Thursday, 19 May 2022

புனித அன்னா மரியா பிரான்சிஸ்கா ருபாத்தோ.

 நம்பிக்கையின் திருப்பயணிகள் வரிசையில் இன்று நாம் காண இருக்கும் புனிதர் புனித அன்னா மரிய ருபாத்தோ. புனித அன்னா மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ 1844 ஆம் ஆண்டு யோவான் ருபாத்தோ மற்றும் கத்தரினா பவேஸியா என்னும் தம்பதியினருக்கு எட்டாவது மகளாக பிறந்தவர். பிறந்த நான்கு வயதிலேயே தன் தந்தையை இழந்து பெரிதும் துன்புற்றார். இவருடைய பதின்பருவ வயதில் மணமுடிக்க ஒருவர் ஆர்வமாய் இருந்தாலும் துறவு வாழ்வில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை எடுத்துரைத்து அதனை மறுத்தார். தன்னுடைய 19 வது வயதில் தன் தாயையும் இழந்து தவித்த இவர் தூரின் என்ற இடத்திற்கு சென்று மரினா ஸ்கோபோன் என்னும் செல்வந்த பெண்மணியின் நட்பைப் பெற்றார். 

ரூபாத்தோ தன்னுடைய நண்பரான மரினா ஸ்கோபோனின் குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தும், நோயாளிகள் மற்றும் ஏழைகளை சந்திப்பதில் தன்னுடைய நேரத்தை செலவிட்டார்.  1882 ல் ஸ்கோபோனோவோம் இறந்து போகிறார்.  ஒரு நாள் காலை திருப்பலி முடிந்து திரும்பும் வேளையில்  லோயோனா என்னும் ஆலயக் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் மேல் கல்லானது விழுந்து விட மிகவும் பாதிக்கப்படுகிறார். அவரை சகோதரி ருபாத்தோ மிகுந்த அக்கறையுடன் கவனித்து பணிவிடை செய்தார். இதனை கண்ட அருகில் இருந்த கன்னியர் மட சகோதரிகள் இவரின் பிறர் நல சேவையை பாராட்டி துறவற வாழ்வு வாழ அழைப்பு விடுத்தனர். உமது இத்தகைய பணி ஆண்டவருக்கு உரியது அதனை ஆண்டவருக்கு கொடுப்பதே முறை என்று எடுத்துரைத்தனர். எனவே கன்னியர்களின் வழிகாட்டுதலின் படி 1885 ஆம் ஆண்டு மரிய பிரான்சிஸ்கா என்னும் பெயருடன் துறவியாக மாறினார். அவரது துறவற ஆர்வத்தினாலும் பிறர் நலப் பணியினாலும் பல்வேறு நற்செயல்களை ஆற்றி, பிலிப்பி அலேக்ரா என்னும் ஆயரின் ஆணையினிமித்தம் அவர் இருந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்களே பின்னாளில் மதர் ருபாத்தோ கப்புச்சின் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர். 

1892 ஆம் ஆண்டு மோந்தே வீடியோ என்னும் இடத்திற்கு மறைப்பணி ஆற்ற சென்றார். அதன்பின் அர்ஜெண்டினாவிலும் தன்னுடைய மறைபரப்புப்பணியை சிறப்பாக ஆற்றினார்.  1904 ஆண்டு புற்று நோயால் பீடிக்கப்பட்டு தன்னுடைய 59 ஆம்வயதில் மோந்தே வீடியோ வில் காலமானார். அவரது விருப்பப்படி அந்த மோந்தே விடியோ விலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருத்தந்தை புனித ஆறாம் பவுல் இவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் அருளாளர் என்னும் நிலைக்கு உயர்த்தினார். 1941 முதல் 1970 வரை இவரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் அனைத்தும் குறிப்பாக ஜெனோவாவில் இவரது பரிந்துரையால் நடந்த புதுமை 1951 ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவித்தார்.      

 எனவே எல்லா விதத்திலும் இவர் புனிதையாக உயர்த்தப்பட தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் இப்புனிதையை திருப்பீட வணக்கத்திற்கு தகுதி உடையவரென அறிவித்தார். 2013 ஆம் ஆண்டு மேலும் ஒரு புதுமை தெளிவுபடுத்திய பின்பு 2022 ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார். 

இவரது அருளிக்கம் கொண்ட பேராலயம் புனித பிரான்சிஸ்கா ருபாத்தோ என்று அழைக்கப்படுகிறது. இவரது திருநாள் ஆகஸ்ட் மாதம் 6 தேதி கொண்டாடப்படுகிறது.  கப்புச்சியன் சபை மதர் ருபாத்தோ சபை சகோதரிகளின் பாதுகாவலராக இவர் திகழ்கின்றார். புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ போல நாமும் பிறர்நலப்பணியிலும் அழைத்தலில் ஆர்வமும் மறைபரப்புப்பணியில் மகிழ்வும் கொண்டு வாழ முயல்வோம். வாழ்வில் எற்படும் எல்லா சிக்கலான் சூழல்களிலும் இறைத்திருவுளம் சிறப்பாக செயல்படும் என்பதை தன் வாழ்வின் நிகழ்வில் கண்டு கொண்ட புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ நமக்கு இறைவனிடம் பரிந்து பேசி வழிகாட்டுவாராக. புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.   

புனித கரோலினா சாந்தோகனாலே.

நம்பிக்கையின் திருப்பயணிகள் வரிசையில் இன்று நாம் காண இருக்கும் புனிதர் . புனித கரோலினா சாந்தோகனாலே. 1852 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாள் இத்தாலியிலுள்ள பலேர்மோவில் செல்சே ராயல் குடும்பத்தில்  பிறந்தார். பிறந்த அடுத்த நாளே அதாவது அக்டோபர் 3 ம் தேதி ஞானஸ்நானம் பெறும் பேறு பெற்றார். தன்னுடைய 8 வது வயதில் திவ்விய இயேசுவை உணவாக உட்கொண்டார். தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் உடல் நலம் சரி இல்லாத மரணப்படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாத்தாவை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவருடன் இருந்து அவருக்கு தேவையான பணிவிடைகள் செய்து அவர் நித்திய இளைப்பாற்றி அடைய வழிவகுத்தார். அவரது இறப்புக்கு பின் மவுரோ வெனுதி என்பவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். இவரே பின்னாளில் நம் புனிதையின் ஆன்மீக வழிகாட்டுநராக மாறியவர். இளம் வயதில் இவருக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போதிலும் துறவறத்தின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டு உறுதியான தேவ அழைத்தலைப் பெற்றுக்கொண்டார். அடைபட்ட மடத்தில் இருந்து கொண்டு காட்சி தியானம் செய்தல் வெளியே சென்று நோய்வாய்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் என்னும் இரண்டு பணிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய 21ம் வயதில் பலேர்மோவில் உள்ள புனித அந்தோனியார் பங்கைச்சேர்ந்த  டாட்டர்ஸ் ஆப் மேரி என்னும் சபை சகோதரிகளுக்கு தலைவரானார்.    

சாந்தோகனாலே இக்கால கட்டத்தில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு 16 மாதம் துன்புற்று 1887 ல் இத்துன்பத்தில் இருந்து சிறிதளவு விடுதலை பெற்றார். இத்துன்பத்தின் மத்தியிலும் சகோதரிகளின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார். காட்சி தியானம் மற்றும் செயல்பாட்டு  துறவு வாழ்வு இரண்டையும் ஒன்றிணைக்க  நினைத்து பிரான்சிஸ்கன் மூன்றாம் துறவற குழுமத்தை உருவாக்கினார். இதற்கான முறையான அனுமதி திருத்தந்தை பதின்மூன்றாம் சிங்கராயர் அவர்களால் 1887 ல் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஜீன் மாதன் 13 ம் தேதி பிரான்சிஸ்கன் மூன்றாம் துறவற நிலையில் தன்னை இணைத்து வார்த்தைப்பாடு ஏற்று, துறவற ஆடையை பெற்றுக் கொண்டார். இயேசுவின் மரியாள் என்னும் பொருள் அமையும் வகையில் தன்னுடைய பெயரை மரியா தி ஜெசு என மாற்றிக் கொண்டார். 

