Saturday, 30 November 2019

நம்பிக்கை என்னும் திரி

       திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
         மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
        நம்பிக்கை என்னும் திரி

ஒரு இருட்டு அறை அந்த அறையில்  நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன. அப்போது அந்த அறையின் ஜன்னல் வழியே காற்று பலமாக வீசத்தொடங்கியது. அப்போது முதல் மெழுகுவர்த்தி பயத்துடன் அய்யோ நான் அணையப்போகிறேன் என்று கூறிக்கொண்டே அணைந்து போனது. இரண்டாவது மெழுகுதிரியும் பயத்துடன் எனது வாழ்வும் இத்துடன் முடியப்போகிறது என்று கூறி புலம்பியபடியே அணைந்து போனது. மூன்றாவது திரி, நமது வாழ்வைக் காக்க யார் வருவார்? ஒருவரும் வர மாட்டார் என்று கூறி அணைந்து போனது. நான்காவது திரி மற்ற திரிகளுக்கு நேர் மாறாக காற்றோடு போராடியது . தனது ஜுவாலையை சிறிதாக்கி தனது ஒளியைக் காத்துக்கொள்ள முயற்சித்தது . அது மனதில் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் . எனது வாழ்வைக் காக்க எனக்கு ஒளி ஏற்றியவர்  வருவார். அவர் வரும்வரை என்னால் முடிந்தளவு நான் என்னைக் காத்துக் கொள்வேன். என்று தனக்குள் கூறிக்கொண்டது. அது நம்பியபடியே ஒளி ஏற்றி வைத்தவர் வந்தார். விரைவாக வந்து ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டு  எரிந்து கொண்டிருந்த நான்காவது திரியின் மூலம் அணைந்த மற்ற மூன்று திரிகளையும் ஏற்றிவிட்டு சென்றார். மீண்டும் நான்கு திரிகளும் மகிழ்வுடன் சுடர் விட்டு ஒளிர்ந்தன.  நம்பிக்கையோடு இருந்த நான்காவது மெழுகுதிரி போல நாம் வாழ வேண்டும், பிறரையும் வாழவைக்க வேண்டும் என்பதையே இன்றைய திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு நமக்கு அறிவுறுத்துகின்றது. நம்பிக்கை இருந்தால் எதிலும் போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்த மெழுகுதிரி அழகாக நமக்கு கூறியுள்ளது
இன்று நாம் ஏற்றிய திருவருகைக்காலத்தின் முதல் திரி நம்பிக்கையின் திரி. நமது வாழ்வு நம்பிக்கை நிறைந்த வாழ்வாக இருக்க பிறருக்கும் நம்பிக்கை தரக் கூடிய வாழ்வாக இருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
1. நம்பிக்கை ஒளியில் நடப்போம்.
2. நம்பிக்கையை அணிந்து கொள்வோம்.
3. ஆயத்தமாய் இருப்போம்.

நம்பிக்கை ஒளியில் நடப்போம்.:
                            முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர், இதுவரை இருளின் ஆட்சியில் இருந்த மக்கள் இனி ஒளியின் ஆட்சியைச் சேர்ந்த மக்களாக மாறுவார்கள் என்று நம்பிக்கை வாக்குறுதி தருகின்றார். மற்றவர்களின் வாழ்வை வீழ்த்த பயன்பட்ட வாள்கள் கலப்பைக் கொழுக்களாக மாறி நிலத்தை பண்படுத்த, பயன்படுத்தப்படப் போகிறது என்கின்றார். எதிரியின் உடலை தாக்க பயன்பட்ட ஈட்டிகள் கருக்கரிவாள்களாக மாறி நல் விளைச்சலை அறுவடை செய்ய போகிறது என்கின்றார். இன்று நம்மிடம் வாளோ ஈட்டியோ இல்லை அதனை கலப்பையாக, கருக்கரிவாளாக மாற்ற. மாறாக பிறரது நற்பெயரை வீழ்த்த நாம் பயன்படுத்தும் அவதூறு என்னும் வாளை, நல்லெண்ணம் என்னும் கலப்பையாக மாற்றுவோம். பிறரது மனதை புண்படுத்தும் கடுஞ்சொற்கள் என்னும் ஈட்டியை, பண்பான சொற்கள் என்னும் கருக்கரிவாள்களாக மாற்றி நன்மையை அறுவடை செய்வோம். இதன் மூலம் நம்பிக்கை என்னும் ஆண்டவரின் ஒளியில் நடக்க முற்படுவோம்.       

