Saturday, 14 November 2020

உண்மையான மதிப்பு

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது.. அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற

சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்.. இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.. ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்.. அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான்.. ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்..

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள். இன்று நம்முடைய தாலந்து உவமையில் நாம் காணும் மூன்றாம் பணியாளர் போல நாமும் பல நேரங்களில் நமக்கு கிடைக்கும் ஆள், பொருள், வேலையின் மதிப்பு தெரியாமல் அதனை தவற விடுகிறோம். பொதுக்காலத்தின் 33ம் ஞாயிற்றில் இருக்கும் நம்மை விண்ணரசின் வியத்தகு உரிமைக்கு அழைக்கின்றார் இறைவன். தாலந்து உவமை மூலமாக நமது மதிப்பையும் பொறுப்பையும் உணர்ந்து கொள்ள அழைக்கின்றார். இன்றைய தலைவரின் குணநலன்கள் மற்றும் பணியாளரின் செயல்பாடுகள் நம்முடைய செயல்பாடுகளை சரிசெய்ய நமக்கு உதவுகின்றன.


தலைவரின் குணநலன்:

பகிரும் குணம்;

தன்னுடைய சொத்துக்களை தானே வைத்திருக்காமல் தனக்கு கீழே இருக்கும் பணியாளர்களிடம் ஒப்படைக்கின்றார்.


பணியாளர்களின் திறமையை அறிபவர்:

அவரிடம் ஏராளமான பணியாளர்கள் இருந்த போதிலும் அதில் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார். அதையும் மூவருக்கும் சமமாகப் பிரிக்கவில்லை. மாறாக அவர்களின் திறம் அறிந்து பார்த்து கொடுக்கின்றார்.


தனது இயல்பை வெளிப்படுத்துபவர்:

இவர் எவ்வளவு அன்பானவர் அக்கறையானவர் என்பதை முதல் இரு பணியாளர்களின் வார்த்தையிலும், எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை மூன்றாவது பணியாளரின் வார்த்தையிலும் அறிந்து கொள்ளலாம்.


பிறர் வளர்ச்சியில் அக்கறை கொள்பவர்;

தன்னுடைய பணியாளர்களில் இருவர் தான் கொடுத்த தாலந்தை வைத்து இரு மடங்கு தாலந்து சம்பாதித்துள்ளனர் என்பதை அறிந்து மகிழ்கின்றார். அவர்களின் மகிழ்வை தனது மகிழ்வாகப் பார்க்கின்றார். உங்கள் மகிழ்வில் நான் பங்கு கொள்கின்றேன் என்று சொல்லவில்லை. மாறாக உன் தலைவனாகிய என் மகிழ்வில் வந்து பங்குகொள் என்கின்றார்.

இவன் என் பணியாளன் நாளுக்கு நாள் வளர்ந்து என்னைவிட பெரிய ஆளாக மாறிவிடுவானோ என்று அஞ்சவில்லை. அவன் இன்னும் அதிகமாக முன்னேற அழைக்கின்றார்.


கண்டிப்பானவர்:

ஒருவர் எவ்வளவு அதிகமாக நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்கின்றாரோ அதே அளவுக்கு கோப உணர்வு உள்ளவராகவும் இருப்பார் என்கிறது உளவியல் ஆய்வு. நம் தலைவர் உண்மையான பணியாளரை பாராட்டும் குணம் கொண்டவர். அதே வேளையில் தவறு செய்த பணியாளரை தண்டிக்கும் குணமும் உடையவர். ஒரே குண நலனோடு எல்லா இடத்திலும் எல்லா சூழலிலும் ஒருவரால் எல்லா நேரமும் இருக்க முடியாது.


பாராட்டி பரிசளிக்கும் குணமுடையவர்:

முதல் இரண்டு பணியாளர்களின் பணியையும் செயலையும் பார்த்து அவர்களை மனமாரப் பாராட்டுகின்றார். அவர்களின் செயலால் மகிழ்ந்து சிறியவற்றில் மிக நம்பிக்கையோடு செயல்பட்டீர்கள் மிகப் பெரியவற்றில் உங்களை பொறுப்பாளராக்குவேன் என்று அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கின்றார்.