பலேர்மோவில் ஒவ்வொரு வீடாக கதவாக சென்று ஏழை எளிய மக்களுக்கு நோயாளிகளுக்கு தன்னாலான உதவிகளை செய்தார். இதன் மூலம் தன்னுடைய அழைத்தலின் நோக்கத்தை பூர்த்தி செய்தார். மேலும் அவரால் தனியாக அத்தனை பேருக்கும் உதவி செய்ய இயலாத நிலையில் தன்னுடைய சபையை சேர்ந்த சகோதரிகள் சிலரை இப்பணி செய்ய ஊக்குவித்தார். அவர்களுக்கு புனித லூர்தன்னையின் அமலோற்பவ சகோதரிகள் எனபெயரிட்டார். இச்சபையானது 1923 ஜனவரி 24 ம் தேதி பலேர்மோ ஆயர் அலெசாந்த்ரோ லுஆல்டி அவர்கள்  அனுமதியின் படி மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் முறையான சபையாக இயங்க அனுமதி பெற்றது.

சபைக்கான ஒப்புதல் பெற்ற ஒரு வாரத்திலேயே சகோதரி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். ஜனவரி 29ம் தேதி இவரது இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இவரது உடலின் எஞ்சிய பாகங்கள் சேகரிக்கப்பட்டு சபையின் சிற்றாலயத்தில் பாதுகாக்கப்பட்டது. திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் 1947ஆம் ஆண்டு இச்சபை பாப்பாண்டவரின் கீழ் இயங்கும் சபையாக செயல்பட அனுமதிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் அருள் சின்னப்பர் இதனை வழிமொழிந்து ஆணை பிறப்பித்தார். 

சகோதரி அவர்களுக்கான அருளாளர் பட்டம் செயல்பாடுகள் 1982 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கடவுளின் ஊழியர் என்னும் அடை மொழியுடன் துவங்கப்பட்டது. புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட தகுதியுடைமையைத் தேடும் படலம் ஆரம்பமாகி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. சகோதரி அவர்களின் வாழ்க்கை பணி, இறைவாழ்வு, மறை உறவு அனைத்தும் உரோமை திருஅவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால், புனித நிலைக்கு உயர்த்தப்பட இவர் தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2022 ஆம் ஆண்டு மே 15 ம் தேதி, இவரால் இவரது செப உதவியினால் நடந்த அற்புதங்கள் புதுமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார். 

இவரது திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27 ம்தேதி கொண்டாடப்படுகிறது.  கப்புச்சின் சபை புனித லூர்து அன்னை அமலோற்பவ சகோதரிகளின் பாதுகாவலாரக இவர் திகழ்கின்றார். புனித கரோலினா சந்தோகனாலே போல நாமும் நாமும் அழைக்கப்பட்டதன் மேன்மையை உணர்ந்து வாழ முயற்சிப்போம் . ஏழை எளிய மக்கள் நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன் வருவோம். இறை உறவிலும் பணி உறவிலும் நிலைத்து வாழ புனித கரோலினா சாந்தோகனாலே நமக்கு அருள் புரிவாரக . புனித கரோலினா சாந்தோகனாலேவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.  

Friday, 13 May 2022

அன்பின் இனிமையை சுவைப்போம்




 பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு

I. திருத்தூதர் பணிகள் 14:21-27

II. திருவெளிப்பாடு 21:1-5

III. யோவான் 13:31-35

இந்த உலகில் விலை மதிப்பில்லாமல் கிடைப்பது அன்பு ஒன்று தான். ஆனால் எளிதில் கிடைப்பதனாலோ என்னவோ அதன் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் நாம் அனைவரும் இயேசுவை போல அன்பு செய்து வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. "போல" செய்தல் இன்றைய கால கட்டங்களில் நாம் விரும்பி செய்யும் ஒன்று. டிக்டாக் என்ற செயலி மூலமாக நடிகர்களைப் போலச் செய்கின்றோம். உடை உடுத்துவது நகை மாட்டுவது வரை தலை முடி முதல் கால் நகம் வரை அனைத்துமே போலச் செய்தல் தான். ஏன் இப்போது எல்லாம் உணவு சமைப்பது கூட வலையொலிப்பதிவைப் பார்த்து தான். எல்லாவற்றையும் பிறரைப் போலச்செய்ய நினைக்கும் நாம் நல்லவிசயங்களை பிறரைப் போலச் செய்ய நினைப்பதில்லை. அப்படி இருக்க இயேசு என்னைப் போலச்செய்யுங்கள் என்று உறுதியாக சொல்கின்றார். என்னைப் போல அன்பு செய்யுங்கள். நான் அன்புசெய்தது போல நீங்களும் அன்பு செய்யுங்கள் என்கின்றார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வார்கள். என்கின்றார்.


அன்பு மிக இனிமையானது. எனவே தான் அதனை மிகச்சிறப்பான கட்டளையாக இயேசு தம் சீடர்களாகிய நமக்கு கொடுக்கின்றார். அன்பு கொடு மரியாதை கொடு என அடுத்தவரிடம் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரனாய் இருக்காதே என பணிக்கின்றார். மாறாக கேட்காமலேயே அள்ளிக்கொடுக்கும் செல்வந்தனாய் இருக்க வலியுறுத்துகிறார். அன்பும் மரியாதையும் கேட்டுப் பெற வேண்டியவை அல்ல கொடுத்துப்பெற வேண்டியவை. கேட்டால் கிடைக்காது இவை இரண்டும். கொடுத்தால் மட்டுமே இரட்டிப்பாக கிடைக்கும். நம்மை அன்பு செய்பவர்களை மட்டுமல்லாது வெறுப்பவர்களையும் நாம் அன்பு செய்ய வேண்டும். உதாரணம் நம் இயேசு. அவர் தன்னை காட்டிக் கொடுத்தவன், விட்டு ஓடியவர்கள், மறுதலித்தவர்கள் பழித்துரைத்தவர்கள் என அனைவரையும் அன்பு செய்கின்றார். நாமும் அவர் " போல " அன்புசெய்ய வேண்டும். கொடுத்துப் பெறுவோம் அன்பை . எங்கே அன்பு குறைகிறதோ அங்கு குறைகள் பெரிதாய் தெரியும். அன்பு நிறைவாய் இருந்தால் அங்கு குறைகளுக்கு இடமே இல்லை.


அன்பு என்பது ஆழ்கடல் போன்றது. கரையில் தேடினால் சிப்பிக்களும் கிளிஞ்சல்களும் தான் கிடைக்கும் . ஆழமாய்த் தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும். (சில சமயம் மூச்சும் திணறும்). நாம் பெரும்பாலும் மேலோட்டமான அன்பை சிலர் மேல் செலுத்திவிட்டு அதை விட குறைவான அன்பை அவர்களிடமிருந்து பெற்று, அதனையே முழுமையான அன்பு என எண்ணி நிறைவு அடைகிறோம். விளைவு அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலோ சிறு வார்த்தைகள் சொன்னாலோ உடனே அந்த அன்பு மறைந்துவிடுகிறது. ஆழ்கடல் அன்பை உணர நாம் முயற்சிப்பதில்லை. ஆழ்கடல் அன்பை உணர முதலில் மூச்சடக்க பயிற்சிக்க வேண்டும். முத்துக்கள் இருக்கும் இடம் அறிய வேண்டும். இல்லாத இடத்தில் மூச்சடக்கி ஒரு பயனுமில்லை. பெரும்பாலனோர் கரையில் முத்துக்களைத் தேடி கிளிஞ்சல்களையும் சிப்பிக்களையும் முத்துக்கள் என்றெண்ணி வாழ்க்கையை வாழ்கின்றனர். முத்துக்கள் போலத் தெரியும் கற்களை நம்பியும் ஏமாறுகின்றனர். உண்மையான அன்பு எதுவென உணர்ந்து அதன்படி வாழ முயற்சிப்போம்.

