Sunday, 27 April 2014

மௌனம்

மௌனத்தின் ஆற்றல் அளவிடற்கரியது.
மௌனம் சில நேரம் வெல்லும், சில நேரம் கொல்லும்.
மௌனம் காக்க வேண்டிய நேரத்தில் மௌனம் காப்பதும், பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும் நலம். இதனைச் செய்யாமல் இருப்பதால் தான்  சில பிரச்சனைகளே ஏற்படுகின்றன.!!!! இவ்வுலகிலுள்ள அனைத்துமே மௌனத்தின் மூலமாகத்தான் உருவாகின்றன.  பூக்கள் மலர்வது முதல் , மனிதன் உருவாவது வரை அனைத்துமே மௌனத்தில் தான். மௌனத்தின் மூலமாக பல ஆற்றல்களை நாம் பெறுகின்றோம். சொல்லப் போனால் ஆற்றல்களின் பெட்டகமே நாம் தாம் என்றெல்லாம் படித்தேன். சரி நாமும் மௌனத்தினைக் கடைபிடித்தாலென்ன என்று தோன்றியது. இன்று காலை முதல் மாலை வரை அமைதியாய் இருப்போம். எந்தவிதமான தொலைத்தொடர்புச் சாதனங்களையும் இன்று பயன்படுத்தக் கூடாது. முடிவெடுத்தேன். காலை முதல் மாலை வரை பேசவே இல்லை.    வெற்றி!!!!! வெற்றி!!!!!  என்னாலும் அமைதியாக இருக்க முடிகிறதே என்ற ஆச்சரியம் என்றெல்லாம் சொல்ல ஆசை தான் ஆனால் முடியவில்லை. நான் அமைதியாக இருந்தால் ஏன் சோகமாக இருக்கிறாய்? ஏன் கோபமாக இருக்கிறாய் என்று கேட்கிறார்கள். எதற்கு இந்த வீண் வம்பு. அமைதியாக இருப்பது எவ்வளவு கடினம் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் அதிலும் ஒருசுவை உள்ளது என்று  உணர்ந்து கொண்டேன். இந்த அமைதி கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவருமே வெற்றியாளர் தான். பேசிக் கொண்டே இருப்பதாலும் , பேசாமலே இருப்பதாலும் தானே பிரச்சனை.  அதிகமாகக் கேள்; குறைவாகப் பேசு; என்பார்கள். நம்மில் சிலர் இதனை மாற்றிச் செய்வதனால் தான் வாழ்வில் ஏராளமான குளருபடிகள். அதுசரி  மௌனம்!! மௌனம்!! அமைதி!! அமைதி!! என்றே 300 வார்த்தைகள்  நானே பேசிவிட்டேன்.
 மௌன மொழியைக் கற்று மகிழ்ச்சியாய் வாழ்வோம்; அப்போது, நம் உதடுகள் மட்டுமன்றி  
உள்ளமும் புன்னகை செய்யும்; 


ஆமா அடுத்து எப்ப பேசுவீங்க???????
!!!!!!!!!!!!!!!!!!!!

Sunday, 13 April 2014

         உள்ளம் எனும் வாளி

 
                 சுப்பிரமணிய பாரதி ஒரு முறை வீட்டின் மேல் மாடியில்  உலாவிக் கொண்டிருந்தார். கீழே தெருவில் குள்ளச் சித்தர் கையில் கோணிப்பையுடன் வந்து கொண்டிருந்தார். திடிரென கீழேக் கிடந்த குப்பைக்கூளங்களால் தனதுப் பையை நிரப்ப ஆரம்பித்தார். இதனைக் கண்ட பாரதி மனம் பதறியவராய், விரைந்து கீழே இறங்கினார். சித்தரை நோக்கிச் சென்றவர், ''என்ன காரியம் செய்கிறீர்கள்? குப்பைகளால் கோணியை ஏன் நிரப்புகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்றார். பாரதியை மேலும் கீழும் பார்த்துவிட்டு சித்தர், ''நான் நினைத்தால் இப்போதே இந்தக் குப்பைகளைக் கீழேக் கொட்டி என் கோணியைத் தூய்மைப் படுத்த முடியும். உன்னால் உன் மனதிலுள்ள குப்பைகளைத் தூர எறிந்து உன் மனதைத் தூய்மைப் படுத்த முடியுமா?'' என்றாராம்.

