Saturday, 14 November 2020

உண்மையான மதிப்பு

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது.. அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற

சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்.. இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.. ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்.. அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான்.. ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்..

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள். இன்று நம்முடைய தாலந்து உவமையில் நாம் காணும் மூன்றாம் பணியாளர் போல நாமும் பல நேரங்களில் நமக்கு கிடைக்கும் ஆள், பொருள், வேலையின் மதிப்பு தெரியாமல் அதனை தவற விடுகிறோம். பொதுக்காலத்தின் 33ம் ஞாயிற்றில் இருக்கும் நம்மை விண்ணரசின் வியத்தகு உரிமைக்கு அழைக்கின்றார் இறைவன். தாலந்து உவமை மூலமாக நமது மதிப்பையும் பொறுப்பையும் உணர்ந்து கொள்ள அழைக்கின்றார். இன்றைய தலைவரின் குணநலன்கள் மற்றும் பணியாளரின் செயல்பாடுகள் நம்முடைய செயல்பாடுகளை சரிசெய்ய நமக்கு உதவுகின்றன.


தலைவரின் குணநலன்:

பகிரும் குணம்;

தன்னுடைய சொத்துக்களை தானே வைத்திருக்காமல் தனக்கு கீழே இருக்கும் பணியாளர்களிடம் ஒப்படைக்கின்றார்.


பணியாளர்களின் திறமையை அறிபவர்:

அவரிடம் ஏராளமான பணியாளர்கள் இருந்த போதிலும் அதில் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார். அதையும் மூவருக்கும் சமமாகப் பிரிக்கவில்லை. மாறாக அவர்களின் திறம் அறிந்து பார்த்து கொடுக்கின்றார்.


தனது இயல்பை வெளிப்படுத்துபவர்:

இவர் எவ்வளவு அன்பானவர் அக்கறையானவர் என்பதை முதல் இரு பணியாளர்களின் வார்த்தையிலும், எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை மூன்றாவது பணியாளரின் வார்த்தையிலும் அறிந்து கொள்ளலாம்.


பிறர் வளர்ச்சியில் அக்கறை கொள்பவர்;

தன்னுடைய பணியாளர்களில் இருவர் தான் கொடுத்த தாலந்தை வைத்து இரு மடங்கு தாலந்து சம்பாதித்துள்ளனர் என்பதை அறிந்து மகிழ்கின்றார். அவர்களின் மகிழ்வை தனது மகிழ்வாகப் பார்க்கின்றார். உங்கள் மகிழ்வில் நான் பங்கு கொள்கின்றேன் என்று சொல்லவில்லை. மாறாக உன் தலைவனாகிய என் மகிழ்வில் வந்து பங்குகொள் என்கின்றார்.

இவன் என் பணியாளன் நாளுக்கு நாள் வளர்ந்து என்னைவிட பெரிய ஆளாக மாறிவிடுவானோ என்று அஞ்சவில்லை. அவன் இன்னும் அதிகமாக முன்னேற அழைக்கின்றார்.


கண்டிப்பானவர்:

ஒருவர் எவ்வளவு அதிகமாக நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்கின்றாரோ அதே அளவுக்கு கோப உணர்வு உள்ளவராகவும் இருப்பார் என்கிறது உளவியல் ஆய்வு. நம் தலைவர் உண்மையான பணியாளரை பாராட்டும் குணம் கொண்டவர். அதே வேளையில் தவறு செய்த பணியாளரை தண்டிக்கும் குணமும் உடையவர். ஒரே குண நலனோடு எல்லா இடத்திலும் எல்லா சூழலிலும் ஒருவரால் எல்லா நேரமும் இருக்க முடியாது.


பாராட்டி பரிசளிக்கும் குணமுடையவர்:

முதல் இரண்டு பணியாளர்களின் பணியையும் செயலையும் பார்த்து அவர்களை மனமாரப் பாராட்டுகின்றார். அவர்களின் செயலால் மகிழ்ந்து சிறியவற்றில் மிக நம்பிக்கையோடு செயல்பட்டீர்கள் மிகப் பெரியவற்றில் உங்களை பொறுப்பாளராக்குவேன் என்று அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கின்றார்.


தாலந்து உவமையில் வரும் தலைவர் நம் ஆண்டவர் இயேசு. அவர் கொடுக்கும் தாலந்து விண்ணரசிற்கு செல்ல தரும் கொடை,அனுமதி சீட்டு. அனைவருக்கும் அது சமமாக கிடைப்பதில்லை. அவரவர் நம்பிக்கை, குணநலன் பொறுத்து கொடுக்கப்படுகிறது. நம் தலைவர் அன்பானவர் அதே சமயத்தில் கண்டிப்பானவரும் கூட. அவர் நம்மிடம் கொடுத்திருக்கக்கூடிய கொடை என்னும் குடும்பம் உறவுகள் தகுதி திறமை அனைத்தையும் மிகச்சிறப்பாக நாம் கையாள வேண்டும். அவர் கொடுத்ததை இரட்டிப்பாக்கி விண்ணரசு என்னும் மிகப் பெரிய பரிசினை நாம் பெற வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்ட கொடைகளின் உண்மையான மதிப்பினை அவைகள் நம்முடன் இருக்கும் போதே உணர வேண்டும்.


சிறு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்காக அதிக அடம்பிடித்து அழுது அதை வாங்குவார்கள். ஆனால் கொஞ்ச நாளிலேயே அதை மறந்து விடுவார்கள். அதைப்பற்றிய நினைப்பே அவர்களுக்கு வருவதில்லை. வீட்டில் எங்காவது ஒரு மூலையில் அது கிடக்கும். ஆனால் அதுவே பிறர் அதனை எடுத்து விளையாட நினைத்தாலோ அல்லது வேறு ஒருவர் கைக்கு சென்றாலோ அது தன்னுடையது என்று அழுது திரும்பப் பெறும். ஒருவேளை அது அவர்களுக்கு அது திரும்ப கிடைக்கப்பெறலாம். ஆனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட கொடைகள் என்னும் தாலந்திற்கு நாம் உரிய நேரத்தில் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும். நம் கையை விட்டு சென்றாலோ பிறர் கைக்கு சென்றாலோ நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.


மூன்றாம் பணியாளர் போல அதன் மதிப்பு தெரியாமல் மறைத்து வைத்தாலோ, பயன்படுத்தாமல் இருந்தாலோ பாதிப்பு என்னவோ நமக்கு தான். பயத்தினால் அவர் அந்த தாலந்தை மண்ணுக்குள் மறைத்து வைத்ததாக கூறுகின்றார். பல நேரங்களில் நம் பயங்கள் தான் நம்மை மண்ணுக்குள் அழுத்துகின்றன.

விண்ணகத்தந்தை பயந்து தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பாமல் இருந்த்திருந்தால் நமக்கு இயேசு என்னும் மீட்பர் கிடைத்திருக்க மாட்டார்.

மரியாள் பயந்து மறுத்திருந்தால் மனுமகனாய் பிறந்திருக்க மாட்டார்.

சூசையப்பர் பயந்து ஓடி இருந்தால் தச்சன் மகன் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.

சீடர்கள் பயந்து மறைந்தே இருந்திருந்தால் கிறிஸ்தவம் இன்று உலகம் முழுதும் பரவி இருக்காது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அனைவரிடம் பயம் இருந்தது. ஆனால் அந்த பயம் அவர்களை நல்வழிக்கு இட்டு சென்றது. ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கொடைகளின் மதிப்பை நன்கு அறிந்து இருந்தனர். அதனால் அவர்கள் பயத்தை மண்ணுக்குள் புதைத்து துணிவை புதுத்தளிராகப் பெற்றனர்.

இன்றைய நாளில் இறைவன் நம்மையும், பயத்தை புதைத்து துணிச்சலோடு நம் கொடைகளை கையாள அழைக்கின்றார். நம்மோடு இருக்கும் ஒவ்வொரு பொருளும் உறவும் தகுதியும் திறமையும் இறைவன் நமக்கு கொடுத்த கொடை . இக்கொடைகளை நாம் நன்முறையில் பேணிக்காத்து, விண்ணரசிற்குள் நுழைய நம்மை நாம் தயார்ப்படுத்துவோம்.

நமது தாலந்துகளின் உண்மையான மதிப்பை நாம் நன்கு அறிந்து செயல்படுவோம். இறைவன் நம்மோடு இருந்து அவர் தம் அருளாலும் ஆசீராலும் நம்மை நிரப்பி வழிநடத்துவாராக ஆமென்.

Friday, 6 November 2020

வாய்ப்பைத்தேடு விழிப்போடு

 


வாய்ப்பு வடை மாதிரி நாம தான் காக்கா மாதிரி தேடிப் போகனும். பீட்சா மாதிரி அது நம்மைத் தேடி வரும்னு இருக்கக் கூடாது.  இது இக்கால கவிஞனின் கவிதை.   

 

வாய்ப்புக்கள் எல்லா நேரமும் நம்மைத் தேடி வருவதில்லை. அது நிழல் போன்றது நம் கூடவே வரும். விழிப்போடு இருப்பவர்களுக்கு அதனை கண்டு கொள்ளும் பாக்கியம் கிடைக்கின்றது. விழிப்போடு இல்லாதவர்களுக்கு அது வாய்ப்பு என்று அறிந்து கொள்ளும் முன்னமே அது அவர்களை விட்டு கடந்து போய்விடுகிறது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை விழிப்போடு இருக்க அறிவுறுத்துகின்றன. முதல் வாசகத்தில் ஞானம் எப்படிப்பட்டது? அதை எப்படி கண்டடைய வேண்டும் என்றும், அது எப்படிப்பட்டவர்களை நாடிச்செல்லும் என்றும் சாலமோனின் ஞானாகமம் வழியாக நமக்கு இறைவன் வெளிப்படுத்துகின்றார். இரண்டாம் வாசகத்திலோ இறைமகனின் இரண்டாம் வருகைக்கான எதிர்பார்ப்பு பற்றிய பவுலடியாரின் கருத்துக்கள் வழி நம்மையும் அதற்கு விழிப்போடு தயாராக இருக்க அறிவுறுத்துகிறார் இறைவன். நற்செய்தி வாசகத்திலோ, பத்து கன்னியர் உவமை வழி நாம் அறிவிலிகளா முன்மதி உடையவர்களா என்பதை  குறித்து சிந்திக்க அழைக்கின்றார். 


