Wednesday, 22 February 2023

2. காலஅவகாசம் தரும் மனமாற்றம்


கடந்த காலத்தை நினைத்து வரும் காலத்தையும் தொலைப்பவர்கள் பலர். காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு ஏற்றாற்போல உன்னுள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். என்று காலங்கள் பற்றியும் அது தரும் பாடங்கள் பற்றியும் நாம் பலவற்றை அறிவோம். இயேசுவின் உருமாற்றம் வழி மனமாற்றத்தை சிந்தித்துக் கொண்டிருக்கும் இத்தவக்காலத்தில்  இயேசு தன் மரணத்தை முன்னறிவித்த ஆறு நாள்களுக்குப் பின் தனது உருமாற்றத்தை நிகழ்த்துகிறார் என்பது பற்றி இன்று நாம் சிந்திப்போம். இயேசு தான் எவ்வாறு பாடுபட்டு இறந்து உயிர்க்கப் போகின்றார் என்பதை வெளிப்படையாக திருத்தூதர்களுக்கு அறிவித்த பின் ஏறக்குறைய ஒரு வார கால அவகாசம் அவர்களுக்குக் கொடுக்கின்றார். அந்த 6 நாள்களில் சீடர்கள் இயேசுவைப் பற்றியும் அவரது இறப்பு பற்றியும் சிந்திக்கின்றனர். ஒருவர் மற்றவரோடு தங்களது சந்தேகங்களை கேட்டுத் தெளிவுபடுத்துகின்றனர். ஒருவருக்கொருவர் தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து ஒரு தெளிவான நிலைக்கு வர முயற்சிக்கின்றனர். குளம்பிய குட்டையை சிறிது நேரம் அப்படியே விட்டால் எவ்வாறு தெளிந்த நிலைக்கு மெல்ல மெல்ல திரும்புமோ அதுபோல, சீடர்களின் மனமும் தெளிவாக ஆரம்பிக்கின்றது. இத்தகைய நிலையில் தான் தேர்ந்தெடுத்த மூன்று சீடர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் முன் உருமாற்றம் அடைகின்றார் இயேசு. காலம் காயத்திற்கு மருந்திடும் எனபார்கள் எவ்வளவு பெரிய காயமானால்லும் அது உடல் காயமாக இருந்தாலும் சரி உள்ளக் காயமாக இருந்தாலும் சரி அது அத்தனைக்கும் காலம் மருந்திடும். அவ்வாறு தான் இயேசு தன் மரணத்தை முன்னறிவித்தஹ்து சீடர்கள் சிலருக்கு மனதில் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். அக்காயத்திற்கு மருந்திடுவது போல இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்துள்ளது. தவக்காலத்தில் மனமாற்றத்தை எதிர்னோக்கி காத்திருக்கும் நாம் காலம் என்னும் சிறப்பான மருந்து கொண்டு நம்மைக் குணப்படுத்த இறைவன் அழைக்கின்றார். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் வலியாக இருந்தாலும் அதனை அப்படியே காலத்தின் கையில் ஒப்படைத்து வாழ் முயல்வோம். சில பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வே காலத்தின் கையில் விட்டு விடுதலாகும்.

 திருஅவை சிறப்பிக்கும் இந்த ஒருங்கிணைந்த பயணத்திற்கும் மூன்றாண்டுகள் காலம் உள்ளது இந்த கால அவகாசம் நம்மைத் தெளிவுபடுத்த, சீர்தூக்கிப் பார்க்க. ஆண் பெண் சிறியோர் பெரியோர் என்று எல்லா நிலையினரையும் உள்ளடக்கிய இப்பயணம் எல்லாரோடும் இணைந்து செல்லவேண்டும் என்பதற்காகவே. வலிமையுள்ளோர் பந்தயத்தில் ம்,உன்னெறிச் செல்வர். வலிமையற்றோர் பின்தங்கி விடுவர் இத்தகைய நிலையை மாற்றி எல்லாரும் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் இலக்கை அடையவேண்டும் என்பதற்காகவே இக்கால கட்டங்கள். திருஅவையின் அனைத்து நிலையினரும் ஒன்றிணைந்து முன்னேறிச்செல்ல அழைப்பு விடுக்கும் இப்பயணத்தில் காலம் தாழ்த்தாது பயணைப்போம். உறவுகளினால் ஏற்படும் காயங்களினால் காலாகாலமாய் வருந்துபவர்கள் பலர் எல்லார் மீதும் பாசம் வையுங்கள் தவறில்லை ஆனால் பைத்தியம் ஆகும் அளவிற்கு வைக்காதீர்கள் ஏனெனில் இங்கு முடிவே இல்லாத வாழ்வும் இல்லை.. பிரிவே இல்லாத உறவும் இல்லை.. எல்லாம் சில காலம் தான்..! கடந்து வந்த பின்பே கண்டுணர்வோம், நம்மைக் கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல.. நம் வாழ்வை வடிவமைத்த காலம் என்று.. காலம் கற்றுக் கொடுக்கும் பாடம் போல எந்த ஒரு ஆசானாலும் கற்றுக் கொடுக்க முடியாது..! காலம் கடந்து செல்வோம்  யாவும் மாறும் என்ற நம்பிக்கையில்..! காலம் பொன் போன்றது. காலம் தந்த அனுபவம் பொன்னை விட மேலானது. 

