Wednesday, 10 November 2021

வருகை என்னும் வரம்

 


தானியேல் 12: 1-3,
எபிரேயர் 10: 11-14,18,
மாற்கு13: 24-32


இறக்கும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறோம். இருக்கும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறோம். இதுதான் நம்முடைய வாழ்வின் நிலை. இது இப்படி இருக்க, யாருடைய வருகை நமக்கு வரமா இருக்கின்றது என்பதனை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
பேரரசர் அக்பர், பீர்பாலிடம் ஒருநாள், "கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாக சொல்கின்றார்களே ஏன் தன்னுடைய தூதுவர்களை அனுப்பக் கூடாது" என்று கேட்டார். இது மிகவும் ஆழமான கேள்வி இதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. நேரம் வரும் போது சொல்கிறேன் என்று சொல்லி விட்டார் பீர்பால்.
சில மாதங்கள் கழித்து அரண்மனையில் உள்ள அனைவரும் படகில் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அக்பர், அவரது குடும்பத்தார் மற்றும் பீர்பாலும் உடன் இருந்தனர். திடீரென்று அக்பரின் பேரன் தண்ணீரில் விழுந்து விட அக்பர் உடனே நீரில் குதித்து தன்னுடைய பேரனைக் காப்பாற்றினார். இதனைப் பார்த்த பீர்பால், அரசே பணியாளர்களும் காவலர்களும் உங்களைச்சூழ்ந்து நிற்க அவர்களுக்கு ஆணையிட்டு குழந்தையைக் காப்பாற்ற சொல்லாமல் நீங்களே நீரில் விழுந்து ஏன் காப்பாற்றினீர்கள் என்று கேட்டார். அதற்கு அக்பர் இது என்னுடைய பேரன் அவனைக் காப்பாற்ற வீரர்களுக்கு ஆணையிடுவதை விட நானே குதித்து காப்பாற்றுவது தான் நல்லது என தோன்றியது. அதனால் தான் நான் காப்பாற்றினேன் என்றார்.
உடனே பீர்பால் மனித பிறவிகளாகிய நமக்கே இப்படி தோன்றுகிறது என்றால் கடவுள் இந்த உலக மக்கள் அனைவரையும் படைத்தவர், தனது மக்களை மீட்க அவரே நேரடியாக வருவது தானே முறை? என்று கேட்டார். தக்க சூழ்நிலையில் தன்னுடைய சந்தேகம் தெளிவானது பற்றியும் பீர்பாலின் அறிவுக் கூர்மை கண்டும் மகிழ்ந்தார் அரசர் அக்பர்.

ஆம் அன்புக்குரியவர்களே, உலகைப் படைத்த கடவுள் அதனை மீட்க தானே மனு உரு எடுத்து மீண்டும் வர இருக்கின்றார். அவரது இரண்டாம் வருகையைப் பற்றிய செய்திகளே நமக்கு இன்று வாசகப் பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. வருகை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தருகின்றது.
கொரோனாவின் வருகையால் பள்ளிகள் மூடப்பட்டன.
தடுப்பு மருந்துகளின் வருகையால் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.
எப்போது பள்ளிகள் திறக்கும் ? மாணவர்கள் எப்போது வருவர் என்று எதிர்பார்த்து இருந்தனர் பள்ளி நல விரும்பிகள்.
மழையின் வருகையால் தொடங்கப்பட்டு சில நாளிலேயே அதுவும் நின்று போனது.
நண்பர்களின் வருகை மகிழ்வைத் தருகிறது.
எதிரிகளின் வருகை மன வருத்தத்தைத் தருகின்றது.
சிலரின் வருகை இன்பம்
சிலரின் வருகை துன்பம்
இப்படியாக ஒவ்வொருவரின் வருகையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளையும் எண்ணங்களையும் நமக்குத் தருகின்றது. இந்த மழைக் காலத்தில் ஒரு சில தலைவர்களின் வருகையும் பார்வையிடுதலும் மகிழ்வையும் ஆறுதலையும் அளிக்க, மற்றும் சிலரின் வருகையும் செயலும் முகம் சுளிக்க வைக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் மெசியாவின் இரண்டாம் வருகையின் போது நடக்க இருக்கும் இன்ப துன்பங்களை தெளிவாக எடுத்துரைக்கின்றார் இறைவாக்கினர் தானியேல். விடுவிக்கப்படுவர், ஒளி வீசித் திகழ்வர்:
துன்பத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். பெயர் எழுதப்பட்டோர் மீட்கப்படுவர். இறந்தவர் முடிவில்லா வாழ்வு பெறுவர். ஞானிகள் விண்மீன்களைப் போல் ஒளி வீசுவர். சிலர் வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் ஆளாவர். ஆக இரண்டாம் வருகை எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. ஒரு சிலருக்கு இன்பம், மற்றும் சிலருக்கு துன்பம். இதில் நாம் யாராக இருக்கப் போகின்றோம் என்பதனை முடிவு செய்வது நமது வாழ்வும் செயலும் தான்.

