Saturday, 29 September 2018

நீங்கள்லாம் பெரிய ஆளுங்க ...

. நம்முடன் இருக்கும் நமது நண்பர்கள் யாரையாவது நாம் கிண்டல் செய்ய, கலாய்க்க இந்த வார்த்தையை வாக்கியத்தை நாம் அதிகமாக பயன்படுத்துவோம். நீங்கள்லாம் யாருப்பா பெரிய ஆளுங்க... எங்களெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியுமா என்றெல்லாம் சொல்லியிருப்போம். ஒன்று அவர்கள் நம்மை விட்டு தொலைவில் சென்று விட்டார்கள் என்ற வருத்தம் இல்லையென்றால் எங்கே நம்மை விட அதிகமான தொலைவு உயரம் சென்று விடுவார்களோ என்ற பயம் . எனவே அதனை அங்கலாய்ப்பாக மாற்றி இவ்வாறு சொல்வோம். 
உலகில் வாழும் அனைவருக்கும் தாம் இன்னும் அதிகமாக வளர வேண்டும் பொருளளவில் மதிப்பளவில், செல்வாக்களவில் என்ற எண்ணம் உண்டு. யாரும் நான் வளர வேண்டாம் குறைய வேண்டும் என்று நினைப்பது கிடையாது (திருமுழுக்கு அருளப்பரைத் தவிர...)  அப்படியிருக்க இயேசுவின் சீடர்களுக்குள் இத்தகைய கேள்வி எழுந்ததில் வியப்பேதும் இல்லை. பெற்றோர்களின் உயிர் பிரியும் முன் சொத்தினை பங்கு போட விவாதம் செய்யும் மனிதர்கள் வாழும் காலத்தில் இயேசுவின் பிரிவிற்கு பின் அவர் பணியை செய்ய, மக்களை வழிநடத்த தங்களுக்குள் உயர்ந்தவர் யார் என்ற விவாதம் அவர்களுக்குள் எழுகிறது. அதனைக் கவனித்த இயேசு மூன்றே வார்த்தைகளில் அதற்கு பதிலளிக்கிறார். அவரின் இப்பதில் இன்றைய காலகட்டத்தில் யார் பெரியவர் என்று கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கும் பொருந்தும். யார் பெரியவர்? நீயா? நானா? என்று நாம் வாழ்கின்ற சமூகத்தில் சில சமயம் சப்தமாகவும் பல சமயம் மௌனமாகவும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 
இன்றைய நற்செய்தியின் மூலமாக இயேசு யார் பெரியவர் என்பதை நமக்கு மூன்று வார்த்தைகளில் சொல்கிறார். 
1. தொண்டனாயிருப்பவர்.
2. வெறுமையாக்குபவர் .
3. ஏற்றுக்கொள்பவர். 
தொண்டனாயிருப்பவர்...
தொண்டன் என்பவன் ஒரு அடிமட்ட நிலை மனிதன் . தனது தலைவன் மற்றும் மக்களைப் பற்றியும் அவர்களின் சூழல் பற்றியும் நன்கு அறிந்தவன். எந்நிலையிலும் தயாராக இருப்பவன் பிறருக்கு உதவ பகிர விருப்பமுடையவன். நல்ல தொண்டனே சிறந்த தலைவனாக முடியும் என்பதை நன்கு  உணர்ந்ததனாலே தான் இயேசு , உங்களில் முதன்மையானவராக இருக்க விரும்புபவர் முதலில் தொண்டராக இருக்கட்டும் என்கிறார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் அப்படி இருந்தும் காட்டினார் தன்வாழ்வினால். நமது வீடுகளில் யார் தலைவர் யார் தொண்டர்.? வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து குடும்பத்தை நிர்வகிக்கும் தாய்மார்கள் ஒரு போதும் தங்களை தலைவர்களாக எண்ணியது கிடையாது. சாதாரண தொண்டர்களிலும் கீழான பணிவிடை புரிபவர்களாகவே தங்களை நினைத்து பணியாற்றுவர். ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் உள்ள நலன் ஏற்றம் இறக்கம் அனைத்தையும் நன்கு அறிந்தவர் அவர் ஒருவரே. அன்னையர்கள் தொண்டர்கள் போல் செயலாற்றும் தலைவர்கள். எனவே தான் இயேசு ஒரு தொண்டனாக இருந்து ,முதன்மை பெற்று பெரியவர்கள் என்னும் நிலையில் நம்மை நிலைத்து நிற்கச் சொல்கின்றார். அடித்தளத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வோம் அப்போது தான் அதன் மேல் எப்படிப்பட்ட கட்டிடம் கட்டலாம் என்பதை உறுதி செய்ய முடியும். தொண்டனாயிருந்து தூய தலைவராக முயல்வோம். 
2. வெறுமையாக்குபவர் .....
 வெறுமையாக்குதல் என்பது ஒன்றுமில்லாமை . வெற்றிடம். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி ஒருவர் வெற்றிடத்தில் புவி ஈர்ப்பு விசை குறித்த சோதனையை நிகழ்த்தினார். முதலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட உயரமான இடத்திலிருந்து ஒரு இரும்புக் குண்டு, மற்றும் ஒரு பறவையினது மெல்லிய இறகு இரண்டையும் மேலிருந்து கீழே போட்டார். இரண்டும் அதன் அதன் எடைக்கேற்ப, இரும்பு விரைவாகவும் இறகு தாமதமாகவும் பூமியை தரையை வந்தடைந்தது. அதன் பின் ஒரு காற்று புகா வெற்று அறையினுள் இரும்பு இறகு இரண்டையும் வைத்து, தன் ஆராய்ச்சியை மீண்டும் துவக்கினார். அறை முழுதும் வெற்றிடம் . காற்று கூட இல்லை அனைத்தும் வெளியேற்றப்பட்டு, வெறுமையின் கூடாரத்தில் சோதனை நிகழ்த்தப்பட்டது. எடையில் வேறுபாடுடைய இரும்பு இறகு இரண்டும் மேலிருந்து கீழே வர ஒரே அளவு நேரம் எடுத்துக்கொண்டன. காரணம் வெற்றிடத்திற்கு தெரியாது எடை . அதைப் பொருத்தவரையில் இரண்டும் ஒரு பொருள் . மேலிருந்து போடப்பட்ட அவை இரண்டும் பூமியை அடைய வேண்டும் என்பது மட்டுமே அதன் இலக்கு. சாதாரண ஒரு இடம் வெற்றிடமாகும் போதே இவ்வளவு மாற்றம் என்றால் நமது மனம் வெற்றிடமாகும் போது நம்மில் எவ்வளவு மாற்றாம் உண்டாகும் என்று சிந்திப்போம் . இத்தகைய ஒரு வெற்றிடம் நமது மனதிலும் தோன்றி ஏற்றத்தாழ்வு பார்க்காது பணிபுரிய இயேசு அழைக்கிறார். நம்மை வெறுமையாக்கி, வெறுமையில் நிறைவு காண அழைக்கிறார்.
3. ஏற்றுக்கொள்பவர்.....
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்பது தமிழ்க்கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள். தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து இட்டு வாழ்பவர்கள் பெரியவர்கள் .பகிர்ந்திடாதோர் எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் போலாவர் என்கிறார். பொருள் இருப்பவன்- இல்லாதவன், உயர்ந்தவன் -தாழ்ந்தவன் என அனைவருமே சமம் என உணர்ந்து ஏற்று வாழும் மனிதர்களே நல்ல தலைவர்கள் பெரியவர்கள் என இயேசு எடுத்துரைக்கின்றார். ஏற்றுக் கொள்ளுதல் மிகவும் முக்கியமான ஒன்று . எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவரவர் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். நான் தான் உங்கள் அனைவரின் தலைவன் என்று வீடு வீடாய் சென்று சொல்ல வேண்டிய தேவை இல்லை மாறாக, உடன் வாழும் மக்களின் தேவைகளையும் அவர்களின் ஏற்ற இறக்கங்களையும் நன்கு அறிந்திருந்து செயல்பட்டாலே போதும். அவர்களே சொல்வார்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் நாம் தாம் அவர்களின் தலைவர் பெரியவர் என்று. 
எனவே அன்பு உள்ளங்களே செய்வதற்கரிய செயல்களைச் செய்யும் பெரியவர்கள் போல் நாம் செயல்பட முயல்வோம். ஏனெனில் சிறியோர் அத்தகைய செய்வதற்கரிய செயல்களை செய்ய மாட்டார். உடலளவில் சிறியவர்களாக இருந்தாலும் உள்ளத்தளவில் பெரியோராக செயல்பட்டு வாழ அருள் வேண்டுவோம். நம்மால் முடிந்த உதவிகளை தொண்டனைப் போல செய்து , நமது பிறப்பிற்கும் இருப்பிற்கும் (வாழ்க்கைக்கும்) அர்த்தம் இருக்கிறது என்று எடுத்துரைத்து வாழ்வோம். நமது இருப்பால் ஒருவர் பயனடைகிறார் என்றால் நாம் பெரியவர்களே. அப்போது நம்மைப் பார்த்து யாராவது நீங்கள்லாம் யாருப்பா பெரிய ஆளுங்க என்றால், மறுக்காமல் சொல்வோம் ஆம் நாங்களும் பெரியவர்களே என்று..... இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.       