1. ஞானம் என்னும் வாய்ப்பு:

      ஒளி பொருந்தியது. தன்னையும் பிரகாசமாக்கி தன் அருகில் இருப்பவர்களையும் பிரகாசமாக்கும். மங்காதது எனவே தொடர் வெளிச்சம் நிச்சயம். தேடுவோர் அதனை கண்டடைவர். நாடுவோர்க்கு அது வெளிப்படுத்தப்படும். தகுதியானவர்களை அது தேடிச்செல்லும். கனிவுடன் தன்னை காட்டும். ஞானமும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே போல கிடைப்பதில்லை. மறைந்த நம் அப்துல் கலாம் ஐயா கூறுவது போல ஒரே மாதிரியான திறமைகளோடு அனைவரும் இவ்வுலகில் பிறப்பதில்லை. ஆனால் அத்திறமைகளை வளர்த்தெடுக்க ஒரே மாதிரியான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. ஞானம் என்னும் வாய்ப்பும் முதல் வாசகத்தில் சொல்லப்படுவது போல தகுதியானவர்களைத் தேடிச்செல்கிறது. வைகறையில் அதனைத் தேடுபவர்கள் தளர்ச்சி இன்றி கண்டடைகின்றனர். அதிகாலையில் எழுந்து தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்பவன் அதனைக் கண்டு கொள்கின்றான். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்கள் அதில் முழு மூச்சாக இருந்து அவ்வாய்ப்பைப் பெற்றுக் கொள்கின்றனர். மற்றவர்கள் அதனை இழந்துவிடுகின்றனர். வெற்றிகளை அடைய நாமும் நம்முடைய வாய்ப்புக்களை தேடிச்செல்வோம். ஏனெனில் ஞானம் ஒளிமிக்கது. 


2. இரண்டாம் வருகை எதிர்பார்ப்பு: 

     இவ்விரண்டாம் வாசகத்தில் பவுலடியார் இறந்தவர்களை குறித்து கலங்காதீர்கள் அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரோடு இணைந்து நமக்கு முன் கடவுளை எதிர்கொண்டு செல்வார்கள் . நாம் அவர்களுக்கு பின் கடவுளை விண்ணுலகில் எதிர்கொள்வோம் என்கின்றார். இறந்தவர்கள் முதலில் இயேசுவோடு உயிர்த்தெழுவார்கள். அதன்பின் நாமும் அவரோடு உயிர்த்தெழுவோம். இவ்வாறு எப்போது நாம் ஆண்டவரோடு இருப்போம் என்பதில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம் என்கின்றார். ஆக ஆண்டவரோடு இருக்க நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது. அவ்வாய்ப்பினை முழு நம்பிக்கையோடு ஏற்பவர்கள் அதற்கான பலனைப் பெறுகின்றனர். வாழ்க்கையில் பல வாய்ப்புக்கள் வரும் ஆனால் சில வாய்ப்புக்கள் தான் நமக்கு வாழ்க்கையைத் தரும். எனவே எதிர்பார்ப்பாக இருந்தாலும் விழிப்போடு வாய்ப்பிற்காக காத்திருப்போம். 


3. அறிவிலியா? முன்மதியா?  

 அறிவிலிகள் அழைக்கப்பட்டனர். அழைப்பிற்கேற்றவாறு தங்களை தகுதிப்படுத்திக்கொள்ளத் தவறி விட்டனர். மணமகனின் விருந்திற்கு மணமகளின் தோழியரில் பத்து பேர் மட்டும் அழைக்கப்பட்டனர் என்றால் அது எவ்வளவு சிறப்பான ஒரு அழைப்பு. ஆனால் அந்த அறிவிலிகளுக்கு தாங்கள், எதற்கு? யாரால்? எங்கு? அழைக்கப்பட்டிருக்கிறோம் என்ற தெளிவு இல்லை. நாமும் பல நேரங்களில் வாய்ப்புக்களைத் தேடி அலைகின்றோம். ஆனால் அது கிடைத்தவுடன் அதன் வீரியம் அறியாமல் அதனைத் தவறவிட்டு விடுகின்றோம். அறிவிலிகள் மணமகன் வர காலம் தாழ்த்தவே தூக்கக் கலக்கத்தால் உறங்கி விடுகின்றனர். அப்பொழுதாவது எண்ணெயும் இல்லை எண்ணெய்க் கலமும் இல்லை என்பதை  அறிந்து வாங்கச் சென்றிருக்கலாம். அதுவும் செய்யவில்லை. அவர்கள் அதுவரை தாங்கள் என்ன நோக்கத்திற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணரவில்லை. இதுதான் இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரின் பிரச்சனை. நாம் முன்மதி உடையவர்களா? அறிவிலிகளா என்பதே பலருக்கு கேள்விக்குறி. அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது அதை பயன்படுத்த அவர்களுக்கு தெரியவில்லை. சில நேரங்களில் வாய்ப்புக்கள் மலைகள் போல பளிச்செனவும் தென்படும். சில நேரங்களில் பாதைகளில் கிடக்கும் சருகுகள் போலவும் காட்சியளிக்கும். மலையேறி மாடி கட்டவும் சருகுகள் கொண்டு மெத்தை அமைக்கவும் நமக்கு விழிப்பு நிலை அவசியம். இல்லையெனில் வாய்ப்புகள் கண்ணில் காணாமலேயே போய்விடும். 


ஒரு சிறு கதை கொண்டு என்னுடைய இந்த சிந்தனைக் கருத்தினை நிறைவு செய்ய விரும்புகிறேன். ஒரு ஊரில் இரண்டு பார்வையற்றவர்கள் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்து தர்மம் எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மிக அழகாக பாடக் கூடியவர் எனவே அவர் பாடி அங்கிருந்த மக்களிடம் பண உதவி பெற்று வாழ்ந்து வந்தார். மற்றவரோ அவரது இயலாமையைக் கூறி மக்களிடம் பண உதவி பெற்றார். ஒரு நாள் அவ்வழியே சென்ற மன்னர் பார்வையற்றவரின் பாடலினால் கவரப்பட்டு அவருக்கு உதவி செய்ய நினைத்தார். எனவே தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி, அவரிடம் சென்று அவரது பாடலுக்காக அவரைப் பாராட்டினார். மேலும் உனக்கு என்ன உதவி நான் செய்ய வேண்டும் என்று கேட்டார். பாடல் பாடும் பார்வையற்றவரோ, அரசே எனக்கு ஒரு ஆசை ஒரே ஒரு நாள் நான் நீங்கள் உண்ணும் உணவு போல் ஒரு வேளை உண்ண வேண்டும் என்றார். மன்னரும் மறுநாள் அவருக்கு விருந்து அளிப்பதாக உறுதி அளித்தார். மறுநாள் பார்வையற்றவர் மன்னரின் வருகைக்காகக் காத்திருந்தார். காலை, மதியம், மாலை, இரவு ஆயிற்று மன்னர் வரவே இல்லை. அன்று காலை முதல் மன்னரின் விருந்திற்காக மற்றவர்கள் கொடுக்க விரும்பிய அனைத்தையும் மறுத்துவிட்டார் அவர். மறுநாள் மன்னர் பார்வையற்றவரை அதே இடத்தில் சந்தித்தார். பார்வையற்ற மனிதனைப் பார்த்து அரச விருந்து எப்படி இருந்தது? பொற்காசுகள் போதுமானவைகளாக இருந்தனவா? குதிரை எங்கே என்று கேட்டார். பார்வையற்றவருக்கோ ஒன்றும் புரியவில்லை. என்ன மன்னா? என்ன கேட்கின்றீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார். 

நடந்தது என்னவென்றால், மன்னர் பார்வையற்றவருக்கு உணவு எடுத்துக் கொண்டு வரும்போது, உடல்நலம் சரி இல்லாமல் போக, அதனை அரண்மணைக் காவலாளரிடம் கொடுத்து அனுப்புகிறார். இது தெரியாத பாடும் பார்வையற்றவர் அந்த உணவினை தவிர்த்துவிடுகின்றார். அதனால் காவாலாளி அந்த உணவை அருகில் இருந்த மற்றொரு பார்வையற்றவருக்கு கொடுத்து விடுகின்றார். அவரும் முழு மனதுடன் அதனை ஏற்று உண்கின்றார். மன்னர் வேறொரு காவலாளியிடம் 100 பொற்காசுகள் ஒரு குதிரையை பரிசாகக் கொடுத்து அதனை ஆலமரத்தடியில் அரச உணவு உண்ணும் பார்வையற்றவருக்கு கொடுத்து வருமாறு கூறுகின்றார் . ஆக மன்னரின் அன்பளிப்புகள் அனைத்தும் வேறொரு பார்வையற்றவருக்கு போய்ச்சேருகிறது. பாடும் பார்வையற்ற மனிதன் எதிர்பார்த்தது அவனுக்கான வாய்ப்பு மன்னர் ரூபத்தில் வரும் என்று, ஆனால் வந்தது என்னவோ காவலாளியின் வடிவத்தில். நாமும் பல நேரங்களில் நமக்கான வாய்ப்பை இப்படி தான் நழுவ விடுகின்றோம். எந்நேரமும் விழிப்போடு இருந்தால் மட்டுமே நாம் நமக்கான வாய்ப்பை பெற முடியும். ஞானமும், இறைவனை எதிர்கொள்ளும் நாளும் எல்லாமே வாய்ப்பு தான்.   இதுவரை நம் வாழ்வில் நாம் அடைந்தது எல்லாம் இறைவன் நமக்கு தந்த பரிசு. இழப்பதெல்லாம் இறைவன் இன்னொருவருக்கு தரும் வாய்ப்பு என்று உணர்ந்து வாழ்வோம்.  எந்நிலையிலும் விழிப்போடு இருந்து வாய்ப்புக்களை நமதாக்கி வாழ இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.       

Friday, 9 October 2020

தகுதி

 ஒரு மூட்டைப் பூச்சி தன் குடும்பத்தோட ராஜாவோட கட்டில் அடியில வாழ்ந்து வந்தது. ராஜா தூங்கினதுக்கு அப்புறமா அவருக்கு வலிக்காம அவர் இரத்ததைக் குடிச்சு, பசி நீங்கி தன்னோட குடும்பத்தோட ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு வந்தது. ஒரு நாள் எங்கிருந்தோ வந்த கொசு அவங்களோட தங்கி ராஜாவோட இரத்தத்த சுவைக்க ஆசைப்பட்டது. "சரி நீ இன்னைக்கு ராஜாவோட இரத்தத்த ருசிச்சு பார்க்கலாம் ஆனா அவர் தூங்குனதுக்கு அப்புறமா தான் நீ அவர கடிக்க ஆரம்பிக்கணும்" னு சொல்லி அந்த கொசுவிற்கு அனுமதி அளித்தது மூட்டைப்பூச்சி. ராஜா கட்டில் அருகில் வந்து அமர்ந்தவுடன் கொசுவிற்கு ஆசை விடவில்லை அவர் மேல் ஏறி முதுகு முகம் கை கால் என எல்லா பக்கமும் கடிக்க ஆரம்பித்தது. வலி தாங்க முடியாத ராஜா, பணியாளர்களிடம் சொல்லி கொசுவையும் அதனோடு சேர்ந்து முட்டைப்பூச்சி எல்லாவற்றையும் கொன்று அழித்துவிட்டார். கொசுவோட சேர்ந்து மூட்டைப்பூச்சியும் தன்னோட குடும்பத்தோட அழிந்து போனது.

