சுப்பிரமணிய பாரதி ஒரு முறை வீட்டின் மேல் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். கீழே தெருவில் குள்ளச் சித்தர் கையில் கோணிப்பையுடன் வந்து கொண்டிருந்தார். திடிரென கீழேக் கிடந்த குப்பைக்கூளங்களால் தனதுப் பையை நிரப்ப ஆரம்பித்தார். இதனைக் கண்ட பாரதி மனம் பதறியவராய், விரைந்து கீழே இறங்கினார். சித்தரை நோக்கிச் சென்றவர், ''என்ன காரியம் செய்கிறீர்கள்? குப்பைகளால் கோணியை ஏன் நிரப்புகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்றார். பாரதியை மேலும் கீழும் பார்த்துவிட்டு சித்தர், ''நான் நினைத்தால் இப்போதே இந்தக் குப்பைகளைக் கீழேக் கொட்டி என் கோணியைத் தூய்மைப் படுத்த முடியும். உன்னால் உன் மனதிலுள்ள குப்பைகளைத் தூர எறிந்து உன் மனதைத் தூய்மைப் படுத்த முடியுமா?'' என்றாராம்.
உள்ளங்கை அளவு இருப்பதாலா? இல்லை உள்ளுக்குள் இருப்பதாலா? எதனால் இதனை உள்ளம் என்கிறோம்?
சிட்டுக்குருவித் தலையில் பனங்காயைப் போல பல நேரம்
சிறு இதயத்தில் சில ஆயிரம் கவலைகளைச் சுமக்கிறோம்.
நாம் வாழுகின்ற நிகழ் காலம் ஒன்றே நமது கையில் உள்ளது. அதனை ஏன் நாம் வருத்தங்களாலும் , சுமைகளாலும் நிரப்ப வேண்டும்.? நல்லவைகளால் நம் உள்ளத்தை நிரப்பலாமே.!!
சிகப்பு நிறத் தண்ணீர் நிறைந்த வாளிகள் இருவரிடம் கொடுக்கப் பட்டன. ஒருவர் கைகளால் தண்ணீரை வெளியேற்றி நல்ல தண்ணீரால் வாளியை நிரப்பினார். கை முழுவதும் சிகப்பு நிறம். மற்றொருவர் தண்ணீர்க் குழாய் அருகில் வாளியை வைத்து நீரால் நிரப்பினார். சில மணி நேரத்தில் சிகப்பு நிறம் தானாக மறைந்து வாளி முழுவதும் நல்ல நீரால் நிரம்பியது. ( சிகப்புத் தண்ணீர் தரையில் கொட்டி, தரை கறையாகுமே என்று கவலைப் பட வேண்டாம். குழாய் வழியே உருண்டோடி அதள பாதாளச் சாக்கடையைச் சென்றடைந்து விட்டது. கவலை வேண்டாம்.)
நான் சொல்ல விரும்புவது இது தான் கவலையை வெளியேற்ற வழி தேடாதீர்கள். நன்மைகளால் , மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய நற்காரியங்களால் மனதை நிரப்புங்கள். அப்புறம் பாருங்கள்
என்றும் இனிமை, எதிலும் புதுமை,
மகிழ்வென்னும் கடலில் நம் உள்ளம் எனும் வாளியை போட்டு விட்டால் அதை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. வாழ்வது ஒருமுறை அதை சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோமே!!!!!!!!