வாழ்க்கை என்னும் பயணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். பாதையும் பயணமும் வேறு வேறு என்றாலும் செல்லும் இடம் என்னவோ ஒன்று தான் . நீ நடந்து போக பாதை இல்லை என்று எண்ணாதே, முன்னோக்கிச் செ ல் பாதை தானாகப் பிறக்கும் என்பதற்கேற்ப தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணிக்க நம்மையும் அழைக்கும் இறை இயேசுவின் பாதையில் நாமும் செல்வோம். பயணத்தில் சிறந்த பயணம் , பாதையில் சிறந்த பாதை அவருடையது. துன்பமும் துயரமும் நிறைந்த துயரபாதை அல்ல அது, துணிவையும் பொறுமையையும் தரும் பொன்னானப் பாதை. இறை இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இருக்கும் நம்மை நேரிய வழியில் நடத்திச் செல்லும் பாதை. அவர் பாதையில் நம் பாதங்களைப் பதிக்க இன்று நம்மை அழைக்கிறார். நமது பாதையை நாமே தேர்ந்தெடுப்போம். ஏனெனில் நம்மையன்றி நமது கால்களால் வேறு எவராலும் நடக்க முடியாது. எனவே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் விழிப்புணர்வுடன் எடுத்து வைக்க இறைவனின் இரக்கத்தை வேண்டுவோம். நமது வானகத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நாமும் உடலளவிலும் உள்ளத்தளவிலும் இரக்கமுள்ளவர்களாய் வாழ , உடனிருப்பவர்களோடு இரக்கத்தைப் பகிர கருணை இறைவனின் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்வோம்.
முதல் நிலை
இயேசு சாவுக்கு தீர்வை இடப்படுகிறார்.
அதிர்வின்றி நடந்து , அன்புடன் பேசி, சுயமாக சிந்தித்து, சுதந்திரமாக செயல்பட்டவருக்கு மரண தண்டனை. அவரது பேச்சால் கவரப்பட்டவர்கள், செயலால் பலனடைந்தவர்கள், வாழ்க்கையால் புது வாழ்வு பெற்றவர்களென அனைவர் முன்னிலையிலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறார். வாழ்க , வெல்க என முழங்கிய கோஷம் ஒழிக வீழ்க என ஒரு பொழுதில் மாறியது. இலட்சங்கள் பல கைமாறியிருக்கலாம் இலட்சியவாதியை தண்டிக்க. ஆயனில்லா ஆடுகள் போல் அலைந்த மக்களுக்கு நல்லாயனாய் பரிவு காட்டியவர், தன்னைப்பின் தொடர்ந்த அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்து பசியாற்றிய நல்ல தலைவர். ஆற்றில் ஒருகால் சேற்றில் மறுகாலாய் பிலாத்து எடுத்த ஒரு தவறான முடிவால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்.
நமது வாழ்க்கையில் நாமும் சில நேரங்களில் முடிவெடுக்கபணிக்கப்படுகிறோம். எதையும் தீர்க்க ஆராய்ந்து முடிவெடுப்பவர்களா நாம்? இல்லை குழப்பத்திலேயே குண்டூசி தேடுபவர்களா நாம் ? சிந்திப்போம்
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் தொடங்கி இறந்தவரை எப்படி அடக்கம் செய்வது என்பது வரை ஒரே குழப்பம் தான். இதில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவர் சிலர். "தெளிந்த மனம் ஒடுகின்ற ஆறு. குழம்பிய மனமோ தேங்கிய சாக்கடை". நமது குழம்பிய மனத்தால் எத்தனை இயேசுக்களை பிலாத்துவாக நின்று தீர்ப்பிடுகிறோம் . சந்தேகம் எனும் நீர் கொண்டு பலமுறை பல நிரபராதிகளை கை கழுவி இருக்கிறோம் ? சிந்திப்போம். தெளிவான மனநிலை கொண்டு வாழ வரம் வேண்டுவோம்.
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் தொடங்கி இறந்தவரை எப்படி அடக்கம் செய்வது என்பது வரை ஒரே குழப்பம் தான். இதில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவர் சிலர். "தெளிந்த மனம் ஒடுகின்ற ஆறு. குழம்பிய மனமோ தேங்கிய சாக்கடை". நமது குழம்பிய மனத்தால் எத்தனை இயேசுக்களை பிலாத்துவாக நின்று தீர்ப்பிடுகிறோம் . சந்தேகம் எனும் நீர் கொண்டு பலமுறை பல நிரபராதிகளை கை கழுவி இருக்கிறோம் ? சிந்திப்போம். தெளிவான மனநிலை கொண்டு வாழ வரம் வேண்டுவோம்.
செபம் : அன்பு யேசுவே , உறுதியின்மை சந்தேக மனப்பான்மை கொண்டு எங்களது வாழ்க்கைக்கு நாங்களே தண்டனை தீர்ப்பளித்துக் கொண்டிருக்கிறோம் . எங்களது அறியாமையையும் அவ நம்பிக்கையையும் மாற்றி, தெளிந்த நீரோடையாக எங்கள் வாழ்வும் மனதும் மாற அருள் தாரும் . உமது அருளால் நிரப்பப்பட்டவர்களாய் பிறருக்கு நம்பிக்கை தரக்கூடிய நல்ல மனிதர்களாய் வாழ வரம் தாரும் ஆமென்.
2 இயேசுவின் தோள் மேல் சிலுவை
உடைந்த கைகள் கொண்டு உழைக்கலாம் ஆனால் உடைந்த உள்ளத்தோடு எதுவும் செய்ய முடியாது. நம் அன்பர் இயேசுவோ உடலோடு உள்ளமும் உடைக்கப்பட்டவராய் தன் பாதையைத் தொடர்கிறார். என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையைதானே சுமந்து வரட்டும் என்றவர் சொன்னதை செயல்படுத்துகிறார். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற பாரமான சிலுவை சுமந்து செல்கிறார். செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பதை காட்டிலும் பிறர் செய்த தவறுக்கு நாம் தண்டனை அனுபவிப்பது மிகக் கொடுமையானது. தன் தவறால் வரும் துன்பத்தை விட பிறர் தவறால் வரும் துன்பம் மிக வலிமையானது. அதைத்தான் இயேசு அனுபவிக்கிறார். செய்யாத ஒன்றிற்கு சிலுவைமரணம். துன்பம் இல்லாத மனிதன் இல்லை. துன்பம் இல்லாதவன் மனிதனே இல்லை என்பதற்கேற்ப தனது மனித இயல்பை துன்பத்தினால் வலுப்படுத்துகிறார். இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது அராஜகம் பண்ணும் கெட்டவர்களால் அல்ல, அதை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால் தான். இயேசுவின் சிலுவைப் பாதையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சிலர் தான் . ஆனால் அமைதியாகப் பார்த்து அதை ஆமோதித்தவர்கள் பலர்.
