Friday, 13 March 2020

என் கிணறு எங்கே?

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

என் கிணறு எங்கே?

I. விடுதலைப் பயணம் 17:3-7

II. உரோமையர் 5:1-2,5-8

III. யோவான் 4:5-42


தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றில் இருக்கக்கூடிய நம்மை சமாரியப் பெண்ணின் உரையாடல் வாயிலாக வாழ்வு தரும் நீரைப் பருக இறைவன் அழைக்கின்றார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நீரை மையமாகக் கொண்டதாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் யாவே இறைவன், இஸ்ரயேல் மக்களுக்கு மோசே இறைவாக்கினர் வழி பாலை நிலத்தில் வளமான நீரைத் தருகின்றார். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், இயேசுவின் மேல் நம்பிக்கை எதிர்நோக்கு அன்பு கொண்டு வாழ அறிவுறுத்துகின்றார். இதன் மூலம் வாழ்வு தரும் நீராம் இயேசுவை நமதாக்க வலியுறுத்துகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு சமாரியப் பெண்ணிடம் நடத்தும் உரையாடல் மூலமாக வாழ்வு தரும் தண்ணீரை நாமும் பருக அழைக்கின்றார்.

நற்செய்தியில் இயேசு, சீடர்கள், சமாரியப் பெண் மற்றும் சமாரியர்கள் இடம்பெறுகின்றனர். இதில் சீடர்களின் செயல்பாடுகளையும் சமாரியப் பெண்ணின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு நம்முடைய சிந்தனைகளுள் நுழைவோம்.

   சீடர்கள்                                        சமாரியப் பெண்.

* உணவு தேவை                             நீர் தேவை

* ஊருக்குள் செல்கின்றனர்            ஊருக்கு வெளியே வருகின்றார்

* பெண்ணிடம் பேசுகின்றாரே        பெண்ணிடம் நீர் கேட்கின்றாரே

 என்ற எண்ணம்                              என்ற ஆச்சரியம்

* என்ன உண்டார் என்று               எப்படி நீர் அருந்துவீர் என்ற கேள்வி

கேட்க தயக்கம்

ஆக சீடர்களின் செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது சமாரியப் பெண்ணின் செயல்பாடு.

சமாரியப் பெண்ணின் செயல்பாடுகளை நமது செயல்பாடுகளோடு ஒப்பிட்டு நமது கிணறு எங்கே என்று தேட உங்களை அழைக்கின்றேன்.

1. தேடினாள்/ர்

2. விட்டுவிட்டாள்/ர்

3. அறிவித்தாள்/ர்


தேடினார்.;

தன்னுடைய தாகத்தினை தணிக்க தேவையான தண்ணீர் கிடைக்கும் இடம் எது என் கண்டுணர்ந்து அதனை தேடிச்செல்கிறார். அங்கு நீரினை எடுத்து வர குடத்துடன் செல்கிறார். இயேசு கிணற்றருகே அமர்ந்திருக்கிறார். இயேசு அவரிடம் நீர் கேட்கின்றார். உரையாடல் தொடர்கிறது. இங்கு கிணறு என்பது நம் உள்ளம். நம் உள்ளம் நிம்மதியை நாடும் போது நாம் அமைதியில் நம்மை இருத்தி சிந்திக்கிறோம். செப கூட்டங்களுக்கு, திருப்பலிக்கு செல்கிறோம். அமைதியான சூழலில் பாடல்களை பாடி செபித்து, நம் மனதிற்கு நாமே புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்கிறோம். அது போல தான் அப்பெண்ணும் தன்னுடைய வாழ்வை எண்ணி ஊரடங்கிய நேரத்தில் யாரும் இல்லா அமைதியான நண்பகல் வேளையில் தண்ணீர் எடுக்க குடத்துடன் வருகின்றார். அமைதியான இடத்தில் நீர் தேடி வந்தவர்க்கு வாழ்க்கைக்கான நீர் சுரக்கும் ஊற்றாம் இயேசு கிடைக்கின்றார். நாமும் நம்முடைய உள்ளம் என்னும் கிணற்றை தேடிச்செல்வோம். உள்ளத்தின் மையத்தில் அமர்ந்திருக்கும் இறைவனைக் கண்டு கொள்வோம்.


