தனயனின் கனவை நனவாக்க , தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, தன்னையே அர்ப்பணித்த தாயே உம்மை வாழ்த்தி வணங்குகிறோம்
தந்தை மகன் தூய. ....
இறைக்கே இணையாகி, வானிற்கு நிகராகி பேரன்பிற்கு இலக்கணமாக திகழும் தாயாம் மரியாளைப் போற்றி புகழும் நாளும் வேளையுமிது. தாயின் அன்பை விவரிக்காத கவிஞர்களும் இல்லை. கவிதைகளும் இல்லை. தாயானவள் நம் விழிகளால் பார்த்து, இதழ்களால் சிரித்து, இமைகளில் உறங்கி, ஈடில்லா வெற்றியை நமக்கு தருபவள். நம் வெற்றியில் களித்திட, தோல்வியில் துவண்டிட, உயிரினில் கலந்திட, உதிரத்தைத் தந்தவள். இப்படி நம் இன்பத்தைப்பெருக்கி, இன்னலைத் தீர்த்திடும் தாயின் திருநாளைக் கொண்டாட அவர் தம் பிள்ளைகளாகிய நாம் ஒன்றாகக் கூடி இருக்கின்றோம்.
இந்த மகிழ்வென்னும் மங்களநாளில் வீரத்தாயின் புதல்விகள் நாம் எனும் பூரிப்பில் பெருமிதம் கொள்வோம். நம் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க, ஒளி கொண்டு நம் வாழ்வை மெருகேற்றுவோம். நம் கைகளில் தாங்கியுள்ள இந்த ஒளி இருளை அகற்றி வெளிச்சம் கொடுப்பது போல நாமும் நமது பிறரது துன்ப துயர இருளை அகற்றி, நம்பிக்கை என்னும் ஒளி கொடுப்பவர்களாக வாழ அருள் வேண்டி பவனி செல்வோம். அன்னைக்கு முடி சூடி அழகுபார்த்து மகிழ மணிமுடியையும் மாலையையும் பவனியாக ஒளி வெள்ளத்தில் ஆலயத்திற்குள் எடுத்துச்சென்று அன்னையின் மகிழ்வில் நாமும் இணைவோம்.
(பாடல் அல்லது நாதஸ்வர இசை)
வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு அளந்த கருணை, வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபி- தாய். அத்தகைய தாயாம் அன்னை மரியாளின் வியாகுலத்தை ,வியாகுல வீரத்தைக் கொண்டாடும் நாள் இந்நாள். இந்நாளில் நம் அன்னைக்கு மணிமுடி சூட்டி மகிழ்வோம். மன்னர்கள் ராஜாக்கள் மணிமுடி சூடுவர். தன் நாட்டில் விளைந்த விலையுயர்ந்த கற்கள் மணிகளை, தங்க வைரத்தால் இழைக்கப்ப்பட்ட ஆபரணத்தில் பொருத்தி அதை அனைத்து மக்கள் முன்னும் தன் தலையில் சூடி அனைத்திற்கும் அனைவருக்கும் பொறுப்பேற்பர். இதனால் தனக்குக் கீழ் உள்ள அனைத்து மக்களின் அதிகாரத்திற்கும் பொறுப்பிற்கும் உரிமையாளராவர். நமது தாய் அன்னை மரியாளோ, நம் அனைவருக்கும் அரசி. வெற்றி என்னும் வியாகுலங்களை தன்னகத்தேக் கொண்ட பேரரசி. நம்மை ஆண்டு வழி நடத்தும் உரிமை, அதிகாரம் பெற்றவர். நாம் அவர் வழி நடக்கும் ஊழியர்கள், பிள்ளைகள், வழித்தோன்றல்கள். இந்நேரத்தில் நம் மகிழ்வென்னும் கற்கள் மணிகளை, நல் உணர்வென்னும் தங்க வைர ஆபரணத்தில் பதித்து நம் அன்னையாம் அரசிக்கு மணிமுடி சூட்டி மகிழ்வோம். அரசியாம் அன்னைக்கு நாம் அனைவரும் அவர் தம் ஊழியர்களாக என்றும் வாழ்வோம் என்று உறுதி கூறுவோம்.
மலர்கள் மணம் பரப்பி மனதை மயக்குதல் போல நம் உடலும் அன்னை மரியின் அருளினாலும் அழகு பண்பினாலும் மயங்க மகிழ அருள் வேண்டி அன்னைக்கு மணி முடி சூட்டி மகிழ்வோம். நம் மகிழ்வினைத் தெரிவிப்போம்.
