Tuesday, 6 September 2022

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

 கல்லாய் இருந்தால் காலில் மிதிபட்டு காணாமல் போய் விடுவோம் என்று எம்மை கற்சிலையாய் கண்ணொளிரச்செய்யும் வைரமாய் மாற்றியவர்கள் ஆசிரியர்கள். கற்பிப்பதை நீங்கள் விரும்பியதால் கற்றலை யாம் விரும்பினோம். பெற்றோருக்கு அடுத்த படியாய் எம்மில் அன்பு அரவணைப்பு அக்கறை காட்டியவர்கள். தன்னிடம் பயில்பவன் தன்னை விட அதிக உயரத்திற்கு வர வேண்டும் என்று விரும்பும் ஒரே உள்ளம் ஆசிரியப் பணி புரியும் உங்கள் உள்ளமே. ஒரு மருத்துவர் மருத்துவரை மட்டுமே உருவாக்க முடியும் ஒரு காவல் துறை அதிகாரி மற்றோரு காவல் துறையாளரை உருவாக்க முடியும் இப்படி அந்தந்த தொழில் செய்பவர்கள் அவரவர் தொழில் சார்ந்தோரை மட்டுமே உருவாக்க முடியும் ஆனால் ஆசிரியர்களாகிய நீங்கள் மட்டுமே இவ்வுலகின் அனைத்து துறையினரையும் உருவாக்கும் ஆசீர் பெற்றுள்ளீர்கள் அரசியல்வாதி முதல் அடிமட்டத்தொண்டன் வரை நிறுவனத்தலைவர் முதல் நிவாரணம் கேட்கும் தொழிலாளி முதல் அனைவரையும் உருவாக்கும் திறன் பெற்றவர்கள் நீங்கள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் உங்களை நினைத்து வாழ்த்துகின்றோம் என்று வாழ்த்தினால் போதாது அதனால் ஆயுள்வரை உம்மை நினைத்து போற்றுகின்றோம். தான் படித்த பள்ளி நாள்களை நினைவுகூறும் ஒவ்வொருவரும் ஏதாவதொரு ஆசிரியரைப் பற்றி அந்த நேரம் கண்டிப்பாக நினைப்பார். பள்ளி நாட்களை பதின்பருவ நினைவுகளை பசுமையாய் ஆக்கியது உங்களின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் தான். ஆசிரியர்களாகிய நீங்கள் கற்றலுக்கு வழி சொல்லும் ஆசான், குடும்ப சூழலுக்கு ஆறுதல் தரும் மருத்துவர், நட்பின் சிக்கல்களை தீர்த்துவைக்கும் நீதிபதி, எமக்காய் வழக்காடும் வக்கீல், அரவணைக்கும் தாய், ஆலோசனை தரும் ஆன்மீகவாதி, எம் திறமைகளை செதுக்கிய சிற்பி, நல்ல வடிவம் கொடுத்த குயவன், வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய மந்திரவாதி,என எம் வாழ்வில் எல்லாமுமாய் நீங்கள் . அனுதினமும் நினைக்கின்றோம் உங்களை, பாலைவனமாய் இருந்த எங்ககளை விளை நிலமாக மாற்றிய உம் கருணையையும் உழைப்பையும் அனுதினமும் கொண்டாடி மகிழ ஆசை தான் . ஆனால் எங்கள் வாழ்வால் நினைவுகூறுகின்றோம்.

பட்டமாய் எம்மை உயர்த்தி அதனை உயரே பறக்க வைக்கும் நூலாய் உம்மை மாற்றி சந்தர்ப்ப சூழல் என்னும் காற்றின் திசை அறிந்து எம்மை உயர்த்தியவர்கள் நீங்கள். அறிவென்னும் விளக்கை ஏற்றி அன்பென்னும் வழிகாட்டி எம் மரியின் ஊழியர் சபை சகோதரிகளால் நடத்தப்படும் பள்ளிகளியிற்றுவித்து ல் பயிற்றுவித்து இன்று நல்லாசிரியர் விருது பெற்று தன்னையும் தான் சார்ந்த பள்ளியையும் பெருமைப்படுத்தும் எம் ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டுவதில் பெருமையும் பேரானந்தமும் அடைகின்றோம்.
நல்ல குறிக்கோளையும் சமுதாய உணர்வுகளையும் இனிவரும் காலங்களிலும் இளைய மாணவர்கள் மனத்தில் விதைத்து விருட்சங்கள் பல காணவும் விதையுள்ள பழங்களைத் தரும் மாணாக்கர் சமுதாயத்தை உருவாக்கவும் மனதார வாழ்த்துகின்றோம். உம் தன்னலமில்லா பணிக்கு கிடைத்த ஒரு சிறு பரிசே இந்த நல்லாசிரியர் விருது. உமது ஒப்பற்ற் சேவைக்கு ஓராயிரம் நல்லாசிரியர் விருது கொடுத்தாலும் தகுமே. நம்பிக்கையின் தீபமாய் நல்ல ஆலோசனை தரும் நண்பராய் இருந்து பலரின் வாழ்விற்கு வெளிச்சம் தந்த உங்களின் வாழ்வு இறையருளால் நிறைக்கப்பட தொடர்ந்து வேண்டுகின்றோம்.
துன்புறுவோருடன் உணர்வால் ஒன்றித்தல் என்பதனை தங்களின் நோக்கமாக, கருணையைத் தனிவரமாக, கற்பித்தலை முக்கியமான முதன்மையான பணியாகக் கொண்டு செயல்படும் எம் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாகிய நீங்கள் எம்மைப் போலவே கருணையும் கனிவும் கொண்டு செயல்படுவது யாம் பெற்ற பெரும்பேறு. ஊழியர்களின் அன்னையாம் புனித வியாகுல அன்னையை போல வீரத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு வினோதங்கள் புரியும் உங்களை ஆசிரியர் தினமாகிய இன்று வாழ்த்திப் பாராட்டி மகிழ்கின்றோம்.
எங்களுக்கு எப்படி ரசிக்க வேண்டும் என்று கற்றுத்தந்தவரும் நீங்கள் தான் பிறர் ரசிக்கும்படி எப்படி வாழவேண்டும் என்றுக் கற்றுத்தந்தரும் நீங்கள் தான் . உங்கள் ரசனையில் உங்களை ரசிக்கவைத்த ரசிக்கும்படி வாழவைத்த அத்தனை ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். 

