Friday, 16 February 2018

ஏதேன் வனமா? பாலை வனமா?

          ஏதேன் வனமா? பாலை வனமா?

தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். முன்னர் எல்லாம் தவக்காலம் என்றாலே தெளிவாகத் தெரிந்துவிடும் . 40 நாட்களும் அசைவம் கிடையாது. சுபகாரியங்கள் அதாவது திருமணம் , ஞானஸ்நானம். புதுநன்மை போன்ற திருவருட்சாதனக் கொண்டாட்டங்கள் கிடையாது. பெண்கள், சிறுமியர் முதல் பெரியவர் வரை பூ, பொட்டு வைக்க மாட்டார்கள்.இப்படி  வெளிப்படையான  அடையாளங்கள் பல இருக்கும். ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை. காலத்திற்கேற்றார்போல ஒழுங்குமுறைகளையும் சட்டதிட்டங்களையும் நமக்கேற்றார்போல இலகுவாக்கியிருக்கின்றோம். வருடம் தோறும் வரும் தவக்காலம் தானே என்று எளிதாக எண்ணத் தொடங்கியிருக்கிறோம். அப்படி எண்ணினால் அது முற்றிலும் தவறு. கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்வில் இந்த தவக்காலம் மிகவும் முக்கியமான காலம். ஓடிக்கொண்டே இருக்கும் நமது இயல்பு வாழ்க்கையில் நின்று நிதானித்து, நமது பாதையையும் பயணத்தையும் சரிசெய்ய திருச்சபையால் கொடுக்கப்பட்ட பொக்கிஷமான நாட்கள் இவை. இந்த தவக்காலத்தில் இயேசு நமக்குக் கூறுவது என்ன?
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு திருமுழுக்கு பற்றிக்கூறும்போது, " திருமுழுக்கு உடலின் அழுக்கை போக்கும் செயல் அல்ல , குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்கு தரும் வாக்குறுதி" என்கிறார். நமது திருமுழுக்கின் போது நாமும் கடவுளுக்கு இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறோம். நமக்கு பதிலாக நம் சார்பாக நமது பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இந்த வாக்குறுதியை அளித்திருக்கின்றனர். அதன்பின் தான் தொடங்குகிறது நமது நம்பிக்கை வாழ்வு கிறிஸ்தவ வாழ்வு. இது இன்று நேற்று தொடங்கியதல்ல, அன்று ஏதேன் தோட்டத்தில்  இறைவன் முதல்பெற்றோர்களை உண்டாக்கி ஆதாம் ஏவாள் எனப் பெயரிட்டு நம்பிக்கை வாழ்வுக்கு அழைத்ததிலிருந்து தொடங்குகிறது. அவர்களும் கடவுளுக்கு வாக்குறுதிக் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் தங்களது வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இயேசுவும் திருமுழுக்குப் பெறுகிறார் . ஆனால் தூய ஆவியால் பாலை நிலத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். நாமும் திருமுழுக்குப் பெற்றோம் . நாம் அனுப்பப்பட்டது ஏதேன் வனமா? பாலை வனமா?  சிந்திக்க இநேரத்தில்  நாம் அழைக்கப்படுகிறோம்.
ஏதேன் தோட்டம் : உணவு , உறையுள் [பாதுகாப்பு], உவகை . இது மூன்றும் தங்கு தடையின்றி கிடைக்கும் ஒரிடம்.
    உணவு அனைத்துவிதமான காய்களும் கனிகளும் நிறைந்த தோட்டம்.
    தூய ஆவியாரின் உடனிருப்பு ஓர் பலமான பாதுகாப்பு.
    வானதூதர்களோடு, இயற்கைப் படைப்புக்களோடு உரையாடி உலாவுகையில்   
    உண்டாகும் இன்பம் மகிழ்ச்சி.
இப்படி இவை மூன்றும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றும் அவர்களிடம் நிறைவு இல்லை. நிறைவு இல்லாததால் உவகை இல்லை. உவகை இல்லாததால் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். இறுதியில்  உணவிருந்தும் உண்ண முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
இந்த உணவு உறையுள் உவகை இந்த மூன்றின் அடைப்படையிலேயே இயேசுவுக்கு பாலைவனத்தில் மூன்று சோதனைகளும் ஏற்பட்டன.
