Saturday, 26 February 2022
தேசிய அறிவியல் தினம்
5. சிலுவைப்பாதை.
Friday, 25 February 2022
4. ஊதா நிறம்
3. நாற்பது நாட்கள்
2. சாம்பல்
தவக்காலம் அருளின் காலம்
Wednesday, 23 February 2022
வார்த்தை என்னும் வண்ணஜாலம்
Tuesday, 22 February 2022
உலக தாய் மொழி தினம்.
இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வணக்கம் அன்பு உள்ளங்களே பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினம். உலகத்துல கிட்டதட்ட 7000 தாய் மொழிகள் பேசப்படுதுன்னு ஒரு ஆராய்ச்சி கூறுது. அதுல அடையாளம் காணப்பட்ட மொழிகள் நு பார்த்தோம்னா 6000. இதுல 43% மொழிகள் வரி வடிவம் பேச்சு வழக்கு இல்லாம அழிஞ்சிட்டு வருது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை, மரபு பாரம்பரியம் இருக்கு. தாய் மொழிங்கிறது ஒரு மனிதனோட அடையாளம் பெருமை. தாய் மொழியோட சிறப்பையும் பெருமையையும் மக்களுக்கு நினைவு படுத்தி சிறப்பிக்க தான் இந்த நாள் கொண்டாடப்படுது. வழக்கமா உலகளாவிய தினங்கள் கொண்டாடப்படுதுன்னா அதுக்கு காரண காரியம் உலகத்துல மூலை முடுக்குல இருக்கிற ஏதாவது ஒரு இடமா இருக்கும் ஆனா இந்த உலக தாய் மொழி தினம் கொண்டாட காரணம் நம்ம இந்தியா தான்.
1952 ல கிழக்கு பாகிஸ்தான் அதாவது இப்போதைய வங்காளதேச மக்கள் வங்காள மொழியையும் தேசிய மொழியா அறிவிக்கணும்னு போராடுனாங்க அதுல அவங்கள்ல நாலு மாணவர்கள் இறந்தும் போனாங்க. இந்த போராட்டத்துக்கு அப்புறமா தான் கிழக்கு பாகிஸ்தான் தனியா பிரிஞ்சு வங்கதேசமா மாறிச்சு.
1999 ல ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் நடத்திய ஒரு மாநாட்டில தாய்மொழிக்காக போராடி உயிர் நீத்த இந்த நாலு தியாகிகளுக்கு மரியாதை செய்ற விதமா இந்த நாளை உலக தாய் மொழி தினமா கொண்டாட அறிவிச்சாங்க.
தாய் மொழியை பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் தெரியாமல் இன்றைய இளைய சமுதாயம் வளருது. நுனி நாக்கில தமிழ் பேசி அதை கொல்றாங்க கேட்டா அது தான் நாகரீகம் நு சொல்றாங்க. உலகத்துலயே அதிக இலக்கிய நோபல் பரிசுகளை பெற்ற பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களுடைய தாய் மொழியான ப்ரெஞ்சு மொழியில் பேசுறதை இன்னைக்கும் பெருமையாக நினைக்கிறாங்க.
சில நாடுகள்ள ஆங்கில மொழியோட ஆதிக்கம் ஆர்வத்தால தங்களோட தாய் மொழிய சரியா கத்துக்காம இருக்குற மக்களும் இருக்க தான் செய்றாங்க. உலக அளவில 40 % மக்கள் தங்களுடைய தாய் மொழிய சரியா கத்துக்கிறது இல்லைனு யுனெஸ்கோ செய்தி வெளியிட்டு இருக்கு. அதனால இந்த தாய் மொழி தினம் அன்னைக்கு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணும் கிறதும் இவங்களொட நோக்கம்.
மூத்த விஞ்ஞானிகள், அவங்கவங்க துறையில சாதிச்ச எல்லோருமே தாய் மொழியா சரியா கத்துக் கிட்டவங்க தான். தாய் மொழி இல்லாம பிற மொழிகள கத்துக்கிறது சாத்தியம் இல்லன்னு உணர்ந்தவங்க அவங்க.
இன்னைக்கு எல்லாரும் அவங்க அவங்க தாய் மொழியக்கொண்டாடுறாங்க. ஆனா தமிழர்களாகிய நாம மட்டும் தான் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் மொழியக் கொண்டாடுறோம்.
தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை தொடர்ச்சியில் இருக்கிறது.ந்னு சொல்வாங்க. உலகத்துல தொன்மையான மொழிகள் நிறைய இருக்கு ஆனா அது எல்லாம் பேச்சு வழக்கு இருந்தா எழுத்து வடிவம் இல்ல. எழுத்து வடிவம் இருந்தா பேச்சு வழக்கு இல்ல. நம்ம தமிழ் மொழி மட்டும் தான் பேச்சு எழுத்து ந்னு எல்லா விதத்துலயும் வாழ்ந்துட்டும் வளர்ந்துட்டும் இருக்கு. கிரேக்க எபிரேய இலத்தீன் மொழிகள் தொன்மையா இருந்தாலும் பேச்சு வழக்குல் இந்த மொழிகள் அதிகமா இல்லை. ஆனா தொன்மையாவும் தொடர்ந்து பேசப்பட்டும் தொடர்ச்சியான மொழியாவும் இருக்குறது நம்ம தமிழ் மொழி மட்டும் தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு கீழ இருந்தப்ப கூட எந்த விதமான அரசின் முயற்சிகளும் இல்லாம நீடிச்சு நிலச்சு நின்னது நம்ம மொழி மட்டும் தான்.
இந்த மொழியோட சிறப்பையும் மகிமையையும் நாம ஒரு நாளும் மறக்க கூடாது. நம்ம மொழியை நாம நேசிக்கணும் பிற மொழிகளையும் மதிக்கணும். மொழிங்கிறது பண்பாட்டோட மிகப்பெரிய கருவூலம். தொன்மையான மொழிகள் சில அழிஞ்சிட்டு வந்தாலும் புதிய மொழிகள் சில உருவாகிக்கிட்டும் தான் இருக்குது.
தமிழ்நாட்டில திருப்பூர் மாவட்டம் ஆனைக்கட்டி ஊரில தாசணுரு நாராயணன் கிறவரு ஆதன் கிற புதிய மொழியை கண்டு பிடிச்சு ஒரு நாவலும் எழுதி இருக்காரு 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அந்த மொழியை கற்பிக்கவும் செஞ்சிருக்காரு.
இந்தா நாள்ல நம்மோட தாய் மொழியைக் கொண்டாடி மகிழ்றது மட்டும் இல்லாம அடுத்த தலைமுறைக்கும் அந்த சந்தோசத்தை உருவாக்கணும். பிற ,மொழிகளையும் மதிக்க கற்றுக் கொடுப்போம்.
சாவிலும் தமிழ் படித்தே சாக வேண்டும்.
என் சாம்பலிலும் தமிழ் மனமே கமழ வேண்டும்.
பாடையில் படித்துயிலும் போதிலும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்.
ஓடையில் என் சாம்பல் ஓடும் போதினிலும் என் தமிழ் சலசலத்து ஓட வேண்டும்.
அனைவருக்கும் இனிய உலக தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் இன்னும் ஒரு சிறப்பான நாளில் இன்னைக்கு என்ன ஸ்பெசல் மூலமா உங்களை சந்திக்கிறென் நன்ரி வணக்கம்,
Monday, 21 February 2022
திரு விழா வாழ்த்து பிப்ரவரி 17
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் என்று தொடங்கும் வள்ளுவனின் வாக்கிற்கு வாழ்க்கை விளக்கம் கொடுத்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள்.
இல்லறம் தவிர்த்து , இறையோடு மகிழ்ந்து,
தனிமையில் நிலைத்து, தபத்தில் சிறந்து,
துறவை தூய்மையாக போற்றியவர்கள். துற + வு , துற அனைத்தையும் அகிலத்தையும். வு அக,புறச்செயல்களை ஒப்புமையாக்கு என்பதன் அடிப்படையிலேயே துறவு என்ற வார்த்தை உருவானது. அகத்தில் உள்ள மாசுகளையும் புறச்செயல்களான தீயவற்றையும் கைவிட்டு தவிர்த்து வாழ்பவரே உண்மையான துறவி. இத்தகைய துறவு வாழ்வை செம்மையாக வாழ்ந்து செழிப்பான பல பண்பு நலன்களை நமக்கு விட்டு சென்றவர்கள் நம் புனிதர்கள் . இவர்களின் பெருவிழா மகிழ்வில் திளைத்திருக்கும் இவ்வேளையில்
நம் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க பொற்குடத்திற்கு பொட்டிட்டு பொழிவு சேர்க்க திருவிழா வாழ்த்து சொல்ல வருகின்றார். எம் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அன்னை அருட்சகோதரி முனைவர் டெக்லா மேரி அவர்கள். புத்தம் புதிய சிந்தனைகளுடன் புதியன படைக்கும் ஆற்றலுடன் சபையின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் நம் சகோதரி பற்றி சில கருத்துக்கள்..