 


1.உருமாற்றத்தின் வழி மனமாற்றம்


உருமாற்றம் என்பது உடலளவில் உயிரியிலளவில் நடைபெறும் ஒரு மாற்றம் என்று அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். காலத்தின் உருமாற்றம் நாகரீகமாக, எண்ணங்களின் உருமாற்றம் கவிதைகளாக, தென்றல் காற்றின் உருமாற்றம் புயலாக சூறாவளியாக, நிலத்தின் கோர உருமாற்றம் நில நடுக்கங்களாக, பெண்மையின் உருமாற்றம் தாய்மையாக, மக்களின் உருமாற்றம் போராட்டங்களாக, அமைப்புக்களாக, கூட்டுப் புழுவின் உருமாற்றம் பட்டாம்பூச்சியாக என்று, அனைவரின் வாழ்விலும், அனைத்து நிலைகளிலும் உருமாற்றம் என்பது காலத்துக்கேற்றபடி நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. அந்த உருமாற்றம் நன்மையானதா, அல்லது தீமையானதா என்பதை பொறுத்து தான்' நமது வாழ்க்கையின்  நிகழ்வுகள் நடைபெறுகின்றன.  இயேசு உருமாற்றமடைந்தார். அவரது உருமாற்றம் அவரது உடலை மாற்றவில்லை. மாறாக நமது உள்ளத்தை மாற்றுகின்றது. தவக்காலத்தை சிறப்பாக துவங்கி உயிர்ப்பு அனுபவம் பெற நம்மைத் தயாரிக்கும் இக்காலகட்டத்தில், நாமும் உள்ளத்தளவில் உருமாற அழைக்கப்படுகின்றோம். 
இயேசுவின் உருமாற்றம் எவ்வாறு மூன்று முக்கியமான சீடர்கள் முன் நிகழ்ந்து அவர்கள் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதோ அது போல நமது வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த நம்மைத் தயார் செய்வோம். தவக்காலப் பயணமும் சினோடல் என்னும் ஒருங்கிணைந்த திருஅவையின் பயணமும் ஒன்றே என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களுக்கு இணங்க, மாற்றத்தை நம்மிலும் நம்மைச் சூழ்ந்தவற்றிலிருந்தும்  தொடங்குவோம். 

