இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வணக்கம் அன்பு உள்ளங்களே மே 3 உலக பத்திரிக்கை சுதந்திர தினம். பத்திரிக்கை ங்கிறது சஞ்சிகை செய்தித்தாள் மாத வார இதழ்,நு பல வடிவங்கள்ல அச்சிடப்பட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புக்களையும் மக்கள் அறிய, பகிர பரப்ப வெளி வருகிற ஒரு படைப்பு. இந்த உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படுறதுக்கான காரணம் வரலாறு என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
1993 ல ஐக்கிய நாடுகளோட பொதுசபைக் கூட்டத்தில ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி மே 3 ம நாள் ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படணும் நு முடிவு செஞ்சாங்க. பத்திரிக்கை சுதந்திரத்தை உலக மக்கள் கிட்ட பரப்பணும்கிறதுக்காகவும், மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 ல சொல்லப்பட்டுருக்கிற மாதிரி பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளோட அரசுகளுக்கு நினைவுபடுத்துறதுக்காகவும் ஐக்கிய நாடுகள் அவையினால இந்த நாள் சிறப்பு நாளாக் கொண்டாடப்பட்டது.
இந்த நாள்ள ஊடக சுதந்திரத்துக்கு பங்களிப்பைக் கொடுக்கிற ஒருத்தருக்கு யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ கிலெர்மோ கானோ உலக பத்திரிக்கை விருது கொடுத்து கௌரவப்படுத்துறாங்க. கிலெர்மோ கானோ கிறவரு கொலம்பிய எல் எசுப்பட்டாடோர் கிற பத்திரிக்கை நிறுவனத்தோட பத்திரிக்கையாளர் இவர் 1986 டிசம்பர் 17 அன்னைக்கு பத்திரிக்கை அலுவலகம் முன்னாடியே போதைப் பொருளுக்கு எதிரா குரல் கொடுத்ததுக்காக படுகொலை செய்யப்பட்டாரு. இதனால பத்திரிக்க சுதந்திரம் பத்திய பேச்சு உலக நாடுகள் எல்லாம் பரவ ஆரம்பிச்சது. இவரோட மரணத்தை நினைவு கூர்ற விதமாவும் பத்திரிக்கை சுதந்திரம் இன்னும் அதிகரிக்கணும் நும் இவரோட பெயரால் வருசா வருசம் இந்த விருது கொடுக்கப்படுது. அதுமட்டுமில்லாம உலக அமைதி, பேச்சு சுதந்திரம், பத்திரிக்கை தர்மம் நு பல விதங்கள்ள உழைக்கிற ஒரு பத்திரிக்கை எழுத்தாளர உலக அளவுல தேர்வு செஞ்சு 25000 டாலர் மதிப்புள்ள பரிசும் வழங்கப்படுது. 14 நபர்களைக் கொண்ட குழு இந்த நபர் யாருங்கிறத தீர்மானித்து 1997 ல இருந்து இந்த விருது கொடுக்கப்பட்டு வருது.
இந்தியால பத்திரிக்கை சுதந்திரம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்துல ரொம்பவே கம்மியா தான் இருந்தது. ஆளுனர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குற மாதிரி பல விதிகளை அமல் படுத்தினார். முதல் இந்திய பத்திரிக்கையான வங்காள கெஜட் கிற பத்திரிக்கையை கண்டித்து அதோட ஆசிரியரையும் கைது செஞ்சு சிறையில 1781 ல அடைச்சார். அதுக்கு அப்புறமா 1799 ல பத்திரிக்கைகளுக்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுச்சு. பத்திரிக்கை ஆசிரியர் உரிமையாளர், முகவரி எல்லாத்தையும் கட்டாயம் அரசுக்கு தெரிவிக்கணும், பத்திரிக்கை ல அதோட ஆசிரியர் பேரு கட்டாயம் போடணும். ஞாயிற்றுக் கிழமையில பத்திரிக்கை வெளியிடக் கூடாது. இந்த கட்டுப்படுகளை விதிகளை மீறுறவங்கள நாடுகடத்தப்படுவாங்கன்னு பல சட்டங்களைக் கொண்டு வந்தாங்க. காலணி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததுக்கு அப்புறமா இந்தியால பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட ஆரம்பிச்சது. இன்னும் உலக அளவில பல இடங்கள்ல பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக் குறியாதான் இருக்கு.