எல்லோரும் இறைவாக்கினர்களே


நாம் எல்லோரும் இறைவாக்கினர்கள் என்று கூறி அதன் படி வாழ நம்மை அழைக்கிறது இன்றைய வாசகங்கள் அனைத்தும். இறைவாக்குரைப்பது ஒரு கொடை அதை அனைவராலும் செய்ய முடியாது. இறைவார்த்தையை எவனொருவன் உள் வாங்கி அதை தன் வாழ்வில் செயல்படுத்துகிறானோ அவனே உண்மையான இறைவாக்கினராக இருக்க முடியும். இறைவாக்குரைக்கும் திறன் நம்மில் மறைந்திக்கிறது. நாம் தாம் அதை நம் செயல்களாலும் சொற்களாலும் வெளிப்படுத்தவேண்டும். இதனையே மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இவ்வாறு கூறுவார், "இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது நம் ஒவ்வொருவரின் கைகளில் இருக்கிறது" என்பார். அது உண்மை தான். நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை எது என்பதை கண்டறிந்து அதை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கு உறுதுணையாகவே நமது புலனுறுப்புகள் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய உறுப்புகள் நமது நன்மைக்கு உதவாது நம்மை தீமை செய்யும் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்து விடவும் தயங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. கண் கை கால் இவை மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகள். அதுவும் இன்றைய தலைமுறையினராகிய நமக்கு கண்ணும் கையும் மிக மிக முக்கியம். அலைபேசியில் நம்மை ஐக்கியப்படுத்த...
இன்றைய முதல் வாசகத்தில் நிகழ்வது  போலவே நற்செய்தியிலும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அது நம்மைச்சாராத ஒருவர் நம் பணியைச்செய்கிறார் என்ற புகார். அதற்கு மோயீசனும் இயேசுவும் கூறும் பதில் ஒன்று. நமக்கு எதிராக இராதவர் நமக்கு சார்பாக இருக்கிறார் என்று உறுதி தருகிறார் இயேசு. ஆண்டவரின் மக்கள் அனைவரும் இறைவாக்கினராகும்படி அவர் அவர்களுக்கு தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு என்று எண்ணி மகிழ்கிறார் மோயீசன் . முதல்  இரண்டாம் வாசகத்தில் இறைவாக்குரைக்கும் பணி நற்செய்தியில் பேயோட்டும் பணி என்று அவரவர் பெற்ற கொடைகளுக்கேற்ப இறைப்பணியாற்றுகின்றனர் இறைப்பணி ஆற்றுபவர்களால் தூண்டப்பட்டவர்கள். நாமும் இறைவாக்கினர்கள் என்றால் நமது நற்பணியால் நாம் பிறரை தூண்டி இழுக்க வேண்டும். நமது செயல்பாடுகளால் நாம் பிறரை நற்செயல் செய்ய தூண்டுகிறோமா என்று சிந்திப்போம்.
இறைவன் ஏராளமான அருட்கொடைகளால் நம்மை நிரப்பியுள்ளார் . பேசுதல், பார்த்தல், செய்தல், நடத்தல், உணர்தல், எழுதுதல், வரைதல், பாடுதல், என எல்லாவிதமான செயல்களையும் செய்யும் அளவிற்கு ஆற்றல் தந்திருக்கிறார். இந்த திறன்களின் ஆற்றல் உணர்ந்து நம்மை நாம் வளப்படுத்தி கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது பேசும் திறன். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நமது வார்த்தைகளுக்கு வலிமை உண்டு. அவை நம்மை நல்ல வழிக்கும் இட்டுச் செல்லும், தீய வழிக்கும் இட்டுச் செல்லும். வார்த்தைக்கும் வாழ்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. துறவி ஒருவர் தனது சீடர்களுக்கு வார்த்தையின் வலிமை பற்றி போதனை செய்து கொண்டிருந்தார். வார்த்தை வலிமையானது அதை கவனமாக கையாள வேண்டும். எதை நீங்கள் சொல்கீன்றீர்களோ அதுவாகவே மாறுகின்றீர்கள் எனவே நல்லவற்றை சொல்லுங்கள் நல்லவர்களாக வாழுங்கள் என்றார். சீடன் ஒருவனுக்கு சந்தேகம் எனவே உடனே எழுந்து துறவியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான். குருவே நான் கடவுளாகிறேன் கடவுளாகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் கடவுளாகி விடுவேனா இல்லை. சாத்தானாகிறேன் சாத்தானாகிறேன் என்று சொல்வதனால் சாத்தானாகி விடுவேனா . அதனால் வார்த்தைக்கும் வாழ்வின் செயலுக்கும் சம்மந்தம் இல்லை என்பதே என் கருத்து என்றான். துறவி சற்று நேரம் அமைதியாயிருந்து விட்டு சீடனைப் பார்த்து, முட்டாளே அதிகமாகப் பேசாதே உட்கார் என்றார். முட்டாள் என்ற வார்த்தையைக் கேட்டதும் கோபமடைந்த சீடன் கொதித்தெழுந்து, நானா முட்டாள் , தெளிவான விளக்கம் சொல்லத் தெரியாத நீ தான் முட்டாள் உன்னிடம் சீடனாய் சேர்ந்தது என் தவறு என்று தனது கோபத்தை எல்லாம் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தான். சற்று நேரத்துக்கு பின் துறவி அவனிடம், உன்னை முட்டாள் என்று சொன்னதற்காக என்னை மன்னித்து விடு தெரியாமல் சொல்லி விட்டேன் என்றார். அவரது மன்னிப்பு என்ற வார்த்தையைக் கேட்டதும் சீடனும் தன் தவறினை உணர்ந்து அமைதியானான். துறவி, வார்த்தைக்கு வலிமை உண்டு அது நம் வாழ்வின் செயல்பாடுகளை மாற்றும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டீர்களா? முட்டாள் என்று சொன்னதும் வந்த கோபம் மன்னித்துவிடு என்றதும் மறைந்து விட்டது கவனித்தீர்களா? என்றார். எனவே தான் சொல்கிறேன் வார்த்தை வலிமையானது என்றாராம்.
பலநேரங்களில் நமது வாழ்க்கையையும் நமது வார்த்தைகள் தான் தீர்மானிக்கின்றன. நாம் தான் அதை கண்டுணர்வதில்லை. நமக்கு வாழ்வை கொடுப்பதும் நம் வாழ்வைக் கெடுப்பதும் நம் வார்த்தைகள் தான். நமது நல்ல வார்த்தைகளினால் செல்வங்களான விலையுயர்ந்த ஆடை,பொன் வெள்ளியையும் பெருக்கிக் கொள்கிறோம். நமது தீய வார்த்தைகளினால் அவற்றை மக்கிப் போக அரித்துப் போக,துருப்பிடிக்கச்செய்கிறோம். வார்த்தைகளில் கவனம் செலுத்துவோம். வளமாக வாழ்வோம். பெரும்பாலும் நமது வாழ்வின் சிக்கல்களுக்கு காரணம் நமது வார்த்தைகள் தான் தகுந்த நேரத்தில் சொல்லாமல் விட்ட வார்த்தைகளும், தேவை இல்லாத இடத்தில் சொல்லிவிட்ட வார்த்தைகளும் தான். ஒரு தவறு நடந்தால் முதலில் பிழைகளை நம்மிடம் இருந்து தேடுவோம். பிறரில் தேடத்துவங்கினால் மீண்டும் தவறுகள் பெரிதாகும் சூழல் ஏற்படும். பிள்ளைகள் வைத்திருக்கும் அலைபேசி பழுதனால் பிள்ளைகளால் தான் அவ்வாறு ஆனது என்று குழந்தைகளை திட்டுகிறோம். அதே பிள்ளைகள் படிக்காமல் போனாலோ காதல் வயப்பட்டு பழுதானாலோ அலைபேசியால் தான் அவ்வாறு ஆனார்கள் என்று அலைபேசியைத் திட்டுகிறோம். தவறை நம்மிடம் இருந்து களைய முற்படுவோம். அன்பான வார்த்தைகளினால் அனைவரையும் கவர முயல்வோம். நமது இறைவாக்குப் பணியை நம் இல்லத்தில் இருந்து தொடங்குவோம். சிறு துளி பெரு வெள்ளம். சிறு கனல் பெரு நெருப்பு என்பதை உணர்ந்து செயலாற்றுவோம். எனவே அன்பு உள்ளங்களே நாம் அனைவரும் இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. இறைவாக்கினர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை உணர்வோம். எதிர்கால இறைவாக்கினர்கள் அல்ல நிகழ்கால இறைவாக்கினர்கள். எனவே நம் குரலை இரக்கத்துக்காகவும், காதுகளை கருணைக்காகவும், கைகளைக் கொடைகளுக்காகவும் மனதை உண்மைக்காகவும் கொடுத்து வாழ்வோம். நமது இறைவாக்குப் பணியால் பிறரையும் நற்செயல் செய்யத் தூண்டுவோம். வரலாற்றின் பக்கங்களில் நமது பக்கத்தை அலங்கரிக்க அழகான செயல்களை அன்பாக செய்ய தொடங்குவோம் இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.  

