Wednesday, 17 March 2021

பலன் தரும் கோதுமை மணி

 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு


எரேமியா 31; 31-34

எபிரேயர் 5;7-9

யோவான் 12: 20-33


"சுடச்சுட பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" என்ற திருக்குறள் வரிகளுடன் இன்றைய ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்குள் நாம் நுழைவோம். நெருப்பில் சுடப்படும் தங்கமானது மெருகேறுவது போல நோன்பிருந்து தவம் மேற்கொள்ளும் துறவிகள் துன்பத்தால் மேன்மைப்படுத்தப்படுவர் என்பது இக்குறளின் பொருள். தவக்காலத்தின் நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் . நமக்கும் பல்வேறு துன்பங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கும் இவ்வேளையில் துன்புற்று, மண்ணில் மடிந்து பலன் தரும் கோதுமை போல நமது வாழ்வு இருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.


துன்பம் எல்லோருக்கும் வரும் . அது அவரவர் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொருத்து அதன் தன்மைக் கணக்கிடப்படும். துன்பம் என்பது நாம் சுவைத்து மகிழும் கரும்பைப் போல என்று நான் புத்தகத்தில் வாசித்த நியாபகம். கரும்பின் சுவை நிறைந்த பகுதியின் முன்னும் பின்னும் ஒரு சிறு கடினமான கணுப்பகுதி இருக்கும் . அதைக் கடந்த பின்னரே கரும்பின் சுவையான பகுதியை நம்மால் ருசிக்க முடியும். அது போல தான் வாழ்க்கையும். துன்பமான ஒரு சூழல் இருக்கிறது என்றால், மகிழ்வான ஒரு சூழல் அதன் பின் நமக்காகக் காத்திருக்கிறது என்று அர்த்தம். கரும்பின் கணுப்பகுதிக்கு அஞ்சி கரும்பையே சுவைக்காமல் விட்டால் அதை விட முட்டாள் தனமான காரியம் வேறு இல்லை என்று தான் சொல்ல முடியும். அதைப் போல துன்பம் கண்டு வாழ்க்கையே இப்படி தான் என்று சோர்ந்து, வாழாமல் விட்டால் அதுவும் முட்டாள் தனமே.


இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமை மணி போல மண்ணில் மடிந்து வாழச் சொல்கின்றார். அதற்கு முதலில் நாம் நம்மை இழக்க தயாராக இருக்க வேண்டும். இயேசு வாழ மட்டும் அறிவுறுத்தவில்லை தாம் முதலில் வாழ்ந்து காட்டி அது போல வாழுமாறு அறிவுறுத்துகிறார். சொல்பவரல்ல, செய்பவர் நம் இயேசு. அவரைப் போல வாழ அவர் தம் சீடர்களாகிய நாமும் பயிற்சிக்கவேண்டும். அதற்காக சில உத்திகளை நமக்குக் கொடுக்கின்றார்.


1. இயேசுவைக் காண விரும்பு. 2. அவரிடம் அழைத்துச்செல். 3. பின்பற்று 4. குரலைக் கேள்.


1. இயேசுவைக் காண விரும்பு:

எவ்வாறு கிரேக்கர்கள் இயேசுவைக் காண விரும்பி பிலிப்பிடம் வந்தார்களோ அது போல நாமும் இயேசுவை விரும்பிக் காண செல்ல வேண்டும். அவர் இருக்கும் இடம் அறிந்து அவரைப் பின் தொடர வேண்டும். நம்முடைய மேலான விருப்பத்தை பிறரிடம் எடுத்து சொல்ல வேண்டும். அப்போது தான் அது நிறைவேறும். பிரபஞ்ச சக்தி பற்றி படிப்பவர்கள் எழுதுபவர்கள் அடிக்கடி கூறுவது இதுவே. நாம் எதை அடைய நினைக்கின்றோமோ அதை பிரபஞ்சத்திடம் வெளிப்படுத்த வேண்டும். தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லும் குழந்தை வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறது. எது கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் குழந்தை, ஒரு சில நேரத்தில் விரும்பியது கிடைக்காது வருத்தமடைகின்றது. அது போல நாமும் நமக்கு இது வேண்டும் என்பதை உரிமையுடன் நம் தந்தையிடம் கேட்க வேண்டும். ஆக இயேசுவை நாம் காண விரும்ப வேண்டும். கடவுள் உருவத்தில் என்று எதிர்பார்ப்பதை விட கண்ணுக்கு தெரியும் மனிதர் உருவத்தில் கடவுளைக் காண முயற்சிக்க வேண்டும். மனிதர்கள், நிகழ்வுகள், சூழல்கள் அனைத்திலும் இயேசுவைக் காண்பவர்களாக தேடுபவர்களாக நாம் இருக்க வேண்டும். காண விரும்புவோம் இயேசுவை குடும்பத்தில் குழுவில் நண்பர்களில் நன்னெறியில்....


