பள்ளிக்குச் சென்று பகுத்தறிவு பெறும் பாலப்பருவக்குழந்தையே!
இன்றைய நாள் உனது நாள்.!
குறு நடையும், மகிழ் உணர்வும் கொண்டு குதூகலிக்கும்
குழந்தைகள் தின நாள்!!!
குழந்தைகள் தான் எவ்வளவு சிறப்பானவர்கள்.
எண்ணான்கு பற்கள் காட்டி தர முடியாத மகிழ்வை அதன்
செந்நாக்குப் புன்னகை தந்து விடுகிறதே!
அதுதான் எவ்வளவு பாக்கியசாலி
அழுதால் அரவணைக்கத்தாய்,
ஆறுதல் தந்து தோள் சாய்க்கத் தந்தை,
கைதூக்கி விளையாடி மகிழ்வூட்ட தனையன்,
இடுப்பாசனத்தில் அமர்த்தி சீராட்ட தமக்கையாள்,
அதன் சிறு அசைவையும் கண்டு ரசிக்க உற்றார், உறவினர்.
செவ்விதழ் மேனியும், பாலிலிட்டக் கருந்திராட்ச்சைக் கண்களும் , சிப்பி மூக்கும், செம்பவள வாயும், தளிர்கிளைகளாய் கை கால்களும், அப்பப்பா!!!!!!! குழந்தைகள் என்று நினைக்கும் போதே மனம் மகிழ்வால் நிரம்பும். இவற்றை எல்லாம் எண்ணும்போது நாமும் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா??? என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.
எங்கே சென்றன நம்முடன் பிறந்தக் குழந்தை மனம்.???
சூழல் மாற்றியதா??? இல்லை
சூழலுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொண்டோமா??
நம் குழந்தைப் பருவம் பத்துப்பருவங்களால் ஆனது என்று நம் தமிழ் நூல்கள் பாடுகின்றன. என்னைப் பொறுத்தவரை பத்துப் பருவங்களும் ஏறுவரிசையில் சென்றால், இளமைப்பருவம்.
இறங்குவரிசையில் சென்றால் அது முதுமைப்பருவம். ஏதோ ஒருவகையில் நாம் நம் குழந்தைப்பருவத்தை சார்ந்தே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். குழந்தைகளாய்ப் பிறக்கையிலே நலமாய்த்தானிருக்கின்றோம். அனைவராலும் விரும்பப்படுகின்றோம். பாராட்டப்படுகின்றோம். ஆனால் காலப்போக்கில் அவை காணாமல் போகின்றன. சில நேரங்களில் நாமே அதைக் காணடித்துவிடுகின்றோம். தானாய் மாறியவை சில வலிய நாமே மாற்றிக்கொண்டவை பல. சிலர் வளர்க்கப்படும் சூழலால் மாறுகின்றோம். மாற்றப்படுகின்றோம் என்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல.
''எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவதும் , தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!!! '' என்றொரு திரைப்படப்பாடல் வரிகள் உண்டு. அன்னை இல்லாமல் வளரும் எத்தனையோக் குழந்தைகள் நன்முறையில் தான் வளர்க்கப்படுகின்றன. பெற்றெடுத்த அன்னை மட்டும் அன்னை அல்ல. அன்னை நிலையில் யார் அந்தக் குழந்தையைப் பொறுப்பெடுத்து வளர்க்கிறார்களோ அவர்கள் யாவரும் அன்னையே அவ்வகையில் நாம் அனைவரும் நல்லவர்களாக வளர்க்கப்பட்டவர்களே. குழந்தை மனம் நம்மில் நிறையவே உண்டு. மகிழ்ச்சிப் பெருக்கில் துள்ளிக் குதிக்கும் போது , விரும்பியதைத் தேடிக் கண்டடைந்ததும் சப்தமிட்டு கத்தும் போது, வளர்ந்த பின்பும் தாயின் கையில் உண்ணும் போது, நண்பனுடன் தோள் சேர்த்து நடக்கும் போது என பல நேரங்களில் நாமும் குழந்தைகளாய் மாறி இருக்கின்றோம். ஆனால் நம்மை நாமே பெரியவர்களாக, உயர்ந்தவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தீயினால் நமக்குள் மறு துளிர்விடும் குழந்தை மனத்தை நாமே பொசுக்கிவிடுகின்றோம். (சிலர் குழந்தை மனம் உடையவர்களாய் மாறுவதற்குப் பதில் குழந்தைத்தனம் உடையவர்களாய் மாறி விடுகின்றனர். குழந்தை மனம் வேறு குழந்தைத்தனம் வேறு. ) எதையும் ரசித்துப் பார்த்த மனது இன்று அதனை ரசிப்பதற்கே காரணம் தேடுகிறது. எல்லாவற்றையும் சுதந்திரமாக செய்த குணம் இன்று மறைமுகமாகச் செய்ய வழி தேடுகிறது.
நமது மகிழ்வை நாமே மனதிற்குள் புதைக்கிறோம். பிறருக்காக வாழாமல் நமக்காக வாழ்வோம் . அன்றிருந்தக் குழந்தை மனது இப்போதும் நம்மிடம் உள்ளது. நாம் அதனை கர்வம் , பெருமை, மரியாதை, செல்வாக்கு, பதவி, கொண்டு மறைத்து வைக்கிறோம். இன்றைய குழந்தைகள் தினம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் உரியது.
நாமும் குழந்தைகள் தான்,
நமது தூய மனத்தால்,
நமது தன்னலமற்ற செயலால்,
நமது கள்ளம் கபடமற்ற பேச்சால்!!!!
மின்னஞ்சலிலும்,( E.mail) முகப்புப் புத்தகத்திலும் (facebook)குழந்தைகள் படத்தை பார்த்து பதிவிறக்கம் (download)செய்யும் மனிதனே!!
உன் உள்ளத்தில் உள்ள குழந்தை மனத்தை
எப்போது உன் வாழ்வின் நிலையான wallpaper ஆக மாற்றப் போகிறாய்???
Facebook ,twitter இன் status ஆக
உன் குழந்தைப் பருவமும் , குழந்தை மனமும்
நின்று விடக் கூடாது.உன் வாழ்க்கையின் profile picture ஆக அதனை மாற்று.
இன்றைய குழந்தைகள் தினம் நம்முள் மறைந்துகிடக்கும் குழந்தை மனத்தை வெளிக்கொணர்வதாக இருக்கட்டும்.
குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்ப்போம்
அவர்கள் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் தான்
ஆனால் பூக்கப்போகும் பூக்களில் கவனத்தை அதிகம் வைக்காமல் பூக்கள் மலர காரணமாகும் வேர்களில் கவனம் செலுத்துவோம்.
பின்னர் பூக்கள் தானாய்ப் பூக்கும் .
குழந்தைகளைக் காப்போம் குழந்தைகளாய் வாழ்வோம்
அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்