Tuesday, 15 April 2025

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா





சிலுவைப்பாதை 
தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். உனக்கென ஒரு வழியை நீயாக உருவாக்கிக்கொண்டு முன்செல். உனக்குப் பின் வருபவர் அந்த வழியில் உன்னைப் பின் தொடர்வர். உனக்கான பாதை புதிய பாதையாக புது வாழ்விற்கு இட்டுச்செல்லும் பாதையாக அமையும். ஆம் இயேசுவின் பாதை புதியது. வாழ்விற்கு நம்மை அழைத்துச்செல்வது. கெத்சமனித் தோட்டத்தில் இருந்து கல்வாரி வரை அவர் அனுபவித்த துன்பங்களை நமது வாழ்வில் நினைத்துப் பார்த்து சிந்திக்க அழைக்கும் பாதை. இயேசுவோடு அவரது பயணத்தில் அவரோடு இணைந்துப் பயணிக்க நமக்கு அழைப்பு விடுக்கும் பாதை. இப்பாதையானது நாம் இயேசுவோடு பயணித்து அவரது பாதையைப் பகிர்ந்து கொள்ள நமக்குக் கற்பிக்கிறது. அவருடைய தியாகம் நிறைந்த இச்சிலுவை இல்லாமல் தந்தைக் கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பின் மகத்துவத்தை நம்மால் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. எனவே பக்தியுடன் இப்பாதையில் பயணிப்போம். எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் இந்த யூபிலி ஆண்டில், அனைவரும் ஒன்றிணைந்து நமது எதிர்நோக்காம் கிறிஸ்துவை எதிர்கொள்ள தயாராக இருப்போம். வாழ்வளிக்கின்ற வளமையளிக்கின்ற இப்பாதையில் நாமும் இயேசுவோடு உடன் பயணித்து இறையருளை நிறைவாகப் பெறுவோம். 
 செபம். 
 அன்பு ஆண்டவரே, வெறுப்பையும், அலட்சிய மனப்பான்மையையும் விட்டுவிட்டு, உமது வலிமையான அன்பிற்கு சான்றுபகர்பவர்களாக நாங்கள் மாறவும், உம்மை விட்டு விலகாமல் எல்லாச்சூழலும் உம்மை நாங்கள் தொடர்ந்து பின்பற்றவும் எங்களது உள்ளங்களை மாற்றியருளும். நாங்கள் எங்களது வாழ்வில் சந்தித்த துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நன்மையால் பதிலளிக்கக்கூடிய தாராளமான தூய்மையான உள்ளத்தை எமக்குத் தந்தருளும். இதனால் நாங்கள் உமது உண்மையுள்ள சீடர்களாகவும், துன்ப இருளில் நடக்கும் மக்களை சந்திப்பவர்களாகவும் மாறுவோமாக. என்றென்றும் வாழும் இறைவனாகிய உம் வழியாக மன்றாடுகின்றோம் ஆமென். 

 1. முதல் நிலை இயேசு தீர்ப்பிடப்படுகின்றார். 

 திவ்விய இயேசுவே உம்மை வணங்கி ஆராதிக்கின்றோம்..... 

 மத்தேயு 27: 11- 14 
இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று கூறினார். மேலும், தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு, பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?” என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான். 

பிலாத்து, தனது பதவி அதிகாரத்தையும் தனது சொந்த உயிரையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில், மக்கள் சொல்வதை செய்கிறான். இயேசுவைப் பற்றி தான் நினைத்ததை செய்யாமல் மக்களின் இஷ்டத்திற்கு என்று விட்டு விடுகின்றான். இவ்வாறு அவன் இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்யக் கையளிப்பதன் வாயிலாக தன்னையே கண்டனத்திற்கு உட்படுத்துகின்றான். காணமால் போனவர்களை நம் வாழ்வில் தேடலாம். அதில் பயனுண்டு ஆனால் கண்டும் காணாமல் போனவர்களைத் தேடுவதால் ஒரு பயனும் இல்லை. கண்ணேதிரே நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாமல் இருந்தவர் தான் பிலாத்து. தீமையைத் தட்டிக்கேட்காமல் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல் தனது நிலையைத் தக்க வைத்துக்கொள்ள நினைக்கின்றார். எவ்வளவு துன்பம் வந்தாலும் நாங்கள் நன்மை செய்வதிலிருந்து விலகாமல் இருக்கவும், பிறரது தவறான தீய எண்ணங்களுக்கு தூது போகாமல் இருக்கவும் ஆண்டவரின் அருள் நாடுவோம். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து ஆண்டவரை நமது வாழ்நாள் எல்லாம் பின்பற்ற தேவையான துணிவினை வேண்டுவோம். 
 செபம் 
எங்களை முழுமனதுடன் அன்பு செய்யும் இறைவா, உம்மிடம் திரும்பி வருவதற்கான ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உம்முடன் நாங்கள் எல்லாக் காலமும் இணைந்திருக்க அதன் வழியாக நாங்கள் எங்களையேப் புதுப்பித்துக்கொள்ளவும் அருள்தாரும். மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் பாதையை நீர் எங்களுக்காக ஆயத்தப்படுத்துகிறீர்: உமது மகனை எங்கள் மீது கொண்ட அன்பினால் மனிதனாக இம்மண்ணுலகிற்கு அனுப்பி, எங்களைப் புதிய மக்களாக மாற்றினீர். ஒற்றுமையின் பாதைக்குப் பதிலாக சுயநலத்தின் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்க்காக நாங்கள் வாழ தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். 

 2. இயேசு சிலுவையைச் சுமக்கின்றார் 
 யோவான் 19: 17 – 18 
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு ‘மண்டை ஓட்டு இடம்’ என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். 