நாம் யார் ஆர்ப்பரிப்பவர்களா ? அமைதிகாப்பவர்களா?
கண்ணெதிரே நடக்கும் கயமையைக் கண்டும் காணாமல் சென்ற நேரங்கள், தெரிந்தும் பிறர் மீது பாரங்களை சுமத்திய தருணங்கள், அப்பொழுதெல்லாம் இயேசுவின் மீதே சுமையை ஏற்றியிருக்கிறோம் . அவரை காயப்படுத்தியிருக்கிறோம். நாவினால் நாம் பிறர் உள்ளத்தில் ஏற்படுத்திய காயங்களுகாக மனம் வருந்துவோம்.
கண்ணெதிரே நடக்கும் கயமையைக் கண்டும் காணாமல் சென்ற நேரங்கள், தெரிந்தும் பிறர் மீது பாரங்களை சுமத்திய தருணங்கள், அப்பொழுதெல்லாம் இயேசுவின் மீதே சுமையை ஏற்றியிருக்கிறோம் . அவரை காயப்படுத்தியிருக்கிறோம். நாவினால் நாம் பிறர் உள்ளத்தில் ஏற்படுத்திய காயங்களுகாக மனம் வருந்துவோம்.
செபம் : சுமைகளால் சோர்வுற்ற இறைவா! காயங்கள் தரும் வலிகளை விட அது எப்படி யாரால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே மிகவும் வலி தருகிறது என்பதை உணர்கிறோம். காயங்களை ஏற்படுத்துபவர்களாக இல்லாமல் காயங்களுக்கு மருந்து தருபவர்களாக மாற விரும்புகிறோம். எங்களைக் காயப்படுத்தியவர்களையும் , எங்களால் காயப்பட்டவர்களையும் உம் பாதம் அர்ப்பணிக்கிறோம். வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாங்களாக இருக்க அருள் தாரும். ஆமென்
3 இயேசு முதல் முறை கீழே விழுகிறார்.
விழுவதெல்லாம் எழுவதற்கே என்பதை எண்பித்துக் காட்ட இயேசு விழுந்து எழுகிறார். அவர் கீழே விழக் காரணம் என்ன? சிலுவையின் பாரமா? இல்லை காவலாளிகளின் சாட்டையடி வசையா? இல்லை இல்லவே இல்லை. இதையெல்லாம் தாண்டி , சுற்றியிருந்த மக்களின் பார்வை, ....... நன்கு பழகி உண்டு உறவாடிய தன் மக்களே பார்வையாளர்களாக மாறி, காட்டிய பாசாங்கு...... பழகியவர்கள் பிரியும் போது வரும் வலியை விட அவர்கள் பழக்கமே இல்லாதவர்கள் போல் நடந்து கொள்ளும் போது வரும் வலியே அதிக வேதனை தரும். அத்தகைய வேதனைத் தீயில் வெந்து கீழே விழுகிறார் இயேசு. தன் ஊரிலிருந்து வெளியே விரட்டப்படுகிறார். தனது மக்களால் வெறுக்கப்படுகிறார். உங்கள் நம்பிக்கை கால்களில் நில்லுங்கள் என்று வலுவூட்டியவரின் கால்களை வாரிவிடுகின்றனர்.
இன்று சொந்த நாட்டில் ஊரில் வீட்டில் அந்நியர்களாக வாழ்பவர் எத்தனை பேர்? வீடு சொந்தம் உறவு ,உரிமை என அனைத்தும் இருந்தும் இல்லாதவர்களாக அவர்கள் காட்சியளிக்கிறார்கள். ஆதரவின்றி, அந்நியர்களாக அகதிகளாக அயல்நாட்டில் வந்து விழுகின்ற வாழ்கின்ற எண்ணற்ற மக்கள் இயேசுவின் உருக்களே! நாம் நன்றாக வாழ பிறரை அந்நியப்படுத்தும் , விழத்தாட்டச் செய்யும் நம் செயல்களுக்காக மனம் வருந்துவோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் அவர்களும் நமது உறவுகளே என எண்ணுவோம்.
செபம் : மண்ணை முத்தமிட்டு வெற்றிக்கனிபறிக்க வேங்கை போல் பாயும் வீரனான இயேசுவே! உமது ஊரில் உமது மக்களால் நீர் வெறுக்கப்பட்டீர். இன்று எங்கள் மத்தியில் நாடு , ஊர் , குடும்பம், உறவு, கலாச்சாரம் என அனைத்தையும் துறந்து வாழும் அன்புச் சகோதர சகோதரிகளுக்காக வேண்டுகிறோம் இல்லாதவன் இல்லை என்று சொல்லிக் கேட்கும் போது இல்லை என்று சொல்வோமானால் நாங்களும் இல்லாதவர்களே என்பதை உணர்ந்து, ஆதரவின்றி அல்லல்படும் அந்நியர்களை ஆதரித்து வாழ வரம் தாரும் ஆமென்.
4 மாதா இயேசுவை சந்திக்கிறார்.
