Friday, 27 April 2018

இணைப்பில் இருக்கின்றீர்களா?

         இணைப்பில் இருக்கின்றீர்களா?

இன்று பலரும் பலரிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்று இது தான். பாலப்பருவ நண்பர்கள் முதல் பல்லாடும் முதுமைப்பருவ நண்பர்கள் வரை ஒருவர் மற்றவரை நலம் விசாரித்துவிட்டு, பிற நண்பர்களுடன் இன்னும் அவர்கள் இணைப்பில்  இருக்கிறார்களா? என்றே கேட்கிறோம். முன்னர் எல்லாம் அவரை உங்களுக்குத் தெரியுமா?என்று கேட்டால் , என்ன இப்படிக் கேட்கிறீங்க? நாங்கள் எல்லாம் இணைபிரியாத நண்பர்கள். ஒன்றாகப் படித்தோம், விளையாடினோம், உண்டோம் உறங்கினோம் என்று சொல்லி, அவரின் நல்ல குணாதிசயங்களில் ( திறமைசாலி, புத்திசாலி) ஒன்றிரண்டைக்கூறி மகிழ்ந்து பூரிப்போம். ஆனால் இன்றோ, அவரா? நல்லா தெரியுமே, அவர் தொலைபேசி எண் கூட என்னிடம் இருக்கிறது. வாட்ஸப், ஃபேஸ்புக் (புலனம் முகநூல்) எல்லாத்துலயும் இருக்காரு. எப்பவாவது ஏதாவது மெசேஜ் அனுப்புவாரு. நானும் பதில் அனுப்புவேன். பேசுனது இல்ல. ஆனா என்னோட இணைப்புல ( காண்டக்ட்) தான் இருக்காரு என்று கூறி முடிக்கிறோம். தொலை பேசி எண் நம் அலைபேசியில் இருந்தாலே அனைவரோடும் இணைப்பில் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். முகம் தெரியாத நபர்களின் எண்களையும், அலைத்தொடர்பு இல்லாத எண்களையும் அழிக்க மனமில்லாமல் அப்படியே வைத்திருப்பவர்களில் நாமும் ஒருவராகிவிடுகின்றோம். மனிதர்களுடனான நமது இணைப்பும் உறவும் இவ்வாறு இயந்திர மயமாகி இருக்க , இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மை இயற்கை வழி இணைய அழைக்கிறார். 
இணைப்பு- இந்த சொல் எவ்வளவு அர்த்தமுள்ள ஆழமான சொல்லாக இருக்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் ஏதாவது ஒரு விதத்தில் ஒன்றுடன் இணைப்பில் இருக்கின்றன. அலைபேசி எல்லோரிடமும் இருக்கும் ஒரு பொருள் . அதற்கு இருவிதமான இணைப்பு தேவை. ஒன்று மின்சார இணைப்பு அல்லது  பேட்டரி எனப்படும் மின்கலத்தின் மின்னூட்டல். மற்றொன்று தொலை தொடர்பு அலைவரிசை. இது இரண்டில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அலை பேசி பயன்தராத ஒன்றாகிவிடும். 
 அது போல கிறிஸ்தவர்களாகிய நமக்கும் இரு வகையான இணைப்பு தேவை. திராட்சை செடி கொடி உவமையில் , தந்தைக் கடவுள் விவசாயி, அன்பர் இயேசு திராட்சைசெடி, நாம் அதன் கிளைகள். நமது அன்புச்செயல்கள் கனிகள். எனவே கிளைகளாகிய நமக்கு செடியோடு இணைதல், கனியோடு இணைதல் எனும் இருவகையான் இணைப்புகள் நிச்சயம் தேவை. இதில் ஏதாவது ஒரு இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் பாதிப்பு நமக்கு தான் என்பதை இன்றைய விவிலிய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. 
செடியோடு இணைதல்: 
     செடியின் வளர்ச்சி அல்லது தரம் அதன் கிளைகளைக் கொண்டே அறியப்படும். கிளைகளில் மேல் நோக்கிய வளர்ச்சி, கீழ் நோக்கிய வளர்ச்சி, பக்கவாட்டு வளர்ச்சி என பலவகைகளில் கிளைகள் இலைகளை பரப்பிக் கொண்டு இருக்கும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப கிளையின் வளர்ச்சியைக் கண்டே கனியின் தரத்தை முடிவு செய்து விடுவார் விவசாயி. எது கனி தரும் கிளை, எது கனி தராத கிளை என்பதை அறிந்து அதனை கழித்து விடுவார். சில நேரங்களில் கிளைகளோடு களைகளும் வளர நேரிடும். செழுமையாக வளரும் இலைகளை ஏன் வெட்டி எறிகிறார் என்று நாம் பார்த்து வருத்தம் அடையலாம். ஆனால் விதைத்தவனுக்கு தெரியும் எது விளை பொருள், எது விளையாத பொருள் என்று. எந்தக் கிளை செடியோடு இணைத்து தனக்கு வலுவேற்றிக்கொள்கிறதோ, அதுவே நல்ல கிளையாக , பலன் தரும் கிளையாக மாறும். தன்னைப் போன்று மற்ற கிளைகளும் வளர துணை புரியும் .
நாமும் நமது வாழ்வில் திராட்சை செடியின் கிளைகள் போல பல நேரங்களில் பயணிக்கிறோம். நம்மிடமுள்ள வேண்டாத கிளைகள் வெட்டப்படுகின்றன  நாம் நல்ல கனி கொடுப்பதற்காக. நம்மைப் போன்றே காட்சியளிக்கும் சில கிளைகள் நம்மிடமிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன நமது தனித்துவம் வெளிப்படுத்தப்படுவதற்காக.  நமது வளர்ச்சிகள் முளையிலேயே கிள்ளி விடப்படுகின்றன மாற்று திசையில் நாம் வளர்வதற்காக. நமது வளர்ச்சிக்கு செடியோடு சில குச்சிகளும் கம்பிகளும் ( நண்பர்கள் உறவுகள், அனுபவங்கள்)நாம் நமது கிளைகளை பரப்ப உறுதுணையாக வைக்கப்படுகின்றன. இவை அத்தனையும்  நமக்கு செய்யப்படுவதற்கு காரணம் நாம் செடியோடுள்ள நமது இணைப்பை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான். 
கனியோடு இணைதல்:
     ஒரு கிளையின் தரம் பலன் அதன் கனியில் வெளிப்படுகிறது. கனியின் சுவையைக் கொண்டே திராட்சை செடியும் அதனை விளைவித்த விவசாயியும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். இன்னார் வீட்டுத் தோட்டத்து  திராட்சை மிகவும் சுவையானது. இவர் திராட்சை தோட்டத்தில் இந்த செடியின் கனி மிகவும் இனிமையானது என்று சொல்லுமளவுக்கு கனியின் தரம் சிறப்பானது. மற்ற பழ மரங்களின் வளர்ச்சியைப் போலல்லாமல் ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி தான் திராட்சை கனியின் வளர்ச்சி. ஒரு பழ மரத்தில் ஒரு கிளையில் உள்ள அனைத்து கனிகளும் ஒரே நேரத்தில் வளர்ச்சி அடையாது. தனித்தனியாக, ஒன்று மற்றொன்றை விட முன்போ பின்போ வளர்ச்சி அடையும். ஆனால் திராட்சை கனியின் ஒரு கிளையின் ஒரு கொத்து கனி ஏறக்குறைய ஒன்றாக சேர்ந்து வளர்ச்சி அடையும். கனியானது கனிந்த நிலையிலும் கூட கிளையோடு உள்ள இணைப்பில் தொடர்ந்தே இருக்க வேண்டும். நான் நன்றாக கனிந்து விட்டேன் சுவை தரும் பழமாக மாறி விட்டேன் என்று எண்ணி கிளையோடு தான் கொண்ட இணைப்பை, செடியோடு தான் கொண்ட உறவை துண்டிக்க நினைத்தால் அத்தனையும் வீண். ரசித்து ருசித்து உண்ண வேண்டிய கனி திராட்சை ரசமாய் மாறி விருந்தினை சிறப்பிக்க வேண்டிய கனி, காலில் மிதி பட்டு கால்நடைகளுக்கும் காட்டு மரத்திற்கும் உணவாக மாறும் நிலை ஏற்படும். 
நமது நற்செயல்களும் கனிகளாக பிறர்வாழ்வுக்கு இனிமை சேர்க்க வேண்டும் வளம் தர வேண்டும். நமது நற்செயல்களால் நாம் அடையாளப்படுத்தப்பட்டாலும் செடியோடு இணைந்த நம் கிளையின் பலனாலேயே நாம் இவ்வாறு பலன் தருகிறோம் என்ற எண்ணம் எப்போதும் நம்முள் இருக்க வேண்டும். கடைசி வரையிலும் கிளையோடும் செடியோடும் இணைப்பில் இருக்கும் கிளைகளே, இறுதியில் விதைத்தவனின் கையில் விளை பொருளாக மாறி மகிழ்வைத்தரும். கிளைகளாகிய நாம் நமது நற்செயல்கள்  என்னும் கனிகள் மூலம் வானகத்தந்தை என்னும் விதைத்தவன் கையில் தவழ்கிறோம்.
இறுதியாக , செடி நன்கு வளர அடிப்படைத்தேவை நல்ல மண் காற்று நீர் உரம் . இவை அனைத்தையும் செடி தன் வேர்கள் மூலமாக பெற்று தன் கிளைகளுக்கு ஊட்டச்சத்துக்களாகத் தருகின்றன. கிளைகள் அவற்றை கனிகளுக்கு தருகின்றன.
 அழுக்கு படிந்த மண், 
வெப்பக்காற்று, சுழல் காற்று, 
வரப்பு வழியே பாய்ந்து அனைத்து கசடுகளையும் அள்ளி வரும் நீர், 
புழு பூச்சி நாற்றம் நிறைந்த உரம் இவை அனைத்தையும் வேர்கள் ஏற்றுக் கொண்டு கிளைகளுக்கு செழிப்பையும், இலைகளுக்கு கொழிப்பையும் தருகின்றன. இறுதியில் கனிகளின் இனிப்பான  சதைப்பகுதியில் தனது அனைத்து உழைப்பையும் தேன்சுவையாகத் தருகின்றன. கிறிஸ்து என்னும் செடியோடு இணைந்து இருக்கும் போது நமக்கும் அவமானம் நிந்தை அவச்சொல் பாடுகள் துன்பம் எனும் பல அழுக்குகள் நம்மை சூழ நேரிடும் ஆனால் அவை அனைத்தையும் உரமாக நீராக காற்றாக ஏற்றுக் கொண்டு நமது நற்செயல்கள் மூலம் நல்ல கனி கொடுக்க முயல்வோம். 
இறையோடு இணைந்திருப்போம் இயற்கையாக.
செடியோடு இணைந்திருப்போம் செழுமையாக,
கிளையோடு இணைந்திருப்போம் மகிழ்வாக ,
கனி தந்து இணைந்திருப்போம் நிறைவாக. 
அலை இணைப்பில் அல்ல அன்பு இணைப்பில் ஒருவர் மற்றவருடன்  இணைந்திருப்போம் . இறைவன் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இணைந்திருந்து நல்ல கனி தரும்படி நம்மை வழிநடத்துவாராக ஆமென்.                