அன்பு – ஒப்புயர்வற்றது, ஈடு இணையற்றது, கொடுத்தால் வளருமேயன்றிக் குறையாதது விலைமதிப்பற்றது, தன்னலமற்றது, தகுதியைத் தேடாதது, தரவும் பெறவும் எளிதானது, இழந்தால் தவிப்பது. மீளப்பெற இயலாதது. நீடுபுகழ் உடையது கொடுமையயும் மாற்றவல்லது. கோணலை சரி செய்வது. சிந்தனையில் சிலிர்ப்பை ஏற்படுத்துவது. இதமானது. புனிதமானது. வலிமை மிக்கது. பெருங்கவலையை மாற்றிப் பேரின்பம் தரவல்லது. நித்திரையிலும் நீங்காதது. இயேசுவிடமிருந்து ஏராளமான நன்மையைப் பெற்றவர்கள் அது அனைத்தையும் மறந்துவிட்டு அவரை சிலுவையில் அறைய தயாராக இருக்கின்றார்கள். மிகவும் கடினமான சிலுவையை கஷ்டப்பட்டு தனது தோளில் சுமந்து செல்கின்றார். யாருக்காக இந்த கனமான சிலுவையை அவர் சுமக்கின்றார். நம்மீது கொண்ட அன்பினால் சுமக்கின்றார். அவரது அன்பு எத்தகையது என்றால் நமக்காக நமது மீட்பிற்காக தன் உயிரையேக் கையளிக்கும் அளவிற்கு உயர்ந்த அன்பு அவருடையது. எங்களை முழுமனதுடன் உண்மையாக அன்பு செய்யும் இறைவா, உமது அன்பை விட்டு விலகிய தருணங்களுக்காக மனம் வருந்துகின்றோம். உம்மிடம் திரும்பி வருவதற்கான ஆற்றலை எமக்குத் தந்தருளும். உம்மோடு நாங்கள் கொண்டுள்ள அன்பின் உடன்படிக்கையை நாளும் எமக்காக நீர் புதுப்பித்தருளும். வாழ்வின் நிறைவிற்கு எம்மை அழைத்துச் செல்லும் உமது ஒளியின் பாதையை நோக்கி எம்மை வழிநடத்தும். எமக்காக உமது மகனையே இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்த இறைவா புதிய மனுக்குல மக்களாக எம்மை மாற்றியருளும். சுயநலத்தின் பாதைகளைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் ஒன்றிப்பின் பாதையைத் தேர்ந்தெடுக்கவும், புதிய பார்வை கொண்டு இவ்வுலகைக் காணவும் அருள்தாரும். 
 செபம். 
 இயேசுவே எங்களது வாழ்வில் நாங்கள் உம்மை உண்மையாகவே கண்டுகொண்டோம். ஏனெனில் நீர் நாங்கள் செல்லும் பாவ வாழ்வில் எம்மை சந்திப்பதற்காக எதிர்கொண்டு வந்தீர். எங்களது வாழ்வின் சிலுவைகளை நாங்கள் துணிவுடன் சுமந்து செல்லவும், அவற்றை எதிர்கொண்டு வாழவும் உமது காணமுடியாத கணிக்க முடியாத அருளை உணர்ந்து வாழவும் தேவையான அருளினைத் தந்தருளும். உமது அன்பால் சூழப்பட்டவர்களாய் உலகைப் புதிய கண்களால் காண அருள்தாரும். உமது அன்பில் எம்மை இணைந்து அன்பு செய்ய எங்களுக்குக் கற்றுத்தந்தருளும். ஆண்டவரே, நாங்கள் உமக்கு முன்பாக இருக்கும் உமது பிள்ளைகளாகிய நாங்கள் தீர்ப்பிடப்படும்போதும், தண்டனைச் சிலுவைகளை சுமக்கும் போதும் அமைதியாக இருந்து அதனை ஏற்க அருள்தாரும். எங்கள் துன்பங்களை உமது துன்பங்களுடன் இணைந்து, நீர் எங்களுக்கு அருகில் இருக்கின்றீர் என்பதை நாங்கள் உணர்ந்து வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென்.
 
3. இயேசு முதன்முறை கீழே விழுகின்றார்.

 மத்தேயு 11: 28 – 30 
இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார். 

 மற்றவருடைய பலவீனத்தை பலமாக்கிக் கொள்கின்றவன் வாழ்க்கையை வெல்கின்றான். தன்னுடைய பலவீனத்தை பலமாக்கிக்கொள்பவன் அந்த வாழ்க்கையையே வெல்கின்றான். இயேசு தனது பலவீனத்தால் தரையில் விழுந்தாலும் மீண்டும் எழுந்து வாழ்க்கையையே வெல்கின்றார். கவலையுடனும் சோர்வுடனும் இருக்கும்போதும், பாவச்செயல்களைச் செய்யத் தூண்டப்படும்போதும் நாம் நமது வாழ்வில் கீழே விழுகின்றோம். நமது பலவீனங்களும் பாவ இயல்புகளும் நம்மை கீழே விழச்செய்கின்றன. சிலுவையின் பாரத்தால் தரையில் விழுந்த இயேசு, மீண்டும் எழுந்து நடப்பதன் வாயிலாக நமது வாழ்க்கையை நாம் உண்மையான புத்துணர்ச்சியுடன் வாழும் வகையில் அவரை நோக்கிச் செல்ல நம்மை அழைக்கிறார். இயேசுவின் அன்பு நம்மை ஒவ்வொரு நாளும் உயர்த்துகிறது என்பதை உணர்ந்தவர்களாய் வாழ முற்படுவோம். நமது கைகளால் மற்றவர்களின் மாண்பைக் காயப்படுத்தும்போது, மீண்டும் எழுந்திருக்க நமக்கு ஆற்றல் தர இயேசுவிடம் அருள் வேண்டுவோம். 
 செபம் 
ஆண்டவரே, எங்களது சிலுவையை எங்கள் தோள்களில் சுமக்கும் உமது பிள்ளைகளாகிய எம்மைக் கண்ணோக்கும். எங்களது செபத்தால் நாங்கள் மீண்டும் எழுந்து உம்மோடும் உம்மை நோக்கியும் எங்கள் பயணத்தைத் தொடர அருள்தாரும். விழுந்த பிறகு எழ மனமில்லாமல் சோர்வுடனே தரையிலேயே இருக்க விரும்பும் எங்களுக்கு இயேசு புத்துணர்ச்சியின் ஆற்றலைத் தாரும். மீட்பின் ஆதாரமாகிய சிலுவையை நாம் நிராகரிக்கும்போது, , மீண்டும் எழுந்திருக்க உதவும். உமது வழியில் எங்களது வாழ்க்கைப் பயணத்தை நாங்கள் தொடர உம்மைப் பின்தொடர்ந்து வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். 

 4. இயேசு தன் தாயைச் சந்திக்கின்றார் 
 லூக்கா 2: 34 – 35 
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார். 

அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இழந்தவன் தேடுவதும் இருப்பவன் இழப்பது தாயின் அன்பு மட்டுமே. ஏனெனில் இருப்பவனுக்கு அதன் அருமை புரியாது. இழந்தவனுக்கு தாயின் அன்பு புரியும்போது அவர் அருகில் இருப்பது கிடையாது. ஆனால் இயேசு தனது தாயின் அன்பை முழுவதுமாக சுவைத்தவராக இருக்கின்றார். தனது தாயின் பார்வையாலும் உடனிருப்பாலும் ஆற்றல் பெறுகின்றார் இயேசு. சிலுவையின் பாரத்தினால் இயேசுவிற்கு உடலில் ஏற்பட்ட வேதனையைப்போல அன்னை மரியாவிற்கு தன் மகன் படும் துயரங்களைக் கண்டு உள்ளத்தில் வேதனை ஏற்படுகின்றது. இன்றும் எத்தனையோ அன்னையர்கள் தங்களது பிள்ளைகள் படும் துயரத்தை நேரில் கண்டு வருந்துகின்றார்கள். நோயினாலும், போதை பழக்கத்திற்கு அடிமையாவதாலும், விபத்தினால் பிள்ளைகளை இழந்து வருந்தும் ஏராளமான தாய்மார்களை நாம் இன்றும் பார்க்கின்றோம். அன்னை மரியா, தன் பிள்ளைகளுக்காக வருந்துகின்ற, துன்புறுகின்ற அன்னையர்களின் அடையாளமாக இருக்கின்றார். அன்னையிடம் உலகில் உள்ள பெண்களுக்காகவும் அன்னையருக்காகவும் சிறப்பாக செபிக்க அருள் வேண்டுவோம். எல்லாப் பெண்களும், அன்னையர்களும் இறைவனில் வாழ்வையும் நம்பிக்கையையும் பெற அருள்வேண்டுவோம். தங்கள் குழந்தைகளை இழந்த அனைத்து தாய்மார்களும் இயேசுவில் பாதுகாப்பான அடைக்கலம் காண செபிப்போம். வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்களை துணிவுடன் ஏற்கவும் அதை மகிழ்வுடன் அனுபவிக்கவும் தேவையான துணிவினை நாடி செபிப்போம். 
 செபம் 
ஆண்டவரே, வேதனையின் அருகில் துணிவுடன் நின்ற அன்னை மரியாவின் கைகளையும் வல்லமைமிக்க பார்வையையும் எங்களுக்குத் தாரும்; சோதனையின் தருணங்கள் எங்களது நம்பிக்கையை அசைக்காதிருக்கவும், ஒரு சாக்குப்போக்காக இல்லாமல், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அனுபவமாக இருக்கவும் அருள்தாரும். எங்களது வாழ்வில் ஏற்படும் துயரங்கள் வழியாக உம்மோடு நாங்கள் கொண்டுள்ள வாக்குறுதிகளைப் புதுப்பித்து வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். 

 5. சீரேன் ஊரானாகிய சீமோன் இயேசுவிற்கு உதவுகின்றார். 
 லூக்கா 23: 26 
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள். 

 தெரிந்தவருக்கு உதவி செய்யும்போது மனிதராகின்றோம். தெரியாதவர்களுக்கு உதவி செய்யும்போது கடவுளாகவே நாம் மாறுகின்றோம். இயேசுவைப் பற்றி எதுவும் அறிந்திடாத சீரேன் ஊர் சீமோன் இயேசுவிற்கு உதவி கடவுளின் சாயலாக திகழ்கின்றார். இயேசுவின் சிலுவைப் பாதையில் சீரேன் ஊரானாகிய சீமோன் இயேசுவிற்கு உதவியது போல, நமது வாழ்விலும் பல சீமோன்கள் உதவுகின்றார்கள். இதற்கு மேல் துயரச்சிலுவைகளை சுமக்க நம்மால் முடியாது என்று எண்ணும் நேரத்தில் இயேசு நமக்கு உறுதியூட்டி “உன்னால் முடியும் தொடர்ந்து நட” என்று கூறி நமது சிலுவைகளைத் தானே சுமக்க உதவுகின்றார். இயேசுவே எங்களது சிலுவைகளையும் பிறரது சிலுவைகளையும் சுமக்க நல் மனதினைத் தந்தருளும். எங்களது சிறிய மற்றும் பெரிய சிலுவைகளை நாங்கள் முழுமனதுடன் ஏற்று சுமக்க தேவையான அருள்வரங்களைத் தந்தருளும். தங்களது சிலுவைகளை சுமக்க இயலாமல் வருந்தும் அனைத்து இளம் உள்ளங்களுக்காகவும், சிலுவையைத் தனியாகச் சுமக்க முடியாத அனைத்து ஏழைக் குழந்தைகளுக்காகவும் செபிப்போம். நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் மறைக்கும் அளவிற்கு துன்பத்தை அனுபவித்து மருத்துவமனைகளில் வாழும் அனைவருக்காகவும் செபிப்போம்

செபம் 
ஆண்டவரே, சிரேன் ஊரானாகிய சீமோனின் கண்களையும் இருதயத்தையும் திறந்து, சிலுவையைப் பகிர்ந்துகொள்வதன் வழியாக நம்பிக்கையின் அருளை அவருக்குக் கொடுத்தீர். உமது இந்த அழைப்பு எங்கள் வாழ்வின் திட்டங்களுக்கும் எங்கள் அனுதாபங்களுக்கும் முரணாக இருந்தாலும், துன்புறும் எங்கள் அண்டை வீட்டாருக்கு உதவ எங்களுக்குக் கற்றுத்தாரும். எங்களது தேவைகளில் நீர் எங்களை ஆதரித்து அரவணைக்க வருவீர் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். 

 6. வெரோணிக்கா இயேசுவின் முகத்தைத் துடைக்கின்றார் 

 திருப்பாடல் 27: 8, 9 
புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்; ஆண்டவரே,உமது முகத்தையே நாடுவேன். உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; 

 தவறைத் தட்டிக் கேட்டல், பிரச்சனைகள் சமாளிக்கும் திறன், நல்லது, கெட்டது எடுத்துரைத்தல், நேர்மையான வாழ்வு, தூய்மையான மனம் போன்றவை உடலிற்குத் துணிவு. சோம்பேறித்தன மற்றவர்கள் துணிவாளர்கள். தீமைகளைப் படைதிரட்டி எதிர்ப்பவன், வாழ்வில் தடம்பதிப்பவன் வல்லமையாளன், துணிவாளன். துணிவானவராக வரலாற்றில் இடம்பெறுகின்றார் வெரோணிக்கா. எருசலேம் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சிலுவையை சுமந்து செல்லும் இயேசுவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் எதுவும் செய்ய இயலாமல் வருந்திக் கண்ணீர் சிந்திக்கொண்டும் இருந்த நேரத்தில் துணிவு நிறைந்த பெண்ணாக வருகின்றார் வெரோணிக்கா. படைவீரர்கள் காவலர்கள் யூதத்த்தலைவர்கள், மறைநூல் அறிஞர்கள் என பலர் இருந்தும் அனைவரையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் துணிந்து முன்னேறுகின்றார் வெரோணிக்கா. அவரது துணிவிற்கு கிடைத்த பரிசு இயேசுவின் திருமுகம். இயேசு தனது முகத்தில் துயரத்தின் அடையாளத்தை விட்டுச்செல்கின்றார். ஆண்டவரது முகம் புலப்படும் ஓர் அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரை நாம் எல்லா நேரங்களிலும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவதற்காக இயேசு தனது காயம்பட்ட இரத்தம் வடிந்த முகத்தின் உருவத்தை வெரோணிக்காவின் கைகளில் உள்ள துணியில் பதித்து விட்டுச் செல்கின்றார். நாம் மிகவும் சோர்வாக இருக்கும்போது இரக்கம் நிறைந்த இறைவனின் திருமுகத்தினை அடையாளம் காண முடியாதவர்களாக இருக்கின்றோம். வாழ்க்கையின் துயரம் நிறைந்த நேரங்களில் ஆறுதல் தேடுபவர்களாக இருக்கும் நாம், இறைவனின் முகத்தை தேட மறக்கின்றோம் அதற்காக மனம் வருந்துவோம். இறைவனின் முகத்தை எல்லா நேரத்திலும் சூழலிலும் தேடக்கூடியவர்களாக இருக்க அருள்வேண்டுவோம். 
 செபம் 
ஆண்டவரே, மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட உமது அன்பின் மகத்துவத்தை நாங்கள் ரசித்து ருசிக்க உதவியருளும். உம்மீது உள்ள அன்பை விருப்பத்தை எங்களுக்குள் அதிகப்படுத்தும். எங்களுடன் வாழ்பவர்களில் உமது திருமுகத்தை அடையாளம் கண்டு வாழவும், எங்கள் வாழ்க்கைக்கு ஒளி தரும் நம்பிக்கையை அதிகரித்து வாழவும் தேவையான அருள்வரங்களைத் தந்தருளும். என்றும் எப்போதும் பிறரில் உம்மையும் உம் முகத்தையும் காண்பவர்களாக வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென்.

