Friday, 29 March 2019

என்னுடையதெல்லாம் உன்னுடையதே.....

தவக்காலம் நான்காம் ஞாயிறு
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா..

 பொறுமை இல்லாதவன் கூட ஒருகுழந்தைக்கு தகப்பனாக முடியும் ஆனால் ஒரு பொருப்பானவனால் மட்டுமே நல்ல தந்தையாக முடியும். தாய் அன்பு ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையின் அன்பும் அரவணைப்பும் ஒரு குழந்தை மனிதனாக உருவாகக் கட்டாயம் தேவை. சாதாரண தந்தையின் அன்பிற்கே இவ்வளவு என்றால் இறைத்தந்தையின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் ஒரு குழந்தை எப்படிப்பட்ட மனிதனாக வளரும் என்பதற்கு சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். நாமெல்லாம் வானகத் தந்தையின் அன்பு பிள்ளைகள். அவர் நம் அனைவரின் அன்புத் தந்தை . அவர் அருளும் அளவற்ற இரக்கமும் உடையவர். இத்தகைய இரக்கம் உடைய இறைத்தந்தையின் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போல இரக்கமுடையவர்களாக மாற இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.
இன்றைய நற்செய்தியில் இயேசு ஊதாரி மைந்தனின் கதையை பரிசேயர்களுக்கும் மறை நூல் அறிஞர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் கூறுகிறார். பாவிகளோடு உணவு அருந்துவது தவறு என்று எண்ணிய அவர்களுக்கு பாவிகள் மனம்மாறி  மன்னிப்பு பெற வழியுண்டு .அதன்மூலம் அவர்கள் புது வாழ்வு வாழ இடமுண்டு என்பதை எண்பிக்கின்றார். இந்த நற்செய்தியில் இடம்பெறும் இரண்டு மகன்களும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களில்  இருவரைக் குறிக்கும். மூத்த மகன் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைக் குறிக்கும். இளையமகன் பாவிகள் எனக் கருதப்பட்ட ஏழை எளிய மக்களைக் குறிக்கும். இங்கு தந்தையாக பாவிக்கப்படுபவர் இறைத்தந்தை, அவர் வழி வரும் இயேசு. இங்கு தந்தை கூறும் என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்னும் வாக்கியம் நமது வாழ்வாக செயல்பட இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம். என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்று எல்லோரிடமும் நாம் சொல்லி விட முடியாது. நமக்கு மிகவும் பிடித்த ,நெருக்கமான உரிமை உடையவர்களிடம் மட்டுமே நாம் அதை சொல்வோம். அதைப்போல் மற்ற எல்லோரும் நம்மிடமும் அப்படிச்சொல்வதில்லை. ஆக என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்று நம்மிடம் பிறர் சொல்லவும் , நாம் பிறரிடம் சொல்லுமளவுக்கு நாம் தாராளமனம் உடையவர்களாக வாழ முயற்சிப்போம். மூன்று கதைமாந்தர்களின் செயல்பாடுகளை வைத்து நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் இனி எப்படி வாழவேண்டும் என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
1. மகிழ்வை தொலைவில் தேடியவர்.
