Saturday, 20 December 2014

பெண் என்னும் பெருந்தகை

ஆணை அவனென்றும்
பெண்ணை அவளென்றும்
அழைக்கும் உலகம்
அவர்களே வயதானால்
அவனை அவரென்றும்
அவளை (அவங்க) அவர்களென்றும்
அழைக்கின்றதே !!!!!!

Friday, 12 December 2014

Time to help

Time | Short Film | By Aarti Bagdi: http://youtu.be/YFFFqHTX3c4

Monday, 17 November 2014

எப்போது வருவாய்


ஈசாய் மரத்தளிர்த் தண்டே !  நீர் வருவது எப்போது ?
எங்களை மீட்க நீர் எடுத்திருக்கும் உருவம் என்ன இப்போது?
மூவரில் உமக்கு கிடைத்தது முறை அப்போது.
வேண்டும் உனது உரு எங்கள் மத்தியில் முப்பொழுது.!!!!!!!!
எப்படி வருவாய்? எப்போது வருவாய்?
கன்னியின் கருவில் உதிக்காதே
காலம் உன் கருவைக் கலைத்துவிடும்.
மலடியின் மடியில் தவழ நினைக்காதே
உலகம் அவளது நடத்தையை சந்தேகிக்கும்.
கணக்கெடுப்பு நேரத்தில் கழுதை மேல் செல்ல எண்ணாதே.
எல்லாம் கணினி மயமாய் கண நேரத்தில் முடிந்துவிடும்.
மாட்டுத்தொழுவத்தில் பிறக்க முயலாதே
இங்கு மாடுகளே இல்லை தொழுவங்கள் எங்கு இருக்கும்
விண்மீன் மூலம் செய்தி சொல்ல பார்க்காதே
புதுக்கோள் என்றெண்ணி விண்கலத்தை அங்கும் அனுப்பக்கூடும்.
இடையர்களுக்கு செய்தி சொல்ல விழையாதே
கிடையற்ற அவர்கள் இரவு நேரக்காவலர்களாய் இருக்கக் கூடும்
எப்படித்தான் வருவது என்றுக் கேட்கிறாயா?
சொல்கிறேன் கேள்.!!!
கணினி மூலம் கருத்தரித்து வா
சோதனைக் குழாய்க் குழந்தையென சொந்தம் கொண்டாடுவோம்
மின்னஞ்சல் மூலம் உன் வரவுச் செய்தியை அனுப்பு
அணுத்துகளாய் அகிலம் முழுதும் அதனைப் பரப்புவோம்.
குழந்தை நட்சத்திரமாய் குறும்புத்தனமாய் விளம்பரங்களில் வா
வெட்கமே இல்லாமல் விளம்பரமோகத்துடன் உன்னை விரும்பிப் பார்ப்போம்
அரை குறை ஆடை, ஆங்கிலத்துடன் திரையில் வா
உன்னைத் திணறடிக்கும் விசிறிகளாய் திரண்டு வருவோம்
செயல் வீரனாய் தலைவனாய் திரைப்படத்தில் வா
தினமும் தொழுது வணங்கும் ரசிகனாய் கோயில் கட்டுவோம்
இலவசங்களை ஏராளமாய் வழங்கும் அரசியல் வாதியாய் வா
இல்லம் தவிர்த்து இன்ன பிற உறவுகள் தவிர்த்து,உனக்காய் உயிர் விடுவோம்
இலஞ்சங்கள் பல தரும் புள்ளிகளாய் வா
கடமைதனை கால் செருப்பாய் கழற்றி வாழ்வோம்
இம்மானுவேலே தாவீதின் திறவுகோலே
இப்படி வந்தால் உன்னை வரவேற்போம் வருவாயா?
குழந்தையாய் வராதே !!! குணமெனும் சான்றோராய் வராதே
எங்கள் சாதி மத பேதம் விரட்ட சாட்டையுடன் வா
கடமைதனை மறக்கும் கயமையை விரட்ட தடியுடன் வா
அட்டுழிய அரசியல் பண்ணும் எங்களின்
அராஜகம் அழிக்க அரிவாள் கொண்டு வா                 மொத்தத்தில்
குழந்தையாய் வராதே    எங்கள்
நற்குணமாய் வா
தனியனாய் வராதே   எங்கள்
தன்னம்பிக்கையாய் வா
அன்னியனாய் வராதே   எங்கள்
அன்புறவாய் வா
ஏனெனில் நீ பிறக்க வேண்டியது இவ்வுலகில் அல்ல எங்கள் உள்ளத்தில்........   

Friday, 31 October 2014

நீங்க யானை மாதிரியா ?? இல்ல பூனை மாதிரியா??

யானைக்கும் அடி சறுக்கும் இது அடிக்கடி நாம் கேட்ட ஒரு பழமொழி . உனக்கா இந்த நிலைமைனு  யாராவது கேட்டா நாம இந்த பழமொழிய சொல்றது வழக்கம் . இன்னைக்கு திடிர்னு ஒரு சிந்தனை . யானைக்கும் அடி சறுக்கும் . யானை கம்பீரமானது யாராலும் அதஅவ்வளவு சீக்கிரம் கீழே தள்ளி விட முடியாது . அப்படியே எதிலாவது அதன் அடி சறுக்கினாலும் உடனே அதனால எழுந்திரிக்க முடியாது. பூனை சும்மா தட்டுனாலே கீழ விழுந்துடும். வேகமா எழுந்திரிச்சுடும்.இத எதுக்கு சொல்றேன்னா . நமக்கு வர்ற பிரச்சனைகளை சமாளிக்கிறப்ப சில நேரம்  நாம யானை மாதிரி ,சில நேரம் பூனை மாதிரி. சட்டுனு எதுலயும் சிக்க மாட்டோம் . சிக்கினோம் ,,,,,,, எழுந்து நிக்க ரொம்ப கஷ்டப்படுவோம் .ஆனா... எழுந்துட்டோம் ..... திரும்ப விழாம கவனமா இருப்போம் . அப்ப நாம யானை பலம் கொண்டவங்க .
அடிக்கடி எதுலயாவது சிக்குவோம் உடனே எழுந்து நின்னுருவோம் .. ஆனா  மறுபடியும் கீழ விழுவோம் அப்ப நாம பூனை பலவீனம் கொண்டவங்க . இதுனால என்ன சொல்ல வர்றேன்னா  கஷ்டம்னு வந்தவுடனே '' யானைக்கும் அடி சறுக்கும் இல்லையானு " சும்மா சொல்ல கூடாது நம்ம பலம்,  யானை மாதிரியா?? இல்ல பூனை மாதிரியானு யோசிச்சு சொல்லனும் சரியா?? இப்ப இருக்கிற நிலைமைல ரெண்டுமே வேணும்னு நீங்க சொல்றது கேட்குது சரி சரி  என் ஓட்டு யானைக்கு தாம்பா.  :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)     

Thursday, 23 October 2014

நீங்களும் குழந்தைகள் தான்:-):-) :-) :-) :-) :-)


