Friday, 6 November 2020

வாய்ப்பைத்தேடு விழிப்போடு

 


வாய்ப்பு வடை மாதிரி நாம தான் காக்கா மாதிரி தேடிப் போகனும். பீட்சா மாதிரி அது நம்மைத் தேடி வரும்னு இருக்கக் கூடாது.  இது இக்கால கவிஞனின் கவிதை.   

 

வாய்ப்புக்கள் எல்லா நேரமும் நம்மைத் தேடி வருவதில்லை. அது நிழல் போன்றது நம் கூடவே வரும். விழிப்போடு இருப்பவர்களுக்கு அதனை கண்டு கொள்ளும் பாக்கியம் கிடைக்கின்றது. விழிப்போடு இல்லாதவர்களுக்கு அது வாய்ப்பு என்று அறிந்து கொள்ளும் முன்னமே அது அவர்களை விட்டு கடந்து போய்விடுகிறது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை விழிப்போடு இருக்க அறிவுறுத்துகின்றன. முதல் வாசகத்தில் ஞானம் எப்படிப்பட்டது? அதை எப்படி கண்டடைய வேண்டும் என்றும், அது எப்படிப்பட்டவர்களை நாடிச்செல்லும் என்றும் சாலமோனின் ஞானாகமம் வழியாக நமக்கு இறைவன் வெளிப்படுத்துகின்றார். இரண்டாம் வாசகத்திலோ இறைமகனின் இரண்டாம் வருகைக்கான எதிர்பார்ப்பு பற்றிய பவுலடியாரின் கருத்துக்கள் வழி நம்மையும் அதற்கு விழிப்போடு தயாராக இருக்க அறிவுறுத்துகிறார் இறைவன். நற்செய்தி வாசகத்திலோ, பத்து கன்னியர் உவமை வழி நாம் அறிவிலிகளா முன்மதி உடையவர்களா என்பதை  குறித்து சிந்திக்க அழைக்கின்றார். 


1. ஞானம் என்னும் வாய்ப்பு:

      ஒளி பொருந்தியது. தன்னையும் பிரகாசமாக்கி தன் அருகில் இருப்பவர்களையும் பிரகாசமாக்கும். மங்காதது எனவே தொடர் வெளிச்சம் நிச்சயம். தேடுவோர் அதனை கண்டடைவர். நாடுவோர்க்கு அது வெளிப்படுத்தப்படும். தகுதியானவர்களை அது தேடிச்செல்லும். கனிவுடன் தன்னை காட்டும். ஞானமும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே போல கிடைப்பதில்லை. மறைந்த நம் அப்துல் கலாம் ஐயா கூறுவது போல ஒரே மாதிரியான திறமைகளோடு அனைவரும் இவ்வுலகில் பிறப்பதில்லை. ஆனால் அத்திறமைகளை வளர்த்தெடுக்க ஒரே மாதிரியான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. ஞானம் என்னும் வாய்ப்பும் முதல் வாசகத்தில் சொல்லப்படுவது போல தகுதியானவர்களைத் தேடிச்செல்கிறது. வைகறையில் அதனைத் தேடுபவர்கள் தளர்ச்சி இன்றி கண்டடைகின்றனர். அதிகாலையில் எழுந்து தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்பவன் அதனைக் கண்டு கொள்கின்றான். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்கள் அதில் முழு மூச்சாக இருந்து அவ்வாய்ப்பைப் பெற்றுக் கொள்கின்றனர். மற்றவர்கள் அதனை இழந்துவிடுகின்றனர். வெற்றிகளை அடைய நாமும் நம்முடைய வாய்ப்புக்களை தேடிச்செல்வோம். ஏனெனில் ஞானம் ஒளிமிக்கது. 