தாலந்து உவமையில் வரும் தலைவர் நம் ஆண்டவர் இயேசு. அவர் கொடுக்கும் தாலந்து விண்ணரசிற்கு செல்ல தரும் கொடை,அனுமதி சீட்டு. அனைவருக்கும் அது சமமாக கிடைப்பதில்லை. அவரவர் நம்பிக்கை, குணநலன் பொறுத்து கொடுக்கப்படுகிறது. நம் தலைவர் அன்பானவர் அதே சமயத்தில் கண்டிப்பானவரும் கூட. அவர் நம்மிடம் கொடுத்திருக்கக்கூடிய கொடை என்னும் குடும்பம் உறவுகள் தகுதி திறமை அனைத்தையும் மிகச்சிறப்பாக நாம் கையாள வேண்டும். அவர் கொடுத்ததை இரட்டிப்பாக்கி விண்ணரசு என்னும் மிகப் பெரிய பரிசினை நாம் பெற வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்ட கொடைகளின் உண்மையான மதிப்பினை அவைகள் நம்முடன் இருக்கும் போதே உணர வேண்டும்.


சிறு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்காக அதிக அடம்பிடித்து அழுது அதை வாங்குவார்கள். ஆனால் கொஞ்ச நாளிலேயே அதை மறந்து விடுவார்கள். அதைப்பற்றிய நினைப்பே அவர்களுக்கு வருவதில்லை. வீட்டில் எங்காவது ஒரு மூலையில் அது கிடக்கும். ஆனால் அதுவே பிறர் அதனை எடுத்து விளையாட நினைத்தாலோ அல்லது வேறு ஒருவர் கைக்கு சென்றாலோ அது தன்னுடையது என்று அழுது திரும்பப் பெறும். ஒருவேளை அது அவர்களுக்கு அது திரும்ப கிடைக்கப்பெறலாம். ஆனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட கொடைகள் என்னும் தாலந்திற்கு நாம் உரிய நேரத்தில் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும். நம் கையை விட்டு சென்றாலோ பிறர் கைக்கு சென்றாலோ நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.


மூன்றாம் பணியாளர் போல அதன் மதிப்பு தெரியாமல் மறைத்து வைத்தாலோ, பயன்படுத்தாமல் இருந்தாலோ பாதிப்பு என்னவோ நமக்கு தான். பயத்தினால் அவர் அந்த தாலந்தை மண்ணுக்குள் மறைத்து வைத்ததாக கூறுகின்றார். பல நேரங்களில் நம் பயங்கள் தான் நம்மை மண்ணுக்குள் அழுத்துகின்றன.

விண்ணகத்தந்தை பயந்து தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பாமல் இருந்த்திருந்தால் நமக்கு இயேசு என்னும் மீட்பர் கிடைத்திருக்க மாட்டார்.

மரியாள் பயந்து மறுத்திருந்தால் மனுமகனாய் பிறந்திருக்க மாட்டார்.

சூசையப்பர் பயந்து ஓடி இருந்தால் தச்சன் மகன் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.

சீடர்கள் பயந்து மறைந்தே இருந்திருந்தால் கிறிஸ்தவம் இன்று உலகம் முழுதும் பரவி இருக்காது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அனைவரிடம் பயம் இருந்தது. ஆனால் அந்த பயம் அவர்களை நல்வழிக்கு இட்டு சென்றது. ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கொடைகளின் மதிப்பை நன்கு அறிந்து இருந்தனர். அதனால் அவர்கள் பயத்தை மண்ணுக்குள் புதைத்து துணிவை புதுத்தளிராகப் பெற்றனர்.

இன்றைய நாளில் இறைவன் நம்மையும், பயத்தை புதைத்து துணிச்சலோடு நம் கொடைகளை கையாள அழைக்கின்றார். நம்மோடு இருக்கும் ஒவ்வொரு பொருளும் உறவும் தகுதியும் திறமையும் இறைவன் நமக்கு கொடுத்த கொடை . இக்கொடைகளை நாம் நன்முறையில் பேணிக்காத்து, விண்ணரசிற்குள் நுழைய நம்மை நாம் தயார்ப்படுத்துவோம்.

