Friday, 30 March 2018

உயிர்ப்பு பெருவிழா மறையுரைச்சிந்தனை

 உயிர்ப்பு பெருவிழா மறையுரைச்சிந்தனை
 சகோதரிமெரினா

நில் கவனி செல் - அன்பில்

ஏப்ரல் 1 ஏமாளிகள் தினம். இன்று நமதாண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம். காதலர் தினத்தன்று தொடங்கிய நமது தவக்காலப் பயணம், ஏமாளிகள் தினத்தன்று அதன் நிறைவை அடைந்து இருக்கின்றது. யார் ஏமாளிகள் ? அறிவு இல்லாதவர்களா? அனுபவம் இல்லாதவர்களா? இல்லவே இல்லை. முட்டாள், ஏமாளி என்ற பட்டம் கிடைப்பதற்கு அறிவு அனுபவம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே போதும் அப்பட்டங்கள் கிடைத்துவிடும். கிறிஸ்துவின் அன்பை அதிகமதிகமாக சுவைத்து மகிழ்ந்து , அதை பிறருக்கும் கொடுக்கும் நாமும் ஏமாளிகளாக முட்டாள்களாக பிறர் கண்களுக்குத் தென்படலாம். ஆனால் உண்மையில் நாம் கிறிஸ்துவின் அன்பர்கள். உயிர்த்த இயேசுவின் உன்னத சீடர்கள்.  உலக மக்களுக்கு வேண்டுமானால் இத்தினம் உலக முட்டாள்கள் தினமாக இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை அவர் உயிர்ப்பை நம்பும் நமக்கு உவகையின் நாள். உண்மை வெற்றியின் உன்னத நாள். நமக்கு யாராவது இன்று ஏமாளிகள் தின வாழ்த்து சொன்னால் அதை ஏற்றுக் கொள்வோம்.  ஏனெனில் உயிர்ப்பைக் கொண்டாடுவார்கள் என எண்ணி இருந்தோம் . ஆனால் நம்மை ஏமாற்றி  உலகப் போக்காக ஏமாளிகள் தினம் .கொண்டாடுகிறார்களே . உயிர்ப்பு அனுபவம் பெற்றவன் உயிர்ப்பு விழா கொண்டாடுகிறான். நாம் யார் ஏமாளிகளா? உயிர்ப்பு பெருவிழாக்காரர்களா?

இன்றைய நற்செய்தியின் வாசகங்களுக்கு வருவோம். மகதலா மரியாள் கல்லறை நோக்கி அதிகாலையில் பயணமாகிறார். கல்லறைக் கல் புரட்டப் பட்டிருக்கிறது. சீடர்களுக்கு அறிவிக்கிறார். அவர்களும் வந்தனர், பார்த்தனர், நம்பினர். கிறிஸ்துவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று நம் திருச்சபை இல்லை. கிறிஸ்தவமும் இல்லை. அவருடைய உயிர்ப்பில் தான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு ஆரம்பமாகிறது. விசுவாசத்தில் ந்ங்கூரமிடப்பட்டு திருச்சபை உருவாகி கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. உயிர்ப்பு தான் உண்மைக் கிறிஸ்தவர்களின் மையம் . அதை மையமாக வைத்து தான் நமது திருவழிபாட்டு காலங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. 
நமது கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பயணம் . சாலையில் பேருந்து அல்லது வாகனங்களில் பயணம் செய்யும்போது போக்குவரத்து சமிக்கை ஒளியைக் கவனித்திருப்போம். சாலை விதிகளில் ஒன்றான அவற்றைப் பின்பற்றி பயணிக்கும்போது,நம்முடைய பயணம் சிறப்பானதாக, மகிழ்வானதாக அமைகிறது. அதில் உள்ள சிவப்பு , பச்சை , மஞ்சள் வண்ணா நிறங்கள் குறிக்கும் நில், கவனி ,செல் என்பவை தான் இன்றைய உயிர்த்த இயேசு நமக்கு தரும் சமிக்கைகள் . நமது வாழ்க்கைப் பயணம் சிறப்பானதாக மகிழ்வானதாக அமைய  இயேசு தரும் உன்னத சமிக்கைகள் இவைகள். 
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அனைத்து நபர்களும் இந்த சமிக்கைகளுக்கு கட்டுப்பட்டு தங்கள் பயணத்தை இனிதாக மாற்றியிருக்கிறார்கள். பயணம் இனிதாக பாதை சரியாக இருந்தால் மட்டும் போதாது பயணிக்கும் நாம் பயண விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்கவும் வேண்டும். 
மகதலா மரியாள். 
     அதிகாலையில் கல்லறை நோக்கி ஆயத்தமாகிறார். 
கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டு நிற்கிறார். 
ஆண்டவரின் தூதரது செயலையும் குரலையும் கவனிக்கிறார்.
தனக்கு கொடுக்கப்பட்ட பணியைச்செய்யவிரைந்து செல்கிறார்.
உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் என்ற பெரும் பேற்றை பெற்று இன்று திருத்தூதர்களின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார். பிறப்பு தரித்திரமானாலும் இறப்பு சரித்திரமாகட்டும் என்ற கூற்றை மெய்ப்பித்தவர். 
பேதுரு: 
     கல்லறைக்குள் விரைந்து சென்று நிற்கிறார்.
இயேசுவின் உடலைச்சுற்றி இருந்த துணிகளைக் கவனிக்கிறார். 
பின் உயிர்த்த இயேசுவைக் காண விரைந்து கலிலேயா செல்கிறார்.
அன்புச்சீடரும் பிறசீடர்களும்;
       பேதுருவுக்கு முன்பாக வந்தாலும் தலைமைக்கும்  வயதிற்கும் மரியாதைக் கொடுத்து உள்ளே செல்லாமல் வெளியே நிற்கின்றனர். 
சூழ்நிலையைக் கவனிக்கின்றனர். 
நம்பிக்கையோடு இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாட , அவரைக் காண விரைகின்றனர். 
 நமது வாழ்க்கையிலும் இந்த சமிக்கைகளைக் கடைபிடித்தால் பல நல்ல பயன்களை நமக்குத் தரும் . எவ்வாறு இந்த மூன்று போக்குவரத்து சமிக்கைகளும் இல்லாத பயணம் சிறப்பான பயணமாக பாதுகாப்பான பயணமாக அமையாதோ அது போல இவை ( நில், கவனி, செல்) மூன்றும் கடைபிடிக்கப்படாத வாழ்க்கை மகிழ்வான பாதுகாப்பான வாழ்க்கையாக அமையாது. அன்பில் நிலைத்து நில், அன்பைக் கவனி, அன்போடு செல். அன்பு தான் வாழ்வின் அங்கம். அன்பினால்தான் இயேசு இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார். அன்பினால் தான் காயப்பட்டார். சிலுவை மரணம் வரை கொண்டு செல்லப்பட்டார். அதே அன்பினால் தான் உயிர்த்து எழுந்திருக்கிறார். அன்பு இல்லை என்றால் உயிர்ப்பு இல்லை. உயிர்ப்பு இல்லை என்றால் கிறிஸ்தவமே இல்லை. 
அன்பு தான் உயிர்த்த ஆண்டவரைக் கண்டு கொள்கிறது. 
அவரை அதிகமாக அன்பு செய்த மகதலாமரியாள்.
அவரால் அன்பு செய்யப்பட்ட அன்புச்சீடர். 
அன்பு செய்கிறாயா? என்று கேட்கப்பட்ட பேதுரு. 
ஆக ஆண்டவர் இயேசுவை அன்பு செய்கிறவர்கள் உயிர்ப்பு அனுபவம் பெறுவது உறுதி. நாம் ஆண்டவர் இயேசுவை அன்பு செய்பவர்களா? இல்லை அவரால் அன்பு செய்யப்பட்டவர்களா? இல்லை என்னை  அன்பு செய்கிறாயா என கேட்கப்படுபவர்களா? சிந்திப்போம். அன்பைப் பெற்றவர்களுக்கும் கொடுப்பவர்களுக்குமே உயிர்ப்பு விழா பொருத்தமானதாக இருக்கும்.  மகதலா மரியாள் போல ஆண்டவரைத் தேடும் நல்ல உள்ளம் வேண்டுவோம். ஆண்டவரைக் காணவில்லை என்றதும் பதறித் துடித்து கண்டடைய ஓடிய , பேதுரு போல ஆண்டவரோடு வாழ்பவர்களாக மாறுவோம். ஆண்டவரின் உடல் சுற்றப் பட்டிருந்த துணியைக் கொண்டே அவர் உயிர்த்ததை நம்பிய அன்புச்சீடர் போல நம்பிக்கை உடையவர்களாவோம். அன்பில் நிலைத்து நிற்போம் அன்பு எதில் உள்ளது எனக் கூர்ந்து கவனிப்போம். அன்போடு உடன் பயணிப்போம் . உயிர்த்த ஆண்டவரின்  அருளும் சமாதானமும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் என்றும் இருப்பதாக ஆமென்.  