உறவாக உணர்வாக உடைமையாக இயேசு

பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிற்றில் இருக்கும் அன்பு இறைமக்களாகிய நாம் அனைவரும் இயேசுவைப் பின்பற்றும் உண்மையுள்ள சீடர்களாக வாழ இன்றைய நாளின் வாசகங்கள் வழியாக இறைவன் அழைக்கின்றார். உண்மையான இயேசுவின் சீடர்கள்  என்பவர்கள்  உறவாக உணர்வாக உடைமையாக இயேசுவைக் கொண்டு வாழ வேண்டுமென்று வலியுறுத்தி ஞானத்தின் மூலம் மீட்படைய வழி சொல்கின்றார்.

தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஏராளமான மக்களை திரும்பிப் பார்த்த இயேசு தனக்குரிய சீடர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். தாய் தந்தையர்களை தன்னை விட மேலாக கருதுபவர்கள், தம் சிலுவையை தூக்க மறுப்பவர்கள், உடைமையை விட விரும்பாதவர்கள் போன்றோர் தனக்கு சீடராக இருக்க தகுதியற்றவர்கள் என்கின்றார். மாறாக உறவு உணர்வு உடைமை என எல்லாமாக தன்னை நினைப்பவன் மட்டுமே சீடனாக வாழ முழுத் தகுதியுடையவன் என்று வலியுறுத்துகின்றார்.

உறவாக இயேசு.

நாம் வாழும் இவ்வுலகில் ரத்த உறவுகளும் எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டுக் கொடுக்காத நட்புறவுகளும் கட்டாயம் தேவை. உயிரும் உணர்வும் கலந்த இவ்வுறவு பல நேரங்களில் கடவுளன்பை விட மேலானதாக கருதப்படுகின்றது. கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பல நேரங்கள் இந்த உறவு முறைகளுடனான பொழுதுபோக்கில் காணாமல் போகின்றன. கடவுளா உறவா என்று வரும்போது இக்காலகட்டத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். கடவுளன்பினால் தான் இத்தகைய உறவுகள் வந்தன என்றும் இனி வரப்போகும் உறவுகளும் அவராலே வந்து நிலைபெறப் போகின்றன என்றும் எண்ணாதவர்கள் தான் இத்தகைய உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

 நம்முடைய உறவுகள் கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவை வளர்ப்பதாக இருக்கவேண்டுமே தவிர பாதிப்பதாக ஒரு போதும் இருக்கக் கூடாது. தாய் தந்தையர் சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவரும் கடவுளன்பின் சுவையை நாம் உணர நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தோமானால் நம் வாழ்வு செழிப்படையும். அடிமையாகிய ஒபேசினுவிற்கு பவுலடியார் காட்டிய அன்பு போல நமது அன்பும் பலுகிப்பெருகும். கடவுளன்பை அதிகமதிகமாக சுவைத்து அதனைப்  போதனைகள் வழியாகப் பிறருக்கும் கொடுத்த புனித பவுலடியார் அடிமை ஒபேசினுவைப் பற்றி அவரது தலைவன் பிலமோனிற்கு எழுதும் கடிதத்தில் இதயத்திற்கு ஈடாக சகோதரனுக்கும் மேலாக கருதி தன்னை ஏற்பது போல் அவரையும் ஏற்க சொல்லி எழுதுகின்றார். இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! 17எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். என்று பிலமோனுக்கு எழுதியக் கடிதத்தின் வழியாக  வாசிக்கக்கேட்டோம். கடவுளின் உறவை உலகிலுள்ள உறவுகளில் எல்லாம் மேலான உறவாக புனித பவுலைப் போல நினைப்பவர்களே உண்மையான சீடர்கள் என்று வலியுறுத்துகின்றார் இயேசு.

2. உணர்வாக இயேசு.

