Thursday, 7 March 2019

நூற்றாண்டு விழா திருப்பலி



நூற்றாண்டு விழா திருப்பலி முன்னுரை
நீர் இன்றி அமையாது உலகு என்பது பழமொழி. 
இறைவா நீர் இன்றி அமையாது எம் வாழ்வு இது எம்மொழி. 
எம் ஊர்க்கடற்கரை கடல் அலைகளுக்கு விடுமுறை கிடையாது அது போல.
இறைவா உம் அன்பிற்கும் உலகில் எல்லைகள் கிடையாது. 
நாட்கள் அனைத்தும் நலமுடனே நகர்ந்து, மாதங்கள் பல மகிழ்வாய் நடந்து, ஆண்டுகள் நூறு அருமையாய் கடந்து, இன்று நூற்றாண்டு விழாவினை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட வாய்ப்பளித்த வளமைக்காய் நன்றி கூறுகின்றோம். எங்களின் மகிழ்விற்கு மகிழ்வு சேற்க்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு இந்த திருப்பலிக்கு வரவேற்கின்றேன்.   புன்னகை என்ற முகவரியை தங்கள் முகத்தினிலே கொண்டு ஏராளமான நண்பர்களை கடிதம் போல அனுதினமும் பெற்று இன்று இப்பணித்தளம் நூற்றாண்டு விழாக் காண காரணமாய் அமைந்தவர்கள் எம் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள்.  புன்னகையுடன் தொடங்கிய தினம் புதுமைகளுடன்  தான் முடியும் என்பதற்கு உதாரணம் எம் சகோதரிகளும் அவர் தம் பணிகளும். அவர்களது சிறு துளிகள் பல சேர்ந்து இன்று  நூற்றாண்டு விழா என்னும் பெரு வெள்ளமாய் முன்னேறி இருக்கின்றது . இந்த பெருவிழாவின் மகிழ்வில் திளைக்க, எம் பணிகளின் நிறைவில் பங்கெடுக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் எம் இல்லக் குழுமம் நிறை மகிழ்வடைகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப மூவர் குழுவாய் இருந்து முத்தான பணிகள் செய்து தம் திறத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர் எம் குழுவின் முன்னோர்கள். வீரியமுள்ள விதையாய் தங்களையே  உருவாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். அந்த உருவாக்கத்தை உபயோகப்படுத்தும் இடமாய் அமைந்தது எம் பழைய காயல் பணித்தளம். விதை எவ்வளவு வீரியமாய் இருந்தாலும் விதைக்கப்படும் இடம் அதற்கேற்ப வளமானதாக திடமானதாக இல்லாவிடில் விதை விருட்சமாக வளர முடியாது. எம் சகோதரிகளின் பணிகளையும், முயற்சிகளையும் பாராட்டி, ஊக்குவித்து உற்சாகம் கொடுத்து விதையாய் இருந்த எம் இல்லத்தை நூற்றாண்டு கொண்டாடும் விருட்சமாய் மாற்றிய பெருமை எம் பணித்தளத்தையேச் சாரும். இதற்கு காரணமாய் இருந்த எம் பழைய காயல் பங்கின் அனைத்து பண்பான  பாசமான பணி நோக்குடைய  முன்னாள் இந்நாள் பங்குத்தந்தையர்கள், தரமான பல செயல்களை பள்ளியிலும் பணித்தளத்திலும் நிறைவேற்றிய தலைமை ஆசிரிய அருட்சகோதரிகள், இல்லத்தை இறையன்பின் இயங்குதளமாக மாற்றிய இல்லத்தலைவர்கள்,அனைத்திற்கும் மேலாக, மக்கள் பணி செய்யும் எங்களை மனுமகனின் மகள்களாக பார்த்த எம் மகிழ்வான ஊர்மக்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்கின்றோம். வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை வந்த எதுவும் எதையும் சொல்லிக் கொடுக்காமல் போனதில்லை என்பதை மனதில் கொண்டு கிடைத்த வாய்ப்புக்கள் அனுபவங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, தாய்சபைக்கும் திருச்சபைக்கும்  நாங்கள் தொடர்ந்து வளம் சேர்க்க எங்களுக்காகவும் எம் தாய் சபையிலுள்ள அனைத்து சகோதரிகளுக்காகவும் சிறப்பாக செபிக்க உங்களை அழைக்கின்றோம். இறுதியாக எம் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடை சூழ்ந்து வரும் நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். என்ற திருப்பாடல் வரிகளுக்கேற்ப, உம் அருள் துணையால் எம் பணி இவ்விடத்தில் சிறந்தோங்க இன்னும் பல பணிகள் செய்து, பல நூற்றாண்டுகள் கொண்டாட இறைவனின் அருள் துணை வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் இணைகின்றோம்.
 