Friday, 20 April 2018

ஆடுகளா? ஆயன்களா? நாம் யார்?

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை நல்ல ஆயன்களாக, ஆடுகளாக வாழ இறைவன் அழைக்கிறார். நல்ல ஆயன் நானே என் ஆடுகள் என் குரலுக்கு செவிசாய்க்கின்றன என்று கூறியவர், இன்று அவர் குரலுக்கு செவிசாய்க்கும் ஆடுகளாக மாற நம்மை அழைக்கிறார்.
ஆடு;
   ஆடு ஏழைகளின் பசு. புல்வெளிகள் சாதாரண இடங்கள் தவிர மேட்டுப்பாங்கான இடங்களில் கூட ஆடுகளை வளர்க்க முடியும். ஆனால் பசு, காளை, எருமை போன்ற விலங்குகளை அதில் வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஆடு வளர்க்க அதிக பணம் தேவையில்லை. குறைவான முதலீடு, சிறிய இடம், எளிய கொட்டகை போதும். மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து விட்டு, கிடைத்ததை உண்டு கூடவே இருக்கும் ஒரு விலங்கு, என்பதை விட  ஏழைகளின் செல்லப்பிராணி என்றே கூறலாம். ஏழைகளின் அன்றாட செலவுக்கு உதவும் ஒரு பொருளாக, பாசம் காட்டி மகிழும் குடும்பத்து உறவாக, சொல்லப்போனால் ஏழைகளின் ஏடிஎம்மே ஆடுதான். ஏனெனில் உடனடி பணத் தேவையைப் பூர்த்தி செய்வதே அதுதான். பால், தோல், கறி என தொகைக்கேற்ப, தேவைக்கேற்ப தன்னையே இழக்கும் ஓர் உன்னத உறவு ஆடு. 
ஆயன்;
   சாதாரண மனிதன். ஆடுகளின் குரல் அறிந்தவன். அவற்றின் குரல் கொண்டே அதன் உடல் நலம் அறிபவன். அதன் செய்கைகள், சேட்டைகள் மூலமாக அதன் உணர்வுகளை உணர்பவன். ஆடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச்செல்பவன். செல்லும் இடம் பசுமையானதா?, தன் ஆடுகளின் சுவைக்கு உகந்ததா? என அறிவதோடு மட்டுமல்லாமல் செல்லும் பாதையையும் செழுமையான பாதையாக தேர்ந்தெடுப்பவன். காலாலும் கோலாலும் பாதையில் கிடக்கும் முள், கண்ணாடி போன்ற தீங்கிழைக்கும் பொருட்களை தூர எறிபவன். உயரமான மரக் கிளைகளை தன் கோல் கொண்டு இழுத்து பாதையிலேயே பசியாற்றுபவன். நெடுங்கழி கொண்டு தன் ஆடுகளை ஓநாய் போன்ற தீய எதிரிகளிடமிருந்து காக்கும் வலிமை பெற்றவன். சொல்லப்போனால் ஆடுகளின் அடையாளம், அரண் ஆயனே.  
இயேசு நல்ல ஆயனாக, தன்னை பாவித்து, தன் ஆடுகளாக நம்மைப் பராமரித்து வருகிறார். அவர் தான் ஒரு சிறந்த ஆயன் என்பதையும், ஆடுகளுக்காக உயிரையேத் தரும் ஆயன் என்பதையும் தனது வாழ்வால் நிரூபித்துவிட்டார். அவரைப் பிரதிபலிக்கும் நாம், சிறந்த ஆயன்களா? சிறந்த ஆடுகளா? என சிந்திக்க அழைக்கப்படுகிறோம். 
 நாம் ஆடுகளா?????
 அன்று ஆடுகளின் தேவையை ஆயன் அறிந்து பூர்த்தி செய்த காலம் போய் , இன்று ஆடுகளாகிய நாம் தாம், எனது தேவை இது இது என பட்டியல் இடுகிறோம் ஆயனாகிய ஆண்டவரிடம். பணம் வேண்டும், நகை வேண்டும், வேலை வேண்டும், வீடு வேண்டும் பட்டம் வேண்டும் பதவி வேண்டும். இதை எல்லாம் நீ செய்தால், மொட்டை அடிக்கிறேன், முழு நாள் விரதம் இருக்கிறேன், காது குத்துகிறேன், காசு தருகிறேன் என்று அவரிடமே வியாபாரம் பேசுகிறோம். இயேசு ஆடுகளாகிய நமக்கு ஆயனாக இருந்தார். அதே நேரம் தந்தை கடவுளின் திட்டத்திற்கு செம்மறியாக இருந்து தன்னையே அர்ப்பணித்தார். ஆக ஆயனும் அவரே, ஆடும் அவரே. இரண்டுமாக இருந்து தன்னையும் தன் வாழ்வையும் நமக்கு முன் மாதிரிகையாக காட்டியவர். தந்தையின் வழி நடந்து, இறைத்திருவுளத்தை நிறைவேற்றியவர். ஆனால் அவர் வழியைப் பின்பற்ற வேண்டிய நாம் திசைமாறிப் போகிறோம். ஆயன் காட்டும் வழியில் செல்லும் ஆடுகளாக இல்லாமல், ஆயனுக்கு வழிகாட்டும் ஆடுகளாக மாறிக் கொண்டிருக்கிறோம். ஆயன் முன் சென்று, ஆடுகள் பின் சென்றால், பாதையில் இருக்கும் ஆபத்துகள் விலக்கப்பட்டு, பயணம் பாதுகாப்பான பயணமாக இருக்கும். ஆனால் நாம் பணம் பதவி, பட்டம் வீடு வேலை போன்ற பாதையில் முன் செல்ல விரும்பி, ஆயனுக்கு முன் நடக்கும் ஆடுகளாகிறோம். விளைவு, பயணத்தில் கரடு முரடு, முள்ளும் புதரும் நிறைந்த காட்டினூடே பயணம் என துன்புறுகிறோம். பாதையை நாமே தேர்ந்தெடுத்துவிட்டு, பழியை ஆயன் மேல் போடுகிறோம்.