அதற்கு உதவியாக நமக்கு அறிவுரை கூறுவது போல அமைந்துள்ளது இன்றைய திருப்பாடல் வரிகள் . ஆண்டவரை நம்முடைய உரிமைச்சொத்தாக நாம் எண்ணும் பொழுது நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கின்றது. அவரும் நம்மை துன்பம் அணுகாமல் எப்பொழுதும் மகிழ்வுடன் பார்த்துக் கொள்வார்.

ஆண்டவரை உரிமைச்சொத்தாக கொண்டு தனது வாழ்வை இன்பமாக மாற்றி பிறரும் அது போல வாழ்ந்து காட்ட வழி செய்தவர் இயேசு. செடி கொடிகளின் வளர்ச்சியைப் போன்றே மனித வாழ்வின் வளர்ச்சியும் இருக்கும் என்று அறிவுறுத்துகிறார். வசந்த காலத்தில் பூக்கள் பூப்பதும் இலைகள் தளிர்ப்பதும் எப்படி இயல்போ அது போல, இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து போவதும் இயல்பு. அந்த அந்த காலத்தின் இயல்பு அறிந்து நாம் நம்முடைய வாழ்க்கை நிலையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அவரது வருகை எப்போது வேண்டுமானாலும் வரலாம் அது எப்போது என்று அவருக்கே தெரியாது. எனவே வாழுகின்ற வாழ்க்கையை அன்றே இனிமையாக வாழ முயற்சிப்போம்.

ஆக இரண்டாம் வருகை எப்படிப்பட்டது அதை எதிர்கொள்ள எத்தகைய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அதற்கு நமக்கு முன்னுதாரணம் யார் என்பதை பற்றி ஒவ்வொரு வாசகங்களும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. நன்மை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய காரணமாக இருப்பவர்களுக்கும் அவர் வருகை வரமாக அமைகின்றது. மகிழ்வைத் தருகின்றது. பிறருக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் கேடு செய்பவர்களுக்கும் அது துன்பமாக அமைகின்றது.

ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம் , நமது வருகையால் நம்மை சுற்றி இருப்பவர்களை மகிழ்விப்போம். நம்மைப் படைத்த கடவுள் நம்மேல் கொண்ட அன்பால் நம்மை மீட்க அவரே வரும் பொழுது நாமும் நமது வாழ்வை மாற்றி அமைப்போம். எங்கு எப்படி எப்போது வருவார் என்று தெரியாது. எனவே எல்லா நாளும் எல்லா நேரத்திலும் நமது வாழ்வை மகிழ்வோடு வாழ்வோம். ஆண்டவர் என்னும் மகிழ்வை நமது உரிமைச் சொத்தாக்கிக் கொள்ள முயல்வோம். நமது வாழ்வால் நம் உடன்இருப்பை வரமாக்கி, ஆண்டவரின் வருகையை வரமாக்க முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

Wednesday, 3 November 2021

யார் அந்தப் பெண்?

 

பொதுக்காலம் 32ம் ஞாயிறு

யார் அந்தப் பெண்?

1 அரசர்கள் 17:10-16,
எபிரேயர் 9:24-28 ,
மாற்கு 12: 38-44

நான்கு பேர் அறிந்து உதவி செய்தால் அது விளம்பரம்.
நான்கு பேர் அறியாது செய்தால் அதற்கு பேர் உதவி.
உதவி பெறுபவர் யார் என்று அறியாது செய்தால் அது தானம், காணிக்கை....

