Friday, 7 December 2018

பற்றற்றான் பற்றினை பற்றுக.....

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு... என்பது திருக்குறள் வரிகள்
பற்றில்லாத பரமனின் பற்றை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். எதற்காக??? பற்றில்லாமல் வாழவேண்டும் என்பதற்காக...... என்பதே அக்குறளின் பொருள் . நமது பற்றுக்கள் என்ன? நாம் எதை விடுத்து எதை பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வே திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பு. இன்றைய ஞாயிறு திருமுழுக்கு யோவான் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது . காரணம் இயேசுவின் முன்னோடியாக இருந்து அவருக்கு முன் வழியை ஆயத்தம் செய்தவர்களில் முதன்மையானவர் திருமுழுக்கு யோவான். எனவே தான் இயேசு பிறப்புக்கு நம்மை நாமே தயாரித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில் யோவானின் பற்றற்றை வாழ்வை நாமும் முன்மாதிரிகையாகக் கொண்டு வாழ அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
திருமுழுக்கு யோவான் ஒட்டக முடியை ஆடையாக அணிந்திருந்தார், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உணவாக உண்டு வந்தார், பாலைவனத்தில் தங்கி வாழ்ந்துவந்தார் என்பது எல்லாம் நாமறிந்த ஒன்றே. இன்றைய நாளில் அவர் துறந்த பற்றுகளைப் பற்றி அறிந்து அவர் போல பற்றற்றவர்களாய் வாழ் முற்படுவோம். உறவுப்பற்று, ஊர்ப்பற்று, குலப்பற்று இவை மூன்றையும் துறந்தவர் திருமுழுக்கு யோவான் என்ற தலைப்புக்களின் கீழ் சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்.
உறவுப்பற்றைத் துறந்தவர்:
        வயது முதிர்ந்த காலத்தில் செக்கரியா, எலிசபெத் என்னும் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர். எனவே ஒட்டுமொத்த பாசத்தையும் அவர் மேல் காண்பித்திருப்பர் அவர் தம் பெற்றோர். உற்றார் உறவினர்கள் என அனைவரின் கண்களுக்கும் விலைமதிக்கப்பட முடியாத ஒரு பெரும்பொருளாக இருந்திருப்பார். கடவுளின் அருளால் பிறந்தவர், இவர் வாழ்வு எப்படி இருக்குமோ என்ற எல்லோரின் எதிர்பார்ப்பினால் நிறைந்ததாய் இவரின் வாழ்வு இருந்திருக்கும் . இருப்பினும் அதை அனைத்தையும் துறந்து, வாழத்துணிகிறார். இவரைப் போல நம்மால் நம் உறவுகளை இறைவனுக்காய் இறைப்பணிக்காய் துறக்க முடியுமா? துறத்தல் என்பது முழுமையாக துறப்பது..... திருமுழுக்கு யோவான் போல. நாமும் துறக்கிறோம் நமது உறவுகளை. எப்போது??? நமக்கு பிடிக்காத செயல்களை அவர்கள் செய்யும் போது.. நமது கருத்துடன் ஒத்துப் போகாதபோது.... நாம் நினைத்தது போல் அவர்கள் நடக்காத போது.... இப்படி தான் நாம் நம் உறவுகளை  துறக்கிறோம். செல்வம், பதவி, புகழ் இவற்றை முன்னிருத்தி  தான் இப்போதைய நமது உறவுகள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன. அவர்களுடனான உறவு வலுப்பட எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிறோம். நம்மை விரும்புபவர்களின் மாண்பை உணராது, நாம் விரும்புபவர்களை நாடி தேடி ஓடுகிறோம். இந்தப்பற்றினை துறக்கச்சொல்கிறார் இறைவன். என் பெயரால் நீங்கள் எதைத் துறந்தீர்களோ அதை நூறு மடங்காகப் பெற்றுக் கொள்வீர்கள் என்கிறார் இறைவன். திருமுழுக்கு யோவான் போல நமது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை அறிந்து அதற்கு தடையாக இருப்பவற்றை தாண்டி செல்ல அருள் வேண்டுவோம்.
ஊர்ப்பற்றைத் துறந்தவர்:
சொந்த நாட்டை விட்டு அயல் நாட்டில் பிழைப்பிற்காக இருக்கும் நபர்களுக்கு தெரியும் தன் சொந்த ஊரின் அருமை. உற்றார் உறவினர், ஊரார் என மகிழ்வினை அள்ளித்தரும் அத்தனை சொந்தங்களையும் விட்டு தனியே வாழ்வது என்பது வெறுமை.. இத்தகைய தனிமையை தானே தேடிச்செல்கிறார் திருமுழுக்கு யோவான். தான் வளர்ந்து மகிழ்ந்த ஊர். தன்னுடன் விளையாடி திரிந்த நண்பர்கள் கூட்டம், பார்த்து பரவசம் அடைந்த ஊரின் எழில் மிகு இடங்கள் என அனைத்தையும் துறந்து பாலைவனத்திற்கு செல்கிறார். இருத்தலிலிருந்து இல்லாமைக்கு தன்னை அழைத்துச்செல்கிறார். செழுமையிலிருந்து வெறுமைக்கு செல்கிறார். இத்தகைய வெறுமையும் தனிமையும் தன்னை தன்னுடைய இலக்கை நோக்கி இட்டுச்செல்லும் என்று நம்புகிறார். சிறுவயதில் தன் ஊர் மக்களை  தான் தேடிச்சென்று பார்த்து மகிழ்ந்த காலம் போய் . இப்போது தான் தனியே சென்று அவர்களை தன்னிடம் வரவழைக்கிறார். இது என் ஊர் என்று சொன்ன காலம் கடந்து , இவன் எங்கள் ஊர்க்காரன் என்று பெருமைப்படும் அளவுக்கு மாற்றம் பெருகின்றார். நம்மால் நம் ஊர் மகிழ்கின்றதா? இல்லை நம் ஊரால் ஊர் மக்களால் நாம் மகிழ்வடைகின்றோமா சிந்தித்து செயல்படுவோம்.
குலப்பற்றைத் துறந்தவர்:
      தந்தை செக்கரியா எருசலேம் ஆலயத்தில் குருவாகப் பணியாற்றியவர். தந்தை பணியை மகன்கள் செய்வது வழக்கம். ஆனால் திருமுழுக்கு யோவான் குருவாக தன்னை , தனது பணியை ஆலயத்திற்குள் மட்டும் நிறுத்திவைக்க நினைக்கவில்லை. அவர் நினைத்து இருந்தால், செல்வ வளத்துடனும் புகழ் மரியாதையுடனும் எருசலேம் தேவாலயத்தில் பணியாற்றி இருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஊரை விட்டு வெளியே உள்ள மக்களும் தன்னை நாடி வர வேண்டும், தான் கூறும் அறிவுரையின்படி நடந்து மனமாற்றம் அடைய வேண்டும் என விரும்புகின்றார். அதன்படி தன்னுடைய குலத்தொழிலை விட்டு இறைப்பணியாற்ற செல்கிறார். நாம் எப்படி??? நல்ல வேலை, கை நிறைய பணம், கொஞ்சம் புகழ், வீடு நிலம் நகை .... இதோடு நமது வாழ்க்கை நிறைவடைந்துவிட்டது என்று எண்ணுகிறோமா??? இவை அனைத்தும் உண்மையில் நமக்கு நிறைவுதந்துவிடுமா??? இதுதான் எனது வாழ்க்கை என்று எண்ணி ஒரு குறுகிய வட்டத்திற்குள் நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா ???சிந்திப்போம்
திருமுழுக்கு யோவானின் பற்றற்ற வாழ்வை பற்றி தியானித்துக் கொண்டிருக்கக்கூடிய இவ்வேளையில் அவரைப் போல நாமு பற்றற்றவர்களாய் வாழ முற்படுவோம். இன்றைய தினம் ஏற்றப்பட்ட திருவருகைக்காலத்தின் இரண்டாம் மெழுகுதிரி நம் வாழ்வில் இருக்கும் தேவையற்ற பற்றுக்களை பற்றி எரியச் செய்யட்டும். இதன் மூலம் பற்றில்லாத பரமன் மேல் தூய்மையான பற்று கொண்டவர்களாக வாழ முற்படுவோம். அப்போது நமது தீய எண்ணங்கள் என்னும் பள்ளத்தாக்குகள் நல்லெண்ணங்களால் நிரப்பப்படும். மலை குன்றென திகழும் நமது மேட்டிமை குணம், தாழ்ச்சி என்னும் பண்பால் தாழ்த்தப்படும். கோணலான நமது வாழ்வு முறை அவரின் வழிகாட்டுதலால் நேரானதாக மாறும். கரடுமுரடான நமது மனம் சமாதானமானதாக மாறும் எனவே ஆண்டவருக்காக நமது வழியை ஆயத்தம் செய்ய பாதையை செம்மைப்படுத்த, பற்றற்றான் பற்றின் மேல் பற்று கொண்டு வாழ்வோம் ... இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.            

Saturday, 1 December 2018

காத்திருக்கின்றோமா? யாருக்காக?

                          திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
"கொன்னூர்த் துஞ்சினும் யாந்துஞ்சலமே" என்பது குறுந்தொகை பாடல் வரிகளில் ஒன்று. தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியோடு சேர்ந்து வருந்தும் தோழியின் கூற்று இது. ஊரே தூங்கியிருந்தாலும் நாம் மட்டும் தூங்காது தலைவனுக்காக காத்திருக்கிறோம் என்பதே இப்பாடலின் பொருள் . நாமும் நமது தலைவன் இயேசுவுக்காக காத்திருக்கும் தருணம் தான் இத்திருவருகைக்காலம். இக்காலம் முழுதும் அனைவர் மனதிலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி . காரணம் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. நான்கு வாரத்தயாரிப்பில் ஒவ்வொரும் வாரமும் ஒரு வேலை என்று பிரித்து விழாவினை சிறப்பிப்போம். உதாரணத்திற்கு குடில் தயார் செய்தல், வீட்டை வெள்ளை அடித்து புதுப்பித்தல், பலகாரம் செய்தல் புதுத்துணி எடுத்தல் என்று பல வேளைகளை நாம் முன் தயாரிப்பாக செய்வோம். இவை மட்டும் போதுமா? நமது முன்னேற்பாடுகளும் காத்திருப்புக்களும் வெளிப்புறத் தயாரிப்புக்களாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அதையும் தாண்டி நமது காத்திருப்பு தனிப்பட்டதாக, உள்ளம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அழைக்கிறார் இறைவன்.
இப்போதெல்லாம் காத்திருப்பு என்பது அடியோடு இல்லாமல் போய்விட்டது. பசித்த பின் சமைத்து உண்ட காலம் போய், துரித உணவு கடைகளில் வரிசையில் நிற்கும் காலமாகிவிட்டது. பேருந்திற்கு காத்திருந்த காலம் போய், மகிழுந்து வண்டிகளை நாடும் காலம் வந்துவிட்டது. சிலர் பொழுதை போக்குவதற்காக பார்க்கும் காணொளிகளைக் கூட நிதானமாக காத்திருந்து பார்ப்பது கிடையாது. எவ்வளவு நேரம், கடைசியில் எப்படி இக்காணொளி முடிகிறது என்பதை முங்கூட்டியே அறிய, சிகப்பு வரியை கடைசி வரை இழுத்து பார்த்துவிடுவது. ஏனெனில் எல்லாமே நமக்கு உடனடியாக நடக்க வேண்டும். பிறப்பு வளர்ப்பு,  உணவு, படிப்பு, வேலை, வருமானம் சொத்து என எல்லாமே துரிதமாக இருக்க வேண்டும் என நினைத்தால் இறப்பும் துரிதமாக வந்துவிடும் அபாயம் இருக்கிறது.  எனவே காத்திருப்போம் காத்திருக்க பழகுவோம்... நிற்க.....   
திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றில் அடியெடுத்து வைத்திருக்கும் நாம் எந்த நிலை காத்திருப்பில் இருக்கின்றோம் என்பதை சிந்திக்க இன்றைய நாளும் வாசகங்களும் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.  நமது காத்திருப்பு எப்படிப்பட்டது? ஆர்வமுள்ள காத்திருப்பா, அணுகுமுறை காத்திருப்பா, சவாலான காத்திருப்பா,  என்னும் தலைப்புக்களில் நம்மை நாமே மதிப்பீட்டாய்வு செய்ய உங்களை அழைக்கின்றேன்.
அணுகுமுறை காத்திருப்பு:
        நமது வீடுகளுக்கு விருந்தினர்களோ உறவினர்களோ வரும்போது அவர்களுக்காக நம்மையும் நமது வீட்டையும் தூய்மை செய்யும் நிகழ்வுக்கு பொருந்தும். வருபவர்களை எப்படி வரவேற்பது , என்ன சமையல் செய்து அவர்களை நிறைவிப்பது, எப்படிப்பட்ட பரிசுப் பொருள்கள் கொடுத்து மகிழ்விப்பது, என்றெல்லாம் பலவாறாக எண்ணி அவர்களை மையமாக வைத்து நமது செயல்களை செய்வோம். (இப்போதெல்லாம் இதுபோல் இல்லை . எளிமையாக, வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்து , உணவகத்திற்கு அழைத்து சென்று, விரும்பியதை தேர்ந்தெடுத்து உண்டு வீடு திரும்புதல் தான் பழக்கத்தில் பெரும்பாலும் உள்ளது ) விருந்தினர்களை மகிழ்வித்து செய்யும் இச்செயல்கள் எல்லாம் நமக்கும் அவர்களுக்குமான உறவினை பலப்படுத்த, ஆழப்படுத்துவதற்காக செய்யப்படுபவை. விவிலியத்தில் இதற்கு உதாரணம் மார்த்தா மரியாள் இவர்களின் எதிர்பார்ப்பு. இயேசுவுடனான அவர்களின் உறவினை ஆழப்படுத்த தங்களையே தயார் செய்தவர்கள் இவர்கள். சாதாரண மனிதர்களுடனான உறவிற்கே இவ்வளவு ஏற்பாடுகள் தேவைப்படுகிறதென்றால் இறைவன் அவர்தம் மகனை நம்மிடம் அனுப்ப இருக்கின்றார் . அப்படியென்றால் நமது ஆயத்த ஏற்பாடுகள் எத்துணை சிறப்பு மிக்கதாக இருக்க வேண்டும். நமது வீட்டை அல்ல, நமது மனத்தை தூய்மை செய்ய வேண்டும். நற்செயல்கள் கொண்டு அவரை வரவேற்க வேண்டும். பிறர் உதவிப் பணிகள் கொண்டு அவருக்கு மகிழ்வினை தரவேண்டும். இவ்வாறாக அவருக்கும் நமக்குமான உறவு பலப்பட ஆழப்பட தேவையான அணுகுமுறை செயல்களை செய்து அவருக்காக காத்திருக்க நம்மை அழைக்கின்றார்.
ஆர்வமுள்ள காத்திருப்பு;
          மேற்படிப்புக்காக பள்ளி கல்லூரியில் இருந்து வரும் செய்திக்காக காத்திருத்தல், திருமண நாளுக்காக காத்திருத்தல், குழந்தைக்காக காத்திருத்தல் இவை அனைத்தும் ஆர்வமுள்ள காத்திருப்பு. பெரும்பாலும் இவ்வகைக் காத்திருப்பு காலம் எல்லாம் கனவில் தான் கடந்து போகும். நான் எதிர்பார்க்கும் பள்ளி கல்லூரியில் இடம் கிடைத்தால் நன்றாக படிப்பேன். நிறைய மதிப்பெண்கள் எடுப்பேன் என்றும், இந்த திருமணம் நடந்தால் அதன் பின் நன்றாக வாழ்வேன். எல்லோரையும் அன்பு செய்து வாழ்வேன். இந்த குழந்தையை நன்றாக வளர்ப்பேன். எல்லா கலைகளையும் கற்றுக் கொடுப்பேன். என்று  கனவிலே அந்த வாழ்க்கையை பாதி வாழ்ந்துவிடுவார்கள். ஆர்வத்தோடு அதன்பின் நடக்க இருப்பவற்றை நல்லமுறையில் செய்ய காத்திருக்கும் காலம் அது. விவிலியத்தில் ஊதாரி மைந்தனின் தந்தை இதற்கு ஒரு நல்ல உதாரணம். தன் மகனின் வருகையை தூரமாக நின்று எதிர்பார்த்தார். மகன் திரும்பி வந்தவுடன் அவனது எதிர்பார்ப்பிற்கும் மேலாக அவனை அன்பு செய்து அவனுடனான உறவை புதுப்பிக்கிறார். அதனால் தான் இரக்கமுள்ள தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இத்தகைய காத்திருப்பு நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நாமும் நம் அன்பர் இயேசுவின் வருகைக்காக காத்திருக்கின்றோம். நமது காத்திருப்பும் அவர் வந்த பின் என்ன மாற்றம் எல்லாம் நம்முள் நிகழப்போகிறது என்ற ஆர்வத்தை மையமாக வைத்தே இருக்க வேண்டும் என இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
சவாலான காத்திருப்பு:
    தேர்வு நாளுக்காக நம்மையே தயார் செய்தல், போட்டிகளுக்காக நம்மை ஆயத்தம் செய்தல், போன்றவை இதில் அடங்கும். எல்லாவற்றையும் படித்து தயார் செய்து இருந்தாலும் ஒருவித பய உணர்வுடனே அந்நாளை நாம் எதிர்கொள்வோம். இதை நான் எப்படியாவது நல்ல முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்னும் ஒரு ஆர்வத்துடன் கூடிய பயம் அதில் இருக்கும். கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் எனும் இலட்சிய நோக்கு அதில் இருக்கும். பெரும்பாடுள்ள பெண் இதற்கு ஒரு சான்று. இயேசுவை கண்டால், அவரது ஆடையின் நுனியைத் தொட்டால் தன் நோய் நீங்கும் என்று உறுதி கொண்டாள். ஆனால் அவரை அருகில் நெருங்குவது அவளுக்கான சவால். தன்னை யாரும் பார்த்து விடக்கூடாது, ஆனாலும் ஆடையைத் தொட வேண்டும் என்று எண்ணினாள். பயத்துடனும் ஆர்வத்துடனும் இயேசுவை அணுகினாள். வெற்றி கொண்டாள். நாமும் இயேசுவை எதிர் கொண்டு காத்திருக்கின்றோம். இதனால் நமது பழைய வாழ்வு மாற்றமடையலாம். புதுவிதமான செயல்பாடுகள் நம்மில் ஏற்படலாம். நாம் இத்தகைய சவாலுக்கு தயாரா ? நமது வாழ்வில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களும் செயல்களும் நம்மை விட்டு நீங்க, புது மனிதனாக மாற்றமடைய சவாலை எதிர்கொண்டு நாம் காத்திருக்க இறைவன் நம்மை அழைக்கின்றார்.
இவ்வாறாக நமது காத்திருத்தல் ஆர்வமுள்ளதாக அணுகுமுறையானதாக சவாலானதாக இருக்கின்றதா என்பதை சிந்தித்து பார்க்க இன்றைய நாளும் இத்திருவருகைக்காலமும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. காத்திருப்பவன் கண்டடைவான். நாம் காத்திருந்தோமானால் நாமும் கண்டடைவோம். ஆனால் எப்படி காத்திருக்கிறோம் என்பது ஒவ்வொருவரைப் பொருத்தது. காத்திருத்தல் அனுபவம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அதை அனுபவித்தால் மட்டுமே அந்த மகிழ்வை உணர முடியும். நாமும் காத்திருப்போம் நமது வாழ்வின் முறைகளை நல்ல முறையில் மாற்ற வரும் நம் பாலன் இயேசுவிற்காக காத்திருப்போம். நமது காத்திருப்பு இன்று முளைத்து நாளை மறையும் காளான் போன்ற திரைத்துறை, அரசியல் தலைவர்களின் வருகைக்காக இல்லாமல் நம்மை படைத்து மீட்க காத்திருக்கும் ஆண்டவனுக்காக மட்டுமே இருக்கட்டும். காத்திருப்போம் காலம் கடந்த கருணாமூர்த்திக்காக.... கொன்னூர்த் துஞ்சினும் யாந்துஞ்சலமே.... என்னும் வரிகளுக்கேற்ப காத்திருப்போம் ...... இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருப்பதாக ஆமென். 