நமது தாலந்துகளின் உண்மையான மதிப்பை நாம் நன்கு அறிந்து செயல்படுவோம். இறைவன் நம்மோடு இருந்து அவர் தம் அருளாலும் ஆசீராலும் நம்மை நிரப்பி வழிநடத்துவாராக ஆமென்.

Friday, 6 November 2020

வாய்ப்பைத்தேடு விழிப்போடு

 


வாய்ப்பு வடை மாதிரி நாம தான் காக்கா மாதிரி தேடிப் போகனும். பீட்சா மாதிரி அது நம்மைத் தேடி வரும்னு இருக்கக் கூடாது.  இது இக்கால கவிஞனின் கவிதை.   

 

வாய்ப்புக்கள் எல்லா நேரமும் நம்மைத் தேடி வருவதில்லை. அது நிழல் போன்றது நம் கூடவே வரும். விழிப்போடு இருப்பவர்களுக்கு அதனை கண்டு கொள்ளும் பாக்கியம் கிடைக்கின்றது. விழிப்போடு இல்லாதவர்களுக்கு அது வாய்ப்பு என்று அறிந்து கொள்ளும் முன்னமே அது அவர்களை விட்டு கடந்து போய்விடுகிறது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை விழிப்போடு இருக்க அறிவுறுத்துகின்றன. முதல் வாசகத்தில் ஞானம் எப்படிப்பட்டது? அதை எப்படி கண்டடைய வேண்டும் என்றும், அது எப்படிப்பட்டவர்களை நாடிச்செல்லும் என்றும் சாலமோனின் ஞானாகமம் வழியாக நமக்கு இறைவன் வெளிப்படுத்துகின்றார். இரண்டாம் வாசகத்திலோ இறைமகனின் இரண்டாம் வருகைக்கான எதிர்பார்ப்பு பற்றிய பவுலடியாரின் கருத்துக்கள் வழி நம்மையும் அதற்கு விழிப்போடு தயாராக இருக்க அறிவுறுத்துகிறார் இறைவன். நற்செய்தி வாசகத்திலோ, பத்து கன்னியர் உவமை வழி நாம் அறிவிலிகளா முன்மதி உடையவர்களா என்பதை  குறித்து சிந்திக்க அழைக்கின்றார். 


1. ஞானம் என்னும் வாய்ப்பு:

      ஒளி பொருந்தியது. தன்னையும் பிரகாசமாக்கி தன் அருகில் இருப்பவர்களையும் பிரகாசமாக்கும். மங்காதது எனவே தொடர் வெளிச்சம் நிச்சயம். தேடுவோர் அதனை கண்டடைவர். நாடுவோர்க்கு அது வெளிப்படுத்தப்படும். தகுதியானவர்களை அது தேடிச்செல்லும். கனிவுடன் தன்னை காட்டும். ஞானமும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே போல கிடைப்பதில்லை. மறைந்த நம் அப்துல் கலாம் ஐயா கூறுவது போல ஒரே மாதிரியான திறமைகளோடு அனைவரும் இவ்வுலகில் பிறப்பதில்லை. ஆனால் அத்திறமைகளை வளர்த்தெடுக்க ஒரே மாதிரியான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. ஞானம் என்னும் வாய்ப்பும் முதல் வாசகத்தில் சொல்லப்படுவது போல தகுதியானவர்களைத் தேடிச்செல்கிறது. வைகறையில் அதனைத் தேடுபவர்கள் தளர்ச்சி இன்றி கண்டடைகின்றனர். அதிகாலையில் எழுந்து தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்பவன் அதனைக் கண்டு கொள்கின்றான். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்கள் அதில் முழு மூச்சாக இருந்து அவ்வாய்ப்பைப் பெற்றுக் கொள்கின்றனர். மற்றவர்கள் அதனை இழந்துவிடுகின்றனர். வெற்றிகளை அடைய நாமும் நம்முடைய வாய்ப்புக்களை தேடிச்செல்வோம். ஏனெனில் ஞானம் ஒளிமிக்கது. 


