கும்ப ஆரத்தி
ஆக்கமுள்ள பணிகள் பல பங்கினில் மேற்கொண்டு ஆர்வமுடன் பணி செய்யும் பங்கின் பங்குத் தந்தை (திருப்பலி நிறைவேற்றும் குருக்களின் பெயர்கள்) மற்றும் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க வந்திருக்கும் ஏனைய குருக்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் அனைவரையும் தமிழர் பண்பாட்டு வரவேற்பு முறையோடு வரவேற்க விரும்புகிறோம்.
மணத்தோடு மகிழ்வையும் தருவது சந்தனம். வீரத்திற்கும் வித்தியாசமான சிந்தனைக்கும் காரணமாய் இருப்பது குங்குமம். இத்தகைய இரு பெரும் நற்குணங்களைத் தன்னகத்தேக் கொண்ட சந்தனம் குங்குமம் கொண்டு திருப்பலி சிறப்புச் செய்ய வந்திருக்கும் குருக்களையும் மற்றும் இத்திருப்பலியில் பங்கேற்று மணமக்களுக்கு ஆண்டவரின் ஆசீரை அள்ளிப் பெற்றுத் தர ஆவலாய் காத்திருக்கும் உங்களையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
செழிப்பைத் தரும் மஞ்சள் நிற நூல் கொண்டு சுற்றிய நிறை குடம், அதில் தீமையை விரட்டும் மாவிலை, கரடும் முரடும், இனிமையும் சுவையும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்று அடையாளப்படுத்தும் முழுத் தேங்காய், இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் கும்ப ஆரத்தி. இத்தகைய கும்ப ஆரத்தி எடுப்பது நிறைவையும் மகிழ்வையும் முழுமையாக ஒருவர் பெற வேண்டும் என்னும் நல்லெண்ண அடிப்படையில் தான். எனவே இன்று மணநாள் காண காத்திருக்கும் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்காக செபிக்க திருப்பலி நிறவேற்ற வந்திருக்கும் குருக்கள் இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் மங்களகரமான கும்ப ஆரத்தி எடுத்து வரவேற்கிறோம்.
குத்துவிளக்கேற்றுதல்
இல்லம் தோறும் இறை ஒளி இன்பம் பொங்கும் மனதில் இனி, ஆலயம் முழுதும் உறவின் ஒலி ஆயுள்முழுதும் தொடரட்டும் நனி. அகஇருள் களைந்து புறஒளியாம் இத்தீப ஒளியில் நாம், உள்ளொளி பெற அருள்வேண்டுவோம். தந்தை மகன் தூய ஆவி என்னும் தமத்திரித்துவத்தின் அருளை நாம் பெற உதவியாகவும் நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களின் ஆற்றலைப் பெற உதவியாகவும் இருக்கும் இந்த மங்கள விளக்கினை ஏற்றி நாம் இந்த வழிபாட்டில் இணைவோம்.
1. இருளாக இருந்த இவ்வுலகை ஒளியால் நிரப்ப எண்ணிய இறைவன் முதலில் “ஒளி தோன்றுக” என்றார். ஓளி தோன்றிற்று. கடவுள் வார்த்தையால் உலகில் உருவான ஒளியைப் போன்று இம்மணமக்களின் வாழ்வும் இறைவார்த்தையால் ஒளிபெற அருள்வேண்டி குத்துவிளக்கின் முதல் முகப்பினை பங்குத்தந்தை அவர்கள் ஏற்றுகிறார்.
( முதல் திரி :பங்குத்தந்தை)
2. கடவுள் மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம் என்று கூறி, மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊதி உயிர் உள்ள மனிதனை உருவாக்கினார். பின்பு மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்கு தகுந்த துணையை உருவாக்குவேன் என்று கூறி மனிதனிடமிருந்து விலா எலும்பு ஒன்றை எடுத்து ஒரு பெண்ணாக உருவாக்கினார். இப்படிப்பட்ட ஆதிப்பெற்றோரால் உருவான குடும்பம் வழியாக நம்மையும் படைத்து உருவாக்கிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவும் குடும்பமாக இவர்கள் இன்புற்று இணைந்து வாழவும் அருள்வேண்டி இம்மணமக்களின் பெற்றோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் திரிகளை ஏற்றுகின்றனர்.
(2, 3ஆம் திரி பெற்றோர்)
3. கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி ‘பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்’ என்றார். இவ்வாறு முதல் குடும்பத்தை ஆசிர்வதித்து உருவாக்கிய இறைவன் இன்று திருமணம் என்னும் அருள் அடையாளத்தினால் இணைக்கப்பட இருக்கும் இம்மணமக்களை இறைவன் எல்லா நலன்களாலும் வளங்களாலும் ஆசீர்வதித்து பலுகிப் பெருக வைக்க அருள்வேண்டி, நான்காம் திரியினை மணமக்கள் ஏற்றுகின்றனர்.
