Wednesday, 17 March 2021

பலன் தரும் கோதுமை மணி

 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு


எரேமியா 31; 31-34

எபிரேயர் 5;7-9

யோவான் 12: 20-33


"சுடச்சுட பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" என்ற திருக்குறள் வரிகளுடன் இன்றைய ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்குள் நாம் நுழைவோம். நெருப்பில் சுடப்படும் தங்கமானது மெருகேறுவது போல நோன்பிருந்து தவம் மேற்கொள்ளும் துறவிகள் துன்பத்தால் மேன்மைப்படுத்தப்படுவர் என்பது இக்குறளின் பொருள். தவக்காலத்தின் நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் . நமக்கும் பல்வேறு துன்பங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கும் இவ்வேளையில் துன்புற்று, மண்ணில் மடிந்து பலன் தரும் கோதுமை போல நமது வாழ்வு இருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.


துன்பம் எல்லோருக்கும் வரும் . அது அவரவர் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொருத்து அதன் தன்மைக் கணக்கிடப்படும். துன்பம் என்பது நாம் சுவைத்து மகிழும் கரும்பைப் போல என்று நான் புத்தகத்தில் வாசித்த நியாபகம். கரும்பின் சுவை நிறைந்த பகுதியின் முன்னும் பின்னும் ஒரு சிறு கடினமான கணுப்பகுதி இருக்கும் . அதைக் கடந்த பின்னரே கரும்பின் சுவையான பகுதியை நம்மால் ருசிக்க முடியும். அது போல தான் வாழ்க்கையும். துன்பமான ஒரு சூழல் இருக்கிறது என்றால், மகிழ்வான ஒரு சூழல் அதன் பின் நமக்காகக் காத்திருக்கிறது என்று அர்த்தம். கரும்பின் கணுப்பகுதிக்கு அஞ்சி கரும்பையே சுவைக்காமல் விட்டால் அதை விட முட்டாள் தனமான காரியம் வேறு இல்லை என்று தான் சொல்ல முடியும். அதைப் போல துன்பம் கண்டு வாழ்க்கையே இப்படி தான் என்று சோர்ந்து, வாழாமல் விட்டால் அதுவும் முட்டாள் தனமே.


இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமை மணி போல மண்ணில் மடிந்து வாழச் சொல்கின்றார். அதற்கு முதலில் நாம் நம்மை இழக்க தயாராக இருக்க வேண்டும். இயேசு வாழ மட்டும் அறிவுறுத்தவில்லை தாம் முதலில் வாழ்ந்து காட்டி அது போல வாழுமாறு அறிவுறுத்துகிறார். சொல்பவரல்ல, செய்பவர் நம் இயேசு. அவரைப் போல வாழ அவர் தம் சீடர்களாகிய நாமும் பயிற்சிக்கவேண்டும். அதற்காக சில உத்திகளை நமக்குக் கொடுக்கின்றார்.


1. இயேசுவைக் காண விரும்பு. 2. அவரிடம் அழைத்துச்செல். 3. பின்பற்று 4. குரலைக் கேள்.


1. இயேசுவைக் காண விரும்பு:

எவ்வாறு கிரேக்கர்கள் இயேசுவைக் காண விரும்பி பிலிப்பிடம் வந்தார்களோ அது போல நாமும் இயேசுவை விரும்பிக் காண செல்ல வேண்டும். அவர் இருக்கும் இடம் அறிந்து அவரைப் பின் தொடர வேண்டும். நம்முடைய மேலான விருப்பத்தை பிறரிடம் எடுத்து சொல்ல வேண்டும். அப்போது தான் அது நிறைவேறும். பிரபஞ்ச சக்தி பற்றி படிப்பவர்கள் எழுதுபவர்கள் அடிக்கடி கூறுவது இதுவே. நாம் எதை அடைய நினைக்கின்றோமோ அதை பிரபஞ்சத்திடம் வெளிப்படுத்த வேண்டும். தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லும் குழந்தை வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறது. எது கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் குழந்தை, ஒரு சில நேரத்தில் விரும்பியது கிடைக்காது வருத்தமடைகின்றது. அது போல நாமும் நமக்கு இது வேண்டும் என்பதை உரிமையுடன் நம் தந்தையிடம் கேட்க வேண்டும். ஆக இயேசுவை நாம் காண விரும்ப வேண்டும். கடவுள் உருவத்தில் என்று எதிர்பார்ப்பதை விட கண்ணுக்கு தெரியும் மனிதர் உருவத்தில் கடவுளைக் காண முயற்சிக்க வேண்டும். மனிதர்கள், நிகழ்வுகள், சூழல்கள் அனைத்திலும் இயேசுவைக் காண்பவர்களாக தேடுபவர்களாக நாம் இருக்க வேண்டும். காண விரும்புவோம் இயேசுவை குடும்பத்தில் குழுவில் நண்பர்களில் நன்னெறியில்....


