Saturday, 26 February 2022

தேசிய அறிவியல் தினம்

இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வணக்கம் அன்பு உள்ளங்களே பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம் வழக்கமா நம்ம நாட்டுல தேசத்தலைவர்களோட பிறந்த நாள் நினைவு நாள் இத கொண்டாடுறது தான் வழக்கம். ஆனா இன்னைக்கு யாருடைய பிறந்த நாளும் இல்லை நினைவு நாளும் இல்லை. வழக்கத்துக்கு மாறா ஒருத்தருடைய கண்டுபிடிப்புக்கு அங்கிகாரம் கிடைச்ச நாள். அதையே தேசிய அறிவியல் தினமா கொண்டாட வலியுறுத்தி இருக்காங்க. யார், என்ன கண்டுபிடிச்சார், ஏன் இந்த நாள் நு பார்க்கலாம் வாங்க. இந்திய மண்ணுல நம்ம தமிழ்நாட்டுல பிறந்தவரு தான் சர் சி வி ராமன். பல அரிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிச்சு ஆராய்ஞ்ச்சு வெளியிட்டவரு. இயற்பியல் மேதை. இவர் 1928 பிப்ரவரி 28 ம் தேதி ராமன் விளைவு கண்டுபிடிச்சாரு. அதுக்காக 1930 ல நோபல் பரிசு வாங்கினாரு. அறிவியல் அடித்தட்டு மக்களையும் சென்றடையணும்னு கிற நோக்கத்துல இந்த நாளை நம்ம இந்திய அரசு தேசிய அறிவியல் தினமா அறிவிச்சிருக்காங்க. இந்த நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்படுறதுக்கான நோக்கம் 3 இளம் தலைமுறைகளுக்கு அறிவியலோட சிறப்பை எடுத்துக் கூறணும், புதிய அறிவியல் சிந்தனைகள் கண்டுபிடிச்சு அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரணும். புதிய கண்டுபிடிப்புக்களை வரவேற்கணும். உலக அளவில இந்த நால 2001ல இருந்து நவம்பர் 10 கொண்டாடுறாங்க. நம்ம இந்தியால இது 1986 ல இருந்து பிப்ரவரி 28 கொண்டாடுறாங்க. 1986 ல என் சி எஸ் டி சி இந்த நாள அறிவியல் தினமா கொண்டாட இந்திய அரசாங்கத்து கிட்ட கேட்டாங்க . அரசாங்கமும் அதுக்கு சம்மதிச்சு முதல் தேசிய அறிவியல் தினம் 1987 பிப்ரவரி 28 கொண்டாடப்பட்டுச்சு. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள் ல இந்த நாள் சிறப்பிக்கப்படுது. இந்த வருசத்துக்கான கருப்பொருள் சயின்ஸ் பார் அண்டு வித் சொசைடி அறிவியல் சமூகத்துக்காகவும் சமுகத்துடனும். பள்ளி கல்லூரீகள்ல படிக்கிற மாணவர்கள் தங்களோட அறிவியல் கண்டுபிடிப்புக்களை வெளிப்படுத்துற நாளாவும், தேசிய மாநில அளவில நடத்துற அறிவியல் ஆராய்ச்சிகள உலகத்துக்கு காமிக்கிற நாளவும் இந்த நாள் இருக்கு. மக்களோட கருத்து கணிப்பு தொலைக்காட்சி வானொலி பேட்டிகள் அறிவியல் கண்காட்சிகள், அறிவியல் பற்றிய படங்கள், பேச்சு போட்டி, வினாவிடை போட்டி ந்னு ஏகப்பட்ட நிகழ்ழ்சிகள் வச்சி இந்த நாளை ரொம்ப சிறப்பா கொண்டாடிட்டு வராங்க. இந்த நாள்ல அறிவியல் மேதைகள் மாணவர்கள் ஆசிரியர்கள் நு எல்லரையும் நினைச்சு பார்ப்போம். வாழ்க்கையில் எதையாவது சாதிக்கணும்னு போராடிட்டு இருக்கிற அவங்களுக்கு நம்மோட வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் அனுப்புவோம். யாரோ ஒருத்தர் எதையோ எங்கேயோ கண்டுபிடிக்கிறது தான் இப்ப நாம இருந்த இடத்துல இருந்தே எல்லா வேலைகளையும் செய்ய காரணமா இருக்கு. அறிவியல் கிறது வெறும் புத்தகத்துல இருக்கிறது மட்டுமில்ல. நம்மள் சுத்தி இருக்கிற எல்லாமே அறிவியல் தான்னு புரிஞ்சிக்குவோம். சின்ன சின்ன கண்டுபிடிப்புக்களாவே இருந்தாலும் நம்ம பக்கத்துல இருக்கிறவங்கள உற்சாகப்படுத்தி வாழ்த்துவோம். யாரு தெரியும் நாளைக்கு அவங்களே கூட பெரிய அறிவியல் மேதையா வரலாம். இந்த நாளுக்கு பெருமை சேர்த்த . ராமன் விளைவ கண்டு பிடிச்ச சர் சிவி ராமன் போல தொடர்ந்து நாம் முயற்சிப்போம். வெற்றி கோப்பை நம்மையும் விரைவில் தேடி வரும். மீண்டும் ஒரு நல்ல நாள இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.

5. சிலுவைப்பாதை.

வாழ்க்கை என்னும் ப‌ய‌ண‌த்தில் ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். பாதையும் ப‌ய‌ண‌மும் வேறு வேறு என்றாலும் செல்லும் இட‌ம் என்ன‌வோ ஒன்று தான் . நீ ந‌ட‌ந்து போக‌ பாதை இல்லை என்று எண்ணாதே, முன்னோக்கிச் செல் பாதை தானாக‌ப் பிற‌க்கும் என்ப‌த‌ற்கேற்ப‌ த‌ன‌க்கென‌ ஒரு பாதையை உருவாக்கி அதில் ப‌ய‌ணிக்க‌ ந‌ம்மையும் அழைக்கும் இறை இயேசுவின் பாதை சிலுவை பாதை. ப‌ய‌ண‌த்தில் சிற‌ந்த‌ ப‌ய‌ண‌ம் , பாதையில் சிற‌ந்த‌ பாதை அவ‌ருடைய‌து. துன்ப‌மும் துய‌ர‌மும் நிறைந்த‌ துய‌ர‌பாதை அல்ல‌ அது, துணிவையும் பொறுமையையும் த‌ரும் பொன்னான‌ப் பாதை. இந்த சிலுவை பாதை வழிபாட்டு முறையானது கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. லூத்தரன் ஆங்கிலிக்கன் சபையாரிடம் அவ்வளவாக இல்லை. முதன் முதலில் புனித அசிசியார் காலத்தில் தான் இந்த சிலுவைப்பாதை வழிபாட்டு முறை கொண்டாடப்பட்டது. இயேசு பாடுகள் பட்டு இறந்த இடமான எருசலேம் செல்ல எல்லா மக்களாலும் இயலாது எனவே அந்த ஆசையை நிவர்த்தி செய்ய விரும்பி இத்தாலியில் தான் முதன் முதலில் சிலுவை பாதை வழிபாடானது ஆரம்பமானது. இயேசுவின் பாடுகளை 14 நிலைகளாக பிரித்து, சிந்திக்க தியானிக்க உதவினர். அவர் பட்ட பாடுகளையும் அந்த சூழலையும் புரிந்து கொள்ள ஏதுவாக அந்த 14 நிலைகளும் சிலைகளாக படிமங்களாக செய்யப்பட்டு அதை பார்த்து பயணிக்கும் மக்கள் தங்கள் வாழ்வை மேன்மைப்படுத்திக் கொள்ள வழி செய்தனர். இந்த சிலுவைப்பாதை தவக்காலங்களில் சிறப்பாக கடைபிடிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக பெரிய வெள்ளிக்கிழமைகளில் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றது. ஒரு சில ஊர்களில் நாடகமாக நிஜ மனிதர்கள் தத்ரூபமாக அந்த நிலைகளை நடித்து காட்டி மக்களை பாஸ்கா பரவசத்தில் ஆழ்த்துகின்றனர். பக்தியான முறையில் சிலுவைப்பாதை செய்யப்படும் போது மனிதன் பரிபூரண பலனை அடைகின்றான். எனவே அவ‌ர் பயணித்த பாதையில் ந‌ம் பாத‌ங்க‌ளைப் ப‌திக்க‌ இன்று ந‌ம்மை அழைக்கிறார். ந‌ம‌து பாதையை நாமே தேர்ந்தெடுப்போம். ஏனெனில் ந‌ம்மைய‌ன்றி ந‌ம‌து கால்க‌ளால் வேறு எவ‌ராலும் ந‌ட‌க்க முடியாது. என‌வே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் விழிப்புண‌ர்வுட‌ன் எடுத்து வைக்க‌ இறைவ‌னின் இர‌க்க‌த்தை வேண்டுவோம். ந‌ம‌து வான‌க‌த்த‌ந்தை இர‌க்க‌முள்ள‌வ‌ராய் இருப்ப‌து போல‌ நாமும் உட‌ல‌ள‌விலும் உள்ள‌த்த‌ள‌விலும் இர‌க்க‌முள்ள‌வ‌ர்க‌ளாய் வாழ‌ , உட‌னிருப்ப‌வ‌ர்க‌ளோடு இர‌க்க‌த்தைப் ப‌கிர‌ க‌ருணை இறைவ‌னின் கால‌டிச் சுவ‌டுக‌ளைப் பின் தொட‌ர்வோம் சிலுவைபாதை வழி.