     உள்ளங்கை அளவு இருப்பதாலா? இல்லை உள்ளுக்குள் இருப்பதாலா? எதனால் இதனை உள்ளம் என்கிறோம்?  

சிட்டுக்குருவித் தலையில் பனங்காயைப் போல பல நேரம்
 சிறு இதயத்தில் சில ஆயிரம் கவலைகளைச் சுமக்கிறோம்.

நாம் வாழுகின்ற நிகழ் காலம் ஒன்றே நமது கையில் உள்ளது. அதனை ஏன் நாம் வருத்தங்களாலும் , சுமைகளாலும் நிரப்ப வேண்டும்.? நல்லவைகளால் நம் உள்ளத்தை நிரப்பலாமே.!! 

சிகப்பு நிறத் தண்ணீர் நிறைந்த வாளிகள் இருவரிடம் கொடுக்கப் பட்டன. ஒருவர் கைகளால் தண்ணீரை வெளியேற்றி நல்ல தண்ணீரால் வாளியை நிரப்பினார். கை முழுவதும் சிகப்பு நிறம். மற்றொருவர் தண்ணீர்க் குழாய் அருகில் வாளியை வைத்து நீரால் நிரப்பினார். சில மணி நேரத்தில் சிகப்பு நிறம் தானாக மறைந்து வாளி முழுவதும் நல்ல நீரால் நிரம்பியது. ( சிகப்புத் தண்ணீர் தரையில் கொட்டி, தரை கறையாகுமே என்று கவலைப் பட வேண்டாம். குழாய் வழியே உருண்டோடி அதள பாதாளச் சாக்கடையைச் சென்றடைந்து விட்டது. கவலை வேண்டாம்.)  
    
 நான் சொல்ல விரும்புவது இது தான் கவலையை வெளியேற்ற வழி தேடாதீர்கள். நன்மைகளால் , மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய நற்காரியங்களால் மனதை நிரப்புங்கள். அப்புறம் பாருங்கள் 

என்றும்  இனிமை, எதிலும் புதுமை, 
மகிழ்வென்னும் கடலில் நம் உள்ளம் எனும் வாளியை போட்டு விட்டால் அதை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. வாழ்வது ஒருமுறை அதை சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோமே!!!!!!!!
   
ஆமா உங்க வாளி (உள்ளம்) முதல்ல உங்கக்கிட்ட இருக்கா? 

Saturday, 12 April 2014

                                    உங்க வயசு எத்தனை?
      
     நம்பவே முடியலை. உங்களுக்கு இத்தனை வயசா?
(ரொம்ப கம்மியா சொல்றீங்க? என்ன அதிகமா சொல்றீங்க? என்று இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம்.)
எனக்கும் என் நண்பருக்கும் இன்று ஓர் விவாதம் நடைபெற்றது.  அவர் என்னை விட ஓர் வயது மூத்தவர். ஆனால் யாரும் நம்ப மாட்டார். ஏனெனில் நம் உடல் வாகு அப்படி. சரி விசயத்துக்கு வருவோம். வயது என்பது உடல் வளர்ச்சியைப் பொறுத்ததா? இல்லை, உள்ள வளர்ச்சியைப் பொறுத்ததா என்பது தான்  கேள்வி. 
     இங்கு ஒருவரிடம் வயதைக் கேட்டால், நீங்களே கண்டு பிடியுங்கள் என்பர். அதிகமாகச் சொன்னால் முகம் சுண்டிப் போய்விடும். குறைத்துச் சொன்னால் ஆகாயச் சூரியனே அஸ்தமம் இல்லாமல் அகத்தை அலங்கரிக்கும். தொடக்கத்தில் நானும் இப்படித் தான் வயதை யாரேனும் கூட்டிச் சொன்னால் உள்ளுக்குள் ஓர் அமிலச் சுரப்பியே அருவியாக ஓடும். என்னைப் பார்த்தால் அவ்வளவு வயசானவராகவாத் தெரிகிறது என்று கேட்கத் தோன்றும். ஆனால்,
       