 7. இயேசு இரண்டாம் முறை கீழே விழுகின்றார். 
 1 பேதுரு 2: 24 
சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.

 வீழ்ச்சியைக் கண்டு அஞ்சிவிட்டால் மண்ணில் விழும் எந்த விதையும் முளைக்காது. முயற்சியைக் கைவிடாமல் நாம் வாழ்ந்தால் வாழ்க்கை ஒருநாள் நமக்கு கைக்கொடுக்கும். விழுவது மனித இயல்பு. விழுந்தே கிடப்பது மனித பலவீனம். இயேசு முதல் முறை கீழே விழுந்தார். மீண்டும் எழுந்தார். இப்போது இரண்டாம் முறை விழுகின்றார். மீண்டும் எழுவார். முயற்சியைக் கைவிடாத மேன்மையானவர் இயேசு. இயேசு சிலுவையின் பாரத்தால் கீழே விழுகின்றார். சிலுவையின் பாரத்திற்குக் காரணம் நம்முடைய பாவங்கள். அந்தப் பாவத்தின் பாரங்களாலே அவர் தடுமாறி தரையில் விழுகின்றார். சொல்லப்போனால் அவருடைய கால்களை நாம் தாம் நம்முடைய பாவங்களால் இடறிவிழச் செய்கின்றோம். இயேசு மீண்டும் எழுந்து தனது சிலுவையைத் தூக்கிக்கொண்டு கல்வாரியை நோக்கி பயணிப்பதே நம்முடைய பாவங்களுக்கான மருந்து. அதனை நன்கு அறிந்த இயேசு தனது சிலுவையைத் தூக்கிக்கொண்டு முன்னேறுகின்றார். அவரது இத்தகைய செயல் நம்மீது கொண்ட அவர் கொண்டுள்ள அன்பினை ஆழப்படுத்துகின்றது அதிகப்படுத்துகின்றது. பாவங்களால் காயமடைந்த நமது உள்ளத்தை குணமாக்குகின்றது. எங்களது வாழ்வில் நாங்கள் சுமப்பதற்கு மிக வருந்தும் இக்கட்டான நேரங்களில், இதற்கு மேல் எங்களால் முன்னேறிச்செல்ல முடியாது என்று வருந்தி சோர்ந்து கீழே விழும் நேரங்களில் எல்லாம் உமது அன்பின் ஆற்றல் கொண்டு நாங்கள் எங்கள் வாழ்வில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியும் என்ற பலத்தினை எங்களுக்குத் தந்தருளும். உமது தாழ்ச்சியும் சாந்தமும் கொண்ட திரு இதயத்தின் ஆற்றலை எமக்குத் தந்தருளும். இதனால் நாங்கள் உமது எல்லையற்ற அன்பினை உணர்ந்தவர்களாய் அதனைப் பிறருக்கு எடுத்துரைக்கக்கூடியவர்களாக இருக்க தேவையான ஆற்றலைத் தந்தருளும். 
 செபம் 
ஆண்டவரே, சிலுவையின் பாரத்தால் தரையில் விழுந்த உமது வீழ்ச்சிகள் எங்களுக்கு வாழ்க்கையின் நம்பிக்கையின் ஊற்றாகவும், உமது காயங்கள் எங்களை நாங்கள் குழந்தைகளாகக் கண்டறியும் பாதுகாப்பான இடமாகவும் இருக்க தேவையான அருள்வரங்களைத் தந்தருளும். எத்தனை முறை தோல்வியால் கீழே விழுந்தாலும் நாம் மீண்டும் மீண்டும் எழுந்து உத்வேகத்துடன் வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். 

 8. எருசலேம் பெண்களைச் சந்தித்த இயேசு 

லூக்கா 23: 27-28 
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். 

 ஆறுதல் சொல்லத்தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு. தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதில் கூட சுகம் உண்டு. இங்கு ஆறுதல் தேவைப்படுபவர் இயேசு. தூக்கி நிறுத்த தோள் தேவைப்படும் நிலையில் இருப்பவர் இயேசு. ஆனால் அதற்கு மாறாக நடக்கின்றது இங்கு. இயேசு ஆறுதல் கொடுக்கின்றார். துன்பத்தில் துவண்டு போயிருந்தவர்களுக்கு வார்த்தைகளால் தோள் கொடுக்கின்றார். இதுவரை இயேசுவோடு இருந்து அவரிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்ற மக்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அவரது போதனைகளைப் பற்றி எடுத்துரைத்த பெண்கள் இன்று எதுவும் செய்ய இயலாது கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர். உடல் வலியாலும் மனவலியாலும் துன்புற்று தள்ளாடி கல்வாரி மலையை நோக்கிச் செல்லும் இயேசுவிற்கு ஆறுதல் கூற ஒருவரும் இல்லை. ஆனால் ஒரு நல்ல ஆயனாக தனது மந்தையைச் சார்ந்த மக்களின் துயர் துடைக்க எண்ணும் ஆயனாக செயல்படுகின்றார் இயேசு. அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கின்றார். சிலுவைப்பாதையின் எட்டாம் நிலையாகிய இந்த நிலை இயேசுவின் தியாகத்தை நமக்கு எடுத்துரைக்கின்றது. அவர் நம்மீது கொண்ட அன்பு எவ்வளவு உயர்ந்தது உன்னதமானது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அவரது அன்பின் வல்லமையைக் கண்டவர்களாக மனம்மாறி அவரிடம் திரும்ப அழைப்புவிடுக்கின்றது. இந்த உலகில் வாழும் மக்கள் உடன் பணிபுரிபவர்கள் ஆகிய அனைவரையும் விட நாங்களே உயர்ந்தவர்கள் என்று நாங்கள் கருதும் நேரங்களில் எல்லாம் நாங்கள் அல்ல இறைவனின் அன்பே இவ்வுலகில் உயர்ந்தது என்பதை எடுத்துரைப்பவர்களாக இருக்க அருள் வேண்டுவோம். நமது மனநிலையை தனிப்பட்ட விருப்பங்களை நாங்கள் மாற்றிக்கொள்ள நினைக்கும்போதும் நம்மோடு உடனிருந்து, மனம்மாற்றம் அடைய அவரின் உதவியை நாடுவோம். நமது வாழ்வின் இலக்குகளை அடைய எளிய மக்கள் மீது வாழ்வின் பாதைகளை அமைக்கும் நிலையிலிருந்து காத்தருள அருள் வேண்டுவோம். நமது தீமையான எண்ணங்களிலிருந்து நாம் விடுபட்டு இறைவனுக்காகவும் அவரது பணிக்காகவும் வாழ்பவர்களாக இருக்க நம் மனங்களை அவர் மாற்றியருள செபிப்போம். 