நாம் ஆடுகளெனில், 
நல்ல ஆயனைப் பின் தொடரும் நல்ல ஆடுகளாவோம்.
செல்லும் பாதையை ஆயனே தேர்ந்தெடுக்க விடுவோம்.
கொட்டகையின் நுழைவாயில் வழி வருபவனே உண்மையான ஆயன். வேற்று வழியில் வருபவன் ஆயனல்ல என்பதை உணர்வோம்.
ஓநாயைக் கண்டு சிதறி ஓடாது, ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து, ஓநாயை விரட்ட முயல்வோம். 
நாம் ஆயன்களா????
 நாம் ஆயன்கள் தாம் அதுவும் சாதாரண ஆயன்கள் அல்ல . பரம்பரை ஆயர்கள். நம் முதல் பெற்றோர் பெற்ற பிள்ளையான ஆபேல் தொடங்கி ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு மோசே என தாவீது முதல் தாய் மரியின் மைந்தன் இயேசு வரை அனைவரும் ஆயர்களே. அவர் வழி வந்த நாமும் ஆயர்களே. பிள்ளைகளுக்கு பெற்றோர்கள், மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தொழிலாளிக்கு முதலாளி பெண்ணுக்கு ஆண் என நாம் அனைவரும் ஒருவகையில் ஆயன்களே. ஆயர்களாக இருந்தவர்களே ஆண்டவர் அழைப்பைப் பெற்றார்கள். மந்தையை மாண்புடன் காத்தார்கள். நாம் எப்படி இருக்கிறோம்? சொந்த மந்தையை மேய்க்கும் ஆடுகளாக இல்லாமல் பல நேரங்களில் கூலிக்கு வேலைபார்க்கும் ஆயன்கள் போலத்தான் நாம் செயல்படுகிறோம். அதிக லாபத்திற்கும் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சொந்த மக்களை ஓநாய்களிடமே ஒப்படைப்பவர்களாகிறோம். நான் நலமாய் இருந்தால் போதும் என்றெண்ணி, மந்தையை மாற்றானிடம் விற்றுவிடுபவர்களாகிறோம். கோலும் கழியும் பாதையில் பசியாற்ற, பாதுகாக்க என்பதை மறந்து, அதைக் கொண்டே மந்தையைக் காயப்படுத்துபவர்களாகிறோம். மந்தைக்கு செழுமையான பாதையை, பசும்புல் வெளியைக் காட்டாது, தான் மட்டும் இளைப்பாற பசியாற இடம் தேடும் சுயநலமுள்ள ஆயனாகிறோம். 
நாம் ஆயன்கள் எனில்!!!!!
சொந்த மந்தையை பிள்ளை போல் கண்ணும் கருத்துமாக காப்பவர்களாவோம்.
சிங்கம் புலி போன்று நேரடியாக தாக்கும் விலங்குகள் மட்டுமல்லாது ஓநாய் போன்று மறைமுகமாக தாக்குபவர்களிடமிருந்தும் மந்தையைக் காப்பவர்களாவோம். 
மந்தைகளின் திறன், நலன் அறிந்து செயல்படுபவர்களாவோம்.
நமக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராயிருக்கும் நம் மந்தைகளுக்காக நம் உயிரைக்கொடுக்கவும் விழிப்பாயிருப்போம். 
நாம் மந்தைகளாக மட்டுமல்ல மாண்புள்ள பிள்ளைகளாக வாழ அழைக்கப்படுகிறோம்.
ஆயன் களாக மட்டுமல்ல ஆண்டவரின் அன்பு சீடர்களாக மாற அழைக்கப்படுகிறோம்.
ஓநாய் போன்ற குணமுள்ள கொடிய மிருகங்கள் இன்றும் நம் நடுவில் மனித உருவில் நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றன. அவைகள் ஆஷிபா போன்ற எண்ணற்ற இளம் செம்மறிகளை வேட்டையாடிக் கொண்டும், ஆலைகள் என்ற பெயரில் நம் அடிப்படை உரிமைகளை அழித்துக் கொண்டும், அணைகள் என்ற முறையில் நம் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டும் தான் இருக்கின்றன. நாம் ஆடாக இருந்தால் ஒற்றுமையாக சேர்ந்து  ஓநாய்களை எதிர்ப்போம். ஆயனாக இருந்தால் ஓங்கிய புயத்துடனும் வலிமையுடனும், நெடுங்கழியும் கோலும் கொண்டு அவைகளை ஒழிப்போம்.       
நமது வாழ்க்கையில் நாம் பலமுறை சந்தோஷப்பட்டிருப்போம். நம்மைக் குறித்தும் நம் வாழ்வைக் குறித்தும். ஆனால் ஒரு சில நேரங்கள் மட்டுமே அதைக் குறித்து பெருமை அடைந்திருப்போம். பெருமை அடைவது சந்தோசத்தை விட வலிமையானது,சிறப்பானது. நாம் நல்ல ஆயன்களாக நல்ல ஆடுகளாக வாழ்வதில் நம் இறைவன் சந்தோசமல்ல பெருமைப்படும்படி நாம் வாழ வேண்டும். என் மகள்/ மகன்,நல்ல ஆயன்/ நல்ல மந்தை என்று சொல்லுமளவுக்கு வாழ வேண்டும். அதற்கான அருளை அவரிடம் கேட்போம். ஆண்டவரின் அருள் நலமும் பேரன்பும் நமது வாழ்நாள் முழுவதும் நம்மையும் நம் குடும்பத்தார் அனைவரையும் புடை சூழ்ந்து வரட்டும் ஆமென்.        