உதிரம் உருக்கி ஊனுயிர் தந்த தாய் ,கொலைக்களத்திற்கு செல்லும் மகனுக்கு ஊக்கம் தந்து வழியனுப்புகிறார். 12 வயதில் மறைநூல் வல்லுநர்களிடையே தன் மகன் போற்றிப்புகழப்பட்டதை காது குளிரக் கேட்டு மகிழ்ந்தவர், இன்று அதே நகரத்து மக்களால் இகழ்ந்து தூற்றப்படுவதைக் கேட்டு உள்ளம் கலங்குகிறார். 3 ஆண்டு பணிக்காலத்தில் ஊர் ஊராகச் சென்று நோயாளிகளைக் குணப்படுத்திய இயேசுவை காண யாரும் வரவில்லை அவர் தாயைத் தவிர. தாங்குமா தாயின் உள்ளம் , சித்திரத்தில் வரையப்பட்ட செந்தாமரை மலர் போல் இன்பம், துன்பம், பிறப்பு ,இறப்பு என அனைத்தையும் முழு மனதுடன் ஏற்கிறார். பிறர் போற்றினாலும் தூற்றினாலும் அவன் என் மகன் என பறை சாற்ற மரியாக்கள் குழுவோடு இணைந்து செல்கிறார். காயத்தால் ரணப்பட்ட மனதைத் தேற்ற மருந்து கொண்டு செல்லவில்லை தானே மருந்தாக செல்கிறாள். எதிர்க்கப்படும் அடையாளம் , உள்ளத்தை ஊடுருவுகின்ற வாளும் இது தானோ? என சிமியோனின் இறைவாக்கை எண்ணியவளாய் சுக்குநூறான இதயத்தை சுமந்து செல்கிறாள். நடைபயிலும் வயதில் தத்தி தவழ்ந்து நடந்து வந்த பாலகன் இயேசுவைக் கண்டு மகிழ்ந்தவள் , பாரச்சிலுவை சுமந்து தள்ளாடி தடுமாறி வரும் பரமனைக் கண்டு வருந்துகிறாள். கண்களால் கருணை மருந்தூட்டி மனப்புண்களை ஆற்றுகிறாள்.
கண்கள் கருணையின் இருப்பிடம் . ஆனால் நாமோ அதை கோபத்தின் வெளிப்பாடாக மாற்றுகிறோம். காலை முதல் இரவு வரை அலை பேசியில் பதியும் நமது கண்கள் அருகில் இருக்கும் மனிதர் மீது பதிவதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் நாம் அதிகமாகப் பயணிப்பது கடவுளோடோ உறவுகளோடோ அல்ல அலை பேசியோடுதான். தூர உறவுகளை தொடர்பு படுத்த வந்த அலை பேசி கிட்டத்து உறவுகளை தூரப்படுத்துகிறது. கருணையை கண்களின் கேடயமாக அணிவோம். அருகில் இருக்கும் மனிதர்களை, நோயாளிகளை கருணையுடன் பார்ப்போம். நமது வீட்டில் இருக்கும் முதியோர் உடல்நலமற்றவரை சந்திப்போம் அருகில் இருப்போம் அன்பு செலுத்துவோம்
செபம் : அன்பு இயேசுவே நோயுற்றிருந்தேன் என்னைக்காண வந்தீர்கள் என்றீரே ! இன்று சின்னஞ்சிறு நோயாளிகள் வடிவத்தில் உம்மைக் காணாத நேரங்களுக்காக மனம் வருந்துகிறோம். ஊடகங்களிலும் தொலைதொடர்பு சாதனங்களிலும் பதிந்திருக்கும் எங்கள் கண்களை கருணை பொழியும் கனிவான கண்களாக மாற்றியருளும் .ஆமென்
5 சீரேன் ஊர் சீமோன் உதவுகிறார்.
தளராத இதயம் உள்ளவனுக்கு தடைகள் கூட தாமரை இலைத் தண்டு போலத்தான்
உற்ற நண்பன் உடனிருந்தால் எந்த உயரமும் வானமும் வசப்படும் ஒருநாள் வாழ்நாளில் நண்பன் ஒருவன் உடனிருந்தால்.
வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தின் நடுவில் விந்தையான ஒரு மனி்தர். கட்டாயத்தினால் வந்தாரா? இல்லை கருணை உள்ளத்தோடு வந்தாரா? தெரியவில்லை. அவமானச் சின்னமே ஆனாலும் அதிலும் பங்கேற்க வருகிறார் தன்னால் இயன்ற உதவியைச் செய்கிறார் இரு மகன்களைப் பெற்றவர் தந்தைக்குரிய வாஞ்சையோடு உதவுகிறார். உடலோடு உள்ளத்தையும் பக்குவப்படுத்தி உடன் பயணிக்கிறார். சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றவரின் சுமையை தாங்க மற்றொருவர் தேவைப்படுகிறார். இதனால் இயேசுவின் புனித பயணத்தில் பங்கேற்று முதல் திருப்பயணியாகிறார்.
உற்ற நண்பன் உடனிருந்தால் எந்த உயரமும் வானமும் வசப்படும் ஒருநாள் வாழ்நாளில் நண்பன் ஒருவன் உடனிருந்தால்.
வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தின் நடுவில் விந்தையான ஒரு மனி்தர். கட்டாயத்தினால் வந்தாரா? இல்லை கருணை உள்ளத்தோடு வந்தாரா? தெரியவில்லை. அவமானச் சின்னமே ஆனாலும் அதிலும் பங்கேற்க வருகிறார் தன்னால் இயன்ற உதவியைச் செய்கிறார் இரு மகன்களைப் பெற்றவர் தந்தைக்குரிய வாஞ்சையோடு உதவுகிறார். உடலோடு உள்ளத்தையும் பக்குவப்படுத்தி உடன் பயணிக்கிறார். சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றவரின் சுமையை தாங்க மற்றொருவர் தேவைப்படுகிறார். இதனால் இயேசுவின் புனித பயணத்தில் பங்கேற்று முதல் திருப்பயணியாகிறார்.
நமது திருப்பயணங்களின் நிலை என்ன? ஆண்டுக்கொருமுறை நேர்த்திக்கடன் செலுத்துவது, வளரும் என்ற தைரியத்தில் முடிக் காணிக்கை , தகுதிக்கேற்றார்போல் தகடுகள் காணிக்கை, ஆடு, கோழி, திரி, தூபம், தென்னை ,அசனம் என நமது திருப்பயணங்கள் சீர் வரிசை திருப்பயணங்களாகின்றன. அதுவும் வேண்டுதல்கள் நிறைவேறினால் மட்டுமே. பயணம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடந்து செல்வது. ஒன்றைத் துறந்து மற்றொன்றை நாடுவது . உடல் மட்டுமல்லாது உள்ளமும் அதற்கு தயாராக வேண்டும். நாம் பலமுறை திருத்தலங்களுக்கு பயணங்கள் மேற்கொள்கிறோம் ஆனால் அவைகள் திருப்பயணங்களாக இருக்கின்றனவா என சிந்திப்போம்.