வரலாறு படிப்பதை விட வரலாறு படைப்பதே மேல் என்றார் ஜவஹர்லால் நேரு. இவர் வரலாறு படித்ததோடு மட்டுமல்லாமல் அதில் வரலாறு படைத்தவரும் கூட.
முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியர்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற முழுமை முத்து.
முப்பது வருடம் பேராசிரியராக தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பணியாற்றியவர்.
நான்கு வருடங்கள் அதே கல்லூரியின் முதல்வராக இருந்து திறம்பட செயல்பட்டவர்.
மூன்று வருடங்கள் மரிய நட்சத்திர மாநிலத்தின் தலைவராக இருந்து மகத்தான பணிகள் செய்தவர்.
சிங்காரமாய் சிறகடிக்க வேண்டியவர்கள் சிறு நொடி உணர்ச்சி பெருக்கால் சிறை செல்கின்றனர். அத்தகைய சிறைவாசிகளை சந்தித்து/ சிந்தித்து சிறக்க/ செயல்பட/ உத்வேகமளிக்கும் சிறைப்பணியை சிரித்த முகத்துடன் செய்தவர்.
சரிந்து கிடக்கும் புத்தகங்கள் நிமிர்ந்து நின்றவர்களின் வாழ்க்கை வரலாறு என்பதற்கேற்ப, தன்னுடைய வழிகாட்டுதலால் இதுவரை 8 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற வழிவகுத்தவர்.
வரலாற்று ஆர்வலராக ஆய்வாளராக இருந்தாலும் மறைப்பணியை மகத்தான பணியாக எண்ணியவர்.
தமிழ் ஆங்கிலம் போர்த்துக்கீசிய மொழிகளில் புலமை பெற்றவர்.
இன்றைய நவீன சூழலுக்கு ஏற்றவாறு மறைக்கல்வியை மாணவர்களுக்கு மகிழ்வுடன் பயிற்றுவித்தவர். தன்னுடைய தொடர் அலுவலிலும், பணிப் பளுவினிலும் நமக்காக நேரம் ஒதுக்கி வாஞ்சையுடன் வாழ்த்து கூற வருகை தருகின்றார். அருட்சகோதரி டெக்லா மேரி அவர்கள் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை இல்லமான சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து.
மனதை நேர்ப் படுத்தி உடலை சீர்படுத்தி, ஆன்மாவை தூய்மைபடுத்தி வாழ்ந்த நம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்களின் திருவிழா இன்று. பந்தயத்தில் பங்கேற்பவர் பல பயிற்சிகளை மேற்கொண்டு போட்டியில் வெற்றி பெற்று பரிசினைப் பெறுவர்.
அது போல அழைத்தலில் மேன்மை கொண்டு, அன்னை மரி பக்தியில் மிளிர்ந்து, குழு வாழ்வில் இனிமை கண்டு, செப வாழ்வில் ஊக்கம் பேற்று, பணி வாழ்வை பாசமுடன்செய்தவர்கள். செபம், தபம் என அனைத்து பயிற்சிகளையும் முறையாக கற்று விண்ணக வாழ்வை இறுதிபரிசாக பெற்று வெற்றி பெற்றவர்கள் நம் புனிதர்கள்.
கசப்பு இல்லாவிடில் இனிப்புக்கு மகிமை இல்லை.
துன்பம் வராவிடில் இன்பத்திற்கு மகத்துவம் இல்லை.
தோல்வி இல்லாவிடில் வெற்றிக்கு வரலாறு இல்லை.
நம் ஏழு புனிதர்களின் வாழ்வு எளிமையான வாழ்வு. ஆனால் ஏற்றம் தரும் வாழ்வு.
புகழ் தேடா வாழ்வு ஆனால் புண்ணிய வாழ்வு.
மறைந்த வாழ்வு ஆனால் மகத்தான வாழ்வு.
இவர்களின் வாழ்வை போல் நமது வாழ்வும் குன்றின் மேல் இட்ட விளக்காக குன்றாமல் சுடர் விட முயற்சிப்போம்.
பயந்தால் பஞ்சு கூட பாரம் தான் இணைந்தால் இரும்பு கூட இறகு தான். நம் சபையின் வரலாறு அறிவோம் வரலாறாய் வாழ்வோம்.