Friday, 25 February 2022

4. ஊதா நிறம்

தவக்காலத்தில் பயன்படுத்தப்படும் ஊதா நிறம் தவத்தின் மனமாற்றத்தின் நோன்பின் அடையாளம். அடர் ஊதா நிறம் நம்முடைய ஒட்டு மொத்த உணர்வுகளின் அடையாளம். சிவப்பு மற்றும் ஊதா நிறங்களின் சேர்க்கையே இந்த நிறம் உருவாகக் காரணம் என்பர் சிலர். சிவப்பு இயேசுவின் பாடுகளையும் ஊதா நிறம் நம்முடைய செயல்பாடுகளையும் குறிக்கிறது. இயேசுவின் பாடுகள் வழி நம்முடைய செயல்பாடுகளை நாம் மாற்றி அமைக்கும் பொழுது நம்முடைய வாழ்வும் பிறருக்கு எடுத்துக்காட்டான வாழ்வாக அமையும். மூன்று காரணத்திற்காக இந்த நிறம் தவக்காலத்தில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 1 அரச நிறம்., பாடுகள், மனமாற்றம், இயேசுவின் காலங்களில் இந்த கத்தரிப்பு நிறம் என்பது அரச நிறம் த கலர் ஆப் ராயல்டி என்று அழைக்கப்பட்டது. இன்றும் ராயல் ப்லு என்பது நடைமுறையில் இருக்கிறது. சாதாரண எளிய மக்களால் இந்த நிற உடைகளை வாங்கி அணிய முடியாது. இயேசு அரசர்களின் அரசர் என்பதை எடுத்துரைக்கவும், நமது பாவங்களுக்காக அவர் அனுபவித்த பாடுகள் இறப்பை நினைவு கூறவும், நமது பாவங்களை எண்ணி மனம் வருந்தவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் வயலட் அல்லது கத்தரிப்பூ நிறம் என்று சொல்லப்படும் நிறங்களில் தான் அருட்தந்தையர்களின் திருப்பலி உடைகளும் ஆலய பீட விரிப்புக்களும் கதவு தொங்கல்களும் இருக்கும். வழக்கமாக நாம் பாவ சங்கீர்த்தனம் செய்யும் போது குருவானவர் பயன்படுத்தும் ஸ்டோல் எனப்படும் மேல் துண்டின் நிறம் எப்போதுமே இந்த நிறம் தான். இறைவா நான் ஒன்றுமில்லை என்னை மன்னித்து ஏற்று வழி நடத்தும் என்பதை வார்த்தையின்றி வண்ணங்களால் சொல்கிறோம். எவ்வாறு பழைய ஏற்பாட்டு மக்கள் சாக்கு உடை உடுத்தி தங்களது நோன்பினை பிறருக்கு எடுத்துக்காட்டினார்களோ அது போல நாமும் நம்முடைய இந்த சிறு செயலால் நம்முடைய தவ நிலையை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டுகிறோம். எந்த விதமான வேலைப்பாடுகளும் இல்லாத ஆடம்பரமில்லாத எளிமையான இந்த நிறம் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் இந்த தவக்காலத்தின் மேன்மையை எடுத்துரைக்கட்டும். அடர் ஊதா நிறம் போல இருக்கும் இயேசுவின் பாடுகள் நமது வாழ்வில் அர்த்தம் சேர்க்கட்டும். நிறத்தின் சிறப்பறிந்து நிறம் மாறாமல் குணம் மாறாமல் தொடர்ந்து நிலைத்திடுவோம்.

3. நாற்பது நாட்கள்

40 லெண்ட் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இவ்வார்த்தையின் மூலச்சொல் இலத்தின் மொழியாகும். குஆத்ராஜெசிமா என்பதற்கு நாற்பதாவது எண் என்று அர்த்தம். இத்தாலியில் குவரெசிமா என்று அழைக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் இலத்தீன் மொழியில் இடம்பெற்ற திருப்பலி செபங்கள் பாடல்கள் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட போது வசந்த காலத்தின் சொற்பிறப்பியல் வேர்களை அடிப்படையாகக் கொண்ட லெண்ட் என்று மாற்றப்பட்டது. ஏனெனினில் இத்தவக்காலம் பெரும்பாலும் வசந்த காலம் எனப்படும் இளவேனிற்காலத்திலேயே கொண்டாடப்படுகிறது. நாற்பது நாட்களும் வசந்த கால நாட்களாக மாற்றம் பெற வேண்டும். 40 என்ற எண் முழுமையின் அடையாளம். விவிலியத்தில் பல இடங்களில் இந்த 40 என்ற எண்ணும் சொல்லும் 98 முறை இடம்பெறுகின்றன. நோவா காலத்து பெருவெள்ளம், மோசேயின் சீனாய் மலைப்பயணம் எலியா இறைவாக்கினர் ஒரேபு மலையை அடைந்தது யோனாஸ் இறைவாக்கினர் காலத்தில் நினிவே மக்கள் நோன்பு ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை பாலைவனத்தில் நடத்தி சென்றது. இயேசு பாலை வனத்தில் சோதிக்கப்பட்டது 40 நாட்கள். இப்படியாக நம்முடைய முன்னோர்களுக்கு மிகவும் முக்கியமான முழுமையான நாளாக இருந்தது இந்த 40 என்ற எண். எனவே தான் 40 நாட்களை முழுமையான தவ நாட்களாக அனுசரிக்க திருச்சபை வலியுறுத்துகிறது. நமது தமிழ் கலாச்சாரத்திலும் ஒரு மண்டலம் 48 நாட்கள் என்பது முக்கியமான ஒன்று. ஒரு மருந்தோ புதிய செயலோ தொடர்ந்து இந்த 40 நாட்கள் செய்யும் போது இயல்பாக நமது உடலும் மனமும் அதற்கு ஏற்றாற்போல மாறிவிடும். பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றான் நீட வாழ்வார் என்ற குறலின் படி ஐம்புலங்களினால் விளையும் ஆசையை அறுத்து பொய்மையில்லாத ஒழுக்க நெறியின்படி வாழ்ந்து உலகம் உள்ளளவும் புகழ் நிலை பெறுவோம். நோன்பு, செபம், தானம் என்பதை அதிகமாக வலியுறுத்தும் இக்காலத்தில் இதனை முழுமையாக கடைபிடித்து வசந்த கால வருகையை வரவேற்போம். முழுமை அங்கு முழுமை இங்கு முழுமையினின்று முழுமை வழிந்தோடுகின்றது முழுமையினின்று முழுமை வழிந்தோடிய பின்பும் முழுமை தங்கி நிற்கின்றது. 40 நாட்களை முழுமையின் அடையாளமாக உணர்ந்து முழுமையின் அடையாளமாம் இயேசுவின் மகிழ்வில் பங்கு கொள்ள முயல்வோம்.