2. இரண்டாம் வருகை எதிர்பார்ப்பு: 

     இவ்விரண்டாம் வாசகத்தில் பவுலடியார் இறந்தவர்களை குறித்து கலங்காதீர்கள் அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரோடு இணைந்து நமக்கு முன் கடவுளை எதிர்கொண்டு செல்வார்கள் . நாம் அவர்களுக்கு பின் கடவுளை விண்ணுலகில் எதிர்கொள்வோம் என்கின்றார். இறந்தவர்கள் முதலில் இயேசுவோடு உயிர்த்தெழுவார்கள். அதன்பின் நாமும் அவரோடு உயிர்த்தெழுவோம். இவ்வாறு எப்போது நாம் ஆண்டவரோடு இருப்போம் என்பதில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம் என்கின்றார். ஆக ஆண்டவரோடு இருக்க நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது. அவ்வாய்ப்பினை முழு நம்பிக்கையோடு ஏற்பவர்கள் அதற்கான பலனைப் பெறுகின்றனர். வாழ்க்கையில் பல வாய்ப்புக்கள் வரும் ஆனால் சில வாய்ப்புக்கள் தான் நமக்கு வாழ்க்கையைத் தரும். எனவே எதிர்பார்ப்பாக இருந்தாலும் விழிப்போடு வாய்ப்பிற்காக காத்திருப்போம். 


3. அறிவிலியா? முன்மதியா?  

 அறிவிலிகள் அழைக்கப்பட்டனர். அழைப்பிற்கேற்றவாறு தங்களை தகுதிப்படுத்திக்கொள்ளத் தவறி விட்டனர். மணமகனின் விருந்திற்கு மணமகளின் தோழியரில் பத்து பேர் மட்டும் அழைக்கப்பட்டனர் என்றால் அது எவ்வளவு சிறப்பான ஒரு அழைப்பு. ஆனால் அந்த அறிவிலிகளுக்கு தாங்கள், எதற்கு? யாரால்? எங்கு? அழைக்கப்பட்டிருக்கிறோம் என்ற தெளிவு இல்லை. நாமும் பல நேரங்களில் வாய்ப்புக்களைத் தேடி அலைகின்றோம். ஆனால் அது கிடைத்தவுடன் அதன் வீரியம் அறியாமல் அதனைத் தவறவிட்டு விடுகின்றோம். அறிவிலிகள் மணமகன் வர காலம் தாழ்த்தவே தூக்கக் கலக்கத்தால் உறங்கி விடுகின்றனர். அப்பொழுதாவது எண்ணெயும் இல்லை எண்ணெய்க் கலமும் இல்லை என்பதை  அறிந்து வாங்கச் சென்றிருக்கலாம். அதுவும் செய்யவில்லை. அவர்கள் அதுவரை தாங்கள் என்ன நோக்கத்திற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணரவில்லை. இதுதான் இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரின் பிரச்சனை. நாம் முன்மதி உடையவர்களா? அறிவிலிகளா என்பதே பலருக்கு கேள்விக்குறி. அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது அதை பயன்படுத்த அவர்களுக்கு தெரியவில்லை. சில நேரங்களில் வாய்ப்புக்கள் மலைகள் போல பளிச்செனவும் தென்படும். சில நேரங்களில் பாதைகளில் கிடக்கும் சருகுகள் போலவும் காட்சியளிக்கும். மலையேறி மாடி கட்டவும் சருகுகள் கொண்டு மெத்தை அமைக்கவும் நமக்கு விழிப்பு நிலை அவசியம். இல்லையெனில் வாய்ப்புகள் கண்ணில் காணாமலேயே போய்விடும். 