செபம் : சுமை தாங்கியான இயேசுவே! எங்களைச் சுற்றி வாழும் துன்புறும் மனிதர்கள் வடிவில் இன்றும் நீர் சிலுவை சுமந்து செல்கின்றீர் என்பதை நாங்கள் உணரச் செய்தருளும்.எந்த பிரதிபலனுமின்றி எவ்வாறு சிமியோன் உமக்கு உதவி செய்து திருப்பயணம் மேற்கொண்டாரோ அது போல நாங்களும் நோயினாலும் முதுமையினாலும் வாடும் எம் உறவுகளுக்கு பலனை எதிர்பார்க்காமல் உதவிட இதன் மூலம் உமது திருப்பயணத்தில் பங்கேற்றிட அருள் தாரும் ஆமென்.
6 வெரொணிக்கா இயேசுவின் திருமுகம் துடைக்கிறார்.
சகாப்தங்கள் சாதாரணமானவர்களிடமிருந்து சர்வ சாதாரணமாகப் பிறக்கின்றன என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு வெரோணிக்கா. இரத்தக்கறையாலும், கீறல்களாலும் மறைக்கப்பட்டிருந்த இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறாள். ஊர் கூடி வேடிக்கைப் பார்க்க, நமக்கேன் வம்பு என சுற்றத்தாரும் , சுற்றி வந்தவரும் நிற்க, துணிகிறாள் வெரோணிக்கா. துன்புறக்கூடிய உடலை உடைய நாம் துன்புறுபவர்களை மறத்தல் கூடாது என்பதை எண்பிக்கிறார். படைவீரர் தடுத்தாலும் , பட்டத்தரசன் உயிரையே பறித்தாலும் பரவாயில்லை , பரமன் இயேசுவுக்கு உதவுவேன் என்று எண்ணி செயலில் இறங்குகிறாள். நற்செயலுக்கேற்ற கைம்மாறையும் பெறுகிறாள்.
இன்று நம்மில் எத்தனை இயேசுக்கள் அனுதினமும் கறைபடிந்த உடலோடும் கீறல் விழுந்த உள்ளத்தோடும் நம்முன் கடந்து செல்கின்றார்கள்! நன்மை எனத் தெரிந்தும் செய்யத் துணியாத தருணங்கள் தான் எத்தனை! ? ஊரிலும் , உலகத்திலும் நடக்கும் அநியாயத்தை த் தட்டிக் கேட்க வேண்டாம், நம் தெருவிலும் வீட்டிலும் நடக்கும் சிறு சிறு தவறுகளைத் திருத்தவாவது கரம் சேர்க்கலாம் அல்லவா?
செபம் : அன்பு இயேசுவே யூத சமுதாயத்தில் பலவீனம் என எண்ணப்பட்ட பெண்ணை பலமுள்ளவளாக்கியது உமது பாடுகள். எனக்கேன் வம்பு , என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணி நன்மை செய்யாது ஒதுங்கிய தருணங்களுக்காக மனம் வருந்துகிறோம். நான் , எனது என்ற குறுகிய மனப்பான்மையை விடுத்து, நாங்கள் அனைவரும் இரக்கமுள்ள வானகத்தந்தையின் அன்புப் பிள்ளைகள் என்பதை உணரச் செய்தருளும் . துன்புறுகின்ற ஒவ்வொருவரின் துயர் துடைக்க கரம் நீட்டுபவர்களாக நாங்கள் மாறச் செய்தருளும் ஆமென்.
7 இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்.
சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்து வந்தவர், நோயாளிகளைக் குணமாக்கியும், பசித்தவர்களை உண்பித்தும் வந்தவர், இன்று கீழே தள்ளிவிடப்படுகிறார். ஆம் விழவில்லை மாறாக விழுத்தாட்டப்படுகிறார். முகம் துடைக்கப்பட்டு, பார்வையில் தெளிவு பெற்ற இயேசுவின் பயணம் சிறப்பாகத் தானே இருந்திருக்கவேண்டும்! இல்லையே ! இவ்வளவு துன்புறுத்தியும் துணிந்து நடக்கிறானே! என்றெண்ணி அவர் கால்களை இடறச் செய்கின்றனர். தன் சொந்த கால்களில் நிற்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியமானது அடுத்தவர் காலை வாரிவிட க் கூடாது என்பது. ஆனால் இயேசுவோடு இருந்தவர்களோ அவர் காலை இடறச் செய்து தங்கள் கால்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். முடமானவர்களையும் , முடக்குவாதமுற்றவர்களையும் குணமாக்கி எழுந்து நடக்கச் செய்த அவரை கை கொடுத்து எழுப்பிவிட ஆளில்லை.
உயர்ந்து நிற்கும் மரங்கள் எல்லாம் என்றோ ஒருநாள் விதைகளாக மண்ணில் விழுந்தவை தானே ! விதையாக விழுகிறார் விருட்சமாக எழ,.
உயர்ந்து நிற்கும் மரங்கள் எல்லாம் என்றோ ஒருநாள் விதைகளாக மண்ணில் விழுந்தவை தானே ! விதையாக விழுகிறார் விருட்சமாக எழ,.
பாவத்தின் விளைவாக செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்து குற்றவாளிக்கூண்டில் இருக்கும் கைதிகள் எத்தனை பேர்? கோபம் , பொறாமை, போன்ற உணர்ச்சிகள் மேலோங்க கால் இடறி வருந்தும் அவர்களுக்காக செபிப்போம். உணர்ச்சிகளின் தொகுப்புக்கு தங்கள் உணர்வுகளைக் கையளித்தவர்கள், சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட அவர்கள் மனம் வருந்தி தந்தையிடம் திரும்பினால் மன்னிப்பு உண்டென நமது செயல்களால் எடுத்துரைப்போம். தன்னை மன்னித்து ,மறுவாழ்வு கொடுக்க யாருமில்லை என்று எண்ணும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்போம். சிறைச்சாலையிலிருந்து வருபவர்களை சமூக நோயாளிகளாகப் பார்க்காமல் நெறிப்படுத்தும் பாடசாலையிலிருந்து திரும்பும் மாணவர்களாகப் பார்ப்போம். அவர்களுக்கும் நல்வாழ்வு உண்டென நம்புவோம்.