2. சாம்பல்

முழுமையான எரிதலின் இறுதி பொருள் சாம்பல். சாம்பல் தவ நிலையின் அடையாளம். தாழ்ச்சியின் அடையாளம். ஒரு பொருள் நெருப்பில் சுடப்பட்டு தன் இயல்பு நிலை, அழிந்து, உருவம் சிதைந்து தன்னையே உரமாக, காற்றில் கலக்கும் புகையாக தூசாக மாற்றும் நிலை. விபூதி புதனன்று நம் நெற்றியில் பூசப்படும் சாம்பல் இரண்டு விதமான அர்த்தங்களை நமக்கு தெளிவுபடுத்துகிறது. சாம்பல் ஒன்றுமில்லாமையின் அடையாளம். மற்றொன்று ஓங்கிய வீரியத்தின் அடையாளம். நெற்றி நமது உடலின் முதன்மையான அங்கம் வீரத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தும் வித்தியாசமான இடம். மனதின் குழப்பங்களும் சந்தேகங்களும் குபீரென்று கொப்பளிக்கும் இடம். இங்கு மங்கள திலகமிட்டு மகிழ்வு சேர்ப்பவர்களுமுண்டு, மணக்கும் சந்தனமிட்டு மனதை குளிர்விப்பவர்களுமுண்டு, இத்தகைய நெற்றியில் இடப்படும் சாம்பல் நாம் ஒன்றுமில்லாதவர்கள் வெற்று பாத்திரம் வெறுமையின் அடையாளம் தாழ்ச்சியின் அடையாளம் என்பதை உணர்த்துகிறது. சாம்பல் கொண்டு நம் நெற்றியில் வரையப்படும் சிலுவை அடையாளம் வெறுமையான நம்மை மீட்க இருப்பது இந்த திருச்சிலுவை தான் என்பதை எடுத்துரைக்கிறது. கடந்த ஆண்டு குருத்து ஞாயிறன்று பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகள் பத்திரப்படுத்தப்பட்டு விபூதி தினமன்று எரிக்கப்பட்டு சாம்பல் ஆக மாறுகின்றன. சாம்பல் நோன்பின் அடையாளம் தவத்தின் அடையாளம். விவிலியத்தில் சாம்பல் 56 இடங்களில் சொல்லப்படுகின்றது. எசேக்கியல் நூல் 27;30 ல் அவமானத்தின் அடையாளமாகவும், லேவியர் நூல் 6;11 ல் பலியிடுதலின் அடையாளமாகவும், தொடக்க நூல் 37;34 ல் துக்கத்தின் அடையாளமாகவும், யோபு 42;6 ல் மனமாற்றத்தின் அடையாளமாகவும் எபிரேயர் 9;13 ல் தூய்மைப்படுத்துதலின் அடையாளமாகவும் காணப்படுகிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் சாம்பல் பூசி தங்களது தவக்காலத்தினைத் தொடங்கினர். புனிதர்களான பொலிகார்ப் மற்றும் ஐரேனியஸ் விவிலிய நிகழ்வுகளின் அடிப்படையில் இந்நாளினை சாம்பல் பூசி கொண்டாடியதாக தெரிவிக்கின்றனர். 325 ல் கூடிய நிசேயா திருச்சங்கம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடும் முன் 40 நாட்கள் சாம்பல் பூசி துக்க நாட்கள் கடைபிடிப்பதை வலியுறுத்துகிறது. மேலும் 4, 5 ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனிதர்களான அத்தனியூஸின் விழாக்காலக் கடிதங்கள், எருசலேம் நகர் புனித சிரில், புனித முதலாம் லியோ இவர்களின் மடல்களும் கடிதங்களும் 40 நாட்கள் தவம் கடை பிடிக்க வேண்டியதன் கருத்தினை நமக்கு வெளிப்படுத்துகின்றன. சாம்பல் உரமாக பல இடங்களில் பயன்படுகின்றது. இன்று நம்மீது பூசப்பட்ட சாம்பல் நாம் குருத்து ஞாயிறன்று பயன்படுத்திய குருத்தோலைகளின் சாம்பல். குருத்தோலை என்பது வளர்ச்சியின் வெளிப்பாடு. வீரியத்தின் வெளிப்பாடு ஒரு மரம் அல்லது செடி தான் வளர்வதை இவ்வுலகிற்கு உணர்த்தும் வெற்றியின் வெளிப்பாடு. இயேசு என்றும் வாழ்பவர். வீரியமிக்கவர். அவரது வாழ்க்கைப் பயணம் 33 ஆண்டுகளில் முடிந்தாலும் இன்றும் அவரது புகழும் வாழ்வும் வார்த்தையும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆக சாம்பல் போல நமது வாழ்வும் நமக்கும் பிறருக்கும் வளர்ச்சியை வீரியத்தைக் கொடுப்பதாக அமையட்டும். மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறி நம்மீது பூசப்படும் இச்சாம்பல் நமக்கு கிறிஸ்துவின் மேல் கொண்ட அன்பில் வளர்ச்சியையும், கிறிஸ்தவ மதிப்பீடுகள் மேல் நமக்கு வீரியத்தையும் உருவாக்கட்டும். மனம் வருந்துவோம் மன்னிப்பு பெறுவோம். சாம்பல் போல வாழ்வின் இறுதி நிலையிலும் பயனுள்ளவர்களாக வாழ்வோம். சாம்பல் போன்ற நாம் சிலுவை என்னும் மீட்பாலே மீட்கப்பெறுவோம் என்பதை உணர்வோம்.

தவக்காலம் அருளின் காலம்

உலகமெங்கும் வாழக்கூடிய கிறிஸ்தவ மக்களால் 40 நாட்கள் கடைபிடிக்கப்படும் ஒரு காலம். . இறை வேண்டல் தவ முயற்சிகள் தருமம் செய்தல், தன்னொறுத்தல் போன்ற நற்செயல்களை ஊக்குவிக்க பயன்படும் காலம். அதிலும் குறிப்பாக பிறரன்பு செயல்கள் , நோன்பு ,செபம் என்னும் மூன்று செயல்களை அதிகமாக வலியுறுத்தும் காலம். நமக்காக துன்பங்கள் பட்டு இறந்து உயிர்த்த இயேசுவிற்காக நாம் நம்மை ஒறுத்து மேற்கொள்ளும் தவ நாட்கள் இவை. தவக்காலம்? எப்படி யார் கொண்டுவந்தது? 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை மிக சிறப்பாக ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்நாட்களில் திருமுழுக்கு பெற விரும்புபவர்கள், பெரிய பாவம் செய்தவர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் விதமாக மூன்று நாட்கள் தங்களையே வருத்தி, நோன்பிருந்து, சாம்பல் பூசி தவமிருந்து தூய்மைப்படுத்திக் கொண்டனர். அதன் பின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு முன் உள்ள 6 வாரங்கள் பிரிக்கப்பட்டு, பாவம் செய்தவர்கள், மனம் மாற விரும்புபவர்கள் திருச்சபையோடும் கடவுளோடும் மீண்டும் நல்லுறவு கொண்டு வாழ வழி செய்யும் விதமாக, தப நாட்களாக சிறப்பிக்கப்பட்டன. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தபம் அனுசரிக்கப்பட்டது. ஏனெனில் ஞாயிறு இயேசுவின் உயிர்ப்பைக் குறிக்கும் நாள். அதன்பின் இரண்டாம் வத்திக்கான் சங்கம் நிகழ்ந்த பின் அதாவது 1962- 1965 க்கு பின் பெரிய வியாழனுக்கு முந்திய நாள் வரை நோன்பு தபம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு 40 நாட்கள் தவக்காலம் என்று கருதப்பட்டது. ஏன் தவக்காலம்? நான்கு வகை பருவ காலங்கள் உலகத்தில் புழக்கத்தில் உண்டு இளவேனிற் காலம் கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம். தவக்காலம் இதில் இளவேனிற்ககாலம் என்று அழைக்கப்படும் வசந்த காலத்தில் வருகின்றது. போர்வைக்குள் ஒடுங்கி புகலிடம் தேடிய குளிர்காலம் முடிந்து புதிய இலைகளுடன் புது வாழ்வை தொடங்க மரங்கள் எத்தனிக்கும் காலம். இதுவரை வெறுமையாய் இருந்த தன்னை சிறு இதழ்கள் மூலம் அலங்கரிக்க தொடங்கும் காலம். இன்னும் நான் இருக்கிறேன் என்பதை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் காலம். மரங்கள் போல நமது வாழ்வும் வசந்தத்தை நோக்கி வண்ண நடை போட வாய்ப்பளிக்கும் காலம் இத்தவக்காலம். இயேசுவின் வாழ்வில் தபம் . இயேசு தன்னுடைய எல்லா செயல்களையும் தொடங்குவதற்கு முன் தனித்திருந்து செபித்தார் தன்னுடைய 12 வயதில் இறைவேண்டலையும் இறைப்பிரசன்னத்தையும் தேடத் தொடங்கிய இவர் இறுதி வரை தபத்தையும் தனி செபத்தையும் ஒரு போதும் கைவிடவில்லை. பணி தொடங்குவதற்கு செபத்தில் முன் தனித்திருந்தார். புதுமைகள் செய்ய தொடங்கும் முன்னும், செய்து முடித்த பின்னும் இறை செபத்தில் தனித்திருந்தார். தனிமையில் ஒருவருடன் பேசுவதற்கும் கூட்டத்தினர்க்கு மத்தியில் பேசும் போதும் தனித்திருந்து தன்னுடைய செப ஆற்றலைப் பெருக்கிக்கொண்டார். இயேசு தான் வாழ்ந்தது போல நம்மையும் வாழச்சொல்கின்றார். வாழ்ந்து காட்டி விட்டார். வாழ அழைக்கின்றார். அருளை அள்ளித் தாரும் இத்தவக்காலத்தில் தனி செபத்திலும் ஒறுத்தலிலும், பிறரன்பு பணிகளிலும் நம் நேரத்தை செலவிடுவோம். தவக்காலத்தை அருள் தரும் காலமாக மாற்றுவோம். தானங்கள் செய்வோம் பிறரை அன்பு செய்ய. நோன்பு விரதங்கள் இருப்போம் நம்மை அன்பு செய்ய, செபத்தில் நிலைத்திருப்போம் இறைவனை அன்பு செய்ய. ஆக தானம் நோன்பு செபம் அனைத்தும் வலியுறுத்துவது அன்பையே. தவக்காலம் அன்பை வலியுறுத்தும் காலம். அன்பில் நிலைத்திருப்போம். அன்பால் நிலைத்திருப்போம். தவக்காலம் என்னும் வசந்த காலம் வாழ்வில் வளமையை அள்ளித்தரட்டும்.