பள்ளிக்குச் சென்று பகுத்தறிவு பெறும் பாலப்பருவக்குழந்தையே! 
இன்றைய நாள் உனது நாள்.! 
குறு நடையும், மகிழ் உணர்வும் கொண்டு குதூகலிக்கும் 
குழந்தைகள் தின நாள்!!!
குழந்தைகள் தான்  எவ்வளவு சிறப்பானவர்கள்.
எண்ணான்கு பற்கள் காட்டி தர முடியாத மகிழ்வை  அத‌ன் 
செந்நாக்குப் புன்னகை தந்து விடுகிறதே!   
அதுதான் எவ்வளவு பாக்கியசாலி
அழுதால் அரவணைக்கத்தாய்,
ஆறுதல் தந்து தோள் சாய்க்கத் தந்தை,
கைதூக்கி விளையாடி மகிழ்வூட்ட தனையன்,
இடுப்பாசனத்தில் அமர்த்தி சீராட்ட தமக்கையாள்,
அதன் சிறு அசைவையும் கண்டு ரசிக்க உற்றார், உறவினர்.
செவ்விதழ் மேனியும், பாலிலிட்டக் கருந்திராட்ச்சைக் கண்களும் , சிப்பி மூக்கும், செம்பவள வாயும், தளிர்கிளைகளாய் கை கால்களும், அப்பப்பா!!!!!!! குழந்தைகள் என்று நினைக்கும் போதே மனம் மகிழ்வால் நிரம்பும். இவற்றை  எல்லாம் எண்ணும்போது நாமும் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா??? என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.
எங்கே சென்றன நம்முடன் பிறந்தக் குழந்தை மனம்.??? 
சூழல் மாற்றியதா??? இல்லை 
சூழலுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொண்டோமா??
  நம் குழந்தைப் பருவம் பத்துப்பருவங்களால் ஆனது என்று நம் தமிழ் நூல்கள் பாடுகின்றன. என்னைப் பொறுத்தவரை பத்துப் பருவங்களும் ஏறுவரிசையில் சென்றால், இளமைப்பருவம். 
இறங்குவரிசையில் சென்றால் அது முதுமைப்பருவம். ஏதோ ஒருவகையில் நாம் நம் குழந்தைப்பருவத்தை சார்ந்தே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். குழந்தைகளாய்ப் பிறக்கையிலே நலமாய்த்தானிருக்கின்றோம். அனைவராலும் விரும்பப்படுகின்றோம். பாராட்டப்படுகின்றோம். ஆனால் காலப்போக்கில் அவை காணாமல் போகின்றன. சில நேரங்களில் நாமே அதைக் காணடித்துவிடுகின்றோம். தானாய் மாறியவை சில வலிய நாமே மாற்றிக்கொண்டவை பல. சிலர் வளர்க்கப்படும் சூழலால் மாறுகின்றோம். மாற்றப்படுகின்றோம் என்கின்றனர். ஆனால் அது உண்மை  அல்ல. 
''எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவதும் , தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!!! '' என்றொரு திரைப்படப்பாடல் வரிகள் உண்டு. அன்னை இல்லாமல் வளரும் எத்தனையோக் குழந்தைகள் நன்முறையில் தான் வளர்க்கப்படுகின்றன. பெற்றெடுத்த அன்னை மட்டும் அன்னை அல்ல. அன்னை நிலையில் யார் அந்தக் குழந்தையைப் பொறுப்பெடுத்து வளர்க்கிறார்களோ  அவர்கள் யாவரும் அன்னையே அவ்வகையில் நாம் அனைவரும் நல்லவர்களாக வளர்க்கப்பட்டவர்களே. குழந்தை மனம் நம்மில் நிறையவே உண்டு. மகிழ்ச்சிப் பெருக்கில் துள்ளிக் குதிக்கும் போது , விரும்பியதைத் தேடிக் கண்டடைந்ததும் சப்தமிட்டு கத்தும் போது, வளர்ந்த பின்பும் தாயின் கையில் உண்ணும் போது, நண்பனுடன் தோள் சேர்த்து நடக்கும் போது என பல நேரங்களில்  நாமும் குழந்தைகளாய் மாறி இருக்கின்றோம்.   ஆனால் நம்மை நாமே பெரியவர்களாக, உயர்ந்தவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தீயினால் நமக்குள் மறு துளிர்விடும் குழந்தை மனத்தை நாமே பொசுக்கிவிடுகின்றோம். (சிலர் குழந்தை மனம் உடையவர்களாய் மாறுவ‌தற்குப் பதில் குழந்தைத்தனம் உடையவர்களாய் மாறி விடுகின்றனர். குழந்தை மனம் வேறு குழந்தைத்தனம் வேறு. ) எதையும் ரசித்துப் பார்த்த மனது இன்று அதனை ரசிப்பதற்கே காரணம் தேடுகிறது. எல்லாவற்றையும் சுதந்திரமாக செய்த குணம் இன்று மறைமுகமாகச் செய்ய வழி தேடுகிறது. 
நமது மகிழ்வை நாமே மனதிற்குள் புதைக்கிறோம். பிறருக்காக வாழாமல் நமக்காக வாழ்வோம் . அன்றிருந்தக் குழந்தை மனது இப்போதும் நம்மிடம் உள்ளது. நாம் அதனை கர்வம் , பெருமை, மரியாதை, செல்வாக்கு, பதவி, கொண்டு மறைத்து வைக்கிறோம். இன்றைய குழந்தைகள் தினம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் உரியது. 
நாமும் குழந்தைகள் தான், 
நமது தூய மனத்தால், 
நமது தன்னலமற்ற செயலால், 
நமது கள்ளம் கபடமற்ற பேச்சால்!!!!
மின்னஞ்சலிலும்,( E.mail) முகப்புப் புத்தகத்திலும்    (facebook)குழந்தைகள் படத்தை பார்த்து பதிவிறக்கம்  (download)செய்யும் மனிதனே!! 
உன் உள்ளத்தில் உள்ள குழந்தை மனத்தை 
எப்போது உன் வாழ்வின் நிலையான     wallpaper ஆக மாற்றப் போகிறாய்??? 
Facebook ,twitter   இன் status ஆக 
உன் குழந்தைப் பருவமும் , குழந்தை மனமும் 
நின்று விடக் கூடாது.உன் வாழ்க்கையின்  profile picture ஆக அதனை மாற்று.

இன்றைய குழந்தைகள் தினம் நம்முள் மறைந்துகிடக்கும் குழந்தை மனத்தை வெளிக்கொணர்வதாக இருக்கட்டும்.  
குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்ப்போம் 
அவர்கள் பூக்கள்  பூக்கும் பூச்செடிகள் தான் 
ஆனால்  பூக்கப்போகும் பூக்களில் கவனத்தை அதிகம் வைக்காமல் பூக்கள் மலர காரணமாகும் வேர்களில் கவனம் செலுத்துவோம்.
 பின்னர் பூக்கள் தானாய்ப் பூக்கும் . 
குழந்தைகளைக் காப்போம் குழந்தைகளாய் வாழ்வோம் 

அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் 
                                                    


Friday, 3 October 2014

காதலிக்கலாமா?.? வேண்டாமா?.?