நம்முடைய செயலை வைத்து நாம் யார் என்று நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய உருவம், செல்வம், தகுதி , திறமை வைத்து அல்ல.

இப்பொழுதெல்லாம் நம்முடைய அடையாளங்கள் உருவத்தை வைத்தும் செல்வ வளத்தைப் பொறுத்து மட்டுமே அமைகின்றன. யாரையாவது நாம் இன்னொருவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றால் , அதோ அந்த மாடி வீட்டில் வசிப்பவர், கோவிலுக்கு காரில் வருபவர், முதல் பெஞ்சில் உட்காருபவர் என்று தான் அந்த நபரை அடையாளப்படுத்துகின்றோம். மாறாக யாரும் அவர் செய்த நற்காரியங்களை வைத்து அறிமுகப்படுத்துவது இல்லை, அடையாளப்படுத்துவது இல்லை. ஏன் அப்படி செய்யும் அளவுக்கு நாம் நற்காரியம் எதுவும் செய்து விடவில்லையா?. இப்பொழுதெல்லாம் நற்காரியங்கள் நான்கு சுவத்துக்குள் மட்டுமல்ல நானிலம் முழுவதற்கும் அறிவிக்கப்படுகின்றன. ஒரு கை செய்வது மறு கைக்கு தெரியக்கூடாது என்று சொன்ன காலம் போய், ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் செல்ஃபி எடுத்து உலகிற்கு சொல்லும் காலம் வந்து விட்டது. அதுவும் அருகில் வாழ்வோரை விட அயல் நாட்டில் வாழ்வோருக்கு அறிவிக்கவும், அதிக லைக்குகள் வாங்கவுமே செய்யப்படுகின்றன.

இப்படி நாம் இருக்க இன்றைய வாசகங்களில் நாம் கண்ட இரு பெண்கள் தங்களுடைய செயலால் தங்களை யார் என்று நிருபித்து இருக்கின்றார்கள். கைப்பேசியில் புகைப்படம் எடுக்கவில்லை, வலைதளத்தில் காணிக்கை போடும் குறும்படம் காட்டவில்லை. இணையதளம் இல்லாமலே இன்று வரை நம்மால் பேசப்படுகின்றார்கள். பெண்கள் என்றாலே அழகு, உருவம் வைத்து அடையாளப்படுத்தும் உலகில் தங்களது செயல்களால் யார் அந்த பெண்கள் என்று பிறரை திரும்பி பார்க்க வைத்து இருக்கின்றனர் நம் மங்கையர்கள். இவர்களது வாழ்வும் செயலும் இறைவாக்கினர் எலியாவையும் இறைமகன் இயேசுவையும் நெகிழச்செய்தது. நம்முடைய வாழ்வும் செயலும் இயேசுவை நெகிழச்செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்களின் வாழ்க்கை வழி அறிந்து கொள்ள முயல்வோம்.

பழைய ஏற்பாட்டு கைம்பெண்:

* படைத்த இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை
* இறையடியார்களை மதிக்கும் குணம்.
* எளிமை வாழ்வு. பகிரும் குணம்

* இவருக்கு பெயர் கொடுக்கப்படவில்லை. சாரிபாத்து ஊரைச்சேர்ந்தவர் என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றார். கணவர் இருந்திருந்தால் இன்னாரின் மனைவி என்று கூறப்பட்டிருப்பார். கணவனை இழந்ததால் கைம்பெண் ஆக்கப்பட்டவர். தன்னிடம் இருக்கும் சிறிதளவு உணவை சமைக்க தேவையான சுள்ளிகளைப் பொறுக்க வீட்டை விட்டு வெளியே வருகின்றார். தன் மகனை அனுப்பாமல் தானே அந்த வேலைகளை செய்கின்றார். எளிய மகன் அதனால் அதிக பசியுற்று துன்புறக் கூடாது என்று எண்ணிணாரோ என்னவோ?? ஏழ்மையிலும் பக்தி நிறைந்த மன நிலையில் இருக்கின்றார். படைத்த இறைவன் உணவளிப்பார் என்ற நம்பிக்கை, அவர் தந்த வாழ்வு அவர் கட்டளைப்படி நடக்கட்டும் என்ற மன நிலை.