Sunday, 16 September 2018

நீ யா(ர்)???!!!


நீ யா!!! என்று கேட்ப‌த‌ற்கும் நீ யார் என்று கேட்ப‌த‌ற்கும் ஏராள‌மான‌ வித்தியாச‌ங்க‌ள் உண்டு. முன்னைய‌து ஆச்ச‌ரிய‌த்தினாலும் ப‌ய‌த்தைனாலும் கேட்ப‌து. (நீ யா!!! என்று ஆச்ச‌ரிய‌த்திலும் கேட்க‌லாம். வெறுப்பிலும் கேட்க‌லாம். ) நீ யா....... இர‌ண்டாவ‌து ஒருவ‌ரைப் ப‌ற்றி தெரிந்து கொள்வ‌த‌ற்காக, நீ யார் ??? என்று கேள்வி கேட்ப‌து. இந்த‌ இர‌ண்டு கேள்வியையும் ப‌ல‌ முறை நாம் ந‌ம‌க்குள்ளும் பிற‌ர் ந‌ம்மிட‌மும் கேட்காம‌ல் இருப்ப‌தனால் தான் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள். இத‌னையே ந‌ம‌து முன்னோர்க‌ள் நாம் யார் என்று அறிந்து கொள்ளாத‌தே எல்லா பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் மூல‌ கார‌ண‌ம் என்ப‌ர். ந‌ம்மிட‌ம் யாராவ‌து வ‌ந்து நீங்க‌ யாரு? என்று கேட்டால் உட‌னே நாம் சொல்வ‌து ந‌ம‌து பெய‌ர். பெய‌ர் தான் நீயா உன் பெய‌ர் கொண்ட‌ ப‌ல‌ரை நான் பார்த்திருக்கிறேனே என்றால் உட‌னே வேலை அல்ல‌து இருக்கும் இட‌ம் கூறுவோம். அதையும் மீறி ஏதாவ‌து கேட்டால் இன்னாருக்கு இன்ன‌ உற‌வின் முறை என்று கூற‌ ஆர‌ம்பிப்போம். மொத்த‌த்தில் நாம் யார் என்று ந‌ம‌து புற‌ செய‌ல்பாடுக‌ளைச் சொல்லி விள‌க்க‌ அதிக‌ முய‌ற்சி செய்வோம். இதை விடுத்து யாரும் நான் அன்பான‌வ‌ள், இர‌க்க‌ குண‌ம் மிக்க‌வள், பிற‌ருக்கு உத‌வுப‌வ‌ள் என்று சொல்வ‌தில்லை மாறாக‌ அப்ப‌டிச் சொல்வோமானால் ஏதோ வேற்று கிர‌க‌ வாசிக‌ளைப் பார்ப்ப‌து போல‌ நம்மை மேலே கீழே பார்த்து செல்வ‌ர். 
இன்றைய‌ முத‌ல் வாச‌க‌த்தில் எசாயா இறைவாக்கின‌ர் துன்புறும் ஊழிய‌ர் யார் என்று ,அவ‌ர‌து புற‌ அடையாள‌ங்க‌ளை வைத்து எடுத்துரைக்கின்றார். அவ‌ர் ந‌ன்மைக்காக‌ துன்புறும் ந‌ல்லாய‌ன், அநியாய‌த்துக்காக‌ போராடும் அன்புருவ‌ம், நிந்த‌னை அவ‌மான‌ங்க‌ளையும் பொறுமையோடு ஏற்கும் பேராள‌ன், என்று ப‌ல‌ நிலைக‌ளில் ஊழிய‌ராம் இயேசுவை, அவ‌ர்த‌ம் வாழ்வை வெளிப்ப‌டுத்துகிறார். அவ‌ரைப் பின்ப‌ற்றும் சீட‌ர்க‌ளாகிய‌ ந‌ம‌தின் உருவ‌ம் எத்த‌கைய‌து என்ப‌தை க‌ண்டுண‌ர‌ இன்றைய வாசக‌ங்கள் வ‌ழி ந‌ம‌க்கு அறிவுறுத்துகின்றார். 
இன்றைய‌ இர‌ண்டாம் வாசக‌த்திலோ செய‌லற்ற‌ ந‌ம்பிக்கை செத்த‌ ந‌ம்பிக்கை எனவே நீங்க‌ள் செய‌ல் வீர‌ர்க‌ள் என்ப‌தை உங்க‌ள‌து செயல்க‌ளில் காட்டுங்க‌ள் என்று அக‌த்தில் (எண்ண‌த்தில் செய‌லில்) நாம் யார் என்ப‌தை வெளிப்ப‌டுத்த‌ அழைப்புவிடுக்கின்றார் புனித‌ ப‌வுல‌டியார். இதை இர‌ண்டையும் த‌ன் வாழ்வில் இணைத்து தான் யார் என்ப‌தை தானும் வாழ்ந்து காட்டி ,ந‌ம்மையும் அது போல‌ வாழ‌ அழைக்கின்றார் இயேசு. 
தான் யார் என்று த‌ன்னை ந‌ன்கு அறிந்த‌ இயேசு த‌ன்னைப் போல‌வே த‌ன்னைப் பின்ப‌ற்றுகிற‌வ‌ர்க‌ளும் புரிந்து வைத்திருக்கின்றார்க‌ளா என்று அறிந்து கொள்ள‌ இந்த‌ கேள்வியை முன்வைக்கின்றார். நான் யார் என்று ம‌க்க‌ள் சொல்கிறார்க‌ள் ??? மூன்று வித‌மான‌ ப‌தில் அவருக்கு சீட‌ர்க‌ள் வ‌ழி கிடைக்கின்ற‌து. திருமுழுக்கு யோவான் , எலியா, இறைவாக்கின‌ருள் ஒருவ‌ர்.
திருமுழுக்கு யோவான் ; 
அதிகார‌த்தோடு போதித்த‌வ‌ர், எளிய‌ வாழ்வு வாழ்ந்த‌வ‌ர், ம‌க்க‌ளின் ம‌ன‌மாற்ற‌த்திற்கு வ‌ழிவ‌குத்த‌வ‌ர். இயேசுவும் அதிகார‌த்தோடு போதித்தார், எளிமையான‌ வாழ்வு வாழ்ந்தார், போத‌னைக‌ளின் வ‌ழி ம‌க்க‌ளை ம‌ன‌மாற்ற‌ம் அடைய‌ச் செய்தார். 
எலியா;
க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைக‌ளை அப்ப‌டியே க‌டைபிடித்த‌வ‌ர், பாலைவன‌த்துக்கு போ காக‌ம் உன‌க்கு உண‌வு த‌ரும் ஓடையில் நீர் அருந்துவாய் என்ற‌வுட‌ன் உட‌னே கிள‌ம்பிய‌வ‌ர், இர‌க்க‌ குண‌ம் கொண்டு சாரிபாத் ஏழைக் கைம்பெண்ணின் இற‌ந்த‌ ம‌கனை‌ உயிர்ப்பித்த‌வ‌ர். அவ‌ர்க‌ளின் ப‌ஞ்ச‌ம் தீர்த்த‌வ‌ர். இயேசுவும் பாலைவ‌ன‌த்துக்கு க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைப்ப‌டி சென்றார். நயீன் ஊர் வித‌வை ம‌க‌னுக்கு மீண்டும் உயிர் கொடுக்கின்றார். ஏழை ம‌க்க‌ளின் ப‌சித்துய‌ர் போக்குகின்றார். 
இறைவாக்கின‌ருள் ஒருவ‌ர்; 
திடீரென்று தோன்றிய‌வ‌ர்க‌ள், கட‌வுள் சொல்வ‌தை அப்ப‌டியே நிறைவேற்றுகின்ற‌வ‌ர்க‌ள், இக்க‌ட்டிலிருந்து மீட்க‌ க‌ட‌வுளால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இயேசுவும் நாச‌ரேத் என்னும் ஊரிலிருந்து திடீரென்று த‌ன் ப‌ணியைத் துவ‌ங்கிய‌வ‌ர். க‌ட‌வுளின் திட்ட‌த்தை நிறைவேற்றிய‌வ‌ர், இக்க‌ட்டிலிருந்து ம‌க்க‌ளை மீட்டு புது வாழ்வு த‌ருப‌வ‌ர். இப்ப‌டியாக‌ இயேசுவையும் அவ‌ர‌து குண‌ந‌ல‌ன்களையும் முன்ன‌ர் இருந்த‌வ‌ர்க‌ளின் குண‌ந‌ல‌ன்க‌ளுட‌ன் ஒப்பிட்டு மீண்டும் ஒரு இறைவாக்கின‌ர் ந‌ம்மிடையே தோன்றிவிட்டார் என்று ம‌கிழ்ந்த‌ன‌ர். இயேசுவிற்கு இப்ப‌திலில் திருப்தி இல்லை .(அதுக்கும் மேலே) இதைவிட‌ மேலான‌ ஒரு ப‌திலை , தான் த‌ன்னைப் ப‌ற்றி நினைத்து வைத்திருந்த‌ ஒன்றை எதிர்பார்த்து நேர‌டியாக‌ சீட‌ர்க‌ளிட‌ம் கேட்கின்றார். ச‌ரி நீங்க‌ள் என்னை யாரென்று சொல்கின்றீர்க‌ள் என்று . அத‌ற்கு பேதுரு நீரே மெசியா என்கிறார். தான் எதிர்பார்த்த‌ ப‌தில் த‌ன் மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து வ‌ந்த‌தும் ம‌கிழும் ஆசிரிய‌ர் போல‌ ம‌கிழ்வ‌டைகின்றார் இயேசு. இயேசுவிற்கு முன் தோன்றிய‌ அனைத்து இறைவாக்கின‌ர்க‌ளின் ஒட்டு மொத்த‌ மைய‌ம் தான் ,மெசியா என்னும் இயேசு என்ப‌தை அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்கு அறிவுறுத்துகின்றார். உயிரோடு இருக்கும் போதே தான் இற‌ந்த‌ பின் எப்ப‌டி அட‌க்க‌ச்ச‌ட‌ங்கு ந‌ட‌த்த‌ வேண்டும் என்று உயில் எழுதும் ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் இயேசு வித்தியாச‌மாக‌ சிந்திக்கிறார். 
த‌ன‌து சாவைப் ப‌ற்றி தெளிவாக‌ எடுத்துரைக்கின்றார். 
இயேசுவின‌து வாழ்வில்  நீர் யார் ??? என்ற‌ கேள்வியும் நீ யா!!! என்ப‌தும் மாறி மாறி கேட்க‌ப்ப‌ட்ட‌ ஒன்று. நீர் யார் என்று பிலாத்து கேட்டு யூத‌ர்க‌ளின் அர‌ச‌ன் என‌ க‌ண்டு கொள்கிறான். நீ யா!!! என்னை விட்டு அக‌ன்று போ என்று கூறிய‌ இலேகியோன் என்னும் பேய் பிடித்த‌வ‌ன் ந‌ல‌ம் அடைகிறான்.  இதே கேள்வியை நாமும் இயேசுவைப் பார்த்துக் கேட்ப‌வ‌ர்க‌ளாவோம்.  ந‌ம் அர‌ச‌ரைக் க‌ண்டு கொள்வோம். ந‌ம் உள்ள‌ ந‌ல‌ன் பெற்று குண‌ம‌டைவோம். நீ யார் என்று ந‌ம்மை பார்த்து கேட்ப‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம‌து செய‌ல்க‌ளால் ந‌ல்ல‌ ப‌தில‌ளிப்ப‌வ‌ர்க‌ளாவோம் . சிறு மெசியாக்க‌ளாக‌ வ‌ள‌ர‌, திருமுழுக்கு யோவானிட‌ம் உள்ள‌ துணிவையும், எலியா இறைவாக்கின‌ரிட‌ம் இருந்த‌ இர‌க்க‌ குண‌த்தையும் இறைவாக்கின‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ ந‌ல்ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் குண‌த்தையும் பெற்று வாழ்வோம். நீ யா !!! என்று ந‌ம்மைப் பார்த்து பிற‌ர் ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் அள‌விற்கு வாழ்ந்து காட்டுவோம். இறைய‌ருள் என்றும் ந‌ம்மோடும் ந‌ம் குடும்ப‌த்திலுள்ள‌ அனைவ‌ர் மீதும் நிலைப்ப‌தாக‌ ஆமென் 
நீ யார்??? ஓஓஓ நீ யா!!!  