(4ஆம் திரி மணமக்கள்)
4. நீங்கள் பெற்றுக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். (எபேசி 4 1-3). என்ற இறைவார்த்தைக்கிணங்க உலகை உண்டாக்கி அதில் குடும்பத்தை உருவாக்கிய இறைவன், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக இத்திருமணத்தை ஒரு திருவருளடையாளமாக உயர்த்த அருள்வேண்டி, இந்த ஐந்தாம் திரியினை திருப்பலி நிறைவேற்றும் குரு ஏற்றுகின்றார்
(5ஆம் திரி- திருப்பலி நிறைவேற்றும் குரு)
தூய ஆவியார் வழியாக இறைவன் இன்றும் நம்மோடு இருந்து நம்மை நடத்துகிறார் என்பதை உணர்ந்தவர்களாய் திருமண வாழ்வில் இணைய உள்ள இந்த மணமக்களுக்காக இறைவனின் அருள்வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்று செபிப்போம்.
வருகைப்பாடல் தொடர்ச்சி...
பிதா சுதன்..., ஆண்டவர் உங்களோடு இருப்பாராக... பின்
திருமணத் திருப்பலி முன்னுரை
உள்ளத்தில் உவகையும் உதடுகளில் உற்சாகமும், மனங்களில் மகிழ்வும், முகந்தனில் செழிப்பும் கொண்டு சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் போல் அன்பு மணம் வீசும் உங்கள் அனைவரையும் ஆண்டவனின் அருள் இல்லத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். செல்வங்கள் கோடி சேர்த்து, இலக்குகளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட, தங்கள் வாழ்வை இறைவன் முன்னிலையில் இன்று இணைக்க விரும்புகின்றன கிளிண்டன் ஷாட்லின் என்னும் இரு உள்ளங்கள். இவ்விரு உள்ளங்களையும் அன்பால் இணைத்து ஆசீரால் நிரப்பக் காத்திருக்கின்றன இரு உறவு சொந்தங்கள். இம்மணமக்களை வாழ்த்தி மகிழ வந்திருக்கின்றன உற்றமும் சுற்றமும். ஆயன் தம் மந்தையின் குரலை கேட்டு அதனை தேடி சென்று கண்டடைந்து மகிழ்வது போல, மந்தையாம் நமது மகிழ்வினில் பங்கேற்க அன்போடு வந்திருக்கும் குருக்கள் இருபால் துறவறத்தார் ஆகியோரையும் உற்றார்களையும் உறவினர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
ஒருவருக்கு வாழ்வு கொடுப்பதல்ல திருமணம். ஒருவருடன் ஒருவர் வாழ்வை பகிர்வதே திருமணமாகும். அவ்வகையில் இந்நாள் வரை தங்களுக்காக வாழ்ந்த இவர்கள் இத்திருமணச்சடங்கின் வழியாக ஒருவர் மற்றவருக்காக வாழவிருக்கிறார்கள். செல்வன் செல்வி என்று அழைக்கப்பட்ட இவர்கள் திருமண பந்தத்தின் வழியாக திரு, திருமதி என்று அழைக்கப்பட்ட இருக்கின்றார்கள். இவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்து நின்று, பாசத்தை மாறா நேசத்தோடு பகிர்ந்து வாழ நாம் அனைவரும் இவர்களுக்காக இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம். ஒருவர் மற்றவரை முழுமையாக புரிந்து அன்பு செய்ய குடும்பத்தாரோடு பிறரோடு உள்ள அன்புறவை ஆழப்படுத்த, அடிப்படைக் காரணமாகத் திகழும் ஆண்டவனோடு அன்பு கொள்ள திருமண பந்தத்தில் இவர்கள் நீடித்து நிலைத்திருக்க செபிப்போம். அதற்கான அருளினை இத்திருப்பலியில் பக்தியுடன் வேண்டுவோம்.
காணிக்கை மன்றாட்டு:
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று கூறி மணமக்களை வாழ்த்துவது நம்மரபு. பதினாறு என்பது பிள்ளைகள் அல்ல. பதினாறு வகை செல்வங்களையும் மணமக்கள் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்பதே அதன் நோக்கம். எனவே இந்நேரத்தில் அந்த பதினாறு செல்வங்களையும் இவர்கள் பெற்றிட காணிக்கை மன்றாட்டின் வழி செபிப்போம்.