இருக்கும் இடத்திற்கு ஏற்ப தன்னைத்தகுதிப் படுத்திக் கொள்ளாததால் வந்த விளைவு இது. தான் அழிந்ததோடு மட்டுமல்லாமல் தன்னோடு சேர்த்து தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது கொசு.

இவ்வுலகில் பிறக்கும் அனைவரும் தகுதியோடு பிறப்பதில்லை. சிலர் தங்களை தகுதிபடுத்திக் கொள்கிறார்கள். மேலும் சிலர் தங்களை தகுதி உடையவர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்.

பொதுக்காலத்தின் 28 ம் ஞாயிற்றில் இருக்கும் நம் அனைவரையும் இறைவன் நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் அழைக்கின்றார். இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் இறைவன் நாம் அவரின் பிள்ளைகள் என்ற தகுதியை நமக்கு தருவதாக அமைந்துள்ளன. முதல் வாசகத்தில் படைகளின் ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேல் மக்களுக்கு மிகச்சிறப்பான விருந்து ஒன்றை தயார் செய்கின்றார். நமக்கு அவரின் பிள்ளைகள் என்ற உரிமையைத் தருகின்றார். திருப்பாடலிலோ தாவீது அரசர் ஆண்டவரை ஆயனாக நினைத்து நாம் அனைவரும் அவர் மந்தையின் ஆடுகள் என்னும் தகுதியை நமக்கு தருகின்றார். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் இயேசுகிறிஸ்துவை தனது ஒப்பற்ற செல்வமாகக் கொண்ட பெருமனிதனாக தன்னை தகுதிப்படுத்திக் கொள்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு உவமை வாயிலாக நாம் யார்?, நம் தகுதி என்ன?, என்பதை எடுத்துரைக்கின்றார்.

இந்நற்செய்தியில் இடம் பெறும் அரசர் தன்னுடைய மகனின் திருமண விருந்தில் பங்கு கொள்ள தனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைக்கின்றார். சிலர் அதை விரும்பாது புறக்கணிக்கின்றனர். சிலர் பணியாளர்களை இழிவுபடுத்துகின்றனர். கொலை செய்கின்றனர். இதனால் அரசரின் சினத்திற்கு ஆளாகி இறக்கின்றனர். இதனால் நெருங்கிய சொந்தங்கள் நீங்கி, முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் மனிதர்கள் அரசரின் திருமணவிருந்தில் பங்கேற்கின்றனர்.

நாம் அனைவரும் இந்த உலகம் என்னும் ஒரு வட்டத்தில் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கின்றோம். மையப்புள்ளி இறைவன், அவரை சென்றடைய நாம் அனைவரும் அனுதினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். மையப்புள்ளியைச்சுற்றி மிகச்சிறிய உள் வட்டம் தொடங்கி பெரிய வட்டம் வரை பல வட்டங்கள் உள்ளன. இறைவனுடனான நம்முடைய ஆர்வத்தைப் பொறுத்து நமது வட்டங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வுவமையில் இறைவன் அரசராகவும், அவர் மகன் இயேசுவாகவும், அவரது திருமண விருந்தை இறையரசாகவும் கருதலாம். அரசரின் உறவினர்கள், உற்றார், நண்பர்கள்,சிலர் அவரது அழைப்புக்கு பதில்மொழி கொடுக்காதவர்களாகவும், இருக்கின்றனர். இவர்கள் உள்வட்டத்தில் இருந்தபோதும் மையப்புள்ளி அடையாதவாறு இவர்கள் கண்களும் இதயங்களும் மறைக்கப்பட்டு இருக்கின்றன.

பணியாளர்கள் அரசரோடு எப்போதும் உடன் இருப்பவர்கள் இவர்களில் சிலர் அரசருக்காக உயிர் இழக்கவும் இழிவுபடுத்தப்படவும் நேரிடலாம். (அதனால் பணியாளர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் அரசரின் சினத்திற்கு ஆளாவார்கள்.) எந்நிலையிலும் அரசரின் ஆணைக்காகத் தயாராக இருப்பவர்கள். இவர்கள் உள்வட்டத்தில் இருந்தபோதும் பவுலடியார் சொல்வதைப்போல வறுமையிலும் வளமையிலும் வாழத் தகுதி படைத்த பணியாளர்கள்.

தெருவோரம் இருக்கும் மனிதர்கள் வெளிவட்டத்தில் இருக்கக் கூடிய மக்கள் . அரசரைப் பற்றியும் அவர் தம் மகனின் திருமண விருந்தைப் பற்றியும் தெரியாதவர்களாய் இருக்கின்றனர். பணியாளர்கள் மூலமாக அரசரின் திருமண விருந்தைப் பற்றி அறிந்து கொண்டு அவரது மகிழ்வில் பங்கேற்க செல்கின்றனர். தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பை முழுமனதுடன் ஏற்று, அரசருக்கு மிக நெருங்கியவர்களாக தங்களைத் தகுதிபடுத்திக் கொள்கின்றனர். வெளிவட்டத்தில் இருந்த அவர்கள் பணியாளர்களினால் உள்வட்டத்திற்குள் செல்கின்றனர்.

உள்வட்டத்திற்கு சென்ற அவர்கள் அரசராம் இறைவனுடன் மிக நெருங்கிய ஒரு உறவை ஏற்படுத்துகின்றனர். தங்களின் மகிழ்வினால் அரசரையும் அவர் தம் திருமண நிகழ்வையும் மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். அதற்கு ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் அரசரை தங்களின் கடவுளாக, குறைகளைப் போக்குபவராகப் பார்க்கின்றனர். படைகளின் ஆண்டவர் அன்று மலையில் இஸ்ரயேல் மக்களுக்கு படைத்த சுவை மிகுந்த உணவினை உண்ணும் பேறு பெற்றவர்களாயினர். ஆயனின் மேய்ச்சலில் பசும்புல்வெளியையும் நீரோடையையும் கண்ட மந்தைகளாயினர். இயேசுவை ஒப்பற்ற செல்வமாகக் கொண்டவர்கள் போலானார்கள்.


திருமண விருந்திற்கு திருமண ஆடையின்றி வந்தவர் தன்னை அந்த நிகழ்விற்கு தகுதிப்படுத்த தவறிவிட்டார். தான் எங்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் ? அது எப்படிப்பட்ட இடம்? என்பதை உணராமல் வந்துவிட்டார். உடலளவில் ஏழையாக இருக்கும் அவர் மனதளவிலும் ஏழையாக இருந்துவிட்டார். உடலில் மட்டுமல்லாது மனதிலும் அழுக்கு படிந்தவராக இருந்துவிட்டார். பிறக்கும் எல்லோரும் பணக்காரர்களாக பிறப்பதில்லை. பிறக்கும் நாம் ஏழையாக பிறந்தால் அதற்கு நாம் காரணமல்ல. ஆனால் ஏழைகளாகவே இறந்தால் அதற்கு முழுக்க முழுக்க நாம் தாம் காரணம். நமது நிலை தாழ்வாக, பொருளாதார அளவில், படிப்பளவில், உடலளவில் இருந்தால் அதை சரி பண்ண வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. சிலர் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இல்லாது அப்படியே தொய்வடைந்துவிடுகின்றனர். இவ்விருந்தில் பங்கேற்றவர் கூட அதே நிலைமையில் தன்னை வைத்தவராகத்தான் இருப்பார். அதனால்தான் தான் அழைக்கப்பட்டது எங்கு எதற்கு என்று அறியாமல் உடல் உள்ள அழுக்குகளோடு விருந்து உண்ண வந்துவிட்டார்.

இவர் செய்த இன்னொரு தவறு. தேவையான இடத்தில் பேசாமல் இருந்து மௌனம் காத்தது. அரசர் நண்பா எப்படி திருமண உடையின்றி இங்கு வந்தாய் என்று கேட்கும் போதே அவர் மன்னிப்பு கேட்டு ஏதாவது சொல்லி இருந்து இருக்கலாம். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. அதுவே அரசரை அவமரியாதை செய்ததற்கு சமமாயிற்று. நாமும் பல நேரங்களில் இந்த தவற்றை செய்கின்றோம். பேச வேண்டிய இடத்தில் பேசாமலும் பேசக் கூடாத இடத்தில் பேசியும் நாம் வருந்துகிறோம். பிறரை வருத்தமடைச்செய்கின்றோம். அரசர் கோபமுற்று அவரை சிறையில் அடைக்கச்சொன்னது வருத்தமளிப்பதாக இருந்தாலும்,அவர் செய்தது சரியே. உணவு சமைக்கும் முன்பும் உண்ணும் முன்பும் சுத்தமாக கைகால்களை கழுவி ஆரோக்கியம் பேணச்சொல்லும் மக்கள் மத்தியில் அழுக்கு ஆடையுடன் அமர்ந்து உணவு உண்டு உணவையும் அவருடன் சேர்ந்து உண்பவர்களின் மனநிலையையும் மாற்றுகின்றார். வெளிவட்டத்தில் இருந்து உள்வட்டத்திற்கு செல்ல அழைப்பு கிடைத்த போதும் அதை சரியாக பயன்படுத்தத் தெரியாதவர் ஆகிவிட்டார்.

அழைப்புபெற்றவர்கள் பலர் ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர் என்று இயேசு கூறுகின்ற வரிகளில் நாம் அழைக்கப்பட்டவர்களா? தெரிந்தெடுக்கப்பட்டவர்களா? என்று சிந்திப்போம். நாம் அழைக்கப்பட்டிருந்தால் அந்த அழைப்புக்கேற்ற தகுதியை வளர்த்துக்கொள்வோம். தெரிந்தெடுக்கப்பட்டவர்களானால் நமக்கான தகுதியை தக்கவைத்துக்கொள்ள முயல்வோம். தகுதி என்பது பட்டங்கள் பயின்று வரும் அறிவினால் வருவதில்லை. நம் குணத்தினால் வெளிப்படும் செயல்களில் வருகிறது என்பதை உணர்ந்து தநம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்வோம். "தகுதியைத் தேடி நீ செல்லாதே உன்னைத் தேடி அது வரும்படி செய் " மையப்புள்ளியில் அமைந்திருக்கும் இறைவனின் அன்பை அருகில் சென்று உணர்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.


Friday, 13 March 2020

என் கிணறு எங்கே?

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

என் கிணறு எங்கே?

