Friday, 31 January 2020

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா


                                             காத்திருப்போமா? மீட்புக்காக....
I

இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின் நான்காம் வாரத்தில் நுழைந்து இருக்கக்கூடிய நாம் இன்றைய நாளில் இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாளினை கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளானது துறவிகளின் நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய நாளில் தங்களது வாழ்வை இறைப்பணிக்காக அர்ப்பணித்த ஒவ்வொரு உள்ளங்களுக்காகவும் சிறப்பாக ஜெபிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.துறவறத்திற்காக, பொது பணிக்காக தங்களை அர்ப்பணித்த ஒவ்வொரு உள்ளங்களையும் இன்றைய நாளில் நினைவு கூறுவோம். இன்றைய நாளில் மீட்புக்காக நாம் காத்திருக்கின்றோமா என்று கருத்தில் வாசகங்கள் அனைத்தும் நமக்கு கேள்விகளைத்தொடுக்கின்றன? எனவே காத்திருக்கின்றோமா மீட்புக்காக என்ற தலைப்பில் நாம் என்று சிந்திக்க இருக்கின்றோம்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் மீட்புக்காக காத்திருப்போர் யார்? எப்படி? யார் வழியாக வருகின்றது எப்படி வருகின்றது எவர் வழியாக வருகின்றது என்பது குறித்து தெளிவாக விளக்குகின்றன. நம்மை ஆயத்தம் செய்கின்றது. அது சுட்டெரிக்கும் நெருப்பாகவும், தூய்மைப்படுத்தும் சவர்காரம் போலவும் நம்மை அணுகி வருகின்றது. அது நம்மைப் புடமிடுகின்றது தூய்மைப்படுத்துகிறது. இதன்மூலமாக நம்மையே நமது வாழ்வை நாம் காணிக்கை பொருளாக மாற்ற அழைப்பு விடுக்கின்றது.சாவு அச்சத்தினின்றும், அடிமைத்தனத்தினின்றும் நம்மை விடுவிக்கின்றது. சோதனைக்கு உட்படுத்தாமலௌம், சோதனைக்கு உட்பட்டவரை அதிலிருந்து மீட்கவும் செய்கின்றது. சோதிக்கப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் உதவி செய்கின்றது. சோதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வல்லமை தருகின்றது

இவ்வாறாக முதலிரண்டு நற்செய்தி வாசகங்களும் நமக்கு மீட்பை பற்றிய புரிதலை தெளிவாக எடுத்துரைக்கின்றன. நற்செய்தி வாசகம் ஐந்து விதமான பண்புகள் உள்ளவர்கள் மீட்பினை கண்டு கொள்வர் என்று நமக்கு வெளிப்படுத்துகின்றது. அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல், எதிர்பார்த்தல் கண்டு கொள்ளுதல், அறிவித்தல்.
முதலாவதாக அர்ப்பணிப்பு:
குழந்தை இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுகின்றார் ஆண் பேறு அனைத்தும் ஆண்டவருக்கு சொந்தம் என்ற பழைய ஏற்பாட்டு வரிகளுக்கு ஏற்ப குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தனர். அது ஒரு சாதாரண சடங்காக இருந்தபோதிலும் அதை மரபு மாறாமல் கடைபிடித்து வருகின்றனர். முதல் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு சொந்தம் என்பது இன்றும் நாம் கடைபிடித்து வரும் ஒரு செயல். பல இடங்களில் தங்களது நிலத்தில் விளைந்த முதல் விளைச்சலை கடவுளுக்கு அர்ப்பணிக்க கூடிய பழக்கம் நம் ஊர்களில் இருந்து வருகின்றது. அது விளையும் பயிர் ஆனாலும், உற்பத்தி செய்யும் பொருட்கள் ஆனாலும், வளர்க்கும் கால்நடைகள் ஆனாலும் எதுவானாலும் சரி முதல் விளைச்சல் கடவுளுக்கு சொந்தம் . இது எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். இந்த அர்ப்பணிப்பு மனநிலை நம்மிலும் தொடர்ந்து வருகின்றது. அது நீடித்து நிலைக்க அருள் வேண்டுவோம்.
இரண்டாவதாக கீழ்படிதல்:
யோசேப்பும் மரியாவும் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிகின்றனர். இயேசுவின் பிறப்பில் பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகள் நடந்த போதிலும் அவரது பிறப்பு வித்தியாசமானதாக இருந்தபோதிலும் அவை அனைத்தையும் மனதில் கொண்டு யூத சட்டத்திட்டத்திற்கு கீழ்ப்படிகின்றனர். முழுமனதுடன் தங்களது முதல் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர். தங்களால் இயன்ற காணிக்கையை பொருட்களை ஆலயத்தில் செலுத்தி தங்களது கடமைகளை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்ததால் தான், கடவுளின் திருவுளத்திற்கு கீழ்ப்படிந்து மீட்பரை மகனாக பெரும் பேற்றினைப் பெற்றனர்.நாமும் கடவுளின் திருவுளம் எது என தெரிந்து நிறைவேற்ற முயல்வோம்.