காதல் ஒரு உண்மை உணர்வு. மிகவும் புனிதமான உணர்வு. ஆனால் கவனமாக கையாள வேண்டிய ஒரு உணர்வு. கடை நிலை மனிதனை கரம் பிடித்து முன்னுக்கும் கொண்டும் வரும். முதல் நிலை மனிதனை கை கழுவி  கடை நிலைக்கும் கொண்டு வரும். கட்டான மனிதனை நிலை குலையச்செய்வதும் அதுதான். ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதும் அதுதான் . கலையான  ஆண் மகன் ஒருவன்  துடிப்பான பேச்சு , மிடுக்கான நடை, எடுப்பான உடை, துணிவான முடிவு, உறுதியான மனம், நேருக்கு நேர் பதில் , அழகான உறவுகள் அன்பான நண்பர்கள், அவர்களுடனான ஆனந்த அரட்டை,என வாழ்வைக் கொண்டாடினான். காதல் என்னும் மாய வலை அவனையும் வீழ்த்தியது. வீழ்த்தப்பட்டான். காணாத ஒன்றைக் கண்ட மகிழ்வில் தலை கீழாய் ஆடினான். உற்றம் ,சுற்றம், நண்பர்களை மறந்தான். எல்லாவற்றையும் இழந்தான். அது சரி ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றைப்பெற முடியும். எனவே பெற்றதை எண்ணி மகிழ்ந்தான். ஆனால் இவன் நினைத்தது போல் அவள் நினைக்கவில்லையே. காரியம் முடிந்தவுடன் கசக்கி எரியும் காகிதமாய் அல்லவா எண்ணிணாள். பிளிறு போல் நடந்தவனை பித்தாய் அலைய விட்டாள். கணீரென்று பேசுபவன் குரலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.  சாறு எடுத்துவிட்டுப் பிழிந்து போடும் கரும்புச் சக்கையாய் ஆக்கினாள். காதல் தந்த பரிசு இது. தாய் என்னும் பெண்ணால் பிறந்து ஆளானவன் காதலி என்னும் மற்றொரு பெண்ணால் வீழ்த்தப்பட்டான்.
காதலன் பித்து பிடித்தவனானான்.
காதலி சொத்துள்ள மற்றொருவனைத் தேடிப் பிடிப்பவளானாள்.
இது  ஆண்களுக்கு மட்டுமல்ல, இனம் மாற்றிப் படித்தால் இது பெண்களுக்கும் பொருந்தும்.  
காதல் வேண்டாமென்று நான் சொல்லவில்லை,அது தேவை           ஏனெனில்  அது ஒரு உணர்வு.
      காதலோ நட்போ
                                      உங்கள் உறவை வளர்க்கிறதா?       நற்பாதையில் உங்களை அழைத்துச்செல்கிறதா?
அது உங்களுக்குத் தேவை.
ஆரோக்கியமான காதலும் நட்பும் என்றும் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் ஆரோக்கியமானவர்களாக்கும். பலவீனமான காதலும் நட்பும் மேலும் நம்மை பலவீனமாக்கும்.
காதல் என்ற உணர்வை உணரும்போதே ,அனுபவிக்கும் போதே, விழிப்பாயிருங்கள்  
  உங்கள் செயல்களில் மாற்றம் தெரிகிறதா?
அது உங்களை நல்வழிக்கு இட்டுச் செல்கிறதா?
உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்குகிறதா?
எப்போது நினைத்துப் பார்த்தாலும் அவர்களுடனான உறவு உண்மை மகிழ்வைத் தருகிறதா? கவலை வேண்டாம் அது ஆரோக்கியமான உணர்வு. ஆனால் , உங்கள் மானம் இழந்து , மரியாதை கெட்டு, எப்படி இருந்தவன் இப்படி மோசமான நிலைக்கு வந்துவிட்டானே என்று மற்றவர் சொல்லும் நிலைக்கு நீங்கள் ஆளானால் அதனை தூக்கி எரியவும் தயங்காதீர்கள்.
    நமது அன்பு தூய்மையானது.  அதனை தூய்மையான பாத்திரத்தால் இட்டு நிரப்புவோம். அசிங்கமான பாத்திரத்தால் நமது அன்பும் அசிங்கமானதாக மாறிவிட வேண்டாம்.
''பாத்திரத்தின் திறன் அறிந்து பிச்சையிடு'' என்பதன் அர்த்தம் இதுவே.
உண்மையான நட்புக்கும் ஆழமான அன்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தெரியாதவர்களை தூக்கி எரியவும் தயங்க வேண்டாம்    
இப்ப சொல்லுங்க காதலிக்கலாமா?.? வேண்டாமா?..?

Wednesday, 17 September 2014

பிரிவொன்று சந்தித்தேன் .....

                           
                             பூவிதழ்களின் பிரிவு மலர்
                            கண் இமைகளின் பிரிவு விழி
                            வாய் இதழ்களின்  பிரிவு ஓசை
                                   கைவிரல்களின் பிரிவு விசை
இப்படியாக பிரிவு என்பது நம் வாழ்க்கையில் தேவையான ஒன்றாகிவிட்டது. சேர்ந்து இருக்கும் போது உணராத உண்மை உணர்வுகள் பிரிவின் போது தான் புலப்படும். தம்பியுடன் மிட்டாய்க்காக சண்டை, அக்காவுடன் பூவுக்காக விவாதம், அண்ணனுடன் வெளியூர் செல்ல பிடிவாதம் , தங்கையுடன் தொலைக்காட்சி நிகழ்வுக்காய் போராட்டம் என்று நம்மை விட்டுப் பிரிந்த இளமை நிகழ்வுகளை அசை போட்டு மகிழும் காலம் இன்று. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். உடன் இருப்பவர்களின் அருமை அவர்களின் இல்லாமையில் தான் புரியும். தினமும் இட்லி தோசையா என்று அலுத்தவர்கள் அயல் நாட்டில் ரொட்டியை உண்ணும் போது உணர்வார்கள் அதன் அருமையை.அடிக்கடி வந்து போன உறவினர்கள், குடும்பவிழாக்கள், ஊர்த்திருவிழாக்கள், தெருவோரப்பேச்சுக்கள்,கிணற்றுக்குளியல், என எல்லாமே இன்று நம்மை விட்டுப் பிரிந்த நிகழ்வுகளாயின. என்ன தான் சொல்ல வருகிறாய் ?? என்ற உங்கள் ஆதங்கம் எனக்கு கேட்கிறது.                                      பிரிவு எதற்காக ???                  எதிலிருந்து நம்மைப்பிரித்ததோ அதனுடன் நம்மை இன்னும் ஆழமாய்ச் சேர்ப்பதற்கே. அருகிலிருக்கும்போது காட்டும் அன்பை விட அகன்றிருக்கும் போது காட்டும் அன்பே வலிமை சேர்க்கிறது. வளம் தருகிறது. பிரிவு அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.

உண்மையான அன்பு பிரிவால் இரட்டிப்பாகும்.
போலியான அன்பு பிரிவால் பிட்டுக்கொள்ளும்.
என்ன புரிகிறதா??    
  பிரிந்து செல்கிறார்களா கவலை வேண்டாம்
         மீண்டும்  சேர்வோம்  
        உண்மையான அன்பாயிருந்தால்...........

Thursday, 17 July 2014

அறுசுவையே!!

வாழ்வு-ஐ- சுவைப்போம்
வாழ்வு-ஆல்- சுவைதருவோம்
வாழ்வு-கு- சுவையூட்டுவோம்
வாழ்வு- இன்- சுவையறிவோம்
வாழ்வு-அது-சுவையாகட்டும்
வாழ்வு-கண்- அறுசுவையே!!

