Tuesday, 6 September 2022

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

 கல்லாய் இருந்தால் காலில் மிதிபட்டு காணாமல் போய் விடுவோம் என்று எம்மை கற்சிலையாய் கண்ணொளிரச்செய்யும் வைரமாய் மாற்றியவர்கள் ஆசிரியர்கள். கற்பிப்பதை நீங்கள் விரும்பியதால் கற்றலை யாம் விரும்பினோம். பெற்றோருக்கு அடுத்த படியாய் எம்மில் அன்பு அரவணைப்பு அக்கறை காட்டியவர்கள். தன்னிடம் பயில்பவன் தன்னை விட அதிக உயரத்திற்கு வர வேண்டும் என்று விரும்பும் ஒரே உள்ளம் ஆசிரியப் பணி புரியும் உங்கள் உள்ளமே. ஒரு மருத்துவர் மருத்துவரை மட்டுமே உருவாக்க முடியும் ஒரு காவல் துறை அதிகாரி மற்றோரு காவல் துறையாளரை உருவாக்க முடியும் இப்படி அந்தந்த தொழில் செய்பவர்கள் அவரவர் தொழில் சார்ந்தோரை மட்டுமே உருவாக்க முடியும் ஆனால் ஆசிரியர்களாகிய நீங்கள் மட்டுமே இவ்வுலகின் அனைத்து துறையினரையும் உருவாக்கும் ஆசீர் பெற்றுள்ளீர்கள் அரசியல்வாதி முதல் அடிமட்டத்தொண்டன் வரை நிறுவனத்தலைவர் முதல் நிவாரணம் கேட்கும் தொழிலாளி முதல் அனைவரையும் உருவாக்கும் திறன் பெற்றவர்கள் நீங்கள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் உங்களை நினைத்து வாழ்த்துகின்றோம் என்று வாழ்த்தினால் போதாது அதனால் ஆயுள்வரை உம்மை நினைத்து போற்றுகின்றோம். தான் படித்த பள்ளி நாள்களை நினைவுகூறும் ஒவ்வொருவரும் ஏதாவதொரு ஆசிரியரைப் பற்றி அந்த நேரம் கண்டிப்பாக நினைப்பார். பள்ளி நாட்களை பதின்பருவ நினைவுகளை பசுமையாய் ஆக்கியது உங்களின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் தான். ஆசிரியர்களாகிய நீங்கள் கற்றலுக்கு வழி சொல்லும் ஆசான், குடும்ப சூழலுக்கு ஆறுதல் தரும் மருத்துவர், நட்பின் சிக்கல்களை தீர்த்துவைக்கும் நீதிபதி, எமக்காய் வழக்காடும் வக்கீல், அரவணைக்கும் தாய், ஆலோசனை தரும் ஆன்மீகவாதி, எம் திறமைகளை செதுக்கிய சிற்பி, நல்ல வடிவம் கொடுத்த குயவன், வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய மந்திரவாதி,என எம் வாழ்வில் எல்லாமுமாய் நீங்கள் . அனுதினமும் நினைக்கின்றோம் உங்களை, பாலைவனமாய் இருந்த எங்ககளை விளை நிலமாக மாற்றிய உம் கருணையையும் உழைப்பையும் அனுதினமும் கொண்டாடி மகிழ ஆசை தான் . ஆனால் எங்கள் வாழ்வால் நினைவுகூறுகின்றோம்.

பட்டமாய் எம்மை உயர்த்தி அதனை உயரே பறக்க வைக்கும் நூலாய் உம்மை மாற்றி சந்தர்ப்ப சூழல் என்னும் காற்றின் திசை அறிந்து எம்மை உயர்த்தியவர்கள் நீங்கள். அறிவென்னும் விளக்கை ஏற்றி அன்பென்னும் வழிகாட்டி எம் மரியின் ஊழியர் சபை சகோதரிகளால் நடத்தப்படும் பள்ளிகளியிற்றுவித்து ல் பயிற்றுவித்து இன்று நல்லாசிரியர் விருது பெற்று தன்னையும் தான் சார்ந்த பள்ளியையும் பெருமைப்படுத்தும் எம் ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டுவதில் பெருமையும் பேரானந்தமும் அடைகின்றோம்.
நல்ல குறிக்கோளையும் சமுதாய உணர்வுகளையும் இனிவரும் காலங்களிலும் இளைய மாணவர்கள் மனத்தில் விதைத்து விருட்சங்கள் பல காணவும் விதையுள்ள பழங்களைத் தரும் மாணாக்கர் சமுதாயத்தை உருவாக்கவும் மனதார வாழ்த்துகின்றோம். உம் தன்னலமில்லா பணிக்கு கிடைத்த ஒரு சிறு பரிசே இந்த நல்லாசிரியர் விருது. உமது ஒப்பற்ற் சேவைக்கு ஓராயிரம் நல்லாசிரியர் விருது கொடுத்தாலும் தகுமே. நம்பிக்கையின் தீபமாய் நல்ல ஆலோசனை தரும் நண்பராய் இருந்து பலரின் வாழ்விற்கு வெளிச்சம் தந்த உங்களின் வாழ்வு இறையருளால் நிறைக்கப்பட தொடர்ந்து வேண்டுகின்றோம்.
துன்புறுவோருடன் உணர்வால் ஒன்றித்தல் என்பதனை தங்களின் நோக்கமாக, கருணையைத் தனிவரமாக, கற்பித்தலை முக்கியமான முதன்மையான பணியாகக் கொண்டு செயல்படும் எம் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாகிய நீங்கள் எம்மைப் போலவே கருணையும் கனிவும் கொண்டு செயல்படுவது யாம் பெற்ற பெரும்பேறு. ஊழியர்களின் அன்னையாம் புனித வியாகுல அன்னையை போல வீரத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு வினோதங்கள் புரியும் உங்களை ஆசிரியர் தினமாகிய இன்று வாழ்த்திப் பாராட்டி மகிழ்கின்றோம்.
எங்களுக்கு எப்படி ரசிக்க வேண்டும் என்று கற்றுத்தந்தவரும் நீங்கள் தான் பிறர் ரசிக்கும்படி எப்படி வாழவேண்டும் என்றுக் கற்றுத்தந்தரும் நீங்கள் தான் . உங்கள் ரசனையில் உங்களை ரசிக்கவைத்த ரசிக்கும்படி வாழவைத்த அத்தனை ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். 

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...