1. நீர் இறைமகன் என்றால்  கற்களை அப்பங்களாக்கி உண்.
2. கீழே குதி. தூதர்கள் உம்மை பாதுகாப்பர்.
3. தெண்டனிட்டு வணங்கு அரசுரிமையை  உமக்கு அளிக்கிறேன்.
இயேசு சாத்தானின் இந்த சோதனைகளை முறியடித்ததால் வெற்றி கொண்டார். அதனால் அவருக்கு சாத்தானின் [ஏவலின்] சோதனை ஆட்டம் கூட ஏதேன் தோட்டமாக தோன்றி மகிழ்ச்சியளிக்கிறது. மனிதன் அப்பத்தினால் மட்டுமன்றி கடவுளின் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்ற வார்த்தையை வாழ்விலே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். பாலைநிலமானாலும் தூய ஆவியின் துணையோடு கடவுளைப் புகழ்ந்து ஆன்ம பலத்தோடு உடல்பலமும் பெறுகிறார்.
தூய ஆவியாரின் துணை, வானதூதர்களின் பணிவிடை, உடனிருப்பு இதைவிட மேலான ஒரு பாதுகாப்பு வேறெங்கும் இல்லை என்பதை ஆழமாக உணர்கிறார். கண்ணுக்குப் புலனாகின்ற வெளிப்படையான அனைத்தும் தாராளமாகக் கிடைத்த ஏதேன் தோட்டம், ஆதாம் ஏவாளுக்கு ருசிக்கவில்லை, நிலைக்கவில்லை. ஆனால் பாலை நிலத்தில் கண்ணுக்குப்புலப்படாமல்  இருந்த இவை அனைத்தையும் இயேசு அகத்தால் உணர்கிறார். அதனால் பாலவனம் ஏதேன் வனமாகக் காட்சியளிக்கிறது.
மேலும் நற்செய்தியில் இயேசு காட்டு விலங்குகளோடு இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஏதேன் தோட்டத்திலும் இத்தகைய காட்டு விலங்குகள் இருந்திருக்கும் ஆனால் அவை ஆதிப் பெற்றோர்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை மாறாக நல்லதொரு உடனிருப்பை அளித்திருக்கும். அவர்களுக்கே இப்படி என்றால் 'இறைமைந்தன் இயேசு' ,அவரை தெண்டனிட்டு அல்லவா வணங்கியிருக்கும்!.
வறட்சியான பலை நிலத்தில் இருந்தாலும் இயேசு நிறைவுடன் இருக்கின்றார். மாயை போல் தோற்றமளிக்கும் கானல் நீர் போல் அல்லாது வற்றாத நீர் சுரக்கும் ஊற்று நீராக மாற எண்ணுகிறார். அதற்கேற்ப இந்த 40 நாட்களையும் அவர் மாற்றுகிறார்.
இன்று இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் இது தான். ஏதேன் வனமோ பாலை வனமோ அது கண்களால் பார்க்கும் வெளிப்புறத்தோற்றத்தில் இல்லை நமது அகத்தோற்றத்தில் / பார்வையில் உள்ளது. நமது நல்லெண்ணங்களினால் குறைவிலும் நிறைவைக் காண முற்படுவோம். இந்த 40 நாட்களும் இயேசுவுக்கு எவ்வாறு இறையனுபவம் பெறக்கூடிய காலமாக இருந்ததோ அதுபோல நமக்கும் இத்தவக்காலம் இறையருளின் காலமாக அமைய அருள் வேண்டுவோம்.பாலைவன அனுபவம் பெற்ற இயேசு அப்படியே இருந்துவிடவில்லை. மாறாக உடனே தனது நற்செய்திப் பணியைத் தொடங்குகிறார். நாமும் பெற்ற இறையனுபவத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்குவோம். " காலம் நிறைவேறிவிட்டது. கடவுளின் அரசு நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற இயேசுவின் வார்த்தைக்கிணங்க பழைய காலம் மறைந்துவிட்டது.
இறையாட்சி என்னும் நிகழ்காலம் வந்துவிட்டது.
மனம்மாறி எதிர்வரும் காலத்தில் நல்ல செய்திகளை [நன்மைகளை] நம்புங்கள் .
பாலை வனமோ ஏதேன் வனமோ எல்லாம் நமது நம்பிக்கையின் அடிப்படையிலேயே என்பதை உணர்ந்து வாழ்வோம். குறைவிலும் நிறைவைக் காணும் இறைவன் நம் வாழ்விலுள்ள குறைகளைக் களைந்து நிறைவினால் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரையும்  நிரப்புவாராக ஆமென்.. 
         

          

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...