Wednesday, 12 September 2018

செப்டம்பர் 15 வியாகுல மாதா திருவிழா


தனயனின் கனவை நனவாக்க , தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, தன்னையே அர்ப்பணித்த தாயே உம்மை வாழ்த்தி வணங்குகிறோம் 
தந்தை மகன் தூய. ....
இறைக்கே இணையாகி, வானிற்கு நிகராகி பேரன்பிற்கு இலக்கணமாக திகழும் தாயாம் மரியாளைப் போற்றி புகழும் நாளும் வேளையுமிது. தாயின் அன்பை விவரிக்காத கவிஞர்களும் இல்லை. கவிதைகளும் இல்லை. தாயானவள் நம் விழிகளால் பார்த்து, இதழ்களால் சிரித்து, இமைகளில் உறங்கி, ஈடில்லா வெற்றியை நமக்கு தருபவள். நம் வெற்றியில் களித்திட, தோல்வியில் துவண்டிட, உயிரினில் கலந்திட, உதிரத்தைத் தந்தவள். இப்படி நம் இன்பத்தைப்பெருக்கி, இன்னலைத் தீர்த்திடும் தாயின் திருநாளைக் கொண்டாட அவர் தம் பிள்ளைகளாகிய நாம் ஒன்றாகக் கூடி இருக்கின்றோம். 
இந்த மகிழ்வென்னும் மங்களநாளில் வீரத்தாயின் புதல்விகள் நாம் எனும் பூரிப்பில் பெருமிதம் கொள்வோம். நம் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க, ஒளி கொண்டு நம் வாழ்வை மெருகேற்றுவோம். நம் கைகளில் தாங்கியுள்ள இந்த ஒளி இருளை அகற்றி வெளிச்சம் கொடுப்பது போல நாமும் நமது பிறரது துன்ப துயர இருளை அகற்றி, நம்பிக்கை என்னும் ஒளி கொடுப்பவர்களாக வாழ அருள் வேண்டி பவனி செல்வோம். அன்னைக்கு முடி சூடி அழகுபார்த்து மகிழ மணிமுடியையும் மாலையையும் பவனியாக ஒளி வெள்ளத்தில் ஆலயத்திற்குள் எடுத்துச்சென்று அன்னையின் மகிழ்வில் நாமும் இணைவோம்.  
(பாடல் அல்லது நாதஸ்வர இசை)
வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு அளந்த கருணை, வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபி- தாய். அத்தகைய தாயாம் அன்னை மரியாளின் வியாகுலத்தை ,வியாகுல வீரத்தைக் கொண்டாடும் நாள் இந்நாள். இந்நாளில் நம் அன்னைக்கு மணிமுடி சூட்டி மகிழ்வோம். மன்னர்கள் ராஜாக்கள் மணிமுடி சூடுவர். தன் நாட்டில் விளைந்த விலையுயர்ந்த கற்கள் மணிகளை, தங்க வைரத்தால் இழைக்கப்ப்பட்ட ஆபரணத்தில் பொருத்தி அதை அனைத்து மக்கள் முன்னும் தன் தலையில் சூடி அனைத்திற்கும் அனைவருக்கும் பொறுப்பேற்பர். இதனால் தனக்குக் கீழ் உள்ள அனைத்து மக்களின் அதிகாரத்திற்கும் பொறுப்பிற்கும் உரிமையாளராவர். நமது தாய் அன்னை மரியாளோ, நம் அனைவருக்கும் அரசி. வெற்றி என்னும் வியாகுலங்களை தன்னகத்தேக் கொண்ட பேரரசி. நம்மை ஆண்டு வழி நடத்தும் உரிமை, அதிகாரம் பெற்றவர். நாம் அவர் வழி நடக்கும் ஊழியர்கள், பிள்ளைகள், வழித்தோன்றல்கள். இந்நேரத்தில் நம் மகிழ்வென்னும் கற்கள் மணிகளை, நல் உணர்வென்னும் தங்க வைர ஆபரணத்தில் பதித்து நம் அன்னையாம் அரசிக்கு மணிமுடி சூட்டி மகிழ்வோம். அரசியாம் அன்னைக்கு நாம் அனைவரும் அவர் தம் ஊழியர்களாக என்றும் வாழ்வோம் என்று உறுதி கூறுவோம். 
மலர்கள் மணம் பரப்பி மனதை மயக்குதல் போல நம் உடலும் அன்னை மரியின் அருளினாலும் அழகு பண்பினாலும் மயங்க மகிழ அருள் வேண்டி அன்னைக்கு மணி முடி சூட்டி மகிழ்வோம். நம் மகிழ்வினைத் தெரிவிப்போம். 
( மங்களம் மங்களம் அல்லது பொருத்தமான பாடல். )
செப்டம்பர் மாதம் என்றாலே நமக்கும் நம் சபைக்கும் மிகவும் முக்கியமான மாதம் ஏனெனில் நம் தாயாம்  புனித வியாகுல அன்னையின் வியாகுலங்களைத் தியானிக்கும் மாதம் . அதிலும் சிறப்பாக இன்று மகிழ்வின் உயர்விற்கு உயர்வு சேர்க்கும் உன்னதமான நாள். செப்ட்ம்பர் மாதத்தின் முத்தான நாள். ஆம் அன்னையின் வியாகுலத்தின் திருநாள். வெற்றிகளை அள்ளித்தரும் வீரத்திருநாள். அன்னையின் வியாகுலம், வீரம், முழுமை இவற்றைப் பற்றி தியானித்து, இறை அருளில் மூழ்கி முத்தெடுக்க நம்மையே ஆயத்தப்படுத்தும் நாள். இந்நாளில் தன்னையே வெறுமையாக்கி ஊழியரின் வேடமேற்ற கிறிஸ்துவை பின்பற்றி, தன்னையே இறையடியாராக இனம் காட்டிய நம் தாய் மரியாளை பார்த்து பழக நாம் அழைக்கப்படுகிறோம். அழைக்கப்பட்டதன்படி வாழ்வதே நம் சபை வாழ்வின் சிறப்பு நிலை. மரியின் ஊழியர் குடும்பத்திலுள்ள நம் ஒவ்வொருவரின் ஆசை, நம் அன்னையும் அரசியுமான மரியாளைப் போன்று நாமும் ஆண்டவரின் ஊழியராக உருவாக வேண்டும் என்பதே. எனவே நாம் விரும்பி அடைய எதிர்நோக்கும் நிலையின் அழகிய உருவை மரியாளில் கண்டு முழுமையின் நிறைவாம் நம் அன்னையை போல நாமும் மாற அருள் வேண்டி இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.  வழி நூல் .....