      '' வயது உடல் வாகைப் பொருத்து அல்ல நீங்கள்
     வாழும் வாழ்க்கையைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது'' 
என்று படித்ததும் தெளிவு பெற்றேன். 
உடல் பருமனானவரை  வயதானவர் என்றும், மெலிந்த உடல் உடையவரை இளமையானவர் என்றும் கருதுவது தவறு. நாம் நமது வாழ்க்கையில் பிறருடன் பழகும் முறையில் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கிறோம் என்பதை அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் .என்னை இப்போது யாராவது வயதைக் கூட்டிச் சொன்னால் கவலையேப் படுவதில்லை.  ஏனெனில் நான் பழகும் விதத்தில் முதிர்ச்சி பெற்றவராயிருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன். உங்கள் வயதையும் யாராவது கூட்டிச் சொன்னால் கவலை வேண்டாம். ஏனெனில் நாம்  உள்ள முதிர்ச்சி பெற்றவர்கள்.
   வயது என்பது உடல் வளர்ச்சியைப் பொறுத்து அல்ல
 உள்ள வளர்ச்சியைப் பொறுத்தே என்பது எனது கருத்து.
           
                      ஆமா உங்க வயசு என்ன?  

Friday, 11 April 2014

                            நட்பு

               தூரமோ, காலமோ, சூழலோ, 
                   
          நல்ல நட்பை ஒருபோதும்

பிரிப்பதில்லை


  மழை நின்ற பிறகும்

     மரக்கிளைகளை ஆட்டி

        மழைத்துளிகளில் நனைந்து
   
           மகிழும் சிறுவர்கள் போல

              அவர் தம் நினைவுகள்

 மகிழம் பூவாய் மணந்து மகிழ்வூட்டும்


        மாறாக மனதை விட்டு அகலா   .........                                                                                                                                                                                                                                                               

Thursday, 10 April 2014

                                    அனிச்ச மலரும் அடுக்கு மல்லியும்
                    
               எத்தனை விதங்களில் மனிதர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!
     பலவிதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம்.  சிலரைப் பார்க்கத் துடிக்கிறோம். சிலரைப் பார்த்தாலேத் துடிக்கிறோம். தான் மகிழ்ந்து வாழ்பவர்கள் சிலர்; தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள் சிலர்; தான் மகிழாவிட்டாலும் பிறர் மகிழ வேண்டும் என்று வாழ்பவர்கள் சிலர்;  நான் ரொம்ப எதார்த்தவாதி நினைத்ததை சொல்லி விடுவேன் , சொன்னதை வாழ்ந்து விடுவேன் என்று வாழ்பவர்கள் சிலர்.
    நான் எப்படி இருக்கிறேன் என்று இன்றைய தினம் சிந்தித்துப் பார்த்தேன். நான் இப்படித் தான் என்று என்னை எதிலும் நிலை நிறுத்த முடியவில்லை.  காரணம் இவை அனைத்தும் கலந்த ஒரு கலவையாகத் தான் நான் 
இருந்திருக்கிறேன்.  எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே.  நான் பார்க்கும் மனிதர்களும்  பல விதங்களில் உள்ளனர்.  எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  சிலரிடம் கோபப்படலாம்; திட்டலாம்; பகிரலாம்; மனதில் எதுவும் நினைக்க மாட்டார். மன உறுதி உடையவர்; சிலரிடம் எதுவும் சொல்ல முடியாது எளிதில் உணர்ச்சி வசப்படுவர்.  மனவருத்தம் அடைவர். மிக மென்மையான மனம் உடையவர்.  இவ்வாறாக  பலவிதமான மனிதர்கள்.