2. இரண்டாம் வருகை எதிர்பார்ப்பு: 

     இவ்விரண்டாம் வாசகத்தில் பவுலடியார் இறந்தவர்களை குறித்து கலங்காதீர்கள் அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரோடு இணைந்து நமக்கு முன் கடவுளை எதிர்கொண்டு செல்வார்கள் . நாம் அவர்களுக்கு பின் கடவுளை விண்ணுலகில் எதிர்கொள்வோம் என்கின்றார். இறந்தவர்கள் முதலில் இயேசுவோடு உயிர்த்தெழுவார்கள். அதன்பின் நாமும் அவரோடு உயிர்த்தெழுவோம். இவ்வாறு எப்போது நாம் ஆண்டவரோடு இருப்போம் என்பதில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம் என்கின்றார். ஆக ஆண்டவரோடு இருக்க நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது. அவ்வாய்ப்பினை முழு நம்பிக்கையோடு ஏற்பவர்கள் அதற்கான பலனைப் பெறுகின்றனர். வாழ்க்கையில் பல வாய்ப்புக்கள் வரும் ஆனால் சில வாய்ப்புக்கள் தான் நமக்கு வாழ்க்கையைத் தரும். எனவே எதிர்பார்ப்பாக இருந்தாலும் விழிப்போடு வாய்ப்பிற்காக காத்திருப்போம். 


3. அறிவிலியா? முன்மதியா?  

 அறிவிலிகள் அழைக்கப்பட்டனர். அழைப்பிற்கேற்றவாறு தங்களை தகுதிப்படுத்திக்கொள்ளத் தவறி விட்டனர். மணமகனின் விருந்திற்கு மணமகளின் தோழியரில் பத்து பேர் மட்டும் அழைக்கப்பட்டனர் என்றால் அது எவ்வளவு சிறப்பான ஒரு அழைப்பு. ஆனால் அந்த அறிவிலிகளுக்கு தாங்கள், எதற்கு? யாரால்? எங்கு? அழைக்கப்பட்டிருக்கிறோம் என்ற தெளிவு இல்லை. நாமும் பல நேரங்களில் வாய்ப்புக்களைத் தேடி அலைகின்றோம். ஆனால் அது கிடைத்தவுடன் அதன் வீரியம் அறியாமல் அதனைத் தவறவிட்டு விடுகின்றோம். அறிவிலிகள் மணமகன் வர காலம் தாழ்த்தவே தூக்கக் கலக்கத்தால் உறங்கி விடுகின்றனர். அப்பொழுதாவது எண்ணெயும் இல்லை எண்ணெய்க் கலமும் இல்லை என்பதை  அறிந்து வாங்கச் சென்றிருக்கலாம். அதுவும் செய்யவில்லை. அவர்கள் அதுவரை தாங்கள் என்ன நோக்கத்திற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணரவில்லை. இதுதான் இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரின் பிரச்சனை. நாம் முன்மதி உடையவர்களா? அறிவிலிகளா என்பதே பலருக்கு கேள்விக்குறி. அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது அதை பயன்படுத்த அவர்களுக்கு தெரியவில்லை. சில நேரங்களில் வாய்ப்புக்கள் மலைகள் போல பளிச்செனவும் தென்படும். சில நேரங்களில் பாதைகளில் கிடக்கும் சருகுகள் போலவும் காட்சியளிக்கும். மலையேறி மாடி கட்டவும் சருகுகள் கொண்டு மெத்தை அமைக்கவும் நமக்கு விழிப்பு நிலை அவசியம். இல்லையெனில் வாய்ப்புகள் கண்ணில் காணாமலேயே போய்விடும். 


