நம்பிக்கையின் திருப்பயணிகள் வரிசையில் இன்று நாம் காண இருக்கும் புனிதர் . புனித கரோலினா சாந்தோகனாலே. 1852 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாள் இத்தாலியிலுள்ள பலேர்மோவில் செல்சே ராயல் குடும்பத்தில் பிறந்தார். பிறந்த அடுத்த நாளே அதாவது அக்டோபர் 3 ம் தேதி ஞானஸ்நானம் பெறும் பேறு பெற்றார். தன்னுடைய 8 வது வயதில் திவ்விய இயேசுவை உணவாக உட்கொண்டார். தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் உடல் நலம் சரி இல்லாத மரணப்படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாத்தாவை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவருடன் இருந்து அவருக்கு தேவையான பணிவிடைகள் செய்து அவர் நித்திய இளைப்பாற்றி அடைய வழிவகுத்தார். அவரது இறப்புக்கு பின் மவுரோ வெனுதி என்பவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். இவரே பின்னாளில் நம் புனிதையின் ஆன்மீக வழிகாட்டுநராக மாறியவர். இளம் வயதில் இவருக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போதிலும் துறவறத்தின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டு உறுதியான தேவ அழைத்தலைப் பெற்றுக்கொண்டார். அடைபட்ட மடத்தில் இருந்து கொண்டு காட்சி தியானம் செய்தல் வெளியே சென்று நோய்வாய்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் என்னும் இரண்டு பணிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய 21ம் வயதில் பலேர்மோவில் உள்ள புனித அந்தோனியார் பங்கைச்சேர்ந்த டாட்டர்ஸ் ஆப் மேரி என்னும் சபை சகோதரிகளுக்கு தலைவரானார்.
சாந்தோகனாலே இக்கால கட்டத்தில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு 16 மாதம் துன்புற்று 1887 ல் இத்துன்பத்தில் இருந்து சிறிதளவு விடுதலை பெற்றார். இத்துன்பத்தின் மத்தியிலும் சகோதரிகளின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார். காட்சி தியானம் மற்றும் செயல்பாட்டு துறவு வாழ்வு இரண்டையும் ஒன்றிணைக்க நினைத்து பிரான்சிஸ்கன் மூன்றாம் துறவற குழுமத்தை உருவாக்கினார். இதற்கான முறையான அனுமதி திருத்தந்தை பதின்மூன்றாம் சிங்கராயர் அவர்களால் 1887 ல் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஜீன் மாதன் 13 ம் தேதி பிரான்சிஸ்கன் மூன்றாம் துறவற நிலையில் தன்னை இணைத்து வார்த்தைப்பாடு ஏற்று, துறவற ஆடையை பெற்றுக் கொண்டார். இயேசுவின் மரியாள் என்னும் பொருள் அமையும் வகையில் தன்னுடைய பெயரை மரியா தி ஜெசு என மாற்றிக் கொண்டார்.
பலேர்மோவில் ஒவ்வொரு வீடாக கதவாக சென்று ஏழை எளிய மக்களுக்கு நோயாளிகளுக்கு தன்னாலான உதவிகளை செய்தார். இதன் மூலம் தன்னுடைய அழைத்தலின் நோக்கத்தை பூர்த்தி செய்தார். மேலும் அவரால் தனியாக அத்தனை பேருக்கும் உதவி செய்ய இயலாத நிலையில் தன்னுடைய சபையை சேர்ந்த சகோதரிகள் சிலரை இப்பணி செய்ய ஊக்குவித்தார். அவர்களுக்கு புனித லூர்தன்னையின் அமலோற்பவ சகோதரிகள் எனபெயரிட்டார். இச்சபையானது 1923 ஜனவரி 24 ம் தேதி பலேர்மோ ஆயர் அலெசாந்த்ரோ லுஆல்டி அவர்கள் அனுமதியின் படி மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் முறையான சபையாக இயங்க அனுமதி பெற்றது.
சபைக்கான ஒப்புதல் பெற்ற ஒரு வாரத்திலேயே சகோதரி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். ஜனவரி 29ம் தேதி இவரது இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இவரது உடலின் எஞ்சிய பாகங்கள் சேகரிக்கப்பட்டு சபையின் சிற்றாலயத்தில் பாதுகாக்கப்பட்டது. திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் 1947ஆம் ஆண்டு இச்சபை பாப்பாண்டவரின் கீழ் இயங்கும் சபையாக செயல்பட அனுமதிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் அருள் சின்னப்பர் இதனை வழிமொழிந்து ஆணை பிறப்பித்தார்.
சகோதரி அவர்களுக்கான அருளாளர் பட்டம் செயல்பாடுகள் 1982 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கடவுளின் ஊழியர் என்னும் அடை மொழியுடன் துவங்கப்பட்டது. புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட தகுதியுடைமையைத் தேடும் படலம் ஆரம்பமாகி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. சகோதரி அவர்களின் வாழ்க்கை பணி, இறைவாழ்வு, மறை உறவு அனைத்தும் உரோமை திருஅவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால், புனித நிலைக்கு உயர்த்தப்பட இவர் தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2022 ஆம் ஆண்டு மே 15 ம் தேதி, இவரால் இவரது செப உதவியினால் நடந்த அற்புதங்கள் புதுமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
இவரது திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27 ம்தேதி கொண்டாடப்படுகிறது. கப்புச்சின் சபை புனித லூர்து அன்னை அமலோற்பவ சகோதரிகளின் பாதுகாவலாரக இவர் திகழ்கின்றார். புனித கரோலினா சந்தோகனாலே போல நாமும் நாமும் அழைக்கப்பட்டதன் மேன்மையை உணர்ந்து வாழ முயற்சிப்போம் . ஏழை எளிய மக்கள் நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன் வருவோம். இறை உறவிலும் பணி உறவிலும் நிலைத்து வாழ புனித கரோலினா சாந்தோகனாலே நமக்கு அருள் புரிவாரக . புனித கரோலினா சாந்தோகனாலேவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.