விட்டுவிட்டார்:

சமாரியப் பெண், தான் நீர் எடுக்க கொண்டு வந்த குடத்தை அவ்விடத்திலேயே விட்டு விட்டு செல்கின்றார். இனி அவருக்கு அக்குடம் தேவை இல்லை . ஏனெனில் அவர் வற்றாத ஊற்றைக் கண்டு கொண்டார். இயேசுவை நாமும் கண்டு கொள்ளும் போது நம்முடைய பழைய இயல்புகளை களைந்து விட நாமும் தயாராய் இருப்போம். அதை அங்கே இயேசுவின் காலடியில் விட்டுவிட முயற்சிப்போம். இது வரை ஊர் மக்கள் யாருடனும் தொடர்பிலில்லாத அப்பெண் தன்னுடய இயல்பை மாற்றி ஊராரிடம் இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கின்றார். தான் செய்த அனைத்தையும் சொன்ன அவரிடம் வந்து பாருங்கள் என்கின்றார். ஆக இவரைப் பற்றி ஊர் மக்கள் ஐந்து கணவர்களை உடையவள் என்று தவறாக பேசி இருக்கக்கூடும். அதையே தைரியமாக அவ்வூர் மக்களிடம் சொல்கின்றார். நாமும் நம்முடைய தவறுகளை ஏற்று தைரியமாக வாழ சமாரியப் பெண் போல முயற்சிப்போம்.


அறிவித்தார்:

மெசியாவாக இருப்பாரோ என்ற தன்னுடைய நல்லெண்ண ஐயத்தை வெளிப்படுத்துகிறார். பிறரைப் பற்றி நாம் முதன்முதலில் கூறும் கருத்து எப்போதும் நன்மையானதாக இருக்க முயற்சிப்போம். அவர் இயேசுவைப் பற்றி தன் ஊர் மக்களுக்கு கூறிய நல்ல செய்தி, ஏராளமான சமாரியர்களை இயேசுவின் பின் தொடர வைத்தது. நமது வார்த்தைகளும் நன்மையை மட்டுமே எடுத்துரைப்பனவாக இருக்க விழைவோம். கிணற்றடியில் பார்த்த அவரை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்துகிறார். ஊருக்கு வெளியே இருந்த இயேசுவை, அவர் புகழை ஊருக்குள் எடுத்துரைக்கின்றார். இயேசுவை ஊருக்குள் அழைத்து வந்து மக்களிடம் அறிமுகப்படுத்தவில்லை மாறாக ஊர் மக்களை ஊருக்கு வெளியே இருக்கும் இயேசுவை சந்திக்க அழைத்துச்செல்கின்றார். மக்களும் இயேசுவை ஊருக்கு வெளியே சென்று பார்த்து தங்கள் ஊருக்குள் அழைத்து வருகின்றனர். வீட்டிற்கு வரும் விருந்தினரை வாசல் வரை சென்று அழைப்பது. அல்லது சிலர் பேருந்து நிறுத்தத்திற்கே சென்று அழைப்பர் அதுபோல.

ஆக சமாரியப் பெண் வெளியே சென்று உள்ளே அறிவிக்கின்றார். சமாரிய மக்கள் உள்ளே இயேசுவை பற்றி அறிந்து வெளியே சென்று அவரைப் பார்க்கின்றனர். அவரோடு ஊருக்கு உள்ளே வருகின்றனர்.

