நல்ல வெயில் நாளில் சூரிய வெப்பம் எடுத்துக் கொண்டிருந்தனர் சிலர். அதைப் பார்த்த எனக்கு சிறு பிள்ளையில் எனது நிழலை நானே பார்த்து அழுத ஞாபகம் வந்தது. அவ்வளவு கொடூரமாகவா இருந்தாய் என்று கேட்கக் கூடாது. என்னடா இது ஒரு கருப்பு உருவம் நம்மை விடாமல் விரட்டுகிறதே என்று ஒரு அச்சம் அவ்வளவு தான் . அப்போது எங்க பாட்டி வெளிச்சத்திற்கு நேராகத் திரும்பச் சொல்வார்கள் .உடனே நிழல் என் பின்னாடி போகும் .இப்படி நான் மகிழ்ந்த நாட்கள் அவை. இருட்டை நோக்கி செல்லாதே ஒளியை நோக்கி வா என்பது அன்று நான் கேட்ட பாடம் . பாட்டியின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளாகிய இன்று ஒரு சிந்தனை அதையொட்டி. நாம் பல நேரங்களில் நமக்கு விருப்பமான ஒரு பொருளை பெற எண்ணி அதன் பின்னால் போகிறோம் நமது நிழலை நாமே பின் தொடர்வது போல . அப்படி சென்றால் அதை நாம் பெறவும் முடியாது ,அடையவும் முடியாது. அதற்கு மாறாக அந்த பொருளை நம்மை நோக்கி பின்தொடரச் செய்ய முடியும். எப்படி??? பாட்டியின் பழைய தத்துவம் தான். இருளை விடுத்து ஒளியை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வளவுதான் . ஒளி என்பது எங்கோ இருக்கும் இறைவன் மட்டும் அல்ல நமது தூய நல்ல எண்ணங்களும் தான் . நல்லவற்றையே எண்ணுவோம் நாம் விரும்புகின்ற நன்மைகள் நம்மைத் தேடி வரும்