( மங்களம் மங்களம் அல்லது பொருத்தமான பாடல். )
செப்டம்பர் மாதம் என்றாலே நமக்கும் நம் சபைக்கும் மிகவும் முக்கியமான மாதம் ஏனெனில் நம் தாயாம் புனித வியாகுல அன்னையின் வியாகுலங்களைத் தியானிக்கும் மாதம் . அதிலும் சிறப்பாக இன்று மகிழ்வின் உயர்விற்கு உயர்வு சேர்க்கும் உன்னதமான நாள். செப்ட்ம்பர் மாதத்தின் முத்தான நாள். ஆம் அன்னையின் வியாகுலத்தின் திருநாள். வெற்றிகளை அள்ளித்தரும் வீரத்திருநாள். அன்னையின் வியாகுலம், வீரம், முழுமை இவற்றைப் பற்றி தியானித்து, இறை அருளில் மூழ்கி முத்தெடுக்க நம்மையே ஆயத்தப்படுத்தும் நாள். இந்நாளில் தன்னையே வெறுமையாக்கி ஊழியரின் வேடமேற்ற கிறிஸ்துவை பின்பற்றி, தன்னையே இறையடியாராக இனம் காட்டிய நம் தாய் மரியாளை பார்த்து பழக நாம் அழைக்கப்படுகிறோம். அழைக்கப்பட்டதன்படி வாழ்வதே நம் சபை வாழ்வின் சிறப்பு நிலை. மரியின் ஊழியர் குடும்பத்திலுள்ள நம் ஒவ்வொருவரின் ஆசை, நம் அன்னையும் அரசியுமான மரியாளைப் போன்று நாமும் ஆண்டவரின் ஊழியராக உருவாக வேண்டும் என்பதே. எனவே நாம் விரும்பி அடைய எதிர்நோக்கும் நிலையின் அழகிய உருவை மரியாளில் கண்டு முழுமையின் நிறைவாம் நம் அன்னையை போல நாமும் மாற அருள் வேண்டி இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம். வழி நூல் .....
எல்லாத் துன்பங்களும் வியாகுலங்கள் அல்ல. நமது தவறுகளால் வரும் துன்பங்களும், குறையுள்ள மனிதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் பழகும்போது ஏற்படும் மன வேதனைகளும் வியாகுலங்கள் ஆகாது. மாறாக தன்னல தளைகளிலிருந்து விடுபடும்போது, பிறர் நல் வாழ்வு பெற உழைக்கும் போது, இறைவன் தனக்கு கொடுத்த அழைத்தல் ,பணி இதுதான் என ஒன்றை உய்த்துணர்ந்து பற்றுறுதியுடன் வாழ்ந்து செயல்படும் போது ஏற்படும் துன்ப துயரங்களே, வியாகுலங்கள் ஆகும். அவ்வகையில் நம் தாய் மரியாள் பெற்ற வியாகுலங்களைக் கொண்டாட மூன்று காரணங்கள் உண்டு.
1. மீட்கும் திருவுளத்திற்கு தன்னைக் கையளித்தது.
2. மீட்பராகிய இயேசுவுடன் அவர் கொண்டிருந்த இணைபிரியா உறவு.
3. மக்களாகிய நம் மேல் கொண்டிருந்த தாய்மை உணர்வு.
எனவே அன்னை மரியாளின் அடிச்சுவட்டை பின்பற்றும் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போல இறைத்திருவுளத்திற்கு நம்மை கையளிக்கக் கூடியவர்களாய் வாழ அருள் வேண்டுவோம். இயேசுவின் மீது இணைபிரியா அன்பு கொண்டிருக்கவும். நமது செயல்களில் அன்னையின் தாய்மை பண்பு மிளிரவும் அருள் வேண்டுவோம்.
பாடல்)
நம் தாய் மரியாள் பட்ட துன்பங்கள் வியாகுலங்கள் ஏழு என்று நமது திருச்சபை கூறுகிறது. ஆனால் உண்மையில் பட்ட துன்பங்கள் ஏராளம் சந்தித்த இடர்கள் தாராளம். துன்பத்தைக் கூட அன்னை மரியாள் முழுமையாக அனுபவித்தார் என்பதற்காக கூட ஏழு என்ற எண்ணை பயன்படுத்தி இருக்கலாம். முழுமையின் தாய் இன்பத்தை மட்டுமல்ல துன்பத்தையும் முழுமையாக அறிந்தவர். தான் சந்தித்த ஒவ்வொரு வியாகுலத்திலும் தன்னை ஒரு நிலையில் நிறுத்தி அந்நிலையை நமக்கும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் என்பதில் எதிர்காலத்தைப் பற்றிய அபய நிலை (
இரவிலேயே எகிப்துக்கு புறப்பட்டு போ என்பதில் அகதிகளின் நிலை.