2. அவரிடம் அழைத்துச்செல்:

நாம் இயேசுவைக் கண்டு வாழ்ந்து கொண்டு இருந்தாலும் பிறரையும் இயேசுவிடம் அழைத்துச்செல்பவர்களாக வாழ வேண்டும். பிலிப்பு தன்னை நோக்கி வந்த கிரேக்கர்கள், முன் பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்த போதிலும் அவர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றார். தன்னால் இயேசுவிடம் அவர்களை அழைத்துச்செல்ல முடியுமா என்று எண்ணி தயங்கி விடவில்லை மாறாக அந்திரேயாவின் உதவியை நாடி கிரேக்கர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றார். கடவுள் தான் எல்லா நேரமும் நம்முடைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் வடிவில் இருக்கும் மனிதர்களால் கூட நமது ஆசைகள் நிறைவேறலாம். ஆனால் நாமும் ஒரு நாள் பிற மனிதர்களுக்கு கடவுளாக மாறும் சூழ்நிலை வரக்கூடும். அதையும் ஏற்கும் உள்ளம் வேண்டும். ஆக நாம் இயேசுவிடம் பிறரை அழைத்துச்செல்பவர்களாக இருக்க வேண்டும். தானம் கொடுப்பவர்களுக்கு தெரியாது கடவுளுக்கு தான் கொடுக்கிறோம் என்று . ஆனால் பெறுபவர்களுக்கு தெரியும் கொடுப்பது கடவுள் தான் என்று. நாம் கடவுளாக பார்க்கப்படும் தருணம் வரும். கடவுளை நோக்கி பிறரை அழைத்துச்செல்லும் தருணமும் வரும் . எதிர்பார்த்துக் காத்திருப்போம்.


3. பின்பற்று:

இயேசுவைப் பின்பற்றியவர்கள் பலர். அதில் சிலர் மட்டுமே கடைசி வரை அருகிருந்தனர். அதற்கான பேற்றையும் பெற்றனர். அவரைப் பின்பற்றி அவருக்கு தொண்டு செய்பவர்கள், அவரைப் பின்பற்றினர். அவரைப் போல பாடுகள் பட்டு வேத சாட்சியாக இறக்கவும் செய்தனர். இயேசு சொன்ன கோதுமை மணி போல மண்ணில் மடிந்து பலன் கொடுத்தவர்கள் அவர்கள். துன்பம் என்னும் நெருப்பினால் புடமிடப்பட்டு தூய்மையான தங்கமாக மின்னியவர்கள். கரும்பின் கணுப்பகுதியை கடித்து எறிந்து முழு கரும்பையும் ருசி பார்த்தவர்கள். நம் இயேசு சொகுசான வாழ்க்கை வாழ, " என்னை பின்பற்று" என்று கூறவில்லை. துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கை இது என்னைப் போல் வாழ்ந்து கடவுளின் பெயரை மாட்சிப்படுத்துங்கள் என்கின்றார். அவரைப் போல வாழ்வோம் அவரைப் பின்பற்றுவோம்.