Wednesday, 23 February 2022

வார்த்தை என்னும் வண்ணஜாலம்

குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுடன் ஓர் ஊரைக் கடந்து மறு ஊருக்கு செல்கின்றார். இவரையும் இவரது போதனைகளையும் பிடிக்காத ஒருவன் இவர்கள் எதிரே வந்து தகாத வார்த்தைகளால் பேசுகின்றான். குரு தனது முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் அவனைக் கடந்து செல்கின்றார். சீடர்களுக்கோ ஆச்சரியம் எப்படி இவரால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது என்று. ஆச்சரியத்தை அடக்க முடியாமல் சீடன் ஒருவன் குருவிடம் இதைக் குறித்து கேட்டும் விடுகிறான். குரு அவனுக்கு பதில் மொழி ஒன்றும் கூறாமல் அழுகிய நிலையில் இருந்த ஒரு பழத்தை கொடுத்து உண்ண சொல்கின்றார். அவன் அதை வாங்க மறுக்கிறான். குரு அவனை வற்புறுத்தி உண்ண சொல்கின்றார். இவனும் பழம் அழுகிய நிலையில் இருக்கிறது இதனை உண்டால் என் உடல் நிலை கெட்டு விடும் ஆகையால் இதனை தன்னால் வாங்கி உண்ண முடியாது என்று மறுபடியும் மறுக்கிறான். குரு அதற்கு மறுமொழியாக,இந்த அழுகிய பழம் போல் தான் அந்த மனிதனின் வார்த்தைகளும். ஒன்றிற்கும் உதவாது அதனை நாம் ஏற்று மனதிற்குள் செலுத்தினால் நமது மனம் உடைந்து விடும். நமது வாழ்க்கைக்கும் பயன்படாது. எனவே நம்மை எதிர்கொள்ளும் அனைவரின் சொற்களையும் நாம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எது நமக்கு நன்மை தருமோ எது நம் வாழ்விற்கு வளம் சேர்க்குமோ அதை மட்டும் ஏற்றால் போதும் நம்முடைய வாழ்வு நலமாக மாறும் என்றார். வார்த்தை வாழ்வளிக்கும் என்பதே இன்றைய வாசகங்கள் அனைத்தும் உணர்த்தும் பாடம். சொல் எனும் மந்திரம். சில சொல் ஆக்கும் சில சொல் அழிக்கும். சில சொல் படைக்கும் சில சொல் பாழாக்கும். சிலருடைய வார்த்தைகள் நம் மனதிற்கு இதமளிக்கும் . சிலருடைய வார்த்தைகள் நம் மனதைக் காயப்படுத்தும். தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்து அமைதியடைந்து இருக்கும் சூழலில் இருக்கின்றோம். எத்தனை விதமான வாக்குறுதிகள், எண்ணிலடங்கா வசன கவிதைகள். சிலரின் வார்த்தை வாழ்வாகின்றது. சிலரின் வார்த்தை வானில் கரைந்த புகையாகின்றது இன்றைய வாசங்கங்கள் வழி நமது வார்த்தை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. நமது வார்த்தைகள் தரமானதாக , திடம் தருவதாக, வலிமையூட்டுவதாக இருக்க அழைக்கின்றன. வார்த்தையின் தரம்: வார்த்தையின் தரத்தினை மேம்படுத்த சொல்லில் உரையாடலில் கவனிக்கும் முறையில் நாம் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். நமது சொல் நெருப்பில் சுடப்பட்ட கலன் போல உடையாமல் உறுதியாக இருக்க வேண்டும். மரத்தின் கனி போல உரையாடலில் இனிமை இருக்க வேண்டும். பிறரைப் புகழ்ந்து பேசும் வார்த்தைகளை விட அவர்களின் சொற்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் யார் எப்படிப் பட்டவர் என்பதை அவர் பேசும் முன் புகழாதே அவர் பேச்சைக் கொண்டே அறிந்து கொள் என்கின்றது முதல் வாசகம். சல்லடையில் தங்கும் உமி போல நமது பேச்சின் முடிவும் சாரமும் நாம் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கிறது. சூளையில் பரிசோதிக்கப்படும் கலன் போல நம்முடைய உரையாடல் நமது தரத்தை வெளிப்படுத்துகிறது. ஆக தரம் என்பது பொருட்களுக்கு மட்டுமல்ல வார்த்தைகளுக்கும் முக்கியம். இன்று சில இடங்களில் வார்த்தைகளின் தரம் மிக மலிந்து போய்விட்டது. தரமற்ற பொருளுக்கே மதிப்பில்லாத போது தரமற்ற வார்த்தைகளுக்கும் அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் மதிப்பில்லாமல் போகிறது. வார்த்தையின் தரம் நிரந் தரமாக இருக்க முயற்சிப்போம். திடமான வார்த்தை: சிலரது வார்த்தைகள் கடினமான சூழலையும் இலகுவாக்கிவிடும். சிலரது வார்த்தைகள் கலகலப்பான வாழ்வையும் கலவர பூமியாக்கிவிடும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம் பெரும் பவுலடியாரின் வார்த்தைகள் சோர்ந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு திடமளிப்பதாக உள்ளது. உறுதியாயிருங்கள். நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து இன்னும் அதிகமாக பணி செய்யுங்கள். என்று திடமான வார்த்தைகளின் மூலம் நம்முடைய வாழ்விற்கு திடமளிக்கின்றார். உறுதி, நிலைத்து நிற்றல், நம்பிக்கை மனம் கொண்டு வார்த்தைகளில் செயல்படுத்த அழைக்கின்றார். வலிமையான வார்த்தை: நற்செய்தி வாசகத்தில் இயேசு மூன்று விதமான வலிமைகளை எடுத்துரைக்கின்றார். 1. உன்னை பார். 2. உள்ளத்தைப் பார். 3. உயர்வைப் பார். 1. உன்னை பார் ; இன்று நம்மில் பலர் செய்ய மறக்கும் மறுக்கும் செயல் இது. தன்னைப் பார்க்காமல் பிறரைப் பார்ப்பது. நம்மிடம் இருக்கும் ஆயிரம் குறைகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை ஆனால் பிறரிடம் இருக்கும் ஒரு சிறு குறை நம் கண்களுக்குள் சென்று உறுத்திவிடும். அதனால் தானோ என்னவோ இயேசு உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து விடு அதன்பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் சிறு துரும்பை எடுக்க உனக்கு நன்றாக கண் தெரியும் என்றாரோ. மரத்துண்டு பெரியது அது கண்ணில் விழுந்தால் கண் பார்வை சரியாக சில பொழுதுகள் ஆகும். நமது குறை நீங்கி நம் பார்வை தெளிவானால் பிறரது நிறை குறைகளை எளிதில் கண்டும் விடலாம் அதை நிவர்ந்தி செய்ய வழிவகையும் செய்து விடலாம். வெறும் குறையை மட்டும் காணாதே குறைக்கான நிவர்த்தியையும் செய் என்கின்றார். உன்னை நீ சரி செய்து கொண்டால் பிறரது குறையை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை சரி செய்யவும் உன்னால் முடியும் என்கின்றார். நம்மைப் பார்ப்போம். நம்மை சரி செய்து கொள்வோம். பார்வை பெறுவோம் அப்போது தான் பார்வையற்றவர்களின் வலி புரியும். குறையுள்ள மனிதனுக்கு குறைபாடுள்ளவனின் நிலை நன்கு புரியும். 2. உள்ளத்தைப் பார்: உள்ளத்தின் நிறைவை வாய் பேசும் என்கின்றார் நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தால் மகிழ்வான வார்த்தைகள் வெளிப்படுகின்றன. துன்பத்தில் ஆழ்ந்து இருக்கும் போது, வருத்தமான வார்த்தைகள் வெளிப்படுகின்றன. மகிழ்வும் துன்பமும் நம்முடைய எண்ணங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. நாம் நல்லவர்களானால் நல்ல கருவூலச்சொற்கள். தீயவர்களானால் தீய கருவூல சொற்கள். ஆக உள்ளம் எப்போதும் நல்லவற்றையே சிந்தித்து நல்லவற்றையே பேச அழைக்கின்றார். நாம் நல்லவற்றை பேசும் போது நம்மை சுற்றிலும் நல்ல எண்ண அலைகள் பரவுகின்றன. அவை நன்மையை மட்டும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன. தீமையை பற்றி பேசும்போது ஏராளமான எதிர்மறை உணர்வுகள் வெளிப்படுகின்றன. அவை தீய நிகழ்வுகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன. எனவே கூடுமானவரை நல்ல எண்ணங்களாலும் செயல்களாலும் நம் மனதை நிரப்புவோம். உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டியல்ல . பலவகை மணம் பரப்பும் மலர்கள் பூக்கும் பூஞ்சோலை. 3. உயர்வைப்பார்: குருவை மிஞ்சிய சீடர் இல்லை ஆனால் தகுந்த தேர்ச்சி பெற்றால் சீடனும் குருவைப் போல ஆகலாம் என்கின்றார். ஆக முயற்சி உயர்வை தரும். முயற்சி செய்கின்ற மனிதன் முன்னேற்றம் அடைகின்றான். எவன் ஒருவன் தன்னுடைய உயர்வை விரும்பி தேடுகின்றானோ அவன் தானும் உயர்கின்றான் தன் அருகில் இருப்போரையும் உயர்த்துகின்றான். எனவே நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும் எப்போதும் உயர்ந்ததாக இருக்க முயற்சிப்போம். எப்போதும் நமது வார்த்தைகள் நமது உயர்வை நோக்கியதாகவும் பிறரையும் உயர்வை நோக்கி அழைத்து செல்வதாகவும் அமையட்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம். ஆக நாம் ஒவ்வொருவரும் உன்னைபார் உள்ளத்தைப் பார் உயர்வைப் பார் என்ற நோக்கில் வாழ முயற்சித்தால் நமது வார்த்தைகள் தரமானதாக திடமானதாக வலிமயானதாக மாறும். நம்மை சுற்றி இருக்கும் சுழலும் தரமானதாக திடமானதாக வலிமையானதாக மாறும். நாம் அனைவரும் நல்ல கனி தரும் நல்ல மரங்கள் நல்ல கருவூலத்திருந்து நல்ல கருத்துக்களை பேசும் நல்லவர்கள் . நன்மைகள் பல செய்து நல்லவர்களாக திகழ இறைவன் ஆசீர் நிறைவாக நம்மில் பொழியப்படுவதாக ஆமென்.

