Sunday, 22 February 2015

கஷ்டம் நல்லது



இன்று இயேசுவின்சோதனைகளை திருப்பலியில் வாசிக்கக் கேட்டேன் . சோதனை என்றதும் எனக்கு ஞாபகம் வந்தது, என்னுடைய சிறுவயது விடுமுறை விவிலியப் பள்ளி ஞாபகம் தான். இயேசுவின் சோதனைகளைப் பற்றிய பாடம் இருந்தது. பங்குத்தந்தையின் வருகை, கேள்வி கேட்பார் தயாராகுங்கள் என்றார் ஆசிரியர்.  எனவே  மூன்று சோதனைகளையும் உரு போட்டு மனப்பாடம் பண்ணினேன். ஆனாலும் பயம் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று வேண்டத்தொடங்கினேன். அது தான் நான் செய்த தப்பு என்று அப்புறம் தான் உணர்ந்தேன்.ஏன்னா நான் நினைச்சது ஒன்னு நடந்தது இன்னொன்னு. ஆண்டவரே எங்கிட்டக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் வேண்ட, அதைப் பார்த்த அப்பொழுது ஆசிரியரான என் அக்கா ,எப்பொழுதோ அவளை நான் அடித்த பழியைத் தீர்த்துக் கொண்டாள் பாதரிடம் மாட்டிவிட்டு.  என்னை அவர் எழுப்பிவிட, பயத்தில் படித்தது மறக்க, கல் ,மலை ஆனது . அப்பம் ,ஆப்பம் ஆனது.  கிடைத்தது பரிசு மண்டையில் குட்டாக . வகுப்பு முடிந்ததும் தலையைத் தடவிக்கொண்டு வெளியே சென்ற என்னை பங்குத்தந்தை அழைத்தார். மறுபடியும் மண்டையைப் பதம் பார்க்கத் தான் கூப்பிடுகிறார் போல என்று பயந்து கொண்டே சென்றேன்.  பதில் தான் தெரியலைல அப்புறம் என்ன தெரிஞ்ச மாதிரி சொல்லிப் பார்த்த, என்றார். நான் சொல்லிப் பார்க்கல எங்கிட்டக் கேள்விக் கேட்கக் கூடாதுனு வேண்டுனேன் என்றேன்.  கேட்கக் கூடாதுனு வேண்டுனதுக்கு பதிலா நல்லா பதில் சொல்லணும்னு வேண்டிருக்கலாம்லனு சொன்னார்.  பல நேரங்கள்ல இந்த கஷ்டம் வேண்டாம்னு தான் நாம வேண்டுறோமே தவிர ,இந்த நல்லது வேணும்னு வேண்டுறதில்ல. அதனால இனி கொஞ்சம் மாத்தி யோசிப்போம் .கறை நல்லது மாதிரி கஷ்டமும் நல்லதுனு நினைப்போம். இது எனக்கு வேண்டாம்னு நினைக்கிறதுக்கு பதிலா, இது எனக்கு வேணும்னு நினைப்போம். ஏன்னா  சோதனைகளும் துன்பங்களும்  நம்மைப் பலப்படுத்தவே ,பண்படுத்தவே . என்றும் புன்னகை செய் மனமே.......                        