நம்பிக்கையை அணிந்து கொள்வோம்.:
                         படைக்கலன்கள் போர்வீரனுக்கு அழகு. மனித உடலுக்கு அணிகலன்கள் அழகு. அது போல மனதிற்கு அழகு செய்வது நம்பிக்கை. நாம் நம்மேலும் பிறர் மேலும் கொள்ளும் நம்பிக்கை இறை நம்பிக்கையில் மென்மேலும் வளர உதவுகின்றது. இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்கும் நம்மை இருளின் ஆட்சிக்குரிய அனைத்து செயல்களையும் விட்டு விட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன் களை அணிந்து காத்திருக்கச் சொல்கின்றார். பகலில் நடப்பது போல மதிப்போடு இருக்கச்சொல்கின்றார். களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஊனியல்பு இவற்றை விடுத்து வாழச் சொல்கின்றார். மேற்சொன்னவைகள் அனைத்தும் தனிமனித இன்பத்திற்காக செய்யப்படுபவை. எனவே அதற்கு பதிலாக தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் வண்ணம், குடும்ப செபம், குடும்ப நிகழ்வுகளில் குடும்பமாக பங்கேற்றல், மனம் திறந்து உரையாடல், பாராட்டுதல், கைவினைப்பொருட்கள் செய்தல், செய்ய பயிற்றுவித்தல், நோயாளிகளை சந்தித்தல் , அன்பியம் சபைக்கூட்டங்களில் பங்கேற்றல் போன்றவைகளில் ஈடுபாடு காட்டுதல் இந்நாட்களில் மிக முக்கியம். அவ்வாறு நாம் இருந்தால் நம்பிக்கை என்னும் கிறிஸ்துவை நாம் அணிந்து கொள்ளலாம்.

ஆயத்தமாய் இருப்போம்.:
         நற்செய்தி வாசகத்தில் இயேசு நம்பிக்கையோடு விழிப்போடு அவரது வருகைக்காகக் காத்திருக்கச்சொல்கின்றார். எப்படிப்பட்ட விழிப்பு நிலை என்பதை மூன்று நிகழ்வுகள் வழி சுட்டிக்காட்டுகின்றார். வழக்கமாக வயலில் வேலை செய்பவர்கள் பகலில் முழு விழிப்பு நிலையுடன் மிக மும்முரமாக வேலை செய்வார்கள். அப்படிப்பட்ட நேரத்திலும் ஒருவர் மட்டுமே மானிடமகனின் வருகையை அறிந்து எடுத்துக் கொள்ளப்படுவர் மற்றவர் விட்டுவிடப்படுவர் என்கின்றார். மும்முரமான நிலையிலும் விழிப்புநிலை அவசியம் என்கின்றார். திரிகையில் மாவரைக்கும் போது இருவரும் கவனமாக மாவரைப்பர். ஒருவர் கையினால் திரிகையை சுற்றியும் மற்றவர் மாவினை உள்ளே தள்ளியும் வேலை செய்வர் அப்படிப்பட்ட கவனமான நிலையிலும் கூட ஒருவர் மட்டுமே மானிடமகன் வருகையை கண்டுணர்வர் என்கின்றார். மூன்றாவது இரவு நேரக் காவலர் வேலை {அதிக விழிப்புடன் இருக்க வேண்டிய இந்நேரத்தில் தான் பலர் தூங்குகின்றனர்}. ஆக நமது விழிப்பு நிலை இதை எல்லாம் தாண்டிய நிலையில் இருக்க வேண்டும் என்கின்றார். எனவே நாம் எப்போது முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் ஆண்டவரின் வரவை எதிர்பார்த்து.