Wednesday, 28 March 2018

உயிர்ப்பு ஞாயிறு காலை வழிபாடு

                    உயிர்ப்பு ஞாயிறு காலை வழிபாடு                            சகோதரி மெரினா.  அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். அவரோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம். தந்தை மகன்.......அடி முடி தேடினாலும் அகராதியைப் புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச்சித்திரம் அன்னை மரியாள். தன் மகனோடு துன்பங்கள் பட்டு அவரோடு உயிர்த்து  உயிர்ப்பின் மகிழ்வையும் சுவைத்தவர். இறுதிவரை அவரோடு இருந்து மனுக்குல மீட்புக்காக தன்னையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்தவர். எனவே தான் இன்று வானுலக அரசியாக தன் மகன் இயேசுவோடு உயிர்ப்பின் மகிழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். துன்பத்தை துணிவோடு சந்தித்து வீர மங்கையாக வியாகுல அன்னையாக இன்று உயிர்ப்பின் ஆற்றல் பெற்ற வானக அரசியாக திகழும் நம் அன்னையை மகிழ்வோடு வாழ்த்தி பாடி நமது செப வேளையைத் துவங்குவோம்.வானக அரசியே மனமகிழ்வாய்........இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருச்சபைக்கு வழியில்லை: கிறிஸ்தவத்திற்கு வேலையில்லை. அவருடைய உயிர்ப்பில்தான் நம் விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது: திருச்சபைப் பிறந்திருக்கிறது: கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. இதுவரை வரலாற்றில் நாசரேத்தூர் இயேசுவாக அறியப்பட்டவர், இன்று கிறிஸ்துவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார். கல்லறை கருவறையாகியது: அவரது சாவு நம் மறுவாழ்வின் தொடக்கமானது. அவருடைய மீட்பு நம்மை இறைவனுக்கு நெருக்கமாக்கியது. ஆகையால் தான் ஆலயமணியின் ஓசை ஆர்ப்பரிக்கிறது: விசுவாசிகளின் நாவில் ‘ அல்லேலூயா’ என்ற ஆரவாரகீதம் எழுகிறது. அவருடைய உயிர்ப்பிலேதான் உயிருக்கு பயந்து உயிரோடு மூடப்பட்ட திருத்தூதர்களின் அறைக்கதவுகள் (உயிர்க்கல்லறை) திறக்கப்படுகின்றன. அவருடைய உயிர்ப்பிலேதான் எதிரிகள் வீழ்கின்றனர். உயிர்ப்பில் உயிர்த்த சமூகம் மலர்கிறது. அவரது பாடுகளில் அவரோடு பங்கேற்று உடனிருந்த நாம் அவரது உயிர்ப்பின் மகிழ்வையும் கொண்டாட அழைக்கப்படுகின்றோம். அவரது உயிர்ப்பு உயிர்ப்பின் மகிழ்வு நமது இதயக்கதவுகளையும் திறக்கட்டும் நமது பலவீனம் என்கின்ற எதிரிகள் வீழ்த்தப்படட்டும் பாடல் ..உயிர்ப்பு பாடல் பொருத்தமான ஏதாவது ....இறைஇயேசுவில் பிரியமான சகோதரிகளே! கடவுள் மனிதர்களாகிய நமக்கு  கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் எது தெரியுமா? நமக்கு  தந்துள்ள “வாழ்க்கை” தான் மிகப்பெரிய பொக்கிஷம். அந்த வாழ்க்கையை ஒவ்வொருவரும் நிறைவாக வாழவேண்டும். நிறைவான வாழ்க்கையை தருபவர்தான் நம்முடைய கடவுள். காரணம்; நம்முடைய கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக வாழ்வோரின் கடவுள் . அதனால் தான் இன்று நாம் நமதான்டவரின் உயிர்ப்பு பெருவிழாவைச் மகிழ்ச்சியோடு சிறப்பிக்கிறோம். உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள் ஆனால் நம்முடைய கடவுள் மட்டும் தான் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  “மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கு வந்தார்”. ஓர் இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது கா நாம் வாழ்வுபெரும் பொருட்டு அதும் நிலைவாழ்வு பெரும் பொருட்டு கடவுள் நமக்காக இறந்தாரென்று நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கக் கேட்கிறோம் . அந்த இயேசு இன்று உயிர்த்து நம்மோடு பயணிக்க வருகிறார். எனவே ஆண்டவரின் உயிர்ப்பின் மகிழ்ச்சியை ஒருவர் மற்றவரோடு வாழ்க உயிர்ப்பின் மகிழ்வில் வளர்க எனச் சொல்லி கரங்களை குலுக்கி வாழ்த்துவோம் வாழ்க உயிர்ப்பின் மகிழ்வில் வளர்க....... பூ அல்லது இறைவார்த்தை பகிர்ந்து கொள்ளலாம்.
அது ஒரு அழகான கிராமம். எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண மலர்கள், வாணோக்கி வளர்ந்த தென்னை மரங்கள், பச்சை பசேல் என காட்சியளிக்கும் பூந்தோட்டங்கள் குழந்தைகளின் விளையாட்டுகள், ஆரவாரச் சிரிப்புகள் என அந்த ஊர் முழுவதும் சந்தோசமும், மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தது. இதற்கெல்லாம் அந்த ஊரில் வசித்து வந்த செல்வம் தான் காரணம். தான் படித்த படிப்பை வைத்து அந்த கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய அனைத்து வசதிகளையும் அன்றாடம் செய்து வந்தான். உண்மையிலேயே அந்த ஊர் மக்கள்; அனைவரும் திரு. செல்வத்தை அந்த ஊரின் செல்வமாக கருதி வந்தனர். ஒருநாள் இந்த செல்வம் கடைக்குச் சென்று திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக ஓர் விபத்து. தலையில் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அங்கு இருந்த மக்கள் இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இரத்தம் அதிகமாக வெளியேறிய காரணத்தால் இவரை ஐ சி யூ வுக்குள் எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். இந்த செய்தி ஊர்மக்களுக்கு தெரிந்து அனைவரும் மருத்துவமனையையில் ஐ சி யூ வுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தனர். அங்கேயே மண்டியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தனர். அப்போது ஒரு 5 வயது உள்ள குழந்தை அங்கு இருந்தவர்களைப் பார்த்து ‘எங்க செல்வம் அங்கிளுக்கு என்ன ஆச்சு? அவர் இப்ப எங்க இருக்காரு?’ என்று கேட்டது. அங்கிருந்த ஒருவர் செல்வம் அங்கில் இந்த ஐ சி யூ வில் இருக்கார் என்றார். அந்த குழந்தை ஐ சி யூ என்றால் என்ன? அங்கு யார் இருக்குரா? என்று கேட்டது. அதற்கு அவர் ஐ சி யூ என்றால் ‘நான் உன்னை பார்க்கிறேன் என்று அர்த்தம்’. ஐ சி யூ வில் கடவுள் இருக்கிறார். அவரைப் பார்க்க செல்வம் அங்கிள் சென்றிருக்கிறார் என்றார். அங்கிருந்தவர்களின் எண்ணங்கள் அனைத்தும் ஆண்டவரை செல்வத்தை எப்படியாவது காப்பாற்றி விடு என்று கடவுளை நோக்கியதாக இருந்தது. ஐ சி யூ வுக்கு உள்ளே மருந்து கொடுப்பது மட்டும் தான் மருத்துவர்கள் வேலை ஆனால் உடல் நலம் கொடுப்பவர் கடவுள் என்று அறிந்தவர்களாக அந்த மருத்துவர்கள்களும் கடவுளை நோக்கி ஜெபித்தவர்களாக இருக்கின்றனர். மேலும் அங்கு அடிபட்டு ஐ சி யூ வில் இருக்கும் செல்வமும் இறைவா எப்படியாவது என்னை காப்பாற்று என்று கடவுளை நோக்கி ஜெபித்துக் கொண்டிருக்கிறான். இரண்டு மணிநேரம் களித்து