Tuesday, 22 February 2022

உலக தாய் மொழி தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வணக்கம் அன்பு உள்ளங்களே பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினம். உலகத்துல கிட்டதட்ட 7000 தாய் மொழிகள் பேசப்படுதுன்னு ஒரு ஆராய்ச்சி கூறுது. அதுல அடையாளம் காணப்பட்ட மொழிகள் நு பார்த்தோம்னா 6000. இதுல 43% மொழிகள் வரி வடிவம் பேச்சு வழக்கு இல்லாம  அழிஞ்சிட்டு  வருது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை, மரபு பாரம்பரியம் இருக்கு. தாய் மொழிங்கிறது ஒரு மனிதனோட அடையாளம் பெருமை.  தாய் மொழியோட சிறப்பையும் பெருமையையும் மக்களுக்கு நினைவு படுத்தி சிறப்பிக்க தான் இந்த நாள் கொண்டாடப்படுது. வழக்கமா உலகளாவிய தினங்கள் கொண்டாடப்படுதுன்னா அதுக்கு காரண காரியம் உலகத்துல மூலை முடுக்குல இருக்கிற ஏதாவது ஒரு இடமா இருக்கும் ஆனா இந்த உலக தாய் மொழி தினம் கொண்டாட காரணம் நம்ம இந்தியா தான். 

 1952 ல கிழக்கு பாகிஸ்தான் அதாவது இப்போதைய வங்காளதேச  மக்கள் வங்காள மொழியையும் தேசிய மொழியா அறிவிக்கணும்னு போராடுனாங்க அதுல அவங்கள்ல நாலு மாணவர்கள் இறந்தும் போனாங்க. இந்த போராட்டத்துக்கு அப்புறமா தான் கிழக்கு பாகிஸ்தான் தனியா பிரிஞ்சு வங்கதேசமா மாறிச்சு.

 1999 ல ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் நடத்திய ஒரு மாநாட்டில தாய்மொழிக்காக போராடி உயிர் நீத்த இந்த நாலு தியாகிகளுக்கு மரியாதை செய்ற விதமா இந்த நாளை உலக தாய் மொழி தினமா கொண்டாட அறிவிச்சாங்க. 

தாய் மொழியை பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் தெரியாமல் இன்றைய இளைய சமுதாயம் வளருது. நுனி நாக்கில தமிழ் பேசி அதை கொல்றாங்க கேட்டா அது தான் நாகரீகம் நு சொல்றாங்க. உலகத்துலயே அதிக இலக்கிய நோபல் பரிசுகளை பெற்ற பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களுடைய தாய் மொழியான ப்ரெஞ்சு மொழியில் பேசுறதை இன்னைக்கும் பெருமையாக நினைக்கிறாங்க. 

சில நாடுகள்ள ஆங்கில மொழியோட ஆதிக்கம் ஆர்வத்தால தங்களோட தாய் மொழிய  சரியா கத்துக்காம இருக்குற மக்களும் இருக்க தான் செய்றாங்க. உலக அளவில 40 % மக்கள் தங்களுடைய தாய் மொழிய சரியா கத்துக்கிறது இல்லைனு யுனெஸ்கோ செய்தி வெளியிட்டு இருக்கு. அதனால இந்த தாய் மொழி தினம் அன்னைக்கு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணும் கிறதும் இவங்களொட நோக்கம். 

மூத்த விஞ்ஞானிகள், அவங்கவங்க துறையில சாதிச்ச எல்லோருமே தாய் மொழியா சரியா கத்துக் கிட்டவங்க தான். தாய் மொழி இல்லாம பிற மொழிகள கத்துக்கிறது சாத்தியம் இல்லன்னு உணர்ந்தவங்க அவங்க.

இன்னைக்கு  எல்லாரும் அவங்க அவங்க தாய் மொழியக்கொண்டாடுறாங்க. ஆனா தமிழர்களாகிய நாம மட்டும் தான் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் மொழியக் கொண்டாடுறோம். 

தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை தொடர்ச்சியில் இருக்கிறது.ந்னு சொல்வாங்க. உலகத்துல தொன்மையான மொழிகள் நிறைய இருக்கு ஆனா அது எல்லாம் பேச்சு வழக்கு இருந்தா எழுத்து வடிவம் இல்ல. எழுத்து வடிவம் இருந்தா பேச்சு வழக்கு இல்ல.  நம்ம தமிழ் மொழி மட்டும் தான் பேச்சு எழுத்து ந்னு எல்லா விதத்துலயும் வாழ்ந்துட்டும் வளர்ந்துட்டும் இருக்கு. கிரேக்க எபிரேய இலத்தீன் மொழிகள் தொன்மையா இருந்தாலும் பேச்சு வழக்குல் இந்த மொழிகள் அதிகமா இல்லை. ஆனா தொன்மையாவும் தொடர்ந்து பேசப்பட்டும் தொடர்ச்சியான மொழியாவும் இருக்குறது நம்ம தமிழ் மொழி மட்டும் தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு கீழ இருந்தப்ப கூட எந்த விதமான அரசின் முயற்சிகளும் இல்லாம நீடிச்சு  நிலச்சு நின்னது நம்ம மொழி மட்டும் தான். 

இந்த மொழியோட சிறப்பையும் மகிமையையும் நாம ஒரு நாளும் மறக்க கூடாது. நம்ம மொழியை  நாம நேசிக்கணும் பிற மொழிகளையும் மதிக்கணும். மொழிங்கிறது பண்பாட்டோட  மிகப்பெரிய கருவூலம்.  தொன்மையான மொழிகள் சில அழிஞ்சிட்டு வந்தாலும் புதிய மொழிகள் சில உருவாகிக்கிட்டும் தான்  இருக்குது. 

தமிழ்நாட்டில திருப்பூர் மாவட்டம் ஆனைக்கட்டி ஊரில தாசணுரு நாராயணன் கிறவரு ஆதன் கிற புதிய மொழியை கண்டு பிடிச்சு ஒரு நாவலும் எழுதி இருக்காரு 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அந்த மொழியை கற்பிக்கவும் செஞ்சிருக்காரு.

இந்தா நாள்ல நம்மோட தாய் மொழியைக் கொண்டாடி மகிழ்றது மட்டும் இல்லாம அடுத்த தலைமுறைக்கும் அந்த சந்தோசத்தை உருவாக்கணும். பிற ,மொழிகளையும் மதிக்க கற்றுக் கொடுப்போம்.

  

சாவிலும் தமிழ் படித்தே சாக வேண்டும்.

என் சாம்பலிலும் தமிழ் மனமே கமழ வேண்டும்.

பாடையில் படித்துயிலும் போதிலும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும். 

ஓடையில் என் சாம்பல் ஓடும் போதினிலும் என் தமிழ் சலசலத்து ஓட வேண்டும். 

அனைவருக்கும் இனிய உலக தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் இன்னும் ஒரு சிறப்பான நாளில் இன்னைக்கு என்ன ஸ்பெசல் மூலமா உங்களை சந்திக்கிறென் நன்ரி வணக்கம்,   

Monday, 21 February 2022

திரு விழா வாழ்த்து பிப்ரவரி 17



அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்  என்று தொடங்கும் வள்ளுவனின் வாக்கிற்கு வாழ்க்கை விளக்கம் கொடுத்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள்.
இல்லறம் தவிர்த்து , இறையோடு மகிழ்ந்து,
தனிமையில் நிலைத்து, தபத்தில் சிறந்து,
துறவை தூய்மையாக போற்றியவர்கள்.  துற + வு , துற அனைத்தையும் அகிலத்தையும். வு அக,புறச்செயல்களை ஒப்புமையாக்கு என்பதன் அடிப்படையிலேயே  துறவு என்ற வார்த்தை உருவானது.  அகத்தில் உள்ள மாசுகளையும் புறச்செயல்களான தீயவற்றையும் கைவிட்டு தவிர்த்து வாழ்பவரே உண்மையான துறவி. இத்தகைய துறவு வாழ்வை செம்மையாக வாழ்ந்து செழிப்பான பல பண்பு நலன்களை நமக்கு விட்டு சென்றவர்கள் நம் புனிதர்கள் . இவர்களின் பெருவிழா மகிழ்வில் திளைத்திருக்கும் இவ்வேளையில்
நம் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க பொற்குடத்திற்கு பொட்டிட்டு பொழிவு சேர்க்க திருவிழா வாழ்த்து சொல்ல வருகின்றார். எம் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அன்னை அருட்சகோதரி முனைவர் டெக்லா மேரி அவர்கள். புத்தம் புதிய சிந்தனைகளுடன் புதியன படைக்கும் ஆற்றலுடன் சபையின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் நம் சகோதரி பற்றி சில கருத்துக்கள்..

