Friday, 17 January 2020

கண்டேன் சான்று பகர்கிறேன்.

பொதுக்காலம் இரண்டாம் வாரம்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
கண்டேன் சான்று பகர்கிறேன்.
இறையேசுவில் மிகவும் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் இரண்டாம் வாரத்தை தொடங்கி இருக்கும் நாம் திருமுழுக்கு யோவானைப் போல இயேசுவை அடையாளம் காண அவரைப் பற்றி சான்று பகர அழைக்கப்படுகின்றோம். இன்றைய முதல், இரண்டாம்  மற்றும் நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஆழமான  தொடர்புடையதாக காணப்படுகின்றது. முதல் வாசகத்தில் இறைவன் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். நீயே என் ஊழியன். தாயின் கருப்பையிலிருந்தே உன்னை நான் என் ஊழியனாக தேர்ந்தெடுத்தேன் என்று அழைக்கின்றார். அவர் பார்வையில் மதிப்பு பெற்றவர்களாக, அவரை நம் ஆற்றலாக எண்ணி நாமும் நம்பிக்கை பெறுகின்றோம்.

அழைத்தலுக்கு பதில் சொல்லும் விதமாக பதிலுரைப்பாடலில் உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்று நாம் பதிலளிக்கிறோம்.

இரண்டாம் வாசகத்தில், அழைக்கப்பட்ட நமது பணி என்ன என்பதை திருத்தூதர் பவுல் அழகாக சொல்கின்றார். திருத்தூதனாக வாழ அழைக்கப்பட்ட நாம். நமது பணி ஆண்டவர் இயேசு, அனைவருக்கும் ஆண்டவர் என எடுத்துரைப்பது. அவர் தரும் அமைதியையும் அருளையும், பிறருக்கும் அளிப்பது. இவ்வார்த்தைகள் குருக்களுக்கும் துறவியர்களுக்கும் மட்டுமல்ல கிறிஸ்தவனாக வாழ விரும்பி ஞானஸ்ஞானம் பெற்ற நம் அனைவருக்கும் உரியது. நாம் அவர் பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள்.

நற்செய்தி வாசகத்தில், அழைக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் செயலும் இயேசுவின் செயலும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. யோவான் தான் யார் என்பதையும் கண்டு கொள்கின்றார். இயேசு யார் என்பதையும் கண்டு கொள்கின்றார். கண்டதோடு மட்டும் நின்று விடாமல் அதைக்குறித்து சான்றுபகர்கின்றார். கிறிஸ்தவர்களாகிய நாமும் பிறப்பின் வழி  அழைக்கப்பட்டோம். ஞானஸ்ஞானத்தின் வழி வாழ பதில் கொடுத்தோம். அத்தோடு நாம் நின்று விட்டோம். தொடர்ந்து கிறிஸ்தவ பணி செய்யவோ, நாம் யார் என கண்டு கொள்ளவோ இயேசுவை கண்டு கொள்ளவோ நாம் முயற்சிப்பதில்லை.

இந்நிலை மாற இறைவனிடம் அருள் வேண்டுவோம். பல நேரங்களில் நம் பார்வை அகலமாவதே இல்லை கடிவாளம் கட்டிய குதிரை போல நேரில் இருப்பதை மட்டும் பார்க்கிறோம் இல்லையென்றால் கீழே பார்க்கிறோம்.இல்லாவிடில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் பார்க்கிறோம்.  யோவான், இயேசு யாரென்று அறியாதிருந்தார். பின் அறிந்து கொண்டார். அவர் பார்வையை அகலப்படுத்தினார். தூய ஆவி புறா வடிவில் இயேசு மேல் வந்து தங்குவதைக் கண்டார். அதை பிறருக்கும் வெளிப்படுத்தினார். நாம் பல நேரங்களில் காண்பதில்லை . கண்டாலும் பிறருக்கு சான்று பகர்வதில்லை. வேண்டுதல்கள் செய்கின்றோம் இறைவன் ஏதாவது நமது வாழ்வில் புதுமை நிகழ்த்த மாட்டாரா என்று? நன்மைகள் நடந்தால் அந்த மகிழ்வில் இறைவனை மறந்து விடுவது . மீண்டும் துயரம் வரும்போது அவரிடம் வேண்டுவது. நம் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை நாம் பிறரிடம் எடுத்துரைக்கும் போது நமது மகிழ்வும் இரட்டிப்பாகும். நம்மால் பிறரும் இறை நம்பிக்கையில் வளரும் வாய்ப்பு பெறுவர்.

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. அதற்கு நாம் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் தன்மை நிலைத்து நிற்கும். ஒரு சிறிய கதை ஒரு தேநீர் விடுதியில் மக்கள் பலர் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தனர். மாலை நேரம், அவர்களுக்குள் மகிழ்வாக கலகலப்பாக அப்பொழுதினை கழித்துக் கொண்டிருந்தனர். திடிரென்று ஒரு எட்டுக்கால் பூச்சி எங்கிருந்தோ வந்தது. அமைதியாக இருந்த அவர்கள் மனது சஞ்சலத்திற்கு உள்ளானது. ஒரு இளம்பெண் கத்திய சத்தத்தில் தேநீர் விடுதியே அல்லோலப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக அனைவரின் கூச்சல் கூப்பாடு சப்தம் என இருந்த இடமே அதிர்ந்தது. பணியாளர் ஒருவர் வந்தார். சூழ்நிலையைப் பார்த்தார். எந்த சஞ்சலமும் இல்லாமல் அதை தன் கையால் எடுத்து வெளியே போட்டுவிட்டு தன் பணியை தொடர்ந்தார். மீண்டும் சிறிய சலசலப்புக்கு பின் இயல்பு நிலை திரும்பியது.

எட்டுக்கால் பூச்சி ஒன்று தான் ஆனால் அதை பார்த்தவர்களின் மனநிலை தான் வேறுபட்டிருந்தது. ஒருவருக்கு இடையூறாக இருப்பது  மற்றவருக்கு சுலபமாக தெரிகிறது. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட மனிதர்கள் நாம், நம்மை அந்த சுண்டு விரல் அளவு பூச்சி என்ன செய்துவிடும் என்று எண்ணினாலே போதும் . அதை எதிர்க்கும் பலம் நமக்கு கிடைத்துவிடும்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் இது போல தான் . நமது நம்பிக்கை மலையளவு இருந்தாலும் கடுகளவு துன்பம் வந்ததும் நமது பலத்தை நாம் மறந்து விடுகின்றோம். பிறரது அவநம்பிக்கை கண்டு அவநம்பிக்கை கொள்ளும் நாம், ஏன் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை பார்த்து நமது நம்பிக்கையை வளர்க்கக்கூடாது? நன்மையை விட தீமைக்கு பலம் அதிகம் என்று சொல்லி சொல்லி நன்மையின் தரத்தை நாமே அழித்துவிட்டோம். தீமையை விட நன்மைக்கே பலம் அதிகம் என்று சொல்லி பழகுவோம். நம் கண்ணெதிரே காணும் நல்லவைகளை மட்டும் சொல்லி மகிழ்வடைவோம். நன்மையைக் காண்போம் நன்மையில் இயேசுவைக் காண்போம் அதைக்குறித்து சான்று பகர்வோம். நனமையின் நாயகன் என்றும் எப்போதும் நம் முன் நடமாடுவார் . நல்லதை நினைப்போம் நலமுடன் வாழ்வோம் நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.                                

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...