அனிச்ச மலரும் அடுக்கு மல்லியும்
எத்தனை விதங்களில் மனிதர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!
பலவிதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம். சிலரைப் பார்க்கத் துடிக்கிறோம். சிலரைப் பார்த்தாலேத் துடிக்கிறோம். தான் மகிழ்ந்து வாழ்பவர்கள் சிலர்; தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள் சிலர்; தான் மகிழாவிட்டாலும் பிறர் மகிழ வேண்டும் என்று வாழ்பவர்கள் சிலர்; நான் ரொம்ப எதார்த்தவாதி நினைத்ததை சொல்லி விடுவேன் , சொன்னதை வாழ்ந்து விடுவேன் என்று வாழ்பவர்கள் சிலர்.
நான் எப்படி இருக்கிறேன் என்று இன்றைய தினம் சிந்தித்துப் பார்த்தேன். நான் இப்படித் தான் என்று என்னை எதிலும் நிலை நிறுத்த முடியவில்லை. காரணம் இவை அனைத்தும் கலந்த ஒரு கலவையாகத் தான் நான்
இருந்திருக்கிறேன். எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. நான் பார்க்கும் மனிதர்களும் பல விதங்களில் உள்ளனர். எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலரிடம் கோபப்படலாம்; திட்டலாம்; பகிரலாம்; மனதில் எதுவும் நினைக்க மாட்டார். மன உறுதி உடையவர்; சிலரிடம் எதுவும் சொல்ல முடியாது எளிதில் உணர்ச்சி வசப்படுவர். மனவருத்தம் அடைவர். மிக மென்மையான மனம் உடையவர். இவ்வாறாக பலவிதமான மனிதர்கள்.
அடுக்கு மல்லி ----- அழகு , நறுமணம், எளிதில் வாடாது, காய்ந்த பின்னும் மணம் இருக்கும். இவர்கள் உறுதியான மனம் உடையவர்.
அனிச்ச மலர் ----- அழகு, தூய்மை, மென்மையானது, மூச்சுக் காற்றுக்கே வாடிவிடும், இவர்கள்
மென்மையான மனம் உடையவர்.
எதார்த்தவாதியாய் இருப்பது நல்லது தான் ஆனால்
அதனால் ஏதேனும் சிறிது பயன் இருந்தால் நல்லது.
உள்ளதைப் பேசுகிறேன் என்று உள்ளத்தை நோகடிக்காதிருப்போம்
ஏனெனில் நாம் வாழும் உலகில் அனிச்ச மலர்கள் கூட நமக்கு அடுக்கு மல்லிகளாய்த் தெரியும்.
அடுக்கு மல்லியை மலரவைப்பது மட்டும் நமது நோக்கமல்ல, அனிச்ச மலர்களை வாட விடாதிருப்பதுமே.
அனிச்ச மலர்களை நேசிப்போம்; அடுக்கு மல்லிகளாய் வாழ்வோம்;