 மன்றாட்டுக்கள்:
       
1... அனைத்து உலகங்களுக்கும் முழு முதல் தலைவனே இறைவா! எம் திரு அவையை  ஆண்டு வழிநடத்தும் எம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக செபிக்கின்றோம். உமது ஆற்றலால் உம் வழியில் எங்களை நடத்திச்செல்லும் அவருக்கு உடல் பலமுமாய் உள்ள நலனுமாய் உறுதுணையாய் இருந்து செயலாற்றிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்...

2.... அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்து உயிர்களையும் அழகுறப்படைத்த இறைவா! நீர் அழகாய் ரசித்து அற்புதமாய் படைத்த இந்த உலகத்திற்காகவும் இந்திய நாட்டிற்காகாவும் குறிப்பாக எம் தமிழகத்திற்காகவும் செபிக்கின்றோம். உணவை மருந்தாய், உறவை உயிராய், இயற்கை வளங்களை வாழ்வாய்,கலாச்சார பாரம்பரியத்தை கண்ணியமாய்க் கொண்டு வாழ்ந்த எம் தமிழகம், அதில் நிலைத்து வாழ, செழித்து வளர அருள் தர வேண்டுமென்று.......

3... மன்னர்களுக்கெல்லாம் மேலான மன்னாதி மன்னனாய்த் திகழும் மாபரனே எம் இறைவா!  அன்பு உள்ளமும், ஆற்றல் மிகு தொலை நோக்கு பார்வையும், உற்சாக செயலும்  உயர்வான ஆட்சித் திறனும், கொண்டு எம் பணித்தளம் இவ்வூரில் திறம்பட செயல்பட முதல் நாற்று நட்ட எம் சபையின் மூத்த சகோதரிகள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அளப்பரிய செயல்கள் முலம் எம் பணித்தள வாழ்வுக்கு பாதை அமைத்து தந்த அந்த உள்ளங்கள் போல நாங்களும் சிறப்புடன் செயல்பட, முப்பது அறுபது மடங்காக இல்லாமல் தொடர்ந்து நூறு மடங்கு பலன் தர, எங்கள் நற்செயல்கள் மூலம் அவர்களின் ஆசைக்கு அன்பின் கீதம் இசைக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் அருள்தர வேண்டுமென்று ..........


4.....அமைதியின் ஆழமாய் அன்பின் பிறப்பிடமாய், விளங்கும் இறைவா! இப்பழைய காயல் பணித்தளத்தில் கல்விப்பணி மருத்துவப்பணி மறைபரப்புப்பணி, சமூகப்பணி நலவாழ்வுப்பணி என பல்வேறு பணிகளை அன்பாக செய்து அயராது பணியாற்றிய முன்னாள் அருட்சகோதரிகள் அனைவருக்காகவும் செபிக்கின்றோம். தடம் மாறிய பயணங்கள் கூட  புதிய புதிய அனுபவங்களை தரும்போது தினசரி வாழ்க்கையும் புது அனுபவங்களைத் தரும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள் . திசையின்றி வீசும் தென்றலை ரசிப்பது போல தினங்களை ரசித்து இன்று திருநாளாய் மாற்றியவர்கள் அவர்கள். இவர்களில் பலர் இன்று விண்ணுலகில். மற்றும் சிலர் மண்ணுலகில். விண்ணுலகில் இருப்பவர்களின் ஆசீர் வேண்டுகிறோம். மண்ணுலகில் இருப்பவர்கள் ஆசீருடன் தொடர்ந்து பணி செய்ய அருள் தர வேண்டுமென்று.......

5.... ஆற்றல் அனைத்திற்கும் ஊற்றும் உத்வேகமுமான இறைவா!... உமது அழைப்பினை ஏற்று சபையின் தலைமைப் பொறுப்பை திறம்பட ஏற்று சபை சகோதரிகளை நல்ல முறையில் வழிநடத்தி வந்த எம் முன்னாள் சபைத்தலைவர்களுக்காகவும், இன்னாள் சபைத்தலைவர்களுக்காகவும் சிறப்பாக செபிக்கின்றோம். உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாக உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டும் சான்று உண்டு... அவ்வகையில் பல பல முயற்சிகள் எடுத்து அதில் வெற்றி கண்டு முன்னேறும்  எம் தலைவர்கள் நல்ல உடல் நலத்துடனும் மன பலத்துடனும் இருக்க அருள்தர வேண்டுமென்று......  

6..... கடல்களையும் அதிலுள்ள கண்ணுக்கு புலப்படாத பலவகை உயிரினங்களையும் படைத்து காத்து வரும் கருணை இறைவா!  ஆழ்கடலில் மூழ்கி அலை ஓசையோடு உடல் சுவாசம் சேர்த்து உயிரை பணயம் வைத்து உறவாடும் எம் பழைய காயல் மீனவ மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். உப்புக்காற்றில் உயிர்வாழும் இவர்களின் வாழ்வு இனிமை நிறைந்ததாய் இருக்க, மீன்பிடித்தொழிலில் ஏற்படும் இன்னல்கள் இடர்ப்பாடுகள் நீங்கி மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ அருள் தர வேண்டுமென்று...... 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...