Thursday, 29 November 2018

birthday mass intro


அரிது அரிது பிறத்தல் அரிது
அதனினும் அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.
ஆம் பிறப்பு என்பது கடவுள் நமக்களித்த மாபெரும் கொடை . அதிலும் மனிதராய்ப் பிறந்து, மனிதத்தோடு வாழ்வது என்பது இப்பொதெல்லாம் அரிதினும் அரிதாக மாறிவிட்டது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மனுமகனின் அன்பை அடையாளமாக வெளிப்படுத்தவே பிறக்கின்றது என்பர் அறிஞ்ர்கள்.  அவ்வகையில் மனிதனாய்ப் பிறந்து , அந்த மனித வாழ்வை மனுமகனின் அன்பு பணி செய்வதற்கு அர்ப்பணித்து வாழ்ந்து ,இன்று தங்களின் பிறப்பின் மகிழ்வினால் நமக்கும் மகிழ்வூட்டூம் அருட்தந்தையர்களை மகிழ்வுடன் வாழ்த்தி செபிக்க நாம் கூடியுள்ளோம்.  இந்நேரத்தில் பிறப்பு என்னும் ஒரு அரிய கொடைக்காக ,படைப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறும் நம் அன்பு உள்ளங்களோடு இணைந்து நாமும் நன்றி கூறுவோம்.       உறவு என்னும் உன்னதமான வலைப் பின்னனில் நம்மையும் அவர்களோடு இணைத்த,  இறைவனின் ஈடு இணையில்லா செயலுக்காக நன்றி கூறுவோம்.  இன்று இவர்களது உடனிருப்பாலும் உறவிணைப்பாலும் மகிழும் நம்மைப் போல் உலகின் பல திசைகளிலிருக்கும் இவர்களின் உன் பிறப்புகள் உற்றார் உறவினர்கள் நண்பர்காள் அன்பர்கள் அனைவருக்காகவும் சிறப்பாக செபிப்போம்.
பிறப்பை இறைவனின் மாபெரும் படைப்பாய்….
வாழ்ந்திடுவீர்  நீவீர் என்றும் துடிப்பாய்.
படைத்தவன் பார்க்கும்  வியப்பாய்
உம் வாழ்வு மலரட்டும் செழிப்பாய்
வாழ்க்கை இனிக்கட்டும் இனிப்பாய்
வரம் நூறு பெற்றிடட்டும் நிலைப்பாய் என்று வாழ்த்தி நன்னாளாம் இப்பொன்னாளில் உமது எண்ணங்கள் ஈடேற்றமடைய, செய்யும் செயல்கள் சிறப்படைய, எடுக்கும் முயற்கிகளில் இறையருள் தொடர்ந்து நிலைக்க அருள் வேண்டி செபிக்கிறோம். அன்பர் பணிக்காக அழைப்பினை ஏற்று பணி செய்யும் நீவீர், உங்களது அன்பு பணியினாலும் சொல்லாலும் அனைவரையும் ஆண்டவர் பக்கம் அழைத்து செல்லும் அன்பின் கருவிகளாக தொடர்ந்து நிலைக்க அருள் வேண்டி  கல்வாரிப் பலியில் தன்னை தியாகமாக தந்த நம் தலைவர் இயேசு நமது மன்றாட்டுக்களுக்கு செவிமடுத்து அருள் பொழிய வரம் வேண்டி இத்தியாக திருப்பலியில் பக்தி நிறை மகிழ்வுடன் பங்கேற்போம் ….

Friday, 23 November 2018

அனைத்துலகின் அரசர் இயேசு.....


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்று நமது தாய் திருச்சபையானது இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் என்னும் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. அரசர் என்பவர் யார் ? அவரின் பண்பு குண நலன்கள் என்ன?  இயேசு நமக்கு யாராக இருந்தார் இப்போது யாராக இருக்கிறார் எனும் கேள்வி சிந்தனைகளுடனே இன்றைய வாசகங்களுக்குள் நுழைவோம்.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.  என்பது அரசனுக்கு கொடுக்கப்படும் திருக்குறள் சான்று. நல்ல வீரமிக்க படை, நாட்டுப்ப்பற்று உள்ள மக்கள், குறையாத செல்வம், நல்ல அமைச்சர்கள், ஆபத்தில் உதவும் நண்பர்கள், நல்ல பாதுகாப்பான அரண் இவை ஆறையும் உடைய மன்னன் உயர்ந்த அரசர்களுள் ஒருவனாக கருதப்படுவான் என்கிறார் திருவள்ளுவர். இயேசு இவை அனைத்தையும் கடந்தவர். அவர் அரசர்களுக்கெல்லாம் பேரரசர். அவரிடம் உள்ள படைபலம் மனித படைபலத்தை விட உயர்ந்தது. அவரது அரசின் கீழ் உள்ள மக்கள் அவர் மேல் அளவற்ற பற்று கொண்டவர்கள். மேலும் அள்ள அள்ள குறையாத செல்வத்தையும், நல்ல பணி புரியும் பணியாளர்களையும், நண்பர்களையும் அரண் சூழ் பாதுகாப்பையும் கொண்டது அவரது அரசு. கேள்வி என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் அவரது அரசைச் சார்ந்த மக்கள் தானா என்பது தான். அவரை அரசராக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தோமானால் நமது வாழ்வு முறை அவரைப் பிரதிபலிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் சாதாரண ஒரு அரசியல் தலைவனைப் பின்பற்றி வாழும் சாதாரண மக்களின் வாழ்வு முறை போல் நமது வாழ்வு முறை அமைந்துவிடும்.
இயேசுவின் அரசாட்சி எத்தகையது?
இன்றைய முதல் வாசகம் இயேசுவின் அரசாட்சி என்றுமுள ஆட்சி, முடிவில்லாத மாட்சி, அழியா அரசாட்சி என்று எடுத்துரைக்கின்றது . இரண்டாம் வாசகமோ, அகரமும் நகரமும் ஆனவர், இருந்தவர், இருக்கின்றவர், வரஇருக்கின்றவர் என்று அரசராம் இயேசுவை பற்றி எடுத்துரைக்கின்றது. நற்செய்தி வாசகமோ தனது அரசின் கீழ் இருக்கும் மக்களைப் பற்றி கூறுகிறது. அவர்கள் உண்மையை சார்ந்தவர்கள் ,என் குரலுக்கு செவிசாய்க்கின்றவர்கள், எனக்காக போராடுபவர்கள். என்று தனது மக்களைப் பற்றிக் கூறுவதாக அமைகின்றது. ஆக ,வாழும் இடம், வாழவைக்கும் தலைவன், வாழும் நாம் இவை மூன்றைப் பற்றியும் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
வாழும் இடம்;
கிறிஸ்து இயேசு நம் அரசர் என்றால் நாம் வாழும் இடத்தில் அவரது அமைதியான அரசு இருக்க வேண்டும். அவரது புகழ் என்னும் மாட்சியை ஓயாது கேட்கும் சூழல் நிலவ வேண்டும். அவரது அன்பான அழிந்து போகாத வழிநடத்துதல் நிலைத்திருக்க வேண்டும். நாம் வாழும் சூழல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அமைதியான சூழல், இறைப்புகழ், வழிநடத்துதல் இருக்கிறதா? இல்லையே அமைதிக்கு பதில் ஆர்ப்பாட்டம். எங்கும் சந்தடி குழப்பம், மழை வெள்ளம் புயல் என பாதிப்புகளின் பயங்கரங்கள் என நம்மை சுற்றிலும் அமைதியற்ற ஒரு சூழல் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இருக்கும் இடத்தில் அமைதி இல்லாதபோது உள்ளத்தில் அமைதி நிலவுவது எப்படி சாத்தியமாகும்?  இப்படி இருக்க நாம் வாழும் இடத்தில் இறைவனின் அரசை அரசாட்சியை எப்படி நிலைநாட்டுவது ? உதாரணம் இயேசு தான் . தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்களே தன்னை கொல்லத் துடிக்கும் போதும் நிதானமாக அமைதியாக இருக்கின்றார் இயேசு. என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்று தெளிவாகக் கூறுகின்றார். அத்தனை சந்தடியிலும் தன் மனதை அமைதியாக வைத்திருக்கின்றார். அதன்பயனாக அமைதியான அரசாட்சியை இன்றும் ஆண்டு வழிநடத்திக்கொண்டிருக்கின்றார். வாழுகின்ற இடத்தை பாலைவனமாகுவதும் சோலைவனமாக்குவது நமது உள்ளமும் அது சார்ந்த எண்ணமும் தான் என்பது உணர்ந்து வாழ்வோம்.
வாழவைக்கும் தலைவன்;
தலைவன் அரசன் மன்னன் வேந்தன் என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அதன்பொருள் ஒன்று தான் . தன்னை நாடி வந்த மக்களை, தனக்கு கீழ் இருக்கும் மக்களை அன்போடு வழிநடத்துபவனே உண்மையான அரசன். அவ்வகையில் இயேசு நமக்கு அரசர் தலைவர் மட்டுமல்ல அவர் நம் நண்பர் . ஏனெனில் அவர் நம்மை நண்பர்கள் என அழைத்திருக்கின்றார்
கொடையளி செங்கோல் குடியோம்பல் ஆகிய நான்கும் உடையவன் அரசன் என்கிறது திருக்குறள் அவ்வகையில் ஏராளமான கொடைகளை அள்ளித்தருபவரும், அன்பு செய்பவரும், நல்லாட்சி புரிபவரும், நம் தேவைகளை நிறைவு செய்பவருமான இயேசு நம்மை வாழவைக்கும் தலைவரே. அவர் காலம் கடந்த தலைவர். என்றும் நிலைத்து இருப்பவர்.  இப்படி ஒரு அருமையான அரசன் நம்மை ஆண்டு வழி நடத்த இருக்க அழிந்து போகக் கூடிய மனித தலைவர்களை நாடி அவர்களுக்காக கோஷம் எழுப்பிக் கொண்டு நம் வாழ்க்கையை வீணடிப்பது முறையா என்று சிந்திப்போம். முறையற்ற தலைவனை பின் தொடர்வது குருடருக்கு குருடர் வழிகாட்டுவதற்கு ஒப்பாகும் என்பதை உணர்ந்து என்றும் நிலைத்து இருக்கும் அரசராம் இயேசுவின் வழியைப் பின் தொடர முயற்சிப்போம்.
வாழும் நாம்;
       வாழும் இடமும் அருமையாய் இருந்து , நம்மை வழி நடத்தும்  தலைவனும் அருமையாய் அமையப் பெற்றாலும், வாழும் நாம் அதற்கேற்ப நம்மை தகுதியானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஓட்டை விழுந்த பானையில் சேகரிக்கும் நீர் போலாகிவிடும் நமது வாழ்வு. எதுவும் தங்காது நிலைக்காது. வெறுமையான பானையாய் மாறிவிடும் நம் வாழ்வு. அதற்கு வாழுகின்ற நாம் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் அனுபவித்து வாழ வேண்டும். அன்பின் அரசராம் இயேசுவின் ஆட்சியின் கீழ் நாம் இருக்கிறோம். எக்குறையும் நமக்கு நேர்ந்திடாது. நிறைவாய் வளமாய் நாம் அவரில் வாழ்வோம் என்னும் நம்பிக்கையோடு வாழவேண்டும். அவர் கூறுவது போல உண்மைக்கு சான்று பகரக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும். அவரது குரலுக்கு செவி சாய்க்கக் கூடியவர்களாக வாழ முயன்றோமானால் அவரது அன்பின் ஆட்சியில் நீடித்த நிலையானதொரு இடத்தை நாம் அடைவோம்.
இயேசு அனைத்துலகின் அரசர் என்னும் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவை நமது முழு மனதுடன் தலைவராக ஏற்று வாழ முற்படுவோம். வாழும் இடமும் நம்மை வாழ வைக்கும் தலைவராம் இயேசுவின் அருளினால் அமைதியான சோலைவனமாக மாற ஆசிப்போம். அவரது அரசின் கீழ் அவரோடு வாழும் நாமும் அரசராம் அவரின் குண நலன் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம். அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்பதே உண்மை என நிருபித்து வாழமுற்படுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.             

Friday, 26 October 2018

விழி திரை விலக்கு.....

கண்ணுடையோர் என்பவர் கற்றோர் என்று திருவள்ளுவரும் , உள்ளத்து ஊனமே உண்மையான ஊனம் ; உடல் உறுப்பின் ஊனம் ஊனமே அல்ல என்று உலகில் வாழ்ந்த பெரியவர்கள் பலரும் கூறியிருப்பதை நாம் நன்கறிவோம் . இன்றைய நற்செய்தியில் இயேசுவும் கண் பார்வையற்ற பர்த்திமேயுவின் நிலையை, நிகழ்வை நமக்கு எடுத்துக் கூறி நாமும் அவர் போல பார்வை பெற்று மகிழ அழைப்புவிடுக்கின்றார். உடல் உறுப்புக்களில் கண் மிகவும் முக்கியமானது. ஐம்புலன்களில் கண்ணையே நாம் அதிகமாக பயன் படுத்துகிறோம். கண்ணைக் கவரும் பொருட்களே  நாக்கிற்கும் நலத்திற்கும் சுவை தரக் கூடியது என எண்ணுகிறோம். உண்ணும் பொருளாக இருந்தாலும், உடுக்கும் உடையாக இருந்தாலும், உறைவிடத்திற்கான உபயோகப்பொருளாக இருந்தாலும், கண்ணின் சுவைக்கே நாம் முதலில் இடம் கொடுக்கின்றோம். இப்படியிருக்க இந்த விழி இல்லாத மக்களின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. ஆனால் இவர்கள் விழிகளின் குறைபாட்டை பிற புலங்களின் வழி நிறைவு செய்து கொள்வர். உதாரணத்திற்கு இவர்களின் செவித்திறன், தொடு உணர்வு, நுகரும் திறன், இனிமையான குரல், பேச்சுத் திறன் என மற்ற அனைத்து புலன் உறுப்புக்களின் நுண்ணறிவும் மிகக் கூர்மையானது. ஆனால் கண் பார்வை உடைய நமது பிற புலன் உறுப்புக்களின் நுண்ணுணர்வு இவர்களை விட  மிக மிகக்குறைவே... நிற்க....
இன்றைய நற்செய்தியில் பார்வை இழந்த பர்த்திமேயுவிற்கு இயேசு பார்வை வழங்கிய நிகழ்வினை நாம் வாசிக்கக் கேட்டோம். இந்நிகழ்வில் இடம்பெறும் கதைமாந்தர்களான பர்த்திமேயு, இயேசு, மக்கள் கூட்டம் இவர்களின் செயல்பாடுகள் வழி இறைவன் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன என்பதை உணர முற்படுவோம். மனத்திரை அகற்றிய பர்த்திமேயு, விழித்திரை நீக்கிய இயேசு , முகத்திரை களைந்த மக்கள் கூட்டம்.
மனத்திரை அகற்றிய பர்த்திமேயு;
 பர்த்திமேயு பார்வையற்றவர் தனது இயலாமையினால் ஊரின் வெளியே அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார். விழிகளில் திரை விழுந்தாலும் மனதினை விசாலமாக்கி மனத்திரை அகற்றி காத்திருக்கின்றார். தாவீதின் மகனே என்மேல் இரங்கும் என்ற வரிகளை செபமாக மாற்றி, தனது இயலாமையிலும் இறைப்புகழ் பாடும் மனவலிமை பெற்றவராயிருக்கிறார். கண் பார்வை இல்லாவிட்டாலும் கேட்கும் திறன் வைத்து தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியும் வல்லமை பெற்றவராயிருக்கிறார். தனது தேவை என்ன என்பதை நன்கறிந்தவராயிருக்கிறார். புதிய வாழ்வு கிடைத்தவுடன் பழையனவற்றை தூக்கி எறியும் மனப்பாங்கு உடையவராயிருக்கின்றார். நாமும் பல நேரங்களில் பர்த்திமேயுவின் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். துன்பத்திலும் இறைப்புகழ் பாடும் மனவலிமை நம்மிடம் இருக்கிறதா? நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியக் கூடியவர்களாக நாம் இருக்கின்றோமா? நமது தேவை என்னவென்றும் , பழையனவற்றை தூக்கி எறியும் மனப்பாங்கும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்திப்போம்..... பர்த்திமேயு போல மனத்திரையை அகற்றி அதை விசாலமாக்கி அதில் இறைவனின் பிரசன்னம் நிலைத்திருக்க அருள் வேண்டுவோம்.
விழித்திரை நீக்கிய இயேசு:
     கண் தான் உடலுக்கு விளக்கு என்பதை நன்கறிந்த இயேசு, விழி திறன் இழந்த அவருக்கு திறன் தருகின்றார். தன்னைச்சுற்றி கூச்சல் போட்டுக் கொண்டு வரும் மக்களின் மத்தியில் பர்த்திமேயுவின் குரலினை கண்டு கொள்கின்றார். நின்று, அவரை தன்னிடம் அழைத்து வரச்சொல்லுகின்றார். அவரின் மன்றாட்டுக்களுக்கு மதிப்பளிக்கின்றார். உனது தேவை என்ன என்று கேட்டு அதனை நிறைவு செய்கின்றார். அவரது விழியினை மூடியிருந்த திரையினை அகற்றி அவருக்கு புது வாழ்வு கொடுக்கின்றார். பல நேரங்களில் நாம் புலம்புவது உண்டு .. என்ன வேண்டுதல் செய்து என்ன புண்ணியம் கடவுள் என் குரலுக்கு செவிமடுப்பதே இல்லை என்று. பார்வையற்ற பர்த்திமேயுவை மக்கள் கூட்டம் அமைதியாயிருக்குமாறு சொன்ன பிறகு தான் அவர் இன்னும் வேகமாக கத்த தொடங்குகின்றார். அந்த அவரின் விடாமுயற்சி நம்பிக்கையைப் பார்த்து தான் இயேசு சொல்கின்றார். உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று என்று. இயேசு பல நேரங்களில் நாம் வேண்டுபவற்றை உடனே தருவதில்லை. பல இடையுறுகளை நாம் மன்றாடும் போதே கொடுப்பார். சிலர் தொடர்ந்து உரக்கக் கத்தி, தொடர்ந்து செபித்து வேண்டியதை பெற்றுக்கொள்வர். சிலர் தொய்வடைந்து அப்படியே உட்கார்ந்து விடுவர். நாம் எப்படி என்று சிந்திப்போம். இயேசு நமது குரலை நன்கு கேட்குமளவுக்கு நமது வேண்டுதல்களையும் செபங்களையும் தொடர்ந்து செய்வோம்.
முகத்திரை களைந்த மக்கள் கூட்டம்;
        ஏராளமான மக்கள் இயேசுவைப்பின் தொடர்கின்றனர். பலர் அவரவர்களது தனிப்பட்ட நலனுக்காக அவரைப் பின்பற்றி இருப்பர். சிலர் ஊரே செல்கிறது நாமும் உடன் செல்வோம் என்ற எண்ணத்தில் சென்றிருப்பர். பர்த்திமேயுவை அதட்டி அமைதியாக்க முயன்றிருப்பர். சிலர் அவருக்காக இயேசுவிடம் பரிந்து பேசி நலம் பெற உதவி இருப்பர். இப்படி பலர் இருக்க இதில் பர்த்திமேயுவிற்கு ஆறுதலும் நம்பிக்கையும் கூறிய மக்கள் கூட்டத்தார் போல நாம் இருக்க அருள் வேண்டுவோம். தன்னுடைய தேவைகள் பல இருக்க தன்னுடன் வாழ்பவர்களின் நலனுக்காக பாடுபடும் மக்கள் போல நாமும் மாற முற்படுவோம். தங்களது தேவைகள் என்னும் முகத்திரை களைந்து பிறரின் நலன் நாடும் அவர்கள் போல நாம் வாழ இறைத்துணை நாடுவோம். நம்முடன் வாழும்  துன்புறும் மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை இயேசுவிடம் அழைத்து வருபவர்களாக மாறுவோம். பத்தோடு ஒன்று பதினொன்று அத்தோடு ஒன்று நானொன்று என்று வாழாமல், தனித்தன்மையோடு வாழ முற்படுவோம். நமக்காக வாழ்வதோடு மட்டுமல்லாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ்பவர்களாவோம்.
இவ்வாறாக மனத்திரை அகற்றி, விழித்திரை நீக்கி, முகத்திரை களைந்து தூய மக்களாக வாழ இறைவன் அழைப்புவிடுக்கின்றார். நன்மைகளைக் காணாதவாறு  நமது பார்வையை மறைத்திருக்கக் கூடிய கோபம், வன்மம், பொறாமை, தீய எண்ணம் என்னும் திரைகளை இறை முன்னிலையில் சுட்டெரிப்போம். இயேசுவை இறைவனை நோக்கி நமது மன்றாட்டுக்களை எழுப்பிக் கொண்டே இருப்போம். இதைதான் பவுலடியார் தனது திருமுகங்களிலே இடைவிடாது செபியுங்கள் என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் என்கிறார். நாமும் தொடர்ந்து செபிப்போம். நம் குரல் இறைவனின் காதுகளை எட்ட இடையூறாக இருக்கக் கூடிய அனைத்து சூழ்நிலைகளையும் தகர்த்தெறிவோம். பிறரின் வேண்டுதல்களுக்கும் மதிப்பளிப்போம். நமக்காக நம்முடைய தேவைகளுக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் பிறரின் தேவைகளுக்காகவும் செபிப்போம் . எல்லாவற்றிற்கும் மேலாக பிறரை இயேசுவிடம் கொண்டு சேர்க்கும் ஒரு காரணியாக மாறுவோம். நமது விழித்திரை அகற்றி புதியதோர் உலகம் காண முயல்வோம் . இறைவனின் அருள் என்றும் நம்மீதும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென். 