1; புகழ்; ( மஞ்சள் )
தோன்றின் புகழோடு தோன்றி, தன் குடும்ப வாழ்வால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இவர்கள் புகழைச் சேர்க்க வேண்டுகிறோம். எனவே அதன் அடையாளமாய் மங்கள நாட்களில் மகிழ்வினை சேர்க்கும் மஞ்சளினை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
2. கல்வி: ( புத்தகம் )
கற்றனைத்தூறும் மணற்கேணியாய் இவர்களும் இவர் தம் வழிமரபினரும் கல்வியில் சிறந்து விளங்க அருள் வேண்டுகிறோம். எனவே கல்வியினை போதிக்கும் புத்தகத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
3. ஆற்றல்; ( பலூன் )
என் அருள் உனக்குப் போதும் என்ற ஆண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று இவர்கள் வாழ்நாளில் சாதனைகள் பல புரிய அருள் வேண்டுகிறோம். காற்றின் ஆற்றலால் உயர பறக்கும் பலூன் போல இவர்கள் வாழ்வு உயர்ந்திட அருள் வேண்டி இந்த பலூனை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
4. வெற்றி : ( குங்குமம் )
எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற, வாகையினை சூடி இவர்கள்ம்வாழ்வைத் தொடர அருள் வேண்டுகிறோம். வெற்றியின் சின்னமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் இருக்கும் குங்குமத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
5 . நல் அறிவு: ( ஒளி )
சிந்தித்து செயல்பட்டு சீரான முடிவுகளை எடுத்து பார் போற்ற இவர்கள் வாழ நல்ல அறிவுடன் செயல்பட அருள் வேண்டுகிறோம். இருளை அகற்றி ஒளி தரும் சுடர் போல இவர்கள் வாழ்வு மின்னிட ஒளியினை உம் பாதத்தில் உம் அர்ப்பணிக்கின்றோம்.
6 . நல் விதி: ( விவிலியம் )
விதியை மதியால் வெல்லலாம் என்பதை உணர்ந்து இவர்கள் செயல்பட அருள் வேண்டுகிறோம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவிலியம் என்பதை உணர்ந்து வாழ விவிலியத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
7 . நன்மக்கள் : ( மலர் )
அன்பும் பண்பும் கொண்ட செல்வங்களை பிள்ளைகளாக பெற்று, சுற்றமும் நட்பும் சூழ எப்போதும் இணைந்து இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். மலர்ந்து மணம் பரப்பி பார்ப்போருக்கு மகிழ்வைத் தரும் மலர் போல இவர்கள் வாழ்வு மாற அருள் வேண்டி இம்மலரை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
8 . பொன் : ( முத்துக்கள் )
செல்வ வளமும் நலமும் வாழ்வினில் நிறையப் பெற்று இவர்கள் செழிப்புடன் வாழ அருள் வேண்டுகிறோம். தோற்றத்தில் எளிமையாகவும், மதிப்பில் உயர்வாகவும் கிடைப்பதற்கு அரியதாகவும் இருக்கும் முத்துக்கள் போல இவர்கள் வாழ, அருள் வேண்டி இந்த முத்துக்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
9 . நெல் : ( அரிசி காய் கறிகள் )
நிலத்தில் நல்ல விளைச்சலையும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் இவர்கள் காண அருள் வேண்டுகிறோம். உழுது பயிரிட்டு பசிக்கு உணவாகும் தானியங்கள் போல இவர்கள் வாழ்வு பிறருக்கும் பயன்பட அருள் வேண்டி இவ்வுணவுப் பொருட்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
10 . நுகர்ச்சி : ( நறுமணப்பொருள் )
வாழ்க்கையில் வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் நுகர்ந்து அனுபவித்து மகிழ்வுடன் இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். நுகர்ந்ததும் மணம் தந்து மகிழ்வு தரும் நறுமணப்பொருள் போல இவர்கள் வாழ்வு அமைய நறுமணப் பொருள்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
11 . அழகு :( புன்னகை )
அகத்தின் அழகினை முகத்தில் பிரதிபலிக்கும் நல்ல உள்ளங்களாக இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். புன்னகை ஒன்றே உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்தும் என்பதை உணர்ந்து எப்போதும் புன்னகையுடன் இவர்கள் வாழ அருள் வேண்டி இந்த புன்னகை முகத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
12 . பெருமை : ( நீர் )
பெருமை கொண்டு வீழ்ந்து மடிவதை விட பொறுமை கொண்டு வாழ்ந்து காட்டலாம் என்று எண்ணி இவர்கள் சிறப்படைய அருள் வேண்டுகிறோம். தன்னால் தான் அனைவரும் செழிப்படைகின்றனர் என்ற பெருமை சிறிதும் இல்லாது பொறுமை கொண்டு, போகும் இடமெல்லாம் வளர்ச்சி அடையச்செய்யும் நீர் போல இவர்கள் வாழ்வு அமைய அருள் வேண்டி இந்நீரை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
13. 14 . இளமை, துணிவு : ( வாழை )
என்றும் இளமை எதிலும் புதுமை என்பதை உடலளவில் மட்டுமல்லாது உள்ளத்தளவிலும் இவர்கள் பெற்றிட அருள் வேண்டுகிறோம். கணு முதல் காய் பழம் என அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்கு தரும் வாழையைப் போல இவர்கள் வாழ்வு மாற துணிவுடன் இவர்கள் செயல்பட அருள் வேண்டி இவ்வாழையை உம் பாதம் ......