மருத்துவர்கள் வெளியே வந்து செல்வம் பிழைத்துக் கொண்டார், புது வாழ்வுக்கு வந்து விட்டார் என்றனர். அப்போது அந்த குழந்தை சொன்னது நாமும் புது வாழ்வு பெறவேண்டுமென்றால் ஐ சி யூ வுக்கு செல்ல வேண்டும் என்றதாம். ஆம் அன்புக்குரியவர்களே மரங்களும், செடி கொடிகளும் புது வாழ்வை பெறவேண்டுமென்றால் வானத்தையும், மழையையும் உற்று நோக்கி இருக்கின்றன். தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு புதிய உலகத்தை காண்பிப்பதற்காக ஒவ்வொரு தாயும் அவர்களின் பிரசவ நேரத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். அதைப் போலத்தான் இஸ்ராயேல் மக்களும் பாம்பு கடித்து இறந்து கொண்டிருந்த போது மோயீசன் செய்த அந்த வெண்கலப் பாம்பை யாரெல்லாம் உற்று நோக்கினார்களோ அனைவருமே புது வாழ்வை பெற்றுக் கொண்டனர். புதிய ஏற்பாட்டிலே யாரெல்லாம் சிலுவையை உற்று நோக்கினார்களோ அவர்கள் அனைவருக்கும் கடவுள் புது வாழ்வை கொடுக்கிறார். இப்படியாக புது வாழ்வை பெறவேண்டுமென்றால் நாமும் புது மனிதர்களாக மாறவேண்டும். இறப்பில் இருந்து உயிர்ப்புக்கு பயணிக்க வேண்டும், பாவத்தில் இருந்து புண்ணியத்திற்றகு செல்ல வேண்டும், இருளில் இருந்து வெளிச்சத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறக நமதாண்டவர் இறப்பில் இருந்து புது வாழ்வுக்கு சென்று விட்டார். எனவே அவரை நம்பியிருக்கும் நம் அனைவருக்கும் தனது உயிர்ப்பின் மூலம் புதிய வாழ்வை கொடுக்கிறார். புதிய வாழ்வை இறைத்துணையுடன் வாழ அருள் வேண்டியவர்களாய் வாசகத்திற்கு செவிமடுப்போம். (பொருத்தமான வாசகம்)  காணிக்கை  (ஒளி ஒளியாம் இறைவா இன்றைய வழிபாட்டிலே  நாங்கள் ஒளி வழிபாட்டை கொண்டாடினோம். இதிலே புது தீயை மந்தரித்து அதில்  இருந்து பாஸ்கா திரியை ஒளி ஏற்றினோம். பாஸ்கா திரி தரும் புதிய ஒளியில் இருந்து புதுத்திரிகளை பற்றவைத்தோம். ஓளியை கரங்களில் ஏந்திக்கொண்டு பாஸ்கா புகளுரை வழியாக பழைய வாழ்க்கையில் இருந்து புதிய வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தோம்.  ஒளி இருளை அகற்றுகிறது. பாஸ்கா ஒளி எம்மிடத்தில் உள்ள இருளை அழித்து புது வாழ்வைத் தர, நான் எனது என்ற தன்னல நிலையிலிருந்து யாம் விடபட அருள் வேண்டி ஒளியை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.  இறைவார்த்தைவிண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே ஒழியாது என கூறிய இறைவா. இன்றைய வார்த்தை வழிபாடு வழியாக எமக்கு புதிய நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் கொடுத்தீரே. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு புதிய வாழ்வைக் கொடுத்தீர். படைப்பை புதியதாக படைத்தீர். செங்கடலில் நடந்து வந்த மக்களுக்கு புதிய வாழ்வைக் கொடுத்தீர். இறைவாக்கினர்கள் வழியாக இஸ்ராயேல் மக்கள் தங்களது பாவ வாழ்வில் இருந்து மாற்றி புதிய வாழ்வை அளித்தீர்.அது போல எங்களுக்கும் நம்பிக்கை என்னும் புது வாழ்வை அளித்தருள வேண்டி இத்திருவிவிலியத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்)  இந்த உயிர்ப்பு பெருவிழா வழியாக கடவுள் நமக்கு நம் ஒவ்வொருவரையும் பார்த்து கூறுகிறார். உங்களுக்கு கிடைத்த பொக்கிஷத்தை நிறைவாக வாழுங்கள் என்று. வாழ்க்கை என்ற வார்த்தையை நாம் பிரித்து பார்த்தோமானால் அதிலே பல உண்மைகள் நமக்கு வெளிப்படும். “வாழ்க்கை” இதன் முதல் எழுத்து வா : கடவுள் இவ்வுலகில் உள்ள அனைவரையும் ‘வா’ என அழைக்கிறார். காரணம் இன்று நம்மில் பலபேர் வாழ்க்கையை உற்சாகமாகத்தான் தொடங்குகிறோம். நன்கு படித்து முன்னேற வேண்டும், நல்ல  பதவியில் அமர்ந்து பணி செய்ய வேண்டும்,  சமுதாயத்தில் பிறர் போற்ற வாழ வேண்டும் என நன்றாக தொடங்குகிறோம். ஆனால் வாழ்க்கை தரும் பிரட்சனைகளை, சோதனைகளை சமாளிக்க முடியாமல் துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக அது வெறுத்து விடுகிறது. இப்படிப்பட்ட சோதனை நேரங்களில் வாழும் கடவுள் நம் அனைவரையும் ‘வா’ எனச் சொல்லி அன்போடு அழைக்கிறார். உதாரணமாக இயேசு தனது சீடர்களை “வா” என்று அழைக்கிறார். காட்டு அத்திமரத்தில் இருந்த சக்கேயுவை “வா” என்று அழைக்கிறார். இறந்த லாசரை “வா” என்று அழைக்கிறார். எனவே, “வா” என்று அழைக்கப்பட்ட சீடர்கள், சக்கேயு, லாசர் இவர்கள் அனைவருக்கும் கடவுள் புதிய வாழ்வை கொடுக்கிறார். எனவே நம்மையும்  ஆண்டவர் “வா” என்று அழைத்திருக்கிறார். நாம்தான் இன்னும் வாழத் தொடங்கவில்லை வாழத்தயாரா? முதல் இரண்டு எழுத்து வாழ் : கடவுள் நம்மை எதற்காக வா என்று அழைக்கிறார், காரணம் நாம் அனைவரும் வாழ்வதற்காக கடவுள் அழைக்கிறார். ஏனென்றால் நாம் பின்பற்றும் கடவுள் வாழ்கின்ற கடவுள். உதாரணமாக மத்தேயு 11:28-ல் “இயேசு பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்கிறார். எனவே துன்பங்களை கண்டு துவண்டு விடாமல் ஆண்டவரிடத்தில் வருவோம் புதிய வாழ்வை பெற்றுக்கொள்வோம். முதல் மூன்று எழுத்து : வாழ்க்(க) கடவுள் நம்மை வா என அழைத்து, அவரிடம் வந்தவர்களையெல்லாம் வாழ் என கூறி வாழ்வதற்கான வழிகளை கொடுத்து, அவர்கள் அனைவரையும் வாழ்க எனச் சொல்லி வாழ்த்துகிறார். லூக் 1:28-ல் “வானதூதர் மரியாவுக்கு தோன்றி அருள்மிகப் பெற்றவரே வாழ்க ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்” என்றார். யாரெல்லாம் கடவுளின் குரலுக்கு செவிமடுத்து அவர் கொடுத்த வாழ்க்கையை நன்கு வாழ்கின்றனரோ அவர்கள் அனைவரையும் கடவுள் வாழ்க என வாழ்த்துகிறார். நான்கு எழுத்துகளும் சேர்ந்து வாழ்க்கை, மனிதர்களின் இந்த வாழ்க்கை பாதையை தீர்மானிப்பது யார்? நீதிமொழி 20:24-ல் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கிறார். எனவே தான் கடவுள் நம் அனைவரையும் வா என அழைத்து வாழ்வதற்கான பாதையை காட்டி நம் அனைவரையும் வாழ்க என நமது வாழ்க்கையை நலமுடன் வாழ வாழ்த்துகிறார். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க தயாரா? எப்போது நம்மைப்போல பிறரையும் பார்க்கிறோமோ அப்போதே நமக்கும் நமது குழுவிற்கும் சமுதாயத்திற்கும் புதிய வாழ்வு பிறக்கிறது. கல்லறைக்குச் சென்ற சீடர்கள் புது வாழ்வையும், புதிய நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டது போல ஆலயம் வந்துள்ள நாம் அனைவரும் புதிய மனிதர்களாக புது வாழ்வை தொடங்குவோம். உயிர்த்த இயேசு நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆண்டவர் உயிர்த்து விட்டார். புது வாழ்வு பிறந்து விட்டது அல்லேலூயா… அல்லேலூயா…
x