அறுசுவை வாழ்வு

அறுசுவை வாழ்வு இனிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, புளிப்பு இணைந்த அறுசுவை உணவு உடலிற்கு நல்லது. இவை கலந்த உணர்வு வாழ்விற்கு நல்லது. சுவைத்து வாழ வேண்டிய வாழ்க்கையை வெறுத்து சலித்து வாழ்வது நல்லதல்ல. இங்கிலாந்து நாட்டில் டெய்சி என்ற இளம் பெண்.மிகத்துடிப்பானவள். செய்யும் செயல்களை மிக விரும்பி செய்பவள்.அன்றன்றைய வாழ்வை சுவைத்து அனுபவித்து வாழ்பவள். காண்போர் கண் குளிரும் வண்ணம் மகிழ்ந்து பேசுபவள்.திடிரென்று ஒரு நாள் நோய்வாய்ப்பட்டாள்.மூளையில் கேன்சர் கட்டி.இறப்பின் நாள் முன்குறிக்கப்பட்டது. குடும்பத்தாரின் துன்பத்திற்கு அளவில்லை.ஓரிரு வார மாதங்களில் படுத்த படுக்கையானாள். தன்னை நாடி வந்து நலம் விசாரிக்கும் அனைவரிடத்திலும் புன்னகையையே பரிசாகத் தந்தாள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணையா இறைவன் இப்படி சோதிக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பு அனைவரின் உள்ளங்களிலும், உதடுகளிலும். எதனைப் பற்றியும் கவலைப்படாத டெய்சி தனது இறுதிச்சடங்கு எப்படி நடைபெற வேண்டும் என்று குடும்பத்தாரை அழைத்துப் பேச எண்ணினாள். இறுதியாக தன்னைப் பெட்டிக்குள் வைக்கும் முன் தனது கைகளில் சாப்பிட பயன்படும் முள்கரண்டி ஒன்றினை வைத்து அடக்கம் பண்ணச்சொன்னாள். ஏனென்று கேட்பவர்களிடத்தில் நீங்கள் சொல்லுங்கள், '' உணவு விடுதியில் உணவு உண்பவரின் தட்டுக்களை எடுக்க வரும் பணியாளர் சொல்வார் 'உங்களுடைய முள்கரண்டியை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் ருசித்து உண்ண உணவிருக்கிறது ' என்ற. அதுபோல் தான் நமது வாழ்விலும் ருசிக்க வேண்டிய தருணங்கள் ஏராளமாய் உள்ளன. கண் மூடி தூங்கி விழிக்கும் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்குச்சொல்வது இதுதான் 'இன்று நீ ருசித்து வாழ வேண்டிய வாழ்வு இன்னும் உள்ளது.இறைவன் தந்த எனது வாழ்வை ருசித்துவிட்டேன். இறைவனோடு வாழ்வை ருசிக்கச்சொல்கிறேன் '' என்றாராம். அறுசுவைகளின் அளவை இறைவன் நமது வாழ்வில் அளந்து வைத்துள்ளார் , அவரவர் சுவை (ருசி ) நரம்புகளுக்கேற்றார் போல. எனவே எச்சுவையையும் சுவைக்கும் குபேரன்/ள்களாக நமது வாழ்வு அமையட்டும்:-)

Monday, 16 June 2014

Sunday, 15 June 2014

Transfer

                               இட மாற்றம்

 கெட் ரெடி என்ற வார்த்தையைக் கேட்டவுடன்     ஒட்டமெடுத்தது என் இதயத் துடிப்பு
 இருந்த இடத்தின் மேல் கொண்ட பற்றா, 
 இதயம் மகிழ்வித்தவர்களை
 பிரிய நினையாத  பித்தா, 
 தெரியவில்லை என்னவென்று எனக்கு           தொலைத்தக் கடவுளைத் தேடினேன்.
 என்னை இங்கே அனுப்புவாயோ? 
என்னை அங்கே அனுப்புவாயோ? 
என்ற மறைமுக உரையாடலில்
 அனுதினமும் அவரையும் குழப்பினேன் 
இதோ வருகிறேன் என்று 
அன்று முன்வைத்தக் கால் 
இன்று ஏனோ பின்வாங்குகிறது.
 மொழி தெரியாத நாடு 
வந்த ஓராண்டுக்குள் இடமாற்றமா?
 வேண்டாம் என்று சொல்லவும் துணிவில்லை    போகிறேன் என்று துணியவும் மனமில்லை     இதுவா? அதுவா? என்று குறிவைத்துப் பார்த்த‌     விரல்களில் வீக்கம் வந்ததுதான் மிச்சம்.
 இதில் எப்போதும் இரண்டு சாய்ஸ் தானா      குறைந்தது 5வது வேண்டாமா என்று 
மனதின்   பரிந்துரை வேறு.
 என்ன செய்யப்போகிறாய் என்னை? 
அந்த நாள்'வந்தது '' உனக்கு இடமாற்றம் இல்லை '' என்ற சொல் கேட்டதும்தான் தாமதம்
 அடைபட்ட உணர்வுகள் விடுதலையாயின.       வெப்பத்தால் நொந்தவர் குளிர்காற்றை        அனுபவிப்பதுபோல இதமானது மனம். 
உல்லாசம் உற்சாகம் 
இல்லாத ஒன்றிற்கா இவ்வளவு பெரிய                   போராட்டம்........................:-) 
என்றும் புன்னகை செய் மனமே
           :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)

Thursday, 5 June 2014

Vaazkkai

கஷ்டப்படாமலிருக்க கொஞ்சம் கஷ்டப்படுங்கள்


 நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறேன் ஆனால் அதற்கான பலன்களை என்னால் அனுபவிக்க முடியவில்லையே ; சிலர் எ ந்த கஷ்டமும் படுவதில்லை, ஆனால் சந்தோஷமாக இருக்கிறார்களே! என்றஎண்ணம் பலருக்கும் உண்டு. அவரவர் எண்ணம் போலே அவர் தம் வாழ்வு. வாழ்க்கையை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். இளம் வயதில் அதிக உழைப்பு- குறைந்த பலன். நடுத்தரவயதில் சமமான உழைப்பு- சமமான பலன். வயோதிகத்தில் குறைந்த உழைப்பு - அதிக பலன் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துமே சமமாகத்தான் நமக்குக் கிடைக்கின்றது. கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் போதே நமது வாழ்க்கை முடிந்துவிட்டால் ?? என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?? அப்படியானால் அதிக பலனைப் பெறுவதற்கான பொறுமை இல்லாத உங்களை உலகம் திரும்பப் பெற்றுக் கொண்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.!!!!! 

வாழ்க்கை ஒரே இன்பமாக இருந்தால் திகட்டிவிடும். எனவே தான் சில பல கடினமான அனுபவங்கள் வாழ்க்கைக் கரும்பைப் போல இனிமையானது. நுனிக்கரும்பின் சுவையை விட அடிக்கரும்பின் சுவை அபரிமிதமானது. சுவையான, தித்திப்பான, பகுதிகளுக்கிடையே கடினமான, சுவை குறைந்த ஒரு சிறு பகுதி ( கணு ) . இதனைக்கடித்து, மென்றுத் துப்பினால் தான் சுவையான மற்றொரு பகுதியை நாம் பெற முடியும். துன்பங்கள் வாழ்வின் இன்பத்தை நமக்கு உணர்த்துகின்றன. தொடர்ந்து இனிப்பையே உண்பவர் நாளடைவில் இனிப்பைத்தவிர வேறு சுவை கிட்டாதா!! என்று ஏங்குபவர் போல நமது நிலை மாறிவிடக் கூடாது. எனவே தான் நமது வாழ்க்கையில் இன்பம், துன்பம், கவலை, மகிழ்ச்சி, நஷ்டம், இலாபம், உறவு, பிரிவு, என்று பலவகையான சுவைகளைப் பெற்றிருக்கிறோம். ஓர் சுவையில் ஊறி மயங்கிவிடாது, எச்சுவையையும் ருசித்துப் பார்ப்போம் என்றேத் துணிவோம். நம் வாழ்க்கைக் கட்டிக் கரும்பாய், காட்டுத்தேனாய் இனிக்கட்டும்.        ( எனக்கு இனிப்பு பிரியம். நீங்கள் வேண்டுமானால் சற்று மாற்றி யோசித்து மிளகாய் போல காரமாய் என்று மாற்றிக்கொள்ளுங்கள்) எல்லா சுவைகளையும் பெற்று நலமோடும் வளமோடும் வாழ்வோம் '''''
 என்றும் புன்னகை செய் மனமே..............

