ்துவின் மகிமைக்கென எடுத்துக் கொள்கின்றார். துன்பத்திலும் இன்பத்தைக் கண்டு கொள்ள முயல்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவின் மாமியார் காய்ச்சலைப் போக்கிய நிகழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இயேசுவின் மூன்று விதமான செயல்களை நமது சிந்தனைக்கு என்று எடுத்துக் கொள்வோம். அருகிருத்தல், செபித்தல், பணி செய்தல்.

அருகிருத்தல்:
இயேசு பேதுருவின் மாமியார் காய்ச்சலால் துன்புறுகின்றார் என்று தெரிந்தவுடன் அவரருகில் செல்கின்றார். அவரது கையைப் பிடித்து தூக்கிவிடுகின்றார். நோயாளியைத் தேடிச்செல்கின்றார். அவரது அருகில் செல்கின்றார். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகின்றார்கள் என்றால் வீட்டின் உரிமையாளர்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அவர்கள் காலில் சக்கரம் இல்லாத குறையாக சுற்றிக் கொண்டு இருப்பார்கள். அதுவே அந்நேரத்தில் அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் அந்த வீட்டின் சூழலே மாறிவிடும். வழக்கமான கலகலப்பு, மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும். வந்த விருந்தினருக்கும் ஏன் வந்தோம் என்ற மனநிலை, வீட்டு உரிமையாளருக்கும் இந்நேரத்தில் வந்திருக்கின்றார்களே என்ற கவலை, அவ்வீட்டின் இயல்பு நிலையையே மாற்றிவிடும். அவ்வாறு நிகழாதவாறு இயேசு அந்த பெண்ணின் உடல் நிலையை சரி செய்கின்றார். நோயளிகளின் அருகில்மட்டுமல்ல சாதாரணமாகவே யார் அருகிலும் செல்லக் கூடாது என்று சமூக இடைவேளி கடைபிடிக்கும் காலத்தில் நாம் இருக்கின்றோம். ஆனால் இந்த இடைவெளி மனித உறவுகளிலும் உள்ளங்களிலும் விழுந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு நமது சமூகம் மாறிக் கொண்டு இருக்கின்றது.
அப்படிப்பட்ட நேரத்தில் இயேசு உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்ல அவர்களின் கைகளைப் பிடிக்க நமக்கு வலியுறுத்துகிறார். கைகளைப் பிடிப்பது என்பது உங்களுக்காக நான் இருக்கின்றேன் என்பதன் அடையாளம். தூக்கிவிடுதல் அவர்களின் இயலாமையிலிருந்தும், பலவீனத்திலிருந்தும் தூக்கி விடுதலாகும். அப்படி நாம் செய்யும் போது நாமும் இயேசு போல எல்லோருக்கும் எல்லாமாய் மாறுகின்றோம்.

செபித்தல்;
எவ்வளவு பெரிய புதுமைகளை செய்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தி இருந்தாலும் இயேசு தனிமையில் இறைவனோடு செபிப்பதை ஒரு போதும் மறந்ததே கிடையாது. அவரது அற்புதங்கள் புதுமைகளுக்கான வலிமையை அந்த செப நேரத்தில் பெற்றுக் கொள்கின்றார். அதுவும் அதிகாலையில் எழுந்து தனிமையான ஒரு இடத்திற்கு சென்று செபிக்கின்றார். தனது வாழ்விற்கான வலிமை செபம் என்பதை அறிந்து இருந்தார் இயேசு. இறைமகனுக்கே செபம் அவரது வாழ்விற்கு அவசியம் என்றால் நாம் எம்மாத்திரம். செபம் வெற்றி தரும் என்பதை உணர்ந்து, செபிக்கப்பழகுவோம். நாம் தனிமையில் இறைவனிடம் எடுத்துரைக்கும் செபங்கள், மன்றாட்டுக்கள், நிச்சயம் பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் செபிக்கப்பழகுவோம்.

பணி செய்தல்:
இயேசு தனக்கு பழக்கமான மனிதர்களிடம் மட்டும் வேலை செய்ய விரும்பவில்லை. தான் புதுமை செய்த இடத்தில் அவரை அதிகம் தேடுகின்றார்கள் என்று தெரிந்தவுடன் வேறு இடத்திற்கு நகரத் தொடங்குகின்றார். அறிமுகமான, அவர் மேல் பாசம் கொண்ட மக்களை விட முகம் தெரியாத புது நபர்களுடன் தன் பணியைத் தொடங்க தயாராக இருக்கின்றார். நீர் தேங்கும் குட்டை குளம் போல் இல்லாமல், அருவி ஆறு போல விரைந்து ஒடுகின்றார். தனது பணி ஒரு சில மக்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து மக்களுக்கு தேவை என்பதை தனது சொல்லாலும் செயலாலும் அடிக்கடி நிரூபிக்கின்றார். தனது அன்பு ஒருவரிடத்திலும் ஒரு ஊரிலும் மட்டும் அடங்கி விடக் கூடியது அல்ல. அது உலக எல்லை வரை விரிவடைந்து கொண்டே இருக்கக் கூடியது என்பதை வெளிப்படுத்துகின்றார். நாமும் நம்முடைய அன்பை ஒரு சிலர்களிடம் மட்டும் காட்டி அதனை அத்தோடு நிறுத்தி விடாமல் இயேசுவின் இரக்கத்தின் அன்பை போன்று பலருக்கும் கிடைக்கும்படி அன்பு செய்து வாழ்வோம்.

இவ்வாறு இயேசு போன்று அருகிருந்து, செபித்து பணி செய்து வாழும் போது, நாமும் எல்லோருக்கும் எல்லாமாய் மாறுவோம். துன்பங்களை எதிர்கொள்ளும் சக்தி பெறுவோம். செபத்தினால் வலிமை பெறுவோம். பிறரையும் வலுப்படுத்துவோம். பணி செய்து பலன் பெறுவோம். எல்லோருக்கும் எல்லாமாய் இருக்க, இறைமகன் இயேசுவின் கண்மணிகளாய் வாழ்ந்து சிறக்க, இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...