Friday, 23 March 2018

முயன்றிடு முன்னேறிச்சென்றிடு


             முயன்றிடு முன்னேறிச்சென்றிடு

சென்று கொண்டிருப்பவன் காலத்தை வென்று கொண்டிருக்கிறான்.
நின்று கொண்டிருப்பவன் காலத்தை தின்று கொண்டிருக்கிறான்.
என்றோ எங்கோ படித்த புத்தக வரிகள். தவக்காலத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில்  அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் இவ்வரிகளுடன் எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.புனித வாரத்தின் முதல் நாள். தூய மனதுடன் நம்மை புதுப்பிக்க நாம் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி இந்த குருத்தோலைப் பவனி. நமது ஊர்களில் பலவிதமான பவனிகள் நடைபெறுகின்றன. குடும்பம் சம்பந்தப்பட்டது முதல் அரசியல் ஆன்மீகம் என பலவிதமான பவனிகள். நேர்மறை எதிர்மறை என ஏகப்பட்ட பவனிகள். சில வெற்றிகரமாக நடைபெறுகின்றன. பல வெற்றி பெறாமலேயே மறைந்து விடுகின்றன. சில தொடங்கிய இடத்திலேயே நிறைவு பெறுவதுமுண்டு. பல நிறைவு பெற்ற இடத்திலிருந்து மீண்டும் தொடங்குவதுண்டு.
பவனிகள் எதற்காக?
    தனது, அல்லது  தங்களது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை திறமையைப் பிறர் அறியச்செய்ய, தங்களது நோக்கத்தை பிறருக்கு அறிவிக்க, தங்களது மகிழ்வை ,வெறுப்பை வெளிப்படுத்த பவனிகள் நடைபெறுகின்றன. ஆனால் இயேசுவின்  எருசலேம் பயணம் முற்றிலும் மாறுபட்டது.
தனது அன்பர்கள் ஆதரவாளர்களின் திறமையை பிறர் அறியச்செய்ய அல்ல, தனது தாழ்ச்சியை பிறருக்கு அறிவிக்க.
வெற்றிவாகை சூட அல்ல, வேதனைகளை நாடிச்செல்ல. பதவியையும் பணத்தையும் பெருக்கச்செல்லவில்லை. மாறாக பாசத்தையும் இரக்கத்தையும்வெளிப்படுத்த செல்கிறார்.
இன்று பலர்  பதவியும் பணமும் பார்த்தவுடன் ஒரே இடத்தில் காலத்திற்கும் அசையாமல் அமரத்துடிக்கின்றனர். வேறு இடத்திற்கு நகர்ந்தால் இதே போல் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில்.... நகர மறுக்கின்றனர். இயேசுவுக்கு அத்தனையும் கிடைத்தது. மக்களின் மனதில் நீங்கா இடம், பசிக்கு பகிர்ந்துண்ண உணவு, பாசம் காட்ட சீடர்கள், செல்லும் இடமே தங்கும் இடம். ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் செய்ய ஆயிரமாயிரம் மக்கள் என எல்லாமே நிறைவாக இருந்தது. இருப்பினும் இது போதும் என்று இயேசு இருந்து விடவில்லை. அந்த இடத்திலேயே நிலைத்து நிற்க விரும்பவில்லை. இது நிரந்தரமல்ல , நிலையானதுஒன்று உண்டு என உணர்ந்து முன்னேறிச்செல்கிறார். தனது பயணம் தொடங்கும் இடம் மகிழ்வானது தான் ஆனால் பயணிக்கும் பாதை துன்பமயமானது என்பதை உணர்ந்தவர் இயேசு. ஆனால் அதன் வழியாக மட்டுமே உலகை மீட்க முடியும் என்பதையும் நன்கு அறிந்தவர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பவனி இது. இன்றும் நாம் அவர் வழியை பின்பற்றுகிறோம் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் இது. இன்று நாம் கைகளில் குருத்தோலை ஏந்தி இறைப்புகழ் பாடி பவனி வந்தோம்.
அரச பரம்பரையில் மன்னர் நகர்வலம் வரும்போது மக்கள் இப்படி செய்வது வழக்கம். தங்களை ஆளும் மன்னர்கள், மக்கள் மத்தியில் வந்து தங்கி அவர்களது குறைகளைத் தீர்த்து தன் அரண்மனை திரும்புவர். அந்நேரத்தில் இதுமாதிரியான வரவேற்புகள் இருக்கும். நம் மன்னர் இயேசுவோ, நம் குறை தீர்த்து நம்மை விட்டு அகல்பவர் அல்லர். நமது நிறைவிலும் குறைவிலும் நம்மோடு எந்நாளும் இருப்பவர். நீங்கள் முன்னால் சென்று பாஸ்கா கொண்டாட இடத்தை ஏற்பாடு செய்யுங்களென்று சொல்வதோடு மட்டுமல்லாமல் நம் உடன் வருபவர்.