 கிறிஸ்து பிறப்பின் நாளுக்காக நம்மை தயாரிக்க நமக்கு கொடுக்கப்பட்ட இந்த நான்கு வாரங்களும் மிக மிக முக்கியமான வாரங்கள். நமது வீட்டை, குடிலை, தெருவை அலங்கரிக்க எடுக்கும் முயற்சிகளில் ஒரு சிறு முயற்சியையாவது நம்மை மாற்ற நாம் எடுப்போம். நமது மனதில் படிந்திருக்கும் தீய எண்ணங்கள் என்னும் சிலந்தி வலைகளை அகற்றுவோம். புத்துணர்ச்சி என்னும் வர்ணம் பூசுவோம். நற்செயல்கள் என்னும் வண்ண வண்ண தோரணங்கள் கட்டுவோம். பிறரன்பு என்னும் இனிப்பு வகைகளை செய்து பிறரோடு பகிர்வோம். நம்பிக்கை என்னும் நாம் ஏற்றிய திரி நமது ஆலயத்தில் மட்டுமல்லாது நமது உள்ளத்திலும் தொடர்ந்து சுடர்விட்டு எரிய முயற்சிப்போம். இறையருள் என்றும் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் நீடித்து நிலைத்திருப்பதாக ஆமென்.

Thursday, 21 November 2019

கிறிஸ்து அரசர் பெருவிழா

கிறிஸ்து அரசர் பெருவிழா

இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்

2 சாமுவேல் 5:1-3
கொலோசையர் 1:12-20
லூக்கா 23:35-43



கிறிஸ்து அரசரின் அன்பு பிள்ளைகளே உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து அரசர் பெருவிழா வாழ்த்துக்களை கூறி மகிழ்வதில் பெருமிதம் அடைகின்றேன். இன்றைய வழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நமக்கு அரசரின் பண்பு நலங்களையும் அவரின் சிறப்புக்களையும் எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் எபிரோன் மக்கள் தாவீதை தங்கள் அரசனாக திருநிலைப்படுத்துகின்றனர். இரண்டாம் வாசகத்தில் அரசனுக்குரிய பண்பு நலன்களும் சிறப்புகளும் சொல்லப்படுகின்றன. நற்செய்தி வாசகத்தில் உண்மையான அரசராம் இயேசுவின் செயல்பாடுகள் நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன. இயேசுவை நமது அரசராக காணும் பட்சத்தில் அவரிடம் விளங்கிய பண்புகளில் ஒன்றிரண்டிலாவது நாமும் வளர வேண்டும் என்பது அவரது விருப்பம். அவ்வாறு வளர்ந்தால் நாம் அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இருப்போம். கிறிஸ்து அரசரின் பெருவிழா நாளில் நமக்கு அவர் விடுக்கும் அழைப்பும் உறுதியும் இதுவே . இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்.
பேரின்ப வீட்டில் நாமும் இடம் பெற செய்ய வேண்டியது என்ன?
கிறிஸ்து அரசரின் பண்பு நலன்களில் வளர வேண்டும். எவை எல்லாம் கிறிஸ்துஅரசரின் பண்பு நலன்கள் ?
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. அரசர்களுக்கெல்லாம் விளக்காகத் திகழ்பவன் கொடையாளானாகவும், அருள் தருபவனாகவும், செம்மையாக ஆட்சி செய்பவனாகவும், குடி மக்களை திறம்பட ஆள்பவனாகவும் இருப்பான் என்கின்றார் திருவள்ளுவர். நம் கிறிஸ்து அரசரோ அரசர்களுக்கெல்லாம் பேரரசர். அவரது ஆட்சியில் கொடைக்கும் அருளுக்கும் திறமையான ஆட்சிக்கும் குடிமக்கள் நலனுக்கும் எவ்வித குறையும் கிடையாது. அவரது அரசின் கீழ் இருக்கும் நாம் நம்மோடு உடன் வாழும் மக்கள் மீதும் அதே வித அக்கறையைக் காட்ட வலியுறுத்துகின்றார். தந்தை எவ்வழியோ அவ்வழியே தனயனும் என்பது தந்தைக்கடவுளுக்கு பின் மகன் இயேசுவுக்கு பொருந்துவது எவ்வளவு உண்மையோ அதுபோல் அவர் தம் வாரிசுகளாகிய நமக்கும் பொருந்த வேண்டும். இயேசுவின் போதனைகளில் வருவது போல, ஒரு தலைவன் தன் பணியாளனை