*இறைவாக்கினர் எலியாவை உடனே கண்டு கொள்கின்றார். தாகமாய் இருக்கிறது தண்ணீர் கொடு என்று எலியா கேட்டவுடன் தண்ணீர் கொடுக்க விரைந்தவர். அப்படியே சிறிது அப்பமும் கொடு என்றவுடன் தயங்குகின்றார். தண்ணீர் தாராளமாய் கொடுக்குமளவுக்கு இருக்கும் அவரிடம் அப்பம் இல்லை. கைம்பெண்ணான தன்னிடம் ஒரு இறைவாக்கினர் தண்ணீர் கேட்டதை பெறும் பேறாக எண்ணி இருந்திருப்பார். அப்பம் கேட்டும் கொடுக்க இல்லையே என்ற வருத்தம் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. வாழும் கடவுள் மேல் ஆணை என்று சொல்கின்றாள். கேட்டு மறுக்கப்படும் வலி என்ன என்பதை நன்கு அறிந்தவ(ள்)ர். எலியாவின் பசி உணர்வையும், தான் இல்லை என்று கூறும் உணர்வையும் எளிதில் கண்டு கொள்கின்றா(ள்)ர்.

தன்னிடம் எதுவும் இல்லாதபோதும் எலியா சொன்ன அந்த வார்த்தையின் மேல் நம்பிக்கை கொள்கின்றார். சாவதற்கு முன் நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்தது போல எண்ணி மகிழ்கின்றார். உணவின்றி செத்தாலும் பரவாயில்லை. இறைவாக்கினர்க்கு உணவிட்டு மாண்டு விட எண்ணுகின்றார். அவர் சொன்னபடியே அவர்க்கு அப்பம் சுட்டு கொடுக்கின்றார். அவரது நம்பிக்கையின் படியே பானையிலுள்ள மாவும் தீரவில்லை கலயத்தில் உள்ள எண்ணையும் தீரவில்லை. இன்றே இறந்து விடுவோம் என்று எண்ணியவர்க்கு, பல ஆண்டுகாலம் வாழ உணவு கிடைக்கின்றது.
தான் செய்த செயலை எல்லோரிடமும் சென்று கூறி தம்பட்டம் அடித்திருக்க மாட்டார். மாறாக தன்னைப் போல் துன்புறும் மக்களுக்கு கட்டாயம் அந்த உணவை பகிர்ந்திருப்பார். உதவி செய்யும் குணம் உடையவர்களால் பிறருக்கு உதவாமல் இருக்க முடியாது. பெற்ற உதவியை பிறருக்கு பகிர்ந்து அளித்திருப்பார்.
நாமும் நம்மைப் படைத்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ முயல்வோம். இறைவாக்கினர்கள் இறைவனின் அடியார்கள் என்பதை உணர்ந்து வாழ்வோம். இருப்பதே போதும் என்ற மன நிலையில் எளிய வாழ்வு வாழ முற்படுவோம்.
இப்படி வாழ்ந்ததாலேயே சாரிபாத்து கைம்பெண் இன்றளவும் பேசப்படுகின்றார். எலியா உணவு கேட்டதும் எரிந்து விழுந்து விரட்டி அடித்து இருந்தால் இன்று இவர் இப்படி விவிலியத்தில் இடம் பெற்றிருக்க மாட்டார். கைம்மாறு கருதாது செய்யும் உதவிக்கு காலம் நல்ல பதில் சொல்லும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த சாரிபாத் நகர் கைம்பெண்.

புதிய ஏற்பாட்டு கைம்பெண்.