I. விடுதலைப் பயணம் 17:3-7

II. உரோமையர் 5:1-2,5-8

III. யோவான் 4:5-42


தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றில் இருக்கக்கூடிய நம்மை சமாரியப் பெண்ணின் உரையாடல் வாயிலாக வாழ்வு தரும் நீரைப் பருக இறைவன் அழைக்கின்றார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நீரை மையமாகக் கொண்டதாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் யாவே இறைவன், இஸ்ரயேல் மக்களுக்கு மோசே இறைவாக்கினர் வழி பாலை நிலத்தில் வளமான நீரைத் தருகின்றார். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், இயேசுவின் மேல் நம்பிக்கை எதிர்நோக்கு அன்பு கொண்டு வாழ அறிவுறுத்துகின்றார். இதன் மூலம் வாழ்வு தரும் நீராம் இயேசுவை நமதாக்க வலியுறுத்துகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு சமாரியப் பெண்ணிடம் நடத்தும் உரையாடல் மூலமாக வாழ்வு தரும் தண்ணீரை நாமும் பருக அழைக்கின்றார்.

நற்செய்தியில் இயேசு, சீடர்கள், சமாரியப் பெண் மற்றும் சமாரியர்கள் இடம்பெறுகின்றனர். இதில் சீடர்களின் செயல்பாடுகளையும் சமாரியப் பெண்ணின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு நம்முடைய சிந்தனைகளுள் நுழைவோம்.

   சீடர்கள்                                        சமாரியப் பெண்.

* உணவு தேவை                             நீர் தேவை

* ஊருக்குள் செல்கின்றனர்            ஊருக்கு வெளியே வருகின்றார்

* பெண்ணிடம் பேசுகின்றாரே        பெண்ணிடம் நீர் கேட்கின்றாரே

 என்ற எண்ணம்                              என்ற ஆச்சரியம்

* என்ன உண்டார் என்று               எப்படி நீர் அருந்துவீர் என்ற கேள்வி

கேட்க தயக்கம்

ஆக சீடர்களின் செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது சமாரியப் பெண்ணின் செயல்பாடு.

சமாரியப் பெண்ணின் செயல்பாடுகளை நமது செயல்பாடுகளோடு ஒப்பிட்டு நமது கிணறு எங்கே என்று தேட உங்களை அழைக்கின்றேன்.

1. தேடினாள்/ர்

2. விட்டுவிட்டாள்/ர்

3. அறிவித்தாள்/ர்


தேடினார்.;

தன்னுடைய தாகத்தினை தணிக்க தேவையான தண்ணீர் கிடைக்கும் இடம் எது என் கண்டுணர்ந்து அதனை தேடிச்செல்கிறார். அங்கு நீரினை எடுத்து வர குடத்துடன் செல்கிறார். இயேசு கிணற்றருகே அமர்ந்திருக்கிறார். இயேசு அவரிடம் நீர் கேட்கின்றார். உரையாடல் தொடர்கிறது. இங்கு கிணறு என்பது நம் உள்ளம். நம் உள்ளம் நிம்மதியை நாடும் போது நாம் அமைதியில் நம்மை இருத்தி சிந்திக்கிறோம். செப கூட்டங்களுக்கு, திருப்பலிக்கு செல்கிறோம். அமைதியான சூழலில் பாடல்களை பாடி செபித்து, நம் மனதிற்கு நாமே புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்கிறோம். அது போல தான் அப்பெண்ணும் தன்னுடைய வாழ்வை எண்ணி ஊரடங்கிய நேரத்தில் யாரும் இல்லா அமைதியான நண்பகல் வேளையில் தண்ணீர் எடுக்க குடத்துடன் வருகின்றார். அமைதியான இடத்தில் நீர் தேடி வந்தவர்க்கு வாழ்க்கைக்கான நீர் சுரக்கும் ஊற்றாம் இயேசு கிடைக்கின்றார். நாமும் நம்முடைய உள்ளம் என்னும் கிணற்றை தேடிச்செல்வோம். உள்ளத்தின் மையத்தில் அமர்ந்திருக்கும் இறைவனைக் கண்டு கொள்வோம்.


விட்டுவிட்டார்:

சமாரியப் பெண், தான் நீர் எடுக்க கொண்டு வந்த குடத்தை அவ்விடத்திலேயே விட்டு விட்டு செல்கின்றார். இனி அவருக்கு அக்குடம் தேவை இல்லை . ஏனெனில் அவர் வற்றாத ஊற்றைக் கண்டு கொண்டார். இயேசுவை நாமும் கண்டு கொள்ளும் போது நம்முடைய பழைய இயல்புகளை களைந்து விட நாமும் தயாராய் இருப்போம். அதை அங்கே இயேசுவின் காலடியில் விட்டுவிட முயற்சிப்போம். இது வரை ஊர் மக்கள் யாருடனும் தொடர்பிலில்லாத அப்பெண் தன்னுடய இயல்பை மாற்றி ஊராரிடம் இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கின்றார். தான் செய்த அனைத்தையும் சொன்ன அவரிடம் வந்து பாருங்கள் என்கின்றார். ஆக இவரைப் பற்றி ஊர் மக்கள் ஐந்து கணவர்களை உடையவள் என்று தவறாக பேசி இருக்கக்கூடும். அதையே தைரியமாக அவ்வூர் மக்களிடம் சொல்கின்றார். நாமும் நம்முடைய தவறுகளை ஏற்று தைரியமாக வாழ சமாரியப் பெண் போல முயற்சிப்போம்.


அறிவித்தார்:

மெசியாவாக இருப்பாரோ என்ற தன்னுடைய நல்லெண்ண ஐயத்தை வெளிப்படுத்துகிறார். பிறரைப் பற்றி நாம் முதன்முதலில் கூறும் கருத்து எப்போதும் நன்மையானதாக இருக்க முயற்சிப்போம். அவர் இயேசுவைப் பற்றி தன் ஊர் மக்களுக்கு கூறிய நல்ல செய்தி, ஏராளமான சமாரியர்களை இயேசுவின் பின் தொடர வைத்தது. நமது வார்த்தைகளும் நன்மையை மட்டுமே எடுத்துரைப்பனவாக இருக்க விழைவோம். கிணற்றடியில் பார்த்த அவரை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்துகிறார். ஊருக்கு வெளியே இருந்த இயேசுவை, அவர் புகழை ஊருக்குள் எடுத்துரைக்கின்றார். இயேசுவை ஊருக்குள் அழைத்து வந்து மக்களிடம் அறிமுகப்படுத்தவில்லை மாறாக ஊர் மக்களை ஊருக்கு வெளியே இருக்கும் இயேசுவை சந்திக்க அழைத்துச்செல்கின்றார். மக்களும் இயேசுவை ஊருக்கு வெளியே சென்று பார்த்து தங்கள் ஊருக்குள் அழைத்து வருகின்றனர். வீட்டிற்கு வரும் விருந்தினரை வாசல் வரை சென்று அழைப்பது. அல்லது சிலர் பேருந்து நிறுத்தத்திற்கே சென்று அழைப்பர் அதுபோல.

ஆக சமாரியப் பெண் வெளியே சென்று உள்ளே அறிவிக்கின்றார். சமாரிய மக்கள் உள்ளே இயேசுவை பற்றி அறிந்து வெளியே சென்று அவரைப் பார்க்கின்றனர். அவரோடு ஊருக்கு உள்ளே வருகின்றனர்.

நாமும் சமாரியப் பெண் போல நாம் அறிந்து கொண்ட இயேசுவை வெளிப்படையாக அறிவிக்க ஆவல் கொள்வோம். நமது கிணற்றைத் தேட, கிணற்றடியில் அமர்ந்திருக்கும் இயேசுவைக் கண்டு கொள்ள, நம்முடைய பழைய பாவ இயல்புகளை அவர் காலடியில் விட்டுவிட, அவரைப் பற்றிய நல்ல செய்திகளை பிறருக்கும் அறிவிக்க, முயல்வோம். அதற்கு முதல் படியாக கிணறு எங்கே எனத் தேடுவோம். ஆழமான நம் எண்ணங்கள் புதைந்திருக்கும் நம் உள்ளம் என்னும் கிணற்றை நாடிச்செல்வோம். அக்கிணறு நல்லெண்ண உணர்வுகளை சுரக்கும் வற்றாத நீருள்ள கிணறாக இருக்க அதை தூர்வாறுவோம். கிணற்றை தூய்மைப்படுத்துவோம். நீருள்ள கிணற்றை நாடி இயேசு கண்டிப்பாக வருவார். நம் கிணறு எங்கே ?எப்படி? இருக்கிறது சிந்திப்போம் செயலாற்றுவோம் . இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