Friday, 12 October 2018

அருளா? பொருளா?

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இருந்தும் இல்லாதது போலவே என்பார் திருவள்ளுவர். கடவுளின் அருள் நம்மிடம் இல்லை என்றால் அவ்வுலகமாகிய நிலைவாழ்வு நமக்கு இல்லை. பொருள் இல்லையென்றால் நாம் வாழும் இவ்வுலகத்தில் எதுவும் நமக்கு இல்லை. நம்மிடம் இருப்பது அருளா பொருளா ? அதைக் கொண்டு நாம் பெற விரும்புவது அவ்வுலகத்தையா இவ்வுலகத்தையா என்பதை சிந்தித்தறிய இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர், பொன், வெள்ளி, மாணிக்கம், உடல் நலம், அழகு, ஒளி ஆகிய எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக ஞானத்தைக் கருதுகின்றார். அதன் முலம் மேற்கூறிய அனைத்து செல்வங்களையும் நான் பெற்றுக் கொள்வேன் என உறுதிகூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் கடவுளின் வார்த்தையே செல்வங்களுக்கெல்லாம் சிறந்த செல்வம் என்று நம்பிக்கை ஊட்டுகிறார். நற்செய்தியிலோ இயேசு, நாம் பெற்ற செல்வங்களை செயல்களின் மூலம் பிறருக்கு பகிர்ந்தளிக்கச்சொல்கின்றார். ஞானம்,வார்த்தை செயல் என மூன்று வாசகங்களும் ஒவ்வொன்றை செல்வமாகக் கருதுகின்றன. நாம் நமது செல்வமாக கருதுவது எதை என்பதை கண்டறிய இறைவன் நம்மை அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செல்வந்தர் போலவே நாமும் பல நேரங்களில் நமது வாழ்வில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தனது உண்மையான மகிழ்வைத் தேடுபவர்.
தன்னை நல்லவராக காட்டிக்கொள்பவர்.
இழக்க மனமில்லாதவர்.
உண்மையான மகிழ்வைத் தேடுபவர்:
     தான் மிகப்பேரிய செல்வந்தனாக இருந்த போதிலும் தனக்கு ஏதோ ஒன்று குறைவுபடுகின்றது , அது என்ன என்று தேடும் எண்ணம் உடையவராக இருக்கின்றார். நிலைவாழ்வு ஒன்றே தனக்கு மனநிம்மதி மகிழ்வு தரக்கூடியது அதை அடையும் வழி இயேசுவிடம் இருக்கின்றது என்று நன்கு அறிந்து  அவரை எதிர்கொண்டு வருகின்றார். நாமும் இந்த செல்வந்தர் போல செயல்பட்ட தருணங்கள் பல இருக்கலாம். எல்லாம் இருந்தும் வெறுமையாகவும், எதுவும் இல்லாமல் மன நிம்மதியுடனும் இருந்த நாட்கள் ஏராளம். நம்முடைய உண்மையான மகிழ்வை மனநிம்மதியை நாம் எங்கு தேடிக்கொண்டிருக்கின்றோம் என்று சிந்திப்போம். செல்வந்தர் நிலை வாழ்விற்கான வழி ஒன்றே தனது மகிழ்விற்கான காராணம் என்பதை கண்டறிந்தார். அதைக் கண்டடைய விரும்பி இயேசுவை எதிர் கொண்டார். நாம் நமது பயணத்திற்கான பாதையை கண்டறிந்துவிட்டோமா? சிந்திப்போம்.
தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்பவர்:
       நல்ல போதகரே என்று கூறி இயேசுவின் அன்பைப் பெற எண்ணுகின்றார். முழந்தாள்படியிட்டு அனைவரும் தன்னை பார்க்கும் நிலைக்கு ஆளாக்குகின்றார். உணவிற்காகவும் உடல்நலத்திற்காகவும் அவரைப் பின் தொடரும் மக்கள் மத்தியில் நிலைவாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டு அனைவரையும் வியக்க வைக்கின்றார். சிறுவயது முதலே தான் அனைத்து கட்டளைகளையும் கடைபிடிப்பதாக அனைவர் முன்னிலையிலும் எடுத்துரைக்கின்றார். நாமும் இப்படித்தான் இந்த செல்வந்தர் போல செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். நம்மை அடுத்தவர் முன்னிலையில் பெரியவர்களாக  காட்டிக்கொள்ள என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றோம். வீண் பகட்டும் ஆடம்பரமும் நம்மை நம்முடைய இயல்பு வாழ்க்கையிலிருந்து  வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது. அதை உணராது நாம் பிறர் முன் நம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயன்று கொண்டிருக்கின்றோம். மனிதர் முன் தன்னை பெரியவனாக காட்டிக் கொள்ள முற்படுபவன், கடவுள் முன் சிறியவனாகக் கருதப்படுவான். மனிதர் முன் சிறியவனாக தன்னை தாழ்த்துபவன் கடவுள் முன் பெரியவனாக உயர்த்தப்படுவான். நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் சிந்திப்போம்.
இழக்க மனமில்லாதவர்:
      நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பர். செல்வந்தரின் விசயத்தில் அது பொய்யாகிப் போனது. நிலைவாழ்வைப் பெற வேண்டும் அதற்கான வழி இயேசுவிடம் உள்ளது என்று கண்டறிந்து அவரை எதிர்கொண்டு வந்தார். ஆனால் முடிவு நினைத்தது போல் இல்லை. இயேசு சொன்ன வார்த்தைகளை அவரால் வாழ்வாக்க முடியவில்லை. அதனால் பயணத்தில் வெற்றியும் பெற முடியவில்லை. உண்மையான நிலைவாழ்வு பெற உனக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடு என்று சொன்னதை அவரால் செயல்படுத்த முடியவில்லை.விளைவு பயணத்தில் திருப்பம். எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதை உணராமல் வாழ்வதினால் தான் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் பெறாமல் இருக்கின்றோம். இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கும்,  நாம் அவருக்காக இழக்க நினைக்கும் ஒன்றை இழக்க துணிவோம்,முயல்வோம். இழப்போம் மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கையில். 
இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் போல எல்லாவற்றையும் இழப்போம் நம்மிடம் சேரும் செல்வம் பொருள் , பெயர் பதவி என் அனைத்தையும் இறைவனுக்காக இழப்போம். நூறு மடங்காக திரும்ப பெற்றுக் கொள்வோம் என்னும் நம்பிக்கையில்.  அருளா? பொருளா ? என்றால் பொருளை பகிர்ந்து அருளை பெற்றுக்கொள்வோம். இவ்வுலகில் வாழும் மனிதர்களோடு நம்முடைய அனைத்தையும் பகிர்ந்து அவ்வுலகத்திற்கு செல்ல அடிக்கல் நாட்டுவோம். நிலைவாழ்வை நோக்கிச்செல்லும் நமது பயணத்தில் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் நேரடியாக பயணிக்க அருள் வேண்டுவோம்.இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து பகிர்வு என்னும் செல்வத்தை நம்முடையதாக்குவோம் .  இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.  

Saturday, 6 October 2018

இருவர் அல்ல ஒருவராக ஒன்றிணைக்கப்பட.....


 இன்றைய இறைவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நம்மை இறை குடும்ப உறவோடு ஒன்றித்து  வாழ அழைக்கின்றன. முதல் வாசகம், படைப்பின் தொடக்கத்தில் இருவர் ஒருவராக இணைந்து ஒன்றித்தது பற்றியும் , இரண்டாம் வாசகம் இயேசுவோடு நாம் மாட்சியில் பங்குகொள்ள ஒன்றிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும், நற்செய்திவாசகமோ கணவன் மனைவி திருமண உறவில் ஒன்றித்து வாழ்வது பற்றியும் எடுத்துரைக்கின்றன. தமிழ் சங்க இலக்கியங்களில் கணவன் மனைவி உறவு, ஆண் பெண் திருமண உறவு எப்படி இருந்ததை பாடல்கள் மூலம் அழகாக சொல்லி இருப்பர். 
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே". என்பது பாடல் வரிகள் நீ யார் ,நான் யார் என்று தெரியாது . உனது தாய் தந்தையர்கள், எனது தாய் தந்தையர்கள் யார் என்று அறீயோம். ஆயினும் நமது நெஞ்சம் செம்மண்ணில் கலந்த நீர் போல  இரண்டறக் கலந்து விட்டது என்று தலைவன் தலைவியை நோக்கி பாடுவதாக பாடலின் பொருள். திருமணத்தன்றும் அதன்பின் சிலகாலமும் இப்படி தான் நமது திருமணத் தம்பதியர்கள் இருக்கின்றனர். ஆனால் அதன் பின் செம்மண், நீர் கலக்க முடியாத படி இறுகியும் , நீரானது திரவ நிலை மாறி திட நிலைக்கு தன்னை மாற்றியும் காட்சியளிக்கின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உன்னோடு இருப்பேன் என்று அனைவர் முன்னிலையிலும் அறிக்கையிட்ட மனிதர்கள் தான் , தங்களது துணைவன் துணைவியை தமது சுயநலத்திற்காக விட்டுச்செல்கின்றார்கள். இப்போதெல்லாம் விவாகரத்து ஒரு நிமிடத்திற்கு பத்து உலகளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பிரச்சனை இன்று நேற்று மட்டுமல்ல . இயேசுவின் காலத்திலும் ஏன் மோசே காலத்திலும் இருந்தது என்பதற்கு நம்முடைய இன்றைய வாசகங்கள் சான்று. ஏன் ? எதனால்? இந்நிலையில் எவ்வாறு ஒன்றித்து வாழமுடியும் ?
கணவன் மனைவி உறவு மேம்பட  நம் ஒவ்வொருவரின் குடும்பமும் திருக்குடும்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி சிந்தித்து தியானிக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.  நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர், ஏனெனில் பல்கலைக்கழகத்தில் தான் சிறப்பாக கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடியும் . நமது குடும்பங்களில் நாம் ஒருவர் மற்றவரிடம்(கணவன்,மனைவி) இருந்து நல்லவற்றை, சிறப்பானவற்றைக் கற்றுக்கொள்ளவும், (பிள்ளைகளுக்கு) கற்றுக்கொடுக்கவும் முடியும். அதனால் தான் குடும்பத்தைப் பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடுகின்றார்கள். நமது குடும்ப உறவு மேம்பட, நாம் ஒன்றிப்புடன் வாழ நம்மில் தளிர்க்க வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும் இரண்டு.
தளிர்க்க வேண்டியவை அன்பும் அளவளாவுதலும். தவிர்க்க வேண்டியவை அகங்காரமும் அலட்சியமும். நம்மில் தவிர்க்க வேண்டியவற்றை நாம் தவிர்த்தால் தளிர்க்க வேண்டியவை தானாய்த் தளிர்க்கும்.
அகங்காரம்: அகந்தை, தான் என்னும் முனைப்பு, ஈகோ என்று இதனை எத்தனை பெயர்களில் வேண்டுமானாலும் சொல்லலாம். அகம் தன்னை கொல்லும் அந்த 'ஐ' யை அடியோடு விட்டொழிக்க முயல்வோம். குடும்பத்தில் நான் தான் பெரியவன், அறிவாளி, புத்திசாலி என்று ஒரு கணவனோ மனைவியோ எண்ண ஆரம்பித்தால் குடும்பம் சிதைந்து சின்னா பின்னமாகி விடும். அங்கு வளர்ச்சி இருக்காது தளர்ச்சி தான் இருக்கும். "நான் தான் எல்லாம் " என்னும் அகந்தையை சுமந்து கொண்டு வாழ்ந்தால் , வாழ்வில் காணக்கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களை நாம் காண முடியாது போய் விடும். காகம் ஒன்று தனக்கு கிடைத்த ஒரு மாமிசத்துண்டை வாயில் கவ்வியபடி வானில் பறக்கத் தொடங்கியது. இதனைக் கண்ட பிற காகங்கள் அதனிடம் இருந்து அதை பறிக்க எண்ணி அதைப் பின்தொடர்ந்தன. கூடவே கழுகுகள் இரண்டும் அதை துரத்தின. வாயில் வைத்திருக்கும் உணவா? வாழ்வா என்று எண்ணி காகம் வேகமாக பறக்க ஆரம்பித்தது. உயரத்தில் பறந்த காக்கையை பிற காக்கைகளும் கழுகுகளும் துரத்திய படியே சென்றன. ஒரு நிலையில் காகம் தன் வாயில் வைத்திருந்த மாமிசத்துண்டை கீழே போட்டது. பிற காகங்களும் கழுகுகளும் மாமிசத்தைப் பிடிக்க தொடர்ந்து சென்றன. இப்போது தான் காக்கைக்கு மூச்சு வந்தது. மாமிசம் தான் நிம்மதி என்று எண்ணி அதை பிடித்துக் கொண்டிருந்த போது இல்லாத மகிழ்வு, காக்கைக்கு இப்போது வந்தது. தன் கண்முன் இருந்த அழகான வானத்தை அப்போது தான் ரசிக்க தொடங்கியது. நாமும் நமது குடும்பங்களில் பல நேரங்களில் இப்படி தான், தேவை இல்லாத ஏதாவது ஒன்றை பிடித்துக் கொண்டு நமக்கு எதிரே உள்ள மகிழ்வான தருணங்களை மறந்து விடுகிறோம். எப்போது நமது தான் என்னும் அகந்தையை கீழே வீச ஆரம்பிக்கின்றோமோ அப்போது நம் கண்முன் இருக்கும் அழகிய வாழ்வினை நாம் அணுஅணுவாக ரசித்து வாழ்வோம்.
2. அலட்சியம்: குடும்பங்களில் கணவன் மனைவியையோ இல்லை மனைவி கணவனையோ அலட்சியம் செய்வது மிக சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. என்னை விட நீ உயர்ந்தவர்/ள் அல்ல . உனக்கு ஒன்றும் தெரியாது. என்று சொல்லிலும் செயலிலும் பலமுறை நாம் அதை செயல்பாட்டில் காட்டுகின்றோம். ஆணோ பெண்ணோ அவரவர் செயலில் அவரவ்ர் சிறப்பு. ஒருவர் மற்றவரை செய்யும் அலட்சியம், இறுதியில் மோசமான விளைவுகளுக்கு காரணமாகின்றது. ஒருவர் மற்றவரிடம் இருக்கும் நன்மைகளை பாராட்டி மகிழ்வோம். சிறு பாராட்டு தான் என்றாலும் அதன் நல்ல பலனை உடனடியாக காண முடியும். அலட்சியத்தின் மிக முக்கியமான செயல் ஒருவர் பேசும் போது அவர் சொல்லுக்கு செவிமடுக்காதது. எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே வைத்து விட்டு அவர்களது சொல்லுக்கு மதிப்பளியுங்கள். நாம் சொல்வதை இவர் கேட்கிறார் என்னும் போதே உங்கள் மீதான அன்பும் மதிப்பும் உயர ஆரம்பிக்கும். நாம் இப்போதெல்லாம் இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் பெற்றவர்களாகிக் கொண்டிருக்கிறோம். விளைவு இரண்டு வேலைகளையும் ஒழுங்காக முடிக்க முடியாது அல்லாடுகிறோம். அலட்சியத்தை அகற்றி அன்பை நம் குடும்பங்களில் புகுத்துவோம். குடும்ப செபம் இதற்கு மிக முக்கிய பங்காற்றும். கூடி செபிக்கும் குடும்ப நிலை மாறி இப்போது கணினியில் குழு உரையாடல்களில் நேரம் செலவழிக்கும் குடும்பங்களாக மாறி இருக்கின்றோம். அந்நிலையை மாற்றி குடும்ப செபம் செபித்து பழகுவோம்.ஒருவரோடு ஒருவர் அன்போடு (உரையாடுவோம்) அளவளாவுவோம்
இறுதியாக, தவிர்க்க வேண்டியவைகளான அகங்காரத்தையும் அலட்சியத்தையும் தவிர்த்து அன்பையும் அளவளாவுதல் என்னும் உரையாடல் (பேசிப் பழகுதல்) பண்பையும் நம்மில் தளிர்க்க வைக்க இறையருள் நாடுவோம். இருவராக இணைந்த தம்பதியினரை ஒருவராக ஒன்றிணைப்பது/மாற்றுவது அன்பின் வலிமை என்றால், பல நபர்களால் ஆன குடும்பத்தை ஒரு அன்பின் கூடாக ஒன்றிணைப்பது/மாற்றுவது குடும்ப செபத்தின் வலிமை. நாம் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே, உருவாக்கப்பட்டவர்கள். இருவர் ஒன்றிணைந்தால் அது திருமணம், பலர் ஒன்றிணைந்தால் அது குடும்பம் எனவே ஒன்றிணைக்கப்பட அருள் வேண்டுவோம். குடும்பமாக குழுமமாக, ஒன்றிணைக்கப்பட அருள் வேண்டுவோம். செம்புலப்பெயல் நீர் போல இறைவனின் அன்பில் இரண்டறக் கலந்து இறையருள் பெறுவோம். இறைவனின் ஆசீரும் அருளும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருந்து நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பதாக ஆமென்.                 

Saturday, 29 September 2018

நீங்கள்லாம் பெரிய ஆளுங்க ...