இளையவர் ... நம் வீடுகளில் எப்போதும் கடைசி குழந்தை மேல் அதிக பாசம் வைப்பர். அது பெற்றோர்களானாலும் சரி , உடன் பிறப்புக்களானாலும் சரி. அப்படி இருக்க இந்த இளைய மகனும் தன் தந்தையால் அளவுக்கு அதிகமாக அன்பு செய்யப்பட்டிருப்பார். அதனால் தான் உரிமையுடனும் தைரியத்துடனும் தந்தையிடம் நேராக சென்று தனக்குரிய பங்கைக் கேட்கிறார். அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்தும் தந்தை, தேவைக்கு அதிகமான செல்வம், வேலையாட்கள்  என அனைத்தும் இருந்தும் மகிழ்வு அவரிடத்தில் இல்லை. ஏனெனில் அவர் தந்தையின் அன்பை உணரவில்லை. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்... தந்தையின் அன்பை அவர் இல்லாதபோது உணர்கிறார். சொத்தும் பணமும் மட்டுமே மகிழ்வைத் தரும் என்று எண்ணியவர், அது தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டதும் அனைத்தையும் திரட்டிக் கொண்டு தொலை தூரம் செல்கிறார் . நாமும் பல நேரங்களின் இருக்கும் இடத்தில் இருக்கும் மகிழ்வை உணராது இல்லாத ஒன்றிற்காக வருந்துகிறோம். மகிழ்வு நம்மிடத்தில் தான் உள்ளது அது நமக்குள் உள்ளது என்று உணர்வோம். செய்த பாவத்திற்காக மனம்வருந்தி தந்தையிடம் திரும்பி வந்த இளைய மகன் போல நாமும் நமது பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவோம். அவர் தன் தந்தையின் அன்பை உணர்ந்ததும் உடனடியாக புறப்பட்டு தந்தையின் இல்லம் வருகின்றார் எந்த வித தாமதமும் இன்றி. நாமும் மனம் வருந்துகிறோம் ஆனால் இறைத்தந்தையிடம் திரும்பி வர கால தாமதம் செய்கின்றோம். மகிழ்வைத் தேடி வெளியே நெடும்பயணம் செல்வதை விடுத்து நம் உள்ளத்துக்குள் நீண்ட ஆழமான பயணம் செல்வோம். இறை அன்பை உணர்ந்து கொள்வோம்.
என்னுடைய மகிழ்வு உன்னுடையதே , உன்னுடைய மகிழ்வும் என்னுடையதே  என்று வாழ முயற்சிப்போம்.
2. அனுதினமும் அடிமை வாழ்வு வாழ்ந்தவர்.:
      மூத்த மகன். இவர் தான் தந்தையின் சொத்துக்களுக்கு முதன்மையான வாரிசு. ஆனால் அதை உணராது வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் போல தன்னை நினைத்துக் கொள்கிறார். தனது தந்தையின் சொத்துக்களை அவருக்கு பின் தான் தான் பராமரித்து வாழ வேண்டும் என்று எண்ணியவருக்கு தம்பியின் வடிவில் வருகிறது பிரச்சனை. இருப்பினும் அவன் பங்கைஅவன் எடுத்துக் கொண்டான் மிச்சம் இருக்கும் அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைத்தவன் மகிழ்வை கெடுத்தார் போல வீடு திரும்புகிறான் இளையவன். அதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த அனைத்தும் வெளியே கொட்டப்படுகிறது. சொந்த வீட்டிற்குள்ளே செல்லத் தயங்குகிறார். தன் தந்தையிடம் கேட்பதற்கு பதிலாக வேலையாட்களிடம் என்ன நடக்கிறது என்று கேட்கிறார். அவர்களும் இவரின் கோபத்தீயில் எண்ணெய் விட்டு நன்றாக எரியச்செய்வது போல உம் தம்பி வந்திருக்கிறார். உம் தந்தை கொழுத்த ஆட்டினை அடித்து விருந்து சமைத்திருக்கிறார் என்று கூறுகின்றனர்.  