செபம் : இரக்கம் நிறைந்த இறைவா! குற்றமிழைத்து கூண்டில் இருக்கும் சிறைக்கைதிகள் சமூதாயத்தினால் இந்நிலைக்குத் தள்ளிவிடப்பட்டவர்கள் என்பதை உணர்கிறோம். கைதிகளின் வாழ்வு சிறைகூடத்தோடு முற்றுப் பெறுவதில்லை அது அவர்கள் வாழ்வின் இரண்டாம் பகுதி என்பதை அவர்கள் அறியும்படி எங்கள் வாழ்வும் செயல்பாடும் இருக்க அருள் தாரும். கீழே விழுத்தாட்டப்பட்ட அவர்களுக்கு இந்த உதவியை செய்யும் போது எல்லாம் உமக்கே செய்கிறோம் என்பதை அறிந்து வாழ வரம் தாரும் ஆமென்.
8 எருசலேம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார் இயேசு.
"சிரிக்கும் போது வாழுகின்ற வாழ்க்கையை அழும்போதுதான் புரிந்து கொள்ள முடியும்" ஆம் புரிந்து கொண்ட இயேசுவின் வாழ்க்கையை எண்ணி அழுகின்றனர் எருசலேம் நகரத்துப் பெண்கள். எதையும் தாங்கும் இதயமுள்ள பெண்களாலேயே இயேசுவின் பாடுகளைத் தாங்க முடியவில்லை. துக்கத்தைக் கண்ணீர் துளிகளாகக் கொட்டுகின்றனர். உள்ளக்குமுறல்களை உளறல்களாக, புலம்பல்களாக வெளிப்படுத்துகின்றனர். தன்னைக் கேலி செய்து கும்மாளமிடும் கூட்டத்தார் நடுவே தனக்காகக் கண்ணீர் விட்டு கூடிவரும் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார் . " எனக்காக அழாதீர்கள், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் "என்கிறார். வேதனைக் கண்ணீர் வடிக்கச் சொல்லவில்லை மனமாற்றத்தின் கண்ணீரை சிந்தச் சொல்கிறார். நம்முடைய பாவங்களுக்காகவும் நம் பிள்ளைகளின் பாவத்திற்காகவும் மனம் வருந்தச் சொல்கிறார். எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள் என்றவர் அழுங்கள் என்கிறார். ஆம் மகிழ்ச்சியான வாழ்க்கையில் நிலைத்திருக்க பாவங்களுக்காக மனம் வருந்தி அழச் சொல்கிறார். மூன்று ஆண்டுகள் பணிவாழ்வின் பசுமைக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் இறைவனின் இரக்கப் பணியைச் செய்ய இருக்கும் நீங்கள் இதைவிட அதிக துன்பங்கள் பட வேண்டும் என்கிறார்.
. இரக்கத்தின் ஆண்டவர் இருகரம் விரித்து நம் மனமாற்றத்திற்காக காத்திருக்கிறார். ஊதாரி மைந்தனின் தந்தையாக . மன்னிப்பு கேட்கையில் மைந்தனாக, மன்னிப்பு தருவதில் தந்தையாக, இருப்போம் . மனம் மாறியவர்களை மனதார ஏற்போம், மனம் மாறாதவர்கள் மனம் திரும்ப கண்ணீர் விட்டு செபிப்போம்.
செபம் : அன்பு இயேசுவே, பாவிகள் என்று யாருமில்லை இவ்வுலகில் நாங்கள் யாரையும் மன்னிக்க மறக்காதிருக்கும் வரை என்பதை உணர்ந்தவர்களாய் எல்லோரையும் மன்னித்து வாழ வரம் தாரும். எங்களுக்காக மட்டுமன்றி எங்களைச் சார்ந்தவர்கள் அனைவரின் நல் மனமாற்றத்திற்காகவும் செபிக்கிறோம் . வலுவற்ற எங்கள் உள்ளம் உமது அன்பால் வலுவானதாக மாற அருள் தாரும் ஆமென்
9 மூன்றாம் முறை இயேசு கீழே விழுகிறார்.
விழாமலேயே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல , விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை. மூன்றாம் முறை கீழே விழுந்த இயேசு மீண்டும் எழுகிறார் தான் பலம் வாய்ந்தவன் என்பதை நிருபிப்பதற்காக அல்ல. தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாததுஎன்று எதுவுமில்லை என்பதை எண்பிக்க, கற்பிக்க. ரத்தமும் சதையும் இடம் மாறிஉரு தெரியாமல் உடம்பிற்கு வெளியே உலாவிக்கொண்டிருக்கும் தருணத்திலும் ஆதவனாய் எழுகிறார். நம்பிக்கைச் சுடரை மக்களின் மீது வீசச் செய்ய. இறைவனின் திருவுளம் இது தான் , இந்தக் கொலை மரணம் தான் எனத் தெரிந்திருந்தும் துணிகிறார் . கொலைக்களம் நோக்கி முன்னேறுகிறார் கொடூரச் சிலுவையோடு.
கடும் தவம் புரிகிறேன் கடன்திருநாட்களில் கட்டாயத்திருப்பலிக் காண்கிறேன். , காணிக்கை செலுத்துகிறேன், உதவி செய்கிறேன், உற்றாரை மதிக்கிறேன் ஆனால் கடவுள் என்னை மீண்டும் மீண்டும் துன்பத்திலேயே விழச் செய்கிறார் என்று எத்தனை முறை நாம் கடவுளையே கண்டித்திருப்போம் . எனக்கு இதைச் செய் அதைச் செய் என்றும், இதை எனக்குக் கட்டாயமாகச் செய்தே தீர வேண்டும் என்றும் கட்டளையிடுகிறோம் . இப்படி அறியாமையில் செயல்களைச் செய்யும் நமக்கு இயேசு கற்பிப்பது இதுதான் " விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல"
செபம் : அன்பு இயேசுவே " கற்றுக் கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்ல, யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர் என்று உமது பாடுகள் மூலமாக நாங்கள் நற்பாடம் கற்கச் செய்தவரே! எங்களது அறியாமையினால் இறைவனின் திருவுளத்திற்கு எதிராக செயல்படத் துணிந்த தருணங்களுக்காக மனம் வருந்துகிறோம். நாங்கள் மட்டுமன்றி அறியாமையினால் ஆண்டவனின் அருளை உணராதிருக்கும் அனைவரும் இரக்கம் நிறைந்த இறைவனின் பக்கம் திரும்ப அருள் தாரும் ஆமென்.