. நம்முடன் இருக்கும் நமது நண்பர்கள் யாரையாவது நாம் கிண்டல் செய்ய, கலாய்க்க இந்த வார்த்தையை வாக்கியத்தை நாம் அதிகமாக பயன்படுத்துவோம். நீங்கள்லாம் யாருப்பா பெரிய ஆளுங்க... எங்களெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியுமா என்றெல்லாம் சொல்லியிருப்போம். ஒன்று அவர்கள் நம்மை விட்டு தொலைவில் சென்று விட்டார்கள் என்ற வருத்தம் இல்லையென்றால் எங்கே நம்மை விட அதிகமான தொலைவு உயரம் சென்று விடுவார்களோ என்ற பயம் . எனவே அதனை அங்கலாய்ப்பாக மாற்றி இவ்வாறு சொல்வோம். 
உலகில் வாழும் அனைவருக்கும் தாம் இன்னும் அதிகமாக வளர வேண்டும் பொருளளவில் மதிப்பளவில், செல்வாக்களவில் என்ற எண்ணம் உண்டு. யாரும் நான் வளர வேண்டாம் குறைய வேண்டும் என்று நினைப்பது கிடையாது (திருமுழுக்கு அருளப்பரைத் தவிர...)  அப்படியிருக்க இயேசுவின் சீடர்களுக்குள் இத்தகைய கேள்வி எழுந்ததில் வியப்பேதும் இல்லை. பெற்றோர்களின் உயிர் பிரியும் முன் சொத்தினை பங்கு போட விவாதம் செய்யும் மனிதர்கள் வாழும் காலத்தில் இயேசுவின் பிரிவிற்கு பின் அவர் பணியை செய்ய, மக்களை வழிநடத்த தங்களுக்குள் உயர்ந்தவர் யார் என்ற விவாதம் அவர்களுக்குள் எழுகிறது. அதனைக் கவனித்த இயேசு மூன்றே வார்த்தைகளில் அதற்கு பதிலளிக்கிறார். அவரின் இப்பதில் இன்றைய காலகட்டத்தில் யார் பெரியவர் என்று கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கும் பொருந்தும். யார் பெரியவர்? நீயா? நானா? என்று நாம் வாழ்கின்ற சமூகத்தில் சில சமயம் சப்தமாகவும் பல சமயம் மௌனமாகவும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 
இன்றைய நற்செய்தியின் மூலமாக இயேசு யார் பெரியவர் என்பதை நமக்கு மூன்று வார்த்தைகளில் சொல்கிறார். 
1. தொண்டனாயிருப்பவர்.
2. வெறுமையாக்குபவர் .
3. ஏற்றுக்கொள்பவர். 
தொண்டனாயிருப்பவர்...
தொண்டன் என்பவன் ஒரு அடிமட்ட நிலை மனிதன் . தனது தலைவன் மற்றும் மக்களைப் பற்றியும் அவர்களின் சூழல் பற்றியும் நன்கு அறிந்தவன். எந்நிலையிலும் தயாராக இருப்பவன் பிறருக்கு உதவ பகிர விருப்பமுடையவன். நல்ல தொண்டனே சிறந்த தலைவனாக முடியும் என்பதை நன்கு  உணர்ந்ததனாலே தான் இயேசு , உங்களில் முதன்மையானவராக இருக்க விரும்புபவர் முதலில் தொண்டராக இருக்கட்டும் என்கிறார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் அப்படி இருந்தும் காட்டினார் தன்வாழ்வினால். நமது வீடுகளில் யார் தலைவர் யார் தொண்டர்.? வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து குடும்பத்தை நிர்வகிக்கும் தாய்மார்கள் ஒரு போதும் தங்களை தலைவர்களாக எண்ணியது கிடையாது. சாதாரண தொண்டர்களிலும் கீழான பணிவிடை புரிபவர்களாகவே தங்களை நினைத்து பணியாற்றுவர். ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் உள்ள நலன் ஏற்றம் இறக்கம் அனைத்தையும் நன்கு அறிந்தவர் அவர் ஒருவரே. அன்னையர்கள் தொண்டர்கள் போல் செயலாற்றும் தலைவர்கள். எனவே தான் இயேசு ஒரு தொண்டனாக இருந்து ,முதன்மை பெற்று பெரியவர்கள் என்னும் நிலையில் நம்மை நிலைத்து நிற்கச் சொல்கின்றார். அடித்தளத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வோம் அப்போது தான் அதன் மேல் எப்படிப்பட்ட கட்டிடம் கட்டலாம் என்பதை உறுதி செய்ய முடியும். தொண்டனாயிருந்து தூய தலைவராக முயல்வோம். 
2. வெறுமையாக்குபவர் .....
 வெறுமையாக்குதல் என்பது ஒன்றுமில்லாமை . வெற்றிடம். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி ஒருவர் வெற்றிடத்தில் புவி ஈர்ப்பு விசை குறித்த சோதனையை நிகழ்த்தினார். முதலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட உயரமான இடத்திலிருந்து ஒரு இரும்புக் குண்டு, மற்றும் ஒரு பறவையினது மெல்லிய இறகு இரண்டையும் மேலிருந்து கீழே போட்டார். இரண்டும் அதன் அதன் எடைக்கேற்ப, இரும்பு விரைவாகவும் இறகு தாமதமாகவும் பூமியை தரையை வந்தடைந்தது. அதன் பின் ஒரு காற்று புகா வெற்று அறையினுள் இரும்பு இறகு இரண்டையும் வைத்து, தன் ஆராய்ச்சியை மீண்டும் துவக்கினார். அறை முழுதும் வெற்றிடம் . காற்று கூட இல்லை அனைத்தும் வெளியேற்றப்பட்டு, வெறுமையின் கூடாரத்தில் சோதனை நிகழ்த்தப்பட்டது. எடையில் வேறுபாடுடைய இரும்பு இறகு இரண்டும் மேலிருந்து கீழே வர ஒரே அளவு நேரம் எடுத்துக்கொண்டன. காரணம் வெற்றிடத்திற்கு தெரியாது எடை . அதைப் பொருத்தவரையில் இரண்டும் ஒரு பொருள் . மேலிருந்து போடப்பட்ட அவை இரண்டும் பூமியை அடைய வேண்டும் என்பது மட்டுமே அதன் இலக்கு. சாதாரண ஒரு இடம் வெற்றிடமாகும் போதே இவ்வளவு மாற்றம் என்றால் நமது மனம் வெற்றிடமாகும் போது நம்மில் எவ்வளவு மாற்றாம் உண்டாகும் என்று சிந்திப்போம் . இத்தகைய ஒரு வெற்றிடம் நமது மனதிலும் தோன்றி ஏற்றத்தாழ்வு பார்க்காது பணிபுரிய இயேசு அழைக்கிறார். நம்மை வெறுமையாக்கி, வெறுமையில் நிறைவு காண அழைக்கிறார்.
3. ஏற்றுக்கொள்பவர்.....
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்பது தமிழ்க்கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள். தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து இட்டு வாழ்பவர்கள் பெரியவர்கள் .பகிர்ந்திடாதோர் எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் போலாவர் என்கிறார். பொருள் இருப்பவன்- இல்லாதவன், உயர்ந்தவன் -தாழ்ந்தவன் என அனைவருமே சமம் என உணர்ந்து ஏற்று வாழும் மனிதர்களே நல்ல தலைவர்கள் பெரியவர்கள் என இயேசு எடுத்துரைக்கின்றார். ஏற்றுக் கொள்ளுதல் மிகவும் முக்கியமான ஒன்று . எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவரவர் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். நான் தான் உங்கள் அனைவரின் தலைவன் என்று வீடு வீடாய் சென்று சொல்ல வேண்டிய தேவை இல்லை மாறாக, உடன் வாழும் மக்களின் தேவைகளையும் அவர்களின் ஏற்ற இறக்கங்களையும் நன்கு அறிந்திருந்து செயல்பட்டாலே போதும். அவர்களே சொல்வார்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் நாம் தாம் அவர்களின் தலைவர் பெரியவர் என்று. 
எனவே அன்பு உள்ளங்களே செய்வதற்கரிய செயல்களைச் செய்யும் பெரியவர்கள் போல் நாம் செயல்பட முயல்வோம். ஏனெனில் சிறியோர் அத்தகைய செய்வதற்கரிய செயல்களை செய்ய மாட்டார். உடலளவில் சிறியவர்களாக இருந்தாலும் உள்ளத்தளவில் பெரியோராக செயல்பட்டு வாழ அருள் வேண்டுவோம். நம்மால் முடிந்த உதவிகளை தொண்டனைப் போல செய்து , நமது பிறப்பிற்கும் இருப்பிற்கும் (வாழ்க்கைக்கும்) அர்த்தம் இருக்கிறது என்று எடுத்துரைத்து வாழ்வோம். நமது இருப்பால் ஒருவர் பயனடைகிறார் என்றால் நாம் பெரியவர்களே. அப்போது நம்மைப் பார்த்து யாராவது நீங்கள்லாம் யாருப்பா பெரிய ஆளுங்க என்றால், மறுக்காமல் சொல்வோம் ஆம் நாங்களும் பெரியவர்களே என்று..... இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.       

எல்லோரும் இறைவாக்கினர்களே


நாம் எல்லோரும் இறைவாக்கினர்கள் என்று கூறி அதன் படி வாழ நம்மை அழைக்கிறது இன்றைய வாசகங்கள் அனைத்தும். இறைவாக்குரைப்பது ஒரு கொடை அதை அனைவராலும் செய்ய முடியாது. இறைவார்த்தையை எவனொருவன் உள் வாங்கி அதை தன் வாழ்வில் செயல்படுத்துகிறானோ அவனே உண்மையான இறைவாக்கினராக இருக்க முடியும். இறைவாக்குரைக்கும் திறன் நம்மில் மறைந்திக்கிறது. நாம் தாம் அதை நம் செயல்களாலும் சொற்களாலும் வெளிப்படுத்தவேண்டும். இதனையே மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இவ்வாறு கூறுவார், "இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது நம் ஒவ்வொருவரின் கைகளில் இருக்கிறது" என்பார். அது உண்மை தான். நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை எது என்பதை கண்டறிந்து அதை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கு உறுதுணையாகவே நமது புலனுறுப்புகள் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய உறுப்புகள் நமது நன்மைக்கு உதவாது நம்மை தீமை செய்யும் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்து விடவும் தயங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. கண் கை கால் இவை மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகள். அதுவும் இன்றைய தலைமுறையினராகிய நமக்கு கண்ணும் கையும் மிக மிக முக்கியம். அலைபேசியில் நம்மை ஐக்கியப்படுத்த...
இன்றைய முதல் வாசகத்தில் நிகழ்வது  போலவே நற்செய்தியிலும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அது நம்மைச்சாராத ஒருவர் நம் பணியைச்செய்கிறார் என்ற புகார். அதற்கு மோயீசனும் இயேசுவும் கூறும் பதில் ஒன்று. நமக்கு எதிராக இராதவர் நமக்கு சார்பாக இருக்கிறார் என்று உறுதி தருகிறார் இயேசு. ஆண்டவரின் மக்கள் அனைவரும் இறைவாக்கினராகும்படி அவர் அவர்களுக்கு தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு என்று எண்ணி மகிழ்கிறார் மோயீசன் . முதல்  இரண்டாம் வாசகத்தில் இறைவாக்குரைக்கும் பணி நற்செய்தியில் பேயோட்டும் பணி என்று அவரவர் பெற்ற கொடைகளுக்கேற்ப இறைப்பணியாற்றுகின்றனர் இறைப்பணி ஆற்றுபவர்களால் தூண்டப்பட்டவர்கள். நாமும் இறைவாக்கினர்கள் என்றால் நமது நற்பணியால் நாம் பிறரை தூண்டி இழுக்க வேண்டும். நமது செயல்பாடுகளால் நாம் பிறரை நற்செயல் செய்ய தூண்டுகிறோமா என்று சிந்திப்போம்.
இறைவன் ஏராளமான அருட்கொடைகளால் நம்மை நிரப்பியுள்ளார் . பேசுதல், பார்த்தல், செய்தல், நடத்தல், உணர்தல், எழுதுதல், வரைதல், பாடுதல், என எல்லாவிதமான செயல்களையும் செய்யும் அளவிற்கு ஆற்றல் தந்திருக்கிறார். இந்த திறன்களின் ஆற்றல் உணர்ந்து நம்மை நாம் வளப்படுத்தி கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது பேசும் திறன். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நமது வார்த்தைகளுக்கு வலிமை உண்டு. அவை நம்மை நல்ல வழிக்கும் இட்டுச் செல்லும், தீய வழிக்கும் இட்டுச் செல்லும். வார்த்தைக்கும் வாழ்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. துறவி ஒருவர் தனது சீடர்களுக்கு வார்த்தையின் வலிமை பற்றி போதனை செய்து கொண்டிருந்தார். வார்த்தை வலிமையானது அதை கவனமாக கையாள வேண்டும். எதை நீங்கள் சொல்கீன்றீர்களோ அதுவாகவே மாறுகின்றீர்கள் எனவே நல்லவற்றை சொல்லுங்கள் நல்லவர்களாக வாழுங்கள் என்றார். சீடன் ஒருவனுக்கு சந்தேகம் எனவே உடனே எழுந்து துறவியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான். குருவே நான் கடவுளாகிறேன் கடவுளாகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் கடவுளாகி விடுவேனா இல்லை. சாத்தானாகிறேன் சாத்தானாகிறேன் என்று சொல்வதனால் சாத்தானாகி விடுவேனா . அதனால் வார்த்தைக்கும் வாழ்வின் செயலுக்கும் சம்மந்தம் இல்லை என்பதே என் கருத்து என்றான். துறவி சற்று நேரம் அமைதியாயிருந்து விட்டு சீடனைப் பார்த்து, முட்டாளே அதிகமாகப் பேசாதே உட்கார் என்றார். முட்டாள் என்ற வார்த்தையைக் கேட்டதும் கோபமடைந்த சீடன் கொதித்தெழுந்து, நானா முட்டாள் , தெளிவான விளக்கம் சொல்லத் தெரியாத நீ தான் முட்டாள் உன்னிடம் சீடனாய் சேர்ந்தது என் தவறு என்று தனது கோபத்தை எல்லாம் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தான். சற்று நேரத்துக்கு பின் துறவி அவனிடம், உன்னை முட்டாள் என்று சொன்னதற்காக என்னை மன்னித்து விடு தெரியாமல் சொல்லி விட்டேன் என்றார். அவரது மன்னிப்பு என்ற வார்த்தையைக் கேட்டதும் சீடனும் தன் தவறினை உணர்ந்து அமைதியானான். துறவி, வார்த்தைக்கு வலிமை உண்டு அது நம் வாழ்வின் செயல்பாடுகளை மாற்றும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டீர்களா? முட்டாள் என்று சொன்னதும் வந்த கோபம் மன்னித்துவிடு என்றதும் மறைந்து விட்டது கவனித்தீர்களா? என்றார். எனவே தான் சொல்கிறேன் வார்த்தை வலிமையானது என்றாராம்.
பலநேரங்களில் நமது வாழ்க்கையையும் நமது வார்த்தைகள் தான் தீர்மானிக்கின்றன. நாம் தான் அதை கண்டுணர்வதில்லை. நமக்கு வாழ்வை கொடுப்பதும் நம் வாழ்வைக் கெடுப்பதும் நம் வார்த்தைகள் தான். நமது நல்ல வார்த்தைகளினால் செல்வங்களான விலையுயர்ந்த ஆடை,பொன் வெள்ளியையும் பெருக்கிக் கொள்கிறோம். நமது தீய வார்த்தைகளினால் அவற்றை மக்கிப் போக அரித்துப் போக,துருப்பிடிக்கச்செய்கிறோம். வார்த்தைகளில் கவனம் செலுத்துவோம். வளமாக வாழ்வோம். பெரும்பாலும் நமது வாழ்வின் சிக்கல்களுக்கு காரணம் நமது வார்த்தைகள் தான் தகுந்த நேரத்தில் சொல்லாமல் விட்ட வார்த்தைகளும், தேவை இல்லாத இடத்தில் சொல்லிவிட்ட வார்த்தைகளும் தான். ஒரு தவறு நடந்தால் முதலில் பிழைகளை நம்மிடம் இருந்து தேடுவோம். பிறரில் தேடத்துவங்கினால் மீண்டும் தவறுகள் பெரிதாகும் சூழல் ஏற்படும். பிள்ளைகள் வைத்திருக்கும் அலைபேசி பழுதனால் பிள்ளைகளால் தான் அவ்வாறு ஆனது என்று குழந்தைகளை திட்டுகிறோம். அதே பிள்ளைகள் படிக்காமல் போனாலோ காதல் வயப்பட்டு பழுதானாலோ அலைபேசியால் தான் அவ்வாறு ஆனார்கள் என்று அலைபேசியைத் திட்டுகிறோம். தவறை நம்மிடம் இருந்து களைய முற்படுவோம். அன்பான வார்த்தைகளினால் அனைவரையும் கவர முயல்வோம். நமது இறைவாக்குப் பணியை நம் இல்லத்தில் இருந்து தொடங்குவோம். சிறு துளி பெரு வெள்ளம். சிறு கனல் பெரு நெருப்பு என்பதை உணர்ந்து செயலாற்றுவோம். எனவே அன்பு உள்ளங்களே நாம் அனைவரும் இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. இறைவாக்கினர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை உணர்வோம். எதிர்கால இறைவாக்கினர்கள் அல்ல நிகழ்கால இறைவாக்கினர்கள். எனவே நம் குரலை இரக்கத்துக்காகவும், காதுகளை கருணைக்காகவும், கைகளைக் கொடைகளுக்காகவும் மனதை உண்மைக்காகவும் கொடுத்து வாழ்வோம். நமது இறைவாக்குப் பணியால் பிறரையும் நற்செயல் செய்யத் தூண்டுவோம். வரலாற்றின் பக்கங்களில் நமது பக்கத்தை அலங்கரிக்க அழகான செயல்களை அன்பாக செய்ய தொடங்குவோம் இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.  

Sunday, 16 September 2018

நீ யா(ர்)???!!!


நீ யா!!! என்று கேட்ப‌த‌ற்கும் நீ யார் என்று கேட்ப‌த‌ற்கும் ஏராள‌மான‌ வித்தியாச‌ங்க‌ள் உண்டு. முன்னைய‌து ஆச்ச‌ரிய‌த்தினாலும் ப‌ய‌த்தைனாலும் கேட்ப‌து. (நீ யா!!! என்று ஆச்ச‌ரிய‌த்திலும் கேட்க‌லாம். வெறுப்பிலும் கேட்க‌லாம். ) நீ யா....... இர‌ண்டாவ‌து ஒருவ‌ரைப் ப‌ற்றி தெரிந்து கொள்வ‌த‌ற்காக, நீ யார் ??? என்று கேள்வி கேட்ப‌து. இந்த‌ இர‌ண்டு கேள்வியையும் ப‌ல‌ முறை நாம் ந‌ம‌க்குள்ளும் பிற‌ர் ந‌ம்மிட‌மும் கேட்காம‌ல் இருப்ப‌தனால் தான் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள். இத‌னையே ந‌ம‌து முன்னோர்க‌ள் நாம் யார் என்று அறிந்து கொள்ளாத‌தே எல்லா பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் மூல‌ கார‌ண‌ம் என்ப‌ர். ந‌ம்மிட‌ம் யாராவ‌து வ‌ந்து நீங்க‌ யாரு? என்று கேட்டால் உட‌னே நாம் சொல்வ‌து ந‌ம‌து பெய‌ர். பெய‌ர் தான் நீயா உன் பெய‌ர் கொண்ட‌ ப‌ல‌ரை நான் பார்த்திருக்கிறேனே என்றால் உட‌னே வேலை அல்ல‌து இருக்கும் இட‌ம் கூறுவோம். அதையும் மீறி ஏதாவ‌து கேட்டால் இன்னாருக்கு இன்ன‌ உற‌வின் முறை என்று கூற‌ ஆர‌ம்பிப்போம். மொத்த‌த்தில் நாம் யார் என்று ந‌ம‌து புற‌ செய‌ல்பாடுக‌ளைச் சொல்லி விள‌க்க‌ அதிக‌ முய‌ற்சி செய்வோம். இதை விடுத்து யாரும் நான் அன்பான‌வ‌ள், இர‌க்க‌ குண‌ம் மிக்க‌வள், பிற‌ருக்கு உத‌வுப‌வ‌ள் என்று சொல்வ‌தில்லை மாறாக‌ அப்ப‌டிச் சொல்வோமானால் ஏதோ வேற்று கிர‌க‌ வாசிக‌ளைப் பார்ப்ப‌து போல‌ நம்மை மேலே கீழே பார்த்து செல்வ‌ர். 
இன்றைய‌ முத‌ல் வாச‌க‌த்தில் எசாயா இறைவாக்கின‌ர் துன்புறும் ஊழிய‌ர் யார் என்று ,அவ‌ர‌து புற‌ அடையாள‌ங்க‌ளை வைத்து எடுத்துரைக்கின்றார். அவ‌ர் ந‌ன்மைக்காக‌ துன்புறும் ந‌ல்லாய‌ன், அநியாய‌த்துக்காக‌ போராடும் அன்புருவ‌ம், நிந்த‌னை அவ‌மான‌ங்க‌ளையும் பொறுமையோடு ஏற்கும் பேராள‌ன், என்று ப‌ல‌ நிலைக‌ளில் ஊழிய‌ராம் இயேசுவை, அவ‌ர்த‌ம் வாழ்வை வெளிப்ப‌டுத்துகிறார். அவ‌ரைப் பின்ப‌ற்றும் சீட‌ர்க‌ளாகிய‌ ந‌ம‌தின் உருவ‌ம் எத்த‌கைய‌து என்ப‌தை க‌ண்டுண‌ர‌ இன்றைய வாசக‌ங்கள் வ‌ழி ந‌ம‌க்கு அறிவுறுத்துகின்றார். 
இன்றைய‌ இர‌ண்டாம் வாசக‌த்திலோ செய‌லற்ற‌ ந‌ம்பிக்கை செத்த‌ ந‌ம்பிக்கை எனவே நீங்க‌ள் செய‌ல் வீர‌ர்க‌ள் என்ப‌தை உங்க‌ள‌து செயல்க‌ளில் காட்டுங்க‌ள் என்று அக‌த்தில் (எண்ண‌த்தில் செய‌லில்) நாம் யார் என்ப‌தை வெளிப்ப‌டுத்த‌ அழைப்புவிடுக்கின்றார் புனித‌ ப‌வுல‌டியார். இதை இர‌ண்டையும் த‌ன் வாழ்வில் இணைத்து தான் யார் என்ப‌தை தானும் வாழ்ந்து காட்டி ,ந‌ம்மையும் அது போல‌ வாழ‌ அழைக்கின்றார் இயேசு. 
தான் யார் என்று த‌ன்னை ந‌ன்கு அறிந்த‌ இயேசு த‌ன்னைப் போல‌வே த‌ன்னைப் பின்ப‌ற்றுகிற‌வ‌ர்க‌ளும் புரிந்து வைத்திருக்கின்றார்க‌ளா என்று அறிந்து கொள்ள‌ இந்த‌ கேள்வியை முன்வைக்கின்றார். நான் யார் என்று ம‌க்க‌ள் சொல்கிறார்க‌ள் ??? மூன்று வித‌மான‌ ப‌தில் அவருக்கு சீட‌ர்க‌ள் வ‌ழி கிடைக்கின்ற‌து. திருமுழுக்கு யோவான் , எலியா, இறைவாக்கின‌ருள் ஒருவ‌ர்.
திருமுழுக்கு யோவான் ; 
அதிகார‌த்தோடு போதித்த‌வ‌ர், எளிய‌ வாழ்வு வாழ்ந்த‌வ‌ர், ம‌க்க‌ளின் ம‌ன‌மாற்ற‌த்திற்கு வ‌ழிவ‌குத்த‌வ‌ர். இயேசுவும் அதிகார‌த்தோடு போதித்தார், எளிமையான‌ வாழ்வு வாழ்ந்தார், போத‌னைக‌ளின் வ‌ழி ம‌க்க‌ளை ம‌ன‌மாற்ற‌ம் அடைய‌ச் செய்தார். 
எலியா;
க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைக‌ளை அப்ப‌டியே க‌டைபிடித்த‌வ‌ர், பாலைவன‌த்துக்கு போ காக‌ம் உன‌க்கு உண‌வு த‌ரும் ஓடையில் நீர் அருந்துவாய் என்ற‌வுட‌ன் உட‌னே கிள‌ம்பிய‌வ‌ர், இர‌க்க‌ குண‌ம் கொண்டு சாரிபாத் ஏழைக் கைம்பெண்ணின் இற‌ந்த‌ ம‌கனை‌ உயிர்ப்பித்த‌வ‌ர். அவ‌ர்க‌ளின் ப‌ஞ்ச‌ம் தீர்த்த‌வ‌ர். இயேசுவும் பாலைவ‌ன‌த்துக்கு க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைப்ப‌டி சென்றார். நயீன் ஊர் வித‌வை ம‌க‌னுக்கு மீண்டும் உயிர் கொடுக்கின்றார். ஏழை ம‌க்க‌ளின் ப‌சித்துய‌ர் போக்குகின்றார். 
இறைவாக்கின‌ருள் ஒருவ‌ர்; 
திடீரென்று தோன்றிய‌வ‌ர்க‌ள், கட‌வுள் சொல்வ‌தை அப்ப‌டியே நிறைவேற்றுகின்ற‌வ‌ர்க‌ள், இக்க‌ட்டிலிருந்து மீட்க‌ க‌ட‌வுளால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இயேசுவும் நாச‌ரேத் என்னும் ஊரிலிருந்து திடீரென்று த‌ன் ப‌ணியைத் துவ‌ங்கிய‌வ‌ர். க‌ட‌வுளின் திட்ட‌த்தை நிறைவேற்றிய‌வ‌ர், இக்க‌ட்டிலிருந்து ம‌க்க‌ளை மீட்டு புது வாழ்வு த‌ருப‌வ‌ர். இப்ப‌டியாக‌ இயேசுவையும் அவ‌ர‌து குண‌ந‌ல‌ன்களையும் முன்ன‌ர் இருந்த‌வ‌ர்க‌ளின் குண‌ந‌ல‌ன்க‌ளுட‌ன் ஒப்பிட்டு மீண்டும் ஒரு இறைவாக்கின‌ர் ந‌ம்மிடையே தோன்றிவிட்டார் என்று ம‌கிழ்ந்த‌ன‌ர். இயேசுவிற்கு இப்ப‌திலில் திருப்தி இல்லை .(அதுக்கும் மேலே) இதைவிட‌ மேலான‌ ஒரு ப‌திலை , தான் த‌ன்னைப் ப‌ற்றி நினைத்து வைத்திருந்த‌ ஒன்றை எதிர்பார்த்து நேர‌டியாக‌ சீட‌ர்க‌ளிட‌ம் கேட்கின்றார். ச‌ரி நீங்க‌ள் என்னை யாரென்று சொல்கின்றீர்க‌ள் என்று . அத‌ற்கு பேதுரு நீரே மெசியா என்கிறார். தான் எதிர்பார்த்த‌ ப‌தில் த‌ன் மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து வ‌ந்த‌தும் ம‌கிழும் ஆசிரிய‌ர் போல‌ ம‌கிழ்வ‌டைகின்றார் இயேசு. இயேசுவிற்கு முன் தோன்றிய‌ அனைத்து இறைவாக்கின‌ர்க‌ளின் ஒட்டு மொத்த‌ மைய‌ம் தான் ,மெசியா என்னும் இயேசு என்ப‌தை அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்கு அறிவுறுத்துகின்றார். உயிரோடு இருக்கும் போதே தான் இற‌ந்த‌ பின் எப்ப‌டி அட‌க்க‌ச்ச‌ட‌ங்கு ந‌ட‌த்த‌ வேண்டும் என்று உயில் எழுதும் ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் இயேசு வித்தியாச‌மாக‌ சிந்திக்கிறார். 
த‌ன‌து சாவைப் ப‌ற்றி தெளிவாக‌ எடுத்துரைக்கின்றார். 
இயேசுவின‌து வாழ்வில்  நீர் யார் ??? என்ற‌ கேள்வியும் நீ யா!!! என்ப‌தும் மாறி மாறி கேட்க‌ப்ப‌ட்ட‌ ஒன்று. நீர் யார் என்று பிலாத்து கேட்டு யூத‌ர்க‌ளின் அர‌ச‌ன் என‌ க‌ண்டு கொள்கிறான். நீ யா!!! என்னை விட்டு அக‌ன்று போ என்று கூறிய‌ இலேகியோன் என்னும் பேய் பிடித்த‌வ‌ன் ந‌ல‌ம் அடைகிறான்.  இதே கேள்வியை நாமும் இயேசுவைப் பார்த்துக் கேட்ப‌வ‌ர்க‌ளாவோம்.  ந‌ம் அர‌ச‌ரைக் க‌ண்டு கொள்வோம். ந‌ம் உள்ள‌ ந‌ல‌ன் பெற்று குண‌ம‌டைவோம். நீ யார் என்று ந‌ம்மை பார்த்து கேட்ப‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம‌து செய‌ல்க‌ளால் ந‌ல்ல‌ ப‌தில‌ளிப்ப‌வ‌ர்க‌ளாவோம் . சிறு மெசியாக்க‌ளாக‌ வ‌ள‌ர‌, திருமுழுக்கு யோவானிட‌ம் உள்ள‌ துணிவையும், எலியா இறைவாக்கின‌ரிட‌ம் இருந்த‌ இர‌க்க‌ குண‌த்தையும் இறைவாக்கின‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ ந‌ல்ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் குண‌த்தையும் பெற்று வாழ்வோம். நீ யா !!! என்று ந‌ம்மைப் பார்த்து பிற‌ர் ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் அள‌விற்கு வாழ்ந்து காட்டுவோம். இறைய‌ருள் என்றும் ந‌ம்மோடும் ந‌ம் குடும்ப‌த்திலுள்ள‌ அனைவ‌ர் மீதும் நிலைப்ப‌தாக‌ ஆமென் 
நீ யார்??? ஓஓஓ நீ யா!!!  