குழந்தையைக் காணாது தேடுதலில் தனையனை இழந்த தாயின் நிலை.
சிலுவைப்பாதையில் மகனை சந்தித்தலில் கண்ணீரால் துணிவூட்டும் மக்கபேயர் தாயின் நிலை.
சிலுவையடியில் நிற்கையில் துன்பத்திலும் துணிவோடு நிற்கும் தாயின் நிலை.
மரித்த மகனை மடியில் சுமக்கையில் வாழ்வே இருண்ட நிலை.
கல்லறையில் அடக்கம் செய்கையில் தனிமையில் தவிக்கும் கையறுநிலை.
இப்படியாக ஏழு வியாகுலங்களிலும் தன் நிலையில் தான் நின்று அந்த துன்பங்களை எல்லாம் நமக்கு மீட்பாக மாற்றிக் கொடுக்கிறார். அவர் உள்ளத்தைத் தைத்தது துன்பம் தரும் அம்புகள், வாள்கள் அல்ல. மாறாக அவைகள் மண்ணை ஊடுறுவிச்சென்று அவற்றை வளப்படுத்தும் உரங்கள் என்று நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே இந்நேரத்தில் அன்னையின் நாமம் தாங்கிய நம் சபை சகோதரிகளாகிய நாம் அனைவரும் துன்பத்தில் தாராள மனம் கொண்டு துணிவுடன் வாழ சிறப்பாக செபிப்போம். துன்புறும் மக்களுக்கு துணிவுடன் பணி செய்ய அருள் வேண்டுவோம். (கேரளா மக்கள் தமிழ் மக்கள் நம் சபை உள் நாடு வெளி நாடு ) எனவே இந்நேரத்தில் வியாகுலங்களை மீட்பாக மாற்றி அன்னை நமக்கு தரும் இறைவார்த்தைகளை அன்புடன் பெற்றுக் கொள்வோம். பாடல் இறைவார்த்தைச் சீட்டு பகிர்தல்
எப்போதும் கொடுப்பவரின் நிலையில் இருப்போம் நம் தாய் மரியாளைப் போல, பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் கொடுப்போம். எலிசபெத் அம்மாளுக்கு உதவினார் எதையும் எதிர்பார்க்காமல். கானாவூரிலே கல்யாணத்தில் உதவினார் கடுகளவும் பயன் எதிர்பாராமல். இப்படி வாழ்நாள் முழுவதும் உதவி செய்து பலனை எதிர்பாராது கொடுப்பவர் நிலையில் இருந்து உயர்ந்தார். நாமும் அந்நிலைக்கு மாற முயற்சிப்போம். நமது அன்பை, சேவையை, உதவியை இரக்கத்தை என அனைத்தையும் சிறிது என்று எண்ணாமல் நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து வாழ்வோம். இலவசமாகப் பெற்றுக் கொண்டீர்கள் இலவசமாகக் கொடுங்கள் என்பதற்கேற்ப அனைத்தையும் கொடுப்பவர்களாவோம். இதனால் சொல்லால் விளக்க முடியாத விவரிக்க முடியாத அன்பின் சாரமாக விளங்குபவர் இறைவன் ஒருவரே என்பதை நமது வாழ்வாலும் சொல்லாலும் உணர்வோம். முழுமையின் நிறைவான நம் தாய் மரியாள் நம்மையும் முழுமையடைச்செய்வார் என்ற நம்பிக்கையில் விண்ணகத்தந்தை அருள் வேண்டி இயேசு கற்பித்த செபத்தை ஒருமித்து சொல்வோம்
விண்ணகத்திலிருக்கின்ற/........
உன்னைக் கொடு உலகை வெல்வாய், உன்னை இழ எல்லோர் உள்ளத்திலும் வாழ்வாய் என்ற மொழிக்கேற்ப வாழ்ந்து சிறக்க இறையருளால் என்று நிறைந்து நிலைத்து வாழ இறையாசீர் என்றும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துவதாக ஆமென்.