Saturday, 1 September 2018

நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா?


இம்மாதிரியான கேள்வியை எல்லோராலும் கேட்க முடியாது. அளவுக்கதிகமாக அன்பு செய்பவர், அன்பு செய்யப்படுவரால் மட்டுமே இக்கேள்வியைக் கேட்க முடியும். இதுவரை உடன் இருந்த இவர்கள் இனி தனிமையை நமக்கு பரிசாக தந்து விடுவார்களோ என்ற பயம் ஏக்கம் இருப்பவர்கள் இம்மாதிரியானக் கேள்வியைக் கேட்பார்கள். ஏனெனில் தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமாக எடுத்துக் கொண்டால் இனிக்கும். மற்றவர்களால் அது நமக்குக் கொடுக்கப்பட்டால் கசக்கும். இயேசுவுக்கு இத்தகைய தனிமையோ, பயமோ, ஏக்கமோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் நடக்க இருப்பது அனைத்தையும், முன்னரே அறிந்தவர். இருப்பினும் நீங்களும் என்னைவிட்டுப் போய்விட நினைக்கின்றீர்களா என்று சீடர்களைப்பார்த்துக் கேட்கிறார். எதற்காக? அவர்களின் உளப்பாங்கினை தெரிந்து கொள்வதற்காக. எண்ணத்தை அறிந்து கொள்வதற்காக கேட்கிறார்.
தனது சீடர்களையும் மக்களையும் அளவுக்கதிகமாக அன்பு செய்து, அவர்களாலும் அபரிமிதமாக அன்பு செய்யப்பட்டவர் இயேசு. அப்படியிருக்க அவரை சூழ்ந்திருந்த ஏராளமான மக்கள் கூட்டம் மறைந்து சுருங்கி பன்னிரண்டு சீடர்கள் என்று வந்திருக்கும் நிலைமையில் கேட்கிறார். அவர்களைப் போல நீங்களும் என்னை விட்டுப் போய்விட நினைக்கின்றீர்களா என்று. இந்த கேள்வி இன்றைய அவர்தம் சீடர்களாகிய நம்மிடம் கேட்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தூங்கி எழுந்து ஊர் சுற்றிப் பார்த்து என் விடுமுறையை பயனுள்ளதாக்குவேன், நண்பர்களுடன் வண்ணத்திரை சின்னத்திரை பார்த்து மகிழ்ந்து இன்புறுவேன், என்று உலகப்போக்கில் வாழும் ஏனைய கிறிஸ்தவ மக்களைப் போல நீங்களும் என்னைவிட்டுப் போய் விட நினைக்கின்றீர்களா? என்று கேட்கிறார். அவரது கேள்விக்கு தூய பேதுருவின் பதிலைப் போல நாம் இங்கு அமர்ந்திருக்கின்றோம் . யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என்று கூறி அவர் வார்த்தைக்கு செவிமடுக்க வந்திருக்கிறோம். ( அப்ப... விண்ணகத்தின் திறவுகோல் நமக்கும் சொந்தம் தானே....)
இன்றைய மூன்று வாசகங்களும் இணைந்திருத்தலைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் யோசுவா இஸ்ரயேல் மக்களை யாவே இறைவனுடன் இணைந்திருக்க வலியுறுத்துகிறார். அதற்கு முன்மாதிரிகையாக தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுட்டிக்காட்டுகிறார். நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். நீங்கள் யாரை வழிபட இருக்கின்றீர்கள் இப்போதே முடிவு செய்யுங்கள் என்கிறார். இறைவனோடு இணைந்திருந்ததால் நீங்கள் பெற்ற நன்மைகள் என்னென்ன என்பதை அவர்கள் நினைவிற்கு கொண்டு வருகிறார். ஆண்டவரைப் பின்பற்றாத, பிற தெய்வ வழிபாடு நிகழ்த்தும் மக்கள் அடையும் இன்னல்கள் என்னென்ன என்பதையும் இஸ்ரயேல் மக்கள் நினைவு கூறுகின்றனர். இன்று நாம் இணைந்திருக்கிறோம் இறைவனோடு அல்ல அதைவிட அதிகமாக இணையத்தோடு. தனிமையை யாரும் நமக்கு பரிசாக தந்து விட முடியாது. ஏனெனில் நாம் அதிகமாக தனிமையில் தான் இருக்கிறோம். இணையத்தோடு இணைந்து ஆனால் பிறரோடு இணைய விரும்பாமல். இந்த இணைய இணைப்பை விடுத்து இறை இணைப்போடு வாழ இறைவன் நம்மை அழைக்கிறார். நீங்கள் யாரை