கார்னிவல் தவக்காலத்திற்கு முன்பாக மேற்கத்திய நாடுகளில் சிறப்பிக்கப்படும் ஒரு விழா. பலவிதமான வண்ண உடைகள் அணிந்தும், தங்களுக்குப் பிடித்த கதைமாந்தர்கள் போலவும் மக்கள் உடையணிந்து பவனியாக வருவர். ஆசிய கலாச்சாரமும் பண்பாடும் பழக்க வழக்கமும் நிறைந்த இந்திய மண்ணில், அதுவும் மூத்த மொழியான தமிழ் மொழி பேசும் தமிழகத்தில் இருந்து வந்த எனக்கு இந்த விழா மிகவும் வியப்பாகவே இருந்தது. இத்தாலிக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகினாலும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாளாக, புதிய அனுபவம் தரும் நாளாகவே இருக்கின்றது. மார்ச் 4 செவ்வாய்க்கிழமை மாலை எங்களது பங்கில் உள்ள மறைக்கல்வி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்னிவல் விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு உதவுவதற்காக சென்றிருந்தேன். அங்கு எனக்குக் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து எனது எழுத்துப்பணியினை இத்தவக்கால அனுபவமாக எடுத்துரைக்க எண்ணுகிறேன். முதலில் கார்னிவல் என்றால் என்ன என்று பார்ப்போம். கிறிஸ்தவர்கள் தவக்கால ஆரம்பிப்பதற்கு முன்பாக இத்தவக்காலத்தில் இறைச்சியை உண்ண மாட்டோம் என்பதை உறுதியாக எடுக்கும் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது. carne levare, என்னும் பொருள்படும் இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்டது. அதுவே மருவி carne vale, அதாவது farewell to meat" என்று சிறப்பிக்கப்பட்டது. இறைச்சியை உண்ணாமல் அதனை ஒறுத்தல் செய்வதற்காகக் கொண்டாடப்பட்ட இவ்விழாவின் முக்கியத்துவமும் அர்த்தமும் இன்று மாறிப்போய் விட்டது. மாலை 4 மணியளவில் சிறுவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வர ஆரம்பித்தனர். விளையாட்டுக்கள் பல இளையோரால் நடத்தப்பட்டன. பல சிறார் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர். தூய தமிழில் சொல்வதை விட்டு விட்டு சாதாரணமாக பேசலாம்.
அங்க இருந்த ஒரு சின்ன பையன் காவல் அதிகாரி மாதிரி வேடம் போட்டு இருந்தான். அவனுக்குப் பக்கத்துல அவனுடைய நண்பன் திருடன் போல வேடமிட்டிருந்தான். ரெண்டு பேரும் சொல்லி வச்சி பண்ணி இருக்காங்க இருந்தாலும் ரெண்டு பேருக்கும் எந்த கவலையும் இல்லை. திருடன் வேசம் போட்டோமே, நம்ம நண்பன் காவல் அதிகாரியா வேடம் போட்டு இருக்கானேன்னு எந்த வருத்தமும் இல்லை. அவன் போட்ட வேசத்துக்கு ஏத்த மாதிரி நடிச்சுட்டு இருந்தான். மத்தவங்களை மிரட்டுறது. துரத்துறதுன்னு செய்ய காவல் அதிகாரியான நண்பன் இவனை பிடிச்சு மக்களை ஆபத்துல இருந்து காப்பாத்துறது மாதிரி செஞ்சிட்டு இருந்தாங்க. இந்த வேசம் எதுக்காக போட்டேன்னு கேட்டதுக்கு நானும் என் நண்பனும் எப்பவுமே சேர்ந்து இருக்கணும். டாம் ஜெரி வேசம் போடலாம்னு நினைச்சோம். அது சரி வரலை அதனால தான் இது. விளையாடி களைச்சுபோன அவங்க ரெண்டு பேரும் சிற்றுண்டி சாப்பிடுற இடத்துக்கு வந்தாங்க. ஒரு நாணயத்துக்கு இரண்டு பொருள் கொடுக்கும் இடத்தில் தனக்கு ஒரு பொருள் மட்டும் போதும்னு சொன்னான். கொஞ்ச நேரத்துல காவல் அதிகாரியான தன்னோட நண்பன், ஒரு நாணயத்தைக் கொடுத்து ஒரு பொருள் வாங்க வந்தான். அவனிடம், இல்லை பணம் கொடுக்காத, என்னோட நாணயத்துல இருக்குற மீதத்துல அவனுக்கு பொருள் கொடுங்க. நான் உனக்கு பணம் கொடுக்கிறேன் கவலைப்படாதேன்னு சொல்லிட்டு போயிட்டான். சின்ன பசங்க எல்லாத்தையும் வாங்கணும்னு ஆசைப்படுற வயசுல, எந்த பிடிப்பும் இல்லாம வாழ்ந்ததோட மட்டும் இல்லாம அடுத்தவங்களுக்கு உதவி செய்யுற பையனாகவும் இருந்தான். திருடன் வேசம் போட்டு இருந்தாலும் எனக்கு அவன் நல்ல பையனா தோன்ற ஆரம்பிச்சான்.