நமது கிறிஸ்தவ மக்களிடையே திருவழிபாடு சேர்ந்த பல விதமான பவனிகள் நடைபெறுகின்றன. மாதா பவனி, சூசையப்பர் பவனி, அந்தோணியார் பவனி, அருளானந்தர் பவனி என ஏகப்பட்ட புனிதர்களின் பவனிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவை எல்லாம் ஒன்று போல் ஒரே நேரத்தில் நடப்பதில்லை. ஒவ்வொருவரும்  ஒவ்வொரு நேரத்தில் பவனியினை வழிநடத்துவர். ஆனால் குருத்து ஞாயிறு பவனி , தவக்காலத்தின் ஆறாம் ஞாயிறு காலையில் அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் பல்வேறு இடங்களில் பல்வேறு நாடுகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. காரணம், வழிபாட்டால் நாம் வேறுபட்டாலும் , வழிபடும் கிறிஸ்து ஒருவர் என்ற கருத்தில் ஒன்றுபடுவதால் தான். நாம் கொண்டாடும் இயேசு இன்பத்தையும் நிறைவையும் மகிழ்வையும் மட்டும்  அனுபவித்த இயேசு அல்ல. மாறாக துன்பத்தையும் கலக்கத்தையும் அனுபவித்த இயேசு. இன்பம் மட்டும் வாழ்க்கையல்ல, இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்தது தான் வாழ்க்கை என்பதை வாழ்ந்து காட்டியவர். துன்பத்தின் வழிதான் உலகை மீட்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த வந்த இயேசு .
குருத்து ஞாயிறு இன்று நமக்குவிடுக்கும் செய்தி என்ன?
   குருத்தோலை, போர்வை , கழுதை என பல பொருட்கள் இப்பவனியில் இடம் பெறுகின்றன. இவை மூன்றும் இந்நாளில் நமக்கு சொல்லும் செய்தி என்பதை அறிய முயல்வோம்.
குருத்தோலை.:   இளம் குருத்து ஓலைகள், எளிதில் வளைத்து ஓலைப்பாய், ஓலைப்பெட்டி, என உபயோகமான பொருட்கள் செய்ய, ஓலைச்சுவடிகளாக பாதுகாக்க பயன்படுகிறது.
இயேசுவை மெசியாவாக, நம்மை மீட்க வந்த ஆண்டவராக பார்க்கும் நாமும் குருத்தோலைகளே. தகுந்தவனோடு , தகுந்தவனின் கையில் இருக்கும் போது நாம் தகுதியான பொருட்களாவோம். இல்லையேல் கீழே விழுந்து மிதிபடும் குப்பையோடு குப்பையாக மாறுவோம்.
போர்வை மேலாடை :  இளைப்பாற, குளிர் வெயிலில் இருந்து கூடாரமாக நம்மை பாதுகாக்க, பயன்படுகிறது.
கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் வார்த்தையில் இளைப்பாறி, அவரது நிழலில் பாதுகாக்கப்படுகிறோம். பெற்றதைப் பிறருக்கு கொடுத்து வாழும்போது அதாவது, பிறர் நம் சொல்லால் இளைப்பாறுதல் பெறும்போது, செயலால் பாதுகாப்பை நம்பிக்கையை உணரும்போது நாமும் இயேசுவின் பாதம் பட்ட போர்வை மேலாடைகளாகிறோம்.
கழுதை:  பொதி சுமக்க, பயணம் செய்ய , சில வீடுகளில் என்னைப் பார் யோகம் வரும் என்று படத்தோடு ஒட்டப்பட என பல வகைகளில் பயன்படுகிறது.
கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் துணையுடன் பிறர் சுமைகளையும் பகிர்ந்து   , அவர்மீது ,அவரோடு பயணம் செய்ய அழைக்கப்படுகிறோம். ,சில நேரங்களில் கிறிஸ்தவனைப்பார் அவன் வாழ்வைப் பார் உன் வாழ்க்கை மாறுபடும் செழிப்பாகும் என்று சொல்லுமளவிற்கு வாழ தூண்டப்படுகிறோம்.
எனவே குருத்தோலையாக உருமாற, போர்வை மேலாடையாக நம்பிக்கை பாதுகாப்பு தர, கழுதை போல இயேசுவை சுமந்து வாழ முயற்சிப்போம்.
இரண்டு கழுதைகள் குருத்து ஞாயிறு முடிந்து தங்களுக்குள் பேசிக்கொண்டன. முதல் கழுதை சொன்னது . என்ன இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியல. நேற்று என்னடான்னா , என் மேல போர்வை மேலாடை எல்லாம்  போட்டு, வழியில இலை தளைகள் நிரப்பி, பாட்டு பாடி அழைத்துச்சென்றனர். இன்றைக்கு என்னை கண்டுகொள்ளவே மாட்டேன்றாங்க. என்னாச்சு இவங்களுக்கு???அதற்கு இரண்டாம் கழுதை சொன்னபதில், "நேற்று உனக்காக அவர்கள் அதை செய்யவில்லை. உன் மீது அமர்ந்து பவனி வந்த இயேசுவுக்கு செலுத்தப்பட்ட மரியாதை அது . கடவுளோடு இருந்தால் மட்டுமே நீ ஹீரோ. இல்லையேல் நீ வெறும் ஸீரோ என்றதாம்.
. நாமும் அப்படித்தான். இயேசுவோடு மகிழ்வாக பவனி வந்து ஓசான்னா பாடல் பாடிய நாம், பவனியோடு என் பணி முடிந்துவிட்டது என்று நினைத்து நின்றுவிட்டால் எதுவும் மாறாது. மாறாக இயேசுவோடு தொடர்ந்து பயணிப்போம். அவர் துன்பத்தில் துணையாவோம். அவரோடு உயிர்த்து காலத்தை வெல்வோம்.முயன்றிடுவோம் முன்னேறிச்சென்றிடுவோம். புனித வாரத்தில் புதுத் தெம்புடன் அடியெடுத்துவைப்போம். புனிதர்களாக மாற இயலாவிட்டாலும் புது மனிதர்களாகவாவது உருமாறுவோம். பாடுகளின் வாரத்தில் அவரோடு உடனிருப்போம். நின்று கொண்டிருப்பவர்களாக அல்ல, அவரோடு உடன் சென்று கொண்டிருப்பவர்களாக மாறுவோம் . இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்..     
x
x