நாட்டுபற்றோட இதழியல் ஆசிரியர்களா திகழ்ந்த பல இந்தியர்கள் இந்த பத்திரிக்கை சுதந்திரத்துக்காக போராடி இருக்காங்க. இராஜாராம் மோகன் ராய், அரவிந்த கோஷ், லாலா லஜபதிராய், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், விபின் சந்திரபால், மகாத்மா காந்தி, தேசியக் கவி ஞர் சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, திருவிக. போன்ற பலர் இவங்கள்ல முக்கியமானவங்க. இவங்களோட முயற்சியினாலும் தொடர் போராட்டத்தினாலயும் தான் இன்னைக்கு நம்மாள எளிமையா நாட்டு நடப்புக்களை தெரிஞ்சிக்கவும், சுதந்திரமா நம்முடைய கருத்துக்களை எடுத்து சொல்லவும் முடியுது. 1947 ல 1000 செய்திதாள்கள் இருந்தது, 1957ல 6903 ஆகவும், 1974 12185 ஆகுவும் உயர்ந்து தொடர்ந்து வளரத்தொடங்கிச்சு. 1975 ல ஏற்பட்ட 19 மாத நெருக்கடி காலத்துல பத்திரிக்கை சுதந்திரம் மறுபடியும் பாதிக்கப்பட்டுச்சு. 1977 ல நடந்த பொதுதேர்தலுக்கு அப்புறமா மீண்டும் பழைய நிலைக்கு முன்னேற தொடங்கிச்சு.
தமிழ்னாட்டுல வெளிவந்த முதல் பத்திரிக்கை தமிழ்னாடு நாளிதழ். ஆரம்பத்தில வார இதழாக இருந்து அதுக்கு அப்புறமா நாளிதழாக மாற்றம் பெற்றது. இதோட நிறுவனர், .ஆசிரியரா இருந்தவரு டாக்டர் வரதராசுலு. சேரன்மகாதேவி குருகுலத்துல சம்பந்தி கல்வி முறை வேணும்னு போராடினதால பலரோட வெறுப்பை சம்பாதிச்சார் அதனால தமிழ்நாடு நாளிதழோட வளர்ச்சி பாதிக்கபட்டுச்சு, அதுக்கு அப்புறமா வளர்ந்து வந்தது தான் தினமணி நாளிதழ். இன்னைக்கு இது போல எண்ண முடியாத அளவுக்கு ஏராளமான நாளிதழ்களும் பத்திரிக்கைகளும் வந்து நம்மோட அறிவுக்கு தீனி போட்டுட்டு இருக்கு. செய்தியின் முக்கியத்துவம், மக்களுக்கும் அரசுக்கும் சொல்ல வேண்டிய முக்கிய கருத்துக்கள், சமூக மக்களின் விழிப்புணர்வு இதை தெளிவா எடுத்துக்கூறுரது தான் ஒரு நல்ல பத்திரிக்கையோட கடமை. உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை கொண்டாடுற இன்னைக்கு பத்திரிக்கை துறையில வேலை செய்யுற எல்லாருக்கும் நம்மோட வாழ்த்துக்களை தெரிவிப்போம். நம்முடைய நலனுக்காகவும் அறியாமையை நீக்கவும் கடினமா வேலை செய்யுற எல்லா பத்திரிக்கை நணபர்களுக்கும் இனிய பத்திரிக்கை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மூலமா உங்களை மீண்டும் சந்திக்கிறென் நன்றி வணக்கம்.