ஒரு சிறு கதை கொண்டு என்னுடைய இந்த சிந்தனைக் கருத்தினை நிறைவு செய்ய விரும்புகிறேன். ஒரு ஊரில் இரண்டு பார்வையற்றவர்கள் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்து தர்மம் எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மிக அழகாக பாடக் கூடியவர் எனவே அவர் பாடி அங்கிருந்த மக்களிடம் பண உதவி பெற்று வாழ்ந்து வந்தார். மற்றவரோ அவரது இயலாமையைக் கூறி மக்களிடம் பண உதவி பெற்றார். ஒரு நாள் அவ்வழியே சென்ற மன்னர் பார்வையற்றவரின் பாடலினால் கவரப்பட்டு அவருக்கு உதவி செய்ய நினைத்தார். எனவே தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி, அவரிடம் சென்று அவரது பாடலுக்காக அவரைப் பாராட்டினார். மேலும் உனக்கு என்ன உதவி நான் செய்ய வேண்டும் என்று கேட்டார். பாடல் பாடும் பார்வையற்றவரோ, அரசே எனக்கு ஒரு ஆசை ஒரே ஒரு நாள் நான் நீங்கள் உண்ணும் உணவு போல் ஒரு வேளை உண்ண வேண்டும் என்றார். மன்னரும் மறுநாள் அவருக்கு விருந்து அளிப்பதாக உறுதி அளித்தார். மறுநாள் பார்வையற்றவர் மன்னரின் வருகைக்காகக் காத்திருந்தார். காலை, மதியம், மாலை, இரவு ஆயிற்று மன்னர் வரவே இல்லை. அன்று காலை முதல் மன்னரின் விருந்திற்காக மற்றவர்கள் கொடுக்க விரும்பிய அனைத்தையும் மறுத்துவிட்டார் அவர். மறுநாள் மன்னர் பார்வையற்றவரை அதே இடத்தில் சந்தித்தார். பார்வையற்ற மனிதனைப் பார்த்து அரச விருந்து எப்படி இருந்தது? பொற்காசுகள் போதுமானவைகளாக இருந்தனவா? குதிரை எங்கே என்று கேட்டார். பார்வையற்றவருக்கோ ஒன்றும் புரியவில்லை. என்ன மன்னா? என்ன கேட்கின்றீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார். 

நடந்தது என்னவென்றால், மன்னர் பார்வையற்றவருக்கு உணவு எடுத்துக் கொண்டு வரும்போது, உடல்நலம் சரி இல்லாமல் போக, அதனை அரண்மணைக் காவலாளரிடம் கொடுத்து அனுப்புகிறார். இது தெரியாத பாடும் பார்வையற்றவர் அந்த உணவினை தவிர்த்துவிடுகின்றார். அதனால் காவாலாளி அந்த உணவை அருகில் இருந்த மற்றொரு பார்வையற்றவருக்கு கொடுத்து விடுகின்றார். அவரும் முழு மனதுடன் அதனை ஏற்று உண்கின்றார். மன்னர் வேறொரு காவலாளியிடம் 100 பொற்காசுகள் ஒரு குதிரையை பரிசாகக் கொடுத்து அதனை ஆலமரத்தடியில் அரச உணவு உண்ணும் பார்வையற்றவருக்கு கொடுத்து வருமாறு கூறுகின்றார் . ஆக மன்னரின் அன்பளிப்புகள் அனைத்தும் வேறொரு பார்வையற்றவருக்கு போய்ச்சேருகிறது. பாடும் பார்வையற்ற மனிதன் எதிர்பார்த்தது அவனுக்கான வாய்ப்பு மன்னர் ரூபத்தில் வரும் என்று, ஆனால் வந்தது என்னவோ காவலாளியின் வடிவத்தில். நாமும் பல நேரங்களில் நமக்கான வாய்ப்பை இப்படி தான் நழுவ விடுகின்றோம். எந்நேரமும் விழிப்போடு இருந்தால் மட்டுமே நாம் நமக்கான வாய்ப்பை பெற முடியும். ஞானமும், இறைவனை எதிர்கொள்ளும் நாளும் எல்லாமே வாய்ப்பு தான்.   இதுவரை நம் வாழ்வில் நாம் அடைந்தது எல்லாம் இறைவன் நமக்கு தந்த பரிசு. இழப்பதெல்லாம் இறைவன் இன்னொருவருக்கு தரும் வாய்ப்பு என்று உணர்ந்து வாழ்வோம்.  எந்நிலையிலும் விழிப்போடு இருந்து வாய்ப்புக்களை நமதாக்கி வாழ இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.       

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...