எல்லாத் துன்பங்களும் வியாகுலங்கள் அல்ல. நமது தவறுகளால் வரும் துன்பங்களும், குறையுள்ள மனிதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் பழகும்போது ஏற்படும் மன வேதனைகளும் வியாகுலங்கள் ஆகாது. மாறாக தன்னல தளைகளிலிருந்து விடுபடும்போது, பிறர் நல் வாழ்வு பெற உழைக்கும் போது, இறைவன் தனக்கு கொடுத்த அழைத்தல் ,பணி இதுதான் என ஒன்றை உய்த்துணர்ந்து பற்றுறுதியுடன் வாழ்ந்து செயல்படும் போது ஏற்படும் துன்ப துயரங்களே, வியாகுலங்கள் ஆகும். அவ்வகையில் நம் தாய் மரியாள் பெற்ற வியாகுலங்களைக் கொண்டாட மூன்று காரணங்கள் உண்டு. 
1. மீட்கும் திருவுளத்திற்கு தன்னைக் கையளித்தது. 
2. மீட்பராகிய இயேசுவுடன் அவர் கொண்டிருந்த இணைபிரியா உறவு.
3. மக்களாகிய நம் மேல் கொண்டிருந்த தாய்மை உணர்வு.
எனவே அன்னை மரியாளின் அடிச்சுவட்டை பின்பற்றும் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போல இறைத்திருவுளத்திற்கு நம்மை கையளிக்கக் கூடியவர்களாய் வாழ அருள் வேண்டுவோம். இயேசுவின் மீது இணைபிரியா அன்பு கொண்டிருக்கவும். நமது செயல்களில் அன்னையின் தாய்மை பண்பு மிளிரவும் அருள் வேண்டுவோம்.
பாடல்)
நம் தாய் மரியாள் பட்ட துன்பங்கள் வியாகுலங்கள் ஏழு என்று நமது திருச்சபை கூறுகிறது. ஆனால் உண்மையில் பட்ட துன்பங்கள் ஏராளம் சந்தித்த இடர்கள் தாராளம். துன்பத்தைக் கூட அன்னை மரியாள் முழுமையாக அனுபவித்தார் என்பதற்காக கூட ஏழு என்ற எண்ணை பயன்படுத்தி இருக்கலாம். முழுமையின் தாய் இன்பத்தை மட்டுமல்ல துன்பத்தையும் முழுமையாக அறிந்தவர். தான் சந்தித்த ஒவ்வொரு வியாகுலத்திலும் தன்னை ஒரு நிலையில் நிறுத்தி அந்நிலையை நமக்கும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றார். 
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் என்பதில் எதிர்காலத்தைப் பற்றிய அபய நிலை (  
இரவிலேயே எகிப்துக்கு புறப்பட்டு போ என்பதில் அகதிகளின் நிலை. 
குழந்தையைக் காணாது தேடுதலில் தனையனை இழந்த தாயின் நிலை. 
சிலுவைப்பாதையில் மகனை சந்தித்தலில் கண்ணீரால் துணிவூட்டும் மக்கபேயர் தாயின் நிலை.
சிலுவையடியில் நிற்கையில் துன்பத்திலும் துணிவோடு நிற்கும் தாயின் நிலை. 
மரித்த மகனை மடியில் சுமக்கையில் வாழ்வே இருண்ட நிலை.
கல்லறையில் அடக்கம் செய்கையில் தனிமையில் தவிக்கும் கையறுநிலை. 
இப்படியாக ஏழு வியாகுலங்களிலும் தன் நிலையில் தான் நின்று அந்த துன்பங்களை எல்லாம் நமக்கு மீட்பாக மாற்றிக் கொடுக்கிறார். அவர் உள்ளத்தைத் தைத்தது துன்பம் தரும் அம்புகள்,  வாள்கள் அல்ல. மாறாக அவைகள் மண்ணை ஊடுறுவிச்சென்று அவற்றை வளப்படுத்தும் உரங்கள் என்று நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே இந்நேரத்தில் அன்னையின் நாமம் தாங்கிய நம் சபை சகோதரிகளாகிய நாம் அனைவரும் துன்பத்தில் தாராள மனம் கொண்டு துணிவுடன் வாழ சிறப்பாக செபிப்போம். துன்புறும் மக்களுக்கு துணிவுடன் பணி செய்ய அருள் வேண்டுவோம். (கேரளா மக்கள் தமிழ் மக்கள் நம் சபை உள் நாடு வெளி நாடு ) எனவே இந்நேரத்தில் வியாகுலங்களை மீட்பாக மாற்றி அன்னை நமக்கு தரும் இறைவார்த்தைகளை அன்புடன் பெற்றுக் கொள்வோம். பாடல் இறைவார்த்தைச் சீட்டு பகிர்தல் 
எப்போதும் கொடுப்பவரின் நிலையில் இருப்போம் நம் தாய் மரியாளைப் போல, பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் கொடுப்போம். எலிசபெத் அம்மாளுக்கு உதவினார் எதையும் எதிர்பார்க்காமல். கானாவூரிலே கல்யாணத்தில் உதவினார் கடுகளவும் பயன் எதிர்பாராமல். இப்படி வாழ்நாள் முழுவதும் உதவி செய்து பலனை எதிர்பாராது கொடுப்பவர் நிலையில் இருந்து உயர்ந்தார். நாமும் அந்நிலைக்கு மாற முயற்சிப்போம். நமது அன்பை, சேவையை, உதவியை இரக்கத்தை என அனைத்தையும் சிறிது என்று எண்ணாமல் நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து வாழ்வோம். இலவசமாகப் பெற்றுக் கொண்டீர்கள் இலவசமாகக் கொடுங்கள் என்பதற்கேற்ப அனைத்தையும் கொடுப்பவர்களாவோம். இதனால் சொல்லால் விளக்க முடியாத விவரிக்க முடியாத அன்பின் சாரமாக விளங்குபவர் இறைவன் ஒருவரே என்பதை நமது வாழ்வாலும் சொல்லாலும் உணர்வோம். முழுமையின் நிறைவான நம் தாய் மரியாள் நம்மையும் முழுமையடைச்செய்வார் என்ற நம்பிக்கையில் விண்ணகத்தந்தை  அருள் வேண்டி இயேசு கற்பித்த செபத்தை ஒருமித்து சொல்வோம் 
விண்ணகத்திலிருக்கின்ற/........
உன்னைக் கொடு உலகை வெல்வாய், உன்னை இழ எல்லோர் உள்ளத்திலும் வாழ்வாய் என்ற மொழிக்கேற்ப வாழ்ந்து சிறக்க இறையருளால் என்று நிறைந்து நிலைத்து வாழ இறையாசீர் என்றும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துவதாக ஆமென்.   

