Friday, 31 October 2014

நீங்க யானை மாதிரியா ?? இல்ல பூனை மாதிரியா??

யானைக்கும் அடி சறுக்கும் இது அடிக்கடி நாம் கேட்ட ஒரு பழமொழி . உனக்கா இந்த நிலைமைனு  யாராவது கேட்டா நாம இந்த பழமொழிய சொல்றது வழக்கம் . இன்னைக்கு திடிர்னு ஒரு சிந்தனை . யானைக்கும் அடி சறுக்கும் . யானை கம்பீரமானது யாராலும் அதஅவ்வளவு சீக்கிரம் கீழே தள்ளி விட முடியாது . அப்படியே எதிலாவது அதன் அடி சறுக்கினாலும் உடனே அதனால எழுந்திரிக்க முடியாது. பூனை சும்மா தட்டுனாலே கீழ விழுந்துடும். வேகமா எழுந்திரிச்சுடும்.இத எதுக்கு சொல்றேன்னா . நமக்கு வர்ற பிரச்சனைகளை சமாளிக்கிறப்ப சில நேரம்  நாம யானை மாதிரி ,சில நேரம் பூனை மாதிரி. சட்டுனு எதுலயும் சிக்க மாட்டோம் . சிக்கினோம் ,,,,,,, எழுந்து நிக்க ரொம்ப கஷ்டப்படுவோம் .ஆனா... எழுந்துட்டோம் ..... திரும்ப விழாம கவனமா இருப்போம் . அப்ப நாம யானை பலம் கொண்டவங்க .
அடிக்கடி எதுலயாவது சிக்குவோம் உடனே எழுந்து நின்னுருவோம் .. ஆனா  மறுபடியும் கீழ விழுவோம் அப்ப நாம பூனை பலவீனம் கொண்டவங்க . இதுனால என்ன சொல்ல வர்றேன்னா  கஷ்டம்னு வந்தவுடனே '' யானைக்கும் அடி சறுக்கும் இல்லையானு " சும்மா சொல்ல கூடாது நம்ம பலம்,  யானை மாதிரியா?? இல்ல பூனை மாதிரியானு யோசிச்சு சொல்லனும் சரியா?? இப்ப இருக்கிற நிலைமைல ரெண்டுமே வேணும்னு நீங்க சொல்றது கேட்குது சரி சரி  என் ஓட்டு யானைக்கு தாம்பா.  :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)     

Thursday, 23 October 2014

நீங்களும் குழந்தைகள் தான்:-):-) :-) :-) :-) :-)