மூன்றாவதாக எதிர்பார்த்தல்:
சிமியோன் மற்றும் அன்னா இருவரும் தங்களது வாழ்நாளை மீட்பரின் வருகைக்காக காத்திருப்பதிலேயே செலவு செய்தனர். என்றாவது ஒரு நாள் மீட்பரைக் காண்போம் என்று நம்பினர். அது போலவே கண்டு கொண்டனர். நம்மிலும் இந்த எதிர்பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம். மீட்பரின் வருமகையை நம் வாழ்வில் எதிர்பார்ப்போம்.

நான்காவதாக கண்டு கொள்ளுதல்:
எருசலேம் தேவாலயத்தில் பல்வேறுவிதமான மக்கள் இருந்தபோதிலும் சிமியோன் அன்னா என்னும் இருவரும் குழந்தை இயேசுவை மீட்பராக கண்டு கொள்கின்றனர். ஏராளமான குழந்தைகள் அவ்வாலயத்தில் வந்து சென்ற போதிலும் இயேசுவை இனம்கண்டு கொள்கின்றனர். மீட்பரின் வருகையை எதிர்பார்த்து இருந்தவர்கள் அந்த மீட்பை கண்டு கொள்கின்றனர். நன்மை செய்பவர்களை நாமும் இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களை இனம் கண்டு அவர்களை போல் நாமும் மாற முயற்சிக்க வேண்டும்.

ஐந்தாவது அறிவித்தல் :
கண்டுகொண்டதோடு தங்களது பணி முடிந்தது என்று நினைக்கவில்லை மாறாக தாங்கள் கண்டு கொண்ட மீட்பை மகிழ்வை பிறருக்கு வெளிப்படுத்துகின்றனர். இதற்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாக அறிவிக்கின்றனர். தங்கள் பெற்ற மகிழ்வை பிறரும் அனுபவிக்க எண்ணி அதனை உரத்த குரலில் வெளிப்படுத்துகின்றனர். நாமும் பல நேரங்களில் நம் வாழ்வில் இறைவனால், நன்மையை மகிழ்வைக் கண்டு கொள்கின்றோம். அதனை பிறருக்கும் அறிவிக்கும் போது அந்த மகிழ்வு, நன்மை இரட்டிப்பாகும் என்பதை மறந்து விடுகின்றோம் பெற்ற நன்மையை பிறாருக்கும் எடுத்துரைப்பவர்களாவோம்.

இறுதியாக நாமும் முழு மன அர்ப்பணிப்பு மனநிலையுடன் வாழ முயற்சிப்போம். கடவுளின் திருவுளம் இதுதான் என அறிந்து அதற்கு கீழ்ப்படிய முற்படுவோம். அவரின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருப்போம். அவரை இனம் கண்டு கொள்வோம். இவர்தான் மீட்பர் என நம் வாழ்வில் நாம் உணர்ந்து அதை பிறருக்கும் அறிவிப்போம். இதன் மூலமாக நாம் மீட்பரை கண்டடைய முடியும். நாம் புடமிட பட்டவர்களாக தூய்மைப்படுத்த பட்டவர்களாக மாறுவோம் இத்தகைய மீட்பினை நாமும் அடைய காத்திருப்போம் சிமியோன் அன்னா போல. இறையாசிர் என்றும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருப்பதாக ஆமென்

Friday, 24 January 2020

நான் யாரைப் பின்பற்றுகிறேன்? சாதனங்களா? சாதனைகளா?

                                         பொதுக்காலம் 3ம் ஞாயிறு 
                                 மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா. 