Thursday, 6 September 2018

தாய்மையின் தாய் பிறந்த தினம்.

                      அன்னை மரியின் பிறப்பு விழா.
               தாய்மையின் தாய் பிறந்த தினம். 
          மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா ம. ஊ. ச.
எதைப் பற்றி வேண்டுமானாலும் திட்டவட்டமாக சொல்லிவிட முடியும். ஆனால் தாயின் அன்பை பற்றி முழுமையாக விவரிக்க வார்த்தைகளே கிடையாது. கடலின் ஆழம், கோபுர உயரம், மலையின் அகலம், இது அனைத்திற்கும் ஏதாவது ஒன்று ஈடு / நிகர் இருக்கும். ஆனால் தாயின் அன்பிற்கு நிகர் / ஈடு எதுவுமில்லை. தாய்மையின் மேன்மை குறித்து பலரும் பல கருத்துக்களை கூறியுள்ளனர். கவிஞர் திருவிக.
உலகெல்லாம் உதுப்பிடம் தாய்மை,
உதித்து தங்கி ஓங்குமிடம் தாய்மை,
கலையின் மூலம் கமழுமிடம் தாய்மை, என்று பாடியிருக்கிறார்.
வீரமாமுனிவர், உருவிலான் உருவாகி உலகில் ஓர் மகன் உதிப்ப,
கருவிலான் கருத்தாங்கி கன்னித்தாய் ஆயினயே என்று அன்னை மரியின் தாய்மையைப் பற்றி பாடுகிறார். இத்தகைய தாய்மையின் பிறப்பிடமான அன்னையின் பிறப்பு விழாவையே நாம் இன்று கொண்டாடுகிறோம். அன்னை மரியின் பிறப்பு விழா நாளான இன்று அவரின் மூன்று பண்புகள் வழி அவரைப் போல் வாழ அழைப்புவிடுக்கிறார்.
1. தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.
2. கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றியவர்.
3. தாயாவதற்காக தரணி வந்தவர்.

 1.தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.:
      வீட்டின் மூத்த  குழந்தைகள் மேல் பெற்றொருக்கு எப்பொழுதும் தனிப்பட்ட அக்கறை , பாசம், கவனம் இருக்கும். ஏனெனில் தம்பதியர்களாகிய அவர்களுக்கு பெற்றோர்கள் என்னும் பெரும் பேற்றினைத் தந்தது அந்த முதல் குழந்தை தான். அதிலும் நீண்ட வருடம் கழித்து பிறந்த குழந்தையாய் இருந்தால் சொல்லவே வேண்டாம். மொத்த பாசமும் அதன் மேல் தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் மரியாள், அன்னா சுவக்கீன் என்னும் வயது முதிர்ந்த தன் பெற்றோருக்கு மகளாய்ப் பிறந்து, அவர்களின் புத்திர சோகத்தைத் தீர்க்கின்றார். இதுவரை பிறரால் மலடி என அழைக்கப்பட்டு வந்த அன்னாள், தாய் என்னும் உயரிய மதிப்பினைப் பெற காரணமாகிறார் அன்னை மரியாள்.  பிறரது ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் தூற்றுதலுக்கும் உள்ளான அன்னாள், இன்று பிறரால் ஆச்சரியமாக மகிழ்வாக, விரும்பி பேசப்படும் ஒரு நபராக மாற காரணமாயிருக்கிறார் அன்னை மரியாள். எத்தனையோ பேருக்கு அன்னாள் தனது வாழ்நாளில் பிற பெண்களின் பிரசவ காலத்தில் உறுதுணையாய் இருந்திருப்பார். இன்று தான் அன்று செய்த நற்செயல்களுக்கான கைம்மாறை பெற காத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளாக மாறி இருக்கின்றார். அன்னை மரியாள் பிறப்பின் போதே பலருடைய இன்னல்களைப் போக்கி இனிமையைக் கொண்டு வந்திருக்கிறார். நாம் அன்னை மரியாள் போல என்றாவது செயல்பட்டிருக்கிறோமா சிந்திப்போம். பிறரை மகிழ்விக்கும் ஒரு நபராக, பிறரின் மகிழ்விற்கு காரணமாக இருப்பவராக இருக்க முயல்வோம். பிறரின் இன்னல் நீக்கி இனிமை சேர்ப்பவர்களாவோம்.
ஆச்சரியக் குறியைக் கேள்விக் குறியாக்கியவர்.:
     முதிர் வயதினருக்கு மகிழ்வே, தன் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் உடன் இருப்பும் உறவும் தான். அவர்களது எதிர்காலமே, குழந்தைகளின் வாழ்வும் வளர்ச்சியும் தான். அவர்களது சிறு சிறு அசைவிலும், சொல்லிலும், செயலிலும் உலகத்தையும் தன்னையும் மறந்து மகிழ்வடைவர். அத்தகையதொரு எல்லையில்லா மகிழ்வை அன்னாள் சுவக்கீன் என்னும் தன் பெற்றோருக்கு கொடுக்கின்றார் அன்னை மரியாள். தங்களது வாழ்வு இப்படியே முடிந்து விடுமோ என்று எண்ணி ஏங்கியவர்களுக்கு புது வாழ்வாய் உதயமாய் பிறக்கின்றார். பெரியவர்களின் எதிர்கால வாழ்வு பற்றிய கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றி மகிழ்வு தருகின்றார். அன்னை மரியாள். நாம் என்றாவது கேள்விக்குறியாக இருப்பவர்களின் வாழ்வை ஆச்சரியக் குறியாக மாற்றி இருக்கின்றோமா? அதாவது, பிறரின் வாழ்விற்கு வளம் சேர்த்த நாட்கள் நேரங்கள் உண்டா? என சிந்திப்போம். குறைந்த பட்சம் ஆச்சரியக்குறியுடன் (மகிழ்வுடன் ) வாழ்பவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக ( குழப்பமாக ) மாற்றாதிருக்க முயல்வோம். பெரியவர்களோ சிறியவர்களோ அவர்களின் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்கும் காரணிகளாக வாழ முயல்வோம்.
தாயவதற்காக தரணி வந்தவர்:
      நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல நாம் வாழ்கிறோமா என்றால் அது யோசிக்க வேண்டிய ஒரு விசயம். ஆனால் அன்னை மரியாளின் பிறப்பிற்கு காரணம் அவர் இறைமகனின் தாயாக வேண்டும் என்ற ஒரு காரணமே. நான் மருத்துவராவேன் பொறியியலாளராவேன் விஞ்ஞானியாவேன் என்று சிறு வயதில் சொல்லித் திரியும் குழந்தை, காலப் போக்கில் அதை மறந்து விடும். ஒவ்வொரு முறையும் யார் அதன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்களோ அவராக மாறவேண்டும் என முடிவு செய்யும். அதையே பிறரிடம் வெளிப்படுத்தவும் செய்யும். உதாரணத்திற்கு தன் அம்மா அப்பா போல,தன் உறவினர்கள் போல, தான் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் கதை மாந்தர் போல என் தன் முடிவை மாற்றிக் கொண்டே இருக்கும். இறுதியில் தனக்கென்று ஒரு துறையை, வளர்ந்த பின் தேர்ந்தெடுத்து அதுவாக மாற முயற்சிக்கும். ஆனால் அன்னை மரியாள் அப்படியில்லை. சிறுவயது முதலே இறைவனின் தாயாகும் நிலைக்கு தன்னை தகுதிப்படுத்துகிறாள். அவர் அறியாமலேயே அப்பண்பு அவரை அந்நிலைக்கு உயர்த்துகிறது பிறக்கும் போதும் வளரும் போதும் வளர்ந்த பின்பும் என எல்லா நேரத்திலும் இறைவனின் தாயாகவே உருமாறுகிறார். நமது பிறப்பின் நோக்கம் என்ன? நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள இறைத்திருவுளத்தை நாம் நிறைவேற்றுகின்றோமா? சிந்திப்போம். எனவே அன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அன்னையைப் போல துன்புறும் மனிதர்களுக்கு தூய மகிழ்வைத் தருபவர்களாவோம். எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கங்களுடன் காத்திருப்பவர்களுக்கு விடைதரும் விழுதுகளாவோம். பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து செயல்படும் செயல் வீரர்களாகத்திகழ்வோம். அன்னையின் பண்பில் மிளிர்ந்து அவரைப் போல வாழ முயற்சிப்போம். இறையாசீர் என்ன்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.
மீக்கா; 5:2-5
உரோமையர்: 8: 28-3-
மத்தேயு : 1: 1-16,18-23

Saturday, 1 September 2018

நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா?