ஒரு சிறு கதை கொண்டு என்னுடைய இந்த சிந்தனைக் கருத்தினை நிறைவு செய்ய விரும்புகிறேன். ஒரு ஊரில் இரண்டு பார்வையற்றவர்கள் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்து தர்மம் எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மிக அழகாக பாடக் கூடியவர் எனவே அவர் பாடி அங்கிருந்த மக்களிடம் பண உதவி பெற்று வாழ்ந்து வந்தார். மற்றவரோ அவரது இயலாமையைக் கூறி மக்களிடம் பண உதவி பெற்றார். ஒரு நாள் அவ்வழியே சென்ற மன்னர் பார்வையற்றவரின் பாடலினால் கவரப்பட்டு அவருக்கு உதவி செய்ய நினைத்தார். எனவே தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி, அவரிடம் சென்று அவரது பாடலுக்காக அவரைப் பாராட்டினார். மேலும் உனக்கு என்ன உதவி நான் செய்ய வேண்டும் என்று கேட்டார். பாடல் பாடும் பார்வையற்றவரோ, அரசே எனக்கு ஒரு ஆசை ஒரே ஒரு நாள் நான் நீங்கள் உண்ணும் உணவு போல் ஒரு வேளை உண்ண வேண்டும் என்றார். மன்னரும் மறுநாள் அவருக்கு விருந்து அளிப்பதாக உறுதி அளித்தார். மறுநாள் பார்வையற்றவர் மன்னரின் வருகைக்காகக் காத்திருந்தார். காலை, மதியம், மாலை, இரவு ஆயிற்று மன்னர் வரவே இல்லை. அன்று காலை முதல் மன்னரின் விருந்திற்காக மற்றவர்கள் கொடுக்க விரும்பிய அனைத்தையும் மறுத்துவிட்டார் அவர். மறுநாள் மன்னர் பார்வையற்றவரை அதே இடத்தில் சந்தித்தார். பார்வையற்ற மனிதனைப் பார்த்து அரச விருந்து எப்படி இருந்தது? பொற்காசுகள் போதுமானவைகளாக இருந்தனவா? குதிரை எங்கே என்று கேட்டார். பார்வையற்றவருக்கோ ஒன்றும் புரியவில்லை. என்ன மன்னா? என்ன கேட்கின்றீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார். 

நடந்தது என்னவென்றால், மன்னர் பார்வையற்றவருக்கு உணவு எடுத்துக் கொண்டு வரும்போது, உடல்நலம் சரி இல்லாமல் போக, அதனை அரண்மணைக் காவலாளரிடம் கொடுத்து அனுப்புகிறார். இது தெரியாத பாடும் பார்வையற்றவர் அந்த உணவினை தவிர்த்துவிடுகின்றார். அதனால் காவாலாளி அந்த உணவை அருகில் இருந்த மற்றொரு பார்வையற்றவருக்கு கொடுத்து விடுகின்றார். அவரும் முழு மனதுடன் அதனை ஏற்று உண்கின்றார். மன்னர் வேறொரு காவலாளியிடம் 100 பொற்காசுகள் ஒரு குதிரையை பரிசாகக் கொடுத்து அதனை ஆலமரத்தடியில் அரச உணவு உண்ணும் பார்வையற்றவருக்கு கொடுத்து வருமாறு கூறுகின்றார் . ஆக மன்னரின் அன்பளிப்புகள் அனைத்தும் வேறொரு பார்வையற்றவருக்கு போய்ச்சேருகிறது. பாடும் பார்வையற்ற மனிதன் எதிர்பார்த்தது அவனுக்கான வாய்ப்பு மன்னர் ரூபத்தில் வரும் என்று, ஆனால் வந்தது என்னவோ காவலாளியின் வடிவத்தில். நாமும் பல நேரங்களில் நமக்கான வாய்ப்பை இப்படி தான் நழுவ விடுகின்றோம். எந்நேரமும் விழிப்போடு இருந்தால் மட்டுமே நாம் நமக்கான வாய்ப்பை பெற முடியும். ஞானமும், இறைவனை எதிர்கொள்ளும் நாளும் எல்லாமே வாய்ப்பு தான்.   இதுவரை நம் வாழ்வில் நாம் அடைந்தது எல்லாம் இறைவன் நமக்கு தந்த பரிசு. இழப்பதெல்லாம் இறைவன் இன்னொருவருக்கு தரும் வாய்ப்பு என்று உணர்ந்து வாழ்வோம்.  எந்நிலையிலும் விழிப்போடு இருந்து வாய்ப்புக்களை நமதாக்கி வாழ இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.       

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...