Wednesday, 12 September 2018

செப்டம்பர் 15 வியாகுல மாதா திருவிழா


தனயனின் கனவை நனவாக்க , தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, தன்னையே அர்ப்பணித்த தாயே உம்மை வாழ்த்தி வணங்குகிறோம் 
தந்தை மகன் தூய. ....
இறைக்கே இணையாகி, வானிற்கு நிகராகி பேரன்பிற்கு இலக்கணமாக திகழும் தாயாம் மரியாளைப் போற்றி புகழும் நாளும் வேளையுமிது. தாயின் அன்பை விவரிக்காத கவிஞர்களும் இல்லை. கவிதைகளும் இல்லை. தாயானவள் நம் விழிகளால் பார்த்து, இதழ்களால் சிரித்து, இமைகளில் உறங்கி, ஈடில்லா வெற்றியை நமக்கு தருபவள். நம் வெற்றியில் களித்திட, தோல்வியில் துவண்டிட, உயிரினில் கலந்திட, உதிரத்தைத் தந்தவள். இப்படி நம் இன்பத்தைப்பெருக்கி, இன்னலைத் தீர்த்திடும் தாயின் திருநாளைக் கொண்டாட அவர் தம் பிள்ளைகளாகிய நாம் ஒன்றாகக் கூடி இருக்கின்றோம். 
இந்த மகிழ்வென்னும் மங்களநாளில் வீரத்தாயின் புதல்விகள் நாம் எனும் பூரிப்பில் பெருமிதம் கொள்வோம். நம் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க, ஒளி கொண்டு நம் வாழ்வை மெருகேற்றுவோம். நம் கைகளில் தாங்கியுள்ள இந்த ஒளி இருளை அகற்றி வெளிச்சம் கொடுப்பது போல நாமும் நமது பிறரது துன்ப துயர இருளை அகற்றி, நம்பிக்கை என்னும் ஒளி கொடுப்பவர்களாக வாழ அருள் வேண்டி பவனி செல்வோம். அன்னைக்கு முடி சூடி அழகுபார்த்து மகிழ மணிமுடியையும் மாலையையும் பவனியாக ஒளி வெள்ளத்தில் ஆலயத்திற்குள் எடுத்துச்சென்று அன்னையின் மகிழ்வில் நாமும் இணைவோம்.  
(பாடல் அல்லது நாதஸ்வர இசை)
வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு அளந்த கருணை, வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபி- தாய். அத்தகைய தாயாம் அன்னை மரியாளின் வியாகுலத்தை ,வியாகுல வீரத்தைக் கொண்டாடும் நாள் இந்நாள். இந்நாளில் நம் அன்னைக்கு மணிமுடி சூட்டி மகிழ்வோம். மன்னர்கள் ராஜாக்கள் மணிமுடி சூடுவர். தன் நாட்டில் விளைந்த விலையுயர்ந்த கற்கள் மணிகளை, தங்க வைரத்தால் இழைக்கப்ப்பட்ட ஆபரணத்தில் பொருத்தி அதை அனைத்து மக்கள் முன்னும் தன் தலையில் சூடி அனைத்திற்கும் அனைவருக்கும் பொறுப்பேற்பர். இதனால் தனக்குக் கீழ் உள்ள அனைத்து மக்களின் அதிகாரத்திற்கும் பொறுப்பிற்கும் உரிமையாளராவர். நமது தாய் அன்னை மரியாளோ, நம் அனைவருக்கும் அரசி. வெற்றி என்னும் வியாகுலங்களை தன்னகத்தேக் கொண்ட பேரரசி. நம்மை ஆண்டு வழி நடத்தும் உரிமை, அதிகாரம் பெற்றவர். நாம் அவர் வழி நடக்கும் ஊழியர்கள், பிள்ளைகள், வழித்தோன்றல்கள். இந்நேரத்தில் நம் மகிழ்வென்னும் கற்கள் மணிகளை, நல் உணர்வென்னும் தங்க வைர ஆபரணத்தில் பதித்து நம் அன்னையாம் அரசிக்கு மணிமுடி சூட்டி மகிழ்வோம். அரசியாம் அன்னைக்கு நாம் அனைவரும் அவர் தம் ஊழியர்களாக என்றும் வாழ்வோம் என்று உறுதி கூறுவோம். 
மலர்கள் மணம் பரப்பி மனதை மயக்குதல் போல நம் உடலும் அன்னை மரியின் அருளினாலும் அழகு பண்பினாலும் மயங்க மகிழ அருள் வேண்டி அன்னைக்கு மணி முடி சூட்டி மகிழ்வோம். நம் மகிழ்வினைத் தெரிவிப்போம். 
( மங்களம் மங்களம் அல்லது பொருத்தமான பாடல். )
செப்டம்பர் மாதம் என்றாலே நமக்கும் நம் சபைக்கும் மிகவும் முக்கியமான மாதம் ஏனெனில் நம் தாயாம்  புனித வியாகுல அன்னையின் வியாகுலங்களைத் தியானிக்கும் மாதம் . அதிலும் சிறப்பாக இன்று மகிழ்வின் உயர்விற்கு உயர்வு சேர்க்கும் உன்னதமான நாள். செப்ட்ம்பர் மாதத்தின் முத்தான நாள். ஆம் அன்னையின் வியாகுலத்தின் திருநாள். வெற்றிகளை அள்ளித்தரும் வீரத்திருநாள். அன்னையின் வியாகுலம், வீரம், முழுமை இவற்றைப் பற்றி தியானித்து, இறை அருளில் மூழ்கி முத்தெடுக்க நம்மையே ஆயத்தப்படுத்தும் நாள். இந்நாளில் தன்னையே வெறுமையாக்கி ஊழியரின் வேடமேற்ற கிறிஸ்துவை பின்பற்றி, தன்னையே இறையடியாராக இனம் காட்டிய நம் தாய் மரியாளை பார்த்து பழக நாம் அழைக்கப்படுகிறோம். அழைக்கப்பட்டதன்படி வாழ்வதே நம் சபை வாழ்வின் சிறப்பு நிலை. மரியின் ஊழியர் குடும்பத்திலுள்ள நம் ஒவ்வொருவரின் ஆசை, நம் அன்னையும் அரசியுமான மரியாளைப் போன்று நாமும் ஆண்டவரின் ஊழியராக உருவாக வேண்டும் என்பதே. எனவே நாம் விரும்பி அடைய எதிர்நோக்கும் நிலையின் அழகிய உருவை மரியாளில் கண்டு முழுமையின் நிறைவாம் நம் அன்னையை போல நாமும் மாற அருள் வேண்டி இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.  வழி நூல் .....
எல்லாத் துன்பங்களும் வியாகுலங்கள் அல்ல. நமது தவறுகளால் வரும் துன்பங்களும், குறையுள்ள மனிதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் பழகும்போது ஏற்படும் மன வேதனைகளும் வியாகுலங்கள் ஆகாது. மாறாக தன்னல தளைகளிலிருந்து விடுபடும்போது, பிறர் நல் வாழ்வு பெற உழைக்கும் போது, இறைவன் தனக்கு கொடுத்த அழைத்தல் ,பணி இதுதான் என ஒன்றை உய்த்துணர்ந்து பற்றுறுதியுடன் வாழ்ந்து செயல்படும் போது ஏற்படும் துன்ப துயரங்களே, வியாகுலங்கள் ஆகும். அவ்வகையில் நம் தாய் மரியாள் பெற்ற வியாகுலங்களைக் கொண்டாட மூன்று காரணங்கள் உண்டு. 
1. மீட்கும் திருவுளத்திற்கு தன்னைக் கையளித்தது. 
2. மீட்பராகிய இயேசுவுடன் அவர் கொண்டிருந்த இணைபிரியா உறவு.
3. மக்களாகிய நம் மேல் கொண்டிருந்த தாய்மை உணர்வு.
எனவே அன்னை மரியாளின் அடிச்சுவட்டை பின்பற்றும் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போல இறைத்திருவுளத்திற்கு நம்மை கையளிக்கக் கூடியவர்களாய் வாழ அருள் வேண்டுவோம். இயேசுவின் மீது இணைபிரியா அன்பு கொண்டிருக்கவும். நமது செயல்களில் அன்னையின் தாய்மை பண்பு மிளிரவும் அருள் வேண்டுவோம்.
பாடல்)
நம் தாய் மரியாள் பட்ட துன்பங்கள் வியாகுலங்கள் ஏழு என்று நமது திருச்சபை கூறுகிறது. ஆனால் உண்மையில் பட்ட துன்பங்கள் ஏராளம் சந்தித்த இடர்கள் தாராளம். துன்பத்தைக் கூட அன்னை மரியாள் முழுமையாக அனுபவித்தார் என்பதற்காக கூட ஏழு என்ற எண்ணை பயன்படுத்தி இருக்கலாம். முழுமையின் தாய் இன்பத்தை மட்டுமல்ல துன்பத்தையும் முழுமையாக அறிந்தவர். தான் சந்தித்த ஒவ்வொரு வியாகுலத்திலும் தன்னை ஒரு நிலையில் நிறுத்தி அந்நிலையை நமக்கும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றார். 
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் என்பதில் எதிர்காலத்தைப் பற்றிய அபய நிலை (  
இரவிலேயே எகிப்துக்கு புறப்பட்டு போ என்பதில் அகதிகளின் நிலை. 
குழந்தையைக் காணாது தேடுதலில் தனையனை இழந்த தாயின் நிலை. 
சிலுவைப்பாதையில் மகனை சந்தித்தலில் கண்ணீரால் துணிவூட்டும் மக்கபேயர் தாயின் நிலை.
சிலுவையடியில் நிற்கையில் துன்பத்திலும் துணிவோடு நிற்கும் தாயின் நிலை. 
மரித்த மகனை மடியில் சுமக்கையில் வாழ்வே இருண்ட நிலை.
கல்லறையில் அடக்கம் செய்கையில் தனிமையில் தவிக்கும் கையறுநிலை. 
இப்படியாக ஏழு வியாகுலங்களிலும் தன் நிலையில் தான் நின்று அந்த துன்பங்களை எல்லாம் நமக்கு மீட்பாக மாற்றிக் கொடுக்கிறார். அவர் உள்ளத்தைத் தைத்தது துன்பம் தரும் அம்புகள்,  வாள்கள் அல்ல. மாறாக அவைகள் மண்ணை ஊடுறுவிச்சென்று அவற்றை வளப்படுத்தும் உரங்கள் என்று நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே இந்நேரத்தில் அன்னையின் நாமம் தாங்கிய நம் சபை சகோதரிகளாகிய நாம் அனைவரும் துன்பத்தில் தாராள மனம் கொண்டு துணிவுடன் வாழ சிறப்பாக செபிப்போம். துன்புறும் மக்களுக்கு துணிவுடன் பணி செய்ய அருள் வேண்டுவோம். (கேரளா மக்கள் தமிழ் மக்கள் நம் சபை உள் நாடு வெளி நாடு ) எனவே இந்நேரத்தில் வியாகுலங்களை மீட்பாக மாற்றி அன்னை நமக்கு தரும் இறைவார்த்தைகளை அன்புடன் பெற்றுக் கொள்வோம். பாடல் இறைவார்த்தைச் சீட்டு பகிர்தல் 
எப்போதும் கொடுப்பவரின் நிலையில் இருப்போம் நம் தாய் மரியாளைப் போல, பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் கொடுப்போம். எலிசபெத் அம்மாளுக்கு உதவினார் எதையும் எதிர்பார்க்காமல். கானாவூரிலே கல்யாணத்தில் உதவினார் கடுகளவும் பயன் எதிர்பாராமல். இப்படி வாழ்நாள் முழுவதும் உதவி செய்து பலனை எதிர்பாராது கொடுப்பவர் நிலையில் இருந்து உயர்ந்தார். நாமும் அந்நிலைக்கு மாற முயற்சிப்போம். நமது அன்பை, சேவையை, உதவியை இரக்கத்தை என அனைத்தையும் சிறிது என்று எண்ணாமல் நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து வாழ்வோம். இலவசமாகப் பெற்றுக் கொண்டீர்கள் இலவசமாகக் கொடுங்கள் என்பதற்கேற்ப அனைத்தையும் கொடுப்பவர்களாவோம். இதனால் சொல்லால் விளக்க முடியாத விவரிக்க முடியாத அன்பின் சாரமாக விளங்குபவர் இறைவன் ஒருவரே என்பதை நமது வாழ்வாலும் சொல்லாலும் உணர்வோம். முழுமையின் நிறைவான நம் தாய் மரியாள் நம்மையும் முழுமையடைச்செய்வார் என்ற நம்பிக்கையில் விண்ணகத்தந்தை  அருள் வேண்டி இயேசு கற்பித்த செபத்தை ஒருமித்து சொல்வோம் 
விண்ணகத்திலிருக்கின்ற/........
உன்னைக் கொடு உலகை வெல்வாய், உன்னை இழ எல்லோர் உள்ளத்திலும் வாழ்வாய் என்ற மொழிக்கேற்ப வாழ்ந்து சிறக்க இறையருளால் என்று நிறைந்து நிலைத்து வாழ இறையாசீர் என்றும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துவதாக ஆமென்.   

Thursday, 6 September 2018

தாய்மையின் தாய் பிறந்த தினம்.

                      அன்னை மரியின் பிறப்பு விழா.
               தாய்மையின் தாய் பிறந்த தினம். 
          மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா ம. ஊ. ச.
எதைப் பற்றி வேண்டுமானாலும் திட்டவட்டமாக சொல்லிவிட முடியும். ஆனால் தாயின் அன்பை பற்றி முழுமையாக விவரிக்க வார்த்தைகளே கிடையாது. கடலின் ஆழம், கோபுர உயரம், மலையின் அகலம், இது அனைத்திற்கும் ஏதாவது ஒன்று ஈடு / நிகர் இருக்கும். ஆனால் தாயின் அன்பிற்கு நிகர் / ஈடு எதுவுமில்லை. தாய்மையின் மேன்மை குறித்து பலரும் பல கருத்துக்களை கூறியுள்ளனர். கவிஞர் திருவிக.
உலகெல்லாம் உதுப்பிடம் தாய்மை,
உதித்து தங்கி ஓங்குமிடம் தாய்மை,
கலையின் மூலம் கமழுமிடம் தாய்மை, என்று பாடியிருக்கிறார்.
வீரமாமுனிவர், உருவிலான் உருவாகி உலகில் ஓர் மகன் உதிப்ப,
கருவிலான் கருத்தாங்கி கன்னித்தாய் ஆயினயே என்று அன்னை மரியின் தாய்மையைப் பற்றி பாடுகிறார். இத்தகைய தாய்மையின் பிறப்பிடமான அன்னையின் பிறப்பு விழாவையே நாம் இன்று கொண்டாடுகிறோம். அன்னை மரியின் பிறப்பு விழா நாளான இன்று அவரின் மூன்று பண்புகள் வழி அவரைப் போல் வாழ அழைப்புவிடுக்கிறார்.
1. தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.
2. கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றியவர்.
3. தாயாவதற்காக தரணி வந்தவர்.

