இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்று நமது தாய் திருச்சபையானது இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் என்னும் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. அரசர் என்பவர் யார் ? அவரின் பண்பு குண நலன்கள் என்ன? இயேசு நமக்கு யாராக இருந்தார் இப்போது யாராக இருக்கிறார் எனும் கேள்வி சிந்தனைகளுடனே இன்றைய வாசகங்களுக்குள் நுழைவோம்.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. என்பது அரசனுக்கு கொடுக்கப்படும் திருக்குறள் சான்று. நல்ல வீரமிக்க படை, நாட்டுப்ப்பற்று உள்ள மக்கள், குறையாத செல்வம், நல்ல அமைச்சர்கள், ஆபத்தில் உதவும் நண்பர்கள், நல்ல பாதுகாப்பான அரண் இவை ஆறையும் உடைய மன்னன் உயர்ந்த அரசர்களுள் ஒருவனாக கருதப்படுவான் என்கிறார் திருவள்ளுவர். இயேசு இவை அனைத்தையும் கடந்தவர். அவர் அரசர்களுக்கெல்லாம் பேரரசர். அவரிடம் உள்ள படைபலம் மனித படைபலத்தை விட உயர்ந்தது. அவரது அரசின் கீழ் உள்ள மக்கள் அவர் மேல் அளவற்ற பற்று கொண்டவர்கள். மேலும் அள்ள அள்ள குறையாத செல்வத்தையும், நல்ல பணி புரியும் பணியாளர்களையும், நண்பர்களையும் அரண் சூழ் பாதுகாப்பையும் கொண்டது அவரது அரசு. கேள்வி என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் அவரது அரசைச் சார்ந்த மக்கள் தானா என்பது தான். அவரை அரசராக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தோமானால் நமது வாழ்வு முறை அவரைப் பிரதிபலிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் சாதாரண ஒரு அரசியல் தலைவனைப் பின்பற்றி வாழும் சாதாரண மக்களின் வாழ்வு முறை போல் நமது வாழ்வு முறை அமைந்துவிடும்.
இயேசுவின் அரசாட்சி எத்தகையது?
இன்றைய முதல் வாசகம் இயேசுவின் அரசாட்சி என்றுமுள ஆட்சி, முடிவில்லாத மாட்சி, அழியா அரசாட்சி என்று எடுத்துரைக்கின்றது . இரண்டாம் வாசகமோ, அகரமும் நகரமும் ஆனவர், இருந்தவர், இருக்கின்றவர், வரஇருக்கின்றவர் என்று அரசராம் இயேசுவை பற்றி எடுத்துரைக்கின்றது. நற்செய்தி வாசகமோ தனது அரசின் கீழ் இருக்கும் மக்களைப் பற்றி கூறுகிறது. அவர்கள் உண்மையை சார்ந்தவர்கள் ,என் குரலுக்கு செவிசாய்க்கின்றவர்கள், எனக்காக போராடுபவர்கள். என்று தனது மக்களைப் பற்றிக் கூறுவதாக அமைகின்றது. ஆக ,வாழும் இடம், வாழவைக்கும் தலைவன், வாழும் நாம் இவை மூன்றைப் பற்றியும் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
வாழும் இடம்;
கிறிஸ்து இயேசு நம் அரசர் என்றால் நாம் வாழும் இடத்தில் அவரது அமைதியான அரசு இருக்க வேண்டும். அவரது புகழ் என்னும் மாட்சியை ஓயாது கேட்கும் சூழல் நிலவ வேண்டும். அவரது அன்பான அழிந்து போகாத வழிநடத்துதல் நிலைத்திருக்க வேண்டும். நாம் வாழும் சூழல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அமைதியான சூழல், இறைப்புகழ், வழிநடத்துதல் இருக்கிறதா? இல்லையே அமைதிக்கு பதில் ஆர்ப்பாட்டம். எங்கும் சந்தடி குழப்பம், மழை வெள்ளம் புயல் என பாதிப்புகளின் பயங்கரங்கள் என நம்மை சுற்றிலும் அமைதியற்ற ஒரு சூழல் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இருக்கும் இடத்தில் அமைதி இல்லாதபோது உள்ளத்தில் அமைதி நிலவுவது எப்படி சாத்தியமாகும்? இப்படி இருக்க நாம் வாழும் இடத்தில் இறைவனின் அரசை அரசாட்சியை எப்படி நிலைநாட்டுவது ? உதாரணம் இயேசு தான் . தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்களே தன்னை கொல்லத் துடிக்கும் போதும் நிதானமாக அமைதியாக இருக்கின்றார் இயேசு. என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்று தெளிவாகக் கூறுகின்றார். அத்தனை சந்தடியிலும் தன் மனதை அமைதியாக வைத்திருக்கின்றார். அதன்பயனாக அமைதியான அரசாட்சியை இன்றும் ஆண்டு வழிநடத்திக்கொண்டிருக்கின்றார். வாழுகின்ற இடத்தை பாலைவனமாகுவதும் சோலைவனமாக்குவது நமது உள்ளமும் அது சார்ந்த எண்ணமும் தான் என்பது உணர்ந்து வாழ்வோம்.