Wednesday, 4 June 2014

ஒன்றே செய் ; நன்றே செய்; அதைஇன்றே செய்; என்பர் இதில் நன்றாக செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அதை அன்றே செய்ய வேண்டும் என்று எண்ணாத பலர் இங்குண்டு. எனது நண்பர் ஒருவர் ஒரு நாள், '' வலை தளத்தில் தான் எனது பொன்னான நேரத்தை வீணடிக்கிறேன். கூடிய சீக்கிரமே அனைத்தையும் என்னுடைய அலை பேசியில் இருந்து எடுத்து விடுவேன்'' என்றார் .எப்பொழுது என்றேன். நாளை என்றார். மறு நாள் கேட்டால், ''இன்று என்றா சொன்னேன் , நாளை என்றல்லவா சொன்னேன் என்கிறார். நாளை ,நாளை என்று நாம் சொன்ன நாளை எவர் அறிவார் நம்மையன்றி இவ்வுலகில்? நண்பர் மட்டுமல்ல நானும் இப்படித்தான் . ஏன் சில நேரங்களில் நீங்களும் இப்படித்தான். மனதுக்குள் , இப்படி இருக்க வேண்டும் .அப்படி இருக்க வேண்டும் .அப்படிச் செய்ய வேண்டும் .இப்படிச் செய்யவேண்டும் .என்று பல நேரங்களில் எண்ணுவதுண்டு. ஆனால் எப்போது செய்வது? இன்று வேண்டாம் நாளை செய்யலாம்? நாளை செய்யலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றேன். நானாக நாளைச் செய்தால் (உருவாக்கினால்) அன்றிஅ ந்நாள் ஒருபோதும் வராது. நல்ல எண்ணங்கள், நற்தூண்டுதல்கள் எப்போதும் வாரா! மாறாக எப்போதாவது தான்வரும். தூண்டுதல்கள் கிடைத்தவுடன் செயலில் இறங்குபவரே வெற்றியாளராகிறார். நல்ல துவக்கம் பாதி வெற்றி என்பர். எதுவும் தொடங்கியவுடன் விரைவாக சென்றடைவதில்லை. நன்மை மெதுவாகவே சென்றடையும் ஆனால் நிலைத்து நிற்கும். எனவே நல்லன செய்ய தோன்றும்போதே செய்ய முற்படுவோம் புன்னகை புரிவோம் . எண்ணித்துணிக கருமம் ஏனெனில் வெற்றி நம் கையில்.

Friday, 30 May 2014

பெண்மை

தற்போது முகப்புத்தகத்தில் ஒரு நிகழ்வினை வாசிக்க நேர்ந்தது. தீராத பசியுடன் காட்டில் அலைந்து கொண்டிருந்தது ஒரு பெண் சிங்கம். பசியின் கொடூரத்தால் வன்மையானது பெண்மை. கண்ணில் பட்ட மானொன்றை வேட்டையாடியது. இறந்து கொண்டிருந்த மானின் உடலைத்துண்டு போடும்போது தான் உணர்ந்தது ,தான் கொன்றது சாதாரண மானல்ல, நிறைமாத கர்ப்பிணித்தாய் மான் என்று. சிங்கமே ஆனாலும் பெண்ணல்லவா?தாய் மானின் வயிற்றில் இருக்கும் தளிர் மானைக் காப்பாற்ற எண்ணியது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னரும் குட்டி மானை இறந்த நிலையிலேயே வெளியேற்ற முடிந்தது. இதனால் மனமுடைந்த பெண் சிங்கம் தன்னால் கொல்லப்பட்ட தாய், சேயின் பக்கத்தில் படுத்து தானும் இறந்து தன் தவறுக்கு தண்டணையாக தன் உயிர் விட்டது. மண்ணுலகிற்கு மகிமை சேர்ப்பது பெண்மை. உயர்திணையில் மட்டுமன்று அஃறிணையிலும் பெண்மைப் போற்றுதற்குரியது என்பதற்கு இந்நிகழ்வு சான்று. பெண்மை ,தாய்மை பெண்களுக்குரியது மட்டுமல்ல. உலகத்தார் அனைவருக்கும் உரியது. கதறி அழும் குழந்தைக்காக வருந்தியபோது, நண்பர்களின் கண்ணீர் கண்டு கலங்கியபோது, சகிப்புத் தன்மையுடன் செயல்களை செய்யும்போது, இழப்பில் ஆறுதல் கூறி அரவணைக்கும்போது,...... என பெண்மையிண் குணங்கள் , தாய்மையின் தளிர்கள் நம் அனைவரிடமும் உள்ளன. எனவேப்                     பெண்மையைக் கூறுபோட எண்ணாமல்                     வீறு( நடை )போட வைப்போம் 

 ஏனெனில்பெண்மை ஓர் குணம் மட்டுமல்ல , குன்றா வளம்!!!!! 

பெண்மையை நேசிப்போம்  வளர்ப்போம்,

 பெண்மையில் நிலைப்போம், வளர்வோம் 

 என்றும் 

புன்னகை செய்யும் நம் மனம்.............

Tuesday, 20 May 2014

unakkul unnaith thedu

                  உனக்குள் உன்னைத் தேடு  


  கொலம்பஸ் ஒரு நெசவாளியின் மகன். சிறு வயது முதல் புதியனவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். தரை வழி பயணத்தை விட்டு கடல் வழி பயணம் மூலம் ஒரு புதிய கண்டத்தைக் கண்டறிய முயன்றார். தனது திட்டத்தை பல நாட்டு மன்னர்களிடமும் எடுத்துச் சென்று செயல்படுத்த உதவி கேட்டார்.   அவரது முயற்சிக்கு ஒத்துழைக்க ஒருவரும் முன் வரவில்லை. 10 வருட விடா முயற்சிக்குப் பின் ஸ்பெயின் நாட்டு இளவரசி 3 கப்பல்களும் பயணத்துக்குத் தேவையான உணவும் கொடுக்க முன் வந்தார். கப்பல்கள் மட்டும் போதுமா? கப்பல்களைச் செலுத்த கைதேர்ந்த மாலுமிகள் வேண்டுமே!!!  உயிரைப் பணயம் வைத்து பயணம் செல்ல ஒருவருக்கும் மனமில்லை.  இறுதியில் 39 மரண தண்டனைக் கைதிகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணினார்.           

 எதிர்பார்த்த மரணமா? இல்லை  

 எதிர்பாராத பயணமா? என்ற இரண்டில் 

பயணத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த முயற்சி தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா என்ற கண்டத்தைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது. 

   நெசவாளி மகனின் கனவுத் தறி     

    நினைவுப் பட்டாக பாரினை அலங்கரித்தது.    

 கொலம்பஸ் போல் நீங்களும் புதிய அமெரிக்காவைக் கண்டுபிடியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக நம் ஒவ்வொருவருக்குள்ளும் புதியன படைக்க வேண்டும் என்ற ஒரு கொலம்பஸ் இருக்கிறார் அவரைக் கண்டுபிடியுங்கள் என்று தான் சொல்கிறேன்.  தனது  எதிர்கால வாழ்வு மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணாதவர் எவருமிலர். நமது திறமை எதில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதில் உயர நமது முயற்சிகளைச் செலுத்துவோம்.       

      வெள்ளத் தனைய  மலர்நீட்டம் மாந்தர்தம்                    உள்ளத் தனைய உயர்வு   

Wednesday, 7 May 2014

சோம்பல்

 எவ்வளவு முயற்சித்தும்
 என்னை பிடித்துக் கொண்ட உன்னை
 விடமுடியவில்லை என்னால்.

  பிரியம்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்
உனது பிரியத்தை புரிந்து கொள்ள பிரிவது தான் ஒரே வழி என்றால் விரும்பவில்லை உனது பிரியத்தை புரிந்து கொள்ள.!!!!!!!! 