4.குரலைக் கேள்:

இன்றைய வாசகத்தில் கடவுளின் குரல் ஒன்று வானத்தில் இருந்து கேட்ட போது அங்கு கூடியிருந்த மக்கள் அக்குரலைக் கேட்கின்றனர். அது வானதூதரின் குரலாக இருக்குமோ என்று எண்ணுகின்றனர். அதற்கு இயேசு இக்குரல் எனக்காக அல்ல உங்களுக்காக ஒலிக்கப்பட்டது. இயேசுவின் மகிமையைக் காதுகளால் கேட்டு அன்றைய நாளில் சிலர் மனமாற்றம் அடைந்து இருக்கலாம். நமக்கும் பல நேரங்களில் இயேசுவின் குரல், இயேசுவைப் பற்றிய குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதை கேட்காதவாறு நமது காதுகள் வேறு பல சத்தங்களினால் அடைக்கப்பட்டுள்ளன. தொலைபேசி, தொலைக்காட்சி, என தொடர்பு சாதனங்களின் சத்தங்களினால் நாம் நம்முடைய குரலையே கேட்காது மறந்து போய் இருக்கின்றோம். பின் எப்படி இயேசுவின் குரலையும், இயேசுவைப் பற்றிய குரலையும் நம்மால் கேட்க முடியும். ஹார்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குள் ஹியர் என்ற வார்த்தை மறைந்து இருப்பதற்கு காரணம் என்ன? உன் இதயம் சொல்வதைக் கேள். பிறர் இதயம் கூற விரும்புவதையும் கேள் என்று அர்த்தம். இதயம் கொடுத்து பிறரின் குரலைக் கேட்போம். செவி கொடுப்போம் நமது குரலும் செவி சாய்க்கப்படும்.


ஆம் அன்பானவர்களே கோதுமை மணி போல மடிந்து பலன் கொடுக்க முதலில் இயேசுவைக் காண விரும்புவோம் ஆலயத்தில், ஆன்மீகத்தில் அருகிருப்பவர்களின் உடனிருப்பில்.

பிறரையும் இயேசுவிடத்தில் அழைத்துச்செல்வோம் நண்பனாக உறவினராக, அயலாராக அண்டைவீட்டாராக....

பின்பற்றுவோம் அவரின் விழுமியங்களை வீரியமுள்ள வார்த்தைகளை, விதை போன்ற வாழ்வை....

குரலைக்கேட்போம். மகிழ்வில் மன்னிப்பில் மன்றாட்டில்.....

இறைமகன் இயேசுவின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பதாக ஆமென்,.


Friday, 12 March 2021

உண்மை ஒளி

 மறையுரை சிந்தனை சகோ. மெரினா. ம.ஊ.ச. 


தவக்காலம் நான்காம் வாரம்

உண்மை ஒளி

2 குறிப்பேடு 36; 14-16,19-23

எபேசியர் 2; 4-10

யோவான் 3; 14-21 <

p>தவக்காலத்தின் நான்காம் வாரத்தில் இருக்கக் கூடிய நம்மை இறைவன் உண்மை ஒளியை நோக்கி வர அழைக்கின்றார். இயேசுவின் பாடுகளோடு பயணித்து நம்மை நாமே செதுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் யார் ஒளி? அது உண்மை ஒளியா என ஆராய்ந்து பார்த்து வாழ அழைக்கின்றார். தேர்தல் நேரத்து பரபரப்புகள் , பரப்புரைகள், அவசர செய்திகளின் அதிர்வலைகள், இலவசங்களின் இடர்ப்பாடுகள், விலையேற்றத்தின் வீரியங்கள் என பல்வேறு இருள்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை ஒளியை நோக்கி முன்னேறி வரச்சொல்கின்றார். உண்மை ஒளியை நாம் கண்டறிய முதலில் நம்மில் இருக்கும் இருள்களை விரட்டியடிக்க வேண்டும்.

இருள் என்ற ஒன்று முதலில் இல்லை . மாறாக ஒளியானது பல்வேறு பொருள்களால் மறைக்கப்பட்டிருப்பதாலே இருள் என்ற ஒன்று ஏற்படுகின்றது. சூரியன் இரவில் காணாமல் போவதில்லை. அது மறைக்கப்பட்டிருப்பது போல. நாமும் பல தேவையற்ற குணங்களால் பண்புகளால் நம்மிடம் உள்ள ஒளியை மறைத்து வைத்திருக்கிறோம். அதனை நீக்கிவிட்டால் நாமும் நமது ஒளியைக் காணலாம்.