மனிதர்களாகிய நாம் பல உணர்வுகளால் நிறைக்கப்பட்டுள்ளோம். மகிழ்ச்சி பெருமிதம் வெட்கம் கோபம் கவலை போன்ற உணர்வுகளின் நிலை அதிகமாகும் போது நம்முடைய இயல்பு நிலையில் இருந்து மாறி செயல்படுகின்றோம். உணர்வுள்ள மனிதனே உண்மை மனிதன். எவரொருவர் நம்முடைய உணர்வுகளோடு நம்மை மதித்து அன்பு செய்து ஏற்றுக் கொள்கின்றாரோ அவருடனான உறவு காலத்திற்கும் அழியாது நிலைத்திருக்கும் என்பர். இப்படிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையாக ஆணிவேராக இயேசு இருந்து செயல்படும்போது நம் வாழ்வு முற்றிலும் மாற்றம் பெற்ற வாழ்வாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. என்று கூறுவதன் வழியாக  சிலுவையைத் தூக்கிக் கொண்டு பின்தொடர்பவனே உண்மையான சீடன் என்று வலியுறுத்துகின்றார். சிலுவையைத் தூக்க முதலில் உடலில் பலம் மனத்திடம் நல்ல மன நிலை வேண்டும் இவை இல்லாமல் சிலுவையைத் தூக்க முயற்சிப்பவரால் இறுதிவரை அவரைப் பின் செல்ல முடியாது.  என்னால் தான் சுமக்க முடியும் என்ற ஆணவமோ என்னால் தூக்கவே முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டால் அவரது சீடராக இருக்க முடியாது. இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுவது போல நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. நம்முடைய உணர்வுகள் எல்லாம் இயேசுவாக இருக்கும் போது எண்ணங்களும் திட்டங்களும் சிறப்பாக அமையும். நமது உடலைக் கடந்து ஆன்மா இறைவனில் இன்புற்று மகிழும்.

3. உடைமையாக இயேசு.

ஒரு மனிதன் இவ்வுலகில் இன்பமாக வாழ அடிப்படை உரிமைகளும் உடைமைகளும் தேவை. ஆனால் அடிப்படையான இவ்வுலகப் பொருட்களை சில நேரங்களில் கட்டாயத் தேவையாகக் கருதிக் கொண்டு செயல்படுகின்றோம். உதாரணத்திற்கு தொலைபேசி  தொலை தூரத்தில் இருக்கும் நம் உறவுகளை வலுப்படுத்த தொடக்க காலகட்டத்தில் பயன்படுத்தப் பட்டது. காலப் போக்கில் நம்முடைய அன்றாட வாழ்வின் அத்தியாவசிய தேவையாக மாறி இன்று சிலருக்கு சுவாசமாகவே மாறி விட்டது. கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்து பழக்கப்பட்டவர்களுக்கு அது அணியாமல் வெளிய செல்வது ஏதோ உடையணிவதில் ஏதோ மறதி ஏற்பட்ட உணர்வு அது போல தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அது இல்லாமல் வெளியே பயணிப்பது என்பது உடல் உறுப்பில் ஒன்று இல்லாமல் பயணிப்பது போல் உணர்வைத் தரும் அந்த அளவிற்கு உடலோடு ஒட்டிக் கொண்டு நம்முடன் பயணிக்கின்றது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் மேல் ஆசை பற்று உண்டு. சிலருக்கு உடையில் சிலருக்கு உடைமையில். இப்படி உலகப் பொருட்களின் மேல் பற்றும் ஆசையும் கொண்டு செயல்படுபவர்களால் இயெசுவைப் பின்பற்றும் உண்மையான சீடர்களாய் இருக்க முடியாது. நமது பற்று ஆசை எல்லாம் பற்றற்ற இயேசுவின் மேல் இருக்கும் போது நாம் கடவுளிடமிருந்து வரும் உண்மையான ஞானத்தை பெற்று அவரது சீடர்களாக மாறுகின்றோம். ஞானம் என்னும் மெய்யறிவு என்பது கடவுளிடம் இருந்து கிடைக்கப்பெறுவது அது கிடைக்க நாம் அதிகமாக செபிக்கவேண்டும் . இது தெரியாமல் சிலர் உலக அனுபவத்தினால் கிடைக்கக் கூடிய அறிவு தன்னுடைய சொந்த கடின உழைப்பினால் கிடைத்தது என்று எண்ணி பெருமிதம் கொள்கின்றனர். இத்தகைய பெருமிதம் கொள்வதும் ஒருவகையில் உலக அறிவை உடைமையாகக் கொள்வவதற்கு சமம் ஆக உடைமையாக இயேசுவைக் கருதுபவர்களால் மட்டுமே அவரது உண்மை சீடர்களாக இருக்க முடியும்.

எனவே அன்பு உள்ளங்களே உறவாக உணர்வாக உடைமையாக இயேசுவைக் கோண்டிருப்பவர்களாக மாறுவோம். அவரே நம் வாழ்வின் எல்லாம் என உணர்ந்து செயல்படுவோம் இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழி நடத்துவாராக ஆமென்        

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...