வாழவைக்கும் தலைவன்;
தலைவன் அரசன் மன்னன் வேந்தன் என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அதன்பொருள் ஒன்று தான் . தன்னை நாடி வந்த மக்களை, தனக்கு கீழ் இருக்கும் மக்களை அன்போடு வழிநடத்துபவனே உண்மையான அரசன். அவ்வகையில் இயேசு நமக்கு அரசர் தலைவர் மட்டுமல்ல அவர் நம் நண்பர் . ஏனெனில் அவர் நம்மை நண்பர்கள் என அழைத்திருக்கின்றார்
கொடையளி செங்கோல் குடியோம்பல் ஆகிய நான்கும் உடையவன் அரசன் என்கிறது திருக்குறள் அவ்வகையில் ஏராளமான கொடைகளை அள்ளித்தருபவரும், அன்பு செய்பவரும், நல்லாட்சி புரிபவரும், நம் தேவைகளை நிறைவு செய்பவருமான இயேசு நம்மை வாழவைக்கும் தலைவரே. அவர் காலம் கடந்த தலைவர். என்றும் நிலைத்து இருப்பவர். இப்படி ஒரு அருமையான அரசன் நம்மை ஆண்டு வழி நடத்த இருக்க அழிந்து போகக் கூடிய மனித தலைவர்களை நாடி அவர்களுக்காக கோஷம் எழுப்பிக் கொண்டு நம் வாழ்க்கையை வீணடிப்பது முறையா என்று சிந்திப்போம். முறையற்ற தலைவனை பின் தொடர்வது குருடருக்கு குருடர் வழிகாட்டுவதற்கு ஒப்பாகும் என்பதை உணர்ந்து என்றும் நிலைத்து இருக்கும் அரசராம் இயேசுவின் வழியைப் பின் தொடர முயற்சிப்போம்.
வாழும் நாம்;
வாழும் இடமும் அருமையாய் இருந்து , நம்மை வழி நடத்தும் தலைவனும் அருமையாய் அமையப் பெற்றாலும், வாழும் நாம் அதற்கேற்ப நம்மை தகுதியானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஓட்டை விழுந்த பானையில் சேகரிக்கும் நீர் போலாகிவிடும் நமது வாழ்வு. எதுவும் தங்காது நிலைக்காது. வெறுமையான பானையாய் மாறிவிடும் நம் வாழ்வு. அதற்கு வாழுகின்ற நாம் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் அனுபவித்து வாழ வேண்டும். அன்பின் அரசராம் இயேசுவின் ஆட்சியின் கீழ் நாம் இருக்கிறோம். எக்குறையும் நமக்கு நேர்ந்திடாது. நிறைவாய் வளமாய் நாம் அவரில் வாழ்வோம் என்னும் நம்பிக்கையோடு வாழவேண்டும். அவர் கூறுவது போல உண்மைக்கு சான்று பகரக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும். அவரது குரலுக்கு செவி சாய்க்கக் கூடியவர்களாக வாழ முயன்றோமானால் அவரது அன்பின் ஆட்சியில் நீடித்த நிலையானதொரு இடத்தை நாம் அடைவோம்.
இயேசு அனைத்துலகின் அரசர் என்னும் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவை நமது முழு மனதுடன் தலைவராக ஏற்று வாழ முற்படுவோம். வாழும் இடமும் நம்மை வாழ வைக்கும் தலைவராம் இயேசுவின் அருளினால் அமைதியான சோலைவனமாக மாற ஆசிப்போம். அவரது அரசின் கீழ் அவரோடு வாழும் நாமும் அரசராம் அவரின் குண நலன் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம். அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்பதே உண்மை என நிருபித்து வாழமுற்படுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.