 செபம் 
கடவுளாகிய இயேசுவே, எங்கள் உள்ளங்களை மாற்றி, எங்களுக்குப் புதிய வாழ்க்கையைத் தந்தருளும். உலர்ந்த மரத்தைப் போல ஒரே இடத்தில் இருக்காமல் செழித்து வளரும் மரமாக நாங்கள் இருக்க உமது அருளினை நாடுகின்றோம். உண்மையான திராட்சைக் கொடியாகிய உம்மில் எங்களை உயிருள்ள கிளைகளாக நாங்கள் மாறி, நிலையான வாழ்விற்கான கனிகளைக் கொடுப்பவர்களாக இருக்க தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். 

 9. இயேசு மூன்றாம் முறை கீழே விழுகின்றார் 

லூக்கா 22: 28–30
நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே, என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள். 

விழுவதும், எழுவதும் எனக்கு புதிதல்ல... விழுந்தாலும் எழுவேன். உதயமாகும் சூரியனை போல... நான் வீழ்ந்து போனால் என்னை தூக்கி விட யாரும் வேண்டாம்... ஏனெனில் என்னில் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் தன்னம்பிக்கை... இத்தகைய தன்னம்பிக்கையின் நாயகனாக வலம் வருபவர் இயேசு. மீண்டும் மீண்டும் விழுந்து எழுகின்றார். மரத்திலிருந்து காய்த்து கனிந்து தரையில் விழும் பழமானது மண்ணோடு மக்கி மீண்டும் புதிய உயிராக எழுவது போல இயேசு மீண்டும் எழுகின்றார். பாரச்சிலுவையின் கனத்தினால் விழுந்தவர் நம்மீது கொண்ட அன்பினால் மீண்டும் எழுகின்றார். அவரது எழுச்சி பாவத்தினாலும் பலவீனத்தினாலும் விழுந்து கிடக்கும் நாம் மீண்டும் எழுவதற்கான அழைப்பு. நாம் மட்டுமல்லாது நம்முடன் வாழ்பவர்களும் பலவீனத்திலிருந்து எழுந்து நடக்க உதவும் செயல் இயேசுவின் செயல். எத்தனை முறை விழுந்தாலும் விடாமுயற்சியுடன் மீண்டும் எழுந்து நடக்கும் மனம் கொண்டவராக இருப்பவர் இயேசு. அத்தகைய இயேசுவிடம் விடாமுயற்சியுடன் தொடர்ந்து நமது பணிகளை ஆற்ற அருள் வேண்டுவோம். வாழ்க்கையை வெறுத்து வாழும்போதும், நம்மால் எதுவும் செய்ய இயலாது என்ற நிலையை அடையும்போதும், நாம் வாழ்கின்ற வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்று எண்ணும்போதும் இறைவனின் விடாமுயற்சியை நமதாக்க அருள்வேண்டுவோம். செபம் ஆண்டவரே, எங்களது வாழ்வின் பாதைகளில் நாங்கள் வல்லமையுடன் நடக்க உமது தூய ஆவியின் ஆற்றலினை எமக்குத் தந்தருளும். வாழ்வில் நாங்கள் சந்திக்கும் வீழ்ச்சிகளில் மன உறுதியுடன் வாழ ஆற்றலைத் தாரும். எங்களது வாழ்வின் எல்லா வேளையிலும் உம்மையே சார்ந்து வாழவும், உம்மால் மட்டுமே எங்களுக்குத் தரக்கூடிய அன்பின் பரிசை வரவேற்கவும் எங்களுக்குக் கற்றுத்தாரும். நாளும் பொழுதும் உமது அருளையும் விடாமுயற்சியுடன் வாழும் திறனையும் நாங்கள் பெற்றவர்களாக வாழ தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். 


  10. இயேசுவின் ஆடைகளைக் களைகின்றார்கள்

யோவான் 19: 23-24 
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்” என்றார்கள். 

 ஆடைக்கு மொழி உண்டு காந்தியின் ஆடை பேசிய மொழி எளிமை, நேருவின் ஆடை பேசிய மொழியோ கம்பீரம், அன்னை தெரசாவின் ஆடை மொழிந்ததோ அன்பு!... ஆம் ஆடை மாண்பின் அடையாளம். அன்பின் மொழி. இயேசுவின் ஆடை விளிம்பினைத் தொட்டு நலமடைந்தவர்கள் எத்தனையோ பேர். இன்று அந்த ஆடைகள் களையப்பட்டு சீட்டுப்போட்டு பங்கிடப்படுகின்றது. ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு நன்மைகள் பல செய்தவர். ஆடையின்றி பேய்பிடித்து இருந்தவர்கள், முடக்குவாதமுற்றவர்கள், இறந்தவர்கள், கண்பார்வையற்றவர்கள் என அனைவரையும் நலன்களால் உடுத்தியவர் இன்று சிலுவையில் ஆடையற்ற மனிதராக நிர்வாணமாக தொங்கவிடப்படுகின்றார். உலக மக்கள் அனைவருக்கும் மாண்பு என்னும் ஆடை கொடுத்தவர் இன்று ஆடையற்ற மனிதராக மாண்பு பறிக்கப்பட்ட மனிதராக இருக்கின்றார். இந்நாள்களில் ஆண்டவரது சிலுவையின் கீழ் இருக்கும் நாம், இவ்வுலக சிலுவைகளான பசி, வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்படும் மக்களுக்காக வேண்டுவோம். சிலுவையில் அறையப்பட்ட பலரை எதிர்கொண்டு, துன்மார்க்கம் மற்றும் உணர்வின்மை என்ற நோயிலிருந்து மனிதகுலத்தை காக்க அருள்வேண்டுவோம். குறிப்பாக இத்தகைய சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இளைஞர்களைக் குணப்படுத்த இறைவனின் அருள் வேண்டுவோம். தீமையைப் பொருட்படுத்தாமல் அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதன் வழியாக நம்முடைய இதயங்கள் கடினமடைவதை ஒருபோதும் அனுமதிக்காதிருப்போம். எங்களது சுயநலம் என்னும் ஆடைகளை நாங்கள் களைய முன்வரும்போது இயேசுவே உமது அன்பினால் எம்மை உடுத்தும். உமது அன்பு ஒன்றே எங்களது வாழ்வில் நாங்கள் உடுத்தி மகிழும் உண்மையான ஆடை என்பதை எமக்கு உணர்த்தியருளும். உலகில் வாழும் மக்களின் மாண்பினை நாங்கள் முழுமையாக ஏற்று அவரவருக்கு உரிய மாண்பின் ஆடையை வழங்கக்கூடியவர்களாக இருக்கவும், மாண்போடு நாங்கள் வாழவும் உமது அருளினை தந்தருளும். 
 செபம் 
ஆண்டவரே, சுயநலம் மற்றும் அலட்சியத்தின் சங்கிலிகளிலிருந்து எங்களை விடுவித்து, அடிப்படையானவை எவை என கண்டுகொண்டு நாங்கள் வாழ துணிவினை எங்களுக்குத் தந்தருளும்,உம்மை நாங்கள் எங்களது உள்ளத்திலும் இல்லத்திலும் வரவேற்று வாழ்வது போல எங்களுடன் வாழும் மனிதர்களையும் முழுமனதுடன் வரவேற்று வாழ அருள்தாரும். நம்ப முடியாதவற்றை நம்பச்செய்பவர் நீர் ஒருவரே, கன்ணால் காண முடியாதவற்றைக் காணச்செய்பவர் நீர் ஒருவரே என்பதை நாங்கள் நபுகின்றோம். சாத்தியமற்றாதையும் சாத்தியமமுள்ளதாக மாற்றசெய்பவர் நீரே என்பதை நாங்கள் உணர்ந்து வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென்.