Friday, 6 March 2020

எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள்

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு


I. தொடக்கநூல் 12:1-4
II. 2 திமொத்தேயு 1:8-10
III. மத்தேயு 17:1-9

அன்பில் அன்னையாய் ,
பாசத்தில் தமக்கையாய்,
வழிநடத்துதலில் தோழியாய்
உடன் வாழ்வதில் மனைவியாய்,
அன்னை அன்பின் மறுதலிப்பாம் மகளாய்
அனுதினமும் மறுபிறவி எடுத்து
மண்ணுலகை மகிழ்விக்கும் அனைத்து
மகளிருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கக்கூடிய நம்மை இயேசு எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள் என்ற வார்த்தைகள் மூலம் வலுப்படுத்துகின்றார். இன்றைய நாளில் இயேசுவின் உருமாற்றம் பகுதி நமக்கு நற்செய்தி வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பேருடைய குரல்களை நமது சிந்தனைக்கு என்று எடுத்துக்கொள்வோம்.
பேதுருவின் குரல், மேகத்தின் குரல், இயேசுவின் குரல்
முதலாவதாக பேதுருவின் குரல்
ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? என்கின்றார். தான் பேசுவது என்னவென்று தெரியாமலேயே அவர் பேசுகின்றார். அதாவது இப்போது இருக்கக்கூடிய அந்த இன்பமான நிலையிலேயே அப்படியே இருக்க விரும்புகிறார். இரண்டாவதாக தன்னை மறந்து தனக்கு எதிரில் ஒளிமயமாக இருக்கக்கூடிய மோசே எலியா இயேசு ஆகியோரின் நலன்களை மட்டும் நினைக்கின்றார். அந்த காலத்தில் கூடாரம் அமைப்பது அல்லது கூடாரம் என்பது இறைவன் வாழும் ஆலயமாக கருதப்பட்டது ஆக இயேசுவை இறை நிலைக்கு உயர்த்தி மகிழ்கிறார்.
இரண்டாவது மேகத்தின் குரல்
இந்த குரலில் என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஆண்டவர் எடுத்துரைக்கின்றார். இவற்றின் மூலமாக இயேசு யார் என்று தெளிவாக எடுத்துரைக்கின்றார் எனது அன்பார்ந்த மகன் இந்த மனிதரின் பொருட்டு மிகவும் பூரிப்படைந்திருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றார். அடுத்ததாக இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஒரு விண்ணப்பம். அன்று யோர்தான் நதிக்கரையில் இயேசு தன் பணியைத் தொடங்கும் முன் அவர் யார் என மக்களுக்கு எடுத்துரைத்த இறைவன், இன்று அவரது உயர்பணியாம் எருசலேமை நெருங்கும் முன் மீண்டும் எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின் குரல்
முகம் குப்புற விழுந்த சீடர்கள் மூவரையும் தொடுகின்ற தொடுதலின் மூலம் தன்னை யாரென்று வெளிப்படுத்துகின்றார் இயேசு. அஞ்சாதீர்கள் எழுந்திருங்கள் என்ற வார்த்தைகள் அவர்களை பலப்படுத்துகின்றன. மேலும் தான் விண்ணேற்றமடையும் நாள் வரை இதை யாருக்கும் எடுத்துரைக்கக் கூடாது என்று கட்டளையிடுகின்றார். எதை யாரிடம் எப்படி எப்போது சொல்ல வேண்டும் என்பதிய நன்கு அறிந்த இயேசு அதனை தன் சீடர்களுக்கும் பயிற்றுவிக்கின்றார்.
இந்நற்செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்று குரல்களும் மூன்று விதமானவை. பேதுருவின் குரல் மனித இயல்பின் குரல். மேகத்தின் குரல் தய்வ இயல்பு. இயேசுவின் குரல் தெய்வ மனித இயல்பு. எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள் என்று அன்று சீடர்களுக்கு சொன்ன இயேசு இன்று நமக்கும் சொல்கின்றார். பல்வேறு நேரங்களில் நாமும் இன்பமான இந்நிலையிலேயே தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடாதா என்று மனித இயல்பில் ஏங்குவது உண்டு. இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
மேலும் எவ்வாறு சீடர்கள் மேகத்தின் குரலைக் கேட்டு அஞ்சி முகம் குப்புற விழுந்தார்களோ அதுபோல நாமும் பல நிறங்களில் இறை திருவுளம் இறை சித்தம் இது என தெரிந்திருந்தும் அதனை செய்ய இயலாமல் அஞ்சி முகம் குப்புற விழுகின்றோம். இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
நமது விருப்பம் இதுதான் என இயேசுவின் முன் எடுத்து வைத்து அவரது விருப்பம் எது? அவருக்கு விருப்பமா என்று பேதுரு போல கேட்க முன்வருவோம்.
இவருக்கு செவிசாயுங்கள் என்று மேகத்தின் குரலுக்கு செவிகொடுப்போம். இயேசு சொல்வது போல எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள். நமது பலவீனத்தில் இருந்து எழுந்திருப்போம் நமது அறியாமையிலிருந்து எழுந்திருப்போம். நமது பகை மனதிலிருந்து எழுந்திருப்போம். நமது வீண் விவாதத்திலிருந்து எழுந்திருப்போம்.
அன்று மோசேக்கு சீனாய் மலையில் எரியும் முட்புதரில் காட்சி அளித்த இறைவன், இறைவாக்கினர் எலியாவிற்கு ஓரேபு மலையில் பலி நெருப்பு வடிவத்தில் காட்சி அளித்த இறைவன், இன்று இயேசுவுக்கு தாபோர் மலையில் மேகத்தின் குரல் வழியாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு நமது வாழ்விலும் பல்வேறு தருணங்களில் எரியும் புதராக பலி நெருப்பாக மேகத்தின் குரலாக இறைவன் ஒவ்வொரு நாளும் நமக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். நாம் அவரது குரலைக் கேட்க, அவரது உருவத்தை அவரது தன்மையை கண்டுணர முற்படுவோம். இன்று உலகம் முழுவதும் கொரோனா எனும் தொற்று வியாதி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கக் கூடிய நிலையில், இறைவன் நம்மை தொட்டு கூறுகிறார் இந்நிலையிலிருந்து எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள். அஞ்சாது இருப்போம் அவர் குரலுக்கு செவி சாய்ப்போம். அப்பொழுது நமது மனம் என்னும் அகம் நல்லெண்ண ஒளி வீசும். நமது நற்பண்புகள் எனும் குணம் ஆடை எனும் ஒளியால் நம்மை மூடும். எழுந்திருப்போம் அஞ்சாதிருப்போம். இறையாசிர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்

Saturday, 8 February 2020

சரியான அளவில்


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின் 5ஆம் ஞாயிற்றில் இருக்கக்கூடிய  நம்மை இறைமகன் இயேசுசரியான அளவில்  உப்பாக ஒளியாக வாழ அழைக்கின்றார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை ஆசீர்வதிப்பனவாக, நமக்கு ஆறுதல் தருவனவாக இருக்கின்றன.
முதல் வாசகத்தில் ஏராளமான ஆசீர்வாதங்களை கடவுள் நமக்கு கொடுக்கின்றார். இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடியார் தனது பழைய நிலைமையை சொல்லி சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அறிந்ததால் அவர் பெற்றுக்கொண்ட மகிமையை எடுத்துரைக்கின்றார். இறுதியாக நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சீடர்களை உப்பாக ஒளியாக வாழ அழைக்கின்றார். இன்றைய காலகட்ட சீடர்களாகிய நாமும் உப்பாக ஒளியாக வாழ அவரால் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை இதற்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் உண்டு. உப்பிட்டவரை, உப்பு இவ்விடத்தில் உணவாக கருதப்படுகிறது. உணவு நம் அனைவருக்கும் இன்பம் தரக்கூடியது. நிறைவினைத் தரக்கூடியது. அந்த இன்பத்தினை  நிறைவினை நமக்கு தந்தவர்களை, நமது பசியை ஆற்றிய அவர்களை உள்ளத்தில் எப்போதும் மறக்காமல் நினைக்க வேண்டும். இந்த அர்த்தத்திலேயே உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது சிலரது கருத்து. (வாழ்வில் இனிமை சேர்த்த அவர்களை இதயம் உள்ளவரை நினை என்பது) இரண்டாவதாக நாம் திருமணங்களில் பலமுறை கண்டிருப்போம் உணவு பரிமாறுவதற்கு முன்  உப்பையும் இலையில் வைப்பார்கள். உப்பு இலையில் வைத்து பரிமாறப்படுவதற்கான காரணம்  என்னவென்றால் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு இருக்கும் போது யாராவது ஒரு சிலர் உப்பில்லை என்று கூறி விருந்தின் தன்மையை மாற்றிவிடக் கூடாது,அல்லது கேட்க வருத்தப்பட்டுக்கொண்டு உப்பில்லா உணவை உண்டு வருந்தக்கூடாது என்பதற்காகவே.


மனிதனுடைய வாழ்வில் மிக முக்கியமானது உணவு. அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவு. அந்த உணவிற்கு சுவையை ஊட்டுவது உப்பு. உப்பு சரியான நிலையில் இருக்க வேண்டும் அதிகமானாலும் கார்ப்பு என்பதை கரிப்பு, உப்பு கரிக்கிறது என்றும், குறைவானால் இதென்ன சப்புன்னு இருக்கு  என்று சொல்லிவிடுகிறோம் இவ்வாறாக, அந்த உப்பு இல்லாத உப்பு மிகுதியான உணவினை நாம் நமது வார்த்தைகளால் வெளிப்படுத்துவோம். உப்பு கரிக்கிறது, உப்பில்லாமல் சப்பென்று இருக்கிறது என்று கூறிவிடுகிறோம். 

நமது நாம் உணவிற்கு பயன்படுத்தக்கூடிய பலவிதமான பொருட்களில் அறுசுவைகளில் இரண்டு மூன்று ஒன்றாக இணைந்து செய்யப்படுகின்றன.பொதுவாக நமக்கு பரிமாறப்படும் உணவில் புளிப்பு இல்லை என்றாலோ காரம் இல்லை என்றாலும் அதனை ஈடுகட்ட எந்த பொருளும் அந்நேரத்தில் நமது இலையில் வைக்கப்படுவதில்லை மாறாக உப்பு இல்லை என்றால் உடனடியாக உப்பு இலையில் வைக்கப்பட்டு உணவோடு சேர்க்கப்பட்டு அந்த குறையை உடனடியாக நிவர்த்தி செய்கிறது. உப்பு தனது குறையை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை பெற்றது. இத்தகைய உப்பு போல நாம் வாழ, இயேசுவின் சீடர்களாகிய நாம் வாழ, இயேசு அழைக்கின்றார். தனது குறையை சுட்டிக் காட்டும் பொழுது அதை நிவர்த்தி செய்யக்கூடியவர்களாக நாம் வாழ சரியானவர்களாக, சரியான சுவை தருபவர்களாக நாம் வாழ அழைக்கின்றார் 

அடுத்து ஒளி அதிகமான ஒளி தீபம் என்றும் ஜோதி என்றும் அழைக்கப்படுவதில்லை மாறாக  தீப்பந்தம் என்று அழைக்கப்படும். அதுவே மிகவும் குறைவாக எரிந்தால் மங்கிய வெளிச்சம் என்று அழைக்கப்படும். எனவே ஒளியாகிய நமது நற்செயல் நமது வாழ்வில் சுடர்விட்டு எரியச்செய்வோம். வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக மாற வேண்டும். மங்கியதாகவும் இல்லாமல் அதிக தீப்பந்தம் போலவும் இல்லாமல் சரியான ஒளியாக, சரியான தீபமாக சரியான ஜோதியாக நாம் வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். நம்மில் பலர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்கிறென் பேர்வழி என்று நினைத்து வம்பில் மாட்டிக் கொள்வதும் உண்டு ( என்னையும் சேர்த்து தான் ).  

இப்படி நமது வாழ்வு சரியான உப்பாக சரியான ஒளியாக மாறும் பொழுது நமது ஒளி விடியல் போய்விடும் நமக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். நேர்மை நமக்கு முன் செல்லும். ஆண்டவரின் மாட்சி நம்மைப் பின் தொடரும். இதுவரை மிகுந்த அச்சமும் நடுக்கமும் கொண்டவர்களாக இருந்த நாம், சொல்வன்மை உடையவர்களாக ஞானம் உடையவர்களாக மாறுவோம். இந்த சரியான உப்பாக, சரியான ஒளியாக மாற மனித ஞானம் அவசியமில்லை. மாறாக கடவுளின் வல்லமை மிகவும் தேவை என்பதை இன்றைய நாள் நமக்கு வலியுறுத்துகிறார். நமது வாழ்வின் உப்பை சாரமற்றதாக மாற்றும் வாய்ப்பு கொண்டது இந்த மனிதன் ஞானம். மரக்காலுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட ஒளியாக நமது வாழ்வை மாற்றக்கூடும். கடவுளின் வல்லமை ஒன்று மட்டுமே சுவையான உப்பாக சுவையூட்டக்கூடிய உப்பாக, ஒளி தரக்கூடிய ஒரு தீபமாக ஜோதியாக நமது வாழ்வை மாற்றும். 