உருமாற்றத்தின் வழி மனமாற்றத்திற்கு அழைக்கும் காலம் தவக்காலம்
உருமாற்றம் உடலளவில் ஏற்படுகின்றது மனமாற்றமோ உள்ளத்தளவில் ஏற்படுகின்றது. உருமாற்றத்தின் வளர்ச்சிகள் வெளிப்படையாக தெரிகின்றன. மனமாற்றத்தின் வளர்ச்சிகள் வெளிப்படையாக நமது செயல்பாடுகளின் வழியாகத் தெரிவிக்கப்படுகின்றன. இயேசுவின் உருமாற்றம் அவரது கல்வாரிப் பயணத்திற்கான பாதையை ஏற்றுக்கொள்ள, தைரியத்தையும் துணிவையும் அளித்தது. நமது மனமாற்றம் நமது வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட ஏற்படும் நிகழ்வுகளை துணிவுடன் ஏற்க ஆற்றல் அளிக்கின்றது.  மனமாற்றம், ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிற அனுபவமாக இருக்கவேண்டும். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம் போல புதிய வாழ்வைப் பெற்றுக் கொண்டது போல இருக்கவேண்டும். நமது வாழ்க்கையே முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலிலும் கூட, மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பாக மனமாற்றம் கருதப்பட வேண்டும். நாம் செய்த தவறுகள் கற்றுக்கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஆவல் கொண்டதாக மனமாற்றம் இருக்கவேண்டும். அது தான் உண்மையான மனமாற்றம். 
தவக்காலம் தவம், தானம், செபம் என்னும் மூன்றில் நாம் சிறப்படையவேண்டும் என்பதை வலியுறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இவை மூன்றில் சிறப்படையும் நாம் உறுதியான மனமாற்றத்தைப் பெற்று, புதிய வாழ்விற்குள் அழைத்துச் செல்லப்படுகின்றோம். இத்தவக்காலத்தின் 40 நாட்களில் செபம் தவம் தானம் வழியாக நாமும் உருமாற்றத்தின் வழியாக மனமாற்றம் அடைந்து, சிறப்பான வாழ்வு வாழ வேண்டும். ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளையும், சிலுவைமரணத்தையும் நினைத்து வருந்தி செபிப்பத்திலும், இன்னும் பல்வேறு பக்தி முயற்சிகளில் பங்கெடுப்பதிலும் இத்தவக்காலத்தை பக்தியுடன் பயன்படுத்தி விட்டு தவக்காலம் முடிந்ததும் மீண்டும் பழைய பாவ வாழ்விற்குச் செல்வதல்ல மனமாற்றம். நீதி மொழிகள் புத்தகம் 26:11ல் சொல்லப்படுவது போல “நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும்; அதுபோல மூடர் தாம் செய்த மடச் செயலையே மீண்டும் செய்வார்” என்பதற்கேற்றவாறு  நமது வாழ்வு இருக்கக் கூடாது. கக்கினதையே மீண்டும் தின்னவரும், பிராணியாகவும், குளிப்பாட்டிய பின் மீண்டும் சேற்றில் புரளும் விலங்கினமாகவும், நம்முடைய கிறிஸ்துவ வாழ்வு இருக்கக்கூடாது என்று இதனையே திருத்தூதர் பேதுருவும் தன்னுடைய திருமடல்களில் தெளிவுபடுத்துகின்றார். நமது மனமாற்றம் இயேசுவின் உருமாற்றத்தைப் போல சிறப்பானதாக வாழ்வின் அங்கமாக திகழவேண்டும். நமது உடலை ஒருத்தல் முயற்சிகளாலும் செப தவங்களாலும் வருத்தி அதனை இயேசுவின் பாடுகளோடு ஒன்றிணைக்கும் இத்தவக்காலத்தில் நமது உள்ளத்தையும் வருத்த முயல்வோம். நல்லவற்றை மட்டும் மனதில் இருத்து தீயவற்றை நீக்க முயற்சிப்போம். பறவைகள் மற்றும் விலங்கினங்கள் வாழ்வில் ஏற்படும் உருமாற்றம் எவ்வாறு அதன் எதிர்கால வாழ்விற்குப் பலனைத்தருகின்றதோ அதுபோல நமது வாழ்வும் இத்தவக்காலத்தில் உருமாற்றமடைந்து சிறக்க முயற்சிப்போம். 
ஒருங்கிணைந்த பயணத்தின் வழியாக மாற்றம்
நமது உள்ளத்தை நல்லவற்றால் நிரப்பவும், நமது செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்கவும், ஒன்றிணைந்துப் பயணிக்கவும்,  திருஅவையால் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணம் நம்மை நன்மைகளால் நிரப்ப அழைக்கின்றது. நமது தேவையற்ற சிந்தனைகளைக் களைந்து நல்லவற்றால் நம்மை நிரப்பவும், நம்முடன் வாழும் அனைவரோடும் இணைந்து ஒரே திருஅவையின் மக்களாக நம்மை அடையாளப்படுத்தவும் நாம் அழைக்கப்படுகின்றோம். இறைமக்கள் ஒவ்வொருவரும்  தங்கள் கருத்துக்களைத் துணிச்சலோடு எடுத்துரைக்கவும், முற்சார்பற்ற மனநிலையோடு அவற்றிற்கு செவிமடுக்கவும், திருஅவையின் அனைத்து நிலையினரோடும் ஒன்றிணைந்துப் பயணிக்கவும், கலந்துரையாடவும், தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஏற்றவாறு செயல்படவும் அழைப்பு விடுக்கும் இந்த ஒருங்கிணைந்த பயணத்தில் துடிப்புடன் பங்கேற்போம். மாற்றத்தை தனி நபராகிய நம் ஒவ்வொருவரிடமிருந்தும் துவங்குவோம். இயேசுவின் உருமாற்றம் எவ்வாறு திருத்தூதரகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்ததோ அதுபோல நமது இந்த மனமாற்றம் நம்மிலும் பிறரிலும் வாழ்விற்கான மாற்றத்தைக் கொண்டு வரட்டும் உருமாற்றத்தின் வழி மனமாற்றமடைந்து தவக்காலத்தை அருள்தரும் காலமாக மாற்றுவோம். உருமாறுவோம் உருமாற்றுவோம்.  

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...