அன்பு இனிமையானது அது தன்னையும் தன்னைச்சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கும். எல்லையின்றி தன் அன்பை பிறருக்கு அள்ளிக் கொடுக்கும். நறுமணம் போல எங்கும் பரவி மனங்களை மகிழச்செய்யும். நமது அன்பு அப்படிப்பட்ட அன்பாக இருக்க அருள் வேண்டுவோம். எல்லையின்றி பரவும் அன்பாக, நமது அன்பு பிறருக்கு மகிழ்வை நன்மையைத்தரக் கூடியதாக இருக்க முயல்வோம். ஒரு சிறு கதை....

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு மாமரம் இருந்தது. அது பருவகாலம் முடிந்தும் கனி தந்தது. அந்த ஊர் மக்கள் அதன் கனியை மிகவும் ரசித்து உண்டு அதனைப் பாராட்டிச் செல்வர். இதனால் மகிழ்வடைந்த மரம் இன்னும் அதிகமாக கனிகளைக் கொடுக்க ஆரம்பித்தது. இதன் பெருமையைக் கேட்டு பக்கத்து ஊர் மக்களும் வந்து கனிகளை உண்டு ரசிக்க ஆரம்பித்தனர். இதன் பெருமை இப்படியாக வளர்ந்து அந்த ஊர் மன்னனின் காதுகளையும் எட்டியது. அவனும் அந்த மாங்கனிகளை சுவைக்க ஆரம்பித்தான். அதன் சுவையில் திளைத்துப் போன மன்னன் அதன் கனிகளை தினமும் சுவைக்க எண்ணினான். பின் அதன் கனியை தான் மட்டுமே சுவைக்க எண்ணி மரத்திற்கு காவல் போட்டான். ஏழை எளிய மக்கள் அதன் கனியை சுவைக்க முடியாமல் போயிற்று. அதன் வருகே வந்து தங்களின் ஏக்க பெரு மூச்சை மக்கள் வெளிப்படுத்திச்சென்றனர். நாளடைவில் மரத்தின் அருகே போகவும் தடை. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி. மக்கள் மரத்தின் சுவையை மறந்தே போயினர். சிறிது காலத்தில் மரம் தன் இலைகளை உதிர்த்து பட்டு போக ஆரம்பித்தது. கனிகளும் வெகுவாக குறைந்து போனது . இதனால் கலக்கமுற்ற மன்னன் காவலர்களை மாற்றினான். உரம் மண் மாற்ற சொன்னான். எந்த மாற்றமும் இல்லை ... அந்த ஊர் வழியாக பயணம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவர் மன்னனின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்து, அவரிடம் பேசத் தொடங்கினார். மன்னன் தன் கதையையும் மரத்தின் கதையையும் முனிவருக்கு கூறினார்.

இறுதியாக முனிவர் , மாமரம் தன் செயலால் மட்டும் இவ்வளவு இனிமையான கனிகளை தரவில்லை . அதன் கனிகளை உண்டு அதனை அன்பு செய்து பாராட்டிய மக்களாலும் தான் செழித்து வளர்ந்தது. நீ மட்டும் அதன் கனிகளை பலனை அனுபவிக்க எண்ணினாய் . அது பிறர் அன்பு இல்லாமல் தன் செழிப்பை மறந்தது. மீண்டும் அது செழித்து வளர கனி தர வேண்டும் என நீ நினைத்தால், அதற்கான காவலையும் வேலியையும் எடுத்து விடு. ஊரின் பொது மரமாக அதனை விட்டு விடு.அதன் பின் பார் அதன் கனிகள் செழிக்கும் கிளைகள் தழைக்குமென்றார். மன்னனும் முனிவரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு அப்படியே செய்தான். சிறிது நாட்களில் மரம் தன் பழைய நிலையை அடைந்தது. ஏராளமான மக்கள் அதன் கனிகளை சுவைக்க வந்தனர், அதன் பெருமையையும் சிறப்பையும் பாராட்டி சென்றனர். அதிகமாக அன்பு செய்தனர். முன்னைய நிலையைக் காட்டிலும் பின்னர் மரத்தின் கனியும் சுவை மிக்கதாய் இருந்தது. மக்களும் அதன் பயனை அதிகமாக உணர்ந்தனர். அன்பு மட்டுமே அந்த மரத்திற்கும் அந்த ஊர் மக்களுக்கும் இனிமையை சேர்க்கக் கூடியதாய் இருந்தது.

நாமும் அந்த மாமரம் போல அன்பைக் கொடுத்து அன்பை பெறுவோம் நமது அன்பின் கனி பிறர் வாழ்விற்கு இனிமையைத் தரட்டும். பிற செயலிகள் போல அல்லாது நம் உயிர்த்த ஆண்டவர் இயேசு போல செயல்படுவோம் அன்பை கொடுப்போம் அன்பைப் பெறுவோம். இறைவனின் இனிய அன்பில் நிலைத்திருப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இருப்பதாக ஆமென்..

Thursday, 12 May 2022

புனித ஆனி மேரி ரிவியர்

  புனித  ஆனி மரியா ரிவியர் 1768 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ம்தேதி கிழக்கு பிரெஞ்சு நகரமான மோன்டெபெசட் சொஸ் பௌசன் என்னும் ஊரில் பிறந்தார்.  குடும்பத்தில் நான்காவது பெண்ணான இவருக்கு பிறந்த சில தினங்களிலேயே அதாவது இவரது முதல் கிறிஸ்து பிறப்பு நாளன்று இவருடைய பாட்டியின் உதவியினால் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. மரினெத்தே என்று தன்னுடைய குடும்பத்தாரால் அன்போடு அழைக்கப்பட்ட இவர்   16 மாத குழந்தையாக இருந்த போது படுக்கையில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முதல் கணுக்கால் எலும்பு வரை உடைந்து நடக்க முடியாமல் 10 வருடம் துன்பத்திற்கு ஆளானார். அந்த துன்பம் அவரை கடவுளோடு மிக அதிகமாக நெருங்க வைத்தது.  தன்னுடைய ஐந்து வயதிலிருந்தே கடவுள் மேல் ஆழமான அன்பு கொண்டார் . நடக்க முடியாத இவரை இவரது தாயார் தூக்கி கொண்டு போய் ஒப்புரவு அருட்சாதன சிற்றாலயம் என்று அழைக்கப்படும் சேப்பல் ஆஃப் தி பெனிட்டன்ஸ் என்னும் உள்ளூர் ஆலயத்திற்கு அழைத்து செல்வார். காலை முதல் மாலை வரை செபத்திலும் கண்ணிரோடு கூடிய மன்றாட்டிலும் பியட்டா என்றழைக்கப்படும் வியாகுல மாதாவின் முன் பல மணி நேரங்களை செலவிடுவார். அதன் பின் தன் தாயார் இறந்து போக மிகவும் மன வேதனைக்கு ஆளானார். 1774 ஆம் ஆண்டு ரிக்கெட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டாலும் ஊன்றுகோலின் உதவியால் தன்னால் நடக்க முடியும் என்பதை கண்டு கொண்டாள். வெறும் நான் கு அடி நான் கு அங்குலம் மட்டுமே இருந்த அவரால் இப்படி நடக்க முடிந்ததே பெரும் அதிசயமாக காணப்பட்டது. 

