உனக்குள் உன்னைத் தேடு
கொலம்பஸ் ஒரு நெசவாளியின் மகன். சிறு வயது முதல் புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். தரை வழி பயணத்தை விட்டு கடல் வழி பயணம் மூலம் ஒரு புதிய கண்டத்தைக் கண்டறிய முயன்றார். தனது திட்டத்தை பல நாட்டு மன்னர்களிடமும் எடுத்துச் சென்று செயல்படுத்த உதவி கேட்டார். அவரது முயற்சிக்கு ஒத்துழைக்க ஒருவரும் முன் வரவில்லை. 10 வருட விடா முயற்சிக்குப் பின் ஸ்பெயின் நாட்டு இளவரசி 3 கப்பல்களும் பயணத்துக்குத் தேவையான உணவும் கொடுக்க முன் வந்தார். கப்பல்கள் மட்டும் போதுமா? கப்பல்களைச் செலுத்த கைதேர்ந்த மாலுமிகள் வேண்டுமே!!! உயிரைப் பணயம் வைத்து பயணம் செல்ல ஒருவருக்கும் மனமில்லை. இறுதியில் 39 மரண தண்டனைக் கைதிகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணினார்.
எதிர்பார்த்த மரணமா? இல்லை
எதிர்பாராத பயணமா? என்ற இரண்டில்
பயணத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த முயற்சி தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா என்ற கண்டத்தைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது.
நெசவாளி மகனின் கனவுத் தறி
நினைவுப் பட்டாக பாரினை அலங்கரித்தது.
கொலம்பஸ் போல் நீங்களும் புதிய அமெரிக்காவைக் கண்டுபிடியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக நம் ஒவ்வொருவருக்குள்ளும் புதியன படைக்க வேண்டும் என்ற ஒரு கொலம்பஸ் இருக்கிறார் அவரைக் கண்டுபிடியுங்கள் என்று தான் சொல்கிறேன். தனது எதிர்கால வாழ்வு மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணாதவர் எவருமிலர். நமது திறமை எதில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதில் உயர நமது முயற்சிகளைச் செலுத்துவோம்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய உயர்வு