மன்னித்து ஏற்று அவன் கடனை தள்ளுபடி செய்கின்றான். ஆனால் பணியாளன் அவனுக்கு கீழ் இருக்கும் பணியாளனை மன்னித்து ஏற்காது சிறையில் தள்ளி தண்டனை தருகின்றான். தனது தலைவனால் அவனும் தண்டனை பெறுகின்றான். அந்த நிலைமை நமக்கும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே இயேசு கிறிஸ்து அரசரின் பண்புகளில் நாமும் வளர்ந்து நமக்கு கீழ் இருக்கும் பிறரையும் வளர்த்து அவரது ஆட்சியில் அவரோடு வாழ்ந்திருப்போம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் அரசுரிமை மிக ஆழமாக வலியுறுத்தப்படும் நிகழ்வான அவரது மனித வாழ்வின் இறுதி கட்டங்கள் பாடுகள் பகுதியிலிருந்து வாசிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பல விதமான மனிதர்கள் இடம் பெறுகின்றனர். ஒரு அரசன் திருநிலைப்படுத்தப்படும் போது அந்த அரசரைப் புகழ்ந்தும் அவரது வழிமரபினரை புகழ்ந்தும் பேசுவது உண்டு. அதனை அந்த பகுதி மக்கள் கேட்குமாறு உரக்கச்சொல்லி மகிழ்வர். முடி சூட்ட இருக்கும் மன்னன் இது வரை இளவரசன் இனி அவன் அரசன். அது போல தான் இயேசுவின் நிகழ்வும் இருக்கின்றது. இறை மனிதனாக இருந்தவர் இறப்பிற்கு பின் முழு இறைச்சாயலைப் பெறுகின்றார். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஆட்சியாளர்கள் அவரை கடவுளின் மெசியா தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை மனதில் ஆழமாக பதித்து, அப்படியானால் அதை நிரூபி என்கின்றனர். படைவீரர்கள் அவர் யூதர்களின் அரசன் என்பதை வெளிப்படுத்தக் கேட்கின்றார்கள். அவரை சுமந்த சிலுவையும் அதில் தொங்கிய பலகையும் அதையே வெளிப்படுத்துகின்றது இவன் யூதரின் அரசன் என்று. உடன் அறையப்பட்ட கள்வனும் நீ மெசியாதானே என்கின்றான். இவர்கள் அனைவரும் தங்கள் மனதில் கிறிஸ்து இயேசுவை அரசராக மெசியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக நினைத்த போதிலும் வெளிப்படுத்தும் வார்த்தைகளிலும் தொனியிலும் எதிர்மறையாக அதனை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் நல்ல கள்வன் மட்டும் தனது மனதில் நினைத்ததை பொருள் மாறாமல் தொனி மாறாமல் வெளிப்படுத்துகின்றார். இயேசுவை அரசராக நம்பினான் அவரது ஆட்சி உரிமையில் பங்கு கொள்ள நினைத்தான். அதையே தனது ஆசையாக கோரிக்கையாக வெளிப்படுத்தினான். இயேசுவும் அவனது நல்லெண்ணத்தை நிறைவேற்ற வாக்களித்தார். இன்று நீர் என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்.
பல நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று சொல்வது ஒன்று. அதனாலே பல விளைவுகள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தே பல நேரங்களில் நாம் நிகல்காலத்தில் வாழ மறந்து விடுகின்றோம். நல்ல கள்வன் போல நல்லதை நினைப்போம் நினைத்ததை சொல்வோம். அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இணைந்து வாழ்வோம். ஒரு நல்ல அரசனுக்கு தேவை மூன்று இயல்புகள் நிகழ் காலத்தில் வாழ்வது, பொறுமை, சரியாக செய்வது இதை ஆங்கிலத்தில் present , patience , perfect ட்ரிபிள் த்ரீ என்பர் நம் கிறிஸ்து அரசர் போல நாமும் சரியான செயல்களை பொறுமையாக அன்றே செய்யும் போது நாமும் அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இருப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...