2. அவரிடம் அழைத்துச்செல்:

நாம் இயேசுவைக் கண்டு வாழ்ந்து கொண்டு இருந்தாலும் பிறரையும் இயேசுவிடம் அழைத்துச்செல்பவர்களாக வாழ வேண்டும். பிலிப்பு தன்னை நோக்கி வந்த கிரேக்கர்கள், முன் பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்த போதிலும் அவர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றார். தன்னால் இயேசுவிடம் அவர்களை அழைத்துச்செல்ல முடியுமா என்று எண்ணி தயங்கி விடவில்லை மாறாக அந்திரேயாவின் உதவியை நாடி கிரேக்கர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றார். கடவுள் தான் எல்லா நேரமும் நம்முடைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் வடிவில் இருக்கும் மனிதர்களால் கூட நமது ஆசைகள் நிறைவேறலாம். ஆனால் நாமும் ஒரு நாள் பிற மனிதர்களுக்கு கடவுளாக மாறும் சூழ்நிலை வரக்கூடும். அதையும் ஏற்கும் உள்ளம் வேண்டும். ஆக நாம் இயேசுவிடம் பிறரை அழைத்துச்செல்பவர்களாக இருக்க வேண்டும். தானம் கொடுப்பவர்களுக்கு தெரியாது கடவுளுக்கு தான் கொடுக்கிறோம் என்று . ஆனால் பெறுபவர்களுக்கு தெரியும் கொடுப்பது கடவுள் தான் என்று. நாம் கடவுளாக பார்க்கப்படும் தருணம் வரும். கடவுளை நோக்கி பிறரை அழைத்துச்செல்லும் தருணமும் வரும் . எதிர்பார்த்துக் காத்திருப்போம்.


3. பின்பற்று:

இயேசுவைப் பின்பற்றியவர்கள் பலர். அதில் சிலர் மட்டுமே கடைசி வரை அருகிருந்தனர். அதற்கான பேற்றையும் பெற்றனர். அவரைப் பின்பற்றி அவருக்கு தொண்டு செய்பவர்கள், அவரைப் பின்பற்றினர். அவரைப் போல பாடுகள் பட்டு வேத சாட்சியாக இறக்கவும் செய்தனர். இயேசு சொன்ன கோதுமை மணி போல மண்ணில் மடிந்து பலன் கொடுத்தவர்கள் அவர்கள். துன்பம் என்னும் நெருப்பினால் புடமிடப்பட்டு தூய்மையான தங்கமாக மின்னியவர்கள். கரும்பின் கணுப்பகுதியை கடித்து எறிந்து முழு கரும்பையும் ருசி பார்த்தவர்கள். நம் இயேசு சொகுசான வாழ்க்கை வாழ, " என்னை பின்பற்று" என்று கூறவில்லை. துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கை இது என்னைப் போல் வாழ்ந்து கடவுளின் பெயரை மாட்சிப்படுத்துங்கள் என்கின்றார். அவரைப் போல வாழ்வோம் அவரைப் பின்பற்றுவோம்.


4.குரலைக் கேள்:

இன்றைய வாசகத்தில் கடவுளின் குரல் ஒன்று வானத்தில் இருந்து கேட்ட போது அங்கு கூடியிருந்த மக்கள் அக்குரலைக் கேட்கின்றனர். அது வானதூதரின் குரலாக இருக்குமோ என்று எண்ணுகின்றனர். அதற்கு இயேசு இக்குரல் எனக்காக அல்ல உங்களுக்காக ஒலிக்கப்பட்டது. இயேசுவின் மகிமையைக் காதுகளால் கேட்டு அன்றைய நாளில் சிலர் மனமாற்றம் அடைந்து இருக்கலாம். நமக்கும் பல நேரங்களில் இயேசுவின் குரல், இயேசுவைப் பற்றிய குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதை கேட்காதவாறு நமது காதுகள் வேறு பல சத்தங்களினால் அடைக்கப்பட்டுள்ளன. தொலைபேசி, தொலைக்காட்சி, என தொடர்பு சாதனங்களின் சத்தங்களினால் நாம் நம்முடைய குரலையே கேட்காது மறந்து போய் இருக்கின்றோம். பின் எப்படி இயேசுவின் குரலையும், இயேசுவைப் பற்றிய குரலையும் நம்மால் கேட்க முடியும். ஹார்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குள் ஹியர் என்ற வார்த்தை மறைந்து இருப்பதற்கு காரணம் என்ன? உன் இதயம் சொல்வதைக் கேள். பிறர் இதயம் கூற விரும்புவதையும் கேள் என்று அர்த்தம். இதயம் கொடுத்து பிறரின் குரலைக் கேட்போம். செவி கொடுப்போம் நமது குரலும் செவி சாய்க்கப்படும்.


ஆம் அன்பானவர்களே கோதுமை மணி போல மடிந்து பலன் கொடுக்க முதலில் இயேசுவைக் காண விரும்புவோம் ஆலயத்தில், ஆன்மீகத்தில் அருகிருப்பவர்களின் உடனிருப்பில்.

பிறரையும் இயேசுவிடத்தில் அழைத்துச்செல்வோம் நண்பனாக உறவினராக, அயலாராக அண்டைவீட்டாராக....

பின்பற்றுவோம் அவரின் விழுமியங்களை வீரியமுள்ள வார்த்தைகளை, விதை போன்ற வாழ்வை....

குரலைக்கேட்போம். மகிழ்வில் மன்னிப்பில் மன்றாட்டில்.....

இறைமகன் இயேசுவின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பதாக ஆமென்,.


இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...