1785 ஆம் ஆண்டு பிராடெல்லசில் உள்ள நோட்றே டேம் அருட்சகோதரிகளின் சபையில் சேர விண்ணப்பித்தார். இவரது மோசமான உடல் நிலை கருதி இவர் நிராகரிக்கப்பட்டார். மனம் தளராமல் தன்னுடைய சொந்த ஊரில் ஒரு பள்ளியை நிறுவினார். அதன் பின் ஏற்பட்ட பிரென்சு புரட்சியின் விளைவால் பல மத பள்ளிகள் நிறுவனங்கள் மூடப்பட்டும் சந்தேகககண்களுடனும் பார்க்கப்பட்டன.  கிறிஸ்துவின் மீது கொண்ட ஆழமான அன்பாலும் நம்பிக்கையாலும் இவர் தொடர்ந்து உறுதியாக இருந்தார். அருட்தந்தையர்கள் இல்லாத போது தானே வழிபாடுகளை முன்னெடுத்து நடத்து மக்களுக்கு இறைநம்பிக்கையை வளர்த்தார். விவிலியம் தொடர்பான கருத்துக்களையும் விளக்கங்களையும் பொது மக்களுக்கு அறிவித்து வந்தார். புனித பிரான்சிஸ் சேவியர் மற்றும் புனித பிரான்சிஸ் ரெஜிஸ் மட்டில் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். 1794 ஆண்டு ஆனி மேரி ரிவியர் மற்றும் அவரது உடன் நண்பர்களால் நடத்தப்பட்ட பள்ளி பறிமுதல் செய்யப்படவே இவர்கள் துய்ட்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அருட்தந்தை லுய்கி பொண்டானியர் இவர்களை ஆதரித்தார். 1796 ல் நவம்பர் 21 ஆம் ஆண்டு ஐந்து இளம் பெண்கள் புதிய பள்ளியின் மாடியில் துறவற வார்த்தைப்பாடு கொடுத்தனர். அனாதைப்பிள்ளைகளுக்கு ஆதரவும் கல்வியும் அளிப்பதே இவர்களது நோக்கம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். வீடுகளுக்கு சென்று மக்களை சந்திப்பது, மறைக்கல்வி எடுப்பது என தங்களது துறவற பணியினை சிறப்பாக செய்தனர். 1797 ஆம் ஆண்டு இவ்வைவர் குழு பன்னிரண்டாக மாறியது. 1801 ஆம் ஆண்டு பிரான்சில் மீண்டும் சுமுகமான சூழல் தோன்றியது அந்நிலையில் இவர்களது சபை வளரத்தொடங்கியது எனவே 1815 ஆம் அண்டு சபையின் தாய் இல்லம் போர்க் செயிண்ட் ஆண்டியோலில் உள்ள பெரிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 1805 ஆண்டு திருத்தந்தையாக இருந்த ஏழாம் பயஸ் அவர்கள் பிரான்சிலிருந்து ரோமைக்கு செல்லும் வழியில் இவர்களது சபையை சந்தித்தார். அப்போது சபைக்கான முறையான ஒப்புதலும் ஆசிரும் பெறப்பட்டது. 1807முதல் முறையாக  துறவற சபையாக அங்கிகரிக்கப்பட்டு துறவற ஆடைகளை அணியத் தொடங்கினர். 

டிராப்சிஎன்னும் நோயால் அவதிப்பட்ட இவர்.1838 ல் இறந்தார். இவரது கடுமையான பணியால் 2005 ஆண்டு 1352 சகோதரிகளுடன் கிட்டதட்ட 189 நாடுகளில் இவர்களது சபை பரவி இருந்தது. 

இவருக்கான அருளாளர் பட்ட வேலைகள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்களின் வழிகாட்டுதல் படி நடக்க ஆரம்பித்தது. பெண் அப்போஸ்தலர் என்றும் ஒருமுறை இவர் அழைக்கப்பட்டார். 1853 ஆம் ஆண்டு மே 12 ம் தேதி கடவுளின் ஊழியர் என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார். இவரது வீரத்தையும் இறை நம்பிக்கையையும் கண்ட திருத்தந்தை 13ம் சிங்கராயர் இவர் வணக்கத்திற்குரியவர் என்று பெயரிட வழிவகுத்தார். மேலும் இவர் வழியாக நடந்த அற்புதங்கள் உறுதி செய்யப்பட்டதால் 1982 ஆம் ஆண்டு மே 12 ம் தேதி இவருக்கு அருளாளர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் வழங்கப்பட்டது.  அதன் பின் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 15 ம் தேதி புனிதர் பட்டம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 3 ம் தேதி இவரது திருநாள் சிறப்பிக்கப்படுகிறது. பிரெஞ்சுகாணிக்கை மாதா சபையினரின் பாதுகாவலியாக இவர் திகழ்கின்றார். புனித ஆனி மேரி ரிவியர் போல நாமும் இடைவிடாத செபத்தாலும் முயற்சியாலும் கடின உழைப்பாலும் தொடர் துன்பத்திலும் இறை நம்பிக்கையில் உறுதியோடு இருந்து இறைவனுக்கு சான்று பகர்வோம். இறை ஊழியர்களாக நம்மை மாற்றி இறைப்பணி செய்திடுவோம்.


புனித டைட்டஸ் பிராண்ட்ஸ்மா


புனித டைட்டஸ் பிராண்ட்ஸ்மா ஒரு டச்சு இறையியலாளர், பத்திரிக்கையாளர் எழுத்தாளர். இவர் 1881 ஆம் ஆண்டு ப்ரைஸ்லேண்ட் மாகாணத்தில் ஹார்ட்வெர்டுக்கு அருகிலுள்ள பிரீஸ்லேண்ட் மாநிலத்தை சேர்ந்த  ஒகேக்லோஸ்டரில் பிறந்தார். இவரது இயற்பெயர். அன்னா ஸ்ஜொர்டு பிராண்ட்ஸ்மா. தந்தை டைட்டஸ் பிராண்ட்ஸ்மா, தாயார் ட்ஜிட்ஜே போஸ்ட்மா.    இவர்களது குடும்பம் ஒரு சிறிய பால் பண்ணை நடத்தி வந்தது. மூன்று பெண்கள் மற்றும் இரண்டு மகன்களைக் கொண்ட ஒரு அழகான கிறிஸ்தவ குடும்பம் இவருடையது. ஒரு பெண்ணை தவிர குடும்பத்தில் உள்ள அனைத்துப் பிள்ளைகளும் துறவற கட்டுப்பாட்டுக்குள் தங்களை உட்புகுத்தி கொண்டனர்.




பிராண்ட்ஸ்மா தன்னுடைய உயர் நிலைப் பள்ளியை மெகனில் உள்ள பிரான்சிஸ்கன் பிரையரி வளாகத்தில் முடித்தார். அதன் பின் தன்னுடைய குருத்துவ பயிற்சியை மேகனில் உள்ள பிரான்சிகன் சின்ன குருமடத்தில் பெற்றார். 1898 ஆம் ஆண்டு பாக்ஸ்மீரில் உள்ள கார்மலெட் பிரையரில் நவ துறவியாக நுழைந்தார். அங்கு தான் தன்னுடைய தந்தையின் பெயரை தனது பெயராக மாற்றிக் கொண்டு டைட்டஸ் பிராண்ட்ஸ்மா  என்று அழைக்கப்படலானார். 1899ல் முதல் வார்த்தைப்பாடும், 1905 ல் குருப்பட்டமும் 1909 ரோமையில் தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1909முதல் 1923 வரை நிறைய புத்தகங்கள் இதழ்கள் போன்றவற்றை எழுதி சிறந்த எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். புனித அவிலா தெரசம்மாளின் படைப்புக்களை டச்சு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான திட்டத்தி 1916ல் தொடங்கினார். இன்றைய டைட்டஸ் பிராண்ட்ஸ்மா லிசெய்யும் என்றழைக்கப்படும் மேல் நிலைப்பள்ளியை உருவாக்கி இரண்டு ஆண்டுகள் அதனை நன்முறையில் நடத்திய பெருமை இவரைச்சேரும். 