ஜென் கதை ஒன்று; துறவி ஒருவர் தனது மாணவர்களிடம் எது உண்மையான ஒளி என்று எப்போது அறிந்து கொள்ளலாம்? என்று கேட்டார். சீடர் ஒருவர் தூரத்தில் இருப்பது ஆலமரமா? அரசமரமா என்று கண்களுக்கு நல்ல வெளிச்சமாய் தெரிவது உண்மை ஒளி என்றார். மற்றொருவர், எதிரில் வருவது குதிரையா கழுதையா என்று கண்டுபிடிக்கும்படி தெளிவாய் இருக்கும் வெளிச்சம் உண்மை ஒளி என்றார். ஆனால் குருவோ ஆறறிவற்ற பொருளான மரம், விலங்குகளை அடையாளம் காண்பதற்கு உதவும் வெளிச்சம் உண்மை ஒளி அல்ல, மாறாக ஆறறிவுடைய மனிதன் என் சகோதரன் என்று அறியும் படி நம் மனக்கண்களுக்கு கிடைக்கும் வெளிச்சமே உண்மை ஒளி என்றார். பல நேரங்களில் நாம் எங்கோ யாருக்கோ நடக்கும் துன்பங்களுக்காக நம்மை அறியாமல் கண்ணீர் விடுகின்றோம் இரக்கம் கொள்கின்றோம். ஆனால் அருகில் இருக்கும் நம் சக நண்பர்களின் துன்பங்களை கண்டு கொள்ளாமல் விடுகின்றோம். நம் அருகில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து உதவும் நேரத்தில் உண்மை ஒளி நம் உள்ளத்தில் உதயமாகி விட்டது என்று அர்த்தம்.


உண்மை ஒளியை நாம் உணர இன்றைய வாசகங்கள் வழி இறைவன் நமக்கு சில அறிவுரைகளைக் கொடுக்கின்றார். 1. ஆலயம் செல். 2. நற்செயல் புரி. 3. ஒளியை நோக்கி வா.

1. ஆலயம் செல்:

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் செய்த பாவச்செயலும் அதனால் கடவுளின் சினத்திற்கு அவர்கள் ஆளானதும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு தான் பாவம் செய்தாலும், கடவுள் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு தூதர்களை அனுப்புகின்றார். ஆனால் மக்கள் அதனை புரிந்து கொள்ளாமல் மேலும் மேலும் பாவம் செய்கின்றனர். 70 ஆண்டுகளுக்கு பின், கடவுளின் ஆலயம் நம்மிடத்தில் இல்லை என்பதை உணர்ந்து அதனை கட்ட அரசன் ஆணை பிறப்பிக்கின்றான். "ஆண்டவரின் மக்கள் அவரின் ஆலயம் செல்லட்டும்" என்ற ஆணையைப் பிறப்பிக்கின்றான். ஆக மக்களின் துன்பத்திற்கு காரணம் அவர்கள் ஆண்டவரை நாடாமல் இருப்பதே என்பதை அரசன் அறிந்து அதனை செயல்படுத்த வழிவகை செய்கின்றான்.

நாமும் பல நேரங்களில் சோதனைகளுக்கு ஆளாகின்றோம். துன்புறுகின்றோம். ஆனால் அத்துன்பத்திற்கு நம்முடைய சூழலையும் நேரத்தையும் உடன் வாழும் சக மனிதர்களையும் காரணம் காட்டி விடுகின்றோம். துன்புற்ற நேரத்தில் ஆலயத்திற்கு சென்றாலும் நம்முடைய மன்றாட்டுகள் புலம்பல்களாகவும் அழுகைகளாகவும் தான் இருக்கின்றனவே தவிர, அவை எதனால் என்று எண்ண மறந்துவிடுகின்றோம். இந்த தவக்காலத்தில் ஒறுத்தல்களையும், செப தவங்களையும் மேற்கொள்ளும் நாம், ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடிக்கடி செல்லும் இடமே நமது இல்லம். எப்போதாவது சென்றால் அது விருந்தினர் இல்லம். நாம் கடவுளின் பிள்ளைகள் எனில் அவர் வாழும் இல்லம் நமது இல்லம். அனுதினமும் ஆலயம் சென்று நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்ற உரிமையை தக்க வைத்துக் கொள்வோம். உண்மை ஒளி நம்மில் தானாக சுடர்விடும்.