Friday, 13 April 2018

வைர‌ விழா வாழ்த்து க‌விதை .

வைர‌ விழா கொண்டாடும் முத்துவிற்கு
முத்தான‌ வைர‌ வ‌ரிக‌ள் கொண்ட‌ வாழ்த்துக‌ள்.
வைர‌ விழா  வாழ்த்து க‌விதை .

முத்து ப‌ட்டின‌த்தில் பிற‌ந்த‌ முத்தே ,
மூத்தோரின் ந‌ற்குண‌ம் பெற்ற‌ சொத்தே,
நேச‌மாய் ப‌ணி செய்ய‌ இயேசு ச‌பையில்
சேர்ந்த‌ பாக்கிய‌த்தின் புத‌ல்வ‌ரே,
ஆன்மீக‌ ப‌ணி செய்து ப‌ல‌ ஆன்மாக்க‌ளை
மீட்ட‌ அன்ன‌ம்மாளின் ஆருயிர் புத்திர‌ரே,
இணைய‌த்தின் இணைப்பு இல்லாத‌ போதே
இய‌க்குந‌ராய் திருஇருத‌ய‌ செய்திக‌ளைத் த‌ந்து,
இவ்வுல‌கை இத‌ய‌த்தால் இணைத்து ம‌கிழ்ந்த‌வ‌ரே.
புல‌ன‌மும் முக‌நூலும் வ‌ந்த‌து இன்று உம் ப‌ணியால்
மன‌ந‌ல‌மும் அக‌புத்த‌க‌மும் கொண்டு சிற‌ப்பு செய்தீரே அன்று.
ப‌ங்குத்த‌ந்தையாய், ம‌றையுரை ம‌ன்ன‌ராய்,
ஆன்மீக‌ குருவாய், திரு இருத‌ய‌ செய்தி இய‌க்குன‌ராய்,
குண‌ப்ப‌டுத்தும் குண‌சீல‌ராய், ஆலோச‌க‌ராய், நீர் எடுத்த‌ அவ‌தார‌ங்க‌ள் அனைத்திலும் வெற்றி பெற்ற‌வ‌ரே,
அறுப‌தாண்டுக‌ள் அய‌ராது ப‌ணி செய்து
அன்ப‌ர் ப‌ணியை அகில‌ம் ப‌ர‌ப்பிய‌வ‌ரே,
வைர‌ விழா ம‌ட்டும‌ல்ல‌ உம் அன்பால்
ப‌வ‌ள‌ விழா, நூற்றாண்டு விழா காண‌ வாழ்த்துகிறோம்.
அன்பும் அமைதியும் உம்மில் நிலைக்க‌,
ஆண்ட‌வ‌ர் அருள் உம்மேல் ஓங்கிட‌,
அற்புத‌ங்க‌ள் ப‌ல‌ உம‌க்கும் , உம்மால்
பிற‌ருக்கும் ந‌ட‌ந்தேற‌ உம‌க்காய் வேண்டி செபிக்கிறோம் வாழ்த்தி வ‌ண‌ங்குகிறோம்.........
prayer song 
வேண்டுத‌ல் வேண்டாமை இலான‌டி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல‌ எனும் வ‌ள்ளுவ‌ரின் வாக்கிற்கிண‌ங்க‌, இறைவ‌னை இறுக‌ப்ப‌ற்றி, இரு முப்ப‌தாண்டுக‌ள்(மூவிருப‌து) இறைத்தொண்டாற்றிய‌வ‌ர் ந‌ம் அருட்த‌ந்தை. அவ‌ரின் வைர‌ விழா ம‌கிழ்வில் திளைத்திருக்கும் இந்நேர‌த்தில் இறைத்துணை நாடி பாட‌ வ‌ருகின்ற‌ன‌ர். .....
வ‌ர‌வேற்புரை.
வ‌ந்தாரை வ‌ர‌வேற்ப‌து த‌மிழ‌ர் ம‌ர‌பு, வ‌ர‌வேற்று ம‌கிழ்வோடு ம‌ன‌நிறைவையும் த‌ருவ‌து எம் சீமையின் ம‌ர‌பு. சில‌ர‌ப் பார்க்க‌த் துடிக்கிறோம். ப‌ல‌ரைப் பார்த்தாலே துடிக்கிறோம். அவ்வ‌கையில் அருட்த‌ந்தையின் அன்பாலும் ப‌ணியாலும் ஈர்க்க‌ப்ப‌ட்டு அவ‌ரைப் பாராட்ட‌ , அவ‌ர் ம‌கிழ்வில் ப‌ங்கு கொள்ள‌ வ‌ந்திருக்கும் உங்க‌ளை வ‌ர‌வேற்று ம‌கிழ்வையும் ம‌ன‌நிறைவையும் த‌ர‌ வ‌ருகிறார் எம் சிவ‌க‌ங்கை சீமையின் ...... 
வ‌ர‌வேற்பு ந‌ட‌ன‌ம்.
ச‌ங்க‌த்த‌மிழ் இய‌ல் இசை நாட‌க‌ம் எனும் முப்ப‌ரிணாம‌முடைய‌து. ( வாயாலும் வார்த்தையாலும்) நாவாலும் ந‌ற்சொல்லாலும் வாழ்த்திய‌து போதாது என்றெண்ணி ந‌ளின‌த்தாலும் இசை ந‌ட‌னத்தாலும் வ‌ர‌வேற்க‌ வ‌ருகின்ற‌ன‌ர்.......எம்.....
க‌விதை.
வாழ்க்கையில் வெற்றி பெற‌ வேண்டுமா? சுருக்கமாக‌ பேசி நிறைய‌ செய‌லாற்றுங்க‌ள் என்ற‌ வார்த்தைக்கு சொந்த‌க்கார‌ர் ந‌ம் அருட்த‌ந்தை. அவ‌ரின் வாழ்வை ப‌ணியை வார்த்தைக‌ளாக‌ சுருக்கி , க‌விந‌ய‌த்தோடு சொல்ந‌ய‌ம் சேர்த்து க‌விதையாக‌ த‌ர‌ வ‌ருகின்றார். எம்......
வாழ்த்து.
வாழ்க்கையில் நாம் ச‌ந்திக்கும் ஒவ்வொரு ம‌னித‌ரும் ஏதோ ஒரு வ‌கையில் ஒன்றை ந‌ம‌க்கு க‌ற்பித்து விட்டு தான் செல்கின்ற‌ன‌ர். அவ்வ‌கையில் த‌ங்க‌ளோடு வாழ்ந்த‌போதுஅருட்த‌ந்தை விட்டுச்சென்ற‌ நன்மைக‌ளை வார்த்தை ம‌ணிக‌ளாக‌ தொடுத்து வாழ்த்து மாலை சூட‌ வ‌ருகின்றார். எம்.......
ந‌ட‌ன‌ம்.
எதையும் சிந்தித்து செய்தால் கிடைப்ப‌து வெற்றி, செய்துவிட்டு சிந்தித்தால் கிடைப்ப‌து அனுப‌வ‌ம் . ஆக‌ வெற்றி அனுப‌வ‌ம் இர‌ண்டையும் அறுப‌தாண்டுகால‌ துற‌வ‌ற‌ வாழ்வில் நிறைவாக‌ பெற்று வ‌ள‌மாய் வாழ்ந்த‌ அருட்த‌ந்தையின் ம‌கிழ்வோடு நம்‌ ம‌ன‌ம் சேர்க்க‌ ந‌ட‌ன‌மாட‌ வ‌ருகின்ற‌ன‌ர்,,,எம் .....
ப‌ற்றுக‌ ப‌ற்ற‌ற்றான் ப‌ற்றை அப்ப‌ற்றை ப‌ற்றுக‌ ப‌ற்று விட‌ற்கு என்ப‌த‌ற்கேற்ப‌ இறைவ‌னைப் ப‌ற்றி இனிமையாக‌க‌ வாழ்ந்த‌வ‌ர் . இனிவ‌ரும் கால‌ங்க‌ளிலும் அவ‌ர் இறை அன்போடு உடல் ‌ உள்ள ந‌ல‌ம் பெற்று வாழ‌ வாழ்த்துகிறோம்....
வாழ்க்கை‌ என்ப‌து சாகும் வ‌ரை அல்ல‌ நாம் பிற‌ர் ம‌ன‌தில் வாழும்வ‌ரை... என‌ப‌த‌ற்கு எடுத்துகாட்டு ந‌ம் அருட்த‌ந்தை......
உற‌வுக‌ளோடு இருக்கும்போது, இறைவ‌னின் பார்வை ந‌ம் மேல் இருக்கும். த‌ன்ன‌ந்த‌னியாக‌ இருக்கும்போது இறைவ‌னே ந‌ம்மோடு இருக்கின்றார்.... உற‌வுக‌ளை விட்டு துற‌வு மேற்கொண்டாலும் இறை உற‌வு அத்த‌னை உற‌வுக‌ளையும் நம‌க்கு மீண்டும் த‌ருகிற‌து என்ப‌தை மெய்ப்பித்த‌வ‌ர் ந‌ம் த‌ந்தை.....