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இன்றைய நாளில் இயேசுவின் பணி வாழ்வினை குறித்து  நாம் சிந்திக்க இருக்கின்றோம்.  இயேசு தனது பொது வாழ்வினை துவங்கிய வாசகமானது இன்றைய நற்செய்தியில் நமக்கு கூறப்பட்டுள்ளது.  முதல் வாசகம் மறைப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள் அடையும் பயன்கள் பற்றியும், இரண்டாவது வாசகம் மறைப்பணியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது.  நற்செய்தி வாசகம் ஒரு பணியாளர் எப்படி அழைக்கப்படுகிறார் எந்த சூழ்நிலையில் அழைக்கப்படுகிறார் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறுகின்றது. நாம் ஒவ்வொருவரும் இறைப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள். நாம் எவ்வாறு அழைக்கப்படுகிறோம்? எப்படி இருக்க பணிக்கப் படுகிறோம்? நாம் அடைய இருக்கக்கூடிய பயன்கள் என்னென்ன என்பதைப்பற்றி இன்றைய  வாசகங்கள் அனைத்தும் எடுத்துரைக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் இயேசு முதல் சீடர்களை அழைத்த நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். இருவகையான சகோதரர்களை சீடர்களாக இயேசு அழைக்கிறார் முதலில் சீமோன் பேதுருவும் அவரது சகோதரர் அந்திரேயாவும்.  இவர்கள் இருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இரண்டாவதாக செபதேயுவின் மக்கள் இவர்கள் கரையோரமாக அமர்ந்து தங்களது தந்தையுடன் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயேசு இரண்டு சகோதரர்களையும் அழைக்கின்றார். வேலை செய்துகொண்டு இருப்பவர்களையும், ஓய்வாக இருப்பவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் அழைப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவரது பணி செய்ய நம்மை அவர் வேலையிலும்   ஓய்விலும் அழைக்கலாம். சீடர்கள் செய்த வேலைகள் 2. ஒன்று அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டனர். வேலை செய்து கொண்டிருந்தாலும் இயேசு அவர்கள் அருகில் வரும்பொழுது இவர்தான் மெசியா நம்மை மீட்க கூடிய வல்லமை உள்ளவர் என்பதை அறிந்து அவரை இனம் கண்டு கொள்கின்றனர். இரண்டாவதாக அவரது குரலினால் கவரப்படுகின்றனர். அவரது குரலுக்கு செவி மடுக்கின்றனர்.  இயேசு நம்மை சுற்றிலும் நாம் வேலை செய்யும் பொழுதும் சோர்வாக அமர்ந்து இருக்கும் பொழுதும் நம்மை சூழ்ந்து அவர் இருக்கின்றார். அவரது பணி செய்ய எல்லாச் சூழலிலும் மெல்லிய குரல் மூலம் நம்மை அழைக்கின்றார். நாம் செய்ய வேண்டியது இதுதான் இயேசுவை  அவர் குரலை இனம் கண்டு கொள்வது அவரது குரலுக்கு செவிமடுப்பது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் அழைக்கப்பட்டவர்கள் (கிறிஸ்தவ வாழ்வு வாழ) எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஒத்த கருத்துடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடையே பிளவு மனப்பான்மை இருக்கக்கூடாது. ஒரே நோக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் அவர்களிடத்தில் இருக்கக் கூடாது. பணியாளர்களாக அழைக்கப்பட்ட நாம் ஒத்த கருத்துடையவர்களாக, ஒரே மனம், நோக்கம் உடையவர்களாக இருக்கிறோமா? அல்லது பிளவுபட்ட மனம் சண்டை சச்சரவுகளும் குழப்பங்களும் உடையவர்களாக இருக்கிறோமா? என்று சிந்திப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் பணியாளர்கள் அடைந்த பயன்கள் பலன்கள் பற்றி கூறப்படுகிறது. காரிருளில் நடந்துவந்த மக்கள், சாவின் நிழல் சூழ்ந்துள்ள இடத்தில் வசித்த மக்கள், பேரொளியை, சுடர் ஒளியை காண்கிறார்கள். அவர்களது இனம் அவர்களோடு முடிவடையாமல் பலுகிப் பெருகுகின்றது. அவர்களது மகிழ்வு இரு வகையாக பிரிக்கப்படுகிறது ஒன்று அறுவடை நாளில் நிறைவடையும் ஒரு உழவனைப் போல, கொள்ளை பொருளை பங்கிடும் ஒருவனின் மனநிலையைப் போல என் இரு வகை மகிழ்வாக பிரிக்கின்றார். அறுவடைநாள் மகிழ்வு என்பது ஒரு விவசாயி கடினமாக உழைத்து வேலை செய்து தனது வியர்வை சிந்தி தனது உழைப்பு எல்லாம் கொடுத்து ஒரு விதையை உருவாக்கி அதிலிருந்து அதற்குரிய பலனை எடுக்கக்கூடிய அந்த நாள் அறுவடை நாள். தனது துன்பம் எல்லாம் நீங்கி மகிழ்வை காணக்கூடிய அந்த நாள் அவனது அறுவடை நாள். அந்நாளில் அவன் அடையும் மகிழ்வுக்கு வறையரை கிடையாது அவனது உழைப்புக்கேற்ற ஊதியம் அவர் பெறுகிறார். அவனது நேரத்தை உழைப்பை துன்பத்தை அனைத்தையும் கொடுத்து அந்த நிலத்தை பயிரிட்டு அதன் மூலமாக கிடைக்கக்கூடிய விளைச்சலின் மூலம் அவன் பெருமகிழ்வடைகின்றேன் இரண்டாவது வகை மகிழ்வு கொள்ளை பொருளை பங்கிடுவது எந்தவிதமான ஆதாரமும் இன்றி பிறரிடம் இருந்து பெறும் மகிழ்வு. மேலும் அவர்களது சுமை உடைத்தெறியப்படுகிறது. அவர்கள் உடம்பைப் புண்ணாக்கிய தடி தகர்த்தெறியப்படுகின்றது. அவர்களது கொடுங்கோல் ஒடிக்கப்படுகிறது. ஆக இதுவரை துன்பத்தை அனுபவித்து வந்த அவர்கள் மகிழ்வினை அடைகிறார்கள். சாதாரண ஒரு பணியாள் துன்பங்கள் பல அனுபவித்தாலும் இறுதியில் அவனுக்கு பெருமகிழ்வு கிட்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது நற்செய்தி அறிவிப்பவர்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் இருப்பினும் இறுதியில் அவர்கள் பெரும் மகிழ்வை அடைவார்கள்.