2. நற்செயல்கள் புரி:

கடவுள் அன்பும் அருளும் மிக்கவர். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அந்த அன்புக்கும் அருளுக்கும் உரிமையுடையவர்கள். அன்பு அருள் இவ்விரண்டையும் நாம் மென்மேலும் வளர்த்துக் கொள்ள நமக்கு மிக உதவியாக இருப்பவை நாம் செய்யும் நற்காரியங்கள். சிலர் தங்களுடைய நற்செயல்கள் பிறரால் பாராட்டப்படவில்லை ரசிக்கப்படவில்லை என்று எண்ணி அதனை தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகின்றனர். சூரியன் உதிப்பதையும், மறைவதையும் உலகில் வாழும் எல்லோரும் எல்லா நேரமும் ரசிப்பதில்லை அதற்காக சூரியன் தன் வேலையை செய்யாமல் இல்லை. நாம் செய்கின்ற நற்செயல்களை ரசிப்பவர்களும் அதை விமர்சிப்பவர்களும் இருக்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். விமர்சனங்களுக்கு பயந்து வாழ்ந்தால் நல் விளைவுகளை அறுவடை செய்ய முடியாது. நாம் நற்செயல்கள் புரிவதற்கென்றே இயேசு கிறிஸ்து வழியாக படைக்கப்பட்டிருக்கின்றோம். அதை உணர்ந்து வாழ்ந்தால் உண்மை உளி நம் வாழ்வை மகிழ்விக்கும்.


3. ஒளியை நோக்கி வா:

சிறு பிள்ளைகள் நடை பயிலும் நேரத்தில் தாய், தந்தையர் அக்குழந்தைகளை தரையில் இறக்கி விடுவர். பின் தன்னை நோக்கி வருமாறு கைகளை நீட்டுவர். குழந்தைகள் அம்மா அப்பாவின் முகம் அறிந்து அவர்களை நோக்கி நடையெடுக்கும். தான் நடக்கிறேன் என்பதை விட தன் அம்மா அப்பாவை நோக்கி செல்கின்றோம் என்ற மகிழ்வே அவர்களுக்கு உற்சாகம். அப்படியே நடை பழகிவிடுவார்கள். பிள்ளைகள் பெற்றோர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையினால் அவர்கள் வாழ்வு மேம்படுகின்றது. நாமும் பல நேரங்களில் நம் இறைவனால் கீழே இறக்கி விடப்படுகின்றோம். சிலர் அதை, நமது வாழ்வு என்னும் நடைபழக என்று எடுத்துக் கொண்டு ஒளியாம் இறைவனை நோக்கி நம்பிக்கையோடு செல்கின்றனர். சிலர் இறைவனால் தாங்கள் கைவிடப்பட்டதாக எண்ணிக் கொண்டு அழுது அழுது கண்களால் ஒளியை மறைத்துக் கொள்கின்றனர்.


உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியை நோக்கி வருகின்றனர். தீங்கு செய்பவர்கள் ஒளியை வெறுக்கின்றனர் என்று நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக்கேட்டோம். நமது ஒளி இயேசு அவர் நமக்காக சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரில் நம்பிக்கை கொண்டதால் நாம் நிலைவாழ்வு பெறுகிறோம். கடவுளின் அன்பை முழுமையாக பெறுகின்றோம். நமது தீமை விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளை மாற்றி இயேசுவின் பாதையில் பயணம் செய்யும் போது, உண்மை ஒளியின் ஒளிக்கீற்றுகளாகின்றோம். ஆலயம் சென்று, நற்செயல்கள் புரிந்து ஒளியை நோக்கி வரும் போது, நாமும் அந்த ஒளியின் சிறு பிம்பங்களாகின்றோம். அப்போது கடவுளாம் ஆண்டவர் நம்மோடும் இருந்து நம்மையும் வழி நடத்துவார்.


உண்மைக்கேற்ப வாழ்வோம் உண்மை ஒளியின் பிம்பங்களாவோம் இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து வழி நடத்துவதாக ஆமென்

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...