வரலாறு படிப்பதை விட வரலாறு படைப்பதே மேல் என்றார் ஜவஹர்லால் நேரு.  இவர் வரலாறு படித்ததோடு மட்டுமல்லாமல் அதில் வரலாறு படைத்தவரும் கூட.
முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியர்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற முழுமை முத்து.
முப்பது வருடம் பேராசிரியராக தூத்துக்குடி தூய மரியன்னை  கல்லூரியில் பணியாற்றியவர்.
நான்கு வருடங்கள் அதே கல்லூரியின் முதல்வராக இருந்து திறம்பட செயல்பட்டவர்.
மூன்று வருடங்கள் மரிய நட்சத்திர மாநிலத்தின் தலைவராக இருந்து மகத்தான பணிகள் செய்தவர்.
சிங்காரமாய் சிறகடிக்க வேண்டியவர்கள் சிறு நொடி உணர்ச்சி பெருக்கால் சிறை செல்கின்றனர். அத்தகைய சிறைவாசிகளை சந்தித்து/ சிந்தித்து சிறக்க/ செயல்பட/ உத்வேகமளிக்கும் சிறைப்பணியை சிரித்த முகத்துடன் செய்தவர்.
சரிந்து கிடக்கும் புத்தகங்கள் நிமிர்ந்து நின்றவர்களின் வாழ்க்கை வரலாறு என்பதற்கேற்ப, தன்னுடைய வழிகாட்டுதலால் இதுவரை 8 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற வழிவகுத்தவர்.
வரலாற்று ஆர்வலராக ஆய்வாளராக இருந்தாலும் மறைப்பணியை மகத்தான பணியாக எண்ணியவர்.
தமிழ் ஆங்கிலம் போர்த்துக்கீசிய மொழிகளில் புலமை பெற்றவர்.
இன்றைய நவீன சூழலுக்கு ஏற்றவாறு மறைக்கல்வியை மாணவர்களுக்கு மகிழ்வுடன் பயிற்றுவித்தவர். தன்னுடைய தொடர் அலுவலிலும், பணிப் பளுவினிலும் நமக்காக நேரம் ஒதுக்கி வாஞ்சையுடன் வாழ்த்து கூற வருகை தருகின்றார். அருட்சகோதரி டெக்லா மேரி அவர்கள் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை இல்லமான சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து.    

https://www.youtube.com/watch?v=dnqOKstbL1k  
 
மனதை நேர்ப் படுத்தி உடலை சீர்படுத்தி, ஆன்மாவை தூய்மைபடுத்தி வாழ்ந்த நம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்களின் திருவிழா இன்று. பந்தயத்தில் பங்கேற்பவர் பல பயிற்சிகளை மேற்கொண்டு போட்டியில் வெற்றி பெற்று பரிசினைப் பெறுவர்.
அது போல அழைத்தலில் மேன்மை கொண்டு, அன்னை மரி பக்தியில் மிளிர்ந்து, குழு வாழ்வில் இனிமை கண்டு, செப வாழ்வில் ஊக்கம் பேற்று, பணி வாழ்வை பாசமுடன்செய்தவர்கள். செபம், தபம் என அனைத்து பயிற்சிகளையும் முறையாக கற்று விண்ணக வாழ்வை இறுதிபரிசாக பெற்று வெற்றி பெற்றவர்கள் நம் புனிதர்கள்.
கசப்பு இல்லாவிடில் இனிப்புக்கு மகிமை இல்லை.
துன்பம் வராவிடில் இன்பத்திற்கு மகத்துவம் இல்லை.
தோல்வி இல்லாவிடில் வெற்றிக்கு வரலாறு இல்லை.
நம் ஏழு புனிதர்களின் வாழ்வு எளிமையான வாழ்வு. ஆனால் ஏற்றம் தரும் வாழ்வு.
புகழ் தேடா வாழ்வு ஆனால் புண்ணிய வாழ்வு.
மறைந்த வாழ்வு ஆனால் மகத்தான வாழ்வு.
இவர்களின் வாழ்வை போல் நமது வாழ்வும் குன்றின் மேல் இட்ட விளக்காக குன்றாமல் சுடர் விட முயற்சிப்போம்.
பயந்தால் பஞ்சு கூட பாரம் தான் இணைந்தால் இரும்பு கூட இறகு தான். நம் சபையின் வரலாறு அறிவோம் வரலாறாய் வாழ்வோம்.
வசைகளையும் இசைகளாய் ஏற்று வலம் வரும்
வாழும் புனிதர்களாய்/ வாழ்ந்திட முயல்வோம். அனைவருக்கும் இனிய மரியின் ஊழியர் சபையின் ஏழு புனிதர்கள் திரு நாள் வாழ்த்துக்கள்.      

தவ வாழ்வு

 தன்னிலை உணர்ந்து தன்னை திருத்துதலே தபம்.

பசித்திருப்பவரும் தனித்திருப்பவருமே  தன்னை யார் என்று உணர்கின்றார்.  செல்வராக இருந்தும் தன்னை வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவை அரணாக,
ஆகட்டும் என்று தன்னையே துறந்த அன்னை மரியை அடிச்சுவடாக கொண்டு
தப நிலையின் மேன்மையினை உணர்ந்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள்.  அவர்களில் ஒருவரான புனித மனேதுஸ் பற்றியும் அவர் தன்னை ஒறுத்து தப வாழ்வு மேற்கொண்டு புனித நிலை அடைந்ததை பற்றியும் எடுத்துரைக்க வருகின்றார். அருட் தந்தை அமல்ராஜ் அவர்கள் உரோமையில் உள்ள மரியின் ஊழியர் சபையின் தலைமை இல்லத்திலிருந்து. 

https://www.youtube.com/watch?v=8f97xD3ugtA




கிறிஸ்துவை  ஆதாயமாக்கிக் கொள்ள தன்னை தாழ்த்தி,
கிறிஸ்துவ மதிப்பீடுகளை மக்கள் மத்தியில் உயர்த்தி,
சிலுவை கொண்டே சிறப்பான செயலாற்றியவர் புனித மனேதுஸ். இவர் போல தப வாழ்வின் மேன்மை உணர்ந்து பணி வாழ்விலும் பொது வாழ்விலும் ஏற்படும் சவால்களை துணிவுடன் சந்திப்போம்.  எண்ணங்களால் உயர்ந்து, ஏற்றங்களால் புது உலகம் படைத்து மகிழ்வோம். 

பணி வாழ்வு

 சொன்னதை செய்வது மட்டும் பணி அல்ல, சொல்லாததையும் செய்து மகிழ்விப்பதே மகத்தான பணி.

கேட்டு செய்யப்படும் பணியிலும் கேளாமல் செய்யப்படும் பணிக்கு வலிமை அதிகம். கடந்து செல்வதே கானக துறவியின் பணி.
கடக்க வேண்டும் வீட்டை நாட்டை ஊரை உறவை உணர்வை . இப்படி எல்லாம் இயல்பாய்  கடந்து இனிமையாய் பணி செய்தவர்கள் நம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள்.
வாழ்வே பணியாக வாஞ்சையே வடிவமாக வாழ்ந்தவர்களில் முக்கியமனவர் புனித சொஸ்தேனுஸ் இவரின் பணி வாழ்வு அழைத்தல் வாழ்விற்கு எத்துணை சிறப்பு செய்தது என்பதை நமக்கு எடுத்துரைக்க வருகின்றார். அருட்தந்தை ஆல்பர்ட் மைக்கேல் லாரன்ஸ் அவர்கள் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஜீவமாதா இல்லத்திலிருந்து....    


https://www.youtube.com/watch?v=dp1ZXDpWIXI


இன்றைய உழைப்பின் வலி நாளைய வாழ்க்கையின் ஒளி  
 ஊக்கம் நிறைந்த உழைப்பாளி ஊசி முனையில் கூட நடந்திடுவான்.
ஏக்கம் நிறைந்த சோம்பேறி ஏணிகளாயிரம் இருப்பினும் எழ மாட்டான். அவ்வகையில் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் இறைத்திருவுளம் அறிந்து பணிகள் பல செய்து பரமனை மகிழ்வித்தவர் நம் புனிதர். சமுதாய தேவைகளை சட்டென்று உணர்ந்து சரிசமமாக பழகி சேவை செய்தவர். குறிப்பறிந்து உதவி செய்து குன்றா பணியாற்றியவர்.  தாங்கள் வாழ்ந்த சமுக மக்களிடம் இயல்பாய் பழகி இனிமையாய் பணி செய்த நம் சபையின் புனிதர்கள் போன்று நாமும் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நம் பணி வாழ்வை மெருகேற்றி மேன்மையடைவோம்.  

செப வாழ்வு

 கடவுளை நெருங்க உதவுவது ஜெபம்.