செபம் : அன்பு இயேசுவே " கற்றுக் கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்ல, யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர் என்று உமது பாடுகள் மூலமாக நாங்கள் நற்பாடம் கற்கச் செய்தவரே! எங்களது அறியாமையினால் இறைவனின் திருவுளத்திற்கு எதிராக செயல்படத் துணிந்த தருணங்களுக்காக மனம் வருந்துகிறோம். நாங்கள் மட்டுமன்றி அறியாமையினால் ஆண்டவனின் அருளை உணராதிருக்கும் அனைவரும் இரக்கம் நிறைந்த இறைவனின் பக்கம் திரும்ப அருள் தாரும் ஆமென்.
10 ஆடைகள் களையப்படுதல்
ஆடை மனிதனின் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்று. ஆடை மனிதத்தின் அடையாளம். ஆடைகள் மானம் காக்கின்றவை. ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பர். அந்த அரை மனிதத்தையும் இயேசுவிடமிருந்து பறிக்கின்றனர் படைவீரர்கள். ஆடையற்றிருந்த இலேகியோனை ஆடை அணிய பணித்தவர், ஊதாரி மைந்தனுக்கு ஆடை உடுத்தி தந்தையின் அன்பை உவமை மூலமாக வெளிப்படுத்தியவர், இன்று ஆடையின்றி அலங்கோலமாக நிற்க வைக்கப்படுகிறார். அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டு குணமாகினர் பலர் அன்று, ஆடையை முழுதும் கழற்றி அவமானப்படுத்துகின்றனர் சிலர் இன்று. குணம் பெறத்தொட்டனர் அன்று, குற்றப்படுத்த அகற்றினர் இன்று.
இன்று நாம் அணியும் ஆடைகளின் நோக்கம் என்னவாக இருக்கின்றது? மானம் காப்பதற்காகவும், நன் மதிப்பை வெளிப்படுத்துவதற்காகவும் பயன்பட்ட ஆடை அலங்கோலமாக அந்நியக்கலாச்சாரம் என்ற பெயரில் அணியப்படுகிறது. . கிழிசல், ஒட்டு இருந்த ஆடையை மறுத்தகாலம் போய் ஒட்டும் தொங்கலும் உள்ள ஆடையை தேடி விரும்புகின்ற காலமாய்ப் போனது இன்று. நாம் இவ்வாறு இருந்தால் தெருவோரங்களில் ஆடையின்றி மனிதத்தின் அடையாளமின்றி இருக்கும் அவர்களை எவ்வாறு ஆடையால் உடுத்த முடியும். ?.?? இயேசுவின் துணியாலான ஆடையை மட்டும் களையவில்லை படைவீரர்கள் மாறாக மனித்தின் அடையாளத்தையே களைகிறார்கள். அழிக்கின்றார்கள். எப்பொழுதெல்லாம் அரை குறை ஆடை அணிகிறோமோ அப்பொழுதெல்லாம் நமது மனிதத்தை நாமே அழிக்கின்றோம் என்பதே பொருள். எப்பொழுதெல்லாம் மனதாலும் செயலாலும் சொல்லாலும் பிறரது மனிதத்தை மதிப்பை அடையாளத்தை சிதைக்கிறோமோ அப்போதெல்லாம் இயேசுவின் ஆடைகளைக் களையும் படைவீரர்களில் ஒருவராகிறோம்
செபம் ஆடை களையப்பட்ட இயேசுவே எம்மை மீட்க மனித உரு எடுத்து வந்த நீர் இன்று அடையாள ஆடை நீக்கப்பட்டு அலங்கோலமாய் நிற்கின்றீர். ஆடை அன்பின் சின்னம் தன்னைத்தானே விரும்புகிறவன் தன்னை நன்கு உடுத்துகிறான் . உடுத்தாதவன் தன்னை இழிவு படுத்துகிறான் என்பதை உணர்கிறோம். எங்களை நாங்கள் அன்பு செய்யாத தருணங்களுக்காகவும், பிறரது மனிதத்தை ஏற்க மறுத்த நேரங்களுக்காகவும் மனம் வருந்துகிறோம். .உமது அன்பின் ஆடையை நாங்களும் அணிந்து, ஆடையற்றிருப்போருக்கும் அந்த அன்பின் ஆடையை அணிவிப்பவர்களாக மாற வரம் தாரும் ஆமென் .
11 இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார்.
உலகிற்கு அரசனாக இருக்க விரும்புகிறவன் உள்ளத்திற்கு சேவகனாக இருக்க வேண்டும் . உலகின் அரசனான இயேசுவோ, உள்ளத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே சேவகனாக இல்லை இல்லை அடிமையிலும் அடிமையாக ஆக்கப்படுகிறார். இதுவரை நடந்த கொடுமை எல்லாம் ஒரு முன்னோட்டம் போலும், இப்போது நடந்தேருகிறதுஒரு மிகப்பெரிய கொடுமை. ஆடை களையப்பட்டு அரை உயிராய் இருந்தவரை அவமானச் சின்னமாம் சிலுவையில் அறைந்து, , மிச்சமிருந்த உயிரையும் வலுக்கட்டாயமாகப் பறிக்கின்றனர். கை கால்களின் எலும்புகளை இறுகப்பிடித்து சதைகளின் நடுவே கொடூரமாய் பாய்ந்தன இரும்பு ஆணிகள். உடல் முழுதும் வேதனை, எங்கே தொடங்கி எங்கே முடிகின்றது என்று அறிய முடியாத அளவுக்கு கொடூர வேதனை. தச்சு வேலை செய்த போது வலியின்றி மரப்பலகைகளுக்கிடையே ஆணியை செலுத்தியவர் உடம்பு, மரத்துண்டுகளோடு இணைக்கப்படுகிறது. சொல்லப்போனால் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட மிச்சமிருந்த தசைகளும் எலும்புகளும் மூன்று ஆணிகளால் சிலுவையில் தொங்கவிடப்படுகின்றன. அத்தகைய வேதனையிலும் தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக செபிக்கிறார். " தந்தையே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்"
தெரியாமல் யாரோ நம்மை இடித்தாலோ , மிதித்தாலோ மின்னலென எதிர்வினை கொண்டு அவர்களை வதைக்கத் தோன்றுகிறது நமக்கு. நம்மைக் காயப்படுத்துபவர்களுக்கு நம்மிடம் இருந்து முதலில் வருவது கோபம் தான். பொறுமையோடு இருந்து மன்னிப்பது என்பது மிகவும் தாமதமாகத்தான் வருகிறது. இயேசு நமது பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார் என்று எளிதில் சொல்கிறோம் . நமது பாவம் என்ன? தீமை செய்வது மட்டுமல்ல, செய்ய மறுத்த நன்மைத் தனங்களும் பாவங்களே. நமக்கு ஏற்படும் துன்பங்களை பொறுமையோடு ஏற்க மறுத்த நேரங்களும் இதில் அடங்கும் . நமது பொறுமையை சோதிப்பவர்கள், தொந்தரவு தருபவர்கள் , வேதனைப்படுத்துபவர்கள், என அனைவரும் நமது பலத்தை நிரூபிக்க இறைவனால் கொடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் என்பதை உணர்வோம்.
