Wednesday, 10 November 2021

வருகை என்னும் வரம்

 


தானியேல் 12: 1-3,
எபிரேயர் 10: 11-14,18,
மாற்கு13: 24-32


இறக்கும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறோம். இருக்கும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறோம். இதுதான் நம்முடைய வாழ்வின் நிலை. இது இப்படி இருக்க, யாருடைய வருகை நமக்கு வரமா இருக்கின்றது என்பதனை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
பேரரசர் அக்பர், பீர்பாலிடம் ஒருநாள், "கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாக சொல்கின்றார்களே ஏன் தன்னுடைய தூதுவர்களை அனுப்பக் கூடாது" என்று கேட்டார். இது மிகவும் ஆழமான கேள்வி இதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. நேரம் வரும் போது சொல்கிறேன் என்று சொல்லி விட்டார் பீர்பால்.
சில மாதங்கள் கழித்து அரண்மனையில் உள்ள அனைவரும் படகில் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அக்பர், அவரது குடும்பத்தார் மற்றும் பீர்பாலும் உடன் இருந்தனர். திடீரென்று அக்பரின் பேரன் தண்ணீரில் விழுந்து விட அக்பர் உடனே நீரில் குதித்து தன்னுடைய பேரனைக் காப்பாற்றினார். இதனைப் பார்த்த பீர்பால், அரசே பணியாளர்களும் காவலர்களும் உங்களைச்சூழ்ந்து நிற்க அவர்களுக்கு ஆணையிட்டு குழந்தையைக் காப்பாற்ற சொல்லாமல் நீங்களே நீரில் விழுந்து ஏன் காப்பாற்றினீர்கள் என்று கேட்டார். அதற்கு அக்பர் இது என்னுடைய பேரன் அவனைக் காப்பாற்ற வீரர்களுக்கு ஆணையிடுவதை விட நானே குதித்து காப்பாற்றுவது தான் நல்லது என தோன்றியது. அதனால் தான் நான் காப்பாற்றினேன் என்றார்.
உடனே பீர்பால் மனித பிறவிகளாகிய நமக்கே இப்படி தோன்றுகிறது என்றால் கடவுள் இந்த உலக மக்கள் அனைவரையும் படைத்தவர், தனது மக்களை மீட்க அவரே நேரடியாக வருவது தானே முறை? என்று கேட்டார். தக்க சூழ்நிலையில் தன்னுடைய சந்தேகம் தெளிவானது பற்றியும் பீர்பாலின் அறிவுக் கூர்மை கண்டும் மகிழ்ந்தார் அரசர் அக்பர்.

ஆம் அன்புக்குரியவர்களே, உலகைப் படைத்த கடவுள் அதனை மீட்க தானே மனு உரு எடுத்து மீண்டும் வர இருக்கின்றார். அவரது இரண்டாம் வருகையைப் பற்றிய செய்திகளே நமக்கு இன்று வாசகப் பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. வருகை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தருகின்றது.
கொரோனாவின் வருகையால் பள்ளிகள் மூடப்பட்டன.
தடுப்பு மருந்துகளின் வருகையால் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.
எப்போது பள்ளிகள் திறக்கும் ? மாணவர்கள் எப்போது வருவர் என்று எதிர்பார்த்து இருந்தனர் பள்ளி நல விரும்பிகள்.
மழையின் வருகையால் தொடங்கப்பட்டு சில நாளிலேயே அதுவும் நின்று போனது.
நண்பர்களின் வருகை மகிழ்வைத் தருகிறது.
எதிரிகளின் வருகை மன வருத்தத்தைத் தருகின்றது.
சிலரின் வருகை இன்பம்
சிலரின் வருகை துன்பம்
இப்படியாக ஒவ்வொருவரின் வருகையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளையும் எண்ணங்களையும் நமக்குத் தருகின்றது. இந்த மழைக் காலத்தில் ஒரு சில தலைவர்களின் வருகையும் பார்வையிடுதலும் மகிழ்வையும் ஆறுதலையும் அளிக்க, மற்றும் சிலரின் வருகையும் செயலும் முகம் சுளிக்க வைக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் மெசியாவின் இரண்டாம் வருகையின் போது நடக்க இருக்கும் இன்ப துன்பங்களை தெளிவாக எடுத்துரைக்கின்றார் இறைவாக்கினர் தானியேல். விடுவிக்கப்படுவர், ஒளி வீசித் திகழ்வர்:
துன்பத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். பெயர் எழுதப்பட்டோர் மீட்கப்படுவர். இறந்தவர் முடிவில்லா வாழ்வு பெறுவர். ஞானிகள் விண்மீன்களைப் போல் ஒளி வீசுவர். சிலர் வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் ஆளாவர். ஆக இரண்டாம் வருகை எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. ஒரு சிலருக்கு இன்பம், மற்றும் சிலருக்கு துன்பம். இதில் நாம் யாராக இருக்கப் போகின்றோம் என்பதனை முடிவு செய்வது நமது வாழ்வும் செயலும் தான்.

