Friday, 23 February 2018

நீயாக மாறுவதே நிரந்தர மாற்றம்.

உருமாற்றம் . இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை படைப்புகளும் உருமாற்றம் அடைகின்றன. விதை தளிராகி, செடியாகி, மரமாகிறது. உயிரினம் கருவாக உருவாகி, உயிராக வடிவம் பெறுகிறது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவருக்கும் உருமாற்றம் நிகழ்கிறது. ஆனால்   அந்த உருமாற்றங்கள் எல்லாம்  நம் உடனிருப்போருக்கு எந்தவிதமான தூண்டுதலையும் பாதிப்பையும் தருவதில்லை. ஆனால் இயேசுவின் உருமாற்றம் எவ்வாறு நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை வெளிபடுத்தவே இன்றைய  நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. 

அகில உலகத்தையும் படைத்த கடவுளின் மகனான இயேசு  நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்தார்.  தெய்வ இயல்பு முழுவதும் இருந்தும் மனித இயல்பிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். இன்றைய விவிலிய நிகழ்வை ஒரு காட்சியாக அதுவும் அரண்மனை , ராஜாங்க காட்சியாக கற்பனை செய்து பார்ப்போம். 
முற்காலத்தில் இளவரசர்கள் மன்னராக முடி சூடுவதற்கு முன்பு மாறுவேடத்திலோ, அல்லது சாதாரண மனிதர் வேடத்திலோ மக்களுடன் தங்கி அவர்களது இன்னல் இடையூறுகளைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க முற்படுவர். அப்போது தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களையே உடன் அழைத்துச் செல்வர். சில சமயங்களில் மக்களில் சிலரையே தங்களது நண்பர்களாக தேர்ந்தெடுத்து உடன் அழைத்துச் செல்வர். இறுதியில் மக்களின் துயர் களைந்து, தங்களின் வேடம் களைவர்.பின் மணிமுடி சூடி மன்னராவர். 
இயேசுவின் உருமாற்றமும் அப்படி ஒரு காட்சியாகத் தான் தோன்றுகிறது.  
மாமன்னர்- இறைவன்.
இளவரசர்- அவர் தம் மகன் இயேசு.
ராஜ மந்திரிகள்- மோயீசன், எலியா.
நண்பர்கள் - சீடர்கள் மூவர். 
மன்னராக இயேசு தனது இறைவல்லமையினுள் நுழைகிறார். மோயீசன் எலியா என்னும் இரு பெரிய வல்லுநர்களோடு தனது பயணத்திட்டத்தைப் பற்றி உரையாடுகிறார். அவரது பேச்சிலும் உடையிலும் ராஜ வனப்பு ( இறை) மிளிர்கிறது. மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களான சீடர்களுக்கு இயேசுவின் இறையரசு பற்றியும் வல்லமை பற்றியும் அதிகம் தெரியாத நேரம். திடிரென்று அவரது ராஜ வனப்பையும் மந்திரிகளுடனான அவரது உரையாடலையும் கண்டு வாயடைத்துப் போய் நிற்கின்றனர். இப்படியே இருந்து விடலாமே இவர்! எதற்கு இப்படி காட்டிலும் மேட்டிலும் கால்நடையாக நடந்து துன்பப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். 
நாம் இங்கேயே இருப்பது எத்துணை நலம் என்றும், மூன்று கூடாரங்கள் அமைத்து விடலாம் என்பது வரை அவர்கள் சிந்தனை போகிறது.அப்போதும் கூட அந்த எளியவர்கள் தங்களைப் பற்றி சிறிதும் எண்ணவில்லை
இவரே என் அன்பார்ந்த மகன் இவருக்கு செவிசாயுங்கள் என்ற  அரசனின் குரலுக்கு அடிபணியும் சேவகர்களாய் சீடர்கள். 
வழக்கம் போல் இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கூறும் இயேசு. (இந்த முறை ஒரு கால வரையறை வைக்கிறார். அதாவது மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை என்று). 
உயிர்த்தெழுதலா?அப்படி என்றால் என்ன ? என்று தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கும் அப்பாவி சீடர்கள் என காட்சி முழுவதும் ஒரு ராஜாங்க நிகழ்வாகத் தோன்றுகிறது. 
எங்கு? மலை ; தனிமையான இடத்தில் தன்னை இறைவன் முன்னிறுத்தி செபிக்கிறார். மலையில் பெரும்பாலும் தூய காற்றும் சுகாதாரமும் கிடைக்கும். தூய்மை இருக்கும் இடத்தில் மகிழ்வும் தெளிவும் இருக்கும். இத்தகைய் மகிழ்வையும் தெளிவையும் தேடி இயேசு செல்கிறார். அதை கண்டடைகிறார். தனது சீடர்களுக்கும் அதை வெளிப்படுத்துகிறார். 
எதற்காக ? தனது நோக்கத்தைக் கூர்மைப்படுத்தவும், தனது இறை வல்லமையைப் பிறருக்கு வெளிப்படுத்தவும், தந்தை தன் மீது வைத்திருக்கும் அன்பை பிறர் அறியச் செய்யவும் உருமாறுகிறார். 
யாருடன்? மோசே , எலியா. மோசே இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டிற்கு வழிநடத்தியவர். எலியா ஆண்டவரின் வாக்கை சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு சென்று அறிவித்தவர். இரண்டு பேருமே இஸ்ரயேல் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள். கடவுளின் அன்பை வல்லமையை மக்களுக்கு வெளிப்படுத்தியவர்கள். இவர்களோடு இயேசு உரையாடுகிறார். 
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இங்கு இவருக்கு ஒரு படி மேலே போய் உடையிலேயே தெரிகிறது.ஆடை பளீரென்று வெண்ணிறமாக மாறும் அளவுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியடைகின்றார் இயேசு.
இன்றைய இயேசுவின் உருமாற்றம் நமக்கு தரும் செய்தி இதுதான்.
 மகிழ்வும் தெளிவையும் உனக்குள் தேடு. 
இறையடியார்களின் துணை நாடு, 
கடவுளின் அன்பு மகனா/ளாக மாறு.
நீ நீயாக மாறு அதுவே நிரந்தரமாற்றம் என்பதை நமக்கு உணர்த்தவே இயேசு உருமாறுகிறார். மனிதரான இயேசு இறை மனிதராக மாறுகிறார். நாமும் மாறுவோம். உடலளவில் அல்ல உள்ளத்தளவில். 
காகிதம் கசக்கி எறியப்படும் போது குப்பையாகிறது
காசாக மாறும்போது, தான் அதன் மதிப்பு உயர்கிறது.
மூங்கில் உடைபடும்போது மரத்துண்டாகிறது,
குழலாக ஊதப்படும்பொழுது அதன் இன்னிசை இனிமை தருகிறது. 
எதுவும் அப்படியே இருந்தால் எந்த பயனுமில்லை. 
உருமாறிய இயேசுவுக்கு தந்தையின் அன்பும் ஆசீரும்கிடைத்தது. நாமும் நம் உருவை மாற்ற முயல்வோம். எதிர்காலப் பயணத்திட்டத்தை இறை உதவியுடன் திட்டமிடுவோம். இறைவாக்கினர்களின் பாதையில் இறையாசீர் பெறுவோம் .உருமாறுவோம் உருமாற்றுவோம் . எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர் நம்மோடும் நம் குடும்பத்தோடும்  என்றும் இருப்பதாக ஆமென்.   
               

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...