செபம் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே ! அன்று மோசேயால் பாலைவனத்தில் பாம்பு உயர்த்தப்பட்டது இஸ்ரயேல் மக்கள் குணம் பெற, இன்று கல்வாரியில் நீர் உயர்த்தப்பெற்றீர் எங்கள் வாழ்வு நலம் பெற என்பதை உணர்கிறோம் . எங்களது வாழ்வில் எங்களுக்கு வேதனைகளைத் தரும் அனைத்தையும் , அனைவரையும் பொறுமையோடு ஏற்று மன்னித்து, வாழ இதன் மூலமாக சிலுவையில் தொங்கும் உமது வேதனையைக் குறைக்க அருள் தாரும் ஆமென்.
12 இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்.
1000 ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாய் வாழ்வதே மேல் என்றெண்ணி படைத்த இறைவனுக்கே தன் உயிரைக் கையளிக்கிறார். தாகமாயிருக்கிறது என்றவர் எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி தந்தை தனக்கு சொன்னவற்றையெல்லாம் மண்ணுலகில் நிறைவேற்றி மீண்டும் விண்ணுலகம் திரும்புகிறார். இறந்த லாசருக்கு உயிர் கொடுத்தவர், விதவைத்தாயின் ஒரே மகனுக்கு மறு வாழ்வு கொடுத்தவர், இன்று தன் வாழ்வை முடிக்கிறார் சிலுவையிலே. வானகத்தந்தையின் மகனாய் அவர் வலப்புறம் அமர வேண்டியவர் , கள்வர்களோடு கள்வராய் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கிறார். மனிதனாய் பிறப்பெடுத்து வாழ்ந்து இறக்கும் வரை சாதாரண மனிதன் அனுபவிக்கு அனைத்து இன்னல்களையும் ஏற்றார்.
இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் ஒருநாள் இறக்கத் தான் போகிறோம் . யாருக்கும் இந்த பூமி சொந்தமில்லை எவ்வளவு சொத்து சுகம் சேர்த்திருந்தாலும் கடைசியில் எதையும் நாம் கொண்டு செல்வதில்லை. சமமாக அனைவருக்கும் (நாம் விட்டுச் செல்வது பொன்னையோ பொருளையோ அல்ல இந்த உலகில் நாம் விட்டுச் செல்வது நம்முடைய குணநலன்களை மட்டும் தான் . இவன் இப்படி நல்லவனாய் வாழ்ந்தான். இவன் சொர்க்கத்தில் கடவுள் திருமுன் நிற்பான் என்றும், நல்லவேளை இந்த அயோக்கியன் இறந்தான் இவன் நிச்சயம் எரிநரகத்தில் விழுவான் என்றும் நாம் இறந்தபின் நம் உடலைச் சுற்றி நம் உறவினர்கள் இவ்வாறு கூறுவர்.அவர்கள் கூறுவார்கள் என்பதற்காக அல்ல நமது தூய உள்ளத்தின் பொருட்டாவது நாம் மாற வேண்டும் . இவ்வுலகில் அவரால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் படைக்கப்பட்டிருக்கிறோம் . இவனைப் போல் வாழ் என்று சொல்வதற்காகவும் இருக்கலாம் . இவனைப் போல் மாறி விடாதே என்பதற்காகவும் இருக்கலாம் . நமக்குப் பின் நாம் விட்டுச் செல்லும் தடையங்கள் நல்லவைகளாக இருந்தால் நலம்." யாராலும் திருட முடியாத நினைவு என்ற பொக்கிஷங்களை எல்லோர் மனதிலும் விட்டுச் செல்வோம் அதனை நல்லவையாக்க முற்படுவோம் " இறக்கவே பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருக்க முயல்வோம்
அமைதி பாடல்
13 மரித்த இயேசு மாதாவின் மடியில்
பத்து மாதம் கருவில் சுமந்தவர், நடைபயிலும் பருவம் வரை தோளிலும் கைகளிலும் சுமந்தவர். இன்று முப்பத்து மூன்று வயது குழந்தையை தன் மடிகளில் சுமக்கின்றார். முப்பது வயதானாலும் முந்நூறு வயதானாலும் தாய்க்கு தன் பிள்ளை குழந்தை தான் . சராசரிப் பெண்களுக்கான எந்த ஒரு மகிழ்வையும் அனுபவித்திராத தாய், தனக்கு வரும் கணவன் இப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும், தன் குழந்தை இப்படி பிறக்கவேண்டும் , இப்படி வளர வேண்டும் , இந்த கலைகளைக் கற்க வேண்டும், இந்த துறையில் வேலை பார்க்கவேண்டும் திருமணம் , தொழில் , குடும்பம், குழந்தை என சந்தோசமாக வாழ வேண்டும் என்று எண்ணும் தாய்மார்கள் மத்தியில் கடவுளின் விருப்பமே எனது விருப்பம் என அனைத்தையும் கையளித் து வாழ்ந்தவர் அன்னை மரியாள். தான் தளர்வுற்று தன் மகன் கைகளில் தன் உயிர் விட எண்ணுகையில் மகனின் உடலை தன் கரங்களில் ஏந்துகிறாள.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகத்தை உள்ளத்தில் சுமக்கிறாள். இறைவனின் திருவுளத்தை உள்ளத்தில் ஏற்று உடலில் சுமந்தவள். இறுதி வரை சுமக்கிறாள். மகனின் பிரிவு ஒரு பக்கம் , அவமான மரணம் ஒரு பக்கம் என்றாலும் அத்தனையையும் துணிவுடன் ஏற்கிறாள்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகத்தை உள்ளத்தில் சுமக்கிறாள். இறைவனின் திருவுளத்தை உள்ளத்தில் ஏற்று உடலில் சுமந்தவள். இறுதி வரை சுமக்கிறாள். மகனின் பிரிவு ஒரு பக்கம் , அவமான மரணம் ஒரு பக்கம் என்றாலும் அத்தனையையும் துணிவுடன் ஏற்கிறாள்.