முதலாளிஎன்றோ , சின்ன முதலாளி என்றோ சொல்லாது இந்த விருந்தில் எங்களுக்கு பங்கில்லை என்பது போல செயல்படுகின்றனர்.   தனது முதலாளியையும் அவர் மகனையும் பிரித்து அதில் இன்பம் காணும் எண்ணத்தில் கூறுகிறார். நாமும் பல நேரங்களில் இப்படித்தான் . யாரிடம் கேட்டு தெளிவு பெறவேண்டுமோ அவர்களை விட்டு விட்டு பிரச்சனை பெரிதாக காரணமாக இருப்பவர்களிடமே அறிவுரைக் கேட்கிறோம். பிறருக்கு துன்பம் ஏற்படுத்தி அதில் மகிழ்வு காணும் குணம் களைந்து அமைதியை ஏற்படுத்துபவர்களாவோம். இறைத்தந்தையின் அன்புக்கும் அருளுக்கும்  சொந்தக்காரர்கள் நாம் என்ற நோக்கத்தில் செயல்படுவோம்.
3... இரக்கமே உருவான இனிய இறைவன்.
      இங்கு தந்தை போல சித்தரிக்கப்படுபவர் வானகத்தந்தை . இவரது செயல்பாடுகள் அவர்தம் பிள்ளைகளாகிய நம்மிடமும் துலங்க முயற்சிப்போம்.
சொத்தைக் கேட்டதும் பங்கிட்டுக் கொடுக்கிறார். ஏன் எதற்கு என்று கேட்கவில்லை ஒவ்வொருவரின் உரிமையையும் மதிக்கிறார்.
தன்னிடம் பணிபுரியும் பணியாட்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுப்பவராக இருக்கின்றார்.
தன்மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்கின்றார்.
தொலைவிலேயே மகனைக் கண்டு கொள்கிறார்.
கட்டித் தழுவுகிறார். அவன் செய்த அனைத்து செயல்களையும் மன்னித்து மறக்கிறார்.
முதல்தரமான ஆடை மோதிரம் காலணி என அணிவித்து மகிழ்கிறார். புதிய மகனாக மாற்றுகிறார்.
எல்லோர்க்கும் எல்லாமாக இருக்கின்றார் தன் மூத்த மகனையும் இளைய மகனையும் பணிபுரியும் பணியாட்களையும் அன்பு செய்து  அவரவர்க்கு கொடுக்க வேண்டிய தகுதியையும் உரிமையையும் கொடுக்கின்றார்.
என்னுடையதெல்லாம் உன்னுடையது ... சொத்தும் செல்வமும் மட்டுமல்ல என்னுடைய குணமும் பண்பும் பரிவும் எனக்குப் பின் உன்னுடையதாக வேண்டும் என்கிறார். நான் மனம்மாறி வந்த உன் தம்பியை ஏற்று மகிழ்வது போல நீயும் பிறரை மன்னித்து ஏற்று வாழ் என்கிறார். நாமும் இத்தகைய பேற்றுக்கு உரிமை உடையவர்களே .. நம் வானகத்தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நாமும் இரக்கமுடையவர்களாக வாழ முயற்சிப்போம்.
உன்னுடையதெல்லாம் என்னுடையது என்று சொல்லும் மனப்பாங்கு உடையவர்களாவோம்.வெறும் பணம் பதவி சொத்து சுகம் விடுத்து நல்ல எண்ணம் சிந்தனை சொல் செயல்களுக்கு சொந்தக்காரர்களாவோம். நம் வானகத்தந்தை இரக்கமுடையவராய் இருப்பது போல நாமும் இரக்கமுடையவர்களாவோம். இளையவனானாலும் சரி மூத்தவனானாலும் சரி தந்தைக்கு நல்ல மகன்களாவோம். தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன் (மகன்) வழிதவறான். என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம் இறைத்தந்தையின் பராமரிப்பு என்றும் நம்மையும் நம் குடும்பத்தையும்  வழிநடத்தி வாழவைப்பதாக ஆமென்.   