வழிபட இருக்கின்றீர்கள் இணையத்தையா/ இறைவனையா? சிந்திப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகம் குட்டித்திருச்சபையாம் குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது. தலையாம் கணவனும், உடலாம் மனைவியும் இணைந்து திருச்சபை என்னும் குடும்பத்தை நல்ல முறையில் உருவாக்க அழைக்கப்படுகிறார்கள். மனைவி கணவனுக்கு பணிந்திருப்பது , கணவன் மனைவியை முழு உள்ளத்தோடு அன்பு செய்வது இவை அனைத்தும் குடும்பம் செழித்து வளர மிகவும் முக்கியமானவை. கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்வது போல், நாம் ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல என்று ஒவ்வொன்றையும் கிறிஸ்துவிற்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறார். இதிலிருந்து திருமணம் என்பது வெறும் சடங்கல்ல, அதில் மாபெரும் மறைபொருள் அடங்கி இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணம் ஒரு வெற்றுச்சடங்காக மாறிவிட்டது. நினைத்தவுடன் காதல் செய்து, அவசரமாய் திருமணம் செய்து, அற்ப காரியங்களுக்காக பிரிந்து விடுவது தான் இப்போதுள்ள நடைமுறையாக இருக்கிறது. கிறிஸ்து திருச்சபை நிலைத்து நிற்க தன்னையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் கழுவி அதை தூய்மையாக்கினார் என்று வாசிக்கக் கேட்டோம். திருமணம் நிலைக்க, குட்டித் திருச்சபை உருவாக, கணவன் மனைவியர் இருவருமே தங்களை ஒப்புவிக்க வேண்டும். பொதுவாக குடும்பத்தில் நல்ல சுமூகமான உறவு நீடித்து நிலைக்க இரண்டு வார்த்தைகளைக் கடைபிடித்தால் போதும் என்பர். அவை சரி, சாரி. ஆம் பிறர் கூறுவதைக் கேட்டு சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனம் . மற்றொன்று செய்த தவறுக்கு (சாரி) மன்னிப்பு என்று கேட்கும் குணம். இரண்டும் இருந்தால் போதும் அவை நம்மையும் குடும்பத்தில் இணைக்கும், நம் குடும்ப உறவையும் நீடித்து நிலைக்க வைக்கும்.
ஊனியல்பு என்னும் நம்முடைய தேவையற்ற நான் என்னும் தன்முனைப்பினை விடுத்து, நாம் நமது என்னும் வாழ்வு தரும் ஆவியை பெற்றுக் கொள்ள முயல்வோம். நமது வேலை, பழக்க வழக்கம், பணம் இவற்றை எல்லாம் விட நம்முடன் வாழ்பவர்களை அதிகமாக அன்பு செய்ய முயல்வோம். ஏனெனில் அவைகளுக்கெல்லாம் நம்மேல் பதிலன்பு செலுத்தத் தெரியாது. உடன் வாழ்பவர்களுக்கே பதிலன்பினை பல மடங்கு செலுத்தத் தெரியும்.
இறுதியாக , திருமணத்தின் போது மோதிரம் மாற்றும் பழக்கம் நம்மிடம் உண்டு . ஏன் மோதிர விரலில் அதனை மாட்டுகிறார்கள் தெரியுமா? நமது இதயத்திலிருந்து ஒரு நரம்பு நேரடியாக மோதிர விரலுடன் இணைக்கப்பட்டுள்ளதாம் அதனால் தான் திருமணத்தின் போதும் ஏனைய துறவற வார்த்தைப்பாடுகளின் போதும் மோதிரத்தை அவ்விரலில் மாட்டுகிறார்கள். இதன் முலம் இதயப் பூர்வமாக சொல்கிறார்கள் நாங்களும் எம் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம் என்று.
நாமும் இதயப் பூர்வமாக சொல்வோம் ஆண்டவரே நீரே எங்கள் கடவுள் உமக்கே நாங்கள் ஊழியம் புரிவோம் . உம்மை விட்டு வேறு யாரிடம் செல்வோம்....
இத்தகைய அருள் நிலையினை நாம் அடைந்திட அவரோடு நிலைத்து வாழ்ந்திட அருள் வேண்டுவோம். இறைவன் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாருடனும் இருப்பாராக ஆமென்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...