இதுவரை இருந்த நிலை மாறி நம்மிடமுள்ள  அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவர்களாக நாம் மாறமுடியும். முதல் வாசகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல,நமது உணவை பகிர, வீடு இல்லாதவர்களுக்கு நமது இல்லத்தில் இடம் கொடுக்க, உடையற்றவர்களுக்கு உடையளிக்க  நாம் அழைக்கப்படுகின்றோம். சுவையோடு கூடிய உப்பாக ஒளியாக இருக்கும் போது நம் இறைவன் நாம் மன்றாடும் போது நமக்கு பதில் அளிப்பார் நாம் கூக்குரல் இடும் போது இதோ என பதிலிறுப்பார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள்  பற்றியும் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த நுகம் எனும் சுமையை கீழே இறக்கி வைத்தல் அல்லது அதை நம்மிடமிருந்து அகற்றுதல், குற்றம் சாட்டுதல் பொல்லாத பேசுதல் போன்ற தீய பண்புகளை நம்மிடம் இருந்து நீக்கி வாழும் போது இருள் நடுவே நாம் ஒளி என திகழ்வோம். இருண்டு கிடந்த நமது வாழ்க்கை நண்பகல் போல வெளிச்சம் தரும் ஆக மனித ஞானத்தை விட கடவுளின் வல்லமையை நம்புவோம். வாழ்விற்கு இனிமை சேர்க்கக்கூடியவர்களாக, நமது வாழ்விற்கும் பிறரது வாழ்விற்கும் சுவை ஊட்ட கூடியவர்களாக  வாழ இறைவனிடம் அருள் வேண்டுவோம். சரியான உப்பாக, தரமான ஒளியாக வாழ இறைவனிடம் அருள் வேண்டுவோம். இறைவனின் அருளும் ஆசீரும்  என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் இருப்பதாக ஆமென் 

Friday, 31 January 2020

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா


                                             காத்திருப்போமா? மீட்புக்காக....
I

இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின் நான்காம் வாரத்தில் நுழைந்து இருக்கக்கூடிய நாம் இன்றைய நாளில் இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாளினை கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளானது துறவிகளின் நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய நாளில் தங்களது வாழ்வை இறைப்பணிக்காக அர்ப்பணித்த ஒவ்வொரு உள்ளங்களுக்காகவும் சிறப்பாக ஜெபிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.துறவறத்திற்காக, பொது பணிக்காக தங்களை அர்ப்பணித்த ஒவ்வொரு உள்ளங்களையும் இன்றைய நாளில் நினைவு கூறுவோம். இன்றைய நாளில் மீட்புக்காக நாம் காத்திருக்கின்றோமா என்று கருத்தில் வாசகங்கள் அனைத்தும் நமக்கு கேள்விகளைத்தொடுக்கின்றன? எனவே காத்திருக்கின்றோமா மீட்புக்காக என்ற தலைப்பில் நாம் என்று சிந்திக்க இருக்கின்றோம்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் மீட்புக்காக காத்திருப்போர் யார்? எப்படி? யார் வழியாக வருகின்றது எப்படி வருகின்றது எவர் வழியாக வருகின்றது என்பது குறித்து தெளிவாக விளக்குகின்றன. நம்மை ஆயத்தம் செய்கின்றது. அது சுட்டெரிக்கும் நெருப்பாகவும், தூய்மைப்படுத்தும் சவர்காரம் போலவும் நம்மை அணுகி வருகின்றது. அது நம்மைப் புடமிடுகின்றது தூய்மைப்படுத்துகிறது. இதன்மூலமாக நம்மையே நமது வாழ்வை நாம் காணிக்கை பொருளாக மாற்ற அழைப்பு விடுக்கின்றது.சாவு அச்சத்தினின்றும், அடிமைத்தனத்தினின்றும் நம்மை விடுவிக்கின்றது. சோதனைக்கு உட்படுத்தாமலௌம், சோதனைக்கு உட்பட்டவரை அதிலிருந்து மீட்கவும் செய்கின்றது. சோதிக்கப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் உதவி செய்கின்றது. சோதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வல்லமை தருகின்றது

இவ்வாறாக முதலிரண்டு நற்செய்தி வாசகங்களும் நமக்கு மீட்பை பற்றிய புரிதலை தெளிவாக எடுத்துரைக்கின்றன. நற்செய்தி வாசகம் ஐந்து விதமான பண்புகள் உள்ளவர்கள் மீட்பினை கண்டு கொள்வர் என்று நமக்கு வெளிப்படுத்துகின்றது. அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல், எதிர்பார்த்தல் கண்டு கொள்ளுதல், அறிவித்தல்.
முதலாவதாக அர்ப்பணிப்பு:
குழந்தை இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுகின்றார் ஆண் பேறு அனைத்தும் ஆண்டவருக்கு சொந்தம் என்ற பழைய ஏற்பாட்டு வரிகளுக்கு ஏற்ப குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தனர். அது ஒரு சாதாரண சடங்காக இருந்தபோதிலும் அதை மரபு மாறாமல் கடைபிடித்து வருகின்றனர். முதல் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு சொந்தம் என்பது இன்றும் நாம் கடைபிடித்து வரும் ஒரு செயல். பல இடங்களில் தங்களது நிலத்தில் விளைந்த முதல் விளைச்சலை கடவுளுக்கு அர்ப்பணிக்க கூடிய பழக்கம் நம் ஊர்களில் இருந்து வருகின்றது. அது விளையும் பயிர் ஆனாலும், உற்பத்தி செய்யும் பொருட்கள் ஆனாலும், வளர்க்கும் கால்நடைகள் ஆனாலும் எதுவானாலும் சரி முதல் விளைச்சல் கடவுளுக்கு சொந்தம் . இது எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். இந்த அர்ப்பணிப்பு மனநிலை நம்மிலும் தொடர்ந்து வருகின்றது. அது நீடித்து நிலைக்க அருள் வேண்டுவோம்.
இரண்டாவதாக கீழ்படிதல்:
யோசேப்பும் மரியாவும் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிகின்றனர். இயேசுவின் பிறப்பில் பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகள் நடந்த போதிலும் அவரது பிறப்பு வித்தியாசமானதாக இருந்தபோதிலும் அவை அனைத்தையும் மனதில் கொண்டு யூத சட்டத்திட்டத்திற்கு கீழ்ப்படிகின்றனர். முழுமனதுடன் தங்களது முதல் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர். தங்களால் இயன்ற காணிக்கையை பொருட்களை ஆலயத்தில் செலுத்தி தங்களது கடமைகளை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்ததால் தான், கடவுளின் திருவுளத்திற்கு கீழ்ப்படிந்து மீட்பரை மகனாக பெரும் பேற்றினைப் பெற்றனர்.நாமும் கடவுளின் திருவுளம் எது என தெரிந்து நிறைவேற்ற முயல்வோம்.

மூன்றாவதாக எதிர்பார்த்தல்:
சிமியோன் மற்றும் அன்னா இருவரும் தங்களது வாழ்நாளை மீட்பரின் வருகைக்காக காத்திருப்பதிலேயே செலவு செய்தனர். என்றாவது ஒரு நாள் மீட்பரைக் காண்போம் என்று நம்பினர். அது போலவே கண்டு கொண்டனர். நம்மிலும் இந்த எதிர்பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம். மீட்பரின் வருமகையை நம் வாழ்வில் எதிர்பார்ப்போம்.

நான்காவதாக கண்டு கொள்ளுதல்:
எருசலேம் தேவாலயத்தில் பல்வேறுவிதமான மக்கள் இருந்தபோதிலும் சிமியோன் அன்னா என்னும் இருவரும் குழந்தை இயேசுவை மீட்பராக கண்டு கொள்கின்றனர். ஏராளமான குழந்தைகள் அவ்வாலயத்தில் வந்து சென்ற போதிலும் இயேசுவை இனம்கண்டு கொள்கின்றனர். மீட்பரின் வருகையை எதிர்பார்த்து இருந்தவர்கள் அந்த மீட்பை கண்டு கொள்கின்றனர். நன்மை செய்பவர்களை நாமும் இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களை இனம் கண்டு அவர்களை போல் நாமும் மாற முயற்சிக்க வேண்டும்.

ஐந்தாவது அறிவித்தல் :
கண்டுகொண்டதோடு தங்களது பணி முடிந்தது என்று நினைக்கவில்லை மாறாக தாங்கள் கண்டு கொண்ட மீட்பை மகிழ்வை பிறருக்கு வெளிப்படுத்துகின்றனர். இதற்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாக அறிவிக்கின்றனர். தங்கள் பெற்ற மகிழ்வை பிறரும் அனுபவிக்க எண்ணி அதனை உரத்த குரலில் வெளிப்படுத்துகின்றனர். நாமும் பல நேரங்களில் நம் வாழ்வில் இறைவனால், நன்மையை மகிழ்வைக் கண்டு கொள்கின்றோம். அதனை பிறருக்கும் அறிவிக்கும் போது அந்த மகிழ்வு, நன்மை இரட்டிப்பாகும் என்பதை மறந்து விடுகின்றோம் பெற்ற நன்மையை பிறாருக்கும் எடுத்துரைப்பவர்களாவோம்.

இறுதியாக நாமும் முழு மன அர்ப்பணிப்பு மனநிலையுடன் வாழ முயற்சிப்போம். கடவுளின் திருவுளம் இதுதான் என அறிந்து அதற்கு கீழ்ப்படிய முற்படுவோம். அவரின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருப்போம். அவரை இனம் கண்டு கொள்வோம். இவர்தான் மீட்பர் என நம் வாழ்வில் நாம் உணர்ந்து அதை பிறருக்கும் அறிவிப்போம். இதன் மூலமாக நாம் மீட்பரை கண்டடைய முடியும். நாம் புடமிட பட்டவர்களாக தூய்மைப்படுத்த பட்டவர்களாக மாறுவோம் இத்தகைய மீட்பினை நாமும் அடைய காத்திருப்போம் சிமியோன் அன்னா போல. இறையாசிர் என்றும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருப்பதாக ஆமென்

Friday, 24 January 2020

நான் யாரைப் பின்பற்றுகிறேன்? சாதனங்களா? சாதனைகளா?

                                         பொதுக்காலம் 3ம் ஞாயிறு 
                                 மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா. 