பெற்ற நன்மைக்கு நன்றி நவில்வது ஜெபம்.
இறைப் புகழ் பாட வைப்பது ஜெபம்.
பாவமன்னிப்புக்கு வழிகாட்டுவது ஜெபம்.  ஜெபமின்றி இறை வழிபாடின்றி இவ்வுலகில் எதுவுமில்லை. ஓருயிர் முதல் ஆறுயிர் வரை அனைத்தும் படைத்த இறைவனை தத்தம் மொழியால் வாழ்த்தி வழிபடுகின்றன. தனிமையில் செபித்து தன்னிகரில்லா தலைவனாய் திகழ்ந்தவர்களும் உண்டு. குடும்பமாக கூடி செபித்து  கோடி நன்மைகள் பெற்றவரும் உண்டு. இவர்களுக்கு மத்தியில் தனிமையையும் அமைதியையும் தங்களின் சொத்தாக கொண்டு இறைப்புகழ் பாடி இறைவனோடு நெருங்கி உரையாடி உறவாடியவர்கள் நம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள். செபமே வெற்றி தரும் என்பதை தங்களது வாழ்வால் எடுத்துரைத்து மகிழ்ந்த ஏழு  புனிதர்களில் ஒருவரான புனித அமதேயுஸ் பற்றியும் அவரது செப வாழ்வு நம்முடைய வாழ்விற்கு  எவ்வளவு தேவை என்பதைப் பற்றியும் அறிவுறுத்த வருகிறார். அருட்சகோதரர் பிலிப். உரோமை இத்தாலி.

https://www.youtube.com/watch?v=gs6augzSLgE



சுய நலமில்லா செபம் சுவர்க்க வாசலின் வாசம் அறிய உதவும்.
பகைமை  இல்லா செபம் பரஸ்பர அன்பு தன்னை வெளிப்படுத்தி மகிழும்.
வார்த்தை இல்லா மௌன செபம் வாழ்வின் அர்த்தம் உணர்த்தி விடும். செபம் துறவிகளாகிய நமக்கு மூச்சுக் காற்று போன்றது. உண்ண மறந்தாளும் மறப்போம் சுவாசிக்க மறக்க மாட்டோம். வாழ்வின் ஊற்றும் மையமும் இறைவன் தான் என்பதை செபத்தின் மூலம் உணர்ந்தவர் உணார்த்தியவர் நம் புனிதர் அமதேயுஸ்  செபத்தின் வல்லமையினால் தலையில் அருட்கதிர் சுடர் விடும் அழகில் தோன்றும் இவர், செபம் என்னும் நங்கூரம் கொண்டு துறவு வாழ்வென்னும் கப்பலை இறைக்கடலில் நிற்க வைக்க சொல்கின்றார். ஆழ்கடலில் போடப்படும் நங்கூரம் ஆயிரக்கணக்கான பணிகளை செய்யும். நமது வாழ்வும் செப நங்கூரமிட்டு நற்பணிகளை செய்யட்டும்.    
   

குழு வாழ்வின் மேன்மை

 கூட்டு வாழ்வின் மகிமையை காகங்களிடம் கற்றுக் கொள்ளலாம். ஒன்றை அழைத்தால் ஓரினமே ஒன்று திரண்டு விடும். பகிர்ந்துண்டு பல்லுயிர் ஒம்பும் பண்பு கொண்டு வாழ்வே நாம் பரமனால் படைக்கப்பட்டுள்ளோம். குழுமவாழ்வு வாழும் துறவிகள் துறவறத்தை போதிக்கவில்லை அவர்கள் துறவு வாழ்வை வாழ்ந்து காட்டுகிறார்கள். ஒன்றாய் இணைந்து ஓரிடத்தில் இருப்பது மட்டுமல்ல குழும வாழ்வு. ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்படுவதே கூட்டு வாழ்வு என்று இவ்வுலகிற்கு எடுத்துரைத்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள். தொடக்க கால சீடர்களைப் போல ஒரே உள்ளமும் ஒரே உயிரும் கொண்டு ஒரு மனப்பட்டு வாழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான இன்றைய நவநாளில் நாம் நினைவு கூறும் புனிதர் புனித ஹியூக். இவரைப் பற்றியும் இவரின் குழு வாழ்வு எத்தகையதொரு உத்வேகத்தை நமக்கு தருகின்றது என்பது பற்றியும் நமக்கு எடுத்துரைக்க வருகின்றார் அருட்தந்தை சவரி அவர்கள் ரோமையில் உள்ள நம் சபையின் தலைமை இல்லத்திலிருந்து.  

https://www.youtube.com/watch?v=2-tudXbIigE&list=PLpKywdYWzcKuOzWHFoQzwxAmaG35mF7y4&index=4


ஆயிரம் சொந்தம் நம்மைத் தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள். துறவற குழுவில் இறைவனால் கொடுக்கப்பட்ட சொந்தங்களை நண்பர்களாக்கி நட்பிற்கு இலக்கணமாகவும் குழு வாழ்விற்கு இலக்கியமாகவும் தன் வாழ்வை மாற்றியவர் புனித ஹியூக் . இவர் நமக்கு காட்டிச் சென்ற வழியைப் பின்பற்றி நம் உடன் சகோதர சகோதரிகளை முழு மனதுடன் நிறை குறையோடு ஏற்று அன்பு செய்வோம். காலம் கருணை திறமை என  அனைத்தையும் குழுவில் பகிர்ந்து கிறிஸ்துவின் சீடர்கள் நாம் என்பதை இவ்வுலகிற்கு இனிதே எடுத்துரைப்போம்.  

அன்னை மரி மேல் பக்தி

 ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும் அன்னை போல் நம்மை அன்பு செய்ய இவ்வுலகில் யாருண்டு.  வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் சோதனைகளில் அவரின் அருகிருப்பும் ஆலோசனையும் ஆயிரம் யானை பலம் தருவதுண்டு. அன்னைக்கே இத்தனை சிறப்பென்றால் அன்னை மரி அன்னையர்க்கெல்லாம் மாதிரிகை முன்னோடி. அவரின் ஆறுதலுக்கும் அரவணைப்பிற்கும் அகில உலக அன்னையர் அன்பு தலைவணங்கும். இத்தகைய அன்னை மரி மேல் கொண்ட அன்பினாலும் ஆழ்ந்த பக்தியினாலும் துறவுவாழ்வில் சிறப்புற்று திகழ்ந்தவர் இன்றைய நாளில் நாம் நவநாள் சிறப்பிக்கும் புனித அலெக்சிஸ் . அன்னை மரி மேல் இவர் கொண்ட பக்தி நமது வாழ்வில் எவ்வாறு மிளிர வேண்டும் என்பதை எடுத்துரைக்க வருகின்றார் அருட் தந்தை டென்னிஸ் அவர்கள் உரோமாபுரியின் மரியானோ இல்லத்திலிருந்து,,,


https://www.youtube.com/watch?v=xqk964GUWgg&list=PLpKywdYWzcKuOzWHFoQzwxAmaG35mF7y4&index=3


வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த சொல் அம்மா. எதிர்பார்ப்பில்லா உறவின் அடையாளம் அம்மா. அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். அன்னை மரியாள் மேல் கொண்ட பக்தியால் தனது துறவு வாழ்வில் நீடித்து நிலைத்து நின்றார் நம் புனிதர் அலெக்சிஸ். குழந்தை இயேசுவை நோக்கி தம் கை களை நீட்டுவது போலவும்,  அவரிடம் இருந்து மலர் வளையம் பெறுவது போலவும் இருக்கும் படங்கள் நம் புனிதரை அடையாளப்படுத்துகின்றன. இதனை அன்னை மரி மேல் கொண்ட அன்பிற்கு அவர் தம் அன்பு மகன் தரும் பரிசு என்று சொன்னால் கூட மிகையாகாது. ஆண்டுகள் பல கடந்தாலும் நம் அன்னைக்கு நாம் என்றும் குழந்தைகள் தான்.    
அவர் மீது நாம் காட்டும் அன்பே பக்தியாக பக்தி முயற்சியாக வெளிப்படுகின்றது. சாதாரண மக்களே அன்னைமரி மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கும் போது நாம் அன்னை மரியின் ஊழியர்கள் . எனவே அவர் மீதான அன்பு நம்மில் அதிகமாக இருப்பது இயல்பு. இதற்கு காரணமும் அன்னையே.
இறைவனை அன்பு செய்து, இறை விருப்பத்தை நிறைவு செய்து, இறைவனுக்கு பணி செய்தவர் நம் தாய். அவர் அன்று கற்பித்ததை இன்று நம் வாழ்வில் பயிற்சிக்கின்றோம். நமது புனிதர் அலெக்சிஸ் போல அன்னை மரி மேல் அளவற்ற பக்தி கொண்டு அவரின் பாதுகாப்பில் நம் வாழ்வை ஒப்படைப்போம். இறைவனை எவ்வாறு முழுமையாக அன்பு செய்வது என்பதை தன் வாழ்வால் எண்பித்த அன்னை மரியாள் போல அவரின் ஊழியர்களாகிய நாமும் செயல்படுவோம். ஆகட்டும் என்ற ஒற்றை சொல்லால் அகிலத்தை அரவணத்த  நம் தாய் போல நம் வாழ்வாலும் பணியாலும் அன்னை மரியின் பக்தியை அகிலமெங்கும் பரப்புவோம்.   