Friday, 16 March 2018

காணத்துடிக்கின்றேன் இயேசுவே உம்மை.......

காணத்துடிக்கின்றேன் இயேசுவே உம்மை.......

சிலரைப் பார்க்கத் துடிக்கின்றோம்
சிலரைப் பார்த்தாலேத் துடிக்கின்றோம்.
முதல் துடிப்பு அன்பினாலும் ஆர்வத்தாலும் வருவது.  இரண்டாவது துடிப்பு பயத்தினாலும் துன்பத்தினாலும் வருவது . இதில் கிரேக்கர்கள் இயேசுவைக் காண வந்தது கண்டிப்பாக முதல்வகைத் துடிப்பாகத் தான் இருக்கும். யூதர்களின் திருவிழாக் கொண்டாட்டத்தில் கிரேக்கர்கள் எப்படி? ஒருவேளை யூதர்களின் வழிபாட்டு முறை கொண்டாட்டங்கள் பற்றி நேரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கூட வந்து இருக்கலாம். இயேசுவின் பணியையும் செயலையும்  காதால் கேட்டு மகிழ்ந்தவர்கள் நேரில் கண்ணால் பார்க்க துடிக்கிறார்கள். சாதாரண ஏழை எளிய மக்களே ஓடிச்சென்று அவரை நேரில் பார்க்கும் நிலையில் இவர்கள் முறையாக சீடர்களிடம் அனுமதிக் கேட்கிறார்கள். இயேசுவைக் காண வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை எடுத்துரைக்கின்றார்கள். வீடுகளில் குழந்தைகள் பெற்றவர்களிடம் நேரடியாக தங்களுக்குத் தேவையானதை கேட்டு வாங்குவதை விட , சில நேரங்களில் தங்களில் யாரைஅதிகம் பெற்றோர்களுக்குப் பிடிக்கிறதோ அவர்கள் மூலமாகக் கூறி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். கடைக்குட்டி பிள்ளைகள் பெரும்பாலும் இந்த உதவியை செய்வார்கள். அதுபோலவே கிரேக்கர்களும் சீடர்கள் மூலமாக இயேசுவைக் காண விரும்புகின்றனர். விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வும் அடைகின்றனர்.
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற இயேசுவின் இலட்சியம் விருதுவாக்கு செயல்படும் வகையில் யூதர் அல்லாத புற இனத்தவரான கிரேக்கர்கள் இயேசுவைக் காண வருகின்றனர். இயேசுவே இறைமகன் , அவர் வார்த்தையே நற்செய்தி , அவர் வாழ்க்கையே இறைமாட்சி என்று எண்ணி நம்பி வருகின்றனர். அவர்களது அன்பையும் ஆர்வத்தையும் கண்டு இயேசு அவர்களுக்கு மூன்று செய்திகளை சொல்கின்றார். அவர்களுக்கு மட்டுமல்ல ,இயேசுக் காண வேண்டும் என ஏங்கும் அனைவருக்கும் சொல்கிறார்.
மண்ணில் மடிந்து பலன் தா.
பிறர்க்கென வாழ்.
என் பணி செய்.
கோதுமை மணியை பற்றி அதிகம் தெரியும் அக்காலத்து மக்களுக்கு. எனவே அதையே உருவகமாக வைத்து சொல்கிறார். துன்பங்கள் மூலமாக உன் வாழ்வை மெருகேற்றி வளப்படுத்திக்கொள் . உன்னால் முடிந்த அளவு உனது நூறு சதவிகித உழைப்பையும்  கொடு . அதற்கேற்ற பலனை நீ பெறுவாய் என்கிறார்.