 1.தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.:
      வீட்டின் மூத்த  குழந்தைகள் மேல் பெற்றொருக்கு எப்பொழுதும் தனிப்பட்ட அக்கறை , பாசம், கவனம் இருக்கும். ஏனெனில் தம்பதியர்களாகிய அவர்களுக்கு பெற்றோர்கள் என்னும் பெரும் பேற்றினைத் தந்தது அந்த முதல் குழந்தை தான். அதிலும் நீண்ட வருடம் கழித்து பிறந்த குழந்தையாய் இருந்தால் சொல்லவே வேண்டாம். மொத்த பாசமும் அதன் மேல் தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் மரியாள், அன்னா சுவக்கீன் என்னும் வயது முதிர்ந்த தன் பெற்றோருக்கு மகளாய்ப் பிறந்து, அவர்களின் புத்திர சோகத்தைத் தீர்க்கின்றார். இதுவரை பிறரால் மலடி என அழைக்கப்பட்டு வந்த அன்னாள், தாய் என்னும் உயரிய மதிப்பினைப் பெற காரணமாகிறார் அன்னை மரியாள்.  பிறரது ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் தூற்றுதலுக்கும் உள்ளான அன்னாள், இன்று பிறரால் ஆச்சரியமாக மகிழ்வாக, விரும்பி பேசப்படும் ஒரு நபராக மாற காரணமாயிருக்கிறார் அன்னை மரியாள். எத்தனையோ பேருக்கு அன்னாள் தனது வாழ்நாளில் பிற பெண்களின் பிரசவ காலத்தில் உறுதுணையாய் இருந்திருப்பார். இன்று தான் அன்று செய்த நற்செயல்களுக்கான கைம்மாறை பெற காத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளாக மாறி இருக்கின்றார். அன்னை மரியாள் பிறப்பின் போதே பலருடைய இன்னல்களைப் போக்கி இனிமையைக் கொண்டு வந்திருக்கிறார். நாம் அன்னை மரியாள் போல என்றாவது செயல்பட்டிருக்கிறோமா சிந்திப்போம். பிறரை மகிழ்விக்கும் ஒரு நபராக, பிறரின் மகிழ்விற்கு காரணமாக இருப்பவராக இருக்க முயல்வோம். பிறரின் இன்னல் நீக்கி இனிமை சேர்ப்பவர்களாவோம்.
ஆச்சரியக் குறியைக் கேள்விக் குறியாக்கியவர்.:
     முதிர் வயதினருக்கு மகிழ்வே, தன் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் உடன் இருப்பும் உறவும் தான். அவர்களது எதிர்காலமே, குழந்தைகளின் வாழ்வும் வளர்ச்சியும் தான். அவர்களது சிறு சிறு அசைவிலும், சொல்லிலும், செயலிலும் உலகத்தையும் தன்னையும் மறந்து மகிழ்வடைவர். அத்தகையதொரு எல்லையில்லா மகிழ்வை அன்னாள் சுவக்கீன் என்னும் தன் பெற்றோருக்கு கொடுக்கின்றார் அன்னை மரியாள். தங்களது வாழ்வு இப்படியே முடிந்து விடுமோ என்று எண்ணி ஏங்கியவர்களுக்கு புது வாழ்வாய் உதயமாய் பிறக்கின்றார். பெரியவர்களின் எதிர்கால வாழ்வு பற்றிய கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றி மகிழ்வு தருகின்றார். அன்னை மரியாள். நாம் என்றாவது கேள்விக்குறியாக இருப்பவர்களின் வாழ்வை ஆச்சரியக் குறியாக மாற்றி இருக்கின்றோமா? அதாவது, பிறரின் வாழ்விற்கு வளம் சேர்த்த நாட்கள் நேரங்கள் உண்டா? என சிந்திப்போம். குறைந்த பட்சம் ஆச்சரியக்குறியுடன் (மகிழ்வுடன் ) வாழ்பவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக ( குழப்பமாக ) மாற்றாதிருக்க முயல்வோம். பெரியவர்களோ சிறியவர்களோ அவர்களின் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்கும் காரணிகளாக வாழ முயல்வோம்.
தாயவதற்காக தரணி வந்தவர்:
      நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல நாம் வாழ்கிறோமா என்றால் அது யோசிக்க வேண்டிய ஒரு விசயம். ஆனால் அன்னை மரியாளின் பிறப்பிற்கு காரணம் அவர் இறைமகனின் தாயாக வேண்டும் என்ற ஒரு காரணமே. நான் மருத்துவராவேன் பொறியியலாளராவேன் விஞ்ஞானியாவேன் என்று சிறு வயதில் சொல்லித் திரியும் குழந்தை, காலப் போக்கில் அதை மறந்து விடும். ஒவ்வொரு முறையும் யார் அதன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்களோ அவராக மாறவேண்டும் என முடிவு செய்யும். அதையே பிறரிடம் வெளிப்படுத்தவும் செய்யும். உதாரணத்திற்கு தன் அம்மா அப்பா போல,தன் உறவினர்கள் போல, தான் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் கதை மாந்தர் போல என் தன் முடிவை மாற்றிக் கொண்டே இருக்கும். இறுதியில் தனக்கென்று ஒரு துறையை, வளர்ந்த பின் தேர்ந்தெடுத்து அதுவாக மாற முயற்சிக்கும். ஆனால் அன்னை மரியாள் அப்படியில்லை. சிறுவயது முதலே இறைவனின் தாயாகும் நிலைக்கு தன்னை தகுதிப்படுத்துகிறாள். அவர் அறியாமலேயே அப்பண்பு அவரை அந்நிலைக்கு உயர்த்துகிறது பிறக்கும் போதும் வளரும் போதும் வளர்ந்த பின்பும் என எல்லா நேரத்திலும் இறைவனின் தாயாகவே உருமாறுகிறார். நமது பிறப்பின் நோக்கம் என்ன? நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள இறைத்திருவுளத்தை நாம் நிறைவேற்றுகின்றோமா? சிந்திப்போம். எனவே அன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அன்னையைப் போல துன்புறும் மனிதர்களுக்கு தூய மகிழ்வைத் தருபவர்களாவோம். எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கங்களுடன் காத்திருப்பவர்களுக்கு விடைதரும் விழுதுகளாவோம். பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து செயல்படும் செயல் வீரர்களாகத்திகழ்வோம். அன்னையின் பண்பில் மிளிர்ந்து அவரைப் போல வாழ முயற்சிப்போம். இறையாசீர் என்ன்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.
மீக்கா; 5:2-5
உரோமையர்: 8: 28-3-
மத்தேயு : 1: 1-16,18-23

Saturday, 1 September 2018

நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா?


இம்மாதிரியான கேள்வியை எல்லோராலும் கேட்க முடியாது. அளவுக்கதிகமாக அன்பு செய்பவர், அன்பு செய்யப்படுவரால் மட்டுமே இக்கேள்வியைக் கேட்க முடியும். இதுவரை உடன் இருந்த இவர்கள் இனி தனிமையை நமக்கு பரிசாக தந்து விடுவார்களோ என்ற பயம் ஏக்கம் இருப்பவர்கள் இம்மாதிரியானக் கேள்வியைக் கேட்பார்கள். ஏனெனில் தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமாக எடுத்துக் கொண்டால் இனிக்கும். மற்றவர்களால் அது நமக்குக் கொடுக்கப்பட்டால் கசக்கும். இயேசுவுக்கு இத்தகைய தனிமையோ, பயமோ, ஏக்கமோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் நடக்க இருப்பது அனைத்தையும், முன்னரே அறிந்தவர். இருப்பினும் நீங்களும் என்னைவிட்டுப் போய்விட நினைக்கின்றீர்களா என்று சீடர்களைப்பார்த்துக் கேட்கிறார். எதற்காக? அவர்களின் உளப்பாங்கினை தெரிந்து கொள்வதற்காக. எண்ணத்தை அறிந்து கொள்வதற்காக கேட்கிறார்.
தனது சீடர்களையும் மக்களையும் அளவுக்கதிகமாக அன்பு செய்து, அவர்களாலும் அபரிமிதமாக அன்பு செய்யப்பட்டவர் இயேசு. அப்படியிருக்க அவரை சூழ்ந்திருந்த ஏராளமான மக்கள் கூட்டம் மறைந்து சுருங்கி பன்னிரண்டு சீடர்கள் என்று வந்திருக்கும் நிலைமையில் கேட்கிறார். அவர்களைப் போல நீங்களும் என்னை விட்டுப் போய்விட நினைக்கின்றீர்களா என்று. இந்த கேள்வி இன்றைய அவர்தம் சீடர்களாகிய நம்மிடம் கேட்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தூங்கி எழுந்து ஊர் சுற்றிப் பார்த்து என் விடுமுறையை பயனுள்ளதாக்குவேன், நண்பர்களுடன் வண்ணத்திரை சின்னத்திரை பார்த்து மகிழ்ந்து இன்புறுவேன், என்று உலகப்போக்கில் வாழும் ஏனைய கிறிஸ்தவ மக்களைப் போல நீங்களும் என்னைவிட்டுப் போய் விட நினைக்கின்றீர்களா? என்று கேட்கிறார். அவரது கேள்விக்கு தூய பேதுருவின் பதிலைப் போல நாம் இங்கு அமர்ந்திருக்கின்றோம் . யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என்று கூறி அவர் வார்த்தைக்கு செவிமடுக்க வந்திருக்கிறோம். ( அப்ப... விண்ணகத்தின் திறவுகோல் நமக்கும் சொந்தம் தானே....)
இன்றைய மூன்று வாசகங்களும் இணைந்திருத்தலைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் யோசுவா இஸ்ரயேல் மக்களை யாவே இறைவனுடன் இணைந்திருக்க வலியுறுத்துகிறார். அதற்கு முன்மாதிரிகையாக தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுட்டிக்காட்டுகிறார். நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். நீங்கள் யாரை வழிபட இருக்கின்றீர்கள் இப்போதே முடிவு செய்யுங்கள் என்கிறார். இறைவனோடு இணைந்திருந்ததால் நீங்கள் பெற்ற நன்மைகள் என்னென்ன என்பதை அவர்கள் நினைவிற்கு கொண்டு வருகிறார். ஆண்டவரைப் பின்பற்றாத, பிற தெய்வ வழிபாடு நிகழ்த்தும் மக்கள் அடையும் இன்னல்கள் என்னென்ன என்பதையும் இஸ்ரயேல் மக்கள் நினைவு கூறுகின்றனர். இன்று நாம் இணைந்திருக்கிறோம் இறைவனோடு அல்ல அதைவிட அதிகமாக இணையத்தோடு. தனிமையை யாரும் நமக்கு பரிசாக தந்து விட முடியாது. ஏனெனில் நாம் அதிகமாக தனிமையில் தான் இருக்கிறோம். இணையத்தோடு இணைந்து ஆனால் பிறரோடு இணைய விரும்பாமல். இந்த இணைய இணைப்பை விடுத்து இறை இணைப்போடு வாழ இறைவன் நம்மை அழைக்கிறார். நீங்கள் யாரை வழிபட இருக்கின்றீர்கள் இணையத்தையா/ இறைவனையா? சிந்திப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகம் குட்டித்திருச்சபையாம் குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது. தலையாம் கணவனும், உடலாம் மனைவியும் இணைந்து திருச்சபை என்னும் குடும்பத்தை நல்ல முறையில் உருவாக்க அழைக்கப்படுகிறார்கள். மனைவி கணவனுக்கு பணிந்திருப்பது , கணவன் மனைவியை முழு உள்ளத்தோடு அன்பு செய்வது இவை அனைத்தும் குடும்பம் செழித்து வளர மிகவும் முக்கியமானவை. கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்வது போல், நாம் ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல என்று ஒவ்வொன்றையும் கிறிஸ்துவிற்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறார். இதிலிருந்து திருமணம் என்பது வெறும் சடங்கல்ல, அதில் மாபெரும் மறைபொருள் அடங்கி இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணம் ஒரு வெற்றுச்சடங்காக மாறிவிட்டது. நினைத்தவுடன் காதல் செய்து, அவசரமாய் திருமணம் செய்து, அற்ப காரியங்களுக்காக பிரிந்து விடுவது தான் இப்போதுள்ள நடைமுறையாக இருக்கிறது. கிறிஸ்து திருச்சபை நிலைத்து நிற்க தன்னையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் கழுவி அதை தூய்மையாக்கினார் என்று வாசிக்கக் கேட்டோம். திருமணம் நிலைக்க, குட்டித் திருச்சபை உருவாக, கணவன் மனைவியர் இருவருமே தங்களை ஒப்புவிக்க வேண்டும். பொதுவாக குடும்பத்தில் நல்ல சுமூகமான உறவு நீடித்து நிலைக்க இரண்டு வார்த்தைகளைக் கடைபிடித்தால் போதும் என்பர். அவை சரி, சாரி. ஆம் பிறர் கூறுவதைக் கேட்டு சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனம் . மற்றொன்று செய்த தவறுக்கு (சாரி) மன்னிப்பு என்று கேட்கும் குணம். இரண்டும் இருந்தால் போதும் அவை நம்மையும் குடும்பத்தில் இணைக்கும், நம் குடும்ப உறவையும் நீடித்து நிலைக்க வைக்கும்.
ஊனியல்பு என்னும் நம்முடைய தேவையற்ற நான் என்னும் தன்முனைப்பினை விடுத்து, நாம் நமது என்னும் வாழ்வு தரும் ஆவியை பெற்றுக் கொள்ள முயல்வோம். நமது வேலை, பழக்க வழக்கம், பணம் இவற்றை எல்லாம் விட நம்முடன் வாழ்பவர்களை அதிகமாக அன்பு செய்ய முயல்வோம். ஏனெனில் அவைகளுக்கெல்லாம் நம்மேல் பதிலன்பு செலுத்தத் தெரியாது. உடன் வாழ்பவர்களுக்கே பதிலன்பினை பல மடங்கு செலுத்தத் தெரியும்.
இறுதியாக , திருமணத்தின் போது மோதிரம் மாற்றும் பழக்கம் நம்மிடம் உண்டு . ஏன் மோதிர விரலில் அதனை மாட்டுகிறார்கள் தெரியுமா? நமது இதயத்திலிருந்து ஒரு நரம்பு நேரடியாக மோதிர விரலுடன் இணைக்கப்பட்டுள்ளதாம் அதனால் தான் திருமணத்தின் போதும் ஏனைய துறவற வார்த்தைப்பாடுகளின் போதும் மோதிரத்தை அவ்விரலில் மாட்டுகிறார்கள். இதன் முலம் இதயப் பூர்வமாக சொல்கிறார்கள் நாங்களும் எம் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம் என்று.
நாமும் இதயப் பூர்வமாக சொல்வோம் ஆண்டவரே நீரே எங்கள் கடவுள் உமக்கே நாங்கள் ஊழியம் புரிவோம் . உம்மை விட்டு வேறு யாரிடம் செல்வோம்....
இத்தகைய அருள் நிலையினை நாம் அடைந்திட அவரோடு நிலைத்து வாழ்ந்திட அருள் வேண்டுவோம். இறைவன் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாருடனும் இருப்பாராக ஆமென்.

பட்டை தீட்டுங்கள் --- எண்ணம் சொல் செயலை......


இறை இயேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது உள்ளத்தைப் பட்டை தீட்ட,  இறைவனின் வார்த்தை கொண்டு மெருகேற்ற அழைக்கிறது. பெரும்பாலும் நாம் தீட்டு என்று சொன்னவுடன் உடல் தீட்டைத் தான் முதலில் நினைவு கூர்வோம். நமது முன்னோர்கள் தமிழர்கள், தீண்டத்தகாததை தீண்டுவது தீட்டு. தீட்டுள்ளவர்(ரால்) தூய இறைவனை வழிபட இயலாது என்பர். ஏன்? எதனால்? அப்படியானால்  தீண்டத்தகாதது எது? காமம், குரோதம், லோபம்,  மதம், மாச்சர்யம் ஆகிய ஐந்துமே தீட்டு.
முதலாவது காமம் என்னும் ஆசை. ஆசைப்பட்ட பொருளை அடைய நினைப்பது.(உறவுகள் மட்டுமல்ல உடைமைகள் மீதும் ஆசைப்படுதலும் காமம் தான்) அதை தனதாக்கும் காலம் வரை சதா அதே நினைப்பாக இருப்பது. வேறு எதிலும் கவனம் செலுத்தாது இருப்பது. இதில் இவர்களால் கடவுளை எப்படி நினைக்க முடியும். 
இரண்டாவது குரோதம் என்னும் கோபம் . சிலர் இதனை செயல் மூலம் வெளிப்படுத்துவர், (நமது வீட்டு பொருள்கள் சொல்லும் இதனை) சிலர் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவர். கோபத்தில் கடவுளை அல்ல கண்ணில் காணும் நபரைக் கூட நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. 
மூன்றாவது லோபம் என்னும் சுயநலம். தான், தனது என்று தன்னை பற்றி மட்டுமே நினைத்து செயல்படுபவர். இவர்களால் பிறரைப் பற்றியும் எண்ண முடியாது இறைவனைப் பற்றியும் நினைக்க முடியாது.
நான்காவது மதம் என்னும் கர்வம் ஆணவம். என்னால் மட்டுமே இதை செய்ய முடியும் என்ற ஆணவம் அகங்காரம் இருப்பவர்களால் நிச்சயம் கடவுளை துதிக்க முடியாது.
ஐந்தாவது மாச்சர்யம் என்னும் பொறாமை. இவர்கள், தான் நன்றாக இருந்தாலும் பிறர் நன்றாக இருக்கிறார்களே என்று எண்ணி பெருமூச்சு விடுபவர்கள் இவர்களாலும் கடவுளை வழிபட முடியாது. ஆக இந்த ஐந்தும் தான் தீட்டு தீண்டத்தகாதவைகள். இவர்களால் கடவுளை முழுமனதுடன் அணுக இயலாது. எனவே தான் இறைவனின் ஆலயத்திற்கு செல்லும் முன் குளித்து விட்டு உடல் அழுக்கோடு மன அழுக்கையும் அகற்றி விட்டு செல்ல சொல்வர். இதனால் உடல் தூய்மையால் உள்ள மாற்றத்திலும் சிறிதளவாவது மாற்றம் வரும் என்று நம்பிக்கை. தீட்டு என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் தமிழ் மொழியில் உண்டு. வர்ணம் தீட்டுதல், வைரத்திற்கு பட்டை தீட்டுதல், கூர்மை தீட்டுதல் மை தீட்டுதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் .நிற்க...  
இன்றைய அனைத்து வாசகங்களும் நாம் நமது உள்ளத்தின் தீட்டு எவை? எவைகளெல்லாம் நம் உள்ளத்தை தீட்டுப்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், அவற்றை இறைவார்த்தை மூலம்  களைந்து நல்ல முறையில் பட்டை தீட்டுதல் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகம், கடவுளின் கட்டளைகளை நீங்கள் கடைபிடித்தால் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட பேரினம் என பிற மக்கள் உங்களைப் போற்றுவர் என்கிறது. இரண்டாம் வாசகம், இறைவார்த்தையை கேட்கின்றவர்களாக மட்டும் இல்லாமல் அதன் படி நடக்கின்றவர்களாகவும் இருங்கள் என்கிறது. நற்செய்தி வாசகமோ,  உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இறைவனைப் போற்றுங்கள் என்கிறது. 
மனிதனுக்கு இறைவன் கொடுத்த கட்டளைகள் அனைத்தும் அதன் வழி இறைவனை அடைவதற்காக தான். உதாரணத்திற்கு நமது புறவழிச்சாலைகள் அனைத்தும் நாம் சென்றடைய வேண்டிய இடத்தை நல்ல முறையில் அடைவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அதைவிடுத்து எனக்கு சாலை தான் முக்கியம் எனது இலக்கு முக்கியமல்ல என்று இருந்தால் அதனால் பாதிக்கப்படுவது நாம் தான். சாலைகளை பராமரித்து விட்டு பயணத்தை கைவிட்டால் யாருக்கு லாபம்.? நம்முடைய பல செயல்பாடுகள் பல நேரங்களில் அப்படித்தான் இருக்கின்றன. நம்முடைய சட்ட திட்டங்களும் கோட்பாடுகளும்  கொள்கைகளும் நம்மை இறைவனிடம் அழைத்துச்செல்வதற்காகத் தான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி உணர்ந்து செயல்பட சிறிது நேரம் நின்று நமது இலக்கை பற்றிய செயலைக் கூர்மைப்படுத்தி அதன் பின் நமது பயணத்தைத் தொடங்க வேண்டும். 
வைரம் மாணிக்கம் பவளம் போன்ற விலை மதிக்க முடியாத கற்கள் பெரும்பாலும் சாதரண மண்ணோடும் கற்களோடும் இணைந்து காணப்படும். எனவே அந்த தேவை இல்லாத பொருள்களிலிருந்து தேவையான அந்த கற்களை எடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவர். பின் எடுத்த கற்களை பட்டை தீட்டீ மெருகேற்றி காண்போர் கண்களைக் கவரும் கவின்மிகு கற்களாக அதனை உருமாற்றுவர். நமது உள்ளமும் இந்த விலைமதிக்க முடியாத கற்களைப் போன்றதே. நமது உள்ளத்தை சுற்றி மேலே சொன்ன இந்த ஐந்து வகை மண் கற்களும் படிந்திருக்கின்றன. இவற்றை இறைவார்த்தை கொண்டு பிரித்தெடுத்து, நமது நற்செயல்கள் மூலம் மெருகேற்ற இறைவன் அழைக்கிறார். முதலில் நமது எண்ணத்தை பட்டை தீட்டுவோம் நல்லவற்றை சிந்திப்பதன் மூலம். நமது நல்ல எண்ணம் நம்மை மட்டுமல்லாது நம்மை சுற்றி இருப்பவர்களையும் நல்ல விதத்தில் பாதிக்கும். உதாரணத்திற்கு கொட்டாவி நாம் விட்டால் நம் அருகில் இருப்பவரும் உடனே கொட்டாவி விடுவார். ஒருவர் தூங்கி வழிந்தால் உடனே அடுத்தவருக்கும் தூக்கம் கண்ணைச்சுற்றி வரும். சாதாரண ஒரு நடைமுறை செயலே அருகில் இருப்பவரை எளிதில் மாற்றும் போது நம்முடைய ஆக்கமுள்ள ஒரு நல்ல எண்ணம் நிச்சயம் நம் அருகில் இருப்பவரை மாற்றும் என்று நம்புவோம். 
ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன் அது நல்லபடியாக நடக்கிறது, நடக்கப் போகிறது, நடந்து முடிகின்றது என்று எண்ணுவோம். அது அப்படியே நடக்கும். நமது நல்ல எண்ணம் நல்ல சொல்லாகும் . நல்ல சொல் நல்ல செயலாகும் . நமது உள்ளத்திலிருந்து வெளியே வருகின்ற நல்ல வார்த்தை பிற மனித உள்ளங்களிலும் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இறைவனை வழிபடுபவர்களாக நாம் மாறுவோம். நல்ல கொடைகளையும் நிறைவான வரங்களையும் இறைவனிடம் இருந்து பெறுபவர்களாவோம். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் கடவுள் நம்மோடு இருக்கும் அருள் பெறுவோம். எனவே அன்பு உள்ளங்களே தீட்டு தீட்டு என்று உடல் தீட்டையும், கட்டளைகளை கடைபிடிக்கும் வரைமுறைத் தீட்டையும் பற்றி எண்ணாது நமது உள்ளத்தை இறைவன் பக்கம் திருப்பும்படி எண்ணத்தை சொல்லை செயலை பட்டை தீட்டுவோம். பட்டை தீட்ட தீட்ட பளிச்சிடும் பவளக் கற்கள் போல நம் வாழ்வும் இறை ஒளியால் சுடர் வீச அருள் வேண்டுவோம் .இறைவன் நம்மையும் நம் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.        