15. 16. நோயின்மை, வாழ்நாள்: ( அப்பம் இரசம் )
நோய் நொடி இன்றி இன்பமாக நீடீய ஆயுளுடன் இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். அப்பத்தையும் இரசத்தையும் தனது உடலாகவும் இரத்தமாகவும் மாற்றிய இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றி இவர்களும் உடல் உள்ள ஆன்மீக நலம் பெற அருள் வேண்டி இந்த அப்ப இரசத்தைஉம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு
1. நல்ல ஆயன் நானே என்று கூறிய அன்பு இறைவா எம் திருஅவையை வழி நடத்தி வரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவருக்காகவும் செபிக்கின்றோம். அனைத்துலக திருஅவையின் நலனுக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நீரே உடன் இருந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான் இருவரும் ஒரே உடலாய் இருப்பர். “இனி இவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல் என்ற இறைவார்த்தைகளின் வழியாக எம் குடும்பங்களை ஆசீர்வதித்த இறைவா இங்கு குழுமியிருக்கும் எம் குடும்பத்தாருக்காக செபிக்கின்றோம். செய்யும் ஒவ்வொரு தொழில் முயற்சிகளில் நிறைவெற்றியையும், உடல் உள்ள நலத்தில் முன்னேற்றத்தையும் நற்சுகத்தையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்’ என்று நீர் உருவாக்கிய முதல் குடும்பதை ஆசிர்வதித்த இறைவா, இன்று திருமண பந்தத்தின் வழியாக இணைக்கப்பட்ட இம்மணமக்களுக்காக வேண்டுகிறோம். திருமணத்தின் நோக்கங்களான தம்பதியர் மகிழ்ச்சி, பிள்ளைகளை பெற்றெடுத்து, அவர்களை கிறிஸ்தவ நெறியிலும், திருஅவையின் மதிப்பீடுகளிலும் வளர்த்து, உம் திருவுளத்திற்கேற்ற திருக்குடும்பத்தை நடத்திட தேவையான அருள்வரங்களை அவர்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அமைதியின் நாயகனே இறைவா உலகில் நீடித்த நிலையான அமைதிக்காகவும் போரினால் துன்புறும் மக்களுக்காகவும் செபிக்கின்றோம். தான் தனது என்ற பேராசையின் அடிப்படையினால் நடக்கும் இப்போரானது விரைவில் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியுடனும் அன்புடனும் வாழ தேவையான அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. அன்பின் அடையாளம் குடும்பம் அதை உருவாக்கும் இடம் பங்குத்தளம் என்பதற்கேற்ப எம் பங்கும் பங்குமக்களும் அன்பு கொண்டு அயலாருடன் இணைந்து வாழ அவர்களுக்காக செபிக்கின்றோம். எம் பங்குத்தந்தை ....... அவர்கள் எம் பங்கின் நலனுக்காக எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றி பெறவும் இறைமக்களாகிய நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்படவும் தேவையான அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
புதுமணத் தம்பதியர் செபம்!
மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன் என்று ஒசேயா (2:19-20) இறைவாக்கினர் வாயிலாக உரைத்த எம் தாயும் தந்தையுமான இறைவா! உம்மை போற்றுகின்றோம். இயேசு மரி சூசை வழியாக இம்மண்ணுலகில் அமைத்த திருக்குடும்பத்தைப்போல இன்று எங்கள் வழியாக ஓர் திருக்குடும்பத்தை ஏற்படுத்துகின்றமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். “மனிதன் தனிமையான இருப்பது நன்றன்று, அவனுக்கு உற்ற துணையை உருவாக்குவேன்” என்று சொல்லி, உலகில் திருக்குடும்பத்தை ஏற்படுத்திய இறைவா, இன்று எங்களை ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாக கொடுத்தமைக்காகவும் நன்றி செலுத்துகின்றோம். எங்களுக்கு ஒருவர் மற்றவர் வழியாக ஏராளமான உறவுகளையும் கொடுத்தமைக்காக நன்றி செலுத்துகின்றோம். இக்குடும்ப உறவுகளை எம் வாழ்வின் சிறந்த கொடையாக ஏற்று, திருமணம் குறித்த திருச்சபையின் படிப்பினைகளை உணர்ந்து வாழ்ந்திட உம் ஞானத்தை எமக்கு அளித்தருளும். எம் திருமண வாழ்வில் மகிழ்ந்திருக்க, நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, குறை நிறைகளோடு மற்றவரை ஏற்றுக்கொண்டு அன்பு செய்ய நிறைவான அருளினைத்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.