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இன்றைய நாளில் இயேசுவின் பணி வாழ்வினை குறித்து  நாம் சிந்திக்க இருக்கின்றோம்.  இயேசு தனது பொது வாழ்வினை துவங்கிய வாசகமானது இன்றைய நற்செய்தியில் நமக்கு கூறப்பட்டுள்ளது.  முதல் வாசகம் மறைப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள் அடையும் பயன்கள் பற்றியும், இரண்டாவது வாசகம் மறைப்பணியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது.  நற்செய்தி வாசகம் ஒரு பணியாளர் எப்படி அழைக்கப்படுகிறார் எந்த சூழ்நிலையில் அழைக்கப்படுகிறார் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறுகின்றது. நாம் ஒவ்வொருவரும் இறைப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள். நாம் எவ்வாறு அழைக்கப்படுகிறோம்? எப்படி இருக்க பணிக்கப் படுகிறோம்? நாம் அடைய இருக்கக்கூடிய பயன்கள் என்னென்ன என்பதைப்பற்றி இன்றைய  வாசகங்கள் அனைத்தும் எடுத்துரைக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் இயேசு முதல் சீடர்களை அழைத்த நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். இருவகையான சகோதரர்களை சீடர்களாக இயேசு அழைக்கிறார் முதலில் சீமோன் பேதுருவும் அவரது சகோதரர் அந்திரேயாவும்.  இவர்கள் இருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இரண்டாவதாக செபதேயுவின் மக்கள் இவர்கள் கரையோரமாக அமர்ந்து தங்களது தந்தையுடன் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயேசு இரண்டு சகோதரர்களையும் அழைக்கின்றார். வேலை செய்துகொண்டு இருப்பவர்களையும், ஓய்வாக இருப்பவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் அழைப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவரது பணி செய்ய நம்மை அவர் வேலையிலும்   ஓய்விலும் அழைக்கலாம். சீடர்கள் செய்த வேலைகள் 2. ஒன்று அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டனர். வேலை செய்து கொண்டிருந்தாலும் இயேசு அவர்கள் அருகில் வரும்பொழுது இவர்தான் மெசியா நம்மை மீட்க கூடிய வல்லமை உள்ளவர் என்பதை அறிந்து அவரை இனம் கண்டு கொள்கின்றனர். இரண்டாவதாக அவரது குரலினால் கவரப்படுகின்றனர். அவரது குரலுக்கு செவி மடுக்கின்றனர்.  இயேசு நம்மை சுற்றிலும் நாம் வேலை செய்யும் பொழுதும் சோர்வாக அமர்ந்து இருக்கும் பொழுதும் நம்மை சூழ்ந்து அவர் இருக்கின்றார். அவரது பணி செய்ய எல்லாச் சூழலிலும் மெல்லிய குரல் மூலம் நம்மை அழைக்கின்றார். நாம் செய்ய வேண்டியது இதுதான் இயேசுவை  அவர் குரலை இனம் கண்டு கொள்வது அவரது குரலுக்கு செவிமடுப்பது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் அழைக்கப்பட்டவர்கள் (கிறிஸ்தவ வாழ்வு வாழ) எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஒத்த கருத்துடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடையே பிளவு மனப்பான்மை இருக்கக்கூடாது. ஒரே நோக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் அவர்களிடத்தில் இருக்கக் கூடாது. பணியாளர்களாக அழைக்கப்பட்ட நாம் ஒத்த கருத்துடையவர்களாக, ஒரே மனம், நோக்கம் உடையவர்களாக இருக்கிறோமா? அல்லது பிளவுபட்ட மனம் சண்டை சச்சரவுகளும் குழப்பங்களும் உடையவர்களாக இருக்கிறோமா? என்று சிந்திப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் பணியாளர்கள் அடைந்த பயன்கள் பலன்கள் பற்றி கூறப்படுகிறது. காரிருளில் நடந்துவந்த மக்கள், சாவின் நிழல் சூழ்ந்துள்ள இடத்தில் வசித்த மக்கள், பேரொளியை, சுடர் ஒளியை காண்கிறார்கள். அவர்களது இனம் அவர்களோடு முடிவடையாமல் பலுகிப் பெருகுகின்றது. அவர்களது மகிழ்வு இரு வகையாக பிரிக்கப்படுகிறது ஒன்று அறுவடை நாளில் நிறைவடையும் ஒரு உழவனைப் போல, கொள்ளை பொருளை பங்கிடும் ஒருவனின் மனநிலையைப் போல என் இரு வகை மகிழ்வாக பிரிக்கின்றார். அறுவடைநாள் மகிழ்வு என்பது ஒரு விவசாயி கடினமாக உழைத்து வேலை செய்து தனது வியர்வை சிந்தி தனது உழைப்பு எல்லாம் கொடுத்து ஒரு விதையை உருவாக்கி அதிலிருந்து அதற்குரிய பலனை எடுக்கக்கூடிய அந்த நாள் அறுவடை நாள். தனது துன்பம் எல்லாம் நீங்கி மகிழ்வை காணக்கூடிய அந்த நாள் அவனது அறுவடை நாள். அந்நாளில் அவன் அடையும் மகிழ்வுக்கு வறையரை கிடையாது அவனது உழைப்புக்கேற்ற ஊதியம் அவர் பெறுகிறார். அவனது நேரத்தை உழைப்பை துன்பத்தை அனைத்தையும் கொடுத்து அந்த நிலத்தை பயிரிட்டு அதன் மூலமாக கிடைக்கக்கூடிய விளைச்சலின் மூலம் அவன் பெருமகிழ்வடைகின்றேன் இரண்டாவது வகை மகிழ்வு கொள்ளை பொருளை பங்கிடுவது எந்தவிதமான ஆதாரமும் இன்றி பிறரிடம் இருந்து பெறும் மகிழ்வு. மேலும் அவர்களது சுமை உடைத்தெறியப்படுகிறது. அவர்கள் உடம்பைப் புண்ணாக்கிய தடி தகர்த்தெறியப்படுகின்றது. அவர்களது கொடுங்கோல் ஒடிக்கப்படுகிறது. ஆக இதுவரை துன்பத்தை அனுபவித்து வந்த அவர்கள் மகிழ்வினை அடைகிறார்கள். சாதாரண ஒரு பணியாள் துன்பங்கள் பல அனுபவித்தாலும் இறுதியில் அவனுக்கு பெருமகிழ்வு கிட்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது நற்செய்தி அறிவிப்பவர்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் இருப்பினும் இறுதியில் அவர்கள் பெரும் மகிழ்வை அடைவார்கள்.

இன்றைய வாசகங்கள் மூலம் நாம் நமது வாழ்க்கைக்கு என்று எடுத்துக் கொள்வது என்ன?
 நான் யாரை பின்பற்றுகிறேன்? என்ற கேள்விக்கான ப்திலைத் தேடுவதே இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் அழைப்பு. வளர்ந்து வரும் தொலைதொடர்பு சாதனை உலகில் நாம் பல சாதனங்களை பின்பற்றுகிறோம் முகப்புத்தகத்தில் புலனத்தில் வலைதளத்தில் என முகம் தெரியாத அறிமுகமில்லாத பலரை பின்பற்றுகிறோம். அவர்கள் பதிவிடும் கருத்துக்களைப் பின்பற்றுகிறோம். ஆனால் நமக்கு நன்கு அறிமுகமானவர் இயேசு. அவரது போதனைகள் மூலமாக நமது வாழ்க்கைக்கு பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்தவர். அவரை பின்பற்றுகிறோமா? அவரது வார்த்தைகளை வாழ்வாக்குகின்றோமா? இன்றைய காலகட்டத்தில் நாம் சிலுவையை விட சாதனங்களையே அதிகமாக  பின்பற்றுகிறோம்? இந்நிலை மாறி சிலுவையை பின்பற்றுவோம் சிலுவை நமது வாழ்வின் வெற்றியின் சின்னம். மகிமையின் சின்னம். அந்த சிலுவையின் நாயகன் இயேசு. அவர் நமக்காக, நமது நல்வாழ்வுக்காக தன் உயிரை ஈந்தார் அவரது பணி செய்ய அவரைப்போல பல்வேறு உள்ளங்களை இறைவன்பால் திருப்ப,ஆவல் கொள்வோம்.மறைப்பணி செய்ய ஆர்வம் கொள்வோம். சாதனங்களை விடுத்து சிலுவையை, சிலுவை நாதர் இயேசுவைப் பின்பற்றுவோம். 