இம்மாதிரியான கேள்வியை எல்லோராலும் கேட்க முடியாது. அளவுக்கதிகமாக அன்பு செய்பவர், அன்பு செய்யப்படுவரால் மட்டுமே இக்கேள்வியைக் கேட்க முடியும். இதுவரை உடன் இருந்த இவர்கள் இனி தனிமையை நமக்கு பரிசாக தந்து விடுவார்களோ என்ற பயம் ஏக்கம் இருப்பவர்கள் இம்மாதிரியானக் கேள்வியைக் கேட்பார்கள். ஏனெனில் தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமாக எடுத்துக் கொண்டால் இனிக்கும். மற்றவர்களால் அது நமக்குக் கொடுக்கப்பட்டால் கசக்கும். இயேசுவுக்கு இத்தகைய தனிமையோ, பயமோ, ஏக்கமோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் நடக்க இருப்பது அனைத்தையும், முன்னரே அறிந்தவர். இருப்பினும் நீங்களும் என்னைவிட்டுப் போய்விட நினைக்கின்றீர்களா என்று சீடர்களைப்பார்த்துக் கேட்கிறார். எதற்காக? அவர்களின் உளப்பாங்கினை தெரிந்து கொள்வதற்காக. எண்ணத்தை அறிந்து கொள்வதற்காக கேட்கிறார்.
தனது சீடர்களையும் மக்களையும் அளவுக்கதிகமாக அன்பு செய்து, அவர்களாலும் அபரிமிதமாக அன்பு செய்யப்பட்டவர் இயேசு. அப்படியிருக்க அவரை சூழ்ந்திருந்த ஏராளமான மக்கள் கூட்டம் மறைந்து சுருங்கி பன்னிரண்டு சீடர்கள் என்று வந்திருக்கும் நிலைமையில் கேட்கிறார். அவர்களைப் போல நீங்களும் என்னை விட்டுப் போய்விட நினைக்கின்றீர்களா என்று. இந்த கேள்வி இன்றைய அவர்தம் சீடர்களாகிய நம்மிடம் கேட்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தூங்கி எழுந்து ஊர் சுற்றிப் பார்த்து என் விடுமுறையை பயனுள்ளதாக்குவேன், நண்பர்களுடன் வண்ணத்திரை சின்னத்திரை பார்த்து மகிழ்ந்து இன்புறுவேன், என்று உலகப்போக்கில் வாழும் ஏனைய கிறிஸ்தவ மக்களைப் போல நீங்களும் என்னைவிட்டுப் போய் விட நினைக்கின்றீர்களா? என்று கேட்கிறார். அவரது கேள்விக்கு தூய பேதுருவின் பதிலைப் போல நாம் இங்கு அமர்ந்திருக்கின்றோம் . யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என்று கூறி அவர் வார்த்தைக்கு செவிமடுக்க வந்திருக்கிறோம். ( அப்ப... விண்ணகத்தின் திறவுகோல் நமக்கும் சொந்தம் தானே....)
இன்றைய மூன்று வாசகங்களும் இணைந்திருத்தலைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் யோசுவா இஸ்ரயேல் மக்களை யாவே இறைவனுடன் இணைந்திருக்க வலியுறுத்துகிறார். அதற்கு முன்மாதிரிகையாக தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுட்டிக்காட்டுகிறார். நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். நீங்கள் யாரை வழிபட இருக்கின்றீர்கள் இப்போதே முடிவு செய்யுங்கள் என்கிறார். இறைவனோடு இணைந்திருந்ததால் நீங்கள் பெற்ற நன்மைகள் என்னென்ன என்பதை அவர்கள் நினைவிற்கு கொண்டு வருகிறார். ஆண்டவரைப் பின்பற்றாத, பிற தெய்வ வழிபாடு நிகழ்த்தும் மக்கள் அடையும் இன்னல்கள் என்னென்ன என்பதையும் இஸ்ரயேல் மக்கள் நினைவு கூறுகின்றனர். இன்று நாம் இணைந்திருக்கிறோம் இறைவனோடு அல்ல அதைவிட அதிகமாக இணையத்தோடு. தனிமையை யாரும் நமக்கு பரிசாக தந்து விட முடியாது. ஏனெனில் நாம் அதிகமாக தனிமையில் தான் இருக்கிறோம். இணையத்தோடு இணைந்து ஆனால் பிறரோடு இணைய விரும்பாமல். இந்த இணைய இணைப்பை விடுத்து இறை இணைப்போடு வாழ இறைவன் நம்மை அழைக்கிறார். நீங்கள் யாரை வழிபட இருக்கின்றீர்கள் இணையத்தையா/ இறைவனையா? சிந்திப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகம் குட்டித்திருச்சபையாம் குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது. தலையாம் கணவனும், உடலாம் மனைவியும் இணைந்து திருச்சபை என்னும் குடும்பத்தை நல்ல முறையில் உருவாக்க அழைக்கப்படுகிறார்கள். மனைவி கணவனுக்கு பணிந்திருப்பது , கணவன் மனைவியை முழு உள்ளத்தோடு அன்பு செய்வது இவை அனைத்தும் குடும்பம் செழித்து வளர மிகவும் முக்கியமானவை. கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்வது போல், நாம் ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல என்று ஒவ்வொன்றையும் கிறிஸ்துவிற்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறார். இதிலிருந்து திருமணம் என்பது வெறும் சடங்கல்ல, அதில் மாபெரும் மறைபொருள் அடங்கி இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணம் ஒரு வெற்றுச்சடங்காக மாறிவிட்டது. நினைத்தவுடன் காதல் செய்து, அவசரமாய் திருமணம் செய்து, அற்ப காரியங்களுக்காக பிரிந்து விடுவது தான் இப்போதுள்ள நடைமுறையாக இருக்கிறது. கிறிஸ்து திருச்சபை நிலைத்து நிற்க தன்னையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் கழுவி அதை தூய்மையாக்கினார் என்று வாசிக்கக் கேட்டோம். திருமணம் நிலைக்க, குட்டித் திருச்சபை உருவாக, கணவன் மனைவியர் இருவருமே தங்களை ஒப்புவிக்க வேண்டும். பொதுவாக குடும்பத்தில் நல்ல சுமூகமான உறவு நீடித்து நிலைக்க இரண்டு வார்த்தைகளைக் கடைபிடித்தால் போதும் என்பர். அவை சரி, சாரி. ஆம் பிறர் கூறுவதைக் கேட்டு சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனம் . மற்றொன்று செய்த தவறுக்கு (சாரி) மன்னிப்பு என்று கேட்கும் குணம். இரண்டும் இருந்தால் போதும் அவை நம்மையும் குடும்பத்தில் இணைக்கும், நம் குடும்ப உறவையும் நீடித்து நிலைக்க வைக்கும்.
ஊனியல்பு என்னும் நம்முடைய தேவையற்ற நான் என்னும் தன்முனைப்பினை விடுத்து, நாம் நமது என்னும் வாழ்வு தரும் ஆவியை பெற்றுக் கொள்ள முயல்வோம். நமது வேலை, பழக்க வழக்கம், பணம் இவற்றை எல்லாம் விட நம்முடன் வாழ்பவர்களை அதிகமாக அன்பு செய்ய முயல்வோம். ஏனெனில் அவைகளுக்கெல்லாம் நம்மேல் பதிலன்பு செலுத்தத் தெரியாது. உடன் வாழ்பவர்களுக்கே பதிலன்பினை பல மடங்கு செலுத்தத் தெரியும்.
இறுதியாக , திருமணத்தின் போது மோதிரம் மாற்றும் பழக்கம் நம்மிடம் உண்டு . ஏன் மோதிர விரலில் அதனை மாட்டுகிறார்கள் தெரியுமா? நமது இதயத்திலிருந்து ஒரு நரம்பு நேரடியாக மோதிர விரலுடன் இணைக்கப்பட்டுள்ளதாம் அதனால் தான் திருமணத்தின் போதும் ஏனைய துறவற வார்த்தைப்பாடுகளின் போதும் மோதிரத்தை அவ்விரலில் மாட்டுகிறார்கள். இதன் முலம் இதயப் பூர்வமாக சொல்கிறார்கள் நாங்களும் எம் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம் என்று.
நாமும் இதயப் பூர்வமாக சொல்வோம் ஆண்டவரே நீரே எங்கள் கடவுள் உமக்கே நாங்கள் ஊழியம் புரிவோம் . உம்மை விட்டு வேறு யாரிடம் செல்வோம்....
இத்தகைய அருள் நிலையினை நாம் அடைந்திட அவரோடு நிலைத்து வாழ்ந்திட அருள் வேண்டுவோம். இறைவன் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாருடனும் இருப்பாராக ஆமென்.

பட்டை தீட்டுங்கள் --- எண்ணம் சொல் செயலை......