நாமும் சமாரியப் பெண் போல நாம் அறிந்து கொண்ட இயேசுவை வெளிப்படையாக அறிவிக்க ஆவல் கொள்வோம். நமது கிணற்றைத் தேட, கிணற்றடியில் அமர்ந்திருக்கும் இயேசுவைக் கண்டு கொள்ள, நம்முடைய பழைய பாவ இயல்புகளை அவர் காலடியில் விட்டுவிட, அவரைப் பற்றிய நல்ல செய்திகளை பிறருக்கும் அறிவிக்க, முயல்வோம். அதற்கு முதல் படியாக கிணறு எங்கே எனத் தேடுவோம். ஆழமான நம் எண்ணங்கள் புதைந்திருக்கும் நம் உள்ளம் என்னும் கிணற்றை நாடிச்செல்வோம். அக்கிணறு நல்லெண்ண உணர்வுகளை சுரக்கும் வற்றாத நீருள்ள கிணறாக இருக்க அதை தூர்வாறுவோம். கிணற்றை தூய்மைப்படுத்துவோம். நீருள்ள கிணற்றை நாடி இயேசு கண்டிப்பாக வருவார். நம் கிணறு எங்கே ?எப்படி? இருக்கிறது சிந்திப்போம் செயலாற்றுவோம் . இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