நலமானதை எங்களுக்கு அருள்பவர் யார்?


பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்
மறையுரைச்சிந்தனை

                                                                                                       சகோதரி மெரினா. 

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உண்மையான அன்பு உள்ளங்களே, பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் . இந்நாளில் எம்மாவூஸ் சீடர்களோடு உடன் பயணிப்பவர்களாய், உயிர்த்த இயேசுவின் தரிசனம் பெறுபவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவோடு எம்மாவூஸுக்கு பயணம் செய்த சீடர்கள் வழியில் இயேசுவைக் கண்டு , குறிப்பாக அப்பம் பிடும் செயல் மூலம் அவரைக்கண்டு கொண்டு எருசலேம் திரும்புகின்றனர். மற்ற சீடர்களோடு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இயேசு அவர்கள் அனைவருக்கும் காட்சியளிக்கிறார். எம்மாவூஸ் நோக்கிப் புறப்பட்ட அவர்கள் பயணம் நினைத்தது போல் முடியவில்லை. வெற்றி பெறவில்லை. ஆனால் அதுவே ஓர் மிகப்பெரிய அனுபவமாக மாறி அவர்கள் வாழ்வை வெற்றி பெற வைத்தது.  உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலும் அது தரும் அனுபவமும் நமது வாழ்க்கையை , வாழ்க்கைப்பாதையை மாற்றிப் போடக்கூடிய அளவுக்கு வல்லமை வாய்ந்தது என்பதே ஆணித்தரமான உண்மை. 
காணொளி ஒன்றில் கண்ட செய்தி ஒன்றினைக் கூறி எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன். தொலைதூர நெடுஞ்சாலைப் பயணம். இளம் தம்பதியர் இருவர் தங்களது மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இருமருங்கும் காட்டு மரஞ்செடிகொடிகள், அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணம், இனிய இசை என விரைந்து செல்கிறது மகிழுந்து. திடீரென்று சாலையின் நடுவில் ஒரு பெண், கை கால் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளமாய் காட்சியளிக்கிறாள். கண்களில் கண்ணீர் மல்க, கை கூப்பி உதவி கேட்டு மன்றாடுகிறாள். இளகிய மனம் கொண்ட அவர்கள் வண்டியை விட்டு இறங்கி உதவ விரைகின்றனர். தாயானவள் தூரத்தில் தெரிந்த ஒரு வண்டியைக்காட்டி கண்ணீர் சிந்துகிறாள். விரைந்து சென்று விபரம் என்னவென்று அறிகின்றனர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மகிழுந்து தடம் மாறி காட்டு மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வண்டியை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார். மோதிய வேகத்தில் வண்டியின் ஜன்னல்களும் கதவுகளும் இறுக மூடிக்கொள்ள, வண்டியினுள்ளே ஒரு குழந்தையானது மூச்சுவிட சிரமப்பட்டு உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறது. சூழ்நிலை புரிந்த தம்பதியினர், கண்ணாடிகளை உடைத்து குழந்தையைக் காப்பாற்றுகின்றனர். ஓட்டுநர் இடத்தில் அமர்ந்தவாறு இறந்திருந்த பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் திடுக்கென்று இருந்தது அவர்களுக்கு . ஏனெனில் எந்தப் பெண் தங்களது வண்டியை நிறுத்தி உதவி கேட்டு கண்ணீர் சிந்தினாரோ, அந்த பெண்ணே ஓட்டுநர் இடத்தில் இறந்து கிடந்தார். அக்குழந்தையின் தாயே அவர். தான் இறந்த பின்பும் தன் குழந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என துடிப்பது தாயின் உள்ளம் மட்டுமே. ஆவியாக மாறினாலும் தாய் எந்நிலையிலும் தாய் தான் என்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. தாயின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் எதையும் கூற முடியாது. அதே தாயன்பைத் தான் இன்றைய விவிலிய நிகழ்வில் இயேசுவினிடத்தில் நாம் காண்கிறோம். 
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு இணையான பாசத்தை மூன்றாண்டுகாலம் தன் சீடர்கள் மேல் காட்டியவர் இயேசு. சிறு குழந்தை போல் அவர்களுக்கு எல்லாவிதமான பயிற்சியும் வாய்ப்பும் கொடுத்து வளர்த்தவர். தான் இறந்த பின்பும் தனது சீடர்கள் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணியவர், விரும்பியவர். எனவே தான் யூதர்களின் மிரட்டல், உரோமை அரசின் அதிகார அடக்குமுறை, தலைமை குருக்களின் கண்காணிப்பு, போன்ற கெடுபிடிகளுக்கு மத்தியில் தங்களுக்கு யார் உதவுவார்? என்று எண்ணி வருந்திய அவர்களுக்கு மகிழ்வளிக்க உயிர்த்த இயேசு காட்சியளிக்கிறார். இன்றைய திருப்பாடல் வரிகளில் வருவது போல நலமானதை எங்களுக்கு அருள்பவர் யார்? என எண்ணி வருந்திய அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அருள் ஆசீர் தருகிறார். 