சிறு துன்பத்திற்கே துவண்டு விடும் மனிதர்கள் மத்தியில் அனைத்தையும் மனதில் இருத்தி சிந்திக்கிறார். துன்பங்கள் நம்மை பலப்படுத்தும் வேர்கள். வேர்கள் பார்க்க கரடுமுரடாகவும் கசப்பானதாகவும் இருக்கலாம் ஆனால் அவை தான் வாழ்க்கை என்னும் நமது மரத்தை தாங்கும் அடிதாங்கிகள். துன்பத்தை பொறுமையோடு நாம் ஏற்க அதை தனது வாழ்வில் செயல்படுத்தி காட்டிய தாய் மரியாளைப் போல வாழ மாற முற்படுவோம் .
செபம் : பிறப்பிலும் இறப்பிலும் தாய் மடியில் தவழ்ந்து தாயின் மாண்பை மாநிலத்துக்கு எடுத்துரைத்தவரே. தாயைப் போல பிள்ளை நூலைப்போல் சேலை என்பர். உம் தாயிடமிருந்து பொறுமையை மகனாக நீர் கற்றீரா இல்லை , உம்மிடமிருந்து உம் தாய் கற்றாரா என்று அறியா வண்ணம் துன்பத்தில் பொறுமையோடிரு க்க எங்களுக்கு நீவீர் கற்பித்தீர். உங்களது வாழ்வையும் பணியையும் பார்த்த நாங்கள் எங்களது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை பொறுமையோடு ஏற்க, துன்புறும் மற்றவர்க்கும் துணிவைக் கொடுத்து துணையாய் இருக்க அருள் தாரும் ஆமென்.
14 இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்.
சந்தர்ப்பம் சூழ் நிலை பார்த்து பிரிய நினைக்கும் மனிதர்கள் மத்தியில் இறந்த சந்தர்ப்பத்திலும் தேடி வந்து உதவுகிறார் அரிமத்தியா ஊர் சூசை. இறந்த பிறகு ஆறடி நிலம் தான் சொந்தம் என்பர் . அந்த ஆறடி நிலமும் தனக்கென இல்லாமல் இறந்த இயேசுவிற்காய், தனக்கென வாங்கிய கல்லறையை கொடுக்கிறார். நான்கு பேர் தன் பின்னால் வந்தாலே தன்னைத் தலைவன் என கூறிக் கொண்டு தனக்கும் தன் குடும்பத்தார்க்கும் சொத்து சேர்க்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் தனக்கென கானி நிலம் கூட இல்லாமல் பணி செய்தவர் இயேசு. அவர் இவ்வுலகில் வாழ்ந்த போது சொத்து சுகம் சேர்க்கவில்லை மாறாக அழியாத சொத்தாகிய நல் மனிதர்களைச் சேர்த்தார். அந்த நல் உள்ளங்களால் தான் எங்கோ தொடங்கிய இயேசுவின் புகழ் இன்று உலகின் கடைக்கோடி வரை பரவி க்கொண்டிருக்கிறது. அவரது பணியால் கவரப்பட்டவர்கள், அன்பாலும் அருளாலும் ஆசிர்வதிக்கப்பெற்றவர்கள் பெற்ற ஆசீரை உலகம் முழுதும் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக தான் இயேசு மண்ணில் புதைக்கப்பட்டார்.இல்லை விதை முளைக்கும் என்ற நம்பிக்கையில் மண்ணில் புதைக்கப்படுவது போல விதைக்கப்பட்டார்.காணிக்கை நறுமணப்பொருட்களின் நல் மனத்தோடு பிறந்தவர், அதே நறுமணப்பொருட்களின் வாசனையோடு திரும்புகிறார். தனது வாழ்வால் மணம் வீசியவர், தனது மறைவாலும் பிறர் மனதில் வாசம் செய்கிறார். தனக்கென வாழாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்ந்தவர், புகழோடு தோன்றி புகழோடு மறைகிறார் நாம் புன்னகையோடு வாழ்ந்திட.
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பர். வாழ்கின்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ முற்படுவோம இயேசு போல. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியையும் வாழ்வோம் கடந்த காலம் தந்த அனுபவங்களை உரமாக்கி, எதிர்காலம் என்னும் செடியை நிகழ்கால நீருற்றி வளர்ப்போம். இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என யானையை ப் போல வாழ முடியாவிட்டாலும் , இருந்தாலும் இறந்தாலும் பிறர் வாழ்வையும் வளத்தையும் செழிக்கச் செய்யும் நீர் அணையாக திகழ்வோம் கல்லறையில் இயேசு புதைக்கப்பட்டது நமது வாழ்விற்கு உரமாக மாறத்தான் என்பதை உணர்வோம். வாழ்நாட்களில் நல் உள்ளங்களையும் , உறவுகளையும் சேர்ப்பவர்களாக மாற முயல்வோம்
செபம் கல்லறையில் அடக்கப்பட்ட இயேசுவே ! மண்ணில் வாழ்ந்த காலத்தில் மனிதர்களின் அன்பை சேர்த்தவரே பொன்னும் பொருளும் எங்கள் வாழ்நாட்களில் எங்களோடு கடைசி வரை வரப்போவதில்லை என்பதை உமது வாழ்வால் எங்களுக்கு எண்பித்தீரே. அழிந்துபோகின்ற பொருட்களில் நாட்டம் செலுத்தாமல் அழியாத உறவாகிய அன்பில் நாங்கள் கவனம் செலுத்த அருள் வேண்டுகிறோம் ,. எங்களைச் சுற்றி வாழும் மனிதர்களில் உம்மைக் கண்டு வாழ உமது மதிப்பீடுகளை எங்களது வாழ்வில் கடைபிடித்து அதை பிறரும் கடைபிடிக்கும் வண்ணம் வாழ அருள் தாரும் ஆமென்.