Sunday, 27 April 2014

மௌனம்

மௌனத்தின் ஆற்றல் அளவிடற்கரியது.
மௌனம் சில நேரம் வெல்லும், சில நேரம் கொல்லும்.
மௌனம் காக்க வேண்டிய நேரத்தில் மௌனம் காப்பதும், பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும் நலம். இதனைச் செய்யாமல் இருப்பதால் தான்  சில பிரச்சனைகளே ஏற்படுகின்றன.!!!! இவ்வுலகிலுள்ள அனைத்துமே மௌனத்தின் மூலமாகத்தான் உருவாகின்றன.  பூக்கள் மலர்வது முதல் , மனிதன் உருவாவது வரை அனைத்துமே மௌனத்தில் தான். மௌனத்தின் மூலமாக பல ஆற்றல்களை நாம் பெறுகின்றோம். சொல்லப் போனால் ஆற்றல்களின் பெட்டகமே நாம் தாம் என்றெல்லாம் படித்தேன். சரி நாமும் மௌனத்தினைக் கடைபிடித்தாலென்ன என்று தோன்றியது. இன்று காலை முதல் மாலை வரை அமைதியாய் இருப்போம். எந்தவிதமான தொலைத்தொடர்புச் சாதனங்களையும் இன்று பயன்படுத்தக் கூடாது. முடிவெடுத்தேன். காலை முதல் மாலை வரை பேசவே இல்லை.    வெற்றி!!!!! வெற்றி!!!!!  என்னாலும் அமைதியாக இருக்க முடிகிறதே என்ற ஆச்சரியம் என்றெல்லாம் சொல்ல ஆசை தான் ஆனால் முடியவில்லை. நான் அமைதியாக இருந்தால் ஏன் சோகமாக இருக்கிறாய்? ஏன் கோபமாக இருக்கிறாய் என்று கேட்கிறார்கள். எதற்கு இந்த வீண் வம்பு. அமைதியாக இருப்பது எவ்வளவு கடினம் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் அதிலும் ஒருசுவை உள்ளது என்று  உணர்ந்து கொண்டேன். இந்த அமைதி கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவருமே வெற்றியாளர் தான். பேசிக் கொண்டே இருப்பதாலும் , பேசாமலே இருப்பதாலும் தானே பிரச்சனை.  அதிகமாகக் கேள்; குறைவாகப் பேசு; என்பார்கள். நம்மில் சிலர் இதனை மாற்றிச் செய்வதனால் தான் வாழ்வில் ஏராளமான குளருபடிகள். அதுசரி  மௌனம்!! மௌனம்!! அமைதி!! அமைதி!! என்றே 300 வார்த்தைகள்  நானே பேசிவிட்டேன்.
 மௌன மொழியைக் கற்று மகிழ்ச்சியாய் வாழ்வோம்; அப்போது, நம் உதடுகள் மட்டுமன்றி  
உள்ளமும் புன்னகை செய்யும்; 


ஆமா அடுத்து எப்ப பேசுவீங்க???????
!!!!!!!!!!!!!!!!!!!!

Sunday, 13 April 2014

         உள்ளம் எனும் வாளி

 
                 சுப்பிரமணிய பாரதி ஒரு முறை வீட்டின் மேல் மாடியில்  உலாவிக் கொண்டிருந்தார். கீழே தெருவில் குள்ளச் சித்தர் கையில் கோணிப்பையுடன் வந்து கொண்டிருந்தார். திடிரென கீழேக் கிடந்த குப்பைக்கூளங்களால் தனதுப் பையை நிரப்ப ஆரம்பித்தார். இதனைக் கண்ட பாரதி மனம் பதறியவராய், விரைந்து கீழே இறங்கினார். சித்தரை நோக்கிச் சென்றவர், ''என்ன காரியம் செய்கிறீர்கள்? குப்பைகளால் கோணியை ஏன் நிரப்புகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்றார். பாரதியை மேலும் கீழும் பார்த்துவிட்டு சித்தர், ''நான் நினைத்தால் இப்போதே இந்தக் குப்பைகளைக் கீழேக் கொட்டி என் கோணியைத் தூய்மைப் படுத்த முடியும். உன்னால் உன் மனதிலுள்ள குப்பைகளைத் தூர எறிந்து உன் மனதைத் தூய்மைப் படுத்த முடியுமா?'' என்றாராம்.

     உள்ளங்கை அளவு இருப்பதாலா? இல்லை உள்ளுக்குள் இருப்பதாலா? எதனால் இதனை உள்ளம் என்கிறோம்?  

சிட்டுக்குருவித் தலையில் பனங்காயைப் போல பல நேரம்
 சிறு இதயத்தில் சில ஆயிரம் கவலைகளைச் சுமக்கிறோம்.

நாம் வாழுகின்ற நிகழ் காலம் ஒன்றே நமது கையில் உள்ளது. அதனை ஏன் நாம் வருத்தங்களாலும் , சுமைகளாலும் நிரப்ப வேண்டும்.? நல்லவைகளால் நம் உள்ளத்தை நிரப்பலாமே.!! 

சிகப்பு நிறத் தண்ணீர் நிறைந்த வாளிகள் இருவரிடம் கொடுக்கப் பட்டன. ஒருவர் கைகளால் தண்ணீரை வெளியேற்றி நல்ல தண்ணீரால் வாளியை நிரப்பினார். கை முழுவதும் சிகப்பு நிறம். மற்றொருவர் தண்ணீர்க் குழாய் அருகில் வாளியை வைத்து நீரால் நிரப்பினார். சில மணி நேரத்தில் சிகப்பு நிறம் தானாக மறைந்து வாளி முழுவதும் நல்ல நீரால் நிரம்பியது. ( சிகப்புத் தண்ணீர் தரையில் கொட்டி, தரை கறையாகுமே என்று கவலைப் பட வேண்டாம். குழாய் வழியே உருண்டோடி அதள பாதாளச் சாக்கடையைச் சென்றடைந்து விட்டது. கவலை வேண்டாம்.)  
    
 நான் சொல்ல விரும்புவது இது தான் கவலையை வெளியேற்ற வழி தேடாதீர்கள். நன்மைகளால் , மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய நற்காரியங்களால் மனதை நிரப்புங்கள். அப்புறம் பாருங்கள் 

என்றும்  இனிமை, எதிலும் புதுமை, 
மகிழ்வென்னும் கடலில் நம் உள்ளம் எனும் வாளியை போட்டு விட்டால் அதை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. வாழ்வது ஒருமுறை அதை சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோமே!!!!!!!!
   
ஆமா உங்க வாளி (உள்ளம்) முதல்ல உங்கக்கிட்ட இருக்கா? 

Saturday, 12 April 2014

                                    உங்க வயசு எத்தனை?
      