வசைகளையும் இசைகளாய் ஏற்று வலம் வரும்
வாழும் புனிதர்களாய்/ வாழ்ந்திட முயல்வோம். அனைவருக்கும் இனிய மரியின் ஊழியர் சபையின் ஏழு புனிதர்கள் திரு நாள் வாழ்த்துக்கள்.
தவ வாழ்வு
தன்னிலை உணர்ந்து தன்னை திருத்துதலே தபம்.
பசித்திருப்பவரும் தனித்திருப்பவருமே தன்னை யார் என்று உணர்கின்றார். செல்வராக இருந்தும் தன்னை வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவை அரணாக,ஆகட்டும் என்று தன்னையே துறந்த அன்னை மரியை அடிச்சுவடாக கொண்டு
தப நிலையின் மேன்மையினை உணர்ந்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள். அவர்களில் ஒருவரான புனித மனேதுஸ் பற்றியும் அவர் தன்னை ஒறுத்து தப வாழ்வு மேற்கொண்டு புனித நிலை அடைந்ததை பற்றியும் எடுத்துரைக்க வருகின்றார். அருட் தந்தை அமல்ராஜ் அவர்கள் உரோமையில் உள்ள மரியின் ஊழியர் சபையின் தலைமை இல்லத்திலிருந்து.
கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள தன்னை தாழ்த்தி,
கிறிஸ்துவ மதிப்பீடுகளை மக்கள் மத்தியில் உயர்த்தி,
சிலுவை கொண்டே சிறப்பான செயலாற்றியவர் புனித மனேதுஸ். இவர் போல தப வாழ்வின் மேன்மை உணர்ந்து பணி வாழ்விலும் பொது வாழ்விலும் ஏற்படும் சவால்களை துணிவுடன் சந்திப்போம். எண்ணங்களால் உயர்ந்து, ஏற்றங்களால் புது உலகம் படைத்து மகிழ்வோம்.
பணி வாழ்வு
சொன்னதை செய்வது மட்டும் பணி அல்ல, சொல்லாததையும் செய்து மகிழ்விப்பதே மகத்தான பணி.
கடக்க வேண்டும் வீட்டை நாட்டை ஊரை உறவை உணர்வை . இப்படி எல்லாம் இயல்பாய் கடந்து இனிமையாய் பணி செய்தவர்கள் நம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள்.
வாழ்வே பணியாக வாஞ்சையே வடிவமாக வாழ்ந்தவர்களில் முக்கியமனவர் புனித சொஸ்தேனுஸ் இவரின் பணி வாழ்வு அழைத்தல் வாழ்விற்கு எத்துணை சிறப்பு செய்தது என்பதை நமக்கு எடுத்துரைக்க வருகின்றார். அருட்தந்தை ஆல்பர்ட் மைக்கேல் லாரன்ஸ் அவர்கள் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஜீவமாதா இல்லத்திலிருந்து....
https://www.youtube.com/watch?
இன்றைய உழைப்பின் வலி நாளைய வாழ்க்கையின் ஒளி
ஊக்கம் நிறைந்த உழைப்பாளி ஊசி முனையில் கூட நடந்திடுவான்.
ஏக்கம் நிறைந்த சோம்பேறி ஏணிகளாயிரம் இருப்பினும் எழ மாட்டான். அவ்வகையில் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் இறைத்திருவுளம் அறிந்து பணிகள் பல செய்து பரமனை மகிழ்வித்தவர் நம் புனிதர். சமுதாய தேவைகளை சட்டென்று உணர்ந்து சரிசமமாக பழகி சேவை செய்தவர். குறிப்பறிந்து உதவி செய்து குன்றா பணியாற்றியவர். தாங்கள் வாழ்ந்த சமுக மக்களிடம் இயல்பாய் பழகி இனிமையாய் பணி செய்த நம் சபையின் புனிதர்கள் போன்று நாமும் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நம் பணி வாழ்வை மெருகேற்றி மேன்மையடைவோம்.
செப வாழ்வு
கடவுளை நெருங்க உதவுவது ஜெபம்.
பெற்ற நன்மைக்கு நன்றி நவில்வது ஜெபம்.இறைப் புகழ் பாட வைப்பது ஜெபம்.