Thursday, 7 March 2019

நூற்றாண்டு விழா திருப்பலி



நூற்றாண்டு விழா திருப்பலி முன்னுரை
நீர் இன்றி அமையாது உலகு என்பது பழமொழி. 
இறைவா நீர் இன்றி அமையாது எம் வாழ்வு இது எம்மொழி. 
எம் ஊர்க்கடற்கரை கடல் அலைகளுக்கு விடுமுறை கிடையாது அது போல.
இறைவா உம் அன்பிற்கும் உலகில் எல்லைகள் கிடையாது. 
நாட்கள் அனைத்தும் நலமுடனே நகர்ந்து, மாதங்கள் பல மகிழ்வாய் நடந்து, ஆண்டுகள் நூறு அருமையாய் கடந்து, இன்று நூற்றாண்டு விழாவினை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட வாய்ப்பளித்த வளமைக்காய் நன்றி கூறுகின்றோம். எங்களின் மகிழ்விற்கு மகிழ்வு சேற்க்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு இந்த திருப்பலிக்கு வரவேற்கின்றேன்.   புன்னகை என்ற முகவரியை தங்கள் முகத்தினிலே கொண்டு ஏராளமான நண்பர்களை கடிதம் போல அனுதினமும் பெற்று இன்று இப்பணித்தளம் நூற்றாண்டு விழாக் காண காரணமாய் அமைந்தவர்கள் எம் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள்.  புன்னகையுடன் தொடங்கிய தினம் புதுமைகளுடன்  தான் முடியும் என்பதற்கு உதாரணம் எம் சகோதரிகளும் அவர் தம் பணிகளும். அவர்களது சிறு துளிகள் பல சேர்ந்து இன்று  நூற்றாண்டு விழா என்னும் பெரு வெள்ளமாய் முன்னேறி இருக்கின்றது . இந்த பெருவிழாவின் மகிழ்வில் திளைக்க, எம் பணிகளின் நிறைவில் பங்கெடுக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் எம் இல்லக் குழுமம் நிறை மகிழ்வடைகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப மூவர் குழுவாய் இருந்து முத்தான பணிகள் செய்து தம் திறத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர் எம் குழுவின் முன்னோர்கள். வீரியமுள்ள விதையாய் தங்களையே  உருவாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். அந்த உருவாக்கத்தை உபயோகப்படுத்தும் இடமாய் அமைந்தது எம் பழைய காயல் பணித்தளம். விதை எவ்வளவு வீரியமாய் இருந்தாலும் விதைக்கப்படும் இடம் அதற்கேற்ப வளமானதாக திடமானதாக இல்லாவிடில் விதை விருட்சமாக வளர முடியாது. எம் சகோதரிகளின் பணிகளையும், முயற்சிகளையும் பாராட்டி, ஊக்குவித்து உற்சாகம் கொடுத்து விதையாய் இருந்த எம் இல்லத்தை நூற்றாண்டு கொண்டாடும் விருட்சமாய் மாற்றிய பெருமை எம் பணித்தளத்தையேச் சாரும். இதற்கு காரணமாய் இருந்த எம் பழைய காயல் பங்கின் அனைத்து பண்பான  பாசமான பணி நோக்குடைய  முன்னாள் இந்நாள் பங்குத்தந்தையர்கள், தரமான பல செயல்களை பள்ளியிலும் பணித்தளத்திலும் நிறைவேற்றிய தலைமை ஆசிரிய அருட்சகோதரிகள், இல்லத்தை இறையன்பின் இயங்குதளமாக மாற்றிய இல்லத்தலைவர்கள்,அனைத்திற்கும் மேலாக, மக்கள் பணி செய்யும் எங்களை மனுமகனின் மகள்களாக பார்த்த எம் மகிழ்வான ஊர்மக்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்கின்றோம். வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை வந்த எதுவும் எதையும் சொல்லிக் கொடுக்காமல் போனதில்லை என்பதை மனதில் கொண்டு கிடைத்த வாய்ப்புக்கள் அனுபவங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, தாய்சபைக்கும் திருச்சபைக்கும்  நாங்கள் தொடர்ந்து வளம் சேர்க்க எங்களுக்காகவும் எம் தாய் சபையிலுள்ள அனைத்து சகோதரிகளுக்காகவும் சிறப்பாக செபிக்க உங்களை அழைக்கின்றோம். இறுதியாக எம் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடை சூழ்ந்து வரும் நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். என்ற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, உம் அருள் துணையால் எம் பணி இவ்விடத்தில் சிறந்தோங்க இன்னும் பல பணிகள் செய்து, பல நூற்றாண்டுகள் கொண்டாட இறைவனின் அருள் துணை வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் இணைகின்றோம்.
 
 மன்றாட்டுக்கள்:
       
1... அனைத்து உலகங்களுக்கும் முழு முதல் தலைவனே இறைவா! எம் திரு அவையை  ஆண்டு வழிநடத்தும் எம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக செபிக்கின்றோம். உமது ஆற்றலால் உம் வழியில் எங்களை நடத்திச்செல்லும் அவருக்கு உடல் பலமுமாய் உள்ள நலனுமாய் உறுதுணையாய் இருந்து செயலாற்றிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்...

2.... அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்து உயிர்களையும் அழகுறப்படைத்த இறைவா! நீர் அழகாய் ரசித்து அற்புதமாய் படைத்த இந்த உலகத்திற்காகவும் இந்திய நாட்டிற்காகாவும் குறிப்பாக எம் தமிழகத்திற்காகவும் செபிக்கின்றோம். உணவை மருந்தாய், உறவை உயிராய், இயற்கை வளங்களை வாழ்வாய்,கலாச்சார பாரம்பரியத்தை கண்ணியமாய்க் கொண்டு வாழ்ந்த எம் தமிழகம், அதில் நிலைத்து வாழ, செழித்து வளர அருள் தர வேண்டுமென்று.......