1921 ல் பெல்ஜிய கலைஞரான ஆல்பெர்ட் சர்வேஸின் சிலுவைப்பாதை நிலையங்கள் அமைப்பது தொடர்பான சர்ச்சைகளில் அவருக்கு உதவியாக இருந்து அதனை தீர்த்துவைத்ததுடன் 14 சிலுவைப்பாதை நிலையங்களிலும் அவரது தியானக் கருத்துகள் இடம்பெறுமாறு வழிவகுத்தார்,.




கத்தோலிக்க திருச்சபை பற்றிய செய்திகள் உலக மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று கருதிய மனிதர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். 1923 ல் தத்துவவியல் பேராசிரியராக, மறைபொருள் பற்றிய வரலாற்று பேராசிரியராக நிக்மேகனின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அதன்பின் மக்னிஃபிகஸ் ல் ரெக்டராக இரண்டு வருடங்கள் பணியாற்றினார். பேராசிரியராக அறிவார்ந்த பணி செய்வதோடு தன்னுடைய வாழ்வு முடிந்துவிடக் கூடாது அனைவரும் அறியும்படி தனக்கு தெரிந்த அத்தனை கருத்துக்களையும் வெளிப்படுத்தும் பணியினை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே பத்திரிக்கையாளராக தன்னை பிறருக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். 1935 ல் கத்தொலிக்க பத்திரிக்கையாளர்களுக்கு திருச்சபை ஆலோசகராக இருந்தார். அமெரிக்க கனடா போன்ற நாடுகளுக்கு சென்று தன்னுடைய சபை பற்றி எடுத்துரைக்கும் ஒரு விரிவுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்படி ஒரு முறை சென்ற போது நயாகரா வீழ்ச்சி பற்றி கூறும் போது, இந்த உலக புகழ்பெற்ற நீர் வீழ்ச்சியில் நான் தண்ணீரின் தன்மை , அதன் அளவிட முடியாத ஆற்றலை மட்டும் பார்க்கவில்லை கடவுளின் அளப்பரிய ஆற்றலையும் அவரது கைகளின் வல்லமையான செயல்பாடுகளையும் அவரது அன்பின் வெளிப்படுகளையும் பார்க்கிறேன், என்றார். 1940 ஆண்டு மூன்றாம் ரைச் நெதர்லாந்தின் மீது படையெடுத்த போது, நாஜி சித்தாந்தத்துக்கு எதிராகவும், கல்வி மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிராகவும் போராடினார். ஜெர்மனியின் நாஜிக்கள் இயற்றிய யூத எதிர்ப்பு சட்டங்களை வலுக்கட்டாயமாக எதிர்த்து பேசியதால் 1942 ஜனவரியில் ஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்த போது இவர் கைது செய்யப்பட்டார். கத்தோலிக்க செய்திதாள்கள் நாஜி பிரச்சாரத்தை வெளியிட்டால் இவர் தன்னுடைய மடாலயத்தில் அமைதியாக வாழ அனுமதிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இவர் இதனை மறுத்துவிட்டார். அதனால் இவரை டச்சாவ் வதை முகாமில் வைத்து துன்புறுத்தினர். பல்வேறு துன்பங்கள் கஷ்டங்கள் சோதனைகள் பட்டினிகளுக்கு ஆளானார். அதே ஆண்டு ஜீலை மாதம் உடலில் கார்போலிக் அமிலம் செலுத்தப்பட்டு உயிரிழந்தார். இவர் இறக்கும் போது இவருக்கு வயது 61. 




பிராண்ட்ஸ்மா கத்தோலிக்க திருச்சபையில் தியாகி போல் கருதப்படுகினறார். 1985 ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அருளாளர் பட்டம் பெற்றார். ஜீலை மாதம் 27 ம நாள் இவரது திருநாள் கார்மலேட் சபையினரால் பக்தியான முறையில் கொண்டாடப்படுகிறது. அதன்பின் 2021 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இவர் வழியாக நிகழ்ந்த அற்புதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறைவிசுவாசத்தின் நிமித்த கொல்லப்பட்ட புனிதர் என்னும் அடிப்படையில் இவருக்கு 2022  மே மாதம் 15 ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது பெயர் கொண்ட திருத்தலங்கள் நெதர்லாந்திலும் நிக்மேகனிலும் உள்ளன. இவர் கத்தோலிக்க இயதழியலில் பாதுகாவலராக திகழ்கின்றார். புகைப்பழக்கத்திற்கு அடிமையாக  இருப்பவர்கள் மற்றும் நெதர்லாந்து நாட்டு மக்களின் பாதுகாவலாரகவும் திகழ்கின்றார். புனிதர் டைட்டஸ் பிராண்ட்ஸ்மாவை போல துணிவுடனும் கத்தோலிக்க திருச்சபையின் மேல் அளவற்ற அன்பும் கொண்டவர்களாக வாழ முற்படுவோம்.

Sunday, 8 May 2022

உலக அன்னையர் தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை . உலக அன்னையர் தினம். ஏன் இந்த நாள் என்ன காரணம்னு இதோட வரலாறு என்னன்னு வாங்க பார்க்கலாம். 

 பண்டைய கிரேக்க நாகரீகத்திலிருந்து இன்றைய நாகரீகம் வரை அம்மாவை கொண்டாடாதவங்க யாருமே இல்லை. ஏன்னா அம்மா எல்லோர் வாழ்க்கையிலயும் ரொம்ப முக்கியமானவங்க. அம்மா இல்லன்னா நாம இல்லை. பண்டைய காலத்துல இருந்தே அன்னை வழிபாட்டு முறை எல்லா நாடுகள்ளயும் இருந்துச்சு. சில இடங்கள்ள மதம் சமயம் சார்பாவும் சில இடங்கள்ள அன்னையர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பின் அடிப்படையிலயும் இந்த நாள் கொண்டாடப்பட்டுச்சு. ஒவ்வொரு நாட்டிலயும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமா இந்த தினத்தைக் கொண்டாடுறாங்க. செவி வழிச் செய்தியா இந்த நாள் கொண்டாடப்பட்டதுக்கு ஒரு வரலாற்று கதை இருக்கு. பண்டைய காலத்துல வணங்கப்பட்ட பெண் கடவுளான சைபீல் எல்லா கடவுளுக்கும் முழு முதல் தாய் கடவுளா, பிரிஜியா மக்களால வணங்கப்பட்டது. இந்த விழா தான் அன்னையர்களை மரியாதை செய்ய கொண்டாடப்பட்ட முதல் விழா நு சொல்றாங்க. ஆனா  முதன் முதல்ல எல்லோருக்கும் தெரியிற வரலாறா மாறுனது 20 நூற்றாண்டோட தொடக்கத்தில தான். ஜார்விஸ் கிற சமூக சேவகி அமெரிக்கா ல உள்ள மேற்கு வெர்ஜீனியா ல உள்ள கிராப்டன் கிற சின்ன கிராமத்துல வாழ்ந்துட்டு வந்தாங்க. யுத்த காலத்தில போர்ல பலியான அமெரிக்க வீரர்களோட குடும்பம் சிதைஞ்ச்சு சிதறிப் போறத தடுத்து நிறுத்த பல நல்ல செயல்களை செஞ்ச்சு போராடுனாங்க. இப்படி பிரிஞ்ச்சு போற அந்த குடும்பத்தோட நல் வாழ்க்கைக்காகவும், சமாதானத்திற்காகவும் போராடி கடைசியில 1905 ல  ஜார்விஸ் இறந்து போயிடுறாங்க.  இவங்க மேற்கு வெர்ஜீனியால உள்ள புனித அந்திரேயா கோயில்ல வேலை செஞ்ச்சுட்டு வந்ததால. அவங்க பொண்ணு அன்னா ஜார்விஸ்  தன்னோட அம்மா இறந்த தினத்தை முன்னிட்டு அவங்க வேலை செஞ்ச அந்த ஊர்ல உள்ள தாய்மார்களை எல்லாம் அழைச்சு அன்னையர் தினமா 1908 மே மாசம்  கொண்டாட ஆரம்பிச்சாங்க. அப்புறம் இது வருசா வருசம் அன்னையர் தினமா அமெரிக்கா முழுசும் கொண்டாடப்படணும் நு அமெரிக்க அரசுக்கு வலியுறுத்துனாங்க. இதன் விளைவா, அமெரிக்காவின் 28 வது அரசரான தாமஸ் வுட்ரோ வில்சன் 1940 ஆண்டு  ஒவ்வொரு ஆண்டும்  மே மாதம் 9 ம் தேதி அன்னையர் தினமா கொண்டாடப்படணும்னு பிரகடனம் செஞ்சு அதுக்கான கையெழுத்தையும் போட்டார். ஞாயிற்றுக் கிழமைகள்ள இந்த தினத்தைக் கொண்டாடுறது சிறப்பா இருக்கும்னு  ஒவ்வொரு ஆண்டும் மே மாசம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமா கொண்டாடுறாங்க. அமெரிக்கா ல அதிகாரப் பூர்வமா உருவான இந்த தினம் இன்னைக்கு உலக மக்கள் பெரும்பாலானவர்களால கிட்டதட்ட 46 நாடுகள்ள கொண்டாடப்படுது. 