Monday, 30 July 2018

திருமணத் திருப்பலி

 முன்னுரை
அதிகாலை பனி போல , அழகான வாழ்க்கையின் அருமையான தருணம் இது. ஆயிரம் உறவுகள் அன்பாய் கூடிட, கோர்த்த மாலைகள் கழுத்தினில் மகிழ்ந்திட, ஆண்டவரின் அருள் பொங்கி வழிந்திடும் ஆனந்த கானம் இது. இந்த மகிழ்வென்னும் பொன்னாளிற்கு புதுப்பொலிவேற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
   திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என பல கருத்துக்கள் திருமணத்தைப் பற்றி நம்மிடையே பேசப்படுவதுண்டு. புனிதரும் வானதூதரும் இறையடியார்களும் இடைவிடாத இறை புகழ் பாடும் சொர்க்கத்தில் இரு உள்ளங்கள் இணையும் நாள் நிச்சயிக்கப்படுகின்றது. நல்லதை நினைத்து, நன்மை செய்து, நலன்களை மட்டும் விரும்பும் மனிதர்கள் வாழும் இந்நில உலக சொர்க்கத்தில் தங்களையும் இணைத்து, இறையருள் நாடும்   மணமக்கள் ................... இருவருக்காக வேண்டுவோம். திருமணம் என்னும் அருட்சாதனத்தை மகிழ்வோடு பெற்று, அதன் பலனை தங்களின் வாழ்நாளில் வெளிப்படுத்த அருள் வேண்டும் இவர்களோடு இணைந்து செபிப்போம். ஆயிரங்காலத்துப் பயிரை அறுவடை செய்ய வேண்டும் என்ற இலக்கோடு தங்களது பயணத்தை தொடங்க இருக்கும் இவர்களுக்காக சிறப்பாக செபிப்போம். விவேகமுள்ள கணவன் மனைவி கடவுள் அளிக்கும் கொடை என்பதை உணர்ந்து இவர்கள் வாழ அருள் வேண்டுவோம். அன்பும் அறனும் கொண்ட இல்லற வாழ்க்கையை வாழ்ந்து பண்பையும் பயனையும் பல நூறு பெற்றிட இறையருள் இவர்கள் மீது சிறப்பாக பொழியப்பட ஆண்டவரின் ஆசீர் வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

 வரவேற்பு நடனம்+ கும்ப ஆரத்தி

ம‌ன‌ங்க‌ளில் ம‌கிழ்வும், முக‌ந்த‌னில் செழிப்பும் கொண்டு அன்ற‌ல‌ர்ந்த‌ ம‌ல‌ர் போல் அன்பு ம‌ண‌ம் வீசும் உங்கள் அனைவ‌ரையும்  ஆண்ட‌வ‌னின் அருள் இல்ல‌த்திற்கு அன்புட‌ன் வ‌ர‌வேற்கிறேன். செல்வ‌ங்க‌ள் கோடி சேர்த்து , இல‌க்குக‌ளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆன‌ந்த‌ வெளிச்ச‌ம் த‌டையின்றி மின்னிட‌, த‌ங்க‌ள் வாழ்வை இறைவ‌ன் முன்னிலையில் இணைக்க‌ விரும்பும் இரு உள்ள‌ங்க‌ள். இவ்விரு உள்ள‌ங்க‌ளையும் அன்பால் இணைத்து ஆசீரால் நிர‌ப்ப‌க் காத்திருக்கும் இரு உற‌வு சொந்த‌ங்க‌ள். மணமக்களை வாழ்த்தி மகிழ வந்திருக்கும் உற்றம் சுற்றம். ஆயன் தம் மந்தையின் குரலை கேட்டு அதனை தேடி சென்று கண்டடைந்து மகிழ்வது போல, மந்தையாம் நமது மகிழ்வினில் பங்கேற்க அன்போடு வந்திருக்கும் பேரருட் பெருந்தகை ஆயர் ---------- அவர்கள், ஆக்கமுள்ள பணிகள் பல பங்கினில் மேற்கொண்டு ஆர்வமுடன் பணி செய்யும் பங்கின் பங்குத் தந்தை -------- அவர்கள். மற்றும் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க வந்திருக்கும் ஏனைய குருக்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் அனைவரையும் தமிழர் பண்பாட்டு வரவேற்பு முறையோடு வரவேற்க விரும்புகிறோம்.       
ம‌ண‌த்தோடு ம‌கிழ்வையும்  த‌ருவ‌து ச‌ந்த‌ன‌ம்.
வீர‌த்திற்கும் வித்தியாச‌மான‌ சிந்த‌னைக்கும் கார‌ண‌மாய் இருப்ப‌து குங்கும‌ம். இத்த‌கைய‌ இரு பெரும் ந‌ற்குண‌ங்க‌ளைத் த‌ன்ன‌க‌த்தேக் கொண்ட‌ ச‌ந்த‌னம்‌ குங்கும‌ம் கொண்டு திருப்ப‌லி சிற‌ப்புச் செய்ய‌ வந்‌திருக்கும் ஆய‌ர் அவ‌ர்க‌ளையும், ஏனைய‌ குருக்க‌ளையும் ம‌ற்றும் இத்திருப்ப‌லியில் ப‌ங்கேற்று ம‌ண‌ம‌க்க‌ளுக்கு ஆண்ட‌வ‌ரின் ஆசீரை அள்ளிப் பெற்றுத் த‌ர‌ ஆவ‌லாய் காத்திருக்கும் உங்க‌ளையும் வர‌வேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
செழிப்பைத் த‌ரும் ம‌ஞ்ச‌ள் நிற‌ நூல் கொண்டு சுற்றிய‌ நிறை குட‌ம், அதில் தீமையை விர‌ட்டும் மாவிலை, க‌ர‌டும் முர‌டும், இனிமையும் சுவையும் சேர்ந்த‌து தான் வாழ்க்கை என்று அடையாள‌ப்ப‌டுத்தும் முழுத் தேங்காய், இவை அனைத்த‌யும் உள்ள‌ட‌க்கிய‌து தான் கும்ப‌ ஆர‌த்தி. இத்தகைய கும்ப‌ ஆர‌த்தி எடுப்ப‌து நிறைவையும் மகிழ்வையும் முழுமையாக‌ ஒருவ‌ர் பெற‌ வேண்டும் என்னும் ந‌ல்லெண்ண‌ அடிப்ப‌டையில் தான். என‌வே இன்று ம‌ண‌நாள் காண‌ காத்திருக்கும் ம‌ணம‌க்க‌ளை வாழ்த்தி அவ‌ர்க‌ளுக்காக‌ செபிக்க‌ திருப்ப‌லி நிற‌வேற்ற‌ வ‌ந்திருக்கும் ஆய‌ர் ....... அவ‌ர்க‌ளையும் குருக்க‌ள் இறைமக்களாகிய உங்கள் அனைவ‌ரையும் ம‌ங்க‌ள‌க‌ர‌மான‌ கும்ப‌ ஆர‌த்தி எடுத்து வ‌ர‌வேற்கிறோம்.

காணிக்கை மன்றாட்டு:
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று கூறி மணமக்களை வாழ்த்துவது நம்மரபு. பதினாறு என்பது பிள்ளைகள் அல்ல. பதினாறு வகை செல்வங்களையும் மணமக்கள் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்பதே அதன் நோக்கம். எனவே இந்நேரத்தில் அந்த பதினாறு செல்வங்களையும் இவர்கள் பெற்றிட காணிக்கை மன்றாட்டின் வழி செபிப்போம்.
1; புகழ்; ( மஞ்சள் )
    தோன்றின் புகழோடு தோன்றி, தன் குடும்ப வாழ்வால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இவர்கள் புகழைச் சேர்க்க வேண்டுகிறோம். எனவே அதன் அடையாளமாய் மங்கள நாட்களில் மகிழ்வினை சேர்க்கும் மஞ்சளினை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
2. கல்வி: ( புத்தகம் )
   கற்றனைத்தூறும் மணற்கேணியாய் இவர்களும் இவர் தம் வழிமரபினரும் கல்வியில் சிறந்து விளங்க அருள் வேண்டுகிறோம். எனவே கல்வியினை போதிக்கும் புத்தகத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
3. ஆற்றல்; ( பலூன் )
   என் அருள் உனக்குப் போதும் என்ற ஆண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று இவர்கள் வாழ்நாளில் சாதனைகள் பல புரிய அருள் வேண்டுகிறோம். காற்றின் ஆற்றலால் உயர பறக்கும் பலூன் போல இவர்கள் வாழ்வு உயர்ந்திட அருள் வேண்டி இந்த பலூனை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
4. வெற்றி : ( குங்குமம் )
    எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற, வாகையினை சூடி இவர்கள்ம்வாழ்வைத் தொடர அருள் வேண்டுகிறோம். வெற்றியின் சின்னமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் இருக்கும் குங்குமத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
5 . நல் அறிவு: ( ஒளி )
    சிந்தித்து செயல்பட்டு சீரான முடிவுகளை எடுத்து பார் போற்ற இவர்கள் வாழ நல்ல அறிவுடன் செயல்பட அருள் வேண்டுகிறோம். இருளை அகற்றி ஒளி தரும் சுடர் போல இவர்கள் வாழ்வு மின்னிட ஒளியினை உம் பாதத்தில்  உம் அர்ப்பணிக்கின்றோம்.
6 . நல் விதி: ( விவிலியம் )
    விதியை மதியால் வெல்லலாம் என்பதை உணர்ந்து இவர்கள் செயல்பட அருள் வேண்டுகிறோம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவிலியம் என்பதை உணர்ந்து வாழ விவிலியத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
7 . நன்மக்கள் : ( மலர் )
      அன்பும் பண்பும் கொண்ட செல்வங்களை பிள்ளைகளாக பெற்று, சுற்றமும் நட்பும் சூழ எப்போதும் இணைந்து இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். மலர்ந்து மணம் பரப்பி பார்ப்போருக்கு மகிழ்வைத் தரும் மலர் போல இவர்கள் வாழ்வு மாற அருள் வேண்டி இம்மலரை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
8 . பொன் : ( முத்துக்கள் ) 
      செல்வ வளமும்  நலமும் வாழ்வினில் நிறையப் பெற்று இவர்கள் செழிப்புடன் வாழ அருள் வேண்டுகிறோம். தோற்றத்தில் எளிமையாகவும், மதிப்பில் உயர்வாகவும்  கிடைப்பதற்கு அரியதாகவும் இருக்கும் முத்துக்கள் போல இவர்கள் வாழ, அருள் வேண்டி இந்த முத்துக்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
9 . நெல் : ( அரிசி காய் கறிகள் )
      நிலத்தில்  நல்ல விளைச்சலையும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் இவர்கள் காண அருள் வேண்டுகிறோம். உழுது பயிரிட்டு பசிக்கு உணவாகும் தானியங்கள் போல இவர்கள் வாழ்வு பிறருக்கும் பயன்பட அருள் வேண்டி இவ்வுணவுப் பொருட்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
10 . நுகர்ச்சி : ( நறுமணப்பொருள் )
      வாழ்க்கையில் வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் நுகர்ந்து அனுபவித்து மகிழ்வுடன் இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். நுகர்ந்ததும் மணம் தந்து மகிழ்வு தரும் நறுமணப்பொருள் போல இவர்கள் வாழ்வு அமைய நறுமணப் பொருள்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
11 . அழகு :(  புன்னகை )
 அகத்தின் அழகினை முகத்தில் பிரதிபலிக்கும் நல்ல உள்ளங்களாக இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். புன்னகை ஒன்றே உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்தும் என்பதை உணர்ந்து எப்போதும் புன்னகையுடன் இவர்கள் வாழ அருள் வேண்டி இந்த புன்னகை முகத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
12 . பெருமை : ( நீர் )
   பெருமை கொண்டு வீழ்ந்து மடிவதை விட பொறுமை கொண்டு வாழ்ந்து காட்டலாம் என்று எண்ணி இவர்கள் சிறப்படைய அருள் வேண்டுகிறோம். தன்னால் தான் அனைவரும் செழிப்படைகின்றனர் என்ற பெருமை சிறிதும் இல்லாது பொறுமை கொண்டு, போகும் இடமெல்லாம் வளர்ச்சி அடையச்செய்யும் நீர் போல இவர்கள் வாழ்வு அமைய அருள் வேண்டி இந்நீரை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.
13. 14 . இளமை, துணிவு : ( வாழை )
       என்றும் இளமை எதிலும் புதுமை என்பதை  உடலளவில் மட்டுமல்லாது உள்ளத்தளவிலும் இவர்கள் பெற்றிட அருள் வேண்டுகிறோம். கணு முதல் காய் பழம் என அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்கு தரும் வாழையைப் போல இவர்கள் வாழ்வு மாற துணிவுடன் இவர்கள் செயல்பட அருள் வேண்டி இவ்வாழையை உம் பாதம் ......
15. 16. நோயின்மை வாழ்நாள்: ( அப்பம் இரசம் )
    நோய் நொடி இன்றி இன்பமாக நீடீய ஆயுளுடன் இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். அப்பத்தையும் இரசத்தையும் தனது உடலாகவும் இரத்தமாகவும் மாற்றிய இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றி இவர்களும் உடல் உள்ள ஆன்மீக நலம் பெற அருள் வேண்டி இந்த அப்ப இரசத்தைஉம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

 நன்றி மன்றாட்டு.
     விண்ணும் மண்ணும் மகிழ்ந்திருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்து தனது திரு உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும் கொடுத்து நம்மை திடப்படுத்தி ஆசீரால் நிரப்பி இருப்பதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்ற இயேசுவின் கட்டளையை சிரமேற்கொண்டு அர்ப்பண உணர்வோடு செயல்படும்  ஆயர்.... இறைப்பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இச்சிறப்பு மிக்க நாளில் மணமக்களை வாழ்த்தி ஆசி கூறி தங்களின் மறையுரையால் நற்கருத்துக்களை போதித்து அவர்களுக்காக செபித்த அனைத்து அருட்பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நனறிகள்.
அன்பாலும் பண்பாலும் இவர்களின் இல்லற வாழ்க்கையை நிறைத்து இவர்கள் இணைந்து வாழ இறைவனின் கருவிகளாக செயல்பட்ட இரு வீட்டாருக்கும் இறை முன்னிலையில் நன்றி கூறுகின்றோம்.
புதுமணத்தம்பதியரை வாழ்த்தி ஆசி கூறி, சுற்றம் சூழ வருகை தந்து, நலம் நாடும் அனைத்து உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
இத்திருப்பலிக்கு மெருகேற்றி சிறப்பு செய்த பாடகற் குழுவினருக்கு எம் மனமார்ந்த நனறிகள். இல்லறா வாழ்க்கையை இனிதே தொடங்கியிருக்கும் இப்புதுமணத் தம்பதியினரை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து உடனிருந்து ஊக்கம் தந்து நற்குணங்கள் பெற்று நலமுடன் வாழ தொடர்ந்து இவர்களுக்காக செபிப்போம்.

Friday, 27 July 2018

ஒன்றும் வீணாகாதபடி.....

" மிகினும் குறையினும் நோய் செய்யும்..." என்பது வள்ளுவரின் வரிகள். மனிதனின் பயன்பாட்டுக்கு உரிய பொருள் எதுவாயினும் அது மிதமான நிலையில் இருக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமானாலும் குறைவானாலும் நோயை உண்டாக்கும். பொருளாக இருந்தால் மன நோய். உணவாக இருந்தால் உடல் நோய். இதை இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயேசு தனது நற்செய்தியில் தனது அப்பம் பலுகுதல் நிகழ்வின் மூலம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டார்.  
 இயேசு செய்த புதுமைகளும் அரும் அடையாளங்களும் ஏராளம். இருப்பினும் அப்பம் பலுகுதல் புதுமை சிறப்பான ஒன்று . ஏனெனில் மற்ற புதுமைகள், அரும் அடையாளங்களின் போது ஒரு சில மக்களே அவருடன் அருகில் இருந்திருப்பர், அவர் செய்த புதுமைகளைக் கண்டிருப்பர். ஆனால் இங்கு ஏறக்குறைய சுற்றிலுமுள்ள ஊர் மக்கள் அனைவருமே ஒன்றாகக் கூடி இருக்கின்றனர். ஆண்களின் எண்ணிக்கையே 5000 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் கண்டிப்பாக பெண்களின் எண்ணிக்கையும் சிறுவர்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் வீடுகளில்  இருக்கும் பெண்களே, குடும்பத்திலுள்ள அனைவரின் நலனுக்காகவும் குடும்பத்திற்காகவும்  சிறப்பாக செபிப்பர். படிப்பு, வேலை, திருமணம், உடல் நலன் என அனைத்திற்காகவும் பல கோயில்கள் ஏறி வேண்டுதல் செய்வது பெண்களே. (அதற்கு சான்று நமது கோவில்களில் திருப்பலி செப வழிபாடுகளுக்கு இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஆண்களை விட பெண்களே அதிகம்)  பெண்கள் சென்றால் உடன் தன் பிள்ளைகளையும் கண்டிப்பாக அழைத்துச் சென்றிருப்பர். இதற்கு உதாரணம் நமது இன்றைய நற்செய்தியின் முக்கிய கதை மாந்தரான சிறுவன். சிறுவன் தாயோடு வந்தானோ, இல்லை தானாகவே வந்தானோ தெரியவில்லை . ஆனால் அவன் கையில் பசிக்கு உணவு வைத்திருந்தான் என்பதிலிருந்து தாயின் அனுமதியோடோ அல்லது அருகாமையோடோ தான் வந்திருப்பான் என்பது புலனாகிறது. இப்படி ஒட்டு மொத்த ஊர் மக்களையும் ஒன்றாகக் கூட்டி இயேசு அவர்கள் முன் இத்தகைய புதுமையைச்செய்கிறார். இதனால் அவரது புகழும் பெயரும் பட்டி தொட்டி எங்கும் வேகமாகப் பரவுகிறது. 
இன்றைய முதல் வாசகமும் எலியா இறைவாக்கினரால் இறைவன் நூறு பேருக்கு உணவு பரிமாறிய நிகழ்வினை எடுத்துரைக்கிறது. இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் பல ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன. 
* ஊர் ,பெயர் கொண்ட ஒரு மனிதர் உதவுகிறார். / ஊர், பெயர் இல்லாத ஒரு சிறுவன்  உதவுகிறான்.
* எலியாவிற்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட உணவு. / சிறுவன் தனது பசிக்காக வைத்திருந்த உணவு. 
* எலியாவின் ஒரு மாத உணவு. 20 வாற்கோதுமை அப்பம் / சிறுவனின் ஒரு நேரத்து உணவு 5 அப்பம் 2 மீன்.     
* 20 அப்பம் 100 பேருக்கு பகிரப்படுகிறது. / 5 அப்பம் 5000 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
* எப்படி பரிமறுவேன் என பணியாளர் கேட்கிறார். / இது எப்படி போதும் என அந்திரேயா கேட்கிறார்.  
இப்படி இரண்டு நிகழ்வுகளிலுமே இறைவனின் திருவுளம்  வெவ்வேறு நபர்கள் வழியாக வெவ்வேறு உணர்வுகள் வழியாக நிறைவாக செயல்பட்டு அவரை நாடி வந்தவர்களின் பசி தீர்க்கப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல கதை மாந்தர்கள் இடம்பெறுகின்றனர்.  அவர்களில் ஒரு சிலரின் செயல்களையும் வார்த்தைகளையும் நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.   
1 . இயேசு மலை மேல் ஏறி தம் சீடர்களோடு அமர்கிறார்.
2 . மக்கள் கூட்டத்தை நிமிர்ந்து பார்த்தார்.
3 . பிலிப்பு - ஒரு துண்டு கூட கிடைக்காதே 
4 . அந்திரேயா - இது எப்படி போதும் 

இயேசு தான் மட்டும் மலை மேல் ஏறவில்லை தனது சீடர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். தான் மட்டும் தான் தலைவர் . தனக்கு கீழ் தான் பிறர் அனைவரும் என்று எண்ணாமல் தனது நிலையை அவர்களும் அடையச்செய்கிறார். தனது பார்வை எப்படி பட்டது, எந்நிலையில் இருந்து அவர் மக்களைப் பார்க்கிறார் என்று சீடர்களையும் உடன் அழைத்துச்சென்று காட்டுகிறார்.  இதனால் சீடர்களுடனான சமத்துவமும் சீடத்துவமும் வீணாகாதபடிக்கு இந்த நிலையினை மனதினில் சேமித்து வைக்கச் சொல்கிறார். நமது குருவைப்போல வாழ வேண்டும் என்று எண்ணும் சீடர்களாகிய நாம், முதலில் குருவைப் போல சூழ்நிலைகளைக் காண முற்பட வேண்டும். 