இன்றைய வாசகங்கள் மூலம் நாம் நமது வாழ்க்கைக்கு என்று எடுத்துக் கொள்வது என்ன?
 நான் யாரை பின்பற்றுகிறேன்? என்ற கேள்விக்கான ப்திலைத் தேடுவதே இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் அழைப்பு. வளர்ந்து வரும் தொலைதொடர்பு சாதனை உலகில் நாம் பல சாதனங்களை பின்பற்றுகிறோம் முகப்புத்தகத்தில் புலனத்தில் வலைதளத்தில் என முகம் தெரியாத அறிமுகமில்லாத பலரை பின்பற்றுகிறோம். அவர்கள் பதிவிடும் கருத்துக்களைப் பின்பற்றுகிறோம். ஆனால் நமக்கு நன்கு அறிமுகமானவர் இயேசு. அவரது போதனைகள் மூலமாக நமது வாழ்க்கைக்கு பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்தவர். அவரை பின்பற்றுகிறோமா? அவரது வார்த்தைகளை வாழ்வாக்குகின்றோமா? இன்றைய காலகட்டத்தில் நாம் சிலுவையை விட சாதனங்களையே அதிகமாக  பின்பற்றுகிறோம்? இந்நிலை மாறி சிலுவையை பின்பற்றுவோம் சிலுவை நமது வாழ்வின் வெற்றியின் சின்னம். மகிமையின் சின்னம். அந்த சிலுவையின் நாயகன் இயேசு. அவர் நமக்காக, நமது நல்வாழ்வுக்காக தன் உயிரை ஈந்தார் அவரது பணி செய்ய அவரைப்போல பல்வேறு உள்ளங்களை இறைவன்பால் திருப்ப,ஆவல் கொள்வோம்.மறைப்பணி செய்ய ஆர்வம் கொள்வோம். சாதனங்களை விடுத்து சிலுவையை, சிலுவை நாதர் இயேசுவைப் பின்பற்றுவோம். 