வாழ்வில் சவால்களை சந்திக்கின்ற மனிதர்கள் ஏராளம். அவர்கள் அனைவரின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று. எங்களுக்கு நன்மை செய்பவர் யார்? என்பதே. இன்று தமிழக மக்களாகிய நம் அனைவர் மனங்களிலும் எழுந்திருக்கக்கூடிய கேள்வியும் இதுதான். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், காவிரி நதிநீர் மேலாண்மை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் என நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இது அனைத்திலுமிருந்து நம்மை மீட்பவர் யார்? இத்தனை தீமைகளுக்கும் மத்தியில் எம் தமிழக மக்களுக்கு நன்மை தருவது யார் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம், எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு உயிர்த்த இயேசுவாக தோன்றி திடமளிப்பவர் யார்? அவர் அனுபவமாக மாறப்போவது எது? சிந்திப்போம்.
இயேசு சீடர்களோடு அமர்ந்து உண்கிறார். அன்றைய காலத்து எளிய மக்களும் உண்ணும் உணவு  மீன். இயேசு பிறக்கும் போது மட்டுமல்ல, இறந்து உயிர்த்த பின்பும் எளியவராகவே வாழ்கிறார் என்பதை உணர்த்துகிறது இச்செயல். கொஞ்சம் பணமும் பதவியும் புகழும் வந்தாலே, பேச்சும் மிடுக்கும் தோரணையும் மாறிவிடும் இக்காலத்தில் இயேசு இறந்து  உயிர்த்து இறைமகனாக மாட்சி பெற்றும், எளியவராகவே காட்சி தருகிறார். உறவினர்கள் வீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் போது கை நனைத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக நமது ஊர்களில் கருதப்படும். விருந்தில் கை நனைக்காமல் அதாவது உணவு உண்ணாமல் ஒருவர் சென்றுவிட்டாரென்றால் விழா கொண்டாடும் நபரோடு அவருக்கு இனி உறவு இல்லை என்று அர்த்தம். அதுவே விருந்து உண்டு மகிழ்ந்தார் என்றால் உறவு புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது ,தொடர்கிறது என்று அர்த்தம். 
சீடர்கள் தங்களது உயிர்த்த இயேசுவின் அனுபவத்தை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் தருணம், இயேசு அவர்கள் மகிழ்வில் பங்கு கொள்கிறார். தான் இறந்து உயிர்த்த பின்பும் அவர்களுடனான உறவு நீடிக்கும், தொடரும் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்.அதே போல் அனுதினமும் திவ்ய நற்கருணை மூலமாக நம்முள் வந்து தங்கி, நம்முடனான உறவையும் புதுப்பித்துக் கொள்கிறார். நாம் அதை உணர்கிறோமா? அவருடனான உறவைப் புதுப்பிக்கின்றோமா? 
அன்று சீடர்களுக்கு தோன்றி கலங்காதீர்கள் பயம்கொள்ளாதீர்கள் என்று கூறி திடப்படுத்தியவர், எலும்பும் சதையுமான தனது உடலைத் தொட்டு நம்பிக்கை பெறச்செய்தவர், இன்று நமக்கும் திட மூட்டுகிறார். நம்பிக்கை தருகிறார். அன்று உண்மைக்கு சாட்சியம் பகிரவே நான் வந்தேன் என்று கூறியவர், இன்று இக்காலத்து சீடர்களாகிய நம்மைப்பார்த்து சொல்கிறார் நீங்களே  இதற்கு சாட்சிகள் என்று. இன்றைய நமது ஒவ்வொரு செயல்பாடுகளும் நமது வருங்கால சந்ததியினருக்கு சாட்சியமே .  சாட்சியம் சொல்லுதல் என்பது கொடை ஒரு புது வாழ்வு. சாட்சியம் கூறுபவனுக்கும் அதனால் பயன் பெறுபவனுக்கும் ஒரு கொடையாக புது வாழ்வளிப்பதாக மாறுகிறது. நமது வாழ்வு புது வாழ்வாக மாற, கொடையாக பொலிவடைய நாம் உண்மையின் சாட்சிகளாக மாற வேண்டும். 
எவ்வாறு உயிர்த்த இயேசு திகிலும் மனக்கலக்கமும்  கொண்டிருந்த சீடர்களுக்கு தைரியமும் மனத்திடமும் கொடுத்தாரோ, அதே போல் நமக்கும் தருவார் என நம்புவோம். எங்களுக்குத் தலைவராக இருந்து வழிநடத்திய இயேசு இறந்து விட்டார் . இனியார் எங்களுக்கு தலைமை தாங்குவார்? என்று எண்ணி கலங்கிய சீடர்களையே தலைவர்களாக மாற்றுகிறார். பாவ மன்னிப்பு பெற மனம் மாறுங்கள் என்று கூறி உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்ற சீடர்களாக அல்ல, தலைவர்களாக அல்ல, மக்கள் பணி செய்யும் பணியாளர்களாக அனுப்புகிறார். அவர்கள் தலைவர்களாக, முன் மாதிரிகைகளாக உருமாறுகிறார்கள். நாமும் உருமாறுவோம் . நலமானதைப்பெற, நன்மையை பிறருக்கு தர உண்மையின் சாட்சிகளாவோம்.
நலமானதை நமக்கு அருள்பவர் இறைவன் ஒருவரே. அந்த இறைவனின் அருளை நாம் பெற உயிர்த்த இயேசுவின் திருமுக ஒளி நம்மீது படுபவர்களாக நாம் மாற வேண்டும். பள்ளிப் பருவத்தில் குழி ஆடி, குவி ஆடி எனும் இரண்டு லென்ஸுகளைப் பற்றி நாம் படித்திருப்போம். ஒன்று ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும் . மற்றொன்று ஒளியைக் குவித்து நெருப்பாக மாற்றும். நாம் உயிர்த்த இயேசுவின் திருமுக ஒளியைப் பெறுபவர்களாக மாறும்போது அதை பிறருக்கு பிரதிபலிக்கும் லென்சாகவும், அவ்வொளியால் தீமையை சுட்டெரித்து சுடர்விட்டு எரியும் நெருப்பாகவும் மாறவேண்டும் . தான் மட்டும் நலமாய் இருந்தால் போதும் என்று நினைப்பவரைக் காட்டிலும்  தானும் நலமாய் வாழ்ந்து ,தன்னைச்சுற்றிலும் இருப்பவர்களையும் நலமாய் வாழ வைக்க எண்ணும் நல் இயேசுக்களாய் வாழ  முற்படுவோம்.  நலமனைத்தையும் தரும் உயிர்ப்பின் ஆற்றல் நம்மேலும் நம் குடும்பத்தினர் அனைவர் மேலும் இருந்து வழிநடத்துவதாக ஆமென்.   