3... மன்னர்களுக்கெல்லாம் மேலான மன்னாதி மன்னனாய்த் திகழும் மாபரனே எம் இறைவா!  அன்பு உள்ளமும், ஆற்றல் மிகு தொலை நோக்கு பார்வையும், உற்சாக செயலும்  உயர்வான ஆட்சித் திறனும், கொண்டு எம் பணித்தளம் இவ்வூரில் திறம்பட செயல்பட முதல் நாற்று நட்ட எம் சபையின் மூத்த சகோதரிகள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அளப்பரிய செயல்கள் முலம் எம் பணித்தள வாழ்வுக்கு பாதை அமைத்து தந்த அந்த உள்ளங்கள் போல நாங்களும் சிறப்புடன் செயல்பட, முப்பது அறுபது மடங்காக இல்லாமல் தொடர்ந்து நூறு மடங்கு பலன் தர, எங்கள் நற்செயல்கள் மூலம் அவர்களின் ஆசைக்கு அன்பின் கீதம் இசைக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் அருள்தர வேண்டுமென்று ..........


4.....அமைதியின் ஆழமாய் அன்பின் பிறப்பிடமாய், விளங்கும் இறைவா! இப்பழைய காயல் பணித்தளத்தில் கல்விப்பணி மருத்துவப்பணி மறைபரப்புப்பணி, சமூகப்பணி நலவாழ்வுப்பணி என பல்வேறு பணிகளை அன்பாக செய்து அயராது பணியாற்றிய முன்னாள் அருட்சகோதரிகள் அனைவருக்காகவும் செபிக்கின்றோம். தடம் மாறிய பயணங்கள் கூட  புதிய புதிய அனுபவங்களை தரும்போது தினசரி வாழ்க்கையும் புது அனுபவங்களைத் தரும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள் . திசையின்றி வீசும் தென்றலை ரசிப்பது போல தினங்களை ரசித்து இன்று திருநாளாய் மாற்றியவர்கள் அவர்கள். இவர்களில் பலர் இன்று விண்ணுலகில். மற்றும் சிலர் மண்ணுலகில். விண்ணுலகில் இருப்பவர்களின் ஆசீர் வேண்டுகிறோம். மண்ணுலகில் இருப்பவர்கள் ஆசீருடன் தொடர்ந்து பணி செய்ய அருள் தர வேண்டுமென்று.......

5.... ஆற்றல் அனைத்திற்கும் ஊற்றும் உத்வேகமுமான இறைவா!... உமது அழைப்பினை ஏற்று சபையின் தலைமைப் பொறுப்பை திறம்பட ஏற்று சபை சகோதரிகளை நல்ல முறையில் வழிநடத்தி வந்த எம் முன்னாள் சபைத்தலைவர்களுக்காகவும், இன்னாள் சபைத்தலைவர்களுக்காகவும் சிறப்பாக செபிக்கின்றோம். உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாக உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டும் சான்று உண்டு... அவ்வகையில் பல பல முயற்சிகள் எடுத்து அதில் வெற்றி கண்டு முன்னேறும்  எம் தலைவர்கள் நல்ல உடல் நலத்துடனும் மன பலத்துடனும் இருக்க அருள்தர வேண்டுமென்று......  

6..... கடல்களையும் அதிலுள்ள கண்ணுக்கு புலப்படாத பலவகை உயிரினங்களையும் படைத்து காத்து வரும் கருணை இறைவா!  ஆழ்கடலில் மூழ்கி அலை ஓசையோடு உடல் சுவாசம் சேர்த்து உயிரை பணயம் வைத்து உறவாடும் எம் பழைய காயல் மீனவ மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். உப்புக்காற்றில் உயிர்வாழும் இவர்களின் வாழ்வு இனிமை நிறைந்ததாய் இருக்க, மீன்பிடித்தொழிலில் ஏற்படும் இன்னல்கள் இடர்ப்பாடுகள் நீங்கி மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ அருள் தர வேண்டுமென்று...... 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...