அடுக்கு மல்லி ----- அழகு , நறுமணம், எளிதில் வாடாது, காய்ந்த பின்னும் மணம் இருக்கும். இவர்கள்                                                உறுதியான   மனம் உடையவர். 

அனிச்ச மலர்  ----- அழகு, தூய்மை, மென்மையானது, மூச்சுக் காற்றுக்கே வாடிவிடும், இவர்கள்
மென்மையான மனம் உடையவர்.
  
எதார்த்தவாதியாய் இருப்பது நல்லது தான்  ஆனால்
 அதனால் ஏதேனும் சிறிது பயன்  இருந்தால் நல்லது.

உள்ளதைப் பேசுகிறேன் என்று உள்ளத்தை நோகடிக்காதிருப்போம்

ஏனெனில் நாம் வாழும் உலகில் அனிச்ச மலர்கள் கூட நமக்கு அடுக்கு மல்லிகளாய்த் தெரியும்.
 அடுக்கு மல்லியை மலரவைப்பது மட்டும் நமது நோக்கமல்ல, அனிச்ச மலர்களை வாட விடாதிருப்பதுமே.

     அனிச்ச மலர்களை நேசிப்போம்; அடுக்கு மல்லிகளாய் வாழ்வோம்;


Wednesday, 9 April 2014

 எதிர்பார்ப்பு

''எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன''.  
''எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் எதிர்வருவது தானாக நிறையும்'' 
என்றெல்லாம் நிறைய வாசகங்களைக் கேட்டிருக்கிறேன்.  பிறருக்கும் சொல்லி இருக்கிறேன்.  ஆனால் இன்று எதிர்பார் உன் எதிர்கால வாழ்வு என்னவென்று எதிர்பார் என்று தோன்றியது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அது என்றோ ஓர் நாள் என்னுடைய கனவு. இன்று என்ன எதிர்பார்க்கிறேனோ அது நாளைய என் வாழ்வு.
    ஆம் நாம் கேட்டவை அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம். கேளுங்கள்; நம்புங்கள்; பெறுங்கள்; இயேசுவால் குணம் பெற்ற பலரும் முதலில் குண்ம் பெற விரும்பினர். இயேசுவிடம் கேட்டனர்.  இயேசு குணம் தருவார் , நாம் குணம் பெறுவோம் என்று நம்பினர்.  கேட்டதைப் பெற்றுக்கொண்டனர். நானும் தான் 6வருடங்களாக, மாதங்களாக, நாட்களாகக் கேட்கிறேன். எதுவும் கிடைக்கவில்லையே என்று கேள்வி கேட்பது எனக்குக் கேட்கிறது. 
இரத்தப் போக்குடையப்பெண், முடக்குவாதமுற்றவர், பார்வையற்றவர், பேச்சிழ்ந்தவர், பாவிகள்,.......... என்று விவிலியத்தில் இயேசுவால் குணம் பெற்ற அனைவரும் நோயுற்றவுடன் குணமடையவில்லை. அவரவர் நம்பிக்கை எத்ர்பார்ப்பின் அளவைப் பொறுத்தே குணம் பெற்றனர். நம்பிக்கையுடன் கேட்டு , அதனைப் பெற்றுக் கொள்கிறேன் என்ற நல்ல மனம் உடையவர்கள் மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர். நம் வானகத் தந்தை நிறைவுள்ளவர். கேட்போம்; நம்புவோம்; பெறுவோம்;
     நம் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தை நிர்ண்யிப்பவை எனவே நல்லவற்றை எதிர்பார்ப்போம் நலமுடன் வாழ்வோம்.