Friday, 6 April 2018

ஆண்டவரைக் கண்டோம்.

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா
 ஆண்டவரைக் கண்டோம். 
மகத்தான காரியங்களின் பிறப்பிடம் மகத்தான நம்பிக்கை. நம்பிக்கை- இதற்கு பெயர் போனவர் தோமையார். ஏனெனில் கிறிஸ்துவைப் பற்றிய போதனையை நமக்கு அறிவித்து நம்மை கிறிஸ்தவர்களாக மாற்றியவர் தோமையார். நாமெல்லாம் தோமையார் வழிவந்த கிறிஸ்தவர்களே. நம்பிக்கை இதற்கு எதிர்ப்பதமான சந்தேகம் இதற்கும் அவரையே முன்னுதாரணமாக நாம் குறிப்பிடுகிறோம். ஏனெனில் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் . தீர விசாரிப்பதே மெய் என்ற கொள்கை உடையவராய் இருந்தாரோ என்னவோ? சீடர்களின் பேச்சை நம்பாமல், தானே கையால் தொட்டு உயிர்த்த இயேசுவை  உணர வேண்டும் என்று கூறி வந்தார். அதனால் தான் எதையும் நம்பாமல் இருந்தால் சந்தேக தோமையார் என்று கூறுகிறோம். ஆனால் அதிக நம்பிக்கை உடையவர்களை நம்பிக்கை கொண்ட தோமையார் என்று ஒருபோதும் அழைப்பதில்லை. 
நம்பிக்கை சந்தேகம் இந்த இரண்டையும் பெற்ற ஒரு மனிதன் வாழ்வில் நிம்மதியாக வாழ முடியுமா? முடியும் என்பதை நிருபித்திருக்கிறார் தோமையார். இயேசு உண்மையிலேயே உயிருடன் எழுப்பப்பட்டாரா என்ற சந்தேகம் சீடர்களுக்கு . இயேசு தான் பட்ட பாடுகள் துன்பங்களின் வழியாக மீட்பை அடைந்தாரா? உயிர்த்து எழுந்தாரா ? என்ற சந்தேகம் தோமையாருக்கு. இயேசுவின் மேல் நம்பிக்கையும் கொண்டார் . அவர் தனக்கும் காட்சி தருவாரா என்று ஐயமும் கொண்டார். சந்தேகம் கொண்டார் அதில் தெளிவு பெற்றதும் இரட்டிப்பு மடங்கு நம்பிக்கை கொண்டார். 
நாமும் பல வேளைகளில் நம்மை அறியாமலேயே சந்தேகத்தோடும் நம்பிக்கையோடும் பயணிக்கிறோம். பூட்டிய வீட்டில் பூட்டை மீண்டும் இழுத்துப் பார்க்கும் போது, செல்போனில் சார்ஜ் போட்டு விட்டு ஏறுகிறதா என்று மறுபடியும் பார்க்கும் போது. இவையெல்லாம் நமது செயலை நாமே சந்தேகப்படுவதால் அல்ல. மாறாக மீண்டும் ஒரு முறைப் பார்க்கும் போது நமது  நம்பிக்கை இரட்டிப்பாகிறது. மறுமுறை சந்தேகம் வராமல் பாதுகாக்கப்படுகிறது என்பதற்காக. பேருந்தில் பயணிக்கும்போது இந்த இடத்தில் இத்தனை மணிக்கு இருப்பேன் என்ற நம்பிக்கை . அலாரம் வைக்கும் போது மறு நாள் இந்த வேலைகளை நான் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை. இப்படியாக நமது வாழ்க்கை நம்பிக்கை சந்தேகம் என்ற இரு கடிகார முட்களை கொண்டு சுற்றி வருகின்ற கடிகாரம் போலாகிறது. ஆனால் அது இயங்க இயேசுவின் உயிர்ப்பு ஆற்றல் என்னும் பாட்டரி தேவை. 
 நம்பிக்கை கொள்ள வேண்டிய இடத்தில் நம்பிக்கையும், சந்தேகம் கொள்ள வேண்டிய இடத்தில் சந்தேகமும் கொண்டிருந்தால் வாழ்க்கை நிம்மதியாகும் . ஆனால் பலர் நம்பிக்கைக்கு பதில் சந்தேகமும் , சந்தேகத்துக்கு பதில் நம்பிக்கையும் கொண்டிருப்பதால் தான் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
உயிர்த்த இயேசு சீடர்களுக்கு காட்சி அளிக்கிறார். தோமையார் அங்கு இல்லை . அவர் வந்ததும் சீடர்கள் தங்கள் அனுபவங்களை அவருக்கு எடுத்துரைக்கின்றனர். இயேசு சொன்னதை விடுத்து இவர்கள் கண்டதையும் , மனதில் ஆழமாகப் பதிந்ததையும் அவருக்கு கூறுகின்றனர். நாங்கள் ஆண்டவரைக் கண்டோம். அவர் காயங்களைக் கண்டோம் .  இது தான் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து இருந்தது. இதன் மூலம் தோமையாரின் ஆவலை உயிர்த்த இயேசுவைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறார்கள். 
ஒரு நாள்  எங்களது பள்ளியில் நான்கு வயது சிறுமி ஒருத்தி கையடக்கமான சிறு குரங்கு பொம்மை ஒன்றை தன்னுடன் எடுத்து வந்தாள். அதை தனது நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்தாள். பட்டன் ஒன்றை அழுத்தினால்  அது கத்தும் .ஆனால் அதை  அக்குழந்தை , தான் பேசுவதற்கு குரங்கு பதில் சொல்வதாக கூறி மகிழ்ந்து வந்தாள். அடுத்த நாள். மேலும் இருவர் அதே போல் பொம்மை வைத்திருந்தனர். அடுத்த நாள் இந்த பொம்மை எங்கு கிடைக்கும், எவ்வளவு பணம் என்பன போன்ற பேச்சுக்கள் நிறைந்திருந்தன. அடுத்த மாதம் ஏறக்குறைய எல்லா குழந்தைகளிடத்திலும் அதே மாதிரியான பொம்மை இருந்தது. ஒரு குழந்தையின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் கூறியது , ஆசையாக அல்ல அடம் பிடித்ததாலேயே வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. எல்லோரும் வைத்திருக்கிறார்கள் அதனால் எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம். 