     நம்பவே முடியலை. உங்களுக்கு இத்தனை வயசா?
(ரொம்ப கம்மியா சொல்றீங்க? என்ன அதிகமா சொல்றீங்க? என்று இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம்.)
எனக்கும் என் நண்பருக்கும் இன்று ஓர் விவாதம் நடைபெற்றது.  அவர் என்னை விட ஓர் வயது மூத்தவர். ஆனால் யாரும் நம்ப மாட்டார். ஏனெனில் நம் உடல் வாகு அப்படி. சரி விசயத்துக்கு வருவோம். வயது என்பது உடல் வளர்ச்சியைப் பொறுத்ததா? இல்லை, உள்ள வளர்ச்சியைப் பொறுத்ததா என்பது தான்  கேள்வி. 
     இங்கு ஒருவரிடம் வயதைக் கேட்டால், நீங்களே கண்டு பிடியுங்கள் என்பர். அதிகமாகச் சொன்னால் முகம் சுண்டிப் போய்விடும். குறைத்துச் சொன்னால் ஆகாயச் சூரியனே அஸ்தமம் இல்லாமல் அகத்தை அலங்கரிக்கும். தொடக்கத்தில் நானும் இப்படித் தான் வயதை யாரேனும் கூட்டிச் சொன்னால் உள்ளுக்குள் ஓர் அமிலச் சுரப்பியே அருவியாக ஓடும். என்னைப் பார்த்தால் அவ்வளவு வயசானவராகவாத் தெரிகிறது என்று கேட்கத் தோன்றும். ஆனால்,
       
      '' வயது உடல் வாகைப் பொருத்து அல்ல நீங்கள்
     வாழும் வாழ்க்கையைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது'' 
என்று படித்ததும் தெளிவு பெற்றேன். 
உடல் பருமனானவரை  வயதானவர் என்றும், மெலிந்த உடல் உடையவரை இளமையானவர் என்றும் கருதுவது தவறு. நாம் நமது வாழ்க்கையில் பிறருடன் பழகும் முறையில் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கிறோம் என்பதை அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் .என்னை இப்போது யாராவது வயதைக் கூட்டிச் சொன்னால் கவலையேப் படுவதில்லை.  ஏனெனில் நான் பழகும் விதத்தில் முதிர்ச்சி பெற்றவராயிருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன். உங்கள் வயதையும் யாராவது கூட்டிச் சொன்னால் கவலை வேண்டாம். ஏனெனில் நாம்  உள்ள முதிர்ச்சி பெற்றவர்கள்.
   வயது என்பது உடல் வளர்ச்சியைப் பொறுத்து அல்ல
 உள்ள வளர்ச்சியைப் பொறுத்தே என்பது எனது கருத்து.
           
                      ஆமா உங்க வயசு என்ன?  

Friday, 11 April 2014

                            நட்பு

               தூரமோ, காலமோ, சூழலோ, 
                   
          நல்ல நட்பை ஒருபோதும்

பிரிப்பதில்லை


  மழை நின்ற பிறகும்

     மரக்கிளைகளை ஆட்டி

        மழைத்துளிகளில் நனைந்து
   
           மகிழும் சிறுவர்கள் போல

              அவர் தம் நினைவுகள்

 மகிழம் பூவாய் மணந்து மகிழ்வூட்டும்


        மாறாக மனதை விட்டு அகலா   .........                                                                                                                                                                                                                                                               

Thursday, 10 April 2014

                                    அனிச்ச மலரும் அடுக்கு மல்லியும்
                    
               எத்தனை விதங்களில் மனிதர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!
     பலவிதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம்.  சிலரைப் பார்க்கத் துடிக்கிறோம். சிலரைப் பார்த்தாலேத் துடிக்கிறோம். தான் மகிழ்ந்து வாழ்பவர்கள் சிலர்; தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள் சிலர்; தான் மகிழாவிட்டாலும் பிறர் மகிழ வேண்டும் என்று வாழ்பவர்கள் சிலர்;  நான் ரொம்ப எதார்த்தவாதி நினைத்ததை சொல்லி விடுவேன் , சொன்னதை வாழ்ந்து விடுவேன் என்று வாழ்பவர்கள் சிலர்.
    நான் எப்படி இருக்கிறேன் என்று இன்றைய தினம் சிந்தித்துப் பார்த்தேன். நான் இப்படித் தான் என்று என்னை எதிலும் நிலை நிறுத்த முடியவில்லை.  காரணம் இவை அனைத்தும் கலந்த ஒரு கலவையாகத் தான் நான் 
இருந்திருக்கிறேன்.  எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே.  நான் பார்க்கும் மனிதர்களும்  பல விதங்களில் உள்ளனர்.  எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  சிலரிடம் கோபப்படலாம்; திட்டலாம்; பகிரலாம்; மனதில் எதுவும் நினைக்க மாட்டார். மன உறுதி உடையவர்; சிலரிடம் எதுவும் சொல்ல முடியாது எளிதில் உணர்ச்சி வசப்படுவர்.  மனவருத்தம் அடைவர். மிக மென்மையான மனம் உடையவர்.  இவ்வாறாக  பலவிதமான மனிதர்கள்.

அடுக்கு மல்லி ----- அழகு , நறுமணம், எளிதில் வாடாது, காய்ந்த பின்னும் மணம் இருக்கும். இவர்கள்                                                உறுதியான   மனம் உடையவர். 

அனிச்ச மலர்  ----- அழகு, தூய்மை, மென்மையானது, மூச்சுக் காற்றுக்கே வாடிவிடும், இவர்கள்
மென்மையான மனம் உடையவர்.
  
எதார்த்தவாதியாய் இருப்பது நல்லது தான்  ஆனால்
 அதனால் ஏதேனும் சிறிது பயன்  இருந்தால் நல்லது.

உள்ளதைப் பேசுகிறேன் என்று உள்ளத்தை நோகடிக்காதிருப்போம்

ஏனெனில் நாம் வாழும் உலகில் அனிச்ச மலர்கள் கூட நமக்கு அடுக்கு மல்லிகளாய்த் தெரியும்.
 அடுக்கு மல்லியை மலரவைப்பது மட்டும் நமது நோக்கமல்ல, அனிச்ச மலர்களை வாட விடாதிருப்பதுமே.

     அனிச்ச மலர்களை நேசிப்போம்; அடுக்கு மல்லிகளாய் வாழ்வோம்;


Wednesday, 9 April 2014

 எதிர்பார்ப்பு

''எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன''.  
''எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் எதிர்வருவது தானாக நிறையும்'' 
என்றெல்லாம் நிறைய வாசகங்களைக் கேட்டிருக்கிறேன்.  பிறருக்கும் சொல்லி இருக்கிறேன்.  ஆனால் இன்று எதிர்பார் உன் எதிர்கால வாழ்வு என்னவென்று எதிர்பார் என்று தோன்றியது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அது என்றோ ஓர் நாள் என்னுடைய கனவு. இன்று என்ன எதிர்பார்க்கிறேனோ அது நாளைய என் வாழ்வு.
    ஆம் நாம் கேட்டவை அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம். கேளுங்கள்; நம்புங்கள்; பெறுங்கள்; இயேசுவால் குணம் பெற்ற பலரும் முதலில் குண்ம் பெற விரும்பினர். இயேசுவிடம் கேட்டனர்.  இயேசு குணம் தருவார் , நாம் குணம் பெறுவோம் என்று நம்பினர்.  கேட்டதைப் பெற்றுக்கொண்டனர். நானும் தான் 6வருடங்களாக, மாதங்களாக, நாட்களாகக் கேட்கிறேன். எதுவும் கிடைக்கவில்லையே என்று கேள்வி கேட்பது எனக்குக் கேட்கிறது. 
இரத்தப் போக்குடையப்பெண், முடக்குவாதமுற்றவர், பார்வையற்றவர், பேச்சிழ்ந்தவர், பாவிகள்,.......... என்று விவிலியத்தில் இயேசுவால் குணம் பெற்ற அனைவரும் நோயுற்றவுடன் குணமடையவில்லை. அவரவர் நம்பிக்கை எத்ர்பார்ப்பின் அளவைப் பொறுத்தே குணம் பெற்றனர். நம்பிக்கையுடன் கேட்டு , அதனைப் பெற்றுக் கொள்கிறேன் என்ற நல்ல மனம் உடையவர்கள் மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர். நம் வானகத் தந்தை நிறைவுள்ளவர். கேட்போம்; நம்புவோம்; பெறுவோம்;
     நம் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தை நிர்ண்யிப்பவை எனவே நல்லவற்றை எதிர்பார்ப்போம் நலமுடன் வாழ்வோம்.