Sunday, 6 April 2014

                       புன்னகை
         புன்னகை அக அழகை கூர்மைப்படுத்தி, புற அழகுக்கு மெருகூட்டுவது. மழலையின் சிரிப்பில் மயங்காதவரும்,மட்டற்ற மகிழ்ச்சியில் புன்னகைக்காதவரும் இல்லை. புன்னகை ஓர் மருந்து. இலவச மருந்து,இயற்கை மருந்து.  வாழ்விற்கு ஊட்டம் அளிக்கக்கூடிய சத்து மருந்து. இம்மருந்தின் பற்றாக்குறையினால் தான் பலருக்கு வாழ்வில் நலமே இல்லை. நாமும் ஓர் மருத்துவரானால் என்ன என்று இன்று தோன்றியது. புன்னகை என்னும் மருந்தை அனைவருக்கும் கொடுப்போம், நலமளிப்போம் என்று உறுதி கொண்டேன். இன்று பார்க்கும் அனைவரையும் புன்னகைக்கும் முகத்துடன் வாழ்த்த எண்ணினேன்.( இதற்கு முன்னால் அழுதுகொண்டா இருந்தாய் என்று நினைக்க வேண்டாம்)
        குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், என அனைவரையும் புன்னகையுடன் வாழ்த்தினேன். என்ன ஆச்சரியம்!!!!!!!! கொடுத்ததையே திரும்பப்பெற்றேன் மகிழ்வாக.! இயற்கை மருந்தினை நானும் திரும்பப் பெற்றுக்கொண்டேன். இதற்கு முன்னால் முகம் வாடியவாறு பார்த்த மனிதர்களும் முகம் மலர்ந்தனர்.
        நோயினால் நொந்தவர், முதுமையினால் வருந்தியவர், வேலைப்பளுவினால் அயர்ந்தவர், பிரச்சனையினால் குழம்பியவர் என அனைவர் முகத்திலும் புன்னகை என்னும் அணிகலன் அணியப்பட்டதும் அழகு பெற்றவராகத் திகழ்ந்தனர். இன்று ஒரு நாள் பயிற்சித்த இதனை  தொடர் ந்து ஏன் செயல்படுத்தக் கூடாது என்று எண்ணினேன்.தொடர் ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  
        நமது மனம் வாடினாலும் பிறர் மனதை மகிழச் செய்ய வேண்டும்.
              பகிர்ந்து வாழ்; மகிழ்ந்து பணி செய் ;
  என்ற விருது வாக்கை வாழ்க்கையாக்குகிறேன். காசா பணமா சிரிப்பு தானங்க சும்மா சிரிங்க . அதிகமா இல்லை, அளவா! சரியா?
                        புன்னகை செய் மனமே...............
              

Saturday, 5 April 2014

                    உறவுகள் உன்னதமானவை.