Friday, 6 March 2020

எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள்

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு


I. தொடக்கநூல் 12:1-4
II. 2 திமொத்தேயு 1:8-10
III. மத்தேயு 17:1-9

அன்பில் அன்னையாய் ,
பாசத்தில் தமக்கையாய்,
வழிநடத்துதலில் தோழியாய்
உடன் வாழ்வதில் மனைவியாய்,
அன்னை அன்பின் மறுதலிப்பாம் மகளாய்
அனுதினமும் மறுபிறவி எடுத்து
மண்ணுலகை மகிழ்விக்கும் அனைத்து
மகளிருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கக்கூடிய நம்மை இயேசு எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள் என்ற வார்த்தைகள் மூலம் வலுப்படுத்துகின்றார். இன்றைய நாளில் இயேசுவின் உருமாற்றம் பகுதி நமக்கு நற்செய்தி வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பேருடைய குரல்களை நமது சிந்தனைக்கு என்று எடுத்துக்கொள்வோம்.
பேதுருவின் குரல், மேகத்தின் குரல், இயேசுவின் குரல்
முதலாவதாக பேதுருவின் குரல்
ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? என்கின்றார். தான் பேசுவது என்னவென்று தெரியாமலேயே அவர் பேசுகின்றார். அதாவது இப்போது இருக்கக்கூடிய அந்த இன்பமான நிலையிலேயே அப்படியே இருக்க விரும்புகிறார். இரண்டாவதாக தன்னை மறந்து தனக்கு எதிரில் ஒளிமயமாக இருக்கக்கூடிய மோசே எலியா இயேசு ஆகியோரின் நலன்களை மட்டும் நினைக்கின்றார். அந்த காலத்தில் கூடாரம் அமைப்பது அல்லது கூடாரம் என்பது இறைவன் வாழும் ஆலயமாக கருதப்பட்டது ஆக இயேசுவை இறை நிலைக்கு உயர்த்தி மகிழ்கிறார்.
இரண்டாவது மேகத்தின் குரல்
இந்த குரலில் என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஆண்டவர் எடுத்துரைக்கின்றார். இவற்றின் மூலமாக இயேசு யார் என்று தெளிவாக எடுத்துரைக்கின்றார் எனது அன்பார்ந்த மகன் இந்த மனிதரின் பொருட்டு மிகவும் பூரிப்படைந்திருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றார். அடுத்ததாக இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஒரு விண்ணப்பம். அன்று யோர்தான் நதிக்கரையில் இயேசு தன் பணியைத் தொடங்கும் முன் அவர் யார் என மக்களுக்கு எடுத்துரைத்த இறைவன், இன்று அவரது உயர்பணியாம் எருசலேமை நெருங்கும் முன் மீண்டும் எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின் குரல்
முகம் குப்புற விழுந்த சீடர்கள் மூவரையும் தொடுகின்ற தொடுதலின் மூலம் தன்னை யாரென்று வெளிப்படுத்துகின்றார் இயேசு. அஞ்சாதீர்கள் எழுந்திருங்கள் என்ற வார்த்தைகள் அவர்களை பலப்படுத்துகின்றன. மேலும் தான் விண்ணேற்றமடையும் நாள் வரை இதை யாருக்கும் எடுத்துரைக்கக் கூடாது என்று கட்டளையிடுகின்றார். எதை யாரிடம் எப்படி எப்போது சொல்ல வேண்டும் என்பதிய நன்கு அறிந்த இயேசு அதனை தன் சீடர்களுக்கும் பயிற்றுவிக்கின்றார்.
இந்நற்செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்று குரல்களும் மூன்று விதமானவை. பேதுருவின் குரல் மனித இயல்பின் குரல். மேகத்தின் குரல் தய்வ இயல்பு. இயேசுவின் குரல் தெய்வ மனித இயல்பு. எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள் என்று அன்று சீடர்களுக்கு சொன்ன இயேசு இன்று நமக்கும் சொல்கின்றார். பல்வேறு நேரங்களில் நாமும் இன்பமான இந்நிலையிலேயே தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடாதா என்று மனித இயல்பில் ஏங்குவது உண்டு. இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
மேலும் எவ்வாறு சீடர்கள் மேகத்தின் குரலைக் கேட்டு அஞ்சி முகம் குப்புற விழுந்தார்களோ அதுபோல நாமும் பல நிறங்களில் இறை திருவுளம் இறை சித்தம் இது என தெரிந்திருந்தும் அதனை செய்ய இயலாமல் அஞ்சி முகம் குப்புற விழுகின்றோம். இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
நமது விருப்பம் இதுதான் என இயேசுவின் முன் எடுத்து வைத்து அவரது விருப்பம் எது? அவருக்கு விருப்பமா என்று பேதுரு போல கேட்க முன்வருவோம்.
இவருக்கு செவிசாயுங்கள் என்று மேகத்தின் குரலுக்கு செவிகொடுப்போம். இயேசு சொல்வது போல எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள். நமது பலவீனத்தில் இருந்து எழுந்திருப்போம் நமது அறியாமையிலிருந்து எழுந்திருப்போம். நமது பகை மனதிலிருந்து எழுந்திருப்போம். நமது வீண் விவாதத்திலிருந்து எழுந்திருப்போம்.
அன்று மோசேக்கு சீனாய் மலையில் எரியும் முட்புதரில் காட்சி அளித்த இறைவன், இறைவாக்கினர் எலியாவிற்கு ஓரேபு மலையில் பலி நெருப்பு வடிவத்தில் காட்சி அளித்த இறைவன், இன்று இயேசுவுக்கு தாபோர் மலையில் மேகத்தின் குரல் வழியாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு நமது வாழ்விலும் பல்வேறு தருணங்களில் எரியும் புதராக பலி நெருப்பாக மேகத்தின் குரலாக இறைவன் ஒவ்வொரு நாளும் நமக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். நாம் அவரது குரலைக் கேட்க, அவரது உருவத்தை அவரது தன்மையை கண்டுணர முற்படுவோம். இன்று உலகம் முழுவதும் கொரோனா எனும் தொற்று வியாதி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கக் கூடிய நிலையில், இறைவன் நம்மை தொட்டு கூறுகிறார் இந்நிலையிலிருந்து எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள். அஞ்சாது இருப்போம் அவர் குரலுக்கு செவி சாய்ப்போம். அப்பொழுது நமது மனம் என்னும் அகம் நல்லெண்ண ஒளி வீசும். நமது நற்பண்புகள் எனும் குணம் ஆடை எனும் ஒளியால் நம்மை மூடும். எழுந்திருப்போம் அஞ்சாதிருப்போம். இறையாசிர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...