 11. இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார் 

லூக்கா 23: 33 
மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். 

மெசியா தாவீதின் மகன், யூதர்களின் அரசன் என்று மக்களால் வாயாரப் புகழப்பட்டவர் இன்று யாருமற்ற மனிதராக சிலுவையில் கள்வர்கள் மத்தியில் அறையப்படுகின்றார். உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று நான் சொல்கின்றேன் என்று கூறும் மனிதர்கள் மத்தியில் கள்வர்களோடு கள்வராக இயேசுவை சிலுவையில் அறைந்து அவருக்கு இழிவை ஏற்படுத்துகின்றனர். சிலுவையில் அறைந்த பின்னும் தன்னோடு இருந்த கள்வரையும் மன்னிக்கின்றார் இயேசு. தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களை மட்டுமன்று தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கின்றார் இயேசு. மன்னிப்பு என்னும் அருமருந்தை அனைவருக்கும் நல்ல மனம் கொண்ட மருத்துவராக இருக்கின்றார் இயேசு. நாம் செய்த குற்றங்களுக்கு தண்டிக்கப்படும்போது நமக்கு தீர்ப்பு வழங்கியவர்களை மன்னிக்க தடுமாறும் மனிதர்கள் நடுவில் இயேசு, செய்யாத தவறுக்கு தனக்கு சிலுவை மரணத்தை வழங்கியவர்களை மன்னிக்கின்றார். வெறுப்பு கொள்ளாமல் மன்னிப்பு என்னும் அருமருந்தை நம்முடன் வாழ்பவர்களுக்கு வழங்குவதன் வழியாக இறைவனின் வாழ்வை எடுத்துரைக்கக்கூடியவர்களாக இருக்க அருள் வேண்டுவோம். உறவுகளில் ஏற்படும் போராட்டத்தை அன்பினாலும், காயமடைந்த இதயத்தின் துன்பத்தை ஆறுதலின் வழியாகவும் வெல்ல இறைஉதவியை நாடுவோம். ஒருவர் மற்றவரை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். நம்மைக் காயப்படுத்திய நண்பர்களுக்காகவும், போர்களுக்கும் சுயநலத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, அமைதிக்கான வழியைப்பெறவும் செபிப்போம். நம் குடும்பங்களில் ஏற்படும் சண்டை, சச்சரவு, அமைதியற்ற நிலை மகிழ்ச்சியற்ற சூழ்நிலைகளுக்குக் காரணம் மாண்புடன் நடத்தப்படாமை மன்னிப்பு கேட்காமை, கொடுக்காமை என்பதை உணர்ந்து வாழ முற்படுவோம். 
 
செபம் 
ஆண்டவரே உமது நட்பின் பிரசன்னத்தை நாங்கள் உணர எங்களுக்கு உதவியருளும். சோதனையின் இருண்ட இரவில் ஒருவர் மற்றவரை மன்னிப்பதிலும், நிலையான வாழ்வைக் கொடுப்பதிலும், நம்பிக்கையில் நாங்கள் நிலைத்திருக்கவும் உமது அருளினை நாடுகின்றோம். எங்களுக்கு அருள்வழங்க நீர் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை உணர்ந்தவர்களாக் உமது மன்னிப்பு என்னும் அருள்கொடையை நாங்கள் பெற்று சிறப்புடன் வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென்.

 12. இயேசு சிலுவையில் உயிர்விடுகின்றார் 

லூக்கா 23: 44-46 
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். 

விரும்பி தொடர்ந்தாலும் விலகி வெறுத்தாலும் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு எல்லோருக்கும் ஒன்று தான் அது இறப்பு. இறப்பு என்பது ஒரு கருப்பு ஆடு. சில சமயங்களில் அது நமக்குப் பிடித்தமான ரோஜாக்களையும் தின்ருவிடுகின்றது. மனிதனின் மிகப்பெரிய பயம் இறப்பு. இவ்வுலகில் மனித உயிராகக் கடவுளால் படைக்கப்பட்ட நாம், இறுதியில் படைத்தவரிடமே திரும்பி வருகின்றோம். இன்றைய உலகம் வன்முறை, போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அன்புக்குரியவர்களை இழந்து வருந்துகின்றது. இறப்பைக் கண்டு அஞ்சாதவர்கள் இவ்வுலகில் யாருமில்லை. இறப்பு நிலைவாழ்விற்கான வாசல் என்பதை நாம் உணரும்போது இறப்பை புதிய வாழ்விற்கான பிறப்பாகக் கருதுவோம். எனவே இறப்பைக் கண்டு அஞ்சாமல் தந்தையின் கைகளில் தனது ஆவியை ஒப்படைத்த இயேசு போல நமது வாழ்வையும் இறைக்கரங்களில் ஒப்படைத்து வாழ்வோம். உற்றார் உறவினர் இன்றி தனிமையில் இறக்கும் அனைவருக்காகவும் செபிப்போம். இயேசுவின் சிலுவையைப் பார்க்கும் அவர்கள் கைவிடப்பட்டவர்களாகத் தங்களை உணராது இயேசுவின் அருகிருப்பை பெற செபிப்போம். போரினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக குழந்தைகள், விரைவில் கடவுளின் முகத்தின் ஒளியைக் காண செபிப்போம். ஏனென்றால், இயேசுவின் விசுவாசத்தைப் பெற்று, நம் முழு வாழ்க்கையையும், மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் கடவுளிடம் ஒப்படைக்கக்கூடியவர்களாக அவர்கள் வாழ செபிப்போம். 