சாதாரண ஒரு பொம்மையை ஒரு குழந்தை எவ்வளவு பெரிதுபடுத்தி பிறரிடம் கூறி மகிழ்கிறது. தான் பார்த்த அந்த பொம்மை போல் தனக்கும் வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு அதை அடைய முயற்சிக்கிறது. நாமும் அப்படி தான் பல வேளைகளில் கண்ணால் பார்ப்பதை கையால் தொட முயற்சிக்கிறோம் . அதற்கும் மேல் அதை நம்முடையதாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்கிறோம். சீடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மூன்றாண்டுகள் இயேசுவோடு உடனிருந்தவர்கள். சிறு குழந்தை போல் அவர் சொல் கேட்டு அதன்படி நடந்தவர்கள். இறந்து உயிர்த்தெழுந்து அவர்கள் முன் தோன்றிய பொழுது எப்படி மகிழ்ந்திருப்பார்கள். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இடம் தேடுகிறார்கள். யூதர்களிடமோ பிற மக்களிடமோ சொல்ல முடியாது. தோமையார் அவர்களோடு இல்லை என்பதை கண்டறிந்து அவரிடம் சொல்கின்றனர். தங்களின் உள்ள மகிழ்வை வார்த்தையால் வடிக்கின்றனர். அவரது உடல் உடை பற்றி வருணனை, விளக்கம் புகழ்ச்சி என சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் மற்ற எல்லாவற்றையும் மறந்தனர். தூய ஆவியை அவர்கள் மேல் ஊதியதைப் பற்றியோ, உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று சொன்னதையோ, பாவங்களை மன்னிக்கும் அருட்கொடையை அளித்ததைப் பற்றியோ எதுவும் கூறவில்லை. மாறாக ஆண்டவரைக் கண்டோம் இது ஒன்றே அவர்களின் நாம செபமானது. 
இவர்களின் வர்ணனையால் கவரப்பட்ட சிறு பிள்ளையாய் தோமா. நீங்கள் கண்ணால் கண்டீர்கள் நான் கைகளால் தொடுவேன். என் உள்ளத்தால் உணர்வேன் என்று சபதமிடுகிறார். 
சேயின் குரல் கேட்டு சேவை செய்யும் தாயாய், உயிர்த்த இயேசு மீண்டும் தோமாவிற்கு காட்சி தருகிறார் சீடர்களோடு. தனது உள்ளக் குமுறலையும் எண்ணக் கலவையையும் நிறைவேற்றிய ஆண்டவரைப் போற்றி , நீரே என் ஆண்டவர், நீரே என் தேவன். என்று புகழ்கிறார்.
சீடர்கள் வீட்டின் அறைக்கதவுகளை மூடி உள்ளே இருந்தனர். இளஞ்செடிகள் ஆடு மாடு போன்ற விலங்கினங்களால் பாதிக்கப்படாமல் இருக்க சிறு இரும்புக் கூடு ஒன்று செய்து அதை மெல்லிய துணியால் மூடி இருப்பர். செடி தளைத்து வளரும் வரை அது இருக்கும். பின் அகற்றப்பட்டுவிடும். 
உயிர்த்த இயேசுவின் அன்பிலும் அருளிலும் வளர தயாராகிக் கொண்டிருக்கும் இளஞ்செடிகளான சீடர்கள், எங்கே யூதர்கள் ரோமானியர்கள் எனும் கொடிய விலங்கினங்களால் பாதிக்கப்படுவோமோ என்று எண்ணி பயந்து கொண்டிருக்கின்றனர். அறைக் கதவுகளுக்குள் தங்களை அடைத்து வைத்திருக்கின்றனர். உயிர்த்த இயேசுவின் ஆற்றலும் , அமைதியும் அவர்களுக்குள் வந்து தங்கி அவர்களின் நம்பிக்கை வாழ்வை உயர்த்தியதும் வெளியேவருகின்றனர். துணிச்சலுடன் பறைசாற்றுகின்றனர். 
 தோமையார் சொல்லின் செல்வர். நற்செய்தியில் நான்கு இடங்களில் மட்டுமே பேசி இருந்தாலும் அவை அனைத்தும் மிக முக்கியமான வார்த்தைகளாகக் கருதப்படுகின்றன. நாமும் பல இடங்களில், பல மணி நேரங்கள் பேசுகிறோம் . நமது சொல் நமக்கோ நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கோ நற்தூண்டுதலை அளித்திருக்கிறதா? 
அன்னை மரியாள் அன்று ஆகட்டும் இதோ ஆண்டவரின் அடிமை என்று கூறி மனுக்குலத்திற்காக மனுமகனைக் கருத்தரித்தார். தோமையாரோ நீரே என் ஆண்டவர் நீரே என் இறைவன் என்று நம்பிக்கை அறிக்கை விட்டு கிறிஸ்தவர்களாகிய நம்மை கருத்தரித்தார். பிறக்கும் போது எவனும் முழுமையான கிறிஸ்துவனாக பிறப்பதில்லை மாறாக கிறிஸ்துவுக்குள்  மாற்றம் அடையும் போதே முழுமையான கிறிஸ்தவனாகிறான். தோமையார் வழி வந்த நாம் ஆண்டவரைக் கண்டு நமது நம்பிக்கை அறிக்கையை வெளியிடுவது எப்போது?
உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று கூறினார் உயிர்த்த இயேசு அன்று. அவர் சொன்ன அமைதி அவர்களிடம் குடியேறியது. பல மாற்றங்களைக் கண்டனர். ஏனெனில் அமைதியை பெறக் கூடிய நல்ல மனமும் தூய இதயமும் அவர்களிடம் இருந்தது. இன்று உயிர்த்த ஆண்டவர் நம்மைப் பார்த்தும் சொல்கிறார். உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று. அதை ஏற்கக் கூடிய மனநிலையும் தூய உள்ளமும் நமக்கு இருக்கிறதா சிந்திப்போம். ஆண்டவரைக் காண்பவர்களாய் நாமும் மாறுவது எப்போது? 
மரி சுமந்த மகவாய்,
மாமுனி சூசை வளர்த்த சிசுவாய்,
சிலுவை சுமந்த சுதனாய், 
காட்சி தந்த கருணாளனாய்,
பல நிலைகளில் நாம் இறைவனை 
அகத்தில் காண்பதாய் எண்ணியிருப்போம். 
சேயைக் காப்பாற்றும் தாயாய்,
தாயை மதிக்கும் சேயாய்,
துயர் துடைக்கும் அன்பாய்,
தோள் உயர்த்தும் நட்பாய்,
ஏழைக்கு உதவும் எளியனாய் 
புறத்தில் ஆண்டவரைக் காண்போம் . 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...