 உறவு- உறவாடுவது,உடனிருப்பது.  உள்ளம் ஒன்றி உறவாடுவதே உறவு. உறவு மிகவும் வலிமையானது.  இதை உணர்த்தத்தானோ என்னவோ உறவில் ற என்ற வல்லின ற கரம்  இடம்பெற்றிருக்கிறது. நம்முடைய உறவுகளான அம்மா, அப்பா, சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருமே இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட மிகச் சிறந்ந பரிசுகள். பிறந்தது முதல் இன்று வரை உறவென்னும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். சிலவற்றை விரும்பிப் பெறுகிறோம். சிலவற்றைப் பெற்ற பின் விரும்புகிறோம். சிலர் உறவுகளை
            '' ஆணின் நட்பு ஆயுள் உள்ளவரை
                      பெண்ணின் நட்பு பந்தக்கால்  நாட்டும் வரை''
 என்று விமர்சிப்பதுண்டு.இதில் எனக்கு சிரிதும் உடன்பாடு இல்லை. உறவுகள் உண்மையானவை , உன்னதமானவை அவை உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். அவை ஆண் பெண் என்று பார்த்து வருவதில்லை. அது உள்ளம் சார்ந்தது. சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கிறது. பேசத் தோன்றுகிறது . இவை எதனால்? உறவால்....
          உறவுகளைத் தேடித் தேடி நாம் பெற வேண்டியதில்லை. அவை நம்மைத் தேடி வரும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே. பயணத்தில் பக்கத்து இருக்கையில் பயணம் செய்பவர்.
வழி கேட்டு வருந்தி நிற்கையில் வழி காட்டுபவர்.
 பார்த்தவுடன் புன்னகைத்து மகிழ்வூட்டுபவர்.
என்று அனுதினமும்  நாம் உறவுகளால் உரமூட்டப்படுகிறோம். 7 மாதங்களூக்குப் பிறகு  90 வயது மதிக்கத்தக்க ஓர் மனிதரை மீண்டும் பார்க்க நேர்ந்தது. கண்டவுடன் கண்கலங்கினார். வயோதிகர், உடல் நலமில்லாதவர், தனியாய் பேருந்தில் பயணம் செய்து என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.நினைக்கும்போதே மனம் என்னவோ பண்ணியது.
                        அவர் சொன்னது ''நீயும் நானும் தந்தையும் மகளுமாய் முன்பு                                                 இரு ந்திருப்போம். அது மீண்டும் தொடர்கிறது''   ஆம்      நாம்   ச ந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒர் விதத்தில் நமக்கு உறவினர்களே. எனவே எல்லா மனிதர்களையும் நம் உறவுகளாய் நினைத்துக் கொண்டாடுவோம். ஏனெனில் உறவுகள் உன்னதமானவை, உண்மையானவை. பெற்ற உறவுகளைப் பேணிக்காப்போம்  

Thursday, 3 April 2014

                                                                    
 தமிழில் உள்ள ஓர் அருமையான வார்த்தை. ஆனால் தமிழர்களாகிய நாம் அதனை அதிகம் உபயோகிப்பதில்லை.ஆசிரியர்களைப் பார்த்து மாணாக்கர் கூறுவதோடு சரி நமது வணக்கம். அதுவும் வேண்டா வெறுப்பாய்.
பிறரை நாம் மதிப்பதற்கு அடையாளமாய் மரியாதை நிமித்தமாய் சொல்லும் ஒரே வார்த்தை வணக்கம். மேலை நாடுகளில் ஓர் நல்ல பழக்கம் உண்டு.ஆனால் அதனை தெரிந்து செய்கிறார்களா? இல்லை தெரியாமல் செய்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் நல்லது. முன்பின் தெரியாத யாரைப் பார்த்தாலும் காலை வணக்கம், ஹாய், ஹலோ, வாழ்க, என்று கூறும் பழக்கம் உண்டு. நீ யாரென்று எனக்கு தெரியாது ஆனால் நீ நன்றாக வாழ், இந்ந நாள் உனக்கு இனிய நாளாக அமையட்டும் என்று வாழ்த்தும் ஓர் அருமையான பழக்கம். 
நாம் எவ்வாறு வாழ்த்துகிறோம்?
பிறரை வாழ்த்துவது இருக்கட்டும் நம்மில் எத்தனை பேர் நம்மை நாமே வாழ்த்துகிறோம்? நமது பெயரைச் சொல்லி காலை வணக்கம் என்றோ, வாழ்க என்றோ சொல்கின்றோமா?
இனியாவது தொடங்குவோமா? கண்ணாடி பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு நிச்சயம் உண்டு. இனி பார்க்கும் பொழுது சிரித்த முகத்துடன், நமது பெயரைச் சொல்லி ................ காலை  வாழ்க, என்று சொல்லி பழகுவோம். இந்ந நாள் உங்களுக்கு இனிய நாளாகட்டும். வணக்கம்
நல்ல எண்ணங்கள்  நன்மையைத் தரும்
நல்லதையே நினைப்போம் நலமுடன் வாழ்வோம்

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...