 செபம் 
ஆண்டவராகிய இயேசுவே, உமது எல்லையற்ற இந்த அன்புக்கு நாம் தகுதியற்றவர்கள் என்பதை உணார்கின்றோம். நன்மைகளைக் காணும் ஒரு பார்வையையும் தூய இதயத்தையும் எங்களுக்குத் தந்தருளும். அன்றாட வாழ்வில் எங்களது சிலுவையை சுமந்துகொண்டு நாங்கள் செல்ல துணிவுடன் வாழ தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். விண்ணுலகில் இருக்கின்ற.... அருள்நிறைந்த மரியே..... தந்தைக்கும் மகனுக்கும்... 

 13. அன்னை மரியாவின் மடியில் இறந்த இயேசுவின் உடல் 

லூக்கா 23: 50–53 
 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. 

 தனித்து நின்றாலும் துணிந்து நில், பலருக்கும் தாழ்ந்து போகும்போது இந்த உலகம் நம்மைக் கால்களில் போட்டு மிதிக்கத் துவங்கி விடுகின்றது. தன்னம்பிக்கையுடன் தனித்து நின்று நினைத்த செயலில் வெற்றி கண்டவர் அரிமத்தியா ஊர் யோசேப்பு. தலைமைச்சங்க உறுப்பினராக இருந்தாலும் தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத நேர்மையாளராக இருக்கின்றார் அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு. தனது கருத்தில் நிலைத்து நிற்கின்றார். பிறருடைய கருத்திற்கு ஏற்றவாறு தனது கருத்தையும் எண்ணத்தையும் அவர் மாற்றவில்லை. மாறாக, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கின்றார் யோசேப்பு. இறையரசிற்காகக் காத்திருந்த அவர் இறையரசு இயேசுவிலேயே நிறைவு பெறும் என்று நம்புகின்றார். ஒருவர் செய்ததையே மற்றவர்களும் அப்படியே நகல் எடுத்தாற் போல செய்யும் மனிதர்கள் மத்தியில் யோசேப்பு நீதியுடன் செயல்படுகின்றார். எந்த தவறும் செய்யாத இயேசுவிற்கு சிலுவை மரணம் அளித்து தங்களது வன்மத்தை தீர்த்துக்கொண்டவர்கள் அவரது உடலையாவது நன்முறையில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டுகின்றார். இறைமகனான அவருக்குரிய மாண்பினை அடையாளப்படுத்தும் விதமாக அவரது அடக்கச் சடங்கை நிறைவேற்றுகின்றார். இதன் வழியாக கணவனையும் ஒரே மகனையும் இழந்த அன்னை மரியாவிற்கு ஆறுதல் அளிக்கின்றார். எல்லாவற்றையும் இழந்து ஒரே நம்பிக்கையான இயேசுவையும் இழந்து தனிமைத்துயரில் வருந்தும் அன்னை மரியாவிற்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் நபராக இருக்கின்றார் யோசேப்பு. இயேசுவினது போதனையால் உண்மையாக மனம் மாறியவர்களில் தானும் ஒருவர் என்பதை தனது செயல்களால் எடுத்துரைக்கின்றார் யோசேப்பு. மூடப்பட்ட கல்லறைகள் போன்று நமது உள்ளமும் பல நேரங்களில் மூடியுள்ளது. நமது அந்த இதயங்களை இறைவன் திறக்க அருள்வேண்டுவோம். நமது வாழ்வில் இனி வெளிச்சம் என்பதே இல்லை. இருள்மட்டுமே நம்மைச் சூழ்ந்துள்ளது என்று வருந்தும் நேரங்களில் ஒளியாம் இறைமகன் இயேசு நம் உள்ளத்தில் சுடர்விட அருள்வேண்டுவோம். நமது வாழ்வில் அரிமத்தியா யோசேப்புக்களாக வலம் வருபவர்களைக் கண்டுகொள்ளவும் இயேசுவிற்கு உதவிய அவரைப்போல நாமும் பிறருக்கு உதவவும் அருள்வேண்டுவோம்.
 செபம் 
இயேசுவே, உம்முடைய தூய ஆவியை எங்களுக்குத் தாரும், அப்போது நாங்கள் உம்மை எங்கள் வாழ்வில் வரவேற்று, அதை எங்கள் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு கொடையாக அதை மாற்றி வாழ அருள்தாரும். யோசேப்புக்களாக நாங்கள் பிறது துயர் துடைப்பவர்களாக வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென். 

 14. இயேசு அடக்கம் செய்யப்படுகின்றார் 

லூக்கா 23: 53-56 
அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம். கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். 

 சிலுவையின் பாதையில், மரணத்திற்கு அப்பாலும் இயேசுவைப் பின்பற்றியவர்களில் மிகவும் துணிவுள்ளவர்கள் பெண்கள் மட்டுமே. இயேசுவின் உடல் கல்லறையில் எவ்வாறு வைக்கப்பட வேண்டும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர்கள் பெண்கள். யூத முறைப்படி நறுமணப்பொருள்களுடன் அவரை அடக்கம் செய்வதில் கண்ணும் கருத்துமாக அவர்கள் செயல்பட்டார்கள். கொடுமையான முறையில் அவர் மரணமடைந்திருந்தாலும் அவரது நிலைவாழ்விற்கான மறுபிறப்பு நல்ல முறையில் அமைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். நமது விடாமுயற்சி எத்தகைய நிலையில் இருக்கின்றது என்பது பற்றி சிந்திப்போம். கடவுள் மீது நம்பிக்கையையும் வாழ்க்கையில் நம்பிக்கையையும் இழந்த ஒவ்வொருவரும் இயேசுவின் உயிர்ப்பின் ஒளியால் ஒளி வீச அவர்களுக்காக செபிப்போம். இந்த உலகில் கிறிஸ்துவின் நறுமணமாக நாம் இருக்கவும், நிலையான மன் உறுதியுடன் நல்ல உறுதிப்பாட்டின் பரிசைப் பெறத் தயாராகும் அனைத்து இளைஞர்களுக்காகவும் செபிப்போம். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் தோல்விகளில் அவர்களுக்கு ஆறுதலும் உற்சாகமும் ஊட்டி, அவர்களை விடாமுயற்சியுடன் வாழ வழிகாட்டவும் எல்லாச்சூழலிலும் அவர்களைக் கைவிடாமல் இருக்கவும் அருள்வேண்டுவோம். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வாழ்விற்கு, எப்போதும் புதிய வெளிச்சங்களாக இருக்க அருள்வேண்டுவோம்.