பிறர்க்கென வாழும் போது உன்னை நீயே புதிதாக கண்டு கொள்வாய். தனக்கென வாழ்பவன் அதை இழந்து விடுவான் . அதை ஒரு பொருட்டாகக் கருதாதவன், அதாவது தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவன், கிறிஸ்துவுக்காக வாழ்பவன் நிலைவாழ்வு பெறுவான் . நம் மகிழ்ச்சியொடு பிறர் மகிழ்ச்சியும் இணையும் போது தான் நம் வாழ்வு நிறைவு பெற்றதாகும்.
இயேசுவின் பணியை தொடர்ந்து செய்யும் அவர் சீடர்களாக நாம் மாறவேண்டும். இதனால்  தந்தையின் மதிப்பைப் பெறும் நல்ல தொண்டர்களாய் நாம் மாறலாம்.
இவ்வாறாக தன்னைக் காண வந்த கிரேக்கர்கள், கோதுமை மணி போல் உருமாற, பிறர் பணி செய்ய, தந்தையின் நல் மதிப்பைப் பெற வழிகாட்டுகிறார். தனது சொல்லும் செயலும் தந்தையிடமிருந்தே வருகின்றது என்பதை மெய்ப்பிக்க ஒரு உரையாடலை தந்தைக் கடவுளோடு நடத்துகிறார். மாட்சிப்படுத்தினேன் மாட்சிப்படுத்துவேன் என்ற குரல் மூலம் கடவுளும் தன் மகனுக்கு ஆறுதல் தருகிறார். இதனை கிரேக்கர்கள் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் பார்க்கின்றனர்.
பார்ப்பது என்பது வேறு , காண்பது என்பது வேறு. பார்ப்பது , கண் பார்வையுடன் அச்செயல் முடிந்துவிடும். . வீதியில் வெளியில் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் எல்லாமே இதில் அடங்கும். இது நம் மனதில் எந்த விதமான பாதிப்பையும் உணர்வையும் விதைப்பதில்லை. மாறாக காண்பது என்பது புலனுறுப்புக்கள் அனைத்தினாலும் உணர்ந்து காண்பது. இது எக்காலத்திலும் நம் மனதை விட்டு நீங்காது. நமக்கு மிகவும் பிடித்த ஒருவரின் வருகை அல்லது உடனிருப்பு, விழா போன்றவை.
கிரேக்கர்கள் இயேசுவை மேலோட்டமாக பார்த்துவிட்டு போக வரவில்லை. அவரைக் கண்டு உணர வந்தனர். தந்தைக் கடவுளின் குரலையும் இயேசுவின் செயலையும் அங்குக் கூடியிருந்த அனைவரும் கேட்டனர் பார்த்தனர். ஆனால் அவர்கள் யாரும் அதை மனதில் இருத்தி காண முயலவில்லை. அதனால் தந்தைக் கடவுளின் குரல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணத்தைக் கொடுத்திருக்கிறது. கேட்கச் செவியிருந்தும் கேட்க இயலாத உள்ளத்தினராய் அவர்கள் மாறிவிட்டனர்.
தவக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். இயேசுவின் பாடுகளில் அவரோடு பங்கேற்க நம்மை நாமே தயாரித்துக் கொண்டு இருக்கும் காலகட்டம் இது. இந்நிலையில் நாம் இயேசுவைக் காணத் துடிக்கிறோமா இல்லைப் பார்க்கத் துடிக்கிறோமா? நமது தந்தை அனுபவமும் இயேசு அனுபவமும் நம் கண்களைத் தாண்டி நம் மனதிற்கு செல்லாமல் வாழ்ந்திருக்கின்றோம் என்றால் நாமும் பல நேரங்களில் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாழ்ந்திருக்கிறோம் என்றே அர்த்தம். கிரேக்கர்கள் போல இயேசுவைக் காண முயல்வோம். கண்ணால் காண்பதை உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வாழ முற்படுவோம். நம்மைச்சுற்றிலும் கேட்கும் தந்தைக் கடவுளின் குரலை இனம் கண்டு , அவரின் நன்மதிப்பைப் பெற முயல்வோம் . இறை ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.   
இயேசுவே உன்னைக் காணத்துடிக்கின்றேன் நான் என அனுதினமும் சொல்வோம் அருளாசீர் பெறுவோம்.
   
x
x

Friday, 9 March 2018

கடவுளின் கைவினைப் பொருளே!!!!!


இறையேசுவில் பிரியமுள்ள அன்பர்களே, தவக்காலத்தின் நான்காம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இத்தவக்காலத்தில் நமது தவத்தின் காரணத்தையும் அதன் பலனையும் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. நாம் கடவுளின் கைவேலைப்பாடு, கைவினைப்பொருட்கள் . கடவுளால் உருவாக்கப்பட்ட நாம் அதற்கான நோக்கத்தையும் காரணத்தையும் ஒளியாம் இயேசுவின் பாதையில் கண்டறிய இன்றைய விவிலிய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. கைவினைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன, மெருகுபடுத்தப்படுகின்றன, பயன்பெற, பயன்பட தேவையான இடத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. நாமும் அதுபோல் தான். கடவுளால் படைக்கப்பட்டோம்., மெருகேற்றப்பட்டோம், நமக்குரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோம். இந்த அடிப்படையில் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