ஒரு சிறிய கதை மூலம் இதை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
 நண்பர்கள் இருவர், தூரமான ஒரு இடத்தில் ஒரு மலையின் அடிவாரத்தில் மாணிக்கக் கற்களும் தங்க ஆபரணங்களும் பொக்கிஷமாக இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். எப்படியாவது அந்த பொக்கிஷத்தை தங்களோடு எடுத்து வந்து அதை விற்று காசாக்கி தங்களது வாழ்க்கையை வளமாக்க விரும்புகின்றனர். நீண்ட பயணத்திற்குப் பிறகு அடையவேண்டிய அந்த மலைப் பாதையை அடைகின்றனர். அதுவரை நேராக வந்து கொண்டிருந்த பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தவிதமான பலகையோ அறிவிப்பு பலகையோ
வழிகாட்டி பலகையோ எதுவுமில்லை. எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று தங்களுக்குள் ஆலோசித்தனர் திடீரென்று அவ்வழியாக வழிப்போக்கர் ஒருவர் பயணம் செய்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் முதியவராக வறுமையில் வாடியவர் போல எலும்பும் தோலுமாக இருக்கின்றார் அந்த முதியவர். இவர்களை பார்த்து தம்பிகளே இதே இடத்தில் நின்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இது மிகவும் ஆபத்தான பகுதி விரைவில் உங்கள் இல்லம் திரும்புங்கள். பலவிதமான கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம் இது. மாலை நேரம் அவைகள் அனைத்தும் வெளியே உலாவ தொடங்கும். அது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார். இருவரும் அந்த வழிப்போக்கரிடம் அதோ தூரமாக தெரியக்கூடிய அந்த மலையின் அடிவாரத்திற்கு இவ்விரண்டு பாதையில் எந்த பாதை வழியாகச் சென்றால் செல்ல முடியும் என்று கேட்கின்றனர். அந்த வழிப்போக்கர் அவர்கள் இருவரையும் மேலும் கீழுமாக பார்த்துவிட்டு சொல்கின்றார். 2 பாதையும் அந்த மலை அடிவாரத்தை சென்றடைய கூடியதுதான் ஒன்று நீண்ட அகலமான பாதை மலை அடிவாரத்தை அடைய சில ஆண்டுகள் ஆகும். இன்னொன்று குறுகலான பாதை கடினமான பாதையும் கூட விரைவில் மலை அடிவாரத்தை அடையலாம் என்றார்.  இருவரும் குறுகலான பாதை வழியாக செல்ல முடிவெடுக்கின்றனர் மீண்டும் வழிப்போக்கன் அவர்களை தடுத்து நிறுத்தி குறுகலான பாதையில் நிறைய பிரச்சினைகள் சிக்கல்கள் இருக்கும் பலவிதமான ஆபத்தான விலங்குகளும் இருக்கும் பாதை கரடுமுரடானது அது செல்வது மிகவும் கடினம் உயிருக்கும் கூட ஆபத்து  என்று கூறுகின்றார். நீண்ட அகலமான பாதை பாதை மிகவும் சுலபமானது ஆனால் கடந்து போக வேண்டிய தூரம் அதிகம் என்று கூறுகின்றார். இருவருக்குள் மறுபடியும் வாக்குவாதம் இந்த பாதை வழியாக சென்று அடைவது என்று ஒருவன் நீண்ட பாதை வழியே செல்ல முடிவெடுக்கிறான். மற்றவன் குறுகலான பாதை வழியே செல்ல முடிவெடுக்கிறான். நீண்ட பாதை வழியாக செல்பவன் மலையின் அடிவாரத்தை சென்று அடைவதற்குள், குறுகலான பாதை வழியே சென்றவன் பல்வேறுவிதமான ஆபத்துக்கள் விளைவுகள் அனைத்தையும் கடந்து அதனை முறியடித்து விட்டு அத்தனை துன்பங்களுக்கு பிறகும் அந்த மலையின் அடிவாரத்தை சென்றடைகிறான் பொக்கிஷத்தை தனதாக்கிக் கொள்கிறான். எந்தவிதமான துன்பமும் சோதனையும் அனுபவிக்காமல் சுலபமாக நீண்ட தூரம் பயணம் செய்து அந்த பொக்கிஷத்தை அடையலாம் என்று முயற்சித்து இன்னொருவன் நடந்து நடந்து உடல் சோர்வுற்று மயங்கி விழுகிறான். நமது வாழ்க்கையும் இப்படித்தான் நம் முன்னே இரண்டு பாதைகள் இருக்கின்றன ஒன்று நீண்ட சுலபமான பாதை அது நாம் பயன்படுத்தக்கூடிய தொலை தொடர்பு சாதனங்கள். குறுகலான பாதை சிலுவைப்பாதை, இயேசுவின் பாதை, மறைப்பணி செய்யக்கூடிய பாதை அப்பாதையில் பல்வேறுவிதமான இடைஞ்சல்கள் சிக்கல்கள் இருக்கும் ஆனால் சென்றடைய வேண்டிய இலக்கை விரைவில் சென்றடையலாம் நீண்ட அகலமான பாதை கானல்நீர் போல பொக்கிஷத்தை நம் அருகில் காட்டும் நாம் விரைவாக செல்ல செல்ல அது இன்னும் நம்மை விட்டு அகன்று கொண்டே போகும். ஆக கிறிஸ்தவர்களாகிய நாம் நமது வாழ்வினை அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றுவோம். நமக்காக பாடுபட்டு இறந்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசுவின் பணியைச் செய்ய முன்வருவோம். சிலுவையை மீட்பின் சின்னமாக ஏற்று அதனை பின்பற்றுவோம். சாதனங்களை அல்ல சாதனை புரியும் இயேசுவைப் பின்பற்றுவோம். ஆண்டவர் இயேசுவின் அருளும் அமைதியும் சமாதானமும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றென்றும் இருப்பதாக ஆமென் 