மக்கள் கூட்டத்தை நிமிர்ந்து பார்க்கிறார் இயேசு. தன்னைச்சுற்றி இருப்பவர்கள் தன்னை புகழ்ந்து பேசுபவர்கள் என தன் கண்ணின்  பார்வைக்கு எட்டியவர்களை மட்டும் பார்க்கவில்லை இயேசு . மாறாக தன் பார்வையை உயர்த்தி தூரத்தில் இருப்பவர்களையும் பார்க்கிறார். ஏற்கனவே ஒரு மலைமேல் தான் இருக்கிறார். அவரை அனைவரும் பார்க்க முடியும். இருப்பினும் தனது பார்வையை உயர்த்துகிறார். இதன் மூலம் தொலைவிலுள்ள மக்களையும் கண்ணோக்குகிறார். இயேசு தன்னைப் பார்க்கவில்லையோ என்று மக்கள்  எண்ணி வருந்தாத அளவுக்கு செயல்படுகிறார். இதனால் அவர்களது நம்பிக்கை வீணாகாதவாறு பார்த்துக் கொள்கிறார். நாமும் பலநேரங்களில் நம்மைச்சுற்றி, நமக்கு புகழ் பாடும் கூட்டங்களையே பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். தொலைதூரத்தில் இருக்கும் நமது உறவுகளையும் நட்புகளையும் நாம் பார்ப்பதே இல்லை. நமது  பார்வையை விசாலமாக்குவோம் நம் அன்பர் இயேசு போல. 

பிலிப்பு கணக்கு பார்த்து வாழ்பவர் போல செயல்படுகிறார். 200 தெனாரியத்துக்கு அப்பங்கள் வாங்கினால் கூட ஆளுக்கு ஒரு சிறு துண்டு கூட கிடைக்காதே என்று கூறுகிறார். இதில் அவரின் வருத்தத்தை விட இவ்வளவு பணம் செலவழித்தாலும் யாரையும் நிறைவுபடுத்த முடியாதே என்பது தான் அவரது கவலையாக இருந்திருக்கும். இயேசு உடன் இருக்கிறார். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையில் குறைபாடுள்ளவராக இருக்கிறார். ஆளுக்கு ஒரு துண்டாவது கிடைக்க வேண்டுமே என்ற நல்ல எண்ணம் உடையவராய் இருந்தாலும், தயக்கம் காட்டுகிறார். இயேசு அவரின் நல்ல எண்ணம் வீணாகாதபடிக்கு செயல்படுகிறார். அனைவரும் வயிறார உண்ட பின்பு மிஞ்சிய துண்டுகளை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பச்சொல்கிறார். எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் நம்மிடத்தில் இருந்தாலும் இது எப்படி முடியும்? நல்லவர்கள் சோதனைகளை அனுபவித்துத்  தானே ஆக வேண்டும் என்றெல்லாம் கூறி நமது நல்லெண்ண அலைகளை நாமே வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். ஆண்டவர் இயேசு அருகிலிருக்க அனைத்தும் நலமாய் நடக்கும் என்று எண்ணி வாழ முயல்வோம். 

அந்திரேயா உணவு வைத்திருப்பவர் யார் , எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக பார்க்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப  தெளிவாக செயல்படுகிறார். இருப்பினும் இது எப்படி போதும் என்றெண்ணி பின்வாங்குகிறார். பிரச்சனைக்கான தீர்வைக் காண முயன்றவர். இடையிலேயே மலைத்துப் போய் நிற்கிறார். எந்த நோக்கத்திற்காக அவர் அனைவரிடமும் உணவு இருக்கிறதா என்று சோதித்தாரோ அந்த வேலையை பாதியிலேயே விட்டு விடுகிறார். காரணம் இலக்கில் தெளிவில்லாததால் தான். பிரச்சனையைப் பெரிதாகவும் அதற்கான தீர்வை சிறு துளியாகவும் எண்ணியதால் வந்த விளைவு, தயக்கம் தடுமாற்றம். இயேசு, அந்திரேயா கண்டறிந்த அந்த சிறு துளியை வெள்ளமாக மாற்றுகிறார். அவர் கண்டறிந்த தீர்வு வீணாகாதபடிக்கு பார்த்துக் கொள்கிறார். நாமும் பல நேரங்களில் பிரச்சனைக்கு தீர்வினை சுலபமாகக் கண்டறிந்தும் அதை தீர்க்க முயலாமல் தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் அப்படியே விட்டு விடுகிறோம். நாம் எடுக்கும் சிறு முயற்சியில் இயேசு முழு ஈடுபாட்டையும் நமக்கு தருவார் என்று நம்புவோம். 

5000 பேருக்கு உணவளித்த இயேசு ஒன்றும் வீணாகாதபடிக்கு அதை சேர்த்து வைக்கச் சொன்னார். நமது வாழ்விலும் அன்றாடம் நமக்கு உணவளிக்கிறார். வெறும் உடல் உணவு மட்டுமல்ல உள்ள உணவு . அன்றாட நிகழ்வுகளில் நமக்கு மிச்சமாகும் உணர்வுகளை அனுபவங்களை வீணாகாதபடிக்கு  நமது மனங்களில் எதிர்காலத்துக்கு சேமித்து வைக்கச் சொல்கிறார். நமது நம்பிக்கை, அன்பு, எதிர்பார்ப்பு, தீர்வு இவை அனைத்தும் வீணாகாதபடிக்கு அதை சேமித்து வைத்து வாழச்சொல்கிறார். உணவு மட்டுமல்ல நமது உணர்வுகளும் உன்னத அனுபவங்களும் சேமித்து வைக்கப்பட வேண்டியவையே. இதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கை சுகமே. இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் நிறைவாக இருப்பதாக ஆமென்.    

Saturday, 21 July 2018

பாலைவன ஓய்வு எடுக்க தயாரா?


தேவையான அளவிற்கு பணம் சம்பாதித்து விட்டு, அதன் பிறகு நல்ல நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்து பணம் சம்பாதிக்கும் பலர், அந்த எல்லைக் கோடு எங்கு இருக்கிறது என்று தெரியாமலே, கடைசி வரை சம்பாதித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் வாழாமலே..... 
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கொடுக்கும் செய்தி இதுதான் . ஓய்வு மனித நலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு தனது சீடர்களிடம் காண்பிக்கும் அன்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நமது வீடுகளில் சிறு குழந்தைகள் பள்ளியில் இருந்து சுற்றுலா சென்று வீடு திரும்பினால் அன்றிலிருந்து குறைந்தது ஒரு வாரமாவது அந்த சுற்றுலா பற்றிய பேச்சைத் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதே போல் தான் இயேசுவின் சீடர்களும் திரும்பி ஒன்றாகக கூடி வந்து தங்களது அனுபவங்களை அவருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இயேசுவும் பிள்ளைகளின் குரலுக்கு செவிமடுக்கும் பெற்றோர்களைப் போல ஆர்வமுடன் அவர்கள் கூறுவதைக் கேட்கிறார். தன் பிள்ளைகள் சோர்வடைந்திருக்கிறார்கள் என்பதை தாய் நன்கு அறிவாள். இயேசுவும் தாயாக தன் பிள்ளைகளை ஓய்வெடுக்க சொல்கிறார். சீடர்களும் படகேறி ஓய்வெடுக்க செல்கின்றார்கள். இந்த நற்செய்தி வாசகத்தின் மூலம் இயேசு நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

* உழைத்துக் கொண்டே இருக்காதே சற்று ஓய்வெடு.
* உன்னை தனிமையில் கண்டறி. 
* உன் செயல் மூலம் உன்னை அடையாளப்படுத்து.
* உற்சாகத்துடன் முன்னேறு.
* உனக்குரிய ஆயனை தேடிக்கண்டு பிடி.

1. உழைத்துக் கொண்டே இருக்காதே சற்று ஓய்வெடு. 
இன்று பெரும்பாலான மனிதர்கள் எதற்காக உழைக்கிறோம் என்று தெரியாமலே வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்கள். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று எண்ணுபவர்கள் கடைசிவரை அவர்களுக்காகவே வாழ்ந்து தாங்கள் வாழாமலே போய்விடுகிறார்கள். வெளிநாட்டவர்கள் இதற்கு நேர்மாறாக, அந்த வருடத்தில் சம்பாதித்ததில் ஒரு பகுதியை அந்த வருடத்திலேயே ஓய்விற்காக செலவழித்து தங்களை புதுப்பித்து கொண்டு புதுவருடத்திற்கு உழைக்கத் தயாராகின்றனர். ஓய்வு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கடவுளே படைப்பின் போது ஏழாம் நாள் ஓய்வெடுத்ததாக விவிலியம் கூறுகிறது. நம்மில் சிலர் ஓய்வே எடுப்பதில்லை . சிலர் ஓய்வெடுக்காமல் இருப்பதே இல்லை. இரண்டிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நாமும் சில நேர்ங்களில் ஓய்வு எடுக்கிறோம் ஆனால் தொலை தொடர்பு சாதனங்களோடு. அது உண்மையான முழுமையான ஓய்வாகாது. இயேசு, நமது புறச்சூழலிலிருந்து, தொலை தொடர்பு சாதனங்களில் இருந்து, நமது சிந்தனை ஓட்டங்களிலிருந்து நம்மை சற்று ஓய்வெடுக்க சொல்கிறார். நாமோ நமது உடழுழைப்பால் செய்யும் வேலைகளிலிருந்து நமக்கு ஓய்வு கொடுப்பதாய் நினைத்து இவை அனைத்திற்கும் முதலிடம் கொடுக்கிறோம். உனது நினைவுகளிலிருந்து உன்னை பிரித்தெடுத்து ஓய்வு கொள் இதுவே உண்மையான ஓய்வு. இத்தகைய ஒய்வைத் தான் இயேசு நம்மை எடுக்கச்சொல்கிறார். எதற்காக? இதன் மூலம் நம்மை புதுப்பித்து மீண்டும் நமது அன்றாட செயலை நல்ல முறையில் தொடங்குவதற்காக.

2. உன்னை தனிமையில் கண்டறி:
ஏராளமான அருள் அடையாளங்களையும் புதுமைகளையும் செய்து விட்டு திரும்பி வந்த சீடர்களுக்கு இயேசு பரிசுப் பொருள் எதுவும் தரவில்லை. இன்று நமது குழந்தைகள் ஏதாவது சாதனை புரிந்தால் பெற்றோர்கள் முதலில் பரிசுப்பொருட்கள் மூலம் அவர்கள் மனதை மகிழ்விக்கிறார்கள். ஏதாவது மின்னனு தொழில்நுட்ப பொருட்கள் தான் பெரும்பாலும் அவர்களது விருப்பமாகவும், தெரிவாகவும் இருக்கிறது. இத்தகைய பெற்றோர்கள் மத்தியில் இயேசு மிகச்சிறப்பான பெற்றோராக செயல்படுகிறார். சீடர்கள் செய்த அருஞ்செயல்களால் அவர்களது எண்ணம் பெருமையினாலும் செருக்கினாலும் நிறைந்து விடாது இருக்க முயல்கிறார். சின்ன செயல் செய்து சிலரிடம் பாராட்டு வாங்கினாலே அதை மிகப்பெரிய செயல் தாங்கள் செய்து விட்டதாய் எண்ணி பெருமையடைவர் பலர். அத்தகைய நிலை தனது சீடர்களுக்கு வராத வண்ணம் இயேசு செயல்படுகிறார். நீங்களாக இத்தகைய செயலைச் செய்ய வில்லை மாறாக கடவுளின் அருள் உங்களில் நிறைந்து உங்களை இவ்வாறு செய்யத் தூண்டி இருக்கிறது என்று அவர்கள் உணர செய்கிறார். அதற்காக தான் பாலைவனத்திற்கு அனுப்புகிறார். கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இருக்கும் போது மேலும் மேலும் அவர்களது அருஞ்செயல்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க தோன்றும். இதனால் அவர்கள் கடவுளின் அருள் தங்கள் மீது செயலாற்றியதை விடுத்து தற்புகழ் பாட தோன்றிவிடும் என்று எண்ணியே இயேசு அவர்களை தனிமையான ஒரு இடத்திற்கு அனுப்புகிறார். தனிமையில் நாமும் நமது செயல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இன்று நாம் தனிமையில் இருப்பது மிக அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது. எல்லா நேரமும் அலைபேசி, எல்லா இடத்திலும் மின்னனு கருவிகள், என்று நமது வாழ்க்கையை நாம் குறுக்கிக்கொண்டோம். நாகரீக மாற்றத்தின் காரணமாக குரங்கிலிருந்து மனிதனாக மாறி நிமிர்ந்து நடந்த நாம் அதீத நாகரீக மாற்றத்தின் காரணமாக இப்போது மீண்டும் குனிந்து நடக்க ஆரம்பித்து இருக்கிறோம் . இது மீண்டும் நம்மை விலங்கின நிலைமைக்கு மாற்றாமல் இருந்தால் சரி. தனிமையே நாம் நம்மை யார் என்று கண்டு பிடிக்க சரியான இடம். தனிமையில் நீ எப்படி இருக்கிறாயோ அது தான் உண்மையான நீ ... நாம் செய்யும் பல நல்ல செயல்கள் அனைத்தும் நாமாக செய்ய வில்லை கடவுளின் அருளாலேயே செய்கிறோம் என்பதை தனிமையில் உணர்வோம்.

3. உன் செயல் மூலம் உன்னை யார் என்று அடையாளப்படுத்து:
சீடர்கள் செய்த அருள் அடையாளங்களை வைத்து மக்கள் அவர்கள் இன்னாரென்று அடையாளம் கண்டு கொள்கின்றனர். நாம் செய்யும் பல செயல்களும் நாம் யார் என்று பிறருக்கு நம்மை அடையாளப்படுத்தும். எனவே செய்யும் செயல்களை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். நமது ஒரு சில செய்கைகளும் கூட பலருக்கு பல கருத்துக்களை தெரிவிக்கும் . எனவே எல்லா நேரத்திலும் பிறருக்கு நல்ல முன் மாதிரிகையாக திகழும் மனிதர்களாக வாழ முற்படுவோம். நமது நல்ல அடையாளத்தை பிறருக்கு விட்டுச்செல்வோம்.

4. உற்சாகத்துடன் முன்னேறு: 
சீடர்களோடு இயேசு படகேறி மறுகரைக்கு செல்லும் முன் மக்கள் கால்நடையாக சென்று அவர்களுக்கு முன் நிற்கின்றார்கள் . இது அவர்களது ஆர்வத்தையும் நம்பிக்கையையும் காட்டுகிறது . அவர்களது இத்தகைய செயலைக் கண்ட இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு பலவற்றை கற்பிக்கின்றார். பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிக்கும் திறம் அறிந்து அவர்களுக்கு தெரிந்த அனைத்தையும் கற்பிப்பது போல இயேசு அவர்களுக்கு கற்பிக்கின்றார். எந்த அளவிற்கு நாம் நமது தேவையையும் நம்பிக்கையையும் கடவுள் முன் வெளிப்படுத்துகிறோமோ அதை விட அதிகமான அளவு திரும்ப பெற்றுக் கொள்வோம் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று . எனவே எப்போதும் உற்சாகத்துடன் முன்னேறுவோம். தாகம் எடுக்கும் போது தான் அதிகமாக தண்ணீர் குடிக்க முடியும். ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ள எப்போதும் தாகமாய் இருப்போம்.

5. உனக்குரிய ஆயனைத் தேடிக் கண்டு பிடி:
மக்கள், இயேசு தான் தங்களது ஆயன் என்று கண்டு கொண்டனர். அவரைத் தேடிக் கண்டடைந்தனர். நாம் நமது ஆயன்களைக் கண்டடைந்து விட்டோமா? இப்போதுள்ள நமது சூழலில் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒவ்வொரு ஆயன்களை நாம் பின்தொடர்கின்றோம். எதற்கு போராட்டம்? யாருக்கு எதிராக போராட்டம் என்று உணராது யார் போராடினாலும் பின்னால் சென்றுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். நமது உண்மையான ஆயன் யார்? நாம் யாருடைய மந்தையைச் சேர்ந்த ஆடுகள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதனால் இது ஆயனின் தவறா? ஆடுகளின் தவறா? என்று விவாதம் செய்தே காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறோம். மந்தையை விட்டு ஆயன் ஒரு போது மறைவதில்லை . ஆடுகளாகிய நாம் தாம் நமது தொழில்நுட்ப சாதனங்களின் சத்தத்தினால் காதுகளையும், அவை உமிழும் ஒளி வெள்ளத்தில் கண்களையும் மறைத்துக் கொண்டு இருக்கிறோம். இதனால் ஆயனின் குரலையும் கேட்காது அவர் உருவத்தையும் காணாது சிதறடிக்கப்பட்ட மந்தைகளாக இருக்கிறோம். நமக்குரிய ஆயனைத் தேடிக் கண்டடைந்து வாழ முற்படுவோம்.
நல்ல ஆயனாக இயேசு நம்மோடு இருக்கிறார். நாம் அவரைக் கண்டறிவோம். அவரைப் பின் தொடர்வோம். வாழ்க்கை ஒரு முறை தான், வாழும் போதே அதை ரசித்து வாழ்ந்து விட வேண்டும் . இல்லையெனில் அது திரும்ப கிடைக்காது. உழைப்போம் அதற்கேற்ற ஓய்வினையும் எடுப்போம். பாலைவனம் வெறுமையின் அடையாளம் . அந்த வெறுமையின் தனிமையில் நாம் யார் என்று கண்டறிவோம். உற்சாகத்துடன் முன்னேறுவோம். நமக்குரிய ஆயன் நம்மைப் பின் தொடர்கிறார் என்ற நம்பிக்கை கொள்வோம். அவரைக் கண்டறிந்து அவர் பின் செல்லும் ஆடுகளாய் மாறுவோம். இயேசுவின் பாலைவன அனுபவம் அவரது பணிவாழ்விற்கு மிக அதிக பலனைத் தந்தது. இயேசு மட்டுமல்லாது பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் முதல் திருத்தூதர்கள் வரை அனைவரும் தங்கள் நிலையையும் இறையாசீரால் தங்களுக்கு கிடைத்த பலத்தையும் பாலைவன அனுபவம் மூலமாகவே கண்டு கொண்டனர். நாமும் நமது நிலையையும் பலத்தையும் உணரும் தருணம் நமது பாலைவனத் தனிமை அனுபவமே என்பதை உணர்வோம். பாலைவன ஓய்வில் பரமனையும் அவரது அருளையும் கண்டடைய முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் மீதும் இருப்பதாக ஆமென்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...