Sunday, 6 April 2014

                       புன்னகை
         புன்னகை அக அழகை கூர்மைப்படுத்தி, புற அழகுக்கு மெருகூட்டுவது. மழலையின் சிரிப்பில் மயங்காதவரும்,மட்டற்ற மகிழ்ச்சியில் புன்னகைக்காதவரும் இல்லை. புன்னகை ஓர் மருந்து. இலவச மருந்து,இயற்கை மருந்து.  வாழ்விற்கு ஊட்டம் அளிக்கக்கூடிய சத்து மருந்து. இம்மருந்தின் பற்றாக்குறையினால் தான் பலருக்கு வாழ்வில் நலமே இல்லை. நாமும் ஓர் மருத்துவரானால் என்ன என்று இன்று தோன்றியது. புன்னகை என்னும் மருந்தை அனைவருக்கும் கொடுப்போம், நலமளிப்போம் என்று உறுதி கொண்டேன். இன்று பார்க்கும் அனைவரையும் புன்னகைக்கும் முகத்துடன் வாழ்த்த எண்ணினேன்.( இதற்கு முன்னால் அழுதுகொண்டா இருந்தாய் என்று நினைக்க வேண்டாம்)
        குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், என அனைவரையும் புன்னகையுடன் வாழ்த்தினேன். என்ன ஆச்சரியம்!!!!!!!! கொடுத்ததையே திரும்பப்பெற்றேன் மகிழ்வாக.! இயற்கை மருந்தினை நானும் திரும்பப் பெற்றுக்கொண்டேன். இதற்கு முன்னால் முகம் வாடியவாறு பார்த்த மனிதர்களும் முகம் மலர்ந்தனர்.
        நோயினால் நொந்தவர், முதுமையினால் வருந்தியவர், வேலைப்பளுவினால் அயர்ந்தவர், பிரச்சனையினால் குழம்பியவர் என அனைவர் முகத்திலும் புன்னகை என்னும் அணிகலன் அணியப்பட்டதும் அழகு பெற்றவராகத் திகழ்ந்தனர். இன்று ஒரு நாள் பயிற்சித்த இதனை  தொடர் ந்து ஏன் செயல்படுத்தக் கூடாது என்று எண்ணினேன்.தொடர் ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  
        நமது மனம் வாடினாலும் பிறர் மனதை மகிழச் செய்ய வேண்டும்.
              பகிர்ந்து வாழ்; மகிழ்ந்து பணி செய் ;
  என்ற விருது வாக்கை வாழ்க்கையாக்குகிறேன். காசா பணமா சிரிப்பு தானங்க சும்மா சிரிங்க . அதிகமா இல்லை, அளவா! சரியா?
                        புன்னகை செய் மனமே...............
              

Saturday, 5 April 2014

                    உறவுகள் உன்னதமானவை.


 உறவு- உறவாடுவது,உடனிருப்பது.  உள்ளம் ஒன்றி உறவாடுவதே உறவு. உறவு மிகவும் வலிமையானது.  இதை உணர்த்தத்தானோ என்னவோ உறவில் ற என்ற வல்லின ற கரம்  இடம்பெற்றிருக்கிறது. நம்முடைய உறவுகளான அம்மா, அப்பா, சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருமே இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட மிகச் சிறந்ந பரிசுகள். பிறந்தது முதல் இன்று வரை உறவென்னும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். சிலவற்றை விரும்பிப் பெறுகிறோம். சிலவற்றைப் பெற்ற பின் விரும்புகிறோம். சிலர் உறவுகளை
            '' ஆணின் நட்பு ஆயுள் உள்ளவரை
                      பெண்ணின் நட்பு பந்தக்கால்  நாட்டும் வரை''
 என்று விமர்சிப்பதுண்டு.இதில் எனக்கு சிரிதும் உடன்பாடு இல்லை. உறவுகள் உண்மையானவை , உன்னதமானவை அவை உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். அவை ஆண் பெண் என்று பார்த்து வருவதில்லை. அது உள்ளம் சார்ந்தது. சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கிறது. பேசத் தோன்றுகிறது . இவை எதனால்? உறவால்....
          உறவுகளைத் தேடித் தேடி நாம் பெற வேண்டியதில்லை. அவை நம்மைத் தேடி வரும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே. பயணத்தில் பக்கத்து இருக்கையில் பயணம் செய்பவர்.
வழி கேட்டு வருந்தி நிற்கையில் வழி காட்டுபவர்.
 பார்த்தவுடன் புன்னகைத்து மகிழ்வூட்டுபவர்.
என்று அனுதினமும்  நாம் உறவுகளால் உரமூட்டப்படுகிறோம். 7 மாதங்களூக்குப் பிறகு  90 வயது மதிக்கத்தக்க ஓர் மனிதரை மீண்டும் பார்க்க நேர்ந்தது. கண்டவுடன் கண்கலங்கினார். வயோதிகர், உடல் நலமில்லாதவர், தனியாய் பேருந்தில் பயணம் செய்து என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.நினைக்கும்போதே மனம் என்னவோ பண்ணியது.
                        அவர் சொன்னது ''நீயும் நானும் தந்தையும் மகளுமாய் முன்பு                                                 இரு ந்திருப்போம். அது மீண்டும் தொடர்கிறது''   ஆம்      நாம்   ச ந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒர் விதத்தில் நமக்கு உறவினர்களே. எனவே எல்லா மனிதர்களையும் நம் உறவுகளாய் நினைத்துக் கொண்டாடுவோம். ஏனெனில் உறவுகள் உன்னதமானவை, உண்மையானவை. பெற்ற உறவுகளைப் பேணிக்காப்போம்  

Thursday, 3 April 2014

                                                                    
 தமிழில் உள்ள ஓர் அருமையான வார்த்தை. ஆனால் தமிழர்களாகிய நாம் அதனை அதிகம் உபயோகிப்பதில்லை.ஆசிரியர்களைப் பார்த்து மாணாக்கர் கூறுவதோடு சரி நமது வணக்கம். அதுவும் வேண்டா வெறுப்பாய்.
பிறரை நாம் மதிப்பதற்கு அடையாளமாய் மரியாதை நிமித்தமாய் சொல்லும் ஒரே வார்த்தை வணக்கம். மேலை நாடுகளில் ஓர் நல்ல பழக்கம் உண்டு.ஆனால் அதனை தெரிந்து செய்கிறார்களா? இல்லை தெரியாமல் செய்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் நல்லது. முன்பின் தெரியாத யாரைப் பார்த்தாலும் காலை வணக்கம், ஹாய், ஹலோ, வாழ்க, என்று கூறும் பழக்கம் உண்டு. நீ யாரென்று எனக்கு தெரியாது ஆனால் நீ நன்றாக வாழ், இந்ந நாள் உனக்கு இனிய நாளாக அமையட்டும் என்று வாழ்த்தும் ஓர் அருமையான பழக்கம். 
நாம் எவ்வாறு வாழ்த்துகிறோம்?
பிறரை வாழ்த்துவது இருக்கட்டும் நம்மில் எத்தனை பேர் நம்மை நாமே வாழ்த்துகிறோம்? நமது பெயரைச் சொல்லி காலை வணக்கம் என்றோ, வாழ்க என்றோ சொல்கின்றோமா?
இனியாவது தொடங்குவோமா? கண்ணாடி பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு நிச்சயம் உண்டு. இனி பார்க்கும் பொழுது சிரித்த முகத்துடன், நமது பெயரைச் சொல்லி ................ காலை  வாழ்க, என்று சொல்லி பழகுவோம். இந்ந நாள் உங்களுக்கு இனிய நாளாகட்டும். வணக்கம்

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...