Friday, 17 January 2020

கண்டேன் சான்று பகர்கிறேன்.

பொதுக்காலம் இரண்டாம் வாரம்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
கண்டேன் சான்று பகர்கிறேன்.
இறையேசுவில் மிகவும் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் இரண்டாம் வாரத்தை தொடங்கி இருக்கும் நாம் திருமுழுக்கு யோவானைப் போல இயேசுவை அடையாளம் காண அவரைப் பற்றி சான்று பகர அழைக்கப்படுகின்றோம். இன்றைய முதல், இரண்டாம்  மற்றும் நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஆழமான  தொடர்புடையதாக காணப்படுகின்றது. முதல் வாசகத்தில் இறைவன் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். நீயே என் ஊழியன். தாயின் கருப்பையிலிருந்தே உன்னை நான் என் ஊழியனாக தேர்ந்தெடுத்தேன் என்று அழைக்கின்றார். அவர் பார்வையில் மதிப்பு பெற்றவர்களாக, அவரை நம் ஆற்றலாக எண்ணி நாமும் நம்பிக்கை பெறுகின்றோம்.

அழைத்தலுக்கு பதில் சொல்லும் விதமாக பதிலுரைப்பாடலில் உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்று நாம் பதிலளிக்கிறோம்.

இரண்டாம் வாசகத்தில், அழைக்கப்பட்ட நமது பணி என்ன என்பதை திருத்தூதர் பவுல் அழகாக சொல்கின்றார். திருத்தூதனாக வாழ அழைக்கப்பட்ட நாம். நமது பணி ஆண்டவர் இயேசு, அனைவருக்கும் ஆண்டவர் என எடுத்துரைப்பது. அவர் தரும் அமைதியையும் அருளையும், பிறருக்கும் அளிப்பது. இவ்வார்த்தைகள் குருக்களுக்கும் துறவியர்களுக்கும் மட்டுமல்ல கிறிஸ்தவனாக வாழ விரும்பி ஞானஸ்ஞானம் பெற்ற நம் அனைவருக்கும் உரியது. நாம் அவர் பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள்.

நற்செய்தி வாசகத்தில், அழைக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் செயலும் இயேசுவின் செயலும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. யோவான் தான் யார் என்பதையும் கண்டு கொள்கின்றார். இயேசு யார் என்பதையும் கண்டு கொள்கின்றார். கண்டதோடு மட்டும் நின்று விடாமல் அதைக்குறித்து சான்றுபகர்கின்றார். கிறிஸ்தவர்களாகிய நாமும் பிறப்பின் வழி  அழைக்கப்பட்டோம். ஞானஸ்ஞானத்தின் வழி வாழ பதில் கொடுத்தோம். அத்தோடு நாம் நின்று விட்டோம். தொடர்ந்து கிறிஸ்தவ பணி செய்யவோ, நாம் யார் என கண்டு கொள்ளவோ இயேசுவை கண்டு கொள்ளவோ நாம் முயற்சிப்பதில்லை.