Friday, 20 February 2015

ஒளியை நோக்கி வா



 நல்ல வெயில் நாளில்  சூரிய வெப்பம் எடுத்துக் கொண்டிருந்தனர்  சிலர். அதைப் பார்த்த எனக்கு சிறு பிள்ளையில் எனது நிழலை நானே பார்த்து அழுத ஞாபகம் வந்தது. அவ்வளவு கொடூரமாகவா இருந்தாய் என்று கேட்கக் கூடாது. என்னடா இது ஒரு கருப்பு உருவம் நம்மை விடாமல் விரட்டுகிறதே என்று ஒரு அச்சம் அவ்வளவு தான் . அப்போது எங்க பாட்டி  வெளிச்சத்திற்கு நேராகத் திரும்பச் சொல்வார்கள் .உடனே நிழல் என் பின்னாடி போகும் .இப்படி நான் மகிழ்ந்த நாட்கள் அவை.   இருட்டை நோக்கி செல்லாதே ஒளியை நோக்கி வா என்பது அன்று நான் கேட்ட பாடம் . பாட்டியின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளாகிய இன்று ஒரு சிந்தனை அதையொட்டி. நாம்  பல நேரங்களில் நமக்கு விருப்பமான  ஒரு பொருளை பெற எண்ணி அதன் பின்னால் போகிறோம்  நமது நிழலை நாமே பின் தொடர்வது போல . அப்படி சென்றால் அதை நாம் பெறவும் முடியாது ,அடையவும் முடியாது. அதற்கு மாறாக அந்த பொருளை நம்மை நோக்கி பின்தொடரச் செய்ய முடியும். எப்படி???  பாட்டியின் பழைய தத்துவம் தான். இருளை விடுத்து ஒளியை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வளவுதான் . ஒளி என்பது எங்கோ இருக்கும் இறைவன் மட்டும்  அல்ல நமது தூய நல்ல எண்ணங்களும் தான்  . நல்லவற்றையே எண்ணுவோம் நாம் விரும்புகின்ற நன்மைகள் நம்மைத் தேடி வரும்        

Thursday, 19 February 2015

பரிசு எங்கே ?.

உண்மையான நண்பர் இயேசு என்ற தலைப்பில் இத்தாலிய மொழியில் ஒரு கவிதை வாசிக்க நேர்ந்தது. சிறந்த நண்பராக உண்மையான நண்பராக அவரைப்போல் யாராலும் இருக்க முடியாது .அவரைப் போல வாழவே, வாழ முயற்சிக்கவே நாம் அழைக்கப்படுகிறோம் என்று இருந்தது. அதில் , நம் தேவைகளில் உதவி செய்ய, தடம் மாறுகையில் வழிகாட்ட, தவறுகையில் மன்னிக்க,என்பதாக அவர் தம் நட்பு குணங்கள் விவரிக்கப்பட்டுஇருந்தன.  மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இத்தாலிய மொழியில்PERDONO என்பர். DONOஎன்றால் பரிசு என்று அர்த்தம் .மன்னிப்பது பலருக்கும் சிரமம் தான் ஆனால் அதனை பிறருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்கிறார். பரிசை எல்லாருக்கும் கொடுக்க மாட்டோம் நமக்கு மிகவும் பிடித்த, நம்மால்அதிகம் அன்பு செய்யப்படுபவர்களுக்குத் தான் கொடுப்போம். அதிலும் நாம் கொடுக்கும் பரிசு மற்றவர் தரும் பரிசை விட சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி இருக்க வேண்டுமாம் நமது மன்னிப்பு. நானும் உன்னை மன்னித்தேன் என் கண்முன் நிற்காதே என்பதல்ல மன்னிப்பு. மாறாக மன நிறைவோடு முழு மகிழ்வோடு, நாம் விரும்பி தருவதாக இருக்க வேண்டும். எனவே இத்தவக்காலத்தில் 
மன்னிப்பு என்னும் பரிசினை மனதார தருவோம்

மன்னிப்போம் மறப்போம் 

மகிழ்வுடன் வாழ்வோம்       

அருள்தரும் காலம்

  மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் 
மண்ணுக்கே திரும்புவாய்  என்ற 
இறை மொழி கேட்டு மனம் திரும்பும் காலம் 
நம் பாவங்களுக்காக மனம் வருந்தி 
மன்னிப்புகோரி மன்றாடும் காலம் 
தவங்கள் பல செய்யத்தூண்டும்
தவக்காலம். இக்காலத்தில் 
உடல் வருந்தாமல் உள்ளம் வருந்துவோம்.
ஒருவர் மற்றவருக்காய் சிறப்பாய் செபிப்போம்.
மன்னிப்பைக் கொடுப்போம் பெறுவோம் 
ஒரு நாளில் ஓர் உதவி ஒருவர்க்கு
என்றே நாளும்  உயர்ந்திடுவோம் .
வாழும் கிறிஸ்துக்களாக மாறிடுவோம்.
அருள் மழை பொழியும் காலமாக 
இத்தவக்காலம் அனைவருக்கும் அமையட்டும் 

 
  
    

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...