அழைத்தலின் மேன்மை

 அழைக்கப்பட்டோர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்டோர் சிலர். அவ்வகையில் அன்னை மரி மேல் கொண்ட அன்பினால் ஈர்க்கப்பட்டு அனைத்தையும் துறந்தவர்கள் தான் இன்று நாம் நவனாள் சிறப்பிக்கும் மரியின் ஊழியர் சபையின் ஏழு புனிதர்கள். அன்புப்பணி செய்ய ஆண்டவனிடமிருந்து வரும் அற்புத வாய்ப்பு அழைப்பு. ஒவ்வொருவரின் அழைப்பும் ஒராயிரம் அர்த்தம் சொல்லும் அதிலும் நம் புனிதர்களின் அழைப்பு நம்முடைய வாழ்விற்கு வழி சொல்லும்.  

  முதல் நாளான இன்று அழைத்தலின் மேன்மை குறித்தும் எழுவரில் முதல்வரான புனித பொன்பீலியூஸ் மொனால்டி என்பவரைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்க வருகின்றார். அருட்தந்தை ஆரோக்கிய சாமி சபையின் முதல் இல்லமான இத்தாலி நாட்டில் உள்ள பிளாரன்ஸ் நகரின்  மொன்தே செனாரியோ இல்லக் கோவிலில் இருந்து.   

https://www.youtube.com/watch?v=eVUX8DYtz8g&list=PLpKywdYWzcKuOzWHFoQzwxAmaG35mF7y4&index=2

தானே முன்னேறத் துடிப்பவன் இளைஞன்
தனது சிந்தனையால் பிறரை முன்னேற்றத் துடிப்பவன் கவிஞன்.
இவ்விரண்டையும் உருவாக்க உழைப்பவன் நல்லதொரு தலைவன்.
அவ்வகையில் தலைவனாய் தன்னை மாற்றி தன்னைப் போல் பிறரையும் உயர்த்தி தலைமைப் பண்பில் தலை சிறந்து விளங்கியவர் நம் புனிதர் பொன்பீலியூஸ். கையில் ஒரு ஏடோடும் தோள்பட்டையின் அருகில் ஒரு வெண்புறா இருப்பது போன்ற படங்கள் இவரை நமக்கு இன்னார் என்று எடுத்துரைக்கின்றன.
வெண்புறா தூய்மைக்கும் அமைதிக்கும் தூய ஆவிக்கும் இலக்கணம்.
 சபையின் ஒழுங்குகளை தானும் கடைபிடித்து பிறரையும் கடைபிடிக்க செய்தவர். தூய்மை அமைதியை தூய ஆவியின் துணை கொண்டு பயிற்சித்து அழைத்தல் வாழ்வில் ஆழம் கண்டவர்.
சபையின் முதல் தலைவர் முத்தான தலைவர். இவரை மாதிரிகையாகக் கொண்டு நம்முடைய அழைத்தல் வாழ்வின் மேன்மையினை உணர்வோம். சபை ஒழுங்குகளில் உறுதியுடன் இருப்போம். அழைக்கப்பெற்றொம். பிறரையும் நம் வாழ்வால் சொல்லால் செயலால் அழைப்போம். அழைத்தலின் மேன்மையை அகிலமெங்கும் பறைசாற்றிடுவோம்.    

யின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள்.

 தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் என்னும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகின்றது என்பார்கள். ஏனெனில் தாய் என்பவள் அவ்வளவு சக்தி மிக்கவள். பிறந்த பின் நம்மை நேசிப்பவர்கள் மத்தியில் தாய் நாம் கருவில் உருவான நாள் முதலாய் , நம் உருவம் உருவாக தொடங்கும் முன் நம்மை நேசித்தவள். எத்தனை வயதானாலும் தாய் மீது நாம் கொண்ட பாசமும் மாறாது . அவள் நம்மீது கொண்ட நேசமும் மறையாது. இப்படி அன்னையின் அன்பை பற்றி பேசினால் காலமும் நேரமும் போதாது.

அதிலும் அன்னை மரியாளின் அன்பை பற்றி எடுத்துசொல்ல ஒரு யுகம் போதாது. கிறிஸ்தவ மக்களுக்கு தாயாக பாதுகாவலியாக பரிந்துரைப்பவளாக அன்றும் இன்றும் என்றும்  இருப்பவர். அன்னை மரியாளை தங்களின் மாதிரிகையாக கொண்டு இல்லற வாழ்வை விட்டு துறவு வாழ்வை மேற்கொண்ட ஆண்களும் பெண்களும்  ஆயிரமாயிரம் பேர். அவர்களில் மிக சிறப்பானோர் மரியின் ஊழியர். பிப்ரவரி 17 அன்று தங்களின் சபை உருவாக காரணமான 7 புனிதர்களை நினைவு கூர்ந்து திருவிழாவினை சிறப்பித்து மகிழ்கின்றனர்.
புனித பொன்பீலியூஸ், புனித அலேக்சிஸ் புனித அமதெயுஸ் புனித ஹக் புனித சொஸ்தெணுஸ் புனித மனெதுஸ் புனித போனகுந்தா என்ற இந்த ஏழு புனிதர்களின் திருவிழாவினை நவனாளுடன் சிறப்பித்து கொண்டாடி மகிழ உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
யார் இந்த ஏழு புனிதர்கள்?
இவர்களது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்ககாலம்.
இவர்களது ஊர் இத்தாலி நாட்டில் உள்ள பிளாரன்ஸ் . மிகச்சிறந்த துணி வியாபாரிகள். பெரும் செல்வந்தர்கள்.
கடவுளை மறந்து உலக வாழ்க்கை இன்பங்களிலும், மனம் போன வாழ்விலும் நாட்டம் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்த பகுதி. அழிந்துபோகும் இன்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த மக்கள் மத்தியில் இவர்கள் எழுவரின் ஈடுபாடு இறைவன் மட்டில் இருந்தது. அதிலும் குறிப்பாக அன்னை மரியாள் மீது மிக அதிகமானபக்தி கொண்டிருந்தனர். இவர்களின் அதீத பக்திக்கு பரிசாக  1233 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ம் நாள் அன்னையின் விண்ணேற்பு ப்பெருவிழா அன்று தூய மரியாள் எழுவருக்கும் காட்சி அளித்து துறவு மேற்கொள்ள அழைப்பு விடுக்கின்றார்.    மிக வசதியான செல்வ குடும்பத்தில் பிறந்த இவர்கள் தங்களது சொத்து சுகம் அத்தனையையும் ஒதுக்கி துறவு மேற்கொண்டனர். தங்களது நேரத்தையும் நாட்களையும் செபத்திலும் தவத்திலும் செலவழிக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கி சென்றனர். இவர்களின் இந்த வித்தியாசமான  வாழ்வு பலருக்கு வியப்பாக இருந்தது. எனவே இவர்களை தேடிச்சென்று பேச ஆரம்பித்தனர். தனிமையில் இறைவனுடன் உரையாடி செப வாழ்வு மேற்கொள்ள  எண்ணிய இவர்களுக்கு பொதுமக்களின் வரவு மிகுந்த இடையூறாக  இருந்தது. எனவே மொன்தே செனாரியோ என்னும் உயரிய மலைப் பகுதிக்கு சென்று தங்களுக்கென்று ஒரு ஆலயம் அமைத்து இறைவனோடு உறவாடி மகிழ்ந்தனர். சில நாட்களுக்கு பின் அன்னை மரியாள்  ஒரு வானதூதரோடு மீண்டுமாக இவர்களுக்கு காட்சி அளித்து கருப்பு நிற ஆடையை கொடுத்து நான் உங்களை என்னுடைய ஊழியர்களாக தேர்ந்து கொண்டேன். இந்த கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய துறவற ஆடை என்று கூறீ மறைந்து விட்டார். அன்றிலிருந்து இவர்கள் மரியின் ஊழியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
இறைவன் பணி செய்யும் மரியின்  ஊழியர்கள் இவர்கள். 1888 அம் ஆண்டு திருந்தந்தை 13ம் லியோ இவர்களை புனிதர்களாக அறிவித்தார். 789 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இச்சபை இன்று 26 நாடுகளில்117 குழுக்களில் கிட்டத்தட்ட 700 துறவிகளை கொண்டு இயங்கி  வருகிறது. குழும வாழ்வு, மரியன்னை பக்தி மற்றும் பணி வாழ்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு மரியன்னையின் ஆன்மீகத்தில் இணைந்தவர்கள் இன்று மரியின் ஊழியர் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள் என்னும் பெருமையை அடைகின்றனர். மாறி வரும் உலகில் மரியின் ஊழியர்கள் நம்பிக்கையின் ஊழியர்களாக வலம் வந்து பல  பணிகளை ஆற்றுகின்றனர். இவர்களின் பணி சிறக்க செபிப்போம்.
சபை உருவாக காரணமான ஏழு புனிதர்களை தியானித்து ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் நவநாள் கொண்டாடி மகிழ இருக்கின்றோம்.
அழைத்தலின் மேன்மை,அன்னை மரியிடம் நமக்குள்ள பக்தி, குழுவாழ்வு, செப வாழ்வின் தேவை, பணி வாழ்வே அழைத்தலின் சிறப்பு,  தபத்தின் தேவை, இறுதிப்பரிசு என்ற தலைப்புகளில் நவநாள் சிறப்பித்து எழு புனிதர்களின்  அர்ப்பண உணர்வையும் தப வாழ்வையும் நமதாக்கிக் கொள்வோம். இணைந்து செபித்து இறையாசீர் பெறுவோம்.          
       

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...