இந்நிலை மாற இறைவனிடம் அருள் வேண்டுவோம். பல நேரங்களில் நம் பார்வை அகலமாவதே இல்லை கடிவாளம் கட்டிய குதிரை போல நேரில் இருப்பதை மட்டும் பார்க்கிறோம் இல்லையென்றால் கீழே பார்க்கிறோம்.இல்லாவிடில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் பார்க்கிறோம்.  யோவான், இயேசு யாரென்று அறியாதிருந்தார். பின் அறிந்து கொண்டார். அவர் பார்வையை அகலப்படுத்தினார். தூய ஆவி புறா வடிவில் இயேசு மேல் வந்து தங்குவதைக் கண்டார். அதை பிறருக்கும் வெளிப்படுத்தினார். நாம் பல நேரங்களில் காண்பதில்லை . கண்டாலும் பிறருக்கு சான்று பகர்வதில்லை. வேண்டுதல்கள் செய்கின்றோம் இறைவன் ஏதாவது நமது வாழ்வில் புதுமை நிகழ்த்த மாட்டாரா என்று? நன்மைகள் நடந்தால் அந்த மகிழ்வில் இறைவனை மறந்து விடுவது . மீண்டும் துயரம் வரும்போது அவரிடம் வேண்டுவது. நம் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை நாம் பிறரிடம் எடுத்துரைக்கும் போது நமது மகிழ்வும் இரட்டிப்பாகும். நம்மால் பிறரும் இறை நம்பிக்கையில் வளரும் வாய்ப்பு பெறுவர்.

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. அதற்கு நாம் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் தன்மை நிலைத்து நிற்கும். ஒரு சிறிய கதை ஒரு தேநீர் விடுதியில் மக்கள் பலர் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தனர். மாலை நேரம், அவர்களுக்குள் மகிழ்வாக கலகலப்பாக அப்பொழுதினை கழித்துக் கொண்டிருந்தனர். திடிரென்று ஒரு எட்டுக்கால் பூச்சி எங்கிருந்தோ வந்தது. அமைதியாக இருந்த அவர்கள் மனது சஞ்சலத்திற்கு உள்ளானது. ஒரு இளம்பெண் கத்திய சத்தத்தில் தேநீர் விடுதியே அல்லோலப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக அனைவரின் கூச்சல் கூப்பாடு சப்தம் என இருந்த இடமே அதிர்ந்தது. பணியாளர் ஒருவர் வந்தார். சூழ்நிலையைப் பார்த்தார். எந்த சஞ்சலமும் இல்லாமல் அதை தன் கையால் எடுத்து வெளியே போட்டுவிட்டு தன் பணியை தொடர்ந்தார். மீண்டும் சிறிய சலசலப்புக்கு பின் இயல்பு நிலை திரும்பியது.

எட்டுக்கால் பூச்சி ஒன்று தான் ஆனால் அதை பார்த்தவர்களின் மனநிலை தான் வேறுபட்டிருந்தது. ஒருவருக்கு இடையூறாக இருப்பது  மற்றவருக்கு சுலபமாக தெரிகிறது. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட மனிதர்கள் நாம், நம்மை அந்த சுண்டு விரல் அளவு பூச்சி என்ன செய்துவிடும் என்று எண்ணினாலே போதும் . அதை எதிர்க்கும் பலம் நமக்கு கிடைத்துவிடும்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் இது போல தான் . நமது நம்பிக்கை மலையளவு இருந்தாலும் கடுகளவு துன்பம் வந்ததும் நமது பலத்தை நாம் மறந்து விடுகின்றோம். பிறரது அவநம்பிக்கை கண்டு அவநம்பிக்கை கொள்ளும் நாம், ஏன் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை பார்த்து நமது நம்பிக்கையை வளர்க்கக்கூடாது? நன்மையை விட தீமைக்கு பலம் அதிகம் என்று சொல்லி சொல்லி நன்மையின் தரத்தை நாமே அழித்துவிட்டோம். தீமையை விட நன்மைக்கே பலம் அதிகம் என்று சொல்லி பழகுவோம். நம் கண்ணெதிரே காணும் நல்லவைகளை மட்டும் சொல்லி மகிழ்வடைவோம். நன்மையைக் காண்போம் நன்மையில் இயேசுவைக் காண்போம் அதைக்குறித்து சான்று பகர்வோம். நனமையின் நாயகன் என்றும் எப்போதும் நம் முன் நடமாடுவார் . நல்லதை நினைப்போம் நலமுடன் வாழ்வோம் நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.                                

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...