 செபம் 
ஆண்டவராகிய இயேசுவே, உமது நம்பிக்கையின் பரிசினால், எங்களை நறுமணப் பொருட்களாகவும், நறுமண எண்ணெய்களாகவும் உருவாக்கியருளும். நாங்கள் உமது உயிர்ப்பிற்கும் நிலைவாழ்விற்கும் உமது உடலைத் தயாரித்த நறுமணப்பொருள்கள் போன்று இருக்கவும், இவ்வுலகில் எங்களுடன் வாழ்பவர்களுடன் அன்பு மற்றும் ஒற்றுமையுடன் நெருக்கமாக இருக்கவும் செய்தருளும். இதனால் நாங்கள் உமது உயிர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் ஒளிரும் தீபங்களாக இருந்து வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் ஆமென்.

 இறுதியுரை 
நமது இந்த சிலுவைப்பாதை முழுவதும் இயேசுவோடு உடனிருந்து அவரது கல்வாரிப்பாதை வரை அவரோடு நாமும் உடன்சென்றோம். அவர் நம்மீது கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பின் நிலைகளை உணர்ந்து கொண்ட நாம் அந்த அன்பினை பெற்ற அவரது அன்புப்பிள்ளைகளாக நமது சொல்லாலும் செயலாலும் வாழ அழைக்கப்படுகின்றோம். எனவே கடவுளின் அன்பினை நாம் சுவைக்கவும் பிறரும் சுவைக்க உதவவும் அருள்வேண்டியவர்களாய் இயேசு கற்றுக்கொடுத்த செபத்தை நாம் ஒருமித்து செபிப்போம். 

 விண்ணகத்தில் இருக்கின்ற .... 
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.. 
இறுதி ஆசீர்
அருள்சகோதரி. மெரினா
வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை
இத்தாலி

Thursday, 6 March 2025

தவக்கால அனுபவம் 1. திருடனாக இருந்தாலும் நல்லவன்

கார்னிவல் தவக்காலத்திற்கு முன்பாக மேற்கத்திய நாடுகளில் சிறப்பிக்கப்படும் ஒரு விழா. பலவிதமான வண்ண உடைகள் அணிந்தும், தங்களுக்குப் பிடித்த கதைமாந்தர்கள் போலவும் மக்கள் உடையணிந்து பவனியாக வருவர். ஆசிய கலாச்சாரமும் பண்பாடும் பழக்க வழக்கமும் நிறைந்த இந்திய மண்ணில், அதுவும் மூத்த மொழியான தமிழ் மொழி பேசும் தமிழகத்தில் இருந்து வந்த எனக்கு இந்த விழா மிகவும் வியப்பாகவே இருந்தது. இத்தாலிக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகினாலும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாளாக, புதிய அனுபவம் தரும் நாளாகவே இருக்கின்றது. மார்ச் 4 செவ்வாய்க்கிழமை மாலை எங்களது பங்கில் உள்ள மறைக்கல்வி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்னிவல் விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு உதவுவதற்காக சென்றிருந்தேன். அங்கு எனக்குக் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து எனது எழுத்துப்பணியினை இத்தவக்கால அனுபவமாக எடுத்துரைக்க எண்ணுகிறேன். முதலில் கார்னிவல் என்றால் என்ன என்று பார்ப்போம். கிறிஸ்தவர்கள் தவக்கால ஆரம்பிப்பதற்கு முன்பாக இத்தவக்காலத்தில் இறைச்சியை உண்ண மாட்டோம் என்பதை உறுதியாக எடுக்கும் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது. carne levare, என்னும் பொருள்படும் இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்டது. அதுவே மருவி carne vale, அதாவது farewell to meat" என்று சிறப்பிக்கப்பட்டது. இறைச்சியை உண்ணாமல் அதனை ஒறுத்தல் செய்வதற்காகக் கொண்டாடப்பட்ட இவ்விழாவின் முக்கியத்துவமும் அர்த்தமும் இன்று மாறிப்போய் விட்டது. மாலை 4 மணியளவில் சிறுவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வர ஆரம்பித்தனர். விளையாட்டுக்கள் பல இளையோரால் நடத்தப்பட்டன. பல சிறார் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர். தூய தமிழில் சொல்வதை விட்டு விட்டு சாதாரணமாக பேசலாம். அங்க இருந்த ஒரு சின்ன பையன் காவல் அதிகாரி மாதிரி வேடம் போட்டு இருந்தான். அவனுக்குப் பக்கத்துல அவனுடைய நண்பன் திருடன் போல வேடமிட்டிருந்தான். ரெண்டு பேரும் சொல்லி வச்சி பண்ணி இருக்காங்க இருந்தாலும் ரெண்டு பேருக்கும் எந்த கவலையும் இல்லை. திருடன் வேசம் போட்டோமே, நம்ம நண்பன் காவல் அதிகாரியா வேடம் போட்டு இருக்கானேன்னு எந்த வருத்தமும் இல்லை. அவன் போட்ட வேசத்துக்கு ஏத்த மாதிரி நடிச்சுட்டு இருந்தான். மத்தவங்களை மிரட்டுறது. துரத்துறதுன்னு செய்ய காவல் அதிகாரியான நண்பன் இவனை பிடிச்சு மக்களை ஆபத்துல இருந்து காப்பாத்துறது மாதிரி செஞ்சிட்டு இருந்தாங்க. இந்த வேசம் எதுக்காக போட்டேன்னு கேட்டதுக்கு நானும் என் நண்பனும் எப்பவுமே சேர்ந்து இருக்கணும். டாம் ஜெரி வேசம் போடலாம்னு நினைச்சோம். அது சரி வரலை அதனால தான் இது. விளையாடி களைச்சுபோன அவங்க ரெண்டு பேரும் சிற்றுண்டி சாப்பிடுற இடத்துக்கு வந்தாங்க. ஒரு நாணயத்துக்கு இரண்டு பொருள் கொடுக்கும் இடத்தில் தனக்கு ஒரு பொருள் மட்டும் போதும்னு சொன்னான். கொஞ்ச நேரத்துல காவல் அதிகாரியான தன்னோட நண்பன், ஒரு நாணயத்தைக் கொடுத்து ஒரு பொருள் வாங்க வந்தான். அவனிடம், இல்லை பணம் கொடுக்காத, என்னோட நாணயத்துல இருக்குற மீதத்துல அவனுக்கு பொருள் கொடுங்க. நான் உனக்கு பணம் கொடுக்கிறேன் கவலைப்படாதேன்னு சொல்லிட்டு போயிட்டான். சின்ன பசங்க எல்லாத்தையும் வாங்கணும்னு ஆசைப்படுற வயசுல, எந்த பிடிப்பும் இல்லாம வாழ்ந்ததோட மட்டும் இல்லாம அடுத்தவங்களுக்கு உதவி செய்யுற பையனாகவும் இருந்தான். திருடன் வேசம் போட்டு இருந்தாலும் எனக்கு அவன் நல்ல பையனா தோன்ற ஆரம்பிச்சான்.


இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...