* நிறைவான மனது.
* கோவில் கடமை
* நம்பிக்கையான செயல்

நிறைவான மனதுடன் வாழ்கின்றார் இந்த கைம்பெண். தனக்கு அது இல்லை இது இல்லை என்று அளவுக்கு அதிகமாக ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் இவர் இது போதும் என்ற மன நிலையில் வாழ்கின்றார். அதனால் தன்னுடைய அடுத்த வேளை உணவிற்கான பணமான அந்த திராக்மாவை காணிக்கையாக அளிக்கின்றார். அதில் அவருக்கு எந்த விதமான மன வருத்தமும் இருந்திருக்காது. ஏனெனில் அவர் யாருடைய கட்டாயத்தினாலும் அதை காணிக்கையாக்கவில்லை. மாறாக தானாக மனமுவந்து அதை அளிக்கின்றார். பிறர் பார்க்க வேண்டும் என்று நினைத்து செய்யவில்லை. யாருக்கும் தெரியாமல் அதை காணிக்கையாக்குகின்றார். ஏழ்மையிலும் நிறைவான மனது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நான் அவனைப் போல் இல்லை இவனைப் போல் இல்லை என்று நினைத்து வெம்பி அழும் மனிதர்கள் நடுவில் இருந்த அந்த காசுகளையும் காணிக்கையாக்குகின்றார்.

* தான் எப்படி இருந்தாலும் தன்னுடைய ஆலய கடமைகளை சரியாக செய்கின்றார். கோவிலுக்கு வருகின்றார். தன்னுடைய காணிக்கையை செலுத்துகின்றார். ஆலயத்திற்கு செல்லாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் தேடிக் கொள்ளும் மக்கள் மத்தியில் கடமை தவறாமல் செல்கின்றார்.
என்ன உடை உடுத்துவது, என்ன நகை அணிவது எந்த வாகனத்தில் போவது யார் அருகில் அமர்வது என்ற எந்த கேள்வியும் இவரிடத்தில் இல்லை. ஆலயத்திற்கு செல்கிறேன் ஆண்டவனை பார்க்கிறேன். என்னிடத்தில் உள்ளதை காணிக்கையாக்குகிறேன் என்ற ஒரே நோக்கத்தோடு செல்கின்றார். ஆண்டவனின் கடமைகளை நாம் சரிவர செய்யும் போது அவர் நமக்கு உண்டான கடமைகளை மறக்காமல் செய்வார் என்பதை ஆழமாக நம்பியிருப்பார்.


* தன்னுடைய எதிர்காலம் என்ன ஆகும்? அதற்கு எப்படி பணம் சம்பாதிப்பது? யார் நமக்கு உதவுவார்? என்ற எந்தவிதமான கவலையோ பயமோ அவருக்கு இல்லை. தன்னிடம் இருந்தது அனைத்தையுமே காணிக்கையாக்குகின்றார். 100 % கடவுளையும் அவருடைய வார்த்தையையும் மட்டுமே நம்பி செயல்படுகின்றார். கப்பல் மாலுமியின் மகள் கொந்தளிக்கும் கடலை கொள்ளை அழகோடு ரசிப்பது போல. கடல் கொந்தளித்தால் என்ன கப்பல் ஓட்டுவது என் அப்பா என்ற நம்பிக்கையில் பயணம் செய்கின்றாள். அதே நம்பிக்கை இந்தக் கைம்பெண்ணிற்கும். நாளைய நாளைக் குறித்து கவலை இல்லை இன்றைய பொழுது நான் இறைவனோடு என்ற நம்பிக்கையில் வளர முயற்சிப்போம்.


பழைய ஏற்பாட்டுக் கைம்பெண்ணும் புதிய ஏற்பாட்டுக் கைம்பெண்ணும் நமக்கு விடுக்கும் செய்தி. எந்நிலையிலும் இறைவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் தளர்ந்து விடாதீர்கள். இருப்பதே போதும் என்ற மன நிலையில் வளருங்கள். எதிர்பார்ப்பின்றி உதவுங்கள் ..

ஆம் அன்பு உள்ளங்களே இவர்களது வாழ்வும் செயலும் போன்று நமது வாழ்வு மாற அருள் வேண்டுவோம். யார் இந்த பெண்/ ஆண் என்று நம்முடைய வாழ்வையும் செயலையும் வைத்து அவர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம். இப்படி வாழ்ந்தால் நம்முடைய் மாவுப் பானை என்னும் நம்பிக்கை அள்ள அள்ள குறையாமல் பெருகும். நற்செயல் என்னும் எண்ணெய் கலயம் நிரம்பி வழியும். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.


இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...