இந்த நாள்ள தங்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்யுற அன்னையர்களை சிறப்பான விதத்தில மகிழ்ச்சி படுத்துறத ஒரு முக்கியமான கடமையா பலரும் செய்யுறாங்க. 

ஒவ்வொரு நாட்டுலயும் எப்படி கொண்டாடுறாங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 

வங்க தேசத்துல அன்னையர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறாங்க. ரத்னகர்வா மா விருது இதுல குறிப்படத்தக்காது. 

கனடா ல பொது விடுமுறை தினமா அறிவிக்கப்பட்டு சிறப்பா கொண்டாடப்படுது.

சீனா ல கார்னேசன்  மலர்களை கொடுத்து அன்னையர்களை மகிழ்விக்கிறாங்க. சமீபத்துல சீனால மேங்க் ஸீயு தன் தாயோட நினைவா இந்த நாள் சிறப்பா கொண்டாடப்படணும்னு அன்னையர் திருவிழா ஊக்குவிப்புனு ஒரு அரசு சாரா அமைப்பை உருவாக்கி இந்த நாளை சிறப்பா கொண்டாட வைக்கிறார். 

கிரீஸ் ல அன்னை மரியாள் எருசலேம் தேவாலயத்துக்கு இயேசுவை கொண்டு வந்த நாளா நினைவு கூறி கொண்டாடுறாங்க. 

இந்தியால தேசிய அளவில ஆகஸ்ட் மாதம் 19 ம் தேதி கொண்டாடப்பட்டாலும் இந்த நாளையும் உலக அளவில அன்னையர் தினமா ஏற்றுக் கொண்டாடுறாங்க. 

இது மாதிரி ஈரான் ஜப்பான், மெக்சிகோ நேபாளம் தாய்லாந்து ரோமானியா, பிரிட்டன் அயர்லாந்து, வியட்னாம் நு எல்லா இடங்கள்ளயும் கொண்டாடி மகிழ்ச்சியடையுறாங்க.  

நம்ம எல்லோராட வாழ்க்கையிலயும் பெண் ரொம்ப முக்கியமான அம்சம். மகள் அக்கா தங்கை சித்தி அத்தை பெரியம்மா பாட்டி மனைவி மருமகள் மாமியார் நு எத்தனை உறவு முறையில வந்தாலும் அம்மா எப்பவுமே எல்லோருக்குமே ஸ்பெஷல் தாங்க. அந்த உறவை எந்த உறவாலயும் மிஞ்ச முடியாது. ஏன்னா அம்மா தான் உறவுக்கு எல்லாம் முதல் உறவு. அம்மா சொல்லி தான் அப்பாக்ங்கிற உறவே பிள்ளைங்களுக்கு தெரியுது. அதுக்கு அப்புறம் தான் மத்த உறவு எல்லாம். 

அன்னையர் தினம் கொண்டாடுற இந்த நாள்ல உலகத்துல இருக்குற எல்லா அன்னையர்களுக்கும் நம்மோட வாழ்த்துக்களை சொல்வோம். தியாகத்தை தன்னோட உடல் மூழுசும் ஓரவ விட்டு நமக்காக தன்னோட வாழ்க்கைய வாழ்ற எல்லா அம்மாக்களும் சந்தோசமா நிறைவா அமைதியா அன்பா வாழணும்னு அதுக்கு  அவங்கள நாம வாழ வைக்கணும். அன்பையும் தியாகத்தையும் அளவில்லாம கொடுக்கிற அத்தனை அன்னையர்களுக்கும் அகில உலக அன்னையர் தின வாழ்த்துக்கள், மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெசஹ்ல் மூலமா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.   

Wednesday, 4 May 2022

அன்பு ஆயனா? ஆடம்பர ஆயனா?

 பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு


I. திருத்தூதர் பணிகள் 13:14, 43-52

II. திருவெளிப்பாடு 7:9, 14-17

III. யோவான் 10:27-30


பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிற்றை நல்லாயன் ஞாயிறாக சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் ஆயனாம் ஆண்டவர் இயேசுவின் பெயரில் அன்போடு அழைக்கின்றேன். "ஆண்டவரே என் ஆயர்" இது குழந்தைகள் வரை பெரியவர் வரை அனைவரும் முணுமுணுக்கும் ஒரு நாம செபம். ஆண்டவர் இயேசுவை ஆயன் தோற்றத்தில் பார்த்து அவர் ஆடுமேய்த்தாரா என்று பிற மதத்தவர்கள் சிலர் என்னிடம் கேட்டது கூட உண்டு அப்போதெல்லாம், அவர் ஆடுகளை மேய்க்கவில்லை, மந்தைகளாகிய எங்களை மேய்க்க ஆயனாக மாறி இருக்கின்றார் என்று கூறுவதுண்டு. ஆடுகள் நம்மோடு மிக நெருங்கிய தொடர்புடையவை. வீடுகளில் கோவிலுக்கு நேர்ச்சை என்று ஆசைஆசையாக ஆடுகளை வீட்டில் ஒருவர் போல வளர்ப்பது நம் பழக்கம். அப்போது அந்த ஆடுகள் நம்மோடு ஏற்படுத்தும் உறவு, ஒரு விதமான உணர்வு. அதை வார்த்தையால் விவரிக்க முடியாது. எங்கு சென்றாலும் உடன் வருவது, அழைத்தவுடன் ஓடி வருவது,என நம்முடனான உறவை தன் செயல்கள் மூலம் காட்டும் ஒரு சிறப்பான விலங்கினம்.


