Friday, 25 February 2022
4. ஊதா நிறம்
தவக்காலத்தில் பயன்படுத்தப்படும் ஊதா நிறம் தவத்தின் மனமாற்றத்தின் நோன்பின் அடையாளம். அடர் ஊதா நிறம் நம்முடைய ஒட்டு மொத்த உணர்வுகளின் அடையாளம். சிவப்பு மற்றும் ஊதா நிறங்களின் சேர்க்கையே இந்த நிறம் உருவாகக் காரணம் என்பர் சிலர். சிவப்பு இயேசுவின் பாடுகளையும் ஊதா நிறம் நம்முடைய செயல்பாடுகளையும் குறிக்கிறது. இயேசுவின் பாடுகள் வழி நம்முடைய செயல்பாடுகளை நாம் மாற்றி அமைக்கும் பொழுது நம்முடைய வாழ்வும் பிறருக்கு எடுத்துக்காட்டான வாழ்வாக அமையும். மூன்று காரணத்திற்காக இந்த நிறம் தவக்காலத்தில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 1 அரச நிறம்., பாடுகள், மனமாற்றம்,
இயேசுவின் காலங்களில் இந்த கத்தரிப்பு நிறம் என்பது அரச நிறம் த கலர் ஆப் ராயல்டி என்று அழைக்கப்பட்டது. இன்றும் ராயல் ப்லு என்பது நடைமுறையில் இருக்கிறது. சாதாரண எளிய மக்களால் இந்த நிற உடைகளை வாங்கி அணிய முடியாது. இயேசு அரசர்களின் அரசர் என்பதை எடுத்துரைக்கவும், நமது பாவங்களுக்காக அவர் அனுபவித்த பாடுகள் இறப்பை நினைவு கூறவும், நமது பாவங்களை எண்ணி மனம் வருந்தவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நாட்களில் வயலட் அல்லது கத்தரிப்பூ நிறம் என்று சொல்லப்படும் நிறங்களில் தான் அருட்தந்தையர்களின் திருப்பலி உடைகளும் ஆலய பீட விரிப்புக்களும் கதவு தொங்கல்களும் இருக்கும். வழக்கமாக நாம் பாவ சங்கீர்த்தனம் செய்யும் போது குருவானவர் பயன்படுத்தும் ஸ்டோல் எனப்படும் மேல் துண்டின் நிறம் எப்போதுமே இந்த நிறம் தான்.
இறைவா நான் ஒன்றுமில்லை என்னை மன்னித்து ஏற்று வழி நடத்தும் என்பதை வார்த்தையின்றி வண்ணங்களால் சொல்கிறோம். எவ்வாறு பழைய ஏற்பாட்டு மக்கள் சாக்கு உடை உடுத்தி தங்களது நோன்பினை பிறருக்கு எடுத்துக்காட்டினார்களோ அது போல நாமும் நம்முடைய இந்த சிறு செயலால் நம்முடைய தவ நிலையை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டுகிறோம்.
எந்த விதமான வேலைப்பாடுகளும் இல்லாத ஆடம்பரமில்லாத எளிமையான இந்த நிறம் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் இந்த தவக்காலத்தின் மேன்மையை எடுத்துரைக்கட்டும். அடர் ஊதா நிறம் போல இருக்கும் இயேசுவின் பாடுகள் நமது வாழ்வில் அர்த்தம் சேர்க்கட்டும். நிறத்தின் சிறப்பறிந்து நிறம் மாறாமல் குணம் மாறாமல் தொடர்ந்து நிலைத்திடுவோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...