படைத்து பாதுகாக்கும் இறைவன்
மெருகேற்றி மேன்மைப்படுத்தும் இறைவன்
நற்பயன் தர அழைப்புவிடுக்கும் இறைவன்.                                               
படைத்து பாதுகாப்பவர்.;
             இன்றைய முதல் வாசகம் கடவுளுக்கு எதிராக  இஸ்ரயேல் மக்கள்  செய்த செயல்களையும் அதற்கு பதிலாக கடவுள் அவர்கள் மேல் சினமுற்றதைப் பற்றியும் கூறுகிறது. தன்னால் படைக்கப்பட்ட ஒரு மக்களினம் தன் மேல் நம்பிக்கை கொள்ளாது, தனக்கு எதிராக செயல்படுவதைக் கண்டு சினமுறுகிறார் இறைவன். பாபிலோனிய அடிமைத்தனம் மூலமாக அவர்களைக் கண்டிக்கிறார். தன்னை வழிபட என்று ஏற்படுத்தப்பட்ட எருசலேம் ஆலயம் அதன் பயனில்லாது அசுத்தமாயிருப்பது கண்டு கொதித்தெழுகிறார். எனவே அதனை இல்லாமல் செய்கிறார். எகிப்திலிருந்து, அடிமைத்தன நாட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்த மக்களை மீண்டும் பாபிலோனியர்களுக்கு அடிமையாகும்படிச்செய்கிறார். அவர்களின் வழிபாட்டுப் பொருட்கள் இடங்களை தீக்கிரையாக்குகின்றார்.
 ஒரு பொருளின் அருமை அதன் இருப்பை விட இழப்பில் தான் பன்மடங்கு அதிகமாக தெரியும் . அது உருவமாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி . இதை இஸ்ரயேல் மக்களுக்கு வெளிப்படுத்த எண்ணுகிறார். அதை அவர்கள் உணர்ந்து நைல் நதிக்கரையோரம் தங்கள்  புலம்பல்களைப் பாடலாகப் பாடுவதைக் காண்கிறார். அவர்கள் மேல் இரக்கம் கொண்டு மீண்டும் ஆலயம் கட்ட , பழைய வாழ்வை வாழ சைரசு மன்னன் மூலம் வழிகாட்டி பராமரிக்கிறார். இன்றும் பல்வேறு இடங்களில் நமது தேவாலயங்கள் தகர்க்கப்படுகின்றன. நமது மறையை மண்ணோடு மண்ணாக ஆக்கும் நோக்கத்தில் அவை நடத்தப்படுகின்றன. ஆனால் அந்த இழப்பிலும் வேதனையிலும் தான் நமது மறையும் விசுவாசமும் இன்னும் அதிகமாக ஆழப்படுகின்றன என்பதை உணராது அவர்கள் செயல்படுகின்றனர்.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் எருசலேம் ஆலயம் தகர்க்கப் பட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றனர். தங்களின் பாவ நிலையை விடுத்து இறைவனிடம்  மீண்டும் திரும்பி வர முயற்சிக்கின்றனர். தங்களைப் படைத்த இறைவனின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் எண்ணி மனமுறுகுகின்றனர். இவ்வாறாக தன் மக்களை தன்னை நோக்கி திரும்பி வர வைக்கின்றார் இறைவன். பெற்றோர் தன் பிள்ளைகளை கண்டித்து திருத்துவது போல திருத்துகின்றார். எவ்வளவுதான் பிள்ளைகள் குறும்பு செய்தாலும் , எவ்வளவு தான் பெற்றோர்கள் கண்டித்து திருத்தினாலும் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே இருக்கும் பந்தம் பாசம், உறவு என்பது அழிக்க முடியாதது, அளவிட முடியாதது. அப்படி ஒரு உறவை மீண்டும் இஸ்ரயேல் மக்களுடன் ஏற்படுத்திக் கொள்கிறார் இறைவன் . சைரசு மன்னன் முலமாக தன் மக்களை மீட்டுக் கொள்கிறார். புதிய இஸ்ரயேல் மக்களாம் நம்முடனும் இந்த உறவைப் புதுப்பிக்க, நமது பழைய பாவ இயல்பைக் களைந்து ,நம்மை  நாமே தயாரித்து புது வாழ்வு பெற தவக்காலத்தை  நமக்கு அளித்திருக்கின்றார்.                                                                                             
மெருகேற்றி மேன்மைப்படுத்துபவர்.;
எந்த ஒரு பொருளும் இயல்பிலேயே அழகு தான் ஆனால் அதை மெருகேற்றும்போது அதன் அழகு இன்னும் அதிகமாக வெளிப்படுகிறது. சாதாரண உலோகம் ஆபரணமாய் மாறுவது போல, காகிதங்கள் கலை வண்ணப் பொருட்களாய் மாறுவது போல. நம்மைப் படைத்து காத்த இறைவன் அன்பினால் நம்மை மெருகேற்றி மேன்மைப்படுத்துகிறார். இரக்கத்தினால் அழகுபடுத்துகிறார். இதுவரை பாவங்களினால் இறந்து போயிருந்த நம்மைஅன்பின் மூலம் உயிர்பெறச்செய்கின்றார்.   இன்று உலகில் ஏராளமான பொருட்கள், மனிதர் கைகளால் உருவாக்கப்படுகின்றன. கண்ணைக்கவரும் வண்ணங்கள் , மனதை உருக வைக்கும் இசைகளோடு நாள்தோறூம் பல்வேறு விதமான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவைகளுக்கெல்லாம் ஒரு குறுகிய கால, காலவரையறை உண்டு. அதன்பின் அதன் செயல்பாடு முடிந்துவிடும். நாமும் கைவினைப் பொருட்கள் தான் ஆனால் கடவுளின் கைவினைப் பொருட்கள். அவர் கைகளால் உண்டாக்கப்பட்டவர்கள் . காலவரையறை அவர் தம் வேலைப்பாடுக்குக் கிடையாது. நாம் இறந்தாலும் மீண்டும் கடவுளின் மக்களாக உயிர்ப்போம். ஏனெனில் நாம் அனைவரும் நற்செயல் புரிவதற்காக  அன்பினால் உயிர் பெற்றவர்கள். அருளினால் மீட்கப்பட்டவர்கள். கடவுளின் கரத்தினால் மெருகேற்றி மேன்மைப்படுத்தப்பட்டவர்கள்.
நற்பயன் தர அழைப்புவிடுக்கும் இறைவன்;
  நாம் படைக்கப்பட்டது மெருகேற்றப்பட்டது அனைத்தும் பலன் தரவே,அதுவும் நற்பயன் தரவே . ஒளியின் பாதையில் நடப்பவர்களால் மட்டுமே அந்த நற்பயனைத் தர முடியும். இயேசுவே ஒளி அவரே நமக்கு முன்மாதிரி. ஒரு பொருளை உருவாக்கி, அழகுபடுத்தி, அது , அதற்கு உண்டான பலனைத் தரவில்லையெனில் அது வீண். அது எப்படி பயன் தர வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய் கடவுள் தன் மகனையே நமக்கு தந்திருக்கிறார். மூலப்பொருளாம் இயேசுவை மையமாகக் கொண்டு அவரைப்போல வாழவே இறைவன் நம்மை அழைக்கிறார். ஒளியாம் இறைவன் உலகில் நற்செயல் புரிபவர் உருவத்தில் இருந்தும், நாம் அதை கண்டு கொள்ளாது இருளாம், பகட்டு ஆடம்பர வாழ்விலும் கேளிக்கைகளிலும் பாதிப்பளிக்கும் தொலைதொடர்பு சாதனங்களிலும் நம்மை நாமே தொலைத்து விடுகிறோம்.
ஒளியாக இருப்போம் இருளை விரட்ட, ஒளியிடம் செல்வோம் உண்மைகேற்ப வாழ, ஒளியை நேசிப்போம் ஒளியாம் இயேசு போல் வாழ முயற்சிப்போம். நாம் கடவுளின் கைவினைப் பொருட்கள் என்பதை மனதில் நிறுத்தி அவரில் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரியும் நல்லவர்களாக வாழ்வோம். இத்தவக்காலத்தில் இறைவனின் அருகிருப்பு நமக்கு தரும் ஆறுதலையும் அன்பையும் எண்ணி ஒளியின் வழியில் நடக்க முயல்வோம். படைத்த இறைவன், மெருகேற்றிய இறைவன், நற்செயல் புரிய அழைக்கும் இறைவன் நம்மோடு உடனிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.                     
x

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...