ஆயன் - தன் மந்தையை எல்லா விதமான இக்காட்டிலிருந்தும் காக்கும் வலிமை உடையவர். தன்னுடன் வைத்திருக்கும் கோல் கொண்டும் கழி என்னும் ஆயுதம் கொண்டும் தாக்க வரும் விலங்குகளை எதிர்க்கும் துணிவு படைத்தவர். ஆடுகளின் பசி தாக உணர்வினைப் புரிந்து அதற்கேற்ற புல்தரைக்கு அழைத்து செல்பவர். ஆடுகளின் உடல் நலனில் அக்கறை கொண்டவர். இப்படியாக...... பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி ஆடுகளும் ஆயன்களும் மிகச்சிறப்பான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றனர். ஆபேல், மோயீசன், சவூல் தாவீது என பலர் ஆயன்களாக இருந்து ஆயர்களாக, மக்களை வழிநடத்துபவர்களாக மாறி இருக்கின்றனர். நம் இயேசு ஆயன்களுக்கெல்லாம் மேலான ஆயன். அவர் தமது மந்தையை எப்படி வழி நடத்துகிறார் என்பதை தனது போதனையாலும் செயலாலும் தன்னோடு வாழ்ந்த சீடர்களுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாம் அவர் மந்தையைச்சேர்ந்த ஆடுகள் . அவர் வழி நடக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு தான். ஒன்று அவர் குரலைக் கேட்டு நடப்பது. இரண்டு அவர் நம்மை அறிந்து வைத்திருப்பது போல நாமும் அவரை அறிந்து வைத்திருப்பது. இவை இரண்டிலும் வளர்ந்து ஆயனை மகிழ்விக்கும் ஆடுகளாக நாம் மாற இன்றைய வாசகங்கள் வழி இறைவன் நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.


அவர் குரலைக் கேட்கவும் அவரை அறிந்து கொள்ளவும் நாம் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆயனின் குரலைத் தெளிவாக கண்டு கொள்ள பிற சப்தங்களுக்கு நம் மனதில் இடம் கொடுக்காதிருப்போம். அவரை அறிந்து கொள்ள அவரோடு அதிக நேரம் செலுத்துவோம். நாம் பல நேரங்களில் போலியான ஆயன்களின் குரலுக்கு செவிமடுத்து ஏமாந்து போகிறோம். போலி ஆயன்களின் பொய்யான பரப்புரைகளை நம்பி இது தான் என் ஆயன் என்று எண்ணி தவறாக அறிந்துவிடுகிறோம். வீண் பகட்டு ஆடம்பரம் அமளி ஆர்ப்பாட்டம் இவற்றால் உண்மையான ஆயனின் உருவத்தை மறந்துவிடுகிறோம். பார்வையில் தெளிவும் கேட்டலில் கூர்மை உணர்வும் கொண்டு வாழும் போது மட்டுமே உண்மையான ஆயனை கண்டு கொள்ளமுடியும்.

ஒரு முறை பரந்த புல்வெளியில் ஆயன் ஒருவன் தன் ஆடுகளை மேய்த்து வந்தான். அவனது கையில் தடிமனான பெரிய கோல் ஒன்றும் அதனோடு முனையில் இணைக்கப்பட்ட கழி ஒன்றும் எப்போதும் இருக்கும். பல நாட்களாக தன் மந்தையை மேய்ச்சல் நிலத்துக்கு அழைத்துச்செல்வதும் மீண்டும் தன் பட்டிக்கு கூட்டி வருவதுமாக தன் காலத்தைக் கழித்தான். ஒரு நாள் மேய்ச்சல் நிலத்துக்கு தன்னால் போக முடியாமல் போகவே தன் மகனை ஆடுகளை பட்டிக்கு திரும்ப அழைத்துவர அனுப்பினான். ஆயனின் தோற்றம் போல் இல்லாது மகன் இருக்கவே ஆடுகள் தயக்கமுற்றன. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு முன்னேறின. மகனின் கையில் ஆயனின் கோல். உறுதியான தடிமனான மரத்தாலான் கோலைக் கண்டு, இது நிச்சயம் நம் ஆயனின் கோல் தான், அவர் விருப்பத்தின் படியே நாம் அவர் மகனுடன் செல்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்டன. சற்று நேரத்திற்கு அப்பால் இன்னொரு இளைஞன். தோற்றம் இளவரசனைப் போல் இருந்தது. கையில் தங்கத்தாலான ஒரு பெரிய செங்கோல். அதனூடே வைரங்களும் பவளங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவன் ஆடுகளைப் பார்த்து , எத்தனை நாள் தான் இப்படி அங்கும் இங்கும் ஓடி களைப்பீர்கள் என்னோடு வாருங்கள் புல்வெலியை உங்களைத்தேடி வரச்செய்கின்றேன். நீர் நிலைகளை நீங்கள் இருக்கும் இடத்திலேயே அமைக்கின்றேன். வெயிலிலும் குளிரிலும் நீங்கள் உணவுக்காக அலைய வேண்டாம் எல்லாம் உங்களைத் தேடி வரும். நீங்கள் இருக்கும் இடத்தை பஞ்சு மெத்தைகளால் நிரப்புவேன். என்று பலவாறு அடுக்கிக்கொண்டே போனான். சஞ்சலமுற்ற ஆடுகள் சில, அந்த இளவரசன் சொன்ன பேச்சைக் கேட்டு அவர் பின்னே செல்ல முயன்றன. தங்களோடு பிற ஆடுகளையும் வருமாறு அழைத்தன. இறுதியில் பாதிக்கு பாதியாக பிரிந்து, சில இளவரசனைப் பின்பற்றின. சில ஆயனின் மகனைப் பின்பற்றின.


ஆயனின் இல்லம் திரும்பிய ஆடுகள் ஆயனால் கட்டி அணைக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்டன. வீடு திரும்பாத ஆடுகளுக்காக ஆயன் கண்ணீர் விட்டான், அவற்றை நினைத்து வருந்தினான். எஞ்சிய ஆடுகளை பத்திரமாக அதற்கான கொட்டிலில் அடைத்து இரவு பகலாக காவல் செய்தான். இளவரசனோடு சென்ற ஆடுகளோ, கொடிய இருட்டறையில் அடைக்கப்பட்டன. காய்ந்த புற்களும் சிறிதளவு தண்ணீரும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டண. இறுதியில் அவை அந்த இளவரசனுக்கு பொழுதுபோக்கு காண்பிக்கும் விலங்கினங்களாக மாற்றப்பட்டன. மரத்தாலான ஆயனின் கோலினை அவைகள் அப்போது நினைத்துப் பார்த்தன. தங்கத்தாலான இளவரசனின் செங்கோலினை விட, கரடுமுரடான ஆயனின் கோல் எவ்வளவோ மேல் என்று. தங்கள் ஆயன் மீண்டும் வருவார் தங்களை மீட்க என்று எண்ணி காத்திருக்க தொடங்கின.


நாமும் பல நேரங்களில் இப்படி தான் இழந்தவுடன் தான் அதன் அருமை புரிந்துகொள்கின்றோம். பணமும் பகட்டும் ஆடம்பரமும் கொண்ட ஆயன்களையே பெரும்பாலும் நாம் தேடுகிறோம். விளைவு பகட்டு பகலிலேயே முடிவடைந்து விடுகிறது. நமது ஆயன் நம் அருகிலேயே இருக்கின்றார். ஆடம்பரத்தை விட்டு விட்டு அன்பை தேடுவோம் ... அன்பான ஆயனின் குரலில் தெளிவு இருக்கும் குழப்பம் இருக்காது. கோல் கரடுமுரடானதாக வடிவமில்லாததாக இருக்கும். தங்கமும் வைரமும் நிறைந்ததாய் இருக்காது. எனவே அன்பு உள்ளங்களே நம் அன்பு நிறைந்த நம் ஆயனைத் தேடுவோம் ஆடம்பரமான ஆயனை அல்ல. அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு எக்குறையுமிராது. நாம் இருக்கும் இடம் பசும்புல்வெளியாக மாறும். நீரோடை ஊற்றாக பொங்கி எழும். நாம் நம் ஆயனை அறிந்தவர்களாவோம். அவர் நம்மை அறிந்தவராவார். இப்படிப்பட்ட நிலையை நாம் அடைய ஆண்டவராம் ஆயனின் ஆசீரை வேண்டுவோம்.இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