பள்ளிக்குச் சென்று பகுத்தறிவு பெறும் பாலப்பருவக்குழந்தையே! 
இன்றைய நாள் உனது நாள்.! 
குறு நடையும், மகிழ் உணர்வும் கொண்டு குதூகலிக்கும் 
குழந்தைகள் தின நாள்!!!
குழந்தைகள் தான்  எவ்வளவு சிறப்பானவர்கள்.
எண்ணான்கு பற்கள் காட்டி தர முடியாத மகிழ்வை  அத‌ன் 
செந்நாக்குப் புன்னகை தந்து விடுகிறதே!   
அதுதான் எவ்வளவு பாக்கியசாலி
அழுதால் அரவணைக்கத்தாய்,
ஆறுதல் தந்து தோள் சாய்க்கத் தந்தை,
கைதூக்கி விளையாடி மகிழ்வூட்ட தனையன்,
இடுப்பாசனத்தில் அமர்த்தி சீராட்ட தமக்கையாள்,
அதன் சிறு அசைவையும் கண்டு ரசிக்க உற்றார், உறவினர்.
செவ்விதழ் மேனியும், பாலிலிட்டக் கருந்திராட்ச்சைக் கண்களும் , சிப்பி மூக்கும், செம்பவள வாயும், தளிர்கிளைகளாய் கை கால்களும், அப்பப்பா!!!!!!! குழந்தைகள் என்று நினைக்கும் போதே மனம் மகிழ்வால் நிரம்பும். இவற்றை  எல்லாம் எண்ணும்போது நாமும் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா??? என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.
எங்கே சென்றன நம்முடன் பிறந்தக் குழந்தை மனம்.??? 
சூழல் மாற்றியதா??? இல்லை 
சூழலுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொண்டோமா??
  நம் குழந்தைப் பருவம் பத்துப்பருவங்களால் ஆனது என்று நம் தமிழ் நூல்கள் பாடுகின்றன. என்னைப் பொறுத்தவரை பத்துப் பருவங்களும் ஏறுவரிசையில் சென்றால், இளமைப்பருவம். 
இறங்குவரிசையில் சென்றால் அது முதுமைப்பருவம். ஏதோ ஒருவகையில் நாம் நம் குழந்தைப்பருவத்தை சார்ந்தே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். குழந்தைகளாய்ப் பிறக்கையிலே நலமாய்த்தானிருக்கின்றோம். அனைவராலும் விரும்பப்படுகின்றோம். பாராட்டப்படுகின்றோம். ஆனால் காலப்போக்கில் அவை காணாமல் போகின்றன. சில நேரங்களில் நாமே அதைக் காணடித்துவிடுகின்றோம். தானாய் மாறியவை சில வலிய நாமே மாற்றிக்கொண்டவை பல. சிலர் வளர்க்கப்படும் சூழலால் மாறுகின்றோம். மாற்றப்படுகின்றோம் என்கின்றனர். ஆனால் அது உண்மை  அல்ல. 
''எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவதும் , தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!!! '' என்றொரு திரைப்படப்பாடல் வரிகள் உண்டு. அன்னை இல்லாமல் வளரும் எத்தனையோக் குழந்தைகள் நன்முறையில் தான் வளர்க்கப்படுகின்றன. பெற்றெடுத்த அன்னை மட்டும் அன்னை அல்ல. அன்னை நிலையில் யார் அந்தக் குழந்தையைப் பொறுப்பெடுத்து வளர்க்கிறார்களோ  அவர்கள் யாவரும் அன்னையே அவ்வகையில் நாம் அனைவரும் நல்லவர்களாக வளர்க்கப்பட்டவர்களே. குழந்தை மனம் நம்மில் நிறையவே உண்டு. மகிழ்ச்சிப் பெருக்கில் துள்ளிக் குதிக்கும் போது , விரும்பியதைத் தேடிக் கண்டடைந்ததும் சப்தமிட்டு கத்தும் போது, வளர்ந்த பின்பும் தாயின் கையில் உண்ணும் போது, நண்பனுடன் தோள் சேர்த்து நடக்கும் போது என பல நேரங்களில்  நாமும் குழந்தைகளாய் மாறி இருக்கின்றோம்.   ஆனால் நம்மை நாமே பெரியவர்களாக, உயர்ந்தவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தீயினால் நமக்குள் மறு துளிர்விடும் குழந்தை மனத்தை நாமே பொசுக்கிவிடுகின்றோம். (சிலர் குழந்தை மனம் உடையவர்களாய் மாறுவ‌தற்குப் பதில் குழந்தைத்தனம் உடையவர்களாய் மாறி விடுகின்றனர். குழந்தை மனம் வேறு குழந்தைத்தனம் வேறு. ) எதையும் ரசித்துப் பார்த்த மனது இன்று அதனை ரசிப்பதற்கே காரணம் தேடுகிறது. எல்லாவற்றையும் சுதந்திரமாக செய்த குணம் இன்று மறைமுகமாகச் செய்ய வழி தேடுகிறது. 
நமது மகிழ்வை நாமே மனதிற்குள் புதைக்கிறோம். பிறருக்காக வாழாமல் நமக்காக வாழ்வோம் . அன்றிருந்தக் குழந்தை மனது இப்போதும் நம்மிடம் உள்ளது. நாம் அதனை கர்வம் , பெருமை, மரியாதை, செல்வாக்கு, பதவி, கொண்டு மறைத்து வைக்கிறோம். இன்றைய குழந்தைகள் தினம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் உரியது. 
நாமும் குழந்தைகள் தான், 
நமது தூய மனத்தால், 
நமது தன்னலமற்ற செயலால், 
நமது கள்ளம் கபடமற்ற பேச்சால்!!!!
மின்னஞ்சலிலும்,( E.mail) முகப்புப் புத்தகத்திலும்    (facebook)குழந்தைகள் படத்தை பார்த்து பதிவிறக்கம்  (download)செய்யும் மனிதனே!! 
உன் உள்ளத்தில் உள்ள குழந்தை மனத்தை 
எப்போது உன் வாழ்வின் நிலையான     wallpaper ஆக மாற்றப் போகிறாய்??? 
Facebook ,twitter   இன் status ஆக 
உன் குழந்தைப் பருவமும் , குழந்தை மனமும் 
நின்று விடக் கூடாது.உன் வாழ்க்கையின்  profile picture ஆக அதனை மாற்று.

இன்றைய குழந்தைகள் தினம் நம்முள் மறைந்துகிடக்கும் குழந்தை மனத்தை வெளிக்கொணர்வதாக இருக்கட்டும்.  
குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்ப்போம் 
அவர்கள் பூக்கள்  பூக்கும் பூச்செடிகள் தான் 
ஆனால்  பூக்கப்போகும் பூக்களில் கவனத்தை அதிகம் வைக்காமல் பூக்கள் மலர காரணமாகும் வேர்களில் கவனம் செலுத்துவோம்.
 பின்னர் பூக்கள் தானாய்ப் பூக்கும் . 
குழந்தைகளைக் காப்போம் குழந்தைகளாய் வாழ்வோம் 

அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் 
                                                    


Friday, 3 October 2014

காதலிக்கலாமா?.? வேண்டாமா?.?

