கிறிஸ்து அரசர் பெருவிழா
இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்
2 சாமுவேல் 5:1-3
கொலோசையர் 1:12-20
லூக்கா 23:35-43
கிறிஸ்து அரசரின் அன்பு பிள்ளைகளே உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து அரசர் பெருவிழா வாழ்த்துக்களை கூறி மகிழ்வதில் பெருமிதம் அடைகின்றேன். இன்றைய வழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நமக்கு அரசரின் பண்பு நலங்களையும் அவரின் சிறப்புக்களையும் எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் எபிரோன் மக்கள் தாவீதை தங்கள் அரசனாக திருநிலைப்படுத்துகின்றனர். இரண்டாம் வாசகத்தில் அரசனுக்குரிய பண்பு நலன்களும் சிறப்புகளும் சொல்லப்படுகின்றன. நற்செய்தி வாசகத்தில் உண்மையான அரசராம் இயேசுவின் செயல்பாடுகள் நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன. இயேசுவை நமது அரசராக காணும் பட்சத்தில் அவரிடம் விளங்கிய பண்புகளில் ஒன்றிரண்டிலாவது நாமும் வளர வேண்டும் என்பது அவரது விருப்பம். அவ்வாறு வளர்ந்தால் நாம் அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இருப்போம். கிறிஸ்து அரசரின் பெருவிழா நாளில் நமக்கு அவர் விடுக்கும் அழைப்பும் உறுதியும் இதுவே . இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்.
பேரின்ப வீட்டில் நாமும் இடம் பெற செய்ய வேண்டியது என்ன?
கிறிஸ்து அரசரின் பண்பு நலன்களில் வளர வேண்டும். எவை எல்லாம் கிறிஸ்துஅரசரின் பண்பு நலன்கள் ?
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. அரசர்களுக்கெல்லாம் விளக்காகத் திகழ்பவன் கொடையாளானாகவும், அருள் தருபவனாகவும், செம்மையாக ஆட்சி செய்பவனாகவும், குடி மக்களை திறம்பட ஆள்பவனாகவும் இருப்பான் என்கின்றார் திருவள்ளுவர். நம் கிறிஸ்து அரசரோ அரசர்களுக்கெல்லாம் பேரரசர். அவரது ஆட்சியில் கொடைக்கும் அருளுக்கும் திறமையான ஆட்சிக்கும் குடிமக்கள் நலனுக்கும் எவ்வித குறையும் கிடையாது. அவரது அரசின் கீழ் இருக்கும் நாம் நம்மோடு உடன் வாழும் மக்கள் மீதும் அதே வித அக்கறையைக் காட்ட வலியுறுத்துகின்றார். தந்தை எவ்வழியோ அவ்வழியே தனயனும் என்பது தந்தைக்கடவுளுக்கு பின் மகன் இயேசுவுக்கு பொருந்துவது எவ்வளவு உண்மையோ அதுபோல் அவர் தம் வாரிசுகளாகிய நமக்கும் பொருந்த வேண்டும். இயேசுவின் போதனைகளில் வருவது போல, ஒரு தலைவன் தன் பணியாளனை மன்னித்து ஏற்று அவன் கடனை தள்ளுபடி செய்கின்றான். ஆனால் பணியாளன் அவனுக்கு கீழ் இருக்கும் பணியாளனை மன்னித்து ஏற்காது சிறையில் தள்ளி தண்டனை தருகின்றான். தனது தலைவனால் அவனும் தண்டனை பெறுகின்றான். அந்த நிலைமை நமக்கும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே இயேசு கிறிஸ்து அரசரின் பண்புகளில் நாமும் வளர்ந்து நமக்கு கீழ் இருக்கும் பிறரையும் வளர்த்து அவரது ஆட்சியில் அவரோடு வாழ்ந்திருப்போம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் அரசுரிமை மிக ஆழமாக வலியுறுத்தப்படும் நிகழ்வான அவரது மனித வாழ்வின் இறுதி கட்டங்கள் பாடுகள் பகுதியிலிருந்து வாசிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பல விதமான மனிதர்கள் இடம் பெறுகின்றனர். ஒரு அரசன் திருநிலைப்படுத்தப்படும் போது அந்த அரசரைப் புகழ்ந்தும் அவரது வழிமரபினரை புகழ்ந்தும் பேசுவது உண்டு. அதனை அந்த பகுதி மக்கள் கேட்குமாறு உரக்கச்சொல்லி மகிழ்வர். முடி சூட்ட இருக்கும் மன்னன் இது வரை இளவரசன் இனி அவன் அரசன். அது போல தான் இயேசுவின் நிகழ்வும் இருக்கின்றது. இறை மனிதனாக இருந்தவர் இறப்பிற்கு பின் முழு இறைச்சாயலைப் பெறுகின்றார். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஆட்சியாளர்கள் அவரை கடவுளின் மெசியா தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை மனதில் ஆழமாக பதித்து, அப்படியானால் அதை நிரூபி என்கின்றனர். படைவீரர்கள் அவர் யூதர்களின் அரசன் என்பதை வெளிப்படுத்தக் கேட்கின்றார்கள். அவரை சுமந்த சிலுவையும் அதில் தொங்கிய பலகையும் அதையே வெளிப்படுத்துகின்றது இவன் யூதரின் அரசன் என்று. உடன் அறையப்பட்ட கள்வனும் நீ மெசியாதானே என்கின்றான். இவர்கள் அனைவரும் தங்கள் மனதில் கிறிஸ்து இயேசுவை அரசராக மெசியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக நினைத்த போதிலும் வெளிப்படுத்தும் வார்த்தைகளிலும் தொனியிலும் எதிர்மறையாக அதனை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் நல்ல கள்வன் மட்டும் தனது மனதில் நினைத்ததை பொருள் மாறாமல் தொனி மாறாமல் வெளிப்படுத்துகின்றார். இயேசுவை அரசராக நம்பினான் அவரது ஆட்சி உரிமையில் பங்கு கொள்ள நினைத்தான். அதையே தனது ஆசையாக கோரிக்கையாக வெளிப்படுத்தினான். இயேசுவும் அவனது நல்லெண்ணத்தை நிறைவேற்ற வாக்களித்தார். இன்று நீர் என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்.
பல நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று சொல்வது ஒன்று. அதனாலே பல விளைவுகள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தே பல நேரங்களில் நாம் நிகல்காலத்தில் வாழ மறந்து விடுகின்றோம். நல்ல கள்வன் போல நல்லதை நினைப்போம் நினைத்ததை சொல்வோம். அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இணைந்து வாழ்வோம். ஒரு நல்ல அரசனுக்கு தேவை மூன்று இயல்புகள் நிகழ் காலத்தில் வாழ்வது, பொறுமை, சரியாக செய்வது இதை ஆங்கிலத்தில் present , patience , perfect ட்ரிபிள் த்ரீ என்பர் நம் கிறிஸ்து அரசர் போல நாமும் சரியான செயல்களை பொறுமையாக அன்றே செய்யும் போது நாமும் அவரது பேரின்ப வீட்டில் அவரோடு இருப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.