Monday, 2 May 2022

உலக பத்திரிக்கை சுதந்திர தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வணக்கம் அன்பு உள்ளங்களே மே 3 உலக பத்திரிக்கை சுதந்திர தினம். பத்திரிக்கை ங்கிறது சஞ்சிகை செய்தித்தாள் மாத வார இதழ்,நு பல வடிவங்கள்ல அச்சிடப்பட்டு  செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புக்களையும் மக்கள் அறிய, பகிர பரப்ப வெளி வருகிற ஒரு படைப்பு. இந்த உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படுறதுக்கான காரணம் வரலாறு என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 

1993 ல ஐக்கிய நாடுகளோட பொதுசபைக் கூட்டத்தில ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி மே 3 ம நாள் ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படணும் நு முடிவு செஞ்சாங்க. பத்திரிக்கை சுதந்திரத்தை உலக மக்கள் கிட்ட பரப்பணும்கிறதுக்காகவும், மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 ல சொல்லப்பட்டுருக்கிற மாதிரி பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளோட அரசுகளுக்கு நினைவுபடுத்துறதுக்காகவும் ஐக்கிய நாடுகள் அவையினால இந்த நாள் சிறப்பு நாளாக் கொண்டாடப்பட்டது. 

இந்த நாள்ள ஊடக சுதந்திரத்துக்கு  பங்களிப்பைக் கொடுக்கிற ஒருத்தருக்கு யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ கிலெர்மோ கானோ உலக பத்திரிக்கை விருது கொடுத்து கௌரவப்படுத்துறாங்க. கிலெர்மோ கானோ கிறவரு கொலம்பிய எல் எசுப்பட்டாடோர் கிற பத்திரிக்கை நிறுவனத்தோட பத்திரிக்கையாளர் இவர் 1986  டிசம்பர் 17 அன்னைக்கு பத்திரிக்கை அலுவலகம் முன்னாடியே  போதைப் பொருளுக்கு எதிரா குரல் கொடுத்ததுக்காக படுகொலை செய்யப்பட்டாரு. இதனால பத்திரிக்க சுதந்திரம் பத்திய பேச்சு உலக நாடுகள் எல்லாம் பரவ ஆரம்பிச்சது. இவரோட மரணத்தை நினைவு கூர்ற விதமாவும் பத்திரிக்கை சுதந்திரம் இன்னும் அதிகரிக்கணும் நும் இவரோட பெயரால் வருசா வருசம் இந்த விருது கொடுக்கப்படுது. அதுமட்டுமில்லாம உலக அமைதி, பேச்சு சுதந்திரம், பத்திரிக்கை தர்மம் நு பல விதங்கள்ள உழைக்கிற ஒரு பத்திரிக்கை எழுத்தாளர உலக அளவுல தேர்வு செஞ்சு 25000 டாலர் மதிப்புள்ள பரிசும் வழங்கப்படுது. 14 நபர்களைக் கொண்ட குழு இந்த நபர் யாருங்கிறத தீர்மானித்து 1997 ல இருந்து இந்த விருது கொடுக்கப்பட்டு வருது. 

இந்தியால பத்திரிக்கை சுதந்திரம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்துல ரொம்பவே கம்மியா தான் இருந்தது. ஆளுனர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குற மாதிரி பல விதிகளை அமல் படுத்தினார். முதல் இந்திய பத்திரிக்கையான வங்காள கெஜட் கிற பத்திரிக்கையை கண்டித்து  அதோட ஆசிரியரையும் கைது செஞ்சு சிறையில  1781 ல அடைச்சார். அதுக்கு அப்புறமா 1799 ல பத்திரிக்கைகளுக்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுச்சு. பத்திரிக்கை ஆசிரியர் உரிமையாளர், முகவரி எல்லாத்தையும் கட்டாயம் அரசுக்கு தெரிவிக்கணும், பத்திரிக்கை ல அதோட ஆசிரியர் பேரு கட்டாயம் போடணும். ஞாயிற்றுக்  கிழமையில பத்திரிக்கை வெளியிடக் கூடாது. இந்த கட்டுப்படுகளை விதிகளை மீறுறவங்கள நாடுகடத்தப்படுவாங்கன்னு பல சட்டங்களைக்  கொண்டு வந்தாங்க. காலணி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததுக்கு அப்புறமா இந்தியால பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட ஆரம்பிச்சது. இன்னும் உலக அளவில பல இடங்கள்ல பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக் குறியாதான் இருக்கு. 

நாட்டுபற்றோட இதழியல் ஆசிரியர்களா திகழ்ந்த பல இந்தியர்கள் இந்த பத்திரிக்கை சுதந்திரத்துக்காக போராடி இருக்காங்க. இராஜாராம் மோகன் ராய், அரவிந்த கோஷ், லாலா லஜபதிராய், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், விபின் சந்திரபால், மகாத்மா காந்தி, தேசியக் கவி ஞர் சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, திருவிக. போன்ற பலர் இவங்கள்ல முக்கியமானவங்க. இவங்களோட முயற்சியினாலும் தொடர் போராட்டத்தினாலயும் தான் இன்னைக்கு நம்மாள எளிமையா நாட்டு நடப்புக்களை தெரிஞ்சிக்கவும், சுதந்திரமா நம்முடைய கருத்துக்களை எடுத்து சொல்லவும் முடியுது. 1947 ல 1000 செய்திதாள்கள் இருந்தது, 1957ல 6903 ஆகவும், 1974 12185 ஆகுவும் உயர்ந்து தொடர்ந்து வளரத்தொடங்கிச்சு. 1975 ல ஏற்பட்ட 19 மாத நெருக்கடி காலத்துல பத்திரிக்கை சுதந்திரம் மறுபடியும் பாதிக்கப்பட்டுச்சு. 1977 ல நடந்த பொதுதேர்தலுக்கு அப்புறமா மீண்டும் பழைய நிலைக்கு முன்னேற தொடங்கிச்சு.  

தமிழ்னாட்டுல வெளிவந்த முதல் பத்திரிக்கை தமிழ்னாடு நாளிதழ். ஆரம்பத்தில வார இதழாக இருந்து அதுக்கு அப்புறமா நாளிதழாக மாற்றம் பெற்றது. இதோட நிறுவனர், .ஆசிரியரா இருந்தவரு டாக்டர் வரதராசுலு. சேரன்மகாதேவி  குருகுலத்துல சம்பந்தி கல்வி முறை வேணும்னு போராடினதால பலரோட வெறுப்பை சம்பாதிச்சார் அதனால தமிழ்நாடு நாளிதழோட வளர்ச்சி பாதிக்கபட்டுச்சு, அதுக்கு அப்புறமா வளர்ந்து வந்தது தான் தினமணி நாளிதழ். இன்னைக்கு  இது போல எண்ண முடியாத அளவுக்கு ஏராளமான நாளிதழ்களும் பத்திரிக்கைகளும் வந்து நம்மோட அறிவுக்கு தீனி போட்டுட்டு இருக்கு. செய்தியின் முக்கியத்துவம், மக்களுக்கும் அரசுக்கும் சொல்ல வேண்டிய முக்கிய கருத்துக்கள், சமூக மக்களின் விழிப்புணர்வு இதை தெளிவா எடுத்துக்கூறுரது தான் ஒரு நல்ல பத்திரிக்கையோட கடமை.  உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை கொண்டாடுற இன்னைக்கு பத்திரிக்கை துறையில வேலை செய்யுற எல்லாருக்கும் நம்மோட வாழ்த்துக்களை தெரிவிப்போம். நம்முடைய நலனுக்காகவும் அறியாமையை நீக்கவும் கடினமா வேலை செய்யுற எல்லா பத்திரிக்கை நணபர்களுக்கும் இனிய பத்திரிக்கை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மூலமா உங்களை மீண்டும் சந்திக்கிறென் நன்றி வணக்கம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...