அதற்கு உதவியாக நமக்கு அறிவுரை கூறுவது போல அமைந்துள்ளது இன்றைய திருப்பாடல் வரிகள் . ஆண்டவரை நம்முடைய உரிமைச்சொத்தாக நாம் எண்ணும் பொழுது நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கின்றது. அவரும் நம்மை துன்பம் அணுகாமல் எப்பொழுதும் மகிழ்வுடன் பார்த்துக் கொள்வார்.

ஆண்டவரை உரிமைச்சொத்தாக கொண்டு தனது வாழ்வை இன்பமாக மாற்றி பிறரும் அது போல வாழ்ந்து காட்ட வழி செய்தவர் இயேசு. செடி கொடிகளின் வளர்ச்சியைப் போன்றே மனித வாழ்வின் வளர்ச்சியும் இருக்கும் என்று அறிவுறுத்துகிறார். வசந்த காலத்தில் பூக்கள் பூப்பதும் இலைகள் தளிர்ப்பதும் எப்படி இயல்போ அது போல, இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து போவதும் இயல்பு. அந்த அந்த காலத்தின் இயல்பு அறிந்து நாம் நம்முடைய வாழ்க்கை நிலையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அவரது வருகை எப்போது வேண்டுமானாலும் வரலாம் அது எப்போது என்று அவருக்கே தெரியாது. எனவே வாழுகின்ற வாழ்க்கையை அன்றே இனிமையாக வாழ முயற்சிப்போம்.

ஆக இரண்டாம் வருகை எப்படிப்பட்டது அதை எதிர்கொள்ள எத்தகைய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அதற்கு நமக்கு முன்னுதாரணம் யார் என்பதை பற்றி ஒவ்வொரு வாசகங்களும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. நன்மை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய காரணமாக இருப்பவர்களுக்கும் அவர் வருகை வரமாக அமைகின்றது. மகிழ்வைத் தருகின்றது. பிறருக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் கேடு செய்பவர்களுக்கும் அது துன்பமாக அமைகின்றது.

ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம் , நமது வருகையால் நம்மை சுற்றி இருப்பவர்களை மகிழ்விப்போம். நம்மைப் படைத்த கடவுள் நம்மேல் கொண்ட அன்பால் நம்மை மீட்க அவரே வரும் பொழுது நாமும் நமது வாழ்வை மாற்றி அமைப்போம். எங்கு எப்படி எப்போது வருவார் என்று தெரியாது. எனவே எல்லா நாளும் எல்லா நேரத்திலும் நமது வாழ்வை மகிழ்வோடு வாழ்வோம். ஆண்டவர் என்னும் மகிழ்வை நமது உரிமைச் சொத்தாக்கிக் கொள்ள முயல்வோம். நமது வாழ்வால் நம் உடன்இருப்பை வரமாக்கி, ஆண்டவரின் வருகையை வரமாக்க முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...