ஒரு சிறிய கதை மூலம் இதை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
 நண்பர்கள் இருவர், தூரமான ஒரு இடத்தில் ஒரு மலையின் அடிவாரத்தில் மாணிக்கக் கற்களும் தங்க ஆபரணங்களும் பொக்கிஷமாக இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். எப்படியாவது அந்த பொக்கிஷத்தை தங்களோடு எடுத்து வந்து அதை விற்று காசாக்கி தங்களது வாழ்க்கையை வளமாக்க விரும்புகின்றனர். நீண்ட பயணத்திற்குப் பிறகு அடையவேண்டிய அந்த மலைப் பாதையை அடைகின்றனர். அதுவரை நேராக வந்து கொண்டிருந்த பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தவிதமான பலகையோ அறிவிப்பு பலகையோ
வழிகாட்டி பலகையோ எதுவுமில்லை. எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று தங்களுக்குள் ஆலோசித்தனர் திடீரென்று அவ்வழியாக வழிப்போக்கர் ஒருவர் பயணம் செய்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் முதியவராக வறுமையில் வாடியவர் போல எலும்பும் தோலுமாக இருக்கின்றார் அந்த முதியவர். இவர்களை பார்த்து தம்பிகளே இதே இடத்தில் நின்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இது மிகவும் ஆபத்தான பகுதி விரைவில் உங்கள் இல்லம் திரும்புங்கள். பலவிதமான கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம் இது. மாலை நேரம் அவைகள் அனைத்தும் வெளியே உலாவ தொடங்கும். அது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார். இருவரும் அந்த வழிப்போக்கரிடம் அதோ தூரமாக தெரியக்கூடிய அந்த மலையின் அடிவாரத்திற்கு இவ்விரண்டு பாதையில் எந்த பாதை வழியாகச் சென்றால் செல்ல முடியும் என்று கேட்கின்றனர். அந்த வழிப்போக்கர் அவர்கள் இருவரையும் மேலும் கீழுமாக பார்த்துவிட்டு சொல்கின்றார். 2 பாதையும் அந்த மலை அடிவாரத்தை சென்றடைய கூடியதுதான் ஒன்று நீண்ட அகலமான பாதை மலை அடிவாரத்தை அடைய சில ஆண்டுகள் ஆகும். இன்னொன்று குறுகலான பாதை கடினமான பாதையும் கூட விரைவில் மலை அடிவாரத்தை அடையலாம் என்றார்.  இருவரும் குறுகலான பாதை வழியாக செல்ல முடிவெடுக்கின்றனர் மீண்டும் வழிப்போக்கன் அவர்களை தடுத்து நிறுத்தி குறுகலான பாதையில் நிறைய பிரச்சினைகள் சிக்கல்கள் இருக்கும் பலவிதமான ஆபத்தான விலங்குகளும் இருக்கும் பாதை கரடுமுரடானது அது செல்வது மிகவும் கடினம் உயிருக்கும் கூட ஆபத்து  என்று கூறுகின்றார். நீண்ட அகலமான பாதை பாதை மிகவும் சுலபமானது ஆனால் கடந்து போக வேண்டிய தூரம் அதிகம் என்று கூறுகின்றார். இருவருக்குள் மறுபடியும் வாக்குவாதம் இந்த பாதை வழியாக சென்று அடைவது என்று ஒருவன் நீண்ட பாதை வழியே செல்ல முடிவெடுக்கிறான். மற்றவன் குறுகலான பாதை வழியே செல்ல முடிவெடுக்கிறான். நீண்ட பாதை வழியாக செல்பவன் மலையின் அடிவாரத்தை சென்று அடைவதற்குள், குறுகலான பாதை வழியே சென்றவன் பல்வேறுவிதமான ஆபத்துக்கள் விளைவுகள் அனைத்தையும் கடந்து அதனை முறியடித்து விட்டு அத்தனை துன்பங்களுக்கு பிறகும் அந்த மலையின் அடிவாரத்தை சென்றடைகிறான் பொக்கிஷத்தை தனதாக்கிக் கொள்கிறான். எந்தவிதமான துன்பமும் சோதனையும் அனுபவிக்காமல் சுலபமாக நீண்ட தூரம் பயணம் செய்து அந்த பொக்கிஷத்தை அடையலாம் என்று முயற்சித்து இன்னொருவன் நடந்து நடந்து உடல் சோர்வுற்று மயங்கி விழுகிறான். நமது வாழ்க்கையும் இப்படித்தான் நம் முன்னே இரண்டு பாதைகள் இருக்கின்றன ஒன்று நீண்ட சுலபமான பாதை அது நாம் பயன்படுத்தக்கூடிய தொலை தொடர்பு சாதனங்கள். குறுகலான பாதை சிலுவைப்பாதை, இயேசுவின் பாதை, மறைப்பணி செய்யக்கூடிய பாதை அப்பாதையில் பல்வேறுவிதமான இடைஞ்சல்கள் சிக்கல்கள் இருக்கும் ஆனால் சென்றடைய வேண்டிய இலக்கை விரைவில் சென்றடையலாம் நீண்ட அகலமான பாதை கானல்நீர் போல பொக்கிஷத்தை நம் அருகில் காட்டும் நாம் விரைவாக செல்ல செல்ல அது இன்னும் நம்மை விட்டு அகன்று கொண்டே போகும். ஆக கிறிஸ்தவர்களாகிய நாம் நமது வாழ்வினை அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றுவோம். நமக்காக பாடுபட்டு இறந்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசுவின் பணியைச் செய்ய முன்வருவோம். சிலுவையை மீட்பின் சின்னமாக ஏற்று அதனை பின்பற்றுவோம். சாதனங்களை அல்ல சாதனை புரியும் இயேசுவைப் பின்பற்றுவோம். ஆண்டவர் இயேசுவின் அருளும் அமைதியும் சமாதானமும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றென்றும் இருப்பதாக ஆமென் 

Friday, 17 January 2020

கண்டேன் சான்று பகர்கிறேன்.

பொதுக்காலம் இரண்டாம் வாரம்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
கண்டேன் சான்று பகர்கிறேன்.
இறையேசுவில் மிகவும் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் இரண்டாம் வாரத்தை தொடங்கி இருக்கும் நாம் திருமுழுக்கு யோவானைப் போல இயேசுவை அடையாளம் காண அவரைப் பற்றி சான்று பகர அழைக்கப்படுகின்றோம். இன்றைய முதல், இரண்டாம்  மற்றும் நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஆழமான  தொடர்புடையதாக காணப்படுகின்றது. முதல் வாசகத்தில் இறைவன் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். நீயே என் ஊழியன். தாயின் கருப்பையிலிருந்தே உன்னை நான் என் ஊழியனாக தேர்ந்தெடுத்தேன் என்று அழைக்கின்றார். அவர் பார்வையில் மதிப்பு பெற்றவர்களாக, அவரை நம் ஆற்றலாக எண்ணி நாமும் நம்பிக்கை பெறுகின்றோம்.

அழைத்தலுக்கு பதில் சொல்லும் விதமாக பதிலுரைப்பாடலில் உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்று நாம் பதிலளிக்கிறோம்.

இரண்டாம் வாசகத்தில், அழைக்கப்பட்ட நமது பணி என்ன என்பதை திருத்தூதர் பவுல் அழகாக சொல்கின்றார். திருத்தூதனாக வாழ அழைக்கப்பட்ட நாம். நமது பணி ஆண்டவர் இயேசு, அனைவருக்கும் ஆண்டவர் என எடுத்துரைப்பது. அவர் தரும் அமைதியையும் அருளையும், பிறருக்கும் அளிப்பது. இவ்வார்த்தைகள் குருக்களுக்கும் துறவியர்களுக்கும் மட்டுமல்ல கிறிஸ்தவனாக வாழ விரும்பி ஞானஸ்ஞானம் பெற்ற நம் அனைவருக்கும் உரியது. நாம் அவர் பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள்.

நற்செய்தி வாசகத்தில், அழைக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் செயலும் இயேசுவின் செயலும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. யோவான் தான் யார் என்பதையும் கண்டு கொள்கின்றார். இயேசு யார் என்பதையும் கண்டு கொள்கின்றார். கண்டதோடு மட்டும் நின்று விடாமல் அதைக்குறித்து சான்றுபகர்கின்றார். கிறிஸ்தவர்களாகிய நாமும் பிறப்பின் வழி  அழைக்கப்பட்டோம். ஞானஸ்ஞானத்தின் வழி வாழ பதில் கொடுத்தோம். அத்தோடு நாம் நின்று விட்டோம். தொடர்ந்து கிறிஸ்தவ பணி செய்யவோ, நாம் யார் என கண்டு கொள்ளவோ இயேசுவை கண்டு கொள்ளவோ நாம் முயற்சிப்பதில்லை.

இந்நிலை மாற இறைவனிடம் அருள் வேண்டுவோம். பல நேரங்களில் நம் பார்வை அகலமாவதே இல்லை கடிவாளம் கட்டிய குதிரை போல நேரில் இருப்பதை மட்டும் பார்க்கிறோம் இல்லையென்றால் கீழே பார்க்கிறோம்.இல்லாவிடில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் பார்க்கிறோம்.  யோவான், இயேசு யாரென்று அறியாதிருந்தார். பின் அறிந்து கொண்டார். அவர் பார்வையை அகலப்படுத்தினார். தூய ஆவி புறா வடிவில் இயேசு மேல் வந்து தங்குவதைக் கண்டார். அதை பிறருக்கும் வெளிப்படுத்தினார். நாம் பல நேரங்களில் காண்பதில்லை . கண்டாலும் பிறருக்கு சான்று பகர்வதில்லை. வேண்டுதல்கள் செய்கின்றோம் இறைவன் ஏதாவது நமது வாழ்வில் புதுமை நிகழ்த்த மாட்டாரா என்று? நன்மைகள் நடந்தால் அந்த மகிழ்வில் இறைவனை மறந்து விடுவது . மீண்டும் துயரம் வரும்போது அவரிடம் வேண்டுவது. நம் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை நாம் பிறரிடம் எடுத்துரைக்கும் போது நமது மகிழ்வும் இரட்டிப்பாகும். நம்மால் பிறரும் இறை நம்பிக்கையில் வளரும் வாய்ப்பு பெறுவர்.

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. அதற்கு நாம் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் தன்மை நிலைத்து நிற்கும். ஒரு சிறிய கதை ஒரு தேநீர் விடுதியில் மக்கள் பலர் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தனர். மாலை நேரம், அவர்களுக்குள் மகிழ்வாக கலகலப்பாக அப்பொழுதினை கழித்துக் கொண்டிருந்தனர். திடிரென்று ஒரு எட்டுக்கால் பூச்சி எங்கிருந்தோ வந்தது. அமைதியாக இருந்த அவர்கள் மனது சஞ்சலத்திற்கு உள்ளானது. ஒரு இளம்பெண் கத்திய சத்தத்தில் தேநீர் விடுதியே அல்லோலப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக அனைவரின் கூச்சல் கூப்பாடு சப்தம் என இருந்த இடமே அதிர்ந்தது. பணியாளர் ஒருவர் வந்தார். சூழ்நிலையைப் பார்த்தார். எந்த சஞ்சலமும் இல்லாமல் அதை தன் கையால் எடுத்து வெளியே போட்டுவிட்டு தன் பணியை தொடர்ந்தார். மீண்டும் சிறிய சலசலப்புக்கு பின் இயல்பு நிலை திரும்பியது.

எட்டுக்கால் பூச்சி ஒன்று தான் ஆனால் அதை பார்த்தவர்களின் மனநிலை தான் வேறுபட்டிருந்தது. ஒருவருக்கு இடையூறாக இருப்பது  மற்றவருக்கு சுலபமாக தெரிகிறது. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட மனிதர்கள் நாம், நம்மை அந்த சுண்டு விரல் அளவு பூச்சி என்ன செய்துவிடும் என்று எண்ணினாலே போதும் . அதை எதிர்க்கும் பலம் நமக்கு கிடைத்துவிடும்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் இது போல தான் . நமது நம்பிக்கை மலையளவு இருந்தாலும் கடுகளவு துன்பம் வந்ததும் நமது பலத்தை நாம் மறந்து விடுகின்றோம். பிறரது அவநம்பிக்கை கண்டு அவநம்பிக்கை கொள்ளும் நாம், ஏன் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை பார்த்து நமது நம்பிக்கையை வளர்க்கக்கூடாது? நன்மையை விட தீமைக்கு பலம் அதிகம் என்று சொல்லி சொல்லி நன்மையின் தரத்தை நாமே அழித்துவிட்டோம். தீமையை விட நன்மைக்கே பலம் அதிகம் என்று சொல்லி பழகுவோம். நம் கண்ணெதிரே காணும் நல்லவைகளை மட்டும் சொல்லி மகிழ்வடைவோம். நன்மையைக் காண்போம் நன்மையில் இயேசுவைக் காண்போம் அதைக்குறித்து சான்று பகர்வோம். நனமையின் நாயகன் என்றும் எப்போதும் நம் முன் நடமாடுவார் . நல்லதை நினைப்போம் நலமுடன் வாழ்வோம் நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.                                

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...