காதல் ஒரு உண்மை உணர்வு. மிகவும் புனிதமான உணர்வு. ஆனால் கவனமாக கையாள வேண்டிய ஒரு உணர்வு. கடை நிலை மனிதனை கரம் பிடித்து முன்னுக்கும் கொண்டும் வரும். முதல் நிலை மனிதனை கை கழுவி  கடை நிலைக்கும் கொண்டு வரும். கட்டான மனிதனை நிலை குலையச்செய்வதும் அதுதான். ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதும் அதுதான் . கலையான  ஆண் மகன் ஒருவன்  துடிப்பான பேச்சு , மிடுக்கான நடை, எடுப்பான உடை, துணிவான முடிவு, உறுதியான மனம், நேருக்கு நேர் பதில் , அழகான உறவுகள் அன்பான நண்பர்கள், அவர்களுடனான ஆனந்த அரட்டை,என வாழ்வைக் கொண்டாடினான். காதல் என்னும் மாய வலை அவனையும் வீழ்த்தியது. வீழ்த்தப்பட்டான். காணாத ஒன்றைக் கண்ட மகிழ்வில் தலை கீழாய் ஆடினான். உற்றம் ,சுற்றம், நண்பர்களை மறந்தான். எல்லாவற்றையும் இழந்தான். அது சரி ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றைப்பெற முடியும். எனவே பெற்றதை எண்ணி மகிழ்ந்தான். ஆனால் இவன் நினைத்தது போல் அவள் நினைக்கவில்லையே. காரியம் முடிந்தவுடன் கசக்கி எரியும் காகிதமாய் அல்லவா எண்ணிணாள். பிளிறு போல் நடந்தவனை பித்தாய் அலைய விட்டாள். கணீரென்று பேசுபவன் குரலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.  சாறு எடுத்துவிட்டுப் பிழிந்து போடும் கரும்புச் சக்கையாய் ஆக்கினாள். காதல் தந்த பரிசு இது. தாய் என்னும் பெண்ணால் பிறந்து ஆளானவன் காதலி என்னும் மற்றொரு பெண்ணால் வீழ்த்தப்பட்டான்.
காதலன் பித்து பிடித்தவனானான்.
காதலி சொத்துள்ள மற்றொருவனைத் தேடிப் பிடிப்பவளானாள்.
இது  ஆண்களுக்கு மட்டுமல்ல, இனம் மாற்றிப் படித்தால் இது பெண்களுக்கும் பொருந்தும்.  
காதல் வேண்டாமென்று நான் சொல்லவில்லை,அது தேவை           ஏனெனில்  அது ஒரு உணர்வு.
      காதலோ நட்போ
                                      உங்கள் உறவை வளர்க்கிறதா?       நற்பாதையில் உங்களை அழைத்துச்செல்கிறதா?
அது உங்களுக்குத் தேவை.
ஆரோக்கியமான காதலும் நட்பும் என்றும் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் ஆரோக்கியமானவர்களாக்கும். பலவீனமான காதலும் நட்பும் மேலும் நம்மை பலவீனமாக்கும்.
காதல் என்ற உணர்வை உணரும்போதே ,அனுபவிக்கும் போதே, விழிப்பாயிருங்கள்  
  உங்கள் செயல்களில் மாற்றம் தெரிகிறதா?
அது உங்களை நல்வழிக்கு இட்டுச் செல்கிறதா?
உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்குகிறதா?
எப்போது நினைத்துப் பார்த்தாலும் அவர்களுடனான உறவு உண்மை மகிழ்வைத் தருகிறதா? கவலை வேண்டாம் அது ஆரோக்கியமான உணர்வு. ஆனால் , உங்கள் மானம் இழந்து , மரியாதை கெட்டு, எப்படி இருந்தவன் இப்படி மோசமான நிலைக்கு வந்துவிட்டானே என்று மற்றவர் சொல்லும் நிலைக்கு நீங்கள் ஆளானால் அதனை தூக்கி எரியவும் தயங்காதீர்கள்.
    நமது அன்பு தூய்மையானது.  அதனை தூய்மையான பாத்திரத்தால் இட்டு நிரப்புவோம். அசிங்கமான பாத்திரத்தால் நமது அன்பும் அசிங்கமானதாக மாறிவிட வேண்டாம்.
''பாத்திரத்தின் திறன் அறிந்து பிச்சையிடு'' என்பதன் அர்த்தம் இதுவே.
உண்மையான நட்புக்கும் ஆழமான அன்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தெரியாதவர்களை தூக்கி எரியவும் தயங்க வேண்டாம்    
இப்ப சொல்லுங்க காதலிக்கலாமா?.? வேண்டாமா?..?

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...