இறை இயேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது உள்ளத்தைப் பட்டை தீட்ட,  இறைவனின் வார்த்தை கொண்டு மெருகேற்ற அழைக்கிறது. பெரும்பாலும் நாம் தீட்டு என்று சொன்னவுடன் உடல் தீட்டைத் தான் முதலில் நினைவு கூர்வோம். நமது முன்னோர்கள் தமிழர்கள், தீண்டத்தகாததை தீண்டுவது தீட்டு. தீட்டுள்ளவர்(ரால்) தூய இறைவனை வழிபட இயலாது என்பர். ஏன்? எதனால்? அப்படியானால்  தீண்டத்தகாதது எது? காமம், குரோதம், லோபம்,  மதம், மாச்சர்யம் ஆகிய ஐந்துமே தீட்டு.
முதலாவது காமம் என்னும் ஆசை. ஆசைப்பட்ட பொருளை அடைய நினைப்பது.(உறவுகள் மட்டுமல்ல உடைமைகள் மீதும் ஆசைப்படுதலும் காமம் தான்) அதை தனதாக்கும் காலம் வரை சதா அதே நினைப்பாக இருப்பது. வேறு எதிலும் கவனம் செலுத்தாது இருப்பது. இதில் இவர்களால் கடவுளை எப்படி நினைக்க முடியும். 
இரண்டாவது குரோதம் என்னும் கோபம் . சிலர் இதனை செயல் மூலம் வெளிப்படுத்துவர், (நமது வீட்டு பொருள்கள் சொல்லும் இதனை) சிலர் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவர். கோபத்தில் கடவுளை அல்ல கண்ணில் காணும் நபரைக் கூட நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. 
மூன்றாவது லோபம் என்னும் சுயநலம். தான், தனது என்று தன்னை பற்றி மட்டுமே நினைத்து செயல்படுபவர். இவர்களால் பிறரைப் பற்றியும் எண்ண முடியாது இறைவனைப் பற்றியும் நினைக்க முடியாது.
நான்காவது மதம் என்னும் கர்வம் ஆணவம். என்னால் மட்டுமே இதை செய்ய முடியும் என்ற ஆணவம் அகங்காரம் இருப்பவர்களால் நிச்சயம் கடவுளை துதிக்க முடியாது.
ஐந்தாவது மாச்சர்யம் என்னும் பொறாமை. இவர்கள், தான் நன்றாக இருந்தாலும் பிறர் நன்றாக இருக்கிறார்களே என்று எண்ணி பெருமூச்சு விடுபவர்கள் இவர்களாலும் கடவுளை வழிபட முடியாது. ஆக இந்த ஐந்தும் தான் தீட்டு தீண்டத்தகாதவைகள். இவர்களால் கடவுளை முழுமனதுடன் அணுக இயலாது. எனவே தான் இறைவனின் ஆலயத்திற்கு செல்லும் முன் குளித்து விட்டு உடல் அழுக்கோடு மன அழுக்கையும் அகற்றி விட்டு செல்ல சொல்வர். இதனால் உடல் தூய்மையால் உள்ள மாற்றத்திலும் சிறிதளவாவது மாற்றம் வரும் என்று நம்பிக்கை. தீட்டு என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் தமிழ் மொழியில் உண்டு. வர்ணம் தீட்டுதல், வைரத்திற்கு பட்டை தீட்டுதல், கூர்மை தீட்டுதல் மை தீட்டுதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் .நிற்க...  
இன்றைய அனைத்து வாசகங்களும் நாம் நமது உள்ளத்தின் தீட்டு எவை? எவைகளெல்லாம் நம் உள்ளத்தை தீட்டுப்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், அவற்றை இறைவார்த்தை மூலம்  களைந்து நல்ல முறையில் பட்டை தீட்டுதல் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகம், கடவுளின் கட்டளைகளை நீங்கள் கடைபிடித்தால் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட பேரினம் என பிற மக்கள் உங்களைப் போற்றுவர் என்கிறது. இரண்டாம் வாசகம், இறைவார்த்தையை கேட்கின்றவர்களாக மட்டும் இல்லாமல் அதன் படி நடக்கின்றவர்களாகவும் இருங்கள் என்கிறது. நற்செய்தி வாசகமோ,  உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இறைவனைப் போற்றுங்கள் என்கிறது. 
மனிதனுக்கு இறைவன் கொடுத்த கட்டளைகள் அனைத்தும் அதன் வழி இறைவனை அடைவதற்காக தான். உதாரணத்திற்கு நமது புறவழிச்சாலைகள் அனைத்தும் நாம் சென்றடைய வேண்டிய இடத்தை நல்ல முறையில் அடைவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அதைவிடுத்து எனக்கு சாலை தான் முக்கியம் எனது இலக்கு முக்கியமல்ல என்று இருந்தால் அதனால் பாதிக்கப்படுவது நாம் தான். சாலைகளை பராமரித்து விட்டு பயணத்தை கைவிட்டால் யாருக்கு லாபம்.? நம்முடைய பல செயல்பாடுகள் பல நேரங்களில் அப்படித்தான் இருக்கின்றன. நம்முடைய சட்ட திட்டங்களும் கோட்பாடுகளும்  கொள்கைகளும் நம்மை இறைவனிடம் அழைத்துச்செல்வதற்காகத் தான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி உணர்ந்து செயல்பட சிறிது நேரம் நின்று நமது இலக்கை பற்றிய செயலைக் கூர்மைப்படுத்தி அதன் பின் நமது பயணத்தைத் தொடங்க வேண்டும். 
வைரம் மாணிக்கம் பவளம் போன்ற விலை மதிக்க முடியாத கற்கள் பெரும்பாலும் சாதரண மண்ணோடும் கற்களோடும் இணைந்து காணப்படும். எனவே அந்த தேவை இல்லாத பொருள்களிலிருந்து தேவையான அந்த கற்களை எடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவர். பின் எடுத்த கற்களை பட்டை தீட்டீ மெருகேற்றி காண்போர் கண்களைக் கவரும் கவின்மிகு கற்களாக அதனை உருமாற்றுவர். நமது உள்ளமும் இந்த விலைமதிக்க முடியாத கற்களைப் போன்றதே. நமது உள்ளத்தை சுற்றி மேலே சொன்ன இந்த ஐந்து வகை மண் கற்களும் படிந்திருக்கின்றன. இவற்றை இறைவார்த்தை கொண்டு பிரித்தெடுத்து, நமது நற்செயல்கள் மூலம் மெருகேற்ற இறைவன் அழைக்கிறார். முதலில் நமது எண்ணத்தை பட்டை தீட்டுவோம் நல்லவற்றை சிந்திப்பதன் மூலம். நமது நல்ல எண்ணம் நம்மை மட்டுமல்லாது நம்மை சுற்றி இருப்பவர்களையும் நல்ல விதத்தில் பாதிக்கும். உதாரணத்திற்கு கொட்டாவி நாம் விட்டால் நம் அருகில் இருப்பவரும் உடனே கொட்டாவி விடுவார். ஒருவர் தூங்கி வழிந்தால் உடனே அடுத்தவருக்கும் தூக்கம் கண்ணைச்சுற்றி வரும். சாதாரண ஒரு நடைமுறை செயலே அருகில் இருப்பவரை எளிதில் மாற்றும் போது நம்முடைய ஆக்கமுள்ள ஒரு நல்ல எண்ணம் நிச்சயம் நம் அருகில் இருப்பவரை மாற்றும் என்று நம்புவோம். 
ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன் அது நல்லபடியாக நடக்கிறது, நடக்கப் போகிறது, நடந்து முடிகின்றது என்று எண்ணுவோம். அது அப்படியே நடக்கும். நமது நல்ல எண்ணம் நல்ல சொல்லாகும் . நல்ல சொல் நல்ல செயலாகும் . நமது உள்ளத்திலிருந்து வெளியே வருகின்ற நல்ல வார்த்தை பிற மனித உள்ளங்களிலும் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இறைவனை வழிபடுபவர்களாக நாம் மாறுவோம். நல்ல கொடைகளையும் நிறைவான வரங்களையும் இறைவனிடம் இருந்து பெறுபவர்களாவோம். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் கடவுள் நம்மோடு இருக்கும் அருள் பெறுவோம். எனவே அன்பு உள்ளங்களே தீட்டு தீட்டு என்று உடல் தீட்டையும், கட்டளைகளை கடைபிடிக்கும் வரைமுறைத் தீட்டையும் பற்றி எண்ணாது நமது உள்ளத்தை இறைவன் பக்கம் திருப்பும்படி எண்ணத்தை சொல்லை செயலை பட்டை தீட்டுவோம். பட்டை தீட்ட தீட்ட பளிச்சிடும் பவளக் கற்கள் போல நம் வாழ்வும் இறை ஒளியால் சுடர் வீச அருள் வேண்டுவோம் .இறைவன் நம்மையும் நம் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.        

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...