பாவமன்னிப்புக்கு வழிகாட்டுவது ஜெபம். ஜெபமின்றி இறை வழிபாடின்றி இவ்வுலகில் எதுவுமில்லை. ஓருயிர் முதல் ஆறுயிர் வரை அனைத்தும் படைத்த இறைவனை தத்தம் மொழியால் வாழ்த்தி வழிபடுகின்றன. தனிமையில் செபித்து தன்னிகரில்லா தலைவனாய் திகழ்ந்தவர்களும் உண்டு. குடும்பமாக கூடி செபித்து கோடி நன்மைகள் பெற்றவரும் உண்டு. இவர்களுக்கு மத்தியில் தனிமையையும் அமைதியையும் தங்களின் சொத்தாக கொண்டு இறைப்புகழ் பாடி இறைவனோடு நெருங்கி உரையாடி உறவாடியவர்கள் நம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள். செபமே வெற்றி தரும் என்பதை தங்களது வாழ்வால் எடுத்துரைத்து மகிழ்ந்த ஏழு புனிதர்களில் ஒருவரான புனித அமதேயுஸ் பற்றியும் அவரது செப வாழ்வு நம்முடைய வாழ்விற்கு எவ்வளவு தேவை என்பதைப் பற்றியும் அறிவுறுத்த வருகிறார். அருட்சகோதரர் பிலிப். உரோமை இத்தாலி.
சுய நலமில்லா செபம் சுவர்க்க வாசலின் வாசம் அறிய உதவும்.
பகைமை இல்லா செபம் பரஸ்பர அன்பு தன்னை வெளிப்படுத்தி மகிழும்.
வார்த்தை இல்லா மௌன செபம் வாழ்வின் அர்த்தம் உணர்த்தி விடும். செபம் துறவிகளாகிய நமக்கு மூச்சுக் காற்று போன்றது. உண்ண மறந்தாளும் மறப்போம் சுவாசிக்க மறக்க மாட்டோம். வாழ்வின் ஊற்றும் மையமும் இறைவன் தான் என்பதை செபத்தின் மூலம் உணர்ந்தவர் உணார்த்தியவர் நம் புனிதர் அமதேயுஸ் செபத்தின் வல்லமையினால் தலையில் அருட்கதிர் சுடர் விடும் அழகில் தோன்றும் இவர், செபம் என்னும் நங்கூரம் கொண்டு துறவு வாழ்வென்னும் கப்பலை இறைக்கடலில் நிற்க வைக்க சொல்கின்றார். ஆழ்கடலில் போடப்படும் நங்கூரம் ஆயிரக்கணக்கான பணிகளை செய்யும். நமது வாழ்வும் செப நங்கூரமிட்டு நற்பணிகளை செய்யட்டும்.
குழு வாழ்வின் மேன்மை
கூட்டு வாழ்வின் மகிமையை காகங்களிடம் கற்றுக் கொள்ளலாம். ஒன்றை அழைத்தால் ஓரினமே ஒன்று திரண்டு விடும். பகிர்ந்துண்டு பல்லுயிர் ஒம்பும் பண்பு கொண்டு வாழ்வே நாம் பரமனால் படைக்கப்பட்டுள்ளோம். குழுமவாழ்வு வாழும் துறவிகள் துறவறத்தை போதிக்கவில்லை அவர்கள் துறவு வாழ்வை வாழ்ந்து காட்டுகிறார்கள். ஒன்றாய் இணைந்து ஓரிடத்தில் இருப்பது மட்டுமல்ல குழும வாழ்வு. ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்படுவதே கூட்டு வாழ்வு என்று இவ்வுலகிற்கு எடுத்துரைத்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள். தொடக்க கால சீடர்களைப் போல ஒரே உள்ளமும் ஒரே உயிரும் கொண்டு ஒரு மனப்பட்டு வாழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான இன்றைய நவநாளில் நாம் நினைவு கூறும் புனிதர் புனித ஹியூக். இவரைப் பற்றியும் இவரின் குழு வாழ்வு எத்தகையதொரு உத்வேகத்தை நமக்கு தருகின்றது என்பது பற்றியும் நமக்கு எடுத்துரைக்க வருகின்றார் அருட்தந்தை சவரி அவர்கள் ரோமையில் உள்ள நம் சபையின் தலைமை இல்லத்திலிருந்து.
https://www.youtube.com/watch?
ஆயிரம் சொந்தம் நம்மைத் தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள். துறவற குழுவில் இறைவனால் கொடுக்கப்பட்ட சொந்தங்களை நண்பர்களாக்கி நட்பிற்கு இலக்கணமாகவும் குழு வாழ்விற்கு இலக்கியமாகவும் தன் வாழ்வை மாற்றியவர் புனித ஹியூக் . இவர் நமக்கு காட்டிச் சென்ற வழியைப் பின்பற்றி நம் உடன் சகோதர சகோதரிகளை முழு மனதுடன் நிறை குறையோடு ஏற்று அன்பு செய்வோம். காலம் கருணை திறமை என அனைத்தையும் குழுவில் பகிர்ந்து கிறிஸ்துவின் சீடர்கள் நாம் என்பதை இவ்வுலகிற்கு இனிதே எடுத்துரைப்போம்.
அன்னை மரி மேல் பக்தி
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும் அன்னை போல் நம்மை அன்பு செய்ய இவ்வுலகில் யாருண்டு. வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் சோதனைகளில் அவரின் அருகிருப்பும் ஆலோசனையும் ஆயிரம் யானை பலம் தருவதுண்டு. அன்னைக்கே இத்தனை சிறப்பென்றால் அன்னை மரி அன்னையர்க்கெல்லாம் மாதிரிகை முன்னோடி. அவரின் ஆறுதலுக்கும் அரவணைப்பிற்கும் அகில உலக அன்னையர் அன்பு தலைவணங்கும். இத்தகைய அன்னை மரி மேல் கொண்ட அன்பினாலும் ஆழ்ந்த பக்தியினாலும் துறவுவாழ்வில் சிறப்புற்று திகழ்ந்தவர் இன்றைய நாளில் நாம் நவநாள் சிறப்பிக்கும் புனித அலெக்சிஸ் . அன்னை மரி மேல் இவர் கொண்ட பக்தி நமது வாழ்வில் எவ்வாறு மிளிர வேண்டும் என்பதை எடுத்துரைக்க வருகின்றார் அருட் தந்தை டென்னிஸ் அவர்கள் உரோமாபுரியின் மரியானோ இல்லத்திலிருந்து,,,
https://www.youtube.com/watch?
வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த சொல் அம்மா. எதிர்பார்ப்பில்லா உறவின் அடையாளம் அம்மா. அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். அன்னை மரியாள் மேல் கொண்ட பக்தியால் தனது துறவு வாழ்வில் நீடித்து நிலைத்து நின்றார் நம் புனிதர் அலெக்சிஸ். குழந்தை இயேசுவை நோக்கி தம் கை களை நீட்டுவது போலவும், அவரிடம் இருந்து மலர் வளையம் பெறுவது போலவும் இருக்கும் படங்கள் நம் புனிதரை அடையாளப்படுத்துகின்றன. இதனை அன்னை மரி மேல் கொண்ட அன்பிற்கு அவர் தம் அன்பு மகன் தரும் பரிசு என்று சொன்னால் கூட மிகையாகாது. ஆண்டுகள் பல கடந்தாலும் நம் அன்னைக்கு நாம் என்றும் குழந்தைகள் தான்.
அவர் மீது நாம் காட்டும் அன்பே பக்தியாக பக்தி முயற்சியாக வெளிப்படுகின்றது. சாதாரண மக்களே அன்னைமரி மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கும் போது நாம் அன்னை மரியின் ஊழியர்கள் . எனவே அவர் மீதான அன்பு நம்மில் அதிகமாக இருப்பது இயல்பு. இதற்கு காரணமும் அன்னையே.
இறைவனை அன்பு செய்து, இறை விருப்பத்தை நிறைவு செய்து, இறைவனுக்கு பணி செய்தவர் நம் தாய். அவர் அன்று கற்பித்ததை இன்று நம் வாழ்வில் பயிற்சிக்கின்றோம். நமது புனிதர் அலெக்சிஸ் போல அன்னை மரி மேல் அளவற்ற பக்தி கொண்டு அவரின் பாதுகாப்பில் நம் வாழ்வை ஒப்படைப்போம். இறைவனை எவ்வாறு முழுமையாக அன்பு செய்வது என்பதை தன் வாழ்வால் எண்பித்த அன்னை மரியாள் போல அவரின் ஊழியர்களாகிய நாமும் செயல்படுவோம். ஆகட்டும் என்ற ஒற்றை சொல்லால் அகிலத்தை அரவணத்த நம் தாய் போல நம் வாழ்வாலும் பணியாலும் அன்னை மரியின் பக்தியை அகிலமெங்கும் பரப்புவோம்.
அழைத்தலின் மேன்மை
அழைக்கப்பட்டோர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்டோர் சிலர். அவ்வகையில் அன்னை மரி மேல் கொண்ட அன்பினால் ஈர்க்கப்பட்டு அனைத்தையும் துறந்தவர்கள் தான் இன்று நாம் நவனாள் சிறப்பிக்கும் மரியின் ஊழியர் சபையின் ஏழு புனிதர்கள். அன்புப்பணி செய்ய ஆண்டவனிடமிருந்து வரும் அற்புத வாய்ப்பு அழைப்பு. ஒவ்வொருவரின் அழைப்பும் ஒராயிரம் அர்த்தம் சொல்லும் அதிலும் நம் புனிதர்களின் அழைப்பு நம்முடைய வாழ்விற்கு வழி சொல்லும்.
முதல் நாளான இன்று அழைத்தலின் மேன்மை குறித்தும் எழுவரில் முதல்வரான புனித பொன்பீலியூஸ் மொனால்டி என்பவரைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்க வருகின்றார். அருட்தந்தை ஆரோக்கிய சாமி சபையின் முதல் இல்லமான இத்தாலி நாட்டில் உள்ள பிளாரன்ஸ் நகரின் மொன்தே செனாரியோ இல்லக் கோவிலில் இருந்து.தானே முன்னேறத் துடிப்பவன் இளைஞன்
தனது சிந்தனையால் பிறரை முன்னேற்றத் துடிப்பவன் கவிஞன்.
இவ்விரண்டையும் உருவாக்க உழைப்பவன் நல்லதொரு தலைவன்.
அவ்வகையில் தலைவனாய் தன்னை மாற்றி தன்னைப் போல் பிறரையும் உயர்த்தி தலைமைப் பண்பில் தலை சிறந்து விளங்கியவர் நம் புனிதர் பொன்பீலியூஸ். கையில் ஒரு ஏடோடும் தோள்பட்டையின் அருகில் ஒரு வெண்புறா இருப்பது போன்ற படங்கள் இவரை நமக்கு இன்னார் என்று எடுத்துரைக்கின்றன.
வெண்புறா தூய்மைக்கும் அமைதிக்கும் தூய ஆவிக்கும் இலக்கணம்.
சபையின் ஒழுங்குகளை தானும் கடைபிடித்து பிறரையும் கடைபிடிக்க செய்தவர். தூய்மை அமைதியை தூய ஆவியின் துணை கொண்டு பயிற்சித்து அழைத்தல் வாழ்வில் ஆழம் கண்டவர்.
சபையின் முதல் தலைவர் முத்தான தலைவர். இவரை மாதிரிகையாகக் கொண்டு நம்முடைய அழைத்தல் வாழ்வின் மேன்மையினை உணர்வோம். சபை ஒழுங்குகளில் உறுதியுடன் இருப்போம். அழைக்கப்பெற்றொம். பிறரையும் நம் வாழ்வால் சொல்லால் செயலால் அழைப்போம். அழைத்தலின் மேன்மையை அகிலமெங்கும் பறைசாற்றிடுவோம்.
யின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள்.
தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் என்னும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகின்றது என்பார்கள். ஏனெனில் தாய் என்பவள் அவ்வளவு சக்தி மிக்கவள். பிறந்த பின் நம்மை நேசிப்பவர்கள் மத்தியில் தாய் நாம் கருவில் உருவான நாள் முதலாய் , நம் உருவம் உருவாக தொடங்கும் முன் நம்மை நேசித்தவள். எத்தனை வயதானாலும் தாய் மீது நாம் கொண்ட பாசமும் மாறாது . அவள் நம்மீது கொண்ட நேசமும் மறையாது. இப்படி அன்னையின் அன்பை பற்றி பேசினால் காலமும் நேரமும் போதாது.
அதிலும் அன்னை மரியாளின் அன்பை பற்றி எடுத்துசொல்ல ஒரு யுகம் போதாது. கிறிஸ்தவ மக்களுக்கு தாயாக பாதுகாவலியாக பரிந்துரைப்பவளாக அன்றும் இன்றும் என்றும் இருப்பவர். அன்னை மரியாளை தங்களின் மாதிரிகையாக கொண்டு இல்லற வாழ்வை விட்டு துறவு வாழ்வை மேற்கொண்ட ஆண்களும் பெண்களும் ஆயிரமாயிரம் பேர். அவர்களில் மிக சிறப்பானோர் மரியின் ஊழியர். பிப்ரவரி 17 அன்று தங்களின் சபை உருவாக காரணமான 7 புனிதர்களை நினைவு கூர்ந்து திருவிழாவினை சிறப்பித்து மகிழ்கின்றனர்.புனித பொன்பீலியூஸ், புனித அலேக்சிஸ் புனித அமதெயுஸ் புனித ஹக் புனித சொஸ்தெணுஸ் புனித மனெதுஸ் புனித போனகுந்தா என்ற இந்த ஏழு புனிதர்களின் திருவிழாவினை நவனாளுடன் சிறப்பித்து கொண்டாடி மகிழ உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
யார் இந்த ஏழு புனிதர்கள்?
இவர்களது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்ககாலம்.
இவர்களது ஊர் இத்தாலி நாட்டில் உள்ள பிளாரன்ஸ் . மிகச்சிறந்த துணி வியாபாரிகள். பெரும் செல்வந்தர்கள்.
கடவுளை மறந்து உலக வாழ்க்கை இன்பங்களிலும், மனம் போன வாழ்விலும் நாட்டம் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்த பகுதி. அழிந்துபோகும் இன்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த மக்கள் மத்தியில் இவர்கள் எழுவரின் ஈடுபாடு இறைவன் மட்டில் இருந்தது. அதிலும் குறிப்பாக அன்னை மரியாள் மீது மிக அதிகமானபக்தி கொண்டிருந்தனர். இவர்களின் அதீத பக்திக்கு பரிசாக 1233 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ம் நாள் அன்னையின் விண்ணேற்பு ப்பெருவிழா அன்று தூய மரியாள் எழுவருக்கும் காட்சி அளித்து துறவு மேற்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். மிக வசதியான செல்வ குடும்பத்தில் பிறந்த இவர்கள் தங்களது சொத்து சுகம் அத்தனையையும் ஒதுக்கி துறவு மேற்கொண்டனர். தங்களது நேரத்தையும் நாட்களையும் செபத்திலும் தவத்திலும் செலவழிக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கி சென்றனர். இவர்களின் இந்த வித்தியாசமான வாழ்வு பலருக்கு வியப்பாக இருந்தது. எனவே இவர்களை தேடிச்சென்று பேச ஆரம்பித்தனர். தனிமையில் இறைவனுடன் உரையாடி செப வாழ்வு மேற்கொள்ள எண்ணிய இவர்களுக்கு பொதுமக்களின் வரவு மிகுந்த இடையூறாக இருந்தது. எனவே மொன்தே செனாரியோ என்னும் உயரிய மலைப் பகுதிக்கு சென்று தங்களுக்கென்று ஒரு ஆலயம் அமைத்து இறைவனோடு உறவாடி மகிழ்ந்தனர். சில நாட்களுக்கு பின் அன்னை மரியாள் ஒரு வானதூதரோடு மீண்டுமாக இவர்களுக்கு காட்சி அளித்து கருப்பு நிற ஆடையை கொடுத்து நான் உங்களை என்னுடைய ஊழியர்களாக தேர்ந்து கொண்டேன். இந்த கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய துறவற ஆடை என்று கூறீ மறைந்து விட்டார். அன்றிலிருந்து இவர்கள் மரியின் ஊழியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
இறைவன் பணி செய்யும் மரியின் ஊழியர்கள் இவர்கள். 1888 அம் ஆண்டு திருந்தந்தை 13ம் லியோ இவர்களை புனிதர்களாக அறிவித்தார். 789 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இச்சபை இன்று 26 நாடுகளில்117 குழுக்களில் கிட்டத்தட்ட 700 துறவிகளை கொண்டு இயங்கி வருகிறது. குழும வாழ்வு, மரியன்னை பக்தி மற்றும் பணி வாழ்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு மரியன்னையின் ஆன்மீகத்தில் இணைந்தவர்கள் இன்று மரியின் ஊழியர் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள் என்னும் பெருமையை அடைகின்றனர். மாறி வரும் உலகில் மரியின் ஊழியர்கள் நம்பிக்கையின் ஊழியர்களாக வலம் வந்து பல பணிகளை ஆற்றுகின்றனர். இவர்களின் பணி சிறக்க செபிப்போம்.
சபை உருவாக காரணமான ஏழு புனிதர்களை தியானித்து ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் நவநாள் கொண்டாடி மகிழ இருக்கின்றோம்.
அழைத்தலின் மேன்மை,அன்னை மரியிடம் நமக்குள்ள பக்தி, குழுவாழ்வு, செப வாழ்வின் தேவை, பணி வாழ்வே அழைத்தலின் சிறப்பு, தபத்தின் தேவை, இறுதிப்பரிசு என்ற தலைப்புகளில் நவநாள் சிறப்பித்து எழு புனிதர்களின் அர்ப்பண உணர்வையும் தப வாழ்வையும் நமதாக்கிக் கொள்வோம். இணைந்து செபித்து இறையாசீர் பெறுவோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...