நம்பிக்கையின் திருப்பயணிகள் வரிசையில் இன்று நாம் காண இருக்கும் புனிதர் புனித அன்னா மரிய ருபாத்தோ. புனித அன்னா மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ 1844 ஆம் ஆண்டு யோவான் ருபாத்தோ மற்றும் கத்தரினா பவேஸியா என்னும் தம்பதியினருக்கு எட்டாவது மகளாக பிறந்தவர். பிறந்த நான்கு வயதிலேயே தன் தந்தையை இழந்து பெரிதும் துன்புற்றார். இவருடைய பதின்பருவ வயதில் மணமுடிக்க ஒருவர் ஆர்வமாய் இருந்தாலும் துறவு வாழ்வில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை எடுத்துரைத்து அதனை மறுத்தார். தன்னுடைய 19 வது வயதில் தன் தாயையும் இழந்து தவித்த இவர் தூரின் என்ற இடத்திற்கு சென்று மரினா ஸ்கோபோன் என்னும் செல்வந்த பெண்மணியின் நட்பைப் பெற்றார்.
ரூபாத்தோ தன்னுடைய நண்பரான மரினா ஸ்கோபோனின் குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தும், நோயாளிகள் மற்றும் ஏழைகளை சந்திப்பதில் தன்னுடைய நேரத்தை செலவிட்டார். 1882 ல் ஸ்கோபோனோவோம் இறந்து போகிறார். ஒரு நாள் காலை திருப்பலி முடிந்து திரும்பும் வேளையில் லோயோனா என்னும் ஆலயக் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் மேல் கல்லானது விழுந்து விட மிகவும் பாதிக்கப்படுகிறார். அவரை சகோதரி ருபாத்தோ மிகுந்த அக்கறையுடன் கவனித்து பணிவிடை செய்தார். இதனை கண்ட அருகில் இருந்த கன்னியர் மட சகோதரிகள் இவரின் பிறர் நல சேவையை பாராட்டி துறவற வாழ்வு வாழ அழைப்பு விடுத்தனர். உமது இத்தகைய பணி ஆண்டவருக்கு உரியது அதனை ஆண்டவருக்கு கொடுப்பதே முறை என்று எடுத்துரைத்தனர். எனவே கன்னியர்களின் வழிகாட்டுதலின் படி 1885 ஆம் ஆண்டு மரிய பிரான்சிஸ்கா என்னும் பெயருடன் துறவியாக மாறினார். அவரது துறவற ஆர்வத்தினாலும் பிறர் நலப் பணியினாலும் பல்வேறு நற்செயல்களை ஆற்றி, பிலிப்பி அலேக்ரா என்னும் ஆயரின் ஆணையினிமித்தம் அவர் இருந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்களே பின்னாளில் மதர் ருபாத்தோ கப்புச்சின் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர்.
1892 ஆம் ஆண்டு மோந்தே வீடியோ என்னும் இடத்திற்கு மறைப்பணி ஆற்ற சென்றார். அதன்பின் அர்ஜெண்டினாவிலும் தன்னுடைய மறைபரப்புப்பணியை சிறப்பாக ஆற்றினார். 1904 ஆண்டு புற்று நோயால் பீடிக்கப்பட்டு தன்னுடைய 59 ஆம்வயதில் மோந்தே வீடியோ வில் காலமானார். அவரது விருப்பப்படி அந்த மோந்தே விடியோ விலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருத்தந்தை புனித ஆறாம் பவுல் இவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் அருளாளர் என்னும் நிலைக்கு உயர்த்தினார். 1941 முதல் 1970 வரை இவரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் அனைத்தும் குறிப்பாக ஜெனோவாவில் இவரது பரிந்துரையால் நடந்த புதுமை 1951 ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவித்தார்.
எனவே எல்லா விதத்திலும் இவர் புனிதையாக உயர்த்தப்பட தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் இப்புனிதையை திருப்பீட வணக்கத்திற்கு தகுதி உடையவரென அறிவித்தார். 2013 ஆம் ஆண்டு மேலும் ஒரு புதுமை தெளிவுபடுத்திய பின்பு 2022 ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.
இவரது அருளிக்கம் கொண்ட பேராலயம் புனித பிரான்சிஸ்கா ருபாத்தோ என்று அழைக்கப்படுகிறது. இவரது திருநாள் ஆகஸ்ட் மாதம் 6 தேதி கொண்டாடப்படுகிறது. கப்புச்சியன் சபை மதர் ருபாத்தோ சபை சகோதரிகளின் பாதுகாவலராக இவர் திகழ்கின்றார். புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ போல நாமும் பிறர்நலப்பணியிலும் அழைத்தலில் ஆர்வமும் மறைபரப்புப்பணியில் மகிழ்வும் கொண்டு வாழ முயல்வோம். வாழ்வில் எற்படும் எல்லா சிக்கலான் சூழல்களிலும் இறைத்திருவுளம் சிறப்பாக செயல்படும் என்பதை தன் வாழ்வின் நிகழ்வில் கண்டு கொண்ட புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோ நமக்கு இறைவனிடம் பரிந்து பேசி